சுஜாதா

>> 27 February 2010



அவரை எனக்கு அப்போதெல்லாம்  பரிச்சயமில்லை. எனக்கு வயது 13 அல்லது 14 இருக்கலாம். கோவை ராஜவீதியில் நாயகன் துப்பாக்கியோடு வில்லனை துரத்தும் ராஜேஷ்குமார் கதைகள் மட்டும்தான் எனக்குத் தெரிந்த எழுத்து. அதற்கு முன்பு வரை சிறுவர் மலரில் வெளியாகும் சிண்டு நண்டு கதைகள் மட்டும்தான். வாரமலரிலும் பழைய குமுதத்திலும் சிறுகதை என்கிற வார்த்தைகளை கவனத்திருக்கிறேன். சிறுவர் மலர் கதைகளை விட அவை எனக்கு எந்த சுவாரஸ்யத்தையும் தரவில்லை. அதனால் சினிமா துணுக்குகளோடும் குறுக்கெழுத்து போட்டியுடனுமாக சிறுகதைகளை கடந்திருக்கிறேன். சமயங்களில் சுபாவும் ராஜேஷ்குமