Pages

20 October 2009

கொலைகாரன் நினைவுகள்


கொலைகாரன் நினைவுகள்

ஒரு புலி ஊருக்குள்ள புகுந்துகிட்டு மனுசங்களையெல்லாம் திங்க ஆரம்பிச்சுது. எப்படியாவது அதை புடிக்கணும்னு நம்ம தமிழ்நாடு காவல்துறை,ஸ்காட்லான்ட் யார்டு, எப்.பி.ஐ (அமெரிக்கா போலீஸ்) மூணு படைகள் காட்டுக்குள்ள போச்சு. ஸ்காட்லான்ட் யார்ட் எவ்ளவோ டிரைபண்ணியும் அந்த புலிய புடிக்க முடியலனு திரும்பி வந்துட்டாங்க. எப்.பி.ஐ ஒரு வாரம் கழிச்சு திரும்பி வந்து நாங்க சாட்டிலைட் அனுப்பிருக்கோம், விரைவில் அதுல பாத்துட்டு சொல்லுவோம் அது வரைக்கும் ஊருக்குள்ள அழிச்சாட்டியம் பண்றோம்னு திரும்பிட்டாங்க. ஒரு மாசம் ஆச்சு நம்ம ஊரு போலீஸ காணோம். ரெண்டு மாசம் ஆச்சு ம்ஹூம் காணோம்.. ஆஹா புலி நம்ம போலீஸ்ங்கள சாவடிச்சிருச்சோனு நினைச்சு ஊர்க்காரங்க பாசத்தோட காட்டுக்குள்ள போலீஸ தேடிட்டு போனாங்க!

இருட்டான காட்டுக்குள்ள முரட்டுத்தனமா தேடி அலைஞ்சாங்க! கடைசியா ஒரு குகைக்குள்ளருந்து ஏதோ சத்தம் வருதேனு .. உள்ள நுழைஞ்சு பார்த்தா ஒரு கரடிக்குட்டிய தலைகீழா கட்டித்தொங்க விட்டு நம்ம ஊரு போலீஸ் நொங்கெடுத்துகிட்டுருந்தாங்க! இன்னும் கிட்டப்போய் பார்த்தா
‘’நான்தான் புலினு ஒத்துக்க.. நான்தான் புலினு ஒத்துக்க’’ கைல ஒரு லத்திய வச்சுக்கிட்டு , கரடிய நிர்வாணமா கட்டித்தொங்கவிட்டு அடிச்சிகிட்டுருந்தாங்க!

ரொம்ப பழைய ஜோக்கு.. உங்களுக்கு சிரிப்பு வந்திருந்தாலும் வராவில்லையென்றாலும் இதற்குள் இருக்கும் பிரச்சனை மிகவும் கொடுமையானது. வன்முறை நிறைந்தது. உலகெங்கும் வல்லரசு நாடுகள் பலதும் தங்களுடைய மேலதிகாரத்தை காட்டுவதில் துவங்கி லோக்கல் கான்ஸ்டபிள் வரைக்கும் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே இது போன்ற வன்முறைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. யாரோ செய்த தவறுக்காக தண்டனை அனுபவிப்பது மிக மிக கொடுமையானது. அது பள்ளிக்கூடத்தில் நடந்தாலும் சரி , யாரோ செய்த புரட்சிக்காக லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக முகாம்களில் அடைத்து கொடுமைப்படுத்தி தண்டித்தாலும் சரி.. வன்முறை ஒன்றுதான் . அதற்கு ஸ்கேல் கிடையாது.

அந்த ஊரில் ஒரு அழகான இளம் பெண் கொல்லப்படுகிறாள். அவளது வாயில் மார்க்கச்சையால் கட்டப்பட்டிருக்கிறது. முகம் அவளுடைய உள்ளாடையால் மூடப்பட்டு பின்கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாய் கிடக்கிறாள். அதை விசாரணை செய்ய இரண்டு லூசுத்தனமான போலீஸ்காரர்கள் வருகின்றனர்.

