Pages

29 November 2009

யோகி - வன்முறையின் உச்சம்




உலகிலேயே மிகக்கடுமையான தண்டனை ஒன்று இருக்கிறது. மரண தண்டனை உடனடி பலன்தான் தரும். ஆனால் இதுவோ அணுஅணுவாய் சித்திரவதை செய்து கொல்லும். நம்மில் பலரும் அனுபவித்திருக்கிற ஒன்றுதான். ஒரு குழந்தையை அரைமணிநேரம் அழவிட்டு விடாமல் கேட்டுப்பாருங்கள். மண்டை வெடித்து சிதறிவிடுவதைப் போல கடுமையான எரிச்சலும் கோபமும் சொல்ல முடியாத வேதனையும் அடைய நேரிடுவோம். அதை அனுபவிக்க உங்கள் குழந்தைகளை கிள்ளிவிட்டு அழவைத்து பார்த்து முயற்சிக்க வேண்டாம். யோகி என்றொரு திரைப்படம் வந்திருக்கிறது. ரத்தமில்லாமல் வலியில்லாமல் மின்சாரத்தாக்குதலை தரும் வேதனை, ஒரு குழந்தையோடு! அமீரின் யோகி

நண்பர்கள் டூட்சி படத்தின் காப்பி என்றார்கள். நல்ல வேளையாக அந்த ஆப்பிரிக்க படத்தை நான் பார்த்திருக்கவில்லை. ( 15 ரூபாய்க்கு டிவிடி விற்கும் மணியிடம் ஸ்டாக் இல்லை ). கதை என்னவோ ஏற்கனவே பார்த்திருக்கிற சிட்டி ஆஃப் காட் ( பெரிதாக தாதாயிசம் செய்யத் துடிக்கும் சின்ன லெவல் ரவுடி கும்பல்) , தி கிட் ( எதிர்பாராமல் வந்து சேரும் பணக்கார குழந்தை ) போன்ற படங்களின் கதைகளின் கலவைதான். ஒரு குட்டி ரவுடி கும்பல் , அதன் தலைவன், கொள்ளையடிக்க போன இடத்தில் கிடைக்கும் குழந்தை, குழந்தையோடு காதல் , அதனால் திருந்தி மீண்டும் குழந்தையை ஒப்படைக்க போன இடத்தில் மரணம்! பியூட்டி அண்டு தி பீஸ்ட் வகையறா நான்கு வரி கதைதான். இது மாதிரி கதைகளில் கதாநாயகி மீது வரும் காதலால் ரவுடி திருந்துவான். இதில் குழந்தை மேல் வரும் அன்பால்!.

சுப்ரமணிய சிவா கதை & இயக்கம் , அமீர் திரைக்கதை & வசனம் + நடிப்பு. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே.. ச்சே நம்மாளு உலக சினிமா எடுத்துட்டாய்ங்கடா என்று மார்தட்டிக்கொண்டேன் ( என்னுடைய மார்பை!). இன்டர்வெல்லிலேயே நண்பர் சொல்லிவிட்டார் அடச்சீ இது டூட்சீ என. அமீர் மீது அளவில்லா மரியாதை உண்டு. ஒவ்வொரு படத்திலும் விதவிதமான தளங்களை எடுத்துக்கொண்டு வெற்றியும் பெற்றவர். நம்மூரு லோக்கல் ஹிட்ச்காக் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறேன். ஏனோ இப்படி டுபாக்கூர் வேலை பார்த்திருப்பார் என நம்பமுடியவில்லை. சரி படத்தை பற்றி பேசுவோம்.

மேக்கிங் அட்டகாசம்! அதற்காகவே பார்க்கலாம் படத்தை. அதிலும் ஒளிப்பதிவு பெயர் போடும் போது ஒளிப்பதிவு உதவி என பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை பார்க்க முடிந்தது , உழைப்பு தெரிகிறது. ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலம். குழந்தை அழும் குரலிலிருந்து கத்தி கீசிடும் ஒலி வரை கொரியன் திரைப்படங்களுக்கு இணையான ஒலி ஒளி. திரைக்கதை அமைப்பு ஒரிஜினலில் இருந்து திருடப்பட்டதா என்று தெரியவில்லை ஆனால் யூகிக்க முடிகிற ஒன்றாகத்தான் இருக்கிறது. அதிலும் வில்லனாக வரும் வின்சன்ட் அசோகனின் பாத்திரம் சப்பை!

