Pages

13 September 2010

கெட்ட வார்த்தை



எனக்குக்கூட இப்படித்தான் சொல்லணுமா? எரிச்சலில் மொட்டை மாடியில் இருந்து தலைகுப்புறக் குதித்துவிட வேண்டும்போல இருந்தது. கையில் இருந்த சிகரெட்டை வேகமாகத் தரையில் அடிக்க, அது தீப்பொறிகளைச் சிதறலாகப் பரப்பி அணையாமல் புகைந்தது. அவன் எப்போதும் சொல்லும் அந்த கெட்ட வார்த்தையை அப்போதும் சொன்னான். அது, பட்டாசுச் சத்தங்களோடு கலைந்து, அலை அலையாக வீரியம் இழந்து, காற்றில் கரைந்து மறைந்தது.

விடிந்தால் தீபாவளி. மாதக் கடைசியில் வரும் கேவலமான, யாருமே விரும்பாத தீபாவளி. த்தூ... சொந்த ஊருக்குப் போக முடியாமல் செய்துவிட்ட தீபாவளி. ஊரே தீப் பரப்பி வெடிச் சத்தத்தால் நிரம்பி இருந்தது. பக்கத்து வீடு களில் மகிழ்ச்சி பொங்கப் பட்டாசு வெடிப்பவர்களைக் காரணமே இல்லாமல் கோபத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான். அவர்களுடைய மகிழ்ச்சி இவனு டைய கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. கோபப்பட லட்சம் காரணங்கள் இருந்தன. வெறுப்பின் உச்சத்தில் இருந்தவனுக்கு இந்த எஸ்.எம்.எஸ். எந்த விதத் திலும் உதவவில்லை. அவனுடைய கோபத்தை அது இன்னும் இரண்டு கரண்டி அதிகமாக்கியது. எனக்குக்கூட எஸ்.எம்.எஸ் அனுப்பித்தான் சொல்லணுமா?


தன்னை ரோட்டோரப் பிச்சைக்காரனாக, உலகில் இருந்து விடுபட்ட மன நோயாளியாக உணர்ந்தான். மொட்டை மாடியின் சுவரில் தலை சாய்த்து, காலைக் குறுக்கலிட்டு அமர்ந்தான். அவன் தாய் மாமாவும் 'நீ அதான்டா நாயே!' என உணர்த்துவதுபோல இழவுச் செய்தியைக் குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார். ஊர்க்கார நண்பர்களின் இன்னுமொரு வாழ்த்துச் செய்தி என அதையும் அவன் புறக்கணித்து இருக்கலாம். பார்க்காமல் இருந்து இருக்கலாம். போனை அணைத்துப்போட்டு இருக்கலாம். தூங்கி இருக்கலாம். 'அம்மா இறந்துவிட்டார். உடனே புறப்பட்டு வரவும்.' அவ்வளவுதான் செய்தி. தாய் மாமா அனுப்பிய எஸ்.எம்.எஸ்.

திருப்பி அழைக்க நினைத்தான். பேலன்ஸ் 20 காசுதான் இருந்தது. செல்போன் நிறுவனம் கடனாகத் தரும் 10 ரூபாய் டாப்-அப்பையும் ஏற்கெனவே முடித்து இருந்தான். திடீர் சந்தேகம். யாருடைய அம்மா? அவருடைய அம்மாவா (அவனுக்குப் பாட்டி), அல்லது அவனுடைய அம்மாவா?

ஒரு ரூபாய் போன் பூத் வைத்திருக்கும் சேட்டனுக்கும் தீபாவளியா என்ன? 7 மணிக்கே கடையைப் பூட்டியிருந்தான். அவனுக்கு எல்லாம் என்ன மயித்துக்கு தீபாவளி? எரிச்சல் கூட ஆ...ஆ...ஆ... கெட்ட வார்த்தையில் மொட்டை மாடி அதிரக் கத்தினான். தன்னுடைய அம்மாவாகத்தான் இருக்கும் என முடிவு செய்து கொண்டான்.