MEMORIES OF MURDERER திரைப்படம் இப்படித்தான் துவங்குகிறது. கொரிய தேசத்தின் ஒரு சிறிய நகரம் ஜியுன்ஜி. 1986 கொரியா சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்தது. அந்த ஊரில் தொடர்ச்சியாய் இரண்டு கொலைகள். இருவரும் இளம் பெண்கள். கொலை செய்யப்பட்ட விதம் ஒரே மாதியானவை. முட்டாள் போலீஸ் காரர்கள் கிடைப்பவர்கள் மீதெல்லாம் சந்தேகப்பட்டு அடித்து துவைத்து அவர்கள்தான் அந்த கொலைகளை செய்ததாக ஒப்புக்கொள்ள செய்ய முயல்கின்றனர். பார்ப்பவர் மீதெல்லாம் சந்தேகம். அந்த ஊருக்கு புதிதாய் வரும் இன்ஸ்பெக்டர் மீதே சந்தேகம் கொண்டு அவனையும் அடிக்கின்றனர். பின்னர் அவன் இவர்களோடு பணியாற்ற வந்தவன் என்பதை அறிந்து கொண்டு மன்னிப்பு கேட்கின்றனர். அந்த புதியவன் கொரியாவின் தலைநகரிலிருந்து வந்தவன். நிறைய படித்தவன். அமைதியானவன். சிந்தனையாளன். அந்த கொலைகளை வேறு பாணியில் ஆராய்கிறான். அதற்கு நடுவில் மூன்றாவது ஒரு பெண் கொல்லப்படுகிறாள். குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தம். இவர்களுடைய விசாரணை மேலும் முடுக்கி விடப்படுகிறது . இம்முறை மேலும் பல அப்பாவிகள் அதிக வன்முறை! இறுதியில் அந்த கொலைகாரன் பிடிபட்டானா? அப்பாவிகளின் நிலை என்ன? போலீஸ்காரர்கள் என்ன ஆனார்கள் என்பது கதை!.

மிகச்சாதாரண துப்பறியும் கதைதான். திரைக்கதை! பிரில்லியண்ட். படம் அகிரா குராசோவாவின் ஹிட்டன் போர்ட்ரஸ் திரைப்படத்தை போல படத்தின் முக்கியமில்லாத அல்லது ஒரு சாதாரண பாத்திரத்தின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தில் வருகிற லூசு போலீஸ் அவன்தான் படம் முழுக்க நம்மை அழைத்துச் செல்கிறான். படத்தின் நாயகனோ கொலைகாரனோ படத்தின் சாதாரண வழிப்போக்கர்களாகவே இருக்கின்றனர். அது தவிர படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கும் குறையாத நகைச்சுவை வயிறை புண்ணாக்குகிறது. பிளாக் காமெடி வகையாக இருக்கும் என்றே நினைக்கிறேன். பல இடங்களில் அப்பாவிகளை துன்புறுத்தி அவர்கள்தான் கொலைகாரன் என ஒப்புக்கொள்ள வைக்கின்ற காட்சிகள் அனைத்துமே நகைச்சுவையாக காட்டப்படுகிறது. ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் வன்முறை அபரிமிதமானது. இறுதிவரை அந்த கொலைகாரனின் முகத்தை காட்டாமல் , படம் முழுக்க கொலை மற்றும் பிணங்கள் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் , போலீஸ் காரர்களையும் அப்பாவிகளையும் குறித்தே கவலையுறவும் யோசிக்கவும் வைத்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் ஜூன் ஹோ போங்கின் பிற படமான தி ஹோஸ்ட் ( தமிழிலும் வெளியாகி இருந்தது ) படத்திலும் சரி இந்த திரைப்படத்திலும் சரி! ஒரு பெரிய பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதிலிருந்து விலகி உணர்வுகளுக்குள் ஊடுருவிச்செல்கிறது திரைக்கதை.

படத்தின் மிகமுக்கிய அம்சங்கள் கேமரா மற்றும் ஒலிப்பதிவு. அபாரம். மழைக்கால காட்சிகளில் பொதுவாக இஸ்ஸ் என்கிற ஒலி மட்டுமே கேட்பதாய் படங்களில் அமையும் , ஆனால் கொலை நிகழும் மழைக்கால இரவுகளின் ஒவ்வொரு சின்ன சின்ன சப்தங்களும் மிக அருமையாய் பதிவாகியுள்ளது. குடைகளின் மேல் விழும் தடதட மழை சத்தம் முதல் மழையில் நனையும் காகிததின் சத்தம் வரை அனைத்தும் பர்பெக்ட். முதல் காட்சியில் மஞ்சளாய் துவங்கும் காட்சிகள் பச்சை சிகப்பு கறுப்பு என காட்சிகளுக்கு ஏற்றாற் போல நிறம் மாறுவது ஏதேச்சையானதாய் தெரியவில்லை.

படத்தின் நாயகன் அல்லது முக்கிய பாத்திரத்தில் சாங் காவ் ஹோ வின் நடிப்பு படத்தின் மிகபெரிய பலம். அப்பாவியா , வில்லனா , பைத்தியமா , முட்டாளா என புரிந்து கொள்ள முடியாத ஒரு போலீஸ் பாத்திரத்தை அருமையாய் செய்திருக்கிறார்.
படத்தின் இசை உறுத்தலில்லாமல் , கொலைக்காட்சிகளில் பதறவைத்து , வன்முறையில் மனதை சிதறடிக்கிறது.

உலக அளவில் பல விருதுகளை பெற்ற இந்த திரைப்படம் வெளியான ஆண்டு 2003. வாய்ப்புக்கிடைத்தால் அனைவரும் கட்டாயம் பார்க்கலாம்.

