Pages

20 November 2009

பெலிடா நாசிகண்டர்!




ரித்தீஷ் குமாருக்கு அறிமுகம் தேவையா? ஜே.கே.ஆர் இன்றைய ராமநாதபுரம் நாடாளுமன்றத்தொகுதி எம்.பி. ‘பிரபல’ நடிகர். அகிலாண்ட நாயகன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சென்ற வாரத்தில் கிட்டியது. அவரை கண்ட இடம் பெலிடா நாசிகண்டர்.

சில நேரங்களில் மழைக்காக சென்னையின் பெரிய ஹோட்டல்களுக்குள் ஒதுங்குவதுண்டு. அதில் ஒன்று இந்த பெலிடா நாசிகண்டர். மலேசிய உணவுகள் சாப்பிட விரும்பும் புரவலர்களுக்கும் ஓசியில் யாருடைய பாக்கட்டையாவது காலிசெய்து தின்னும் என்னைப்போன்ற இரவலர்களுக்கும் அற்புதமான இடம் இந்த பெ.நா. டிநகர் தெருக்களில் சுற்றித்திரிகையில் பார்த்ததுண்டு. உள்ளே நுழைந்து விட கால்கள் துடிக்கும் ஆனால் பாக்கட்டில் இருக்கும் பத்துரூபாய் அதை தடுக்கும். நிறைய திரைப்படங்களின் ஷூட்டிங்குகள் அங்கே நடந்திருக்கிறது. ஆனால் படங்களின் பெயர் நினைவிலில்லை. கூட்டத்துடன் நின்று வேடிக்கைப்பார்த்திருக்கிறேன். மழைநேரத்தில் எப்போதும் சாப்பிடுகிற கையேந்தி பவன் விடுமுறை என்பதாலும் சம்பளப்பணம் பாங்கில் கிரடிட் ஆகிவிட்டதென்பதாலும் ஒரு குருட்டு தைரியத்தில் உள்ளே நுழைந்து விட்டேன்.

மலேசிய உணவுகளுக்கென்றே இருக்கும் பிரத்யேக கடை இந்த பெலிடா. இதில் நாசிகண்டர் என்றால் சோறு அல்லது உணவு அல்லது சாப்பாடு என்ற பொருளாக இருக்கவேண்டும். ( மலேசிய நண்பர்கள் உதவலாம் ). ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையாக என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு மினுமினுப்போடு ஜொலித்தது. இருக்கையில் அமர்ந்து கொண்டு நிமிர்ந்து பார்த்தால் பக்கத்து டேபிளில் ரித்தீஷ் குமார். அடடா! என்ன செய்ய அவரைச்சுற்றி பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் (?) நின்றுகொண்டும் அமர்ந்து கொண்டும் இருந்தார்கள். எந்த வித பந்தாவுமின்றி ஒரு கப் காபி குடித்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே சில முறை அவரோடு பேசி அறிமுகம் இருக்கிறதென்றாலும் சுற்றி இருந்தவர்களைப் பார்க்க பயமாக இருந்த்த. எனக்கு வயிறும் பசித்தது மெனுவைப்பார்த்தேன்.

குயில் குடாங்கா,மட்டன் மடாங்கா,சிக்கன் சிக்காங்கோ சின்னாங்கோ என விதவிதமான பெயர்கள். சப்ளை செய்யும் ஆளை அழைத்து. இதெல்லாம் என்ன என்றேன். நம்மூர் சிக்கன் மட்டன் மீன் கடம்பா போன்றவையைத்தான் மலேசிய மொழியில் எழுதியிருக்கின்றனர். சோறு கிடைக்குமா என்றேன். மேலும் கீழுமாக பார்த்துவிட்டு மெனுவில் கையை நீட்டிக்காண்பித்தார். அதில் சிக்கன்+நாசிகண்டார்+வெஜிடெபிள்ஸ் என்று போட்டிருந்தது. நான் குயில்+நாசிக்கண்டார் வேண்டும் என்றேன். குயில் என்றால் கடம்பா மீன்!. விலை ரூ.125+வரிகள்.

