Pages

18 November 2009

அலங்கல் - 3





ஊருக்கு புதிதாக வந்திருந்த குரு நேராக அரண்மனைக்குள் நுழைந்த போது யாருமே அவரைத் தடுக்கவில்லை. வீரர்கள் அவரை கைக்கூப்பி வணங்கினர். அவரது முகத்தில் அத்தனை பிரகாசம். இறை உருவாகத் திகழ்ந்தார். நேராக அரண்மனையின் கொலு மண்டபத்திற்குள் நுழைந்தார். இவரைக்கண்ட அரசன் திடுக்கிட்டு செய்வதறியாது எழுந்து நின்றான். அனைவருக்கும் அதிர்ச்சி.

‘’சுவாமி உங்களுக்கு என்ன வேண்டும்’’ பணிவோடு கேட்டான் அரசன்.

‘’இந்த சத்திரத்தில் தங்க ஒருநாள் அனுமதி வேண்டும்’’ என்றார் குரு.

‘’மன்னியுங்கள்! சுவாமி இது சத்திரமில்லை , என்னுடைய அரண்மனை’’

‘’இல்லை இல்லை இது சத்திரம்தான்’’ என்று வாதாடினார் குரு.

‘’சுவாமி நம்புங்க இது அரண்மனை, பாருங்க எவ்ளோ அலங்காரம் , ஆடம்பரம் , விளக்குகள் , வேலையாட்கள் , பார்த்தா அப்படி தெரியலையா’’ என்றான் மன்னன்.

‘’சரி விடு! இந்த இடத்தில் உனக்கு முன்னால் யாரெல்லாம் இருந்தார்கள்!’’

‘’எங்க அப்பா! ஆனா அவரு செத்துட்டாரே’’

‘’அதுக்கு முன்னால’’

‘’எங்க தாத்தா அவரும் செத்துட்டாரே’’

‘’அதுக்கும் முன்னால’’

‘’எங்க தாத்தாவோட அப்பா, ஏன் சாமி’’

‘’ஏன்டா தம்பி , இங்கதான் யாரு தங்கினாலும் கொஞ்ச நாள்ல காலிபண்ணிட்டு போயிடறாங்களே , அப்ப இது சத்திரம் தானே , நீ என்னடானா இதை சத்திரம் இல்லைன்ற!’’ என்றார் குரு.

*****

வேட்டைக்காரன் திரைப்படப்பாடல்கள் விஜய் பட பாடல்களைப் போல் இல்லாமல் விஜய்ஆன்டனி படத்தினுடையது என்று புரிந்தது. பாதி இரைச்சல் நிறைய கரைச்சல் சேர்ந்தால் வி.ஆ பாடல்கள் என்றில்லாமல் சமீபகாலமாக நல்ல மெலடிகளைக்கூட அவரது இசையில் கேட்க முடிகிறது. (நினைத்தாலே இனிக்கும் அழகாய் பூத்ததே, மாசிலாமணி டோரா டோரா,) . வே.கா வில் ‘என் உச்சி மண்டைல சுர்ர்ருங்குது’ பாடல் செம குத்து. அவரது லேட்டஸ்ட் கனகவேல் காக்க திரைப்படப்பாடல்கள் நேற்று கமல் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாராவது ஓசியில் கேசட்டு கொடுத்தால் கேட்கலாம். சமீபத்தில் கேட்டதில் ரேணிகுண்டா படப்பாடல்கள் வெகுவாக கவர்கிறது. முடிந்தால் கேட்டுப்பார்கலாம்.

****

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் சென்ற வாரம் ஒரு மழைக்காலையில் ரிவால்வர் ரீட்டா என்கிற அருமையான திரைப்படம் ஒளிபரப்பானது. இதற்கு முன் ஒருமுறை சிறு வயதில் எங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் (சிவாலயா என்று நினைக்கிறேன்) பார்த்திருக்கிறேன். அப்போது புரியாத பலதும் இந்த வயதில் புரிவது நன்றாகத்தான் இருந்தது.

விஜயலலிதா ஹீரோயினாக நடித்திருந்தார். ஹீரோ யார் என்று தெரியவில்லை. படம் முழுக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் , காரிலும் பைக்கிலும் விரட்டியபடியே இருந்தனர். நடுநடுவே கிளப்பில் யாராவது ஒரு பெண் ஆங்கில பாடலுக்கு நடனமாடுகிறாள். கதை புரிகிறதோ இல்லையோ ஆக்சனுக்கு உத்திரவாதமான படம். என்ன சிறுவயதில் பார்க்கும் போதிருந்த எக்ஸைட்மென்ட் இடம் மாறி இருந்தது. இரண்டிலும் உடலே பிரதானம்.
ஜீதமிழில் திரையிடப்படும் பல திரைப்படங்கள் நான் சிறுவயதில் போஸ்டரில் மட்டுமே பார்த்த காலைக்காட்சி திரைப்படங்களாக இருப்பதை உணர முடிந்தது.