18 October 2009

பேராண்மையுடன் ஜகன் மோகினி!





தீபாவளி என்றாலே பட்டாசு , இனிப்பு , புத்தாடைதான் ஸ்பெசல். அத்துடன் அன்றைக்கு ரிலீஸாகிய படத்தை அன்றைக்கே பார்த்து மகிழ்வது. மதுரையில் வருடம்தோறும் ரஜினியோ கமலோ விஜயோ அஜித்தோ அவர்களுடைய படங்கள் ரிலீஸாகவில்லையென்றால் அந்த தீபாவளியை கறுப்பு தீபாவளியாக அறிவித்து போஸ்டர்கள் ஒட்டுவது வழக்கம். நல்ல வேளையாக அந்த மொத்த ரசிகர் கூட்டத்துக்கும் இந்த தீபாவளி பிளாக் ஆகிவிட்டது. வேட்டைக்காரன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ( ஜாலியான போஸ்ட்டுக்கு உத்திரவாதம் ! ) .

சூர்யா நமீதா ஜெயம்ரவி என மூன்றே பேரின் திரைப்படம்தான் வெளியாகியிருக்கிறது. ஆதவன் திரைப்படம் குறித்து தனியாக அலசி காயப்போட்டு கபடி ஆடலாம். மற்ற இரண்டு படத்திற்கு ஒரு விமர்சனமே ஓவர். தீபாவளிக்கு சிலர் பட்டாசு வெடித்து கையே சுட்டுக்கொள்வார்கள். நான் படம் பார்த்து சூ வை... ம்ம்.. என் சோகக்கதை என்னோடு போகட்டும்! ஓவர் டூ தி இரண்டு மூவிஸ்.

டாஸ்மாக்கில் சரக்கடிப்பவர்கள் பக்கத்துவீட்டு பரம சிவம் குறித்து பேச ஆரம்பித்தால் அப்படியே நூல் பிடித்து வளர்ந்து விருட்சமாகி அது பாகிஸ்தான் முதல் ஓபாமா பிரபஞ்சம் பிளாக் ஹோல் வரைக்கும் நீளும். திராவிடம் பார்ப்பனீயம் புவனேஸ்வரி என சரவெடியாய் இருக்கும் அவர்களது பேச்சு. ஆனால் எதையும் உருப்படியாக பேச மாட்டார்கள். போதை தெளிந்தால் பழைய குருடி கதவை திறடி கதைதான். அந்த கதை பின்னொரு சமயம் சொல்கிறேன்.

பேராண்மை ஒன்றரை ( கிட்டத்தட்ட இரண்டு ) வருடங்களாக ஜெயம் ரவியின் நொங்கை பிதுக்கி காடு மலையெல்லாம் அலைந்து திரிந்து எடுக்கப்பட்ட படம். இட ஓதுக்கீடு , சாதிப்பிரச்சனை, சர்வதேச அரசியல் , பெண்ணீயம், காடுகள் அழிப்பு , சுற்றுசூழல் பாதுகாப்பு , வனத்துறையில் நடக்கும் பிரச்சனைகள் , இந்தியாவின் வளர்ச்சி , தேசியம் , மலைவாழ் மக்களின் வாழ்வுரிமை என இன்னும் இத்யாதி இத்யாதிகளை ஊறுகாய் போல போகிற போக்கில் தொட்டுச்செல்கிறது. ஈ திரைப்படத்தில் மருத்துவம் மற்றும் மருந்துக்கம்பெனிகள் , தொற்று நோய்கள் சார்ந்த சர்வதேச பிரச்சனையை செவிட்டில் அறைந்தாற் போல சொல்லியிருப்பார். எல்லா காமன் மேன்கள் மற்றும் காமன் வுமன்களுக்கும் புரியும்படி இருக்கும். ஆனால் இதிலோ எல்லா கருமாந்திர பிரச்சனைகளையும் கையிலெடுத்துக்கொண்டு எதையும் புரியும் படி சொல்ல முயன்று தோற்றிருக்கிறார் ஜனநாதன்.
படத்தின் முதல் பகுதி முழுக்க நான்கு பெண்கள் கூத்தடிக்கிறார்கள். ஜெயம் ரவியை அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் தெளிவாக இல்லை. ( படத்தின் முதல் பகுதியின் பெரும்பாலான வசனங்கள் சென்சார் செய்யப்பட்டதால் புரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு ). அதனால் சுவாரஸ்யம் இல்லை. வடிவேலுவின் ஹாஸ்யமும் எடுபடவில்லை. இப்படி பல இல்லைகளுடன் முதல் பாதி மொக்கையாக கழிந்தது. படத்தின் ஆரம்பம் இன்டர்வெல்லில்தான் துவங்குகிறது. அதற்கு பின் படம் படு ஸ்பீட். அருமையான ஆக்சன் , நல்ல சேஸிங். ( சில இடங்கள் அகிராவின் செவன் சாமுராய் திரைப்படத்தை ஞாயபகப்படுத்தியது ) . ஹாலிவுட் நடிகர்கூட நடித்திருக்கிறார்கள்.

