Pages

01 July 2010

பிரபல டுவிட்டர்கள் விகடனில்!



தாகத்திற்கு வாட்டர் போரடித்தால் குவாட்டர் என்பது பழமொழி
போதைக்கு குவாட்டர் போரடித்தால் டுவிட்டர் என்பது புதுமொழி!

டுவிட்டர் என்னும் அரியசாதனத்தை எதற்காக கண்டுபிடித்தார்களோ! அதை பயன்படுத்தும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது ஆதிகாலத்தில் ஆலமரத்தடியில் வாய் சிவக்க வெற்றிலையோடு எச்சில் தெறிக்க சில பெரிசுகள் வொவ்வ்வ்வொவ் என்று வெட்டித்தனமாக எதையாது பேசிக்கொண்டும் விவாதித்தும் கொண்டுமிருப்பார்களே. அருகில் சிறுசுகளும் அவர்கள் வாயைப்பார்த்தபடி எதாவது பதில் சொல்லிக்கொண்டிருப்பதுவும் உண்டு. அல்லது அவர்களுக்குள் விவாதிப்பதுவும் நடப்பதுண்டு. டுவிட்டரும் கிட்டத்தட்ட அதன் பரிணாம வளர்ச்சியால் உண்டான நீட்சிதான் என்று சொன்னால் இலக்கியவாதிகளின் இம்சைகளுக்கு ஆளாக நேரிடும்.

டுவிட்டர் ஒரு நல்ல ஆரோக்கியமான அரசியல் விவாதக்களமாகவும , உருப்படியான தகவல்களை பகிர்ந்து கொள்ளுமிடமாகவும் சில நேரங்களில் கடுமையான மொக்கையாகவும் செயல்படுவதுண்டு. பதிவுலகத்திலிருந்து ரிடையர்ட் ஆனவர்களே டுவிட்டரில் செயல்படுவார்கள் என்கிற தவறான கருத்தியலும் அண்மைக்காலமாக உலாவுவதாக ஒரு பேச்சு உண்டு. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. ரைட்டர் பேயான் போன்றவர்கள் டுவிட்டரிலிருந்து பதிவுலகுக்கு தாவுகிற செய்திகளும் உண்டு.

இப்பேர்பட்ட டுவிட்டரில் பதிவுலக பிரபலங்கள் பிராபலங்கள் மட்டுமல்ல , எழுத்துலக பிரபலங்களும் , நடிக நடிகையர்களும் சீமான் (இது வேற சீமான்) சீமாட்டிகளும் நிறைந்து காணப்படுகின்றனர். அறிவுசார்ந்த எழுத்துக்களுக்கு பாரா,சொக்கன்,லக்கி, அதிஷா,அதிஷா முதலான எழுத்தாளர்களும், கவர்ச்சி சார்ந்த எழுத்துகளை விரும்புகிறவர்களுக்கு நமீதா,ஷெர்லின்,ஸ்ருதி ஹாசன் முதலானவர்களின் டுவிட்டுகளையும் ரசிக்கலாம். அவர்களோடு நேரடியாக அறிவுப்பூர்வமான ஆக்கப்பூர்வமான உரையாடலையும் நிகழ்த்தலாம். நமீதாவிடம் அதைசெய்துகாட்டுகிற (எதை என்று கேட்கக்கூடாது) தன்மையோடு சக டுவிட்டர் டிபிசிடி திகழ்கிறார். சில பெரிசுகளும் அது நொட்டை இது நொள்ளை என சடைந்து கொள்வதும்.. ஹேய் டியுட் ஹவ் ஆர்யூ என்று செம்மொழி அல்லது தமிழ் அல்லது கருணாநிதி வளர்க்கும் இளசுகளுக்கும் பஞ்சமில்லை. பட் ஸ்டில் வீ ஆர் குரோயிங் டமில் எனிவே!

பேஸ்புக்கைக் காட்டிலும் இது டுவிட்டரின் வேகம் அதிகம்.. உரையாட ஏற்ற உத்தமமான ஆட்கள் எண்ணிக்கை குறைவு. அதனால் நான் அதிகம் விரும்புவது டுவிட்டரே! (ஃபேஸ்புக்கிலிருந்து விகடனில் எடுத்துப்போட்டிருந்தால் ஃபேஸ்புக்கே என்று வந்திருக்கும்)

இந்த டுவிட்டரில் அவ்வப்போது தோணுகிற கண்டதையும் கொட்டிவிடுவதுண்டு. 140 எழுத்துகளுக்குள் நம் கருத்தை சொரிவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. அதன் பின்விளைவுகள் சமயத்தில் படுபயங்கரமாக , நாம் எதிர்பார்க்காத அளவுக்கு கொடூரமாக இருக்க நேரிடுவதுமுண்டு. அப்படி செம்மொழி மாநாடு குறித்து  வெறியோடு சொரிந்த  ஒன்றை இந்த வார விகடனில் போட்டிருக்கிறார்கள். விகடனுக்கு நன்றி. அதை தேர்ந்தெடுத்து என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப வழிவகை செய்திருக்கும் அந்த கட்டுரையாளர்களுக்கும் நன்றி!


மேலுள்ள இந்த ஒரு படத்தைப்போடுவதற்கே அதற்கு மேலுள்ள சுயபுராண பில்டப்பெல்லாம். மற்றபடி படத்தை கிளிக்கி இடதுபுறம் காலைதூக்கி நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டிருக்கும் கறுப்பு உடைபெண்ணுக்கு மேல என்னுடைய டிவிட்டை படித்து மகிழலாம்.