Pages

27 November 2009

காமன்மேன்களின் மரணம்!




அந்த காமன்மேன்கள் ஒன்றாகத்தான் பயணித்தனர். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சனைகள். காய்கறி வாங்கவேண்டும். குழந்தைக்கு ஸ்கூல் பீஸு. கிரெடிட் கார்ட் கட்டணம். போனஸில் டிவி. இரவு உணவுக்கு சப்பாத்தியா பூரியா , வீட்டிற்கு ஆட்டோ பிடித்தால் இருபது! நடந்தால் ஃப்ரீ! , மனைவி வந்திருப்பாளா அலுவலகத்திலிருந்து , தனியாக இருக்கும் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கும் இப்படி பலவித கேள்விகளோடும் குட்டிகுட்டி கனவுகளோடும்தான் அந்த ரயிலில் ஒன்றாக பயணித்தனர். இறங்கினர். எவனோ ஒருவன் எங்கிருந்தோ வந்து சரமாரியாக சுடத்துவங்கினான். சிலர் சுடத்துவங்கினர். சிலர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இதெல்லாம் முடிந்து...

ஓராண்டு முடிந்துவிட்டது. போன வருடம் இதே நாள் சிலர் மும்பையின் பிரதானமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதும் ரயில் நிலையத்திலும் தாக்குதல் நடத்திமுடித்து. அந்த நாட்கள் இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. ஒருபக்கம் கையில் துப்பாக்கிகளுடன் அதிரடிப்படை போலீசார். இன்னொரு புறம் அவர்களுக்கு பின்னால் தொலைகாட்சிக்காரர்கள் கையில் கேமராவுடன் பறந்து கொண்டிருந்தனர். போலீசாரின் ஒவ்வொரு நகரலும் நேரடி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

நுனி நாக்கு ஆங்கிலத்தில் அதிரடி செய்திகள் ''நான் இப்போ கையில் மெஷின் கன்னோட ஹோட்டல் உள்ளே பூனை மாதிரி நுழையற ஒரு கமாண்டோ பின்னால நிக்கறேன்'' என உடனுக்குடன் சுடச்சுட தரப்பட்டன. இதில் போட்டி வேறு தீவிரவாதிகள் தாஜ் ஓட்டலில் புகுந்ததை முதன்முதலில் காட்டிய டிவி சேனல் நாங்கள்தான் என மார்த்தட்டிக்கொண்டன. அலசல்கள் , பேட்டிகள் , பிணைக்கைதிகளாக பிடிபட்டிருந்தவர்கள் வெளியில் வரும்போதே மூஞ்சிக்கு முன்னால் மைக்கை நீட்டி HOW DO YOU FEEL ABOUT THIS ATTACK என கடுப்படித்துக்கொண்டிருந்தனர். மும்பையில் நடந்த தாக்குதல் ஏதோ தாஜிலும் ஓபராய் ஹோட்டலிலும் மட்டுமே நடந்தது போல ரயில்நிலையத்தில் ஏதோ தீபாவளிக்கு வெடிவெடித்தது போலவும் நடுநிலையோடு செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தன. நடுவில் வெளியான கார் விளம்பரங்கள் கூட மனதிலிருக்கிறது. எல்லாம் முடிந்து வெளியான பின்னும் செய்தி பஞ்சத்தில் அடிபட்ட ஆண்டிகள் விடாமல் தாஜ் ஹோட்டல் தாத்தாக்கள் ஸ்விம் சூட்டில்! ஒபராய் ஹோட்டல் டீயில் ஈ மிதக்கிறதே! என மாறிமாறி செய்தி வெளியிட்டன. ரயில் நிலைய மரணங்கள் குறித்தோ அல்லது அங்கே நடந்தது என்ன என்பதைப்பற்றியோ இறுதிவரை செய்திகளில் பெட்டிகூட வரவில்லை. சில காவலர்கள் தங்களுடைய இன்னுயிரை இதில் தியாகம் செய்தனர். அமெரிக்காவிற்கு கிடைத்த 9/11 போல இந்தியாவிற்கும் வருடந்தோறும் அஞ்சலி செலுத்தவும் , பேரணி போகவும் , மெழுகுவர்த்தி வியாபாரத்திற்கும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது!

தேர்தலில் இந்த சம்பவத்தின் அடிப்படையில் ஓட்டுக்கேட்டது பிஜேபி. ஏனோ அந்த பல்டி நம்மூர் பொதுஜனத்திடம் வேலைக்கு ஆகவில்லை. இதையே தேசியத்தின் ஒற்றுமைக்குரலாக ஓங்கி ஒலிக்க வைத்தது காங்கிரஸ். அதன் அரசியல் வியாபாரத்திற்கு இறந்து போன காவலர்களின் உடல்கள் நன்கு பயன்பட்டது. இதோ இன்றோடு ஓராண்டு முடிந்துவிட்டது. இப்போதும் அந்த ரயில்நிலைய மரணங்கள் குறித்தோ அந்த மக்கள் குறித்தோ எந்த செய்தியும் இல்லை. ஆனால் தொலைக்காட்சிகள் மீண்டும் துவங்கி விட்டன பிளாஷ்பேக் காட்சிகள். அந்த மூன்று நாட்கள்! 26ன்கீழ் பதினோன்னு நடந்தது என்ன? என்று நடந்த நிகழ்வுகளின் ஓளிப்படம் மீண்டும் அரங்கேறுகின்றன. மீண்டும் அதே கார் விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இப்போது தஸ் வோல்ஸ்வாகனும் இணைந்துவிட்டிருக்கிறது. ரயில் நிலையத்தில் இறந்த எனக்குத் தெரிந்த அந்த காமன்மேன்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இதோ ஓராண்டு முடிந்துவிட்டது.