முதல் பாதியை வெற்றிகரமாய் கடந்து விட்டால் இரண்டாம் பாதியில் படம் மின்னல் போல பட்டையை கிளப்புகிறது. படத்தின் வசனங்கள் பல இடங்களில் செம ஷார்ப். வசனங்களில் சென்ஸார் விளையாடிருக்கிறார்கள். அதையும் மீறி பல இடங்களில் ஜனநாதன் என்றொரு புரட்சிக்காரனின் குரல் ஆங்காங்கே ஒலிக்காமல் இல்லை. ஜெயம் ரவி , வித்யாசம். நன்றாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் குரலிலும் உழைப்பு தெரிகிறது. அந்த ஐந்து பெண்கள்? எத்திராஜ் காலேஜில் பிடித்தது போல செம இளமை. துறுதுறுப்பு. இயக்குனர் அவர்களுடைய உடையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி ஒகே!. நிறைய பட்ஜெட்டில் பெரிய நட்சத்திரங்களை வைத்து இதே படத்தை எடுத்திருந்தால் இது மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும். பல இடங்களில் கிராபிக்ஸும் ஆக்சனும் பட்ஜெட்டில் பல் இளிக்கிறது.

காடு மலை என கடினமான பாதைகளில் பயணிக்கும் போது ஆரம்பத்தில் கல்முள் என பிரச்சனைகளை கடந்துவிட்டால் அருமையான அருவியோ சோலையோ கட்டாயம் தென்படும். இந்த திரைப்படத்திலும் மொக்கையான முதல் பாதியை பல்லைக்கடித்துக்கொண்டு கடந்து விட்டால் , அருமையான ஆக்சன் அட்வென்ச்சருக்கு உத்திரவாதம். யாருமே பேசாத பல பிரச்சனைகளை மேலோட்டமாக யார் மனதிலும் பதியாத அளவிற்கு பேசிய ஜனநாதனுக்கு ஷொட்டு+குட்டு.

விட்டாலாச்சார்யாவின் ஜகன் மோகினி திரைப்படத்தை சிறுவயதிலிருந்து ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் நிச்சயம் என்னை திருப்திப்படுத்தியிருக்கிறது. சிறுவயதில் பயமுறுத்தும் வெள்ளைப்பேய். கொஞ்சம் வளர்ந்த பின் மாயாஜாலம். இன்னும் வளர்ந்த பின் ஜெயமாலினியின் கவர்ச்சி. என அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்த திரைப்படம் அது. (படம் மகா மொக்கையாக இருந்தாலும் IT JUST ENTERTAINING). அதே படத்தை நமீதாவை வைத்து ரீமேக்கி இருக்கிறார்கள். அதனால் பழைய படத்தின் மீதான காதலும் , நமீதாவின் மீதான ஆவலும் புதிய ஜ.மோவை காண காரணங்கள் ஆகின. படத்தின் கதை மாற்றப்பட்டுள்ளது. பழைய கதையையே எடுத்திருக்கலாம்!

நவமோகினி,கடல் மோகினி,யுகமாயினி இப்படி நாலைந்து விட்டலின் படங்களில் இருந்து ஒரு கதையை எடுத்துக்கொண்டு , நமீதாவின் ______களை நம்பியே களத்தில் இறங்கியிருக்கின்றனர். நமீதாவை பார்க்க பயமாக இருக்கிறது. பூதங்களை யாரும் விரும்புவதில்லை. அவரது நடிப்பு , மற்ற காட்சிகள் , நடிகர்களின் நடிப்பு இரண்டாம்தர பிட்டுப்படங்களைப்போல இருக்கிறது. வடிவேலு+வெண்ணிற ஆடை மூர்த்திக்கூட்டணியில் காமெடி.. பச்சை பச்சையா வசனம். ஊதி ஊதி வாய் இப்படி வீங்கிருக்கு, கைதான் பிசஞ்சுகிட்டு இருக்கே வாய்ல வச்சு செய்றதுதானே என்கிற ரேஞ்சில் அருமையான வசனங்கள். (படம் முழுக்கவே வசனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. வெண்ணிற ஆடை மூர்த்திதான் வசனங்கள் எழுதினாரோ என்னவோ?). அம்மன் திரைப்படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது , அதை விட கேவலமான கிராபிக்ஸ். டிஷ்னி சானலில் இதைவிட நல்ல கிராபிக்ஸ் வருகிறது. இசை இளையராஜா.. பாவம் இவரு.. இருக்க இருக்கு ஷகிலா படத்துக்கு கூட மியுசிக் போட்டு பேர கெடுத்துக்குவாரு போலருக்கு. பிண்ணனி இசையில் ஒரு இடத்தில் கூட இளையராஜா இல்லை. பாடல்களிலும்!. முக்கால் வாசி படத்திலேயே எழுந்து வந்து விட்டதால் இந்த படத்திற்கு இதற்கு மேல் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை.

