Pages

19 December 2009

ஓடு ஓடு... வரான் பாரு..வேட்டைக்காரன்!

ஓடு ஓடு... வரான் பாரு..வேட்டைக்காரன்!





முதலில் படத்தின் ரிசல்ட்! பின்னர் விமர்சனம்.

படம் மரணமொக்கை!. இப்படி ஒரு படம் தமிழில் எடுக்கப்படுவது இரண்டாயிரத்து இருநூற்றி முப்பத்தைந்தாவது முறையாக இருக்கலாம். திரைப்படம் எத்தனை மொக்கையாக இருந்தாலும் அதை தட்டி ஓட்டி பெண்டு நிமிர்த்தி டிங்கரிங் வேலை பார்த்து முரட்டுத்தனமாக விளம்பரம் செய்து எப்படியாவது ஹிட்டாக்கி காசு பார்த்து விடுவார்கள். இந்த படத்தையும் ஓட வைத்து விடுவார்கள். இந்த படம் ஓடும். வசூலை அள்ளும். சுயூர் சூப்பர் ஹிட் ஆனால் படம் மரணமொக்கை.


சில ஆண்டுகளுக்கு முன் மதுரையின் சினிப்பிரியா தியேட்டரில் ஏதோ ஒரு விஜய் பட ரிலீஸ். பட்டாசுகளும் பிளக்ஸ் பேனர்களும் பேண்டு வாத்தியங்களுமாக அதிரிபுதிரியாக இருந்தது. பிளாக்கில் டிக்கெட் கிடைக்குமா என சுற்றிக் கொண்டிருந்தேன். கேட் வாசலில் பாவமாக சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என்னடா தம்பி டிக்கட் கிடைக்கலயா? என துக்கம் விசாரித்தேன். டிக்கட் கிடைக்காதவன் சோகம் இன்னொரு டிக்கட் கிடைக்காதவனுக்குத்தானே தெரியும், ஆனால் அவனோ அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே! என்றான். ஏன்டா அப்புறம் ஏன் இப்படி இருக்க என்றேன், எங்க தல படம் இந்த வாட்டி வரல வந்துச்சுன்னா இதைவிட இன்னும் நூறு மடங்கு தூள் பண்ணனும்ண்ணே என்றான்.

இப்படிப்பட்ட இளம் ரசிகர்கள் இருக்கும் வரை ஒரு வேட்டைக்காரன் அல்ல லட்சம் வேட்டைக்காரர்கள் தமிழ்கூறும் நல் உலகில் அன்றாடம் ரிலீஸ் ஆகிக்கொண்டேதான் இருக்கப்போகின்றனர். அதனால் அதுகுறித்து சமூக அவலக் கவலைகளின்றி திரைப்படம் குறித்து மட்டும் பேசுவோம்.

படத்தின் கதை உய்யாலா உய்யலாலா! சம்பவாமி யுகே யுகேவென ரவுடிகளை அழிக்க அவதாரம் எடுக்கும் ஹீரோ பற்றியதுதான். அதற்காக ஒரு சென்டிமென்ட்.கொஞ்சம் காமெடி. நிறைய மசாலா. நிறைய தலைவலி எல்லாம் சேர்த்து நம் டவுசரை அவிழ்க்கின்றனர். சம்பவாமி யுகே யுகே என்பது நிஜமாக இருந்தால் இப்படி படம் எடுத்து டார்ச்சர் கொடுக்கும் இயக்குனர்களை அழிக்க கிருஷ்ண பகவான் இன்னொரு முறை அவதாரம் எடுக்கலாம். முடியல!

ஹீரோ விஜய். இன்னும் நான்கு படம் இப்படியே நடித்தால் நாட்டு மக்கள்தொகை பெருமளவில் குறைந்து இந்தியா வல்லரசாகிவிடும். தோளை குறுக்கிக்கொண்டு கையை கும்பிடுவது போல் கோர்த்து என்னங்கண்ணா சொல்லுங்கண்ணா என்று மூக்கில் பேசி காமெடி பண்ணுகிறார். தன் சின்னகண்களை அகலமாய் திறக்க முயற்சித்து புருவம் உயர்த்தி ஏய் நேனு எவரு தெலுசா என அடித்தொண்டையில் சவால் விடுகிறார். கெட்டப்பெல்லாம் மாற்றிக்கொண்டு நன்றாக நடனமாடுகிறார். அந்த பிரவுண் ஹேர்ஸ்டைல் சகிக்கலை. படம் முழுக்க பாட்ஷா ரஜினி போலவே நடந்து ‘கொல்’கிறார். படம் முழுக்க பகவதி படத்தில் ஏற்கனவே போட்டிருந்த அதே கோட்டைப்போட்டுக்கொண்டு அதை போல புலிஉறுமுது புலி உறுமுது என நடக்கிறார். சேம் கோட் நமக்கு சேம் பிளட்! சாரி விஜய் பெட்டர் லக் நெக்ஸ்ட் பிலிம்!

ஹீரோயின் அனுஷ்கா , பாதி படம் வரைக்கும் விரைப்பாக அலைகிறார். பின்னர் ஆடுகிறார். ஓடுகிறார். அழுகிறார். இப்போதெல்லாம் நாயகிகள் காமெடி டிராக் போல உபயோகப்படுத்தப்படுகின்றனர். முதல் பாதி காமெடிக்கு யூஸ்ஃபுல்லாக ஏதோ பண்ணியிருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் ஏதோ செய்யப்போகிறார் என மிகவும் எதிர்பார்த்த வில்லன் , விஜயை பயமுறுத்துகிறேன் பேர்வழி என ஏதேதோ செய்கிறார். விஜய் விரைப்பாக அதைபார்த்துக்கொண்டிருக்கிறார். பயம் வரலையாம்! நமக்கு சிரிப்புதான் வருகிறது. வில்லன் கோஷ்டி சீரியஸாக செய்வதெல்லாம் நல்ல காமெடி கலாட்டா! சண்டைக்காட்சிகளிலும் காமெடிக்குப் பஞ்சமில்லை.

படத்தின் ஆங்காங்கே குட்டிகுட்டியாக நல்ல வசனங்கள் வந்து விழுகின்றன. அடிக்கிற சுனாமியில் அல்வாத்துண்டு கிடைத்தால் அனுபவிக்கவா முடியும்! படத்தின் பெரும் பகுதி ஏவிஎம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டிருப்பார்கள் போல பாட்ஷா காலத்து செட்டு! இன்னும் கொஞ்சம் செலவழித்திருக்கலாம்.

ஏவிஎம் தயாரிப்பாம். ம்ம்!

வில்லுவிற்கும் குருவிக்கும் எவ்வளவோ தேவலாம். க்யூட் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம். மற்ற படி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அப்பாவி ஜனங்களுக்குத்தான் திண்டாட்டம்! சிவ சம்போ!

***