மெயின் ரோட்டுக்குப் போனால் போன் பண்ணலாம். அண்ணாச்சி கடை திறந்துவைத்திருப்பார். நடுவில் வயிறு பசித்தது. அம்மா எப்படி இறந்தாங்க... என்னாயிருக்கும்? வாழ்க்கை பூரா அந்தாளோட வாழ்ந்து அழுகிப்போய் நொந்தவங்களுக்கு, இப்பவாவது விடுதலை என நினைத்துக்கொண்டான். அப்பாவை மனதுக்குள்ளேயே அவனுக்கே அவனுக்கான சில கெட்ட வார்த்தை களால் திட்டினான். சோறு போடாமக் கொன்னுருப்பானோ? அடிச்சிருப்பானோ? போன முறை போனப்ப, ஷுகர் அதிகம்னாங்களே. நெஞ்சு வலியா இருக்குமோ? மூட்டு வலின்னாங்களே... நீலகிரித் தைலம் கேட்டாங்களே... தற்கொலையா இருக்குமோ? இரண்டு நாள் முன்னகூட நல்லாதானே பேசினாங்க.


அம்மாவின் மரணம், அப்பாவின் கொடுமை, விடிஞ்சா தீபாவளி. அழுது புலம்ப ஆயிரத்து சொச்சக் காரணங்கள் இருந்தன. இதை எல்லாம் தாண்டி, இப்போதைய தலையாய பிரச்னை பேங்க்கில் இருக்கும் 232 ரூபாயும் 50 காசுகளும்தான்.


சம்பளத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. அறைத்தோழர் கள் அனைவரும் ஊருக்குச் சென்றுவிட்டனர். இவன் மட் டும்தான் போகவில்லை. அவர் களுக்கும் தீபாவளி. ஹவுஸ் ஓன டமும் காசு கேட்க முடியாது. வாடகை கேட்பார். சாவு என்று சொன்னாலும், 'பொய் சொல்லா தடா, காசுக்காக அம்மாவப் போய் செத்துட்டாங்கன்னு சொல்றியே' என்று திட்ட நேரிடலாம். தெரிந்தவர்கள் யாரும் இல்லை.


கோவைக்கு டிரெயின் என்றால் 127 ரூபாய். கூட்டம் நிரம்பி வழியும். பஸ் என்றால் 198. ஆனால், தீபாவளி என்பதால் பஸ் கிடைப்பது அரிது. உடனே கிளம்ப வேண்டும். கையில் இருந்த செல்போனில் நேரம் பார்த்தான். 8.30. சேரன் 10.30-க்கு, 9-க்கு புளு மவுன்டன். இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்குள் ரயில் நிலையம் அடைய வேண்டும்.


வயிறு அதிகமாகப் பசித்தது. மதியம் தின்ற எலுமிச்சை சோறு 6 மணிக்கே ஜீரணம் ஆகியிருக்க வேண்டும். இவன் பசியைப்பற்றி நினைக்க, வயிறு கர்ர்ர்ர் விர்ர்ர்ர் என இழுத்துப் பிடித்துக் குறட்டைவிட்டது. குடலில் உருவாகும் வெற்றிடத்தால் காற்றடைப்பு உருவாகி இருக்கலாம். லேசாக ர்ர்ர் என ஏப்பம் வந்தது. ச்சே! அம்மா செத்துட்டாங்க, பசியப்பத்தி நினைக்கவே கூடாது என நினைத்துக்கொண்டான்.


ஆனாலும், வயிற்றில் இருந்து தொடர்ச்சியாக வெளியானஅந்த அபஸ்வர நாதம் ர்ர்ர் சுர்ர்ர் என்று பசியை நினைவூட்டிக்கொண்டே இருந்தது. அம்மாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. அழுகை வரவில்லை. அழ முயன் றும் அழுகை வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அழாமல் இருப்பது தவறாக இருக்கலாம்.


துணி எல்லாம் ஒன்றும் வேண்டாம், பைகூட எடுக்க வேண்டாம். ஜட்டி, டூத் பிரஷ் வேண்டும். அதை மட்டும் எடுத்து பேன்ட் பாக்கெட்டில்வைத்துக்கொண்டான். தன்னுடைய ஸ்ப்ளெண்டரில் ஏறி உட்கார்ந்து, பெட்ரோல் டேங்கைத் திறந்து ஆட்டி ஆட்டிப் பார்த்தான். ங்ங்ங் என மணியோசை மாதிரி பெட்ரோல் குலுங்கும் ஓசை கேட்டது. ரொம்பக் குறைவாகத்தான் இருந்தது. சென்ட்ரல் வரைக்கும் தாக்குப்பிடிக்கணும் ஆண்டவா!