மக்கள் நலனுக்காக ஒரு பின் குறிப்பு -

பிட்டுக்கொசரமாவது ஜகன் மோகினியை பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் எதையும் எதிர்பார்த்து போகவேண்டாம் அங்கே ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

07 October 2009

அலங்கல் - 2

சென்றவாரம் கிழக்குப்பதிப்பக மொட்டைமாடியில் தி லெஜன்ட் ஆப் 1900 என்கிற படம் திரையிடப்பட்டது. அருமையான படம். நல்ல கதை. உணர்வுகளை தட்டி எழுப்பி கண்ணுக்குள் விரலை விட்டு கசக்கி கண்ணீரை வரவழைக்கும் காவியம். பார்த்துக்கொண்டிருந்த பலரும் அப்படியே பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தனர். படம் முடிந்த பின் மனதில் ஒரே ஒரு சந்தேகம் எழும்பியது. A small doubt! ஏன் எல்லா உலக சினிமாவும் சோகமான உணர்வுகளையே பிரதிபலிப்பதாய் , மனதுக்கு பாரமாய் , அழுகாச்சி காவியங்களாகவே இருக்கின்றன. ( சினிமா ஆர்வலர்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் பெரும்பாலான உலகசினிமாக்கள் அதுபோலவே அமைந்து விடுவதால் எனக்கு அப்படி இருந்திருக்கலாம் )

மகிழ்ச்சியை கொண்டாட்டத்தை நகைச்சுவையை வெளிப்படுத்தும் உலகசினிமாக்களையும் நண்பர்கள் அறிமுகப்படுத்தலாம். ஏற்கனவே ஒரளவு அடி வாங்கியிருக்கும் எங்கள் சொம்புகள் கொஞ்சம் சிரித்து மகிழவும் அதை பகிர்ந்து கொள்ளவும் ஏற்புடைய திரைப்படங்கள் திரையிடலாம். உரையாடல் திரைப்படவிழாக்குழுவினர் இது குறித்து ஆலோசித்து ஒன்றிரண்டு காமெடி உலக சினிமாக்கள் போடலாம். மாதாமாதம் இருட்டறையில் முரட்டு குத்து என்பது போல சோக கீதமாய் படங்கள் போடாமல் கொஞ்சம் சிரிப்புக்கும் இடமளிக்கலாம்!. நிறைய மக்களும் வர வசதியாய் இருக்கும். மற்றபடி 1900 திரைப்படம் நிச்சயம் அருமையாகவே இருந்தது. குறையொன்றும் இல்லை! கிடைத்தால் பாருங்க!

போன வருடம் ஒரு ஆடி மாதம் வாங்கி வைத்திருந்தேன் அந்த திரைப்படத்தை. கடைசி அமாவசை அன்றுதான் அது என் கண்ணில் பட்டது. இத்தாலிய திரைப்படம். சப்டைட்டில் இல்லை. பிரிண்ட் மட்டம் என பல கொடுமையான பிரச்சனைகளை கடந்து அதை காண வேண்டிய நிர்பந்தம். ( அந்த காரணங்களை சில பல சொல்ல முடியாத காரணங்களால் அதை இங்கே சொல்ல முடியாது ) . அந்த திரைப்படத்தின் பல காட்சிகள் பொல்லாதவன் திரைப்படத்தை நினைவூட்டியது. அந்த படம் பைசைக்கிள் தீவ்ஸ். ஆனால் ஒரிஜினலுக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாய் தெரியவில்லை. வண்டி தொலைந்து போவது மட்டும்தான் சேம். மற்றதெல்லாம் வேறு வேறு. பொல்லாதவன் லோவர் மிடில் கிளாஸ் இளைஞனின் தவிப்பையும் அவனது கொண்டாட்டம் காதல் கோபம் என விரிவான தளத்தில் இயங்கும் திரைப்படம். பை.தீ படம் ரோமின் ஏழை ஒருவனின் சைக்கிள் தொலைந்து போவதும் அதை அவன் தேடி அலைவதுமாய் மனதை பிழியும் இன்னொரு உணர்ச்சிக்காவியம். ( படத்தின் கிளைமாக்ஸில் கண்களில் நீர்வர பார்த்துக்கொண்டிருந்தேன்!). அந்த படத்தை இயக்கியவர் நிச்சயம் என்னைப்போல சாருவைப்போல பரம ஏழை படைப்பாளியா இருக்க வேண்டும். வாய்ப்புகிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

