Pages

31 October 2008

ஒபாமாவின் உயிரை காத்த கோவை ஜோதிடர்கள்...!!


பராக் ஒபாமாவை பற்றி நம்மில் பலருக்கும் சமீபகாலமாக நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருக்கிறது . அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முண்ணனி போட்டியாளர். அவர் அமெரிக்காவின் அதிபராக அதிக வாய்ப்புள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் கூறி வருகிறது . அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் , சில தினங்களுக்கு முன் அவரை சுட்டு கொலை செய்ய முயன்றதாக அமெரிக்காவில் இருவர் கைது செய்யப்பட்டதும் அனைவருக்கும் நினைவிருக்கலாம் . சரி கோவை ஜோதிடர்களுக்கும் ஒபமாவுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது .

'' மிரித்யுன்ஜயா யாகம் '' என ஒருவகை யாகம் அல்லது பூசை இருக்கிறது . இது எதிர்பாராத வகையில் ஏற்படும் சாவை அல்லது ஆபத்தை தடுக்கவல்லதாம் . அந்த யாகத்தை பற்றி பின்னர் பார்ப்போம் . அவ்வகை யாகம் ஒன்றை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா அவர்களுக்காக சென்ற வாரம் கோவையில் இருக்கும் ஒரு சிறிய கோவில் ஒன்றில் வைத்து செய்திருக்கிறார்கள் . அது குறித்து நகரில் பலரும் அறிந்து அது குறித்து எள்ளி நகையாடியுள்ளனர் . இது புகழடைய நினைக்கும் சில ஜோதிடர்களின் வெட்டி ஸ்டன்ட் என்றும் சிலர் கூறினர் . ஆனால் அதை பொய்யாக்கும் விதத்தில் இய்யாகம் நடத்தி இரண்டாவது நாளே இருவர் ஒபாமாவை கொல்ல முயன்றதாக கைதானதும் இவ்விடயம் உச்சத்திற்கு சென்றுள்ளது .

இது தற்செயலானதா என இய்யாகத்தை நடத்திய கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் இயக்குனர் பிஆர் . கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது , ஒபாமாவின் ஜாதகத்தை பார்த்து அதில் அவருக்கு தற்சமயம் ஒரு கண்டம் இருந்ததாகவும் அதிலிருந்து அவரை விடுவிக்கவே இய்யாகம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் . அதுதவிர அவர் இது போல நமது அரசியல் தலைவர்களின் ஜாதகங்களையும் கண்டறிந்து அதற்கேற்றாற் போல நமது இந்திய அரசாங்கத்தை அமைத்தால் இந்தியா விரைவில் வல்லரசு நாடாகும் எனவும் தெரிவித்துள்ளார் .

மிருத்யுன்ஜெயா யாகம் என்பது என்னவென்று பார்ப்போம் , இவ்வகை யாகம் சிவபெருமானை நோக்கி நடத்தப்படுபவை , இது எதிர்பாராத விபத்து அல்லது நாட்பட்ட நோய் போன்ற ஆபத்துக்களில் இருந்தும் நம்மை காக்க வல்லதாம் . சமஸ்கிருதத்தில் மிருத்யு என்றால் இறப்பு என்றும் ஜெயா என்றால் வெற்றி என்றும் பொருள் . அதாவது சாவை வெற்றி கொள்ள செய்யும் யாகம் என்று பொருள் படும் . பண்டிதர்கள் 1,25,000 முறை யாரை நோக்கி யாகம் நடத்துகிறோமோ அவர் பெயரையும் அவருக்குரிய மந்திரத்தையும் ஒதுவார்கள் . இய்யாகத்தில் துருவா எனப்படும் புல்லையும்(அருகம்புல்), அம்ரிதா எனப்படும் மூலிகையையும் அர்பணிப்பார்கள் .
காக்கை உக்கார பனம் பழம் விழுந்ததாக ஒரு பழமொழி உண்டு , இவ்விடயம் அதைப்போன்றதே , ஓபாமாவை கொல்ல அனுதினமும் அவரது எதிரிகள் முயன்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று . இந்த ஜோதிடர்கள் தாங்கள் நடத்திய யாகத்தால்தான் அவர் உயிர்தப்பினார் என்று கூறுவது ஏற்கனவே அறியாமை இருளில் மூழ்கி கிடக்கும் நம் மக்களை மேலும் இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாக்கும் முயற்சியே . அது தவிர ஒரு சில ஜோதிடர்கள் தங்கள் பெயரை மேலும் புகழடைய செய்யவும் இது போல செய்யலாம் . இப்படி யாகம் நடத்தி ஒருவரது உயிரை காப்பாற்றிக்கொள்ளலாம் என்னும் பட்சத்தில் நாட்டில் எதற்கு இத்தனை மருத்துவமனைகள் இராணுவம் மற்றும் காவல்துறையும் , மணி ஆட்டுவதற்கா? .

ஒபாமாவை காப்பாற்றியது சி.ஐ.ஏ வும் எப்.பி.ஐயும் , அதைவிடுத்து எங்கோ அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் உயிர் பிழைத்தது இங்கு நடத்திய யாகத்தால்தான் என்பது கேலிக்கூத்தாக இல்லையா . நம் நாட்டில் அனுதினமும் ஆயிரம் ஆயிரம் மக்கள் தேவையற்ற குண்டு வெடிப்பால் இறந்து கொண்டிருக்கின்றனர் . நேற்று கூட அஸஸாமில் 15 நிமிடங்களில் 18 குண்டுவெடிப்புக்கள் அதில் இறந்துபோகும் குழந்தைகள் . இப்படி லட்சக்கணக்கில் அப்பாவியாய் இறந்து போகும் மக்களுக்காக யாகம் நடத்துவதுதானே .

இதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் புகழுக்காக ஜோதிடம் என்னும் ஒரு கலையை பயன்படுத்தி புகழடைய நினைக்கும் சராசரி ஜோதிடர்களின் ஏமாற்று வேலையே இந்த யாகம் ,___ ,____ , எல்லாமே . ஓபாமாவிற்கு இருக்கும் மத ( இந்து மத ) நம்பிக்கையை பயன்படுத்தி அவரிடம் தங்களை முன்னிறுத்தும் முயற்சியாகவே நமது கோவை ஜோதிடர்களின் முயற்சி இருக்கிறது .


செய்தி உதவி : டெக்கான் குரோனிக்கிள் . நன்றி
படம் உதவி - கூகிள்