Pages

15 June 2009

தமிழ் ஈழம் எரியுதே! தமிழர் இனம் அழியுதே!


நடுநிசி புணர்வின் உழைப்பு
முதுகின் மையத்தில் லேசான வலி
காலைக்கடன் கழிக்கையில்
தினத்தந்தி வாசிக்கையில்
நேற்றிரவு கடித்த கோழிக்கறியும்
நேற்றைய மதிய வறுமீனும்
தீயாய் பற்றி எரிகிறது பின்னாலே

காலையில் பூப்பூவாய் இட்டிலி
சுவையறியா ஞானசூனியம்
தோசை வார்த்தால் என்ன?

கடன் அட்டைக்காரன்
காலை பத்துமணிக்கு..
சீட்டுப்பணம்
மாலை நாலு மணிக்கு..

குறித்துக்கொண்டேன்

காதோராம் லேசாய்
நரைத்த நரைக்கு
கறுப்புச்சாயம்!
முதுகுமைய வலி
இன்னும் குடைந்தபடி..

மாலைக்காட்சி மாசிலாமாணி
இடைவேளையில் பார்த்தவளுக்கு
எவ்வளவு பெரிய கொங்கைகள்?
இரவில் அவளை நினைத்தவாறே
இல்லத்தரசியோடு சவுந்தர்ய லவுகீகம்..

கோலங்கள் அரசி
ஐபிஎல் 20-20
டிவிடி - புதுப்படம்
ஒருவழியாய் ஒரு தினம் முடிகிறது
இரவு வரவேற்கிறது
இன்னும் அரைமணி நேரத்தில்
எழுதவேண்டும் ஒரு கவிதையாவது..

காத்திருக்கிறாள்
கட்டிலில் மனைவி.

கணினி கண் திறந்து
தட்டச்சுகிறேன்..
“அய்யோ அய்யோ
தமிழ் ஈழம் எரியுதே
தமிழர் இனம் அழியுதே
இரக்கமில்லா அரக்கரே
முதுகில் குத்திய துரோகிகளே...”


************