மிதிவண்டி திருடர்கள் படத்தை சார்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் நிறைய படங்கள் வந்திருப்பதாய் எண்ணுகிறேன். சில்ரன் ஆப் ஹெவன் படமும் பதேர் பஞ்சாலியும் கூட பை.தீவ்ஸ் படத்தின் கதையை ஒட்டி வருவதாகவே படுகிறது. ஆனால் ஒவ்வொன்றும் ஒருவிதம். நிச்சயம் அது காப்பி அடிக்கப்பட்டது என்று சொல்லிவிட இயலாது. ஏழைக்கு எது தொலைந்தாலும் சிக்கல்தான். கிட்னியாக இருந்தாலும் சரி இலையில் வைத்த சட்னியாக இருந்தாலும் சரி. தொலைந்து போனால் சிக்கல்தான். அது ரோமில் தொலைந்தாலும் ஈரானில் தொலைந்தாலும் சிக்கல்களும் அது சார்ந்த பிரச்சனைகளும் ஒன்றுதான். தமிழிலும் இது போல எதையாவது தொலைத்துவிடும் உலக சினிமா யாராவது எடுக்கலாம்!

ஏதோ ஒரு நள்ளிரவில் டிவியில் எதையோ தேடிக்கொண்டிருந்த போது ஜீவன் நடித்த படம் ஒன்றின் டிரைலர் பார்த்தேன். அதில் கேட்ட வசனம் படு சுவாரஸ்யமாக இருந்தது (எனக்கு!).
‘’தல இருக்கறவன்லாம் தலைவன் இல்ல.. தண்டவாளத்தில தலய வச்சான் பார் அவன்தான்டா தலைவன்’’ . படுபயங்கரமாக வசனம் எழுதிய இயக்குனர் ஸெல்வனுக்கு வாழ்த்துக்கள்.

இந்த மாத உயிர்மை இதழில் உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் குறித்து எந்த கருமாந்திரத்தையாவது எழுதுவார்கள் என ஆவலுடன் காத்திருந்தேன். கமினே திரைப்பட விமர்சனம் மட்டும் சாரு எழுதியிருந்தார். அதில் நாடோடிகள் திரைப்படத்தை கடுமையாக கடித்து குதறியிருக்கிறார். பொக்கிஷம் கந்தசாமி வைகை என சமீபத்தில் தமிழ்திரையை ஆக்கிரமித்த அரைடஜன் படங்களை குறித்து விலாவாரியாக விளாசி இருக்கிறார். ஆனால் உ.போ.ஓ பற்றி ஏதும் பேசக்காணோம்!. யுவன் சந்திரசேகரின் சிறுகதை ஒன்றும் வெளியாகி இருந்தது முக்கால் கதை படிப்பதற்குள்ளேயே ஆஆஆவ்.. யுவன் நன்றாக பேசுகிறார் ( புரியும் படி! சுவையாக!) எழுதும் போது ஏதோ சைத்தான் புகுந்துவிடும் போலிருக்கிறது! காலச்சுவடில் மிக காட்டமான விமர்சனமாக இல்லாவிட்டாலும் ஒரளவு உண்மையை உரைப்பதாய் உ.போ.ஒ குறித்த பார்வை வெளியாகியுள்ளது.

சென்ற வாரம் நாகார்ஜூனன் புக்பாயிண்டில் பேசுகிறார் என பைத்தியக்காரன் பதிவு போட்டிருந்தார். அதில் அவர் எதைகுறித்து பேசுகிறார் என கேட்டிருந்தேன். அவர் பதிலளிக்காததால் நேரில் போய் என்ன பேசுகிறார் என்று பார்த்தேன். கொஞ்சம் தாமதமாக செல்ல வேண்டியிருந்ததால் நான் போகும் போது பேசத்துவங்கியிருந்தார். முக்கால்வாசி படம் முடிந்திருந்தது. நாகார்ஜீனன் முறுக்கு மீசையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்க கும்சாகத்தான் இருந்தார். நான் நினைத்திருந்த உருவம் வேறுமாதிரி இருந்தது. அரசியல் சட்டம் , மலேரியா காய்ச்சல் , மாம்பலம் மெஸ், பாகிஸ்தான் பிரிவினை என கொச்ச கொச்ச வழவழா கொழகொழா என கலந்து கட்டிப்பேசிக்கொண்டிருந்தார். பிச்சி போட்ட இட்லி போல மொக்கையாக இருந்தது. ஒரு மண்ணும் புரியவில்லை. அறிவுஜீவிகள் நிரம்பிய சபையில் நமக்கென்ன வேலை என புக் பாயிண்டில் சில புத்தகங்கள் பார்த்தேன். பல புத்தகங்கள் நம்ம நண்பர்கள் எழுதியதாக கண்ணில் பட்டது. என்றைக்காவது நம்ம புக்கும் இங்க விக்கணும் என நினைத்தபடி அங்கிருந்த நகர்ந்தேன்!...