அமீர் - நன்றாக நடித்திருக்கிறார். படம் நெடுக செல்லும் ஹீரோயிசத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். திகட்டுகிறது. ஹீரோயிசத்திற்கு அமீர் எதற்கு? அதுக்கு கோடம்பாக்கத்தில்தான் ஒரு பட முதல்வர்கள் நிறைய பேர் இருக்கின்றனரே!. கிளைமாக்ஸில் நீ....ளமான சண்டை , நடுநடுவே பதினைந்து பேரை விரட்டி விரட்டி அடிப்பது மாதிரியான காட்சிகள் உலக திரைப்படவிழாவுக்கு அனுப்பும்போது வெட்டி விடுவார்களோ? பாடலாசிரியர் சினேகன் நிறைய முடியோடு அறிமுகமாகியுள்ளார். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். (ஆனால் அவரது பாத்திரப்படைப்பு சிட்டி ஆஃப் காட் படத்தின் லில் இசட் என்னும் வில்லனை போன்று இருக்கிறது) , மதுமிதா , ஸ்வாதி நடித்திருக்கின்றனர்.

விலங்குகள் வதை தடுப்பு சங்கம் இருப்பது போல குழந்தைகள் வதை தடுப்பு சங்கம் தொடங்கலாம். படத்தில் வரும் குழந்தையை படாதபாடு படுத்தியிருக்கின்றனர். சென்சாரும் அதை அனுமதித்திருக்கிறது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ்தான் ஆனால் வன்முறை தூக்கலாக இருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டையில் புஜபலமெல்லாம் காட்டி ஆவென கத்துகிறார் அமீர் , ம்ம் ஒன்றும் சொல்வதற்கில்லை. படம் முழுக்க பல காட்சிகளில் அமீர் நடக்கிறார் , நடக்கிறார் , நடக்கிறார்.. பில்லா நினைவுக்கு வந்து தொலைத்தது.

படத்தின் இசையைப் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். யுவன் சங்கர் ராஜா. ஆரம்பத்தில் ஒரு பாடல் வருகிறது , நடுநடுவே பாடல்கள் ஒன்றும் மனதில் ஒட்டவில்லை. பிண்ணனி இசை பல இடங்களில் 7ஜி ரெயின்போ காலனி , இளையராஜாவின் பழைய படங்களின் பாதிப்பு. கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். படம் நெடுக வரும் அந்த தீம் மியூசிக் , அழகான லுல்லபி(தாலாட்டு). நன்றாக இருக்கிறது. ஆனாலும் மனதிற்குள் இதை எங்கிருந்து சுட்டுருப்பாய்ங்க என்றொரு கேள்வி எழாமல் இல்லை. காரணம் எங்கேயோ கேட்ட இசை!

படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் சிறுகதை! அருமையான காட்சிகள் அது, பார்ப்பவர் மனதிலறையும் உண்மைகள்.

சண்டைக்காட்சிகள் , தேவையில்லாத ஹீரோயிசம் , கொஞ்சம் வன்முறை என படத்தில் நிறைய குறைத்திருந்தால் தமிழில் வந்த உலகசினிமாவாக இருந்திருக்கும். ஏனோ இரண்டு வருடமாக ஒவராக செதுக்கி செதுக்கி எல்லாமே ஒவராகிவிட்டிருக்கிறது. ஒவரா வெந்த சோறு குழைஞ்சிரும்னு சொல்லிருக்காங்களே! அப்படித்தான் இருக்கு.

அமீர் ஒரு மிகச்சிறந்த கலைஞர். இதைவிட சிறப்பான படமெடுக்கும் திறமையுள்ளவர். இம்முறை தோற்றிருக்கிறார். டூட்சி படத்தின் காப்பியாக இருந்தாலும் நல்ல கதையாக இருப்பதால் சிறப்பாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். படம் முடிந்து வெளியில் வரும் போது ஒரு வித மன சோர்வை கட்டாயம் ஏற்படுத்துகிறது. தமிழில் ஒரு புதிய முயற்சி என்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

யோகி - வன்முறையின் உச்சம் , தலைவலிதான் மிச்சம்!