வழியெல்லாம் வண்ண வண்ண வாண வேடிக்கைகளாலும் டாம்டூம் பட்டாசுகளாலும் நிரம்பி இருந்தது. அக்கவுன்ட்டில் சாப்பிடும் ஆன்ட்டி கடை பூட்டியிருந்தது. இரண்டு இட்லி பார்சல் செய்துகொள்ள நினைத்திருந்தான்.


சாலைகளில் பெண்கள் அழகாக பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தனர். சிலர் பயந்தபடி, சிலர் தைரியமாக, இன்னும் சிலர் போலியான தைரியத்தோடு... இதையெல்லாம் ரசிக்கக் கூடாது, அம்மா இறந்து விட்டார்.


வண்டியின் வேகம் கூட்டினான். மணிக்கட்டு கடிகாரம் 9.00 காட்டியது.


கனரா வங்கியின் ஏ.டி.எம்மில் வண்டியை நிறுத்தி இருக்கும் 200 ரூபாயைத் தட்டினான். டிரான்சாக்ஸன் டிக்லைன்டு என்றது. கோபத்தில் கையில் இருந்த வண்டி சாவியால் ஏ.டி.எம் ஸ்க்ரீனில் நான்கு கீறல் போட்டுவிட்டு வெளியேறினான். அது எக்ஸ் மார்க் போல் இல்லாமல் ஒய்போல் இருந்தது. கொஞ்சம் தள்ளி இன்னொரு எஸ்.பி.ஐ இருந்தது. அங்கேயும் டிக்லைன்டு.அவனுடையது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. அருகில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம் எதுவும் இல்லை. நுங்கம்பாக்கம் போக வேண்டும். வேறு வழி இல்லை... போனான். பணம் எடுத்தான், வெளியில் வந்து வண்டியை ஸ்டார்ட்டி கொஞ்ச தூரம் போனதும் வண்டி முக்கி முக்கி முனகி க்...க்...க்...இர்ர்ர்... பின் அணைந்து பெட்ரோல் இல்லை என்றது.


நடுரோட்டில் நின்றபடி... வேறு ஒரு கெட்ட வார்த்தையோடு அந்தக் கெட்ட வார்த்தையை உரக்கக் கத்தினான். அம்மாவு டைய மரணத்தைவிடவும் அது அவனை மிகவும் வருத்தியது. வண்டியைத் தள்ளிக்கொண்டே மீண்டும் மீண்டும் ச்சே... ச்சே! என்று அதே கெட்ட வார்த்தையை விடாமல் மந்திரம்போல உச்சரித்தபடி சில மீட்டர்கள் தூரத்தில் இருந்த பெட்ரோல் பங்குக்குச் சென்றான். கையில் இருந்த 200 ரூபாயில் 30 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதே திட்டம். பாழாய்ப் போன பங்கில் 30 ரூபாய்க்குக் கிடையாதாம். 50 ரூபாய்க்கு மட்டும்தானாம். பெட்ரோல் நிரப்பிக்கொண்டான். மணிக்கட்டில் மணி 9.30. வயிறு இன்னும் அதிகமாகப் பசித்தது. மீண்டும் அதே வார்த்தையை மந்திரம்போல சொல்லிக்கொண்டான். முணுமுணுத்தபடியே ஆக்ஸிலரேட்டரைத் திருகினான். பசித்தது.


சென்ட்ரலில் வண்டியைக் கட்டண பார்க்கிங்கில் போட்டுவிட்டு, டோக்கனை வாங்கி கசங்காமல் பர்ஸில் பத்திரப்படுத்திக்கொண்டான். டிக்கெட் கவுன்ட்டரில் கூட்ட நெரிசல். அம்மாவின் நினைவு வேறு இடைஇடையில் வந்து எரிச்சலூட்டியது. நான்கு நாட்கள் கழித்து செத்துப்போயிருக்கக் கூடாதா? க்யூவில் நின்றான். அரை மணி நேரம் நின்றான். மணி 10. கவுன்ட்டரில் கோவைக்கு டிக்கெட் எடுத்தான். தம் அடிக்க வேண்டும்போல் இருந்தது. பாக்கெட்டைத் தடவினான், 23 ரூபாய் இருந்தது. கோவையில் இறங்கி ஊருக்குப் போக பஸ்ஸுக்கு 10 ரூபாய் போதும். டிக்கெட்டோடு வெளியே ஓடிப் போய் ஒரு ஃபில்டரை வாங்கிப் பற்றவைத்தான். அம்மா நினைவு வந்தது. புகையோடு அந்த கெட்டவார்த்தையையும் உரக்கச் சொன்னான். அவனுக்கு முன்னால் புகைத்தவர் திரும்பிப் பார்த்தார். இவன் அசடாகச் சிரித்துவைத்தான். 'ச்சே... அம்மா செத்துட்டாங்க. எப்புடிடா சிரிக்கற? அதுவும் போலியா?' அவனையே அவன் அதே கெட்டவார்த்தையால் திட்டிக்கொண்டான்.