அதில் ஒன்று ரெட்டைகுழல் துப்பாக்கி. கார்த்திக் நடித்து கர்ணன் இயக்கிய திரைப்படம். பல வருடங்கள் முயன்றும் தியேட்டர்காரர்களின் சதியால் பார்க்க இயலாமல் போன திரைப்படம். அதை காணும் பேறும் ஜீயால் நிகழ்ந்தது. அந்த வரிசையில் சுட்டபழம் மாணவமாணவிகள் கஜா பத்துபத்து என திநகர் கிருஷ்ணவேனி புகழ் படங்கள் பலதும் ஜீதொலைக்காட்சியில் பட்டையை கிளப்புகிறது. இது மாதிரியான மொக்கை திரைப்படங்களின் ரசிகன் என்ற முறையில் அந்த நிறுவனத்திற்கு நன்றி!.

*****

டீலா-நோடீலா நிகழ்ச்சி அட்டகாசமாக இருக்கிறது. பணத்தை வாரி இறைக்கின்றனர். உதயா சேனலிலும் ஜெமினியிலும் சாய்க்குமார் கலக்குகிறார். தமிழில் ரிஷி , புஷி கேட்போல பம்முகிறார். முதலில் புரிந்து கொள்ள மிகக்கடினமாக இருக்கும் போல் இருந்தது. இதில் என்ன சுவாரஸ்யம் என்று கூட தோன்றியது. ஆனால் நிஜமாகவே பதற வைக்கிறது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பார்த்தால் பணத்திற்கான எந்த அடிப்படைத் தேவையுமில்லாதவர்களாக இருப்பதை உணர முடிந்தது.

எப்போதும் சிகரட் வாங்கும் கடைப்பையன் கையில் மொபைலோடு எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டிருந்தான். என்னடா மேட்டர் என கேட்டபோது டீலா நோடீலாவுக்கு மெசேஜ் அனுப்பறேன் மூனு வாட்டி அனுப்பியும் தப்புனு வருது ஒம்பது ரூவா போச்சு என்றான். தமிழகத்தில் லாட்டரியை ஒழித்துவிட்டார்களே என நினைத்திருந்தது தவறு என புரிந்தது. மூளைக்கு எந்த சிரமமும் இல்லாமல் நடத்துகிற இந்த லாட்டரி பாணி போட்டிக்கு எப்படி அரசு அனுமதி வழங்கியது என்பதே புரியவில்லை. ஆளுங்கட்சி தொலைக்காட்சி என்பதால் இருக்கலாம் நமக்கேன் வம்பு!


*****

சிகரட்டை விட்டுவிட போனா வாரம் முடிவு செய்திருந்தேன். இந்தவாரம் முடிவில் மாற்றம். அடுத்தவாரம் மீண்டும் முடிவெடுக்க முடிவெடுத்திருக்கிறேன். பார்ப்போம். இந்த முடிவில்லா சிகரட் பழக்கத்திற்கு ஒரு முடிவு வராதா என்று!

****

தற்கொலை குறித்த FROZEN என்கிற சீன மொழி ஹாங்காங் திரைப்படம் பார்க்க முடிந்தது. 1998ல் வெளியான இந்த திரைப்படம் PERFORMANCE ARTISTS என்கிற கலைஞர்களின் வாழ்க்கையைப்பற்றியும் , அதில் ஈடுபடும் ஒரு இளைஞனின் தவறான முடிவினைப் பற்றியதுமாக செல்கிறது. தன்னை சுற்றி நடக்கும் சில தவறான விஷயங்கள் தன் சாவினால் மாறிவிடும் என நினைக்கும் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் ஆனால் அவனது மரணம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட வில்லை என்று செல்லும் இந்த திரைப்படத்தின் கதை ஏனோ நம்மூர் முத்துக்குமார் என்கிற இளைஞனின் மரணத்தை நினைவூட்டியது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலையோ மரணமோ ஒரு முடிவல்ல என்பதை உணர்த்துகிற இந்த திரைப்படம் சீனாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. இதில் சோப்பு தின்பது , முள்ளில் நடப்பது , பல்பை முழுங்குவது மாதிரியான செயலகளில் ஈடுபடும் நிஜகலைஞர்கள் நடித்துள்ளனர். வாய்ப்புக்கிடைத்தால் ஒரு முறை பார்க்கலாம்.

****

சென்னையிலிருந்து கோவைக்கு சேரன் எக்ஸ்பிரஸின் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் செல்வது ஒரு உன்னத அனுபவம். வாழ்க்கையையும் அதன் சாரத்தையும் மிக எளிதில் விளக்கிவிடும் வல்லமை கொண்டது. ஒவ்வொரு நிறுத்த்திலும் புதிதாய் ஏறும் ஆட்கள் , நிரம்பி வழியும் கூட்டம். நான்கு பேர் அமரக்கூடிய சீட்டில் ஆறு பேர் அமர்ந்து கொண்டு ஏழாவதாய் ஒருவர் வழிநெடுக சார் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா நானும் உக்காந்துக்குவேன் என கெஞ்சியபடி வருவதும் , அந்த சீட்டுக்காக சண்டையிடுவதும் , அடித்துக்கொள்வதும் , சீட்டுக்கிடைக்காத சிலர் கழிவறைக்குள் இடம் கிடைத்தால் கூட அங்கேயும் அமர்ந்து கொண்டு வருவதும் என விதவிதமான காட்சிகளை காண முடியும். கோவை வந்து இறங்கியபின் அந்த காலி சீட்டுகளை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் , இரவெல்லாம் எதற்காக அடித்துக்கொண்டோமோ அது காலியாய் கிடக்கும்போது புரிகிறது. நிறைய!