05 October 2009

உள்ளம் கவர் கள்வன்!




''ஏன்டே இந்த சுண்டிபயபுள்ளைக்கு என்னடே தெரியும்,அதப்போயி நொய்யி நொய்யினு
நோண்டிக்கிட்டு கிடக்க'' முறுக்கு மீசையும் கறுத்த மேனியுமாக முரட்டுத்தனமாய் இருந்தார் அந்த புதிதாய் வந்த இன்ஸ்பெக்டர்.

''இல்லைங்க ஐயா , இந்த பிள்ளையும் அங்கிட்டுதேன் இருந்துச்சு , அதான் கூட்டியாந்தேன் , இதுக்கு தெரியுங்கையா '' தொங்கு மீசையும் அகலமான தோளும் கறுத்த உதடுகள் படபடக்க கூனியபடியே பேசினார் ஏட்டு.

''யாரு பையன் இவன், எங்கிட்டோ பார்த்தா மாதிரியே இருக்கான்ல'' அவனை பார்த்த படியே பேசினார்.

''நம்ம சேரிக்கார கன்னையன் பையன்ங்க... இங்கிட்டு கவர்மென்ட்டு இஸ்கூல்லதான் படிக்கிறான், அவங்கப்பன் களவாண்டு போனத என்ன பண்ணானு இவனுக்கு தெரிஞ்சிருக்கும்ங்க'' மீண்டும் படபட கொடகொட என்று கொட்டினார் ஏட்டு.

''அடப்போடா இவனே, அவன் பொஞ்சாதி கூட்டியாந்திருந்தேனாவது உருப்படியாருந்துருக்கும்.. இந்த பயல வச்சுகிட்டு.. டே சின்னத்தம்பி இங்கிட்டு வா.. '' , என்று கைநீட்டி அழைக்க, குறுகுறுவென பார்த்தபடி கைக்கடியபடி சிகப்பு பேண்டும் அழுக்குப்பிடித்த நீல சட்டையுமாய் நின்றுகொண்டிருந்த திறுதிறு சிறுவனை அழைத்தார் இன்ஸ்.

''அங்கிட்டு என்னாச்சுனு சொல்லுடே'' அருகில் வந்தவனின் முகத்துக்கு அருகில் போய் மிரட்டினார்.

''ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ''இன்ஸியின் முறுக்கு மீசையைக்கண்டு பயந்து போய் அழ ஆரம்பித்துவிட்டான் பொடியன்.


''என்னலே இது இவன் மீசைய பார்த்தே அலுறுதான் இவன வச்சுக்கிட்டு எப்படி விசாரணை பண்றது.. ''

''இருங்க ஐயா நான் கேக்கேன்.. டே தம்பீ மீசை மாமாகிட்டச் சொல்லி ஒனக்கு புளிப்பு மிட்டாயி , பல்பம்லாம் வாங்கித்தரேன்.. உங்கப்பன் பண்ணை வீட்டு ஆட்டை திருடிட்டுப் போயி என்னடே பண்ணான் ''

பேசாமல் குறுகுறுவென பார்த்துக்கொண்டே நின்றான்.

''ஏய் அந்த பிள்ளைக்கு என்ன தெரியும், அவன் ஏதாவது குடிச்சி அழிச்சிருப்பான்.., பண்ணைக்கிட்ட நான் ச்சொன்னேனு ச்சொல்லிரு , ''

''ஐயா ஆடில்லாம வந்தா அம்புட்டுதேனு பண்ணைக்காரவுக சொல்லிருக்காக , அது அவுக வீட்டு குலதெய்வத்துக்கு பலி கொடுக்க வச்சிருத்தாம்ல, கண்டுபுடிச்சு குடுத்தா அறுநூறு ரூவா தாரேனு சொல்லிருக்காக..''

''இதெல்லாம் எப்பவே பண்ணைகிட்ட பேசுதீய.. ச்சொல்லவே இல்ல..''

''.......''

''ஏலே சின்னப்பயலே சொல்லித்தொலைல எங்கிட்டுலே வித்தான் அந்த ஆட்ட உங்கப்பன்.. , உங்கப்பனாவது எங்கிட்டுப் போனானாவது சொல்லித்தொலைல'' வெறுப்போடு பேசினார் இன்ஸ்.

பேசாமல் குறுகுறுவென நின்றான். ஏட்டுக்கு அருநூறு ரூபாயும் கண் முன் வந்து ஆடி ஆடி சென்றது.

''ஐயா நாலு போடு போட்டா பய பேசுவான்.. லத்தில ரெண்டு பின்னால போடவா!'' பண்ணைத்தரப்போகும் பணம் அவருக்கு வெறியேத்தியபடி இருந்தது.