மாமாவுக்கு ஒரு ரூபாய் போனில் பேசினான்... "மாமா?"


"நெஞ்சு வலி அதிகமாச்சுன்னு ஜி.ஹெச்சுக்குக் கொண்டுபோனோம். போற வழிலயே உயிரு போயிருச்சுன்னாங்க."


"சரி மாமா கிளம்பிட்டேன். வந்துர்றேன். ஸ்டேஷன்லதான் இருக்கேன், செத்தது எந்த அம்மா?"


"அறிவு கெட்டவனே! உங்கம்மாதான்டா!"


மிக நீண்ட மௌனத்துக்குப் பிறகு, "ம்" என்றான்.


"சரி குமாரு... வரும்போது ரெண்டாயிரம் ரூவா ரெடி பண்ணிட்டு வா. இங்க நிறையப் பேருக்கு ரூவா குடுக்கணும்.. "


"ம்ம்..." என்றபடி போனை பேய்த்தனமாக ரிஸீவரால் அடித்தான். மாமாவை அதே கெட்ட வார்த்தையில் திட்டினான். பசித்தது.

பையில் 20 ரூபாய் இருந்தது. பிளாட்ஃபாரத்தில் நல்ல கூட்டம். இன்னும் டிரெயின் வரவில்லை. நாலைந்து பேரோடு மல்லுக்கட்டினால்தான் இடம் பிடிக்க முடியும். தீபாவளிக்கு ஊருக்குச் செல்பவர்கள் கூட்டம். நிறைய சரவணா, போத்தீஸ், அது இதுவென துணிக் கடை பைகள் கண்களை உறுத்தின.


'அம்மாவுக்கு ஒரு சேலை எடுத்துக் குடுக்க வக்கில்ல... நீயெல்லாம் எதுக்குடா உயிரோட இருக்க, சாவுடா!' அப்பா முழு போதையில் போன வருடம் இதே நாளில் சொன்னது. 'வெக்கமா இல்ல, உன் தங்கச்சி வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கிறா. எப்படிடா தினமும் வெக்கமே இல்லாமத் திங்கற... இந்தப் பொழப்புக்குச் செத்துரலாம்டா' என்று அம்மாவே சொல்வார் என்று நினைக்கவில்லை. அம்மாவுக்கும் கடுமையான வேதனையும் அக்கறையும் அவனைப்பற்றி இருக்கத்தான் செய்தது.


அதற்குப் பின் மூட்டைப் பூச்சி மருந்தைக் குடித்ததும், தாய் மாமா தனசேகர் அவனைக் காப்பாற்றி சென்னையில் வேலை வாங்கிக் கொடுத்ததும், அம்மா இறந்ததும் எனப் பலதும் நினைவுக்கு கோர்வையாக வர... டிரெயின் வந்தது.


கூட்ட நெரிசலில் முண்டியடித்து இடம் பிடிக்கப் பாய்ந்தவனுக்கு மீண்டும் அம்மாவின் நினைவு. 'ச்சே... அம்மா சாவுக்குப் போறதுக்குக்கூட சண்டை போட்டு இடம் பிடிச்சு சொகுசாத்தான் போகணுமோ?' அம்மாவின் மரணம் குறித்து நினைக்கும்போது எல்லாம் அந்த கெட்ட வார்த்தையும் சேர்ந்தே.

வயிறு வேறு பசித்தது. இடம் கிடைக்கவில்லை. கழிவறைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டான். ஒவ்வொரு முறையும் யாராவது கழிவறைக்குப் போகும்போதும் வரும்போதும் மூக்கைப் பிடித்துக்கொண்டான். ஒரு மாதிரி அழுகிப்போன அன்னாசிப் பழ வாசனை வந்தது. அவனுக்கு மிக அருகில் ஜோலார்ப்பேட்டையில் ஏறிய கழைக்கூத்தாடிக் குடும்பம் ஒன்று அழுக்குப் பிடிக்க உட்கார்ந்திருந்தது. இவனுக்கு மிக அருகில்... மிக மிக அருகில். அனைவரும் அழுதிருந்தனர். யாரோ இறந்துவிட்டதாகப் பேசுவது காதில் விழுந்துகொண்டே இருந்தது. அருகில் ஒரு கிழவன் இவனைப் பார்த்துச் சிரித்தான். அவன் இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவான்போல இருந்தான். அவனையும் கோபமே இல்லாமல் அந்த கெட்ட வார்த்தையால் திட்டினான். உடலைக் குறுக்கி அமர்ந்தபடி உறங்கிப்போனான்.


விடிந்தது. மணி 6. அவசரமாக இறங்கியவன், ஏதோ நினைவில் பையைத் தொட்டுப்பார்த்தான். 20 ரூபாய் கசங்கி இருந்தது. ஓடினான். 7 மணி பஸ்ஸைப் பிடித்தால்தான் ஊர் போய்ச் சேர முடியும். பசித்தது. டீ குடிக்கலாமா? சிகரெட்? ஒரு ஃபில்டரை வாங்கிப் பற்றவைத்தான். 17 ரூபாய்தான் இருந்தது. அஞ்சு ரூவாகூட இல்லாம ஊருக்குப் போறது ரொம்ப மோசம். வயிற்றை லேசாகக் கலக்கியது. எரிச்சலாக இருந்தது. அருகில் இருந்த கட்டணக் கழிப்பிடத்துக்குப் போய்விட்டு பஸ்ஸைப் பிடித்தான். அதற்கு இரண்டு ரூபாய்.


அவனது வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு, நிறைய சேர்கள் இருந்தன. அப்பா வாசலில் அமர்ந்தபடி பீடி பிடித்துக்கொண்டு இருந்தார். வயிறு பசித்தது. 'ச்சே, அம்மாவோட பொணத்தப் போட்டுட்டு எப்படித்தான் இந்தாளு ஜாலியாத் தம் அடிக்கிறானோ!' அதே கெட்டவார்த்தையால் மனசுக்குள் திட்டிக்கொண்டான்.

ஏனோ அழுகையே வரவில்லை. எதிரில் வரும் ஏதேதோ முகங்கள் வியர்வை நாற்றத் தோடு பல் விளக்காத வாயோடு, "குமாரு..." என அவனைக் கட்டிக்கொண்டு அழுதனர். அவன் அழவில்லை. அம்மாவைச்சுற்றி சித்தி, அத்தை, பெரியம்மா என நிறையப் பேர். அத்தைப் பொண்ணு நந்தினியும் இருந்தாள். ஏனோ தாவணி போட்டிருந்தாள். அவள் திருமணம் மாதிரியான விசேஷங்களுக்கு மட்டுமே தாவணி அணிவாள். தாவணி லேசாக விலகி இருந்தது. பூசினாற் போல உடம்பு. வெளுப்பாக உடல் தெரிந்தது. 'அம்மா பொணம் கெடக்குது, ச்சே... என்ன மனுசன்டா நீ?' கெட்ட வார்த்தையில் தன்னைத்தானே திட்டிக்கொண்டான். ஆனாலும், கண்கள் அவளையே சுற்றிச் சுற்றிச் சுழன்றன. அவள் மீதான பார் வையை அவனால் கட்டுப் படுத் தவே முடியவில்லை. அம்மா உறங்குவதைப்போலவே இருந்தது. விழித்து அவனிடம் மீண்டும் பேசிவிடுவாள்போலத்தான் இருந்தது.


இப்போதைக்கு அந்த இடத்தைவிட்டு நகரக்கூட முடியாது. ஒரு சிகரெட்கூட அடிக்க முடியாது. இதில் இந்தப் பசி வேறு. கையிலும் காசு இல்லை.

எல்லோரும் குமாரு... குமாரு... என்று அழுதபடியே இருந்தனர். அம்மாவைப் பார்த்தபடியே சுவரின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டான். கால்களை மடக்கி முகத்தை முட்டிகளுக்குள் புதைத் தான். அழுகையே வரவில்லை. பசித்தது. "அதான் பையன் வந்தாச்சுல்ல... சடங்கெல்லாம் பண்ணலாம்..." என்றார்கள்.

வெளியில் சங்கு சத்தமும் சேவன்டியும் கேட்டது. சாவு விழுந்துவிட்டதால் பட்டாசு வெடிக்க முடியாமல் சோகமாய், குடியிருப்புக் குழந்தைகளின் முகங்கள் தெரிந்தன. பாவம்... அவனுக்கு அம்மா போன மாதிரி அவங்களுக்கு தீபாவளி போச்சு. இனி, அடுத்த வருஷ தீபாவளிதான். அவனுடைய தங்கையும் குழந்தை குடும்பத்துடன் இரவே வந்து இருந்தாள். நிறைய உறவினர்கள்... யார் யாரோ...


அம்மாவுக்கு விசித்திரமான பழக்கம் இருந்தது, ஏதாவது திருமணத்துக்கு அவனை அழைத் துக்கொண்டு போய் அங்கே இருக்கும் உறவினர்களிடம் அவனைக் காட்டி சம்பந்தம் பேசுவாள். அவனுக்கு எரிச்சலாக இருக்கும். அந்த உறவினர்கள் எல்லாம் வந்திருந்தனர். 'குமாரு பாருப்பா...' என்று அழுதனர். அவனுக்குப் பசித்தது. இப்போது கடும் பசி.


அனைவருக்கும் காபி கொடுத்தனர். அவனுக்கு மட்டும் ஏனோ தரவில்லை. காபி வேணுமா என்றுகூடக் கேட்கவில்லை. அவன் சோகத்தில் இருப்பான் என்று அவர்களாகவே நினைத்திருக்கலாம். அவனுக்கு மேலும் பசித்தது.


அம்மாவின் பிணம், பேரூர் ஆற்றங்கரையோரம் புதைக்கப்பட்டது. வீட்டுக்கு வந்தான். உடல் எல்லாம் பூக்களின் வாசனை. கையில் ரோஜா வாசனை.

வாசலில் அப்பா முழு போதை யில் உள்ளாடை தெரிய லுங்கி விலகிப் படுத்து இருந்தார். தங்கை, தன் ஒரு வயதுக் குழந்தைக்கு எதையோ ஊட்டிக்கொண்டு இருந்தாள். அழுவதைப் போலப் பார்த்தான். குட்டிப் பாப்பா சிரித்தது. திரும்பச் சிரிக்காததால் அது முகத்தை உம் மென்று வைத்துக்கொண்டது.

வீட்டின் உள்ளே யாரும் இல்லை. உறவினர்கள் எல்லாம் வாசலிலும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அவனுக்குக் காதுஅடைத்தது. கடுமையாகப் பசித் தது. பாக்கெட்டில் ஐந்து ரூபாய் தான் இருந்தது. இரண்டு ரூபா யைக் காணவில்லை. விறுவிறு வென வெளியே வந்து கடையில் ஒரு ஃபில்டரை வாங்கிப் பற்றவைத்துக்கொண்டான். அவனுக்கு அழுகையே வரவில்லை. புகை வந்தது.


தொண்டைக்குள் ஏதோ செய்தது. யாராவது 'குமாரு, ஏதாவது சாப்பிடறீயா?' என்று கேட்க மாட்டார்களா!


அம்மா இருந்திருந்தால் கேட்பாள். அவள்தான் இத்தனை வருடங்களாக அந்த வீட்டில் அவனைச் சாப்பிட்டாயா என்று கேட்கிற ஒரே ஆள். போனில் அழைத்தாலும் முதலில் கேட்பது, 'சாப்பிட்டியா குமாரு?' என்பதாகத்தான் இருக்கும்.


அவள் இறந்துவிட்டாள். வயிறு பசித்தது. அழுகை வர அந்த கெட்ட வார்த்தையை உரக்க சொல்லி அழத் தொடங்கினான் குமாரு!


*****


ஒவியங்கள்:அனந்தபத்மநாபன்

நன்றி-ஆனந்த விகடன்