பல நிமிடங்களுக்கு முன் வைத்த ஒற்றை கிளாஸ் தண்ணீரையும் , பக்கத்தில் அமர்ந்திருந்த ரித்தீஷ் குமாரையும் பார்த்துக்கொண்டு காத்திருந்தேன். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அருகில் அமர்ந்து ‘சோறு தின்பது’ மிகமிக பெருமையான விசயம்தான். ஆனால் ஹோட்டலில் என்னைப்பற்றிய எந்த பிரக்ஞையுமே இல்லாமல் சப்ளையர்கள் அலைந்துகொண்டு , பா.உ வை விழுந்து விழுந்து கவனித்தது எரிச்சலாக இருந்தது. சாப்பிட்டதுக்கு நான் வரட்டி தருவது மாதிரியும் அந்தாளு பணம் தருவது மாதிரியுமாய் இருந்தது ‘சப்’ளை. அரை மணிநேரத்திற்கு பின் ஒருதட்டில் வெள்ளையாக சோறும் அருகில் கொஞ்சம் முட்டைகோசு பொறியலும் , ஒரு அப்பளமும் , இரண்டு அரை வெந்த அல்லது பொறித்த முழு வெண்டைக்காயும் கொடுத்தனர். அதை வாங்கி டேபிளில் வைத்துக்கொண்டு இந்த கருமத்த எப்படி தின்றது என நினைத்தபடி அமர்ந்திருந்தேன். காரணம் குழம்பில்லை. அப்போ அந்த குயிலு?




நீங்கள் நினைப்பதைப்போலத்தான் அப்பாவியாக நானும் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் ஒரு தட்டில் குழம்பு வந்தது. அதை ஊற்றி பிசைந்தால் சோறெல்லாம் எண்ணெய். சார் இந்த சாப்பாடுல என்னங்க எண்ணையா இருக்கு என்றேன் , அது மலேசியால சாப்பாடு அப்படித்தான் பண்ணுவாய்ங்க என பதில் கிடைத்தது.
குயில் தனியாக வந்தது. செம டேஸ்ட். கட்டாயம் ஒருமுறை வாய்ப்புகிடைத்தால் முயற்சிக்கலாம். பெலிடா நாசிகண்டர் + பாண்டிபஜார் + குளோபஸ் எதிரில். அதிலும் அரைவெந்த முழுநீள வெண்டைக்காய் தேன்!.

இப்படி ஒரு வழியாக நாசிகண்டருடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க , பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ரித்தீஷ் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரைப்பார்த்து புன்னகைத்தேன். வணக்கம் சார் என்றேன். உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே என்றார். சார் உங்க வீட்ல ஒரு வாட்டி மீட் பண்ணிருக்கேன். அப்புறம் சிக்னல்ல என தொடர்ந்தேன். சட்டென நினைவு வந்தவராய் அட சொல்லுங்க தம்பி என்றார். பேசிக்கொண்டிருக்கும் போதே என்னுடைய சாப்பாடு முடிந்து போயிருந்தது. என்னுடைய புதிய வேலையைப் பற்றியும் அதற்கு அவர் அனுப்பிய கடிதங்கள் , இணையத்தில் அவருடைய பிரதாபம் என பேச்சு நீண்டுகொண்டிருந்தது. அவருடைய புதிய முகமான எம்.பி பதவி பற்றியும் அடுத்த லட்சியங்கள் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். சினிமாவில் பார்ப்பதை விட நேரில் மிகமிக சாந்தமான மனிதர். மலேசிய காபி ஒன்று வாங்கி கொடுத்தார். என்னுடைய பில் வந்தது அதற்கும் தானே பணம் தருவதாக அடம்பிடித்தார். என்னுடைய பணி நிமித்தம் இதுபோன்ற இலவசங்கள் பெறுவது தவறு என நான் சுட்டிக்காட்டினேன் புரிந்துகொண்டார். அவரைச்சுற்றி இருந்தவர்கள் என்னை குறுகுறுவென பார்ப்பது ஒருமாதிரி இருக்க அவரிடம் சரிங்க சார் நாம இன்னொரு முறை சந்திப்போம் என என்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

பில் வந்தது, கார்டை நீட்டினேன். சில நிமிடங்களில் சப்ளையர் திரும்பிவந்தார். சார் கார்டு வொர்க் ஆகலை. ஏன் சார்! மலேசியாவுலயும் இட்லிலாம் சுடுவீங்களா என்றேன்..