''பாத்து அடிலே படாத இடத்தில பட்டு செத்துற போகுது $%&$#&* பய புள்ள '' ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்துக் கொண்டார். புகை வட்டவட்டமாய் வருவதைப்பார்க்க பரவசமாய் இருந்தது சிறுவனுக்கு.

சிரிக்க வேண்டும் போலிருந்தது. இன்ஸியின் மீசை உருத்தியது. பளீரென ஏதோ பின்னால் விழுந்தது. ஆஆஆஆஆ கதறினான்.

சொல்லுலே சொல்லுலே.. ஒன்று இரண்டு மூன்று..

வாயையே திறக்கவில்லை. அழுதபடியே பார்த்துக்கொண்டிருந்தான்.

''ஐயா அவங்கப்பன் சொல்லித்தந்திருப்பான் போல பாருங்க வாய திறந்து பேசறானானு.. இன்னும் ரெண்டு போடவா '' ஏட்டு எத்தனித்தார்.

இன்ஸிக்கு அவனைப்பார்க்க பாவமாய் இருந்தது. விடாமல் கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. லத்தியால் பின்னால் அடித்ததில் ஏற்கனவே நைந்திருந்த அவனது கால்சட்டையும் கிழிந்து போயிருந்தது.

''ஏட்டு அவன பாக்க பாவமா இருக்கு.. வீட்டுக்கு கொண்டு போய் விட்டுடு.. பண்ணைகிட்ட நான் பேசிக்கறேன்''

''ரெண்டு மிதிமிதி மிதிச்சா பேசுவான்ங்கய்யா.. பயபுள்ள அவங்கப்பன மாதிரியே எம்புட்டு வைராக்கியம்''

சிறுவனுக்குக்கு மூத்திரமே வந்து காலோடு வழிந்தோடியது.

''அடச்சீச்சீ ஏலே பாரு இந்த பயபுள்ளைய ஒன்னுக்கு போயிட்டான் , வாசப்பெருக்கற ஆயாவர சொல்லி கழுவி வுட சொல்லுங்க , டே தம்பி நீ போய் அப்படி மூலைல உக்காரு ''

''என்ன கருமம்டே இது, ஒட்றா போய் உக்காரு '' மீண்டும் அடிக்க லத்தியை ஓங்கினார் ஏட்டு. திருதிருவென பார்த்துக்கொண்டே இருந்தவன் ஓரமாய் போய் உட்கார்ந்து கொண்டான்.

''அடப்போங்கடா நீங்களும் உங்க மூத்திர குடிக்கற விசாரணையும் '' என்றபடியே வாசலுக்கு வந்து ஒரு சிகரட்டை பற்றவைத்தார். குட்டிப்பையன் மூலையில் அமர்ந்தபடி அதிலிருந்து வரப்போகும் வட்ட வடிவ புகைக்காக காத்திருந்தான்.

''டே தம்பீ.. இங்கிட்டு என்னாடா பண்ணுதே.. ஐயா ஐயா '' என்றபடி அவனைப்பார்த்த அந்த ஆயா வெளியே நின்று கொண்டிருந்த ஏட்டு மற்றும் இன்ஸியிடம் ஓடினாள்,

''ஏய் தள்ளி நில்லு.. இப்ப பேசு.. கிட்ட வரக்கூடாதுனு தெரியாது.. '' ஏட்டு விரட்டினார் கையில் விளக்கமாருடன் அருகில் வந்த ஆயாவை.

''ஐயா அது பாவப்பட்ட புள்ளய அத ஏன் இங்கிட்டு கொண்டாந்து வச்சுருக்கீய''

''அவ அப்பன் கன்னையன் பண்ணை வீட்டு ஆட்ட திருடிட்டான்.. அத என்ன பண்ணானு கேட்டா புள்ள வாயவே திறக்க மாட்டேன்றான்.. ''

''ஐயா இது கன்னையன் புள்ளை இல்லங்க.. இது நம்ம ராக்கப்பன் புள்ளைங்க.. அதுமில்லாம இது பைத்தியக்கார புள்ளையா.. பேச்சு வராது.. காது மட்டும் கேக்கும்..மூள வளரலாய் ''

''அடத்தூ யோவ் ஒரு கேஸாவது உருப்படியா பண்றீயா.. அதான்யா இத்தனை வருஷமா இப்படியே இருக்க போயா அந்த பிள்ளைய வெளிய விடு.அடுத்தது யாரு..! ''

சிறுவன் இதையெல்லாம் அறியாதவனாய் ஆடு திருடிய கள்வன் போல முழித்த படி நின்றிருந்தான்.

************************


பி.கு - 1998ல் கல்லூரி ஆண்டுவிழா மலருக்காக எழுதிய என் முதல் சிறுகதை. அதன் கையெழுத்து பிரதி நேற்று பரணில் கிடைத்தது. என் நினைவுகளுக்காக இங்கே!