Pages

23 December 2009

ஆறுமாதம் சிறை! ஆயிரம் ரூபாய் அபராதம்!






ருச்சிகாவை நீங்கள் மறந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். 1990ல் ஹரியானாவின் ஒரு டென்னிஸ் பயிற்சிக்கூடத்தில் துவங்கியது அவளுடைய கதை. அப்போது அவளுக்கு 14 வயது. குழந்தைப்பருவத்தின் எல்லையில் இருந்தவள். டென்னிஸ் விளையாட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரம். அங்கேதான் நிகழ்த்தப்பட்டது அந்த கொடூரம். தனது தோழியுடன் விளையாடி முடித்துவிட்டு கிளம்பியவளை ராதோர் தன்னுடைய அறையை திறந்து உள்ளே வரச்சொல்லி, அவளுடைய தோழியை வேறு காரணத்திற்காக வெளியே அனுப்பிவிட்டு தவறாக நடந்திருக்கிறான் .அழுதபடி வீட்டிற்கு திரும்பினாள் ருச்சிகா. இதை விசாரித்த அவளுடைய அப்பாவும் வக்கீலான அம்மாவும் நேராக காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.அந்த பொறுக்கி ராதோர் காவல்துறையின் மிகபெரிய பொறுப்பில்(டிஜிபி) இருந்து ஓய்வு பெற்றவன்.. ஹரியானா லான் டென்னிஸ் அமைப்பின் தலைவராக இருப்பவன். அவனை எதிர்த்து புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ருச்சிகா டென்னிஸ் சங்கத்திலிருந்து காரணமின்றி நீக்கப்பட்டாள். பள்ளியிலிருந்தும் நிறுத்தப்பட்டாள்.
இத்தனைக்கும் காரணம்? மறுக்கப்பட்டது. வழக்கை திரும்ப பெறக்கோரி அடுக்கடுக்காய் தொடர்ந்து ருச்சிகாவின் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள். இதில் கார் திருடினான் என ருச்சிகாவின் சகோதரன் ஆசுவை கைது செய்துள்ளனர். வெற்று காகிதங்களில் கையெழுத்திடக்கோரி அவனை துன்புறுத்தினர். தொடர்ச்சியான தாக்குதல்கள். காவல்துறையினர் விடாமல் துரத்தினர். ருச்சிகாவின் தந்தை தன்னுடைய வீட்டை விற்றுவிட்டு இடம் பெயர்ந்தார். ஆனாலும் தொல்லைகள் தொடர்ந்தது. தன்னால் தன் குடும்பத்தினருக்கு எத்தனை பிரச்சனைகள் என நினைத்த ருச்சிகா 1993ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. ருச்சிகாவின் தந்தையால் தொடர்ந்து வழக்கை சந்திக்க இயலவில்லை. ருச்சிகாவின் தோழி ஒருவர் முன்னின்று வழக்கை தொடர்ந்தார்.
19ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த பொறுக்கி ரதோர் இன்றைக்கு காவல்துறையின் மிகப்பெரிய பொறுப்பிலிருக்கிறான். அவன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு சிபிஐ விசாரணைக்குப்பின் முடிவுக்கு வந்திருக்கிறது. ஒரு குழந்தை மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதிற்காகவும், அந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு தொல்லைகள் கொடுத்ததற்காகவும் அவருக்கு ஆறு மாத சிறையும் ஆயிரம் ரூபாய்கள் அபாரதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்திலிருந்து சிரித்துக்கொண்டே வெளியே வருகிறான் அந்த பொறுக்கி , தண்டனை கிடைத்த பத்து நிமிடத்தில் பெயிலும் கிடைத்துவிட்டது. 19 ஆண்டுகள் போராடியதற்கு பலன் ஆறுமாதமும் ஆயிரம் ரூபாயும்!
இது போன்ற வன்புணர்ச்சி சார்ந்த வழக்குகளில் குறைந்த பட்ச தண்டனையே இரண்டு ஆண்டுகள் , அதிகபட்சம் 10 ஆண்டுகள். கருணை அடிப்படையில் ஏழு. ஆனால் இந்த பொறுக்கி செய்தது உறுதியாக நிரூபிக்கப்பட்ட பின்னும் அவனுக்கு ஆயிரம் ரூபாய் தண்டனை கொடுத்திருப்பது நீதித்துறையின் எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்.
வன்புணர்ச்சிக்கு ஆளானவர் பெண்ணாக இருந்தாலே தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற மக்கள் வாழும் நாட்டில், பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு குழந்தை. இன்றைக்கு நாட்டையே உலுக்கும் பிரச்சனைகளில் பிரதானமான ஒன்று குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. அண்மையில் கூட வெளிநாட்டுக்கார பொறுக்கி ஒருவன் குழந்தைகளுக்கு வீடியோ கேம்ஸ் கொடுத்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாகவும் அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கும். இப்படி அன்றாடம் பள்ளிக்கும் மைதானங்களுக்கும் விளையாடவும் சுதந்திரமாக வெளியே செல்லும் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த குழந்தையையும் பலாத்காரம் செய்ய இயலும் என்கிறதா நமது நீதி. இனி அட்வான்ஸ் புக்கிங்கில் குழந்தைகளிடம் வன்புணர்ச்சியில் ஈடுபடலாம் போலிருக்கிறதே! இது போன்ற பொறுக்கிகளை , அதிலும் காவல்துறையில் இருந்து கொண்டு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அது மற்றவருக்கு பாடமாக இருந்திருக்க வேண்டாமா? என்ன செய்கின்றன நீதி மன்றங்கள்.
ரதோர் ஒரு அப்பாவி! அவர் புகழைக்குலைக்க வேண்டுமென்ற ருச்சிகாவின் குடும்பத்தினரும் , மீடியாவும் கற்பனையான ஒரு கட்டுக்கதையை உலகிற்கு சொல்கின்றன என்று கதறுகிறார் ரதோரின் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. ராம்ஜெத்மலானியைப்பற்றி பெரிதாக சொல்லத்தேவையில்லை.எவ்வளவு வெட்கக்கேடான செயல். இவரைப்போன்ற ஆட்கள் இருக்கும் உலகில் நம் குழந்தைகளுக்கு என்னதான் பாதுகாப்பு.
இன்றைக்கு பல நாடுகளிலும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தட்டிக்கேட்க CHILD PROTECTION UNIT கள் உண்டு. எந்த ஒரு குழந்தைகள் சார்ந்த வழக்காக இருந்தாலும் அவைகளே அது குறித்து விசாரணைகள் மேற்கொள்கின்றன. அது போன்ற அமைப்புகள் இந்தியாவிலும் அவசியம். நம் நாட்டில் விலங்குகளை பாதுகாக்கவும் பறவைகள் பாதுகாப்பிற்கும் கூட அரசு சார்ந்த அமைப்புகள் உண்டு (அவை எந்த இலட்சணத்தில் பணியாற்றுகின்றன என்பது யாருக்கும் தெரியாது) . குழந்தைகளுக்கான பாதுக்காப்பு அமைப்புகள் அவசியம் என்பதை இந்த வழக்கு நமக்கு உணர்த்துகிறது.
19 ஆண்டுகள் குற்றம் புரிந்தவன் சௌகரியமாக அதுவும் அரசு வேலையில் இருந்திருக்கிறான். அவனுக்கு தண்டனை வழங்க அவனுடைய வாழ்நாளின் மூன்றில் ஒரு பங்கு கால அவகாசம் ஆகியிருக்கிறது. இனி அவனுக்கு தண்டனை கொடுத்து என்ன ஆகிவிடப்போகிறது , எப்படியும் இன்னும் சில நாட்களில் செத்து விடுவான். தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டாமா? அதிலும் இதுபோன்ற பெருகி வரும் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனைகள் மட்டுமே போதாது , உடனடி தீர்வுகளும் அவசியம்.
நம் நீதித்துறை கொட்டாவி விட்டபடி ஆறு மாத சிறையும் ஆயிரம் ரூபாய் தண்டனைகளும் வழங்கி ஆணி பிடுங்கும் வரை லட்சம் ரதோர்கள் தினமும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு குழந்தையின் எதிர்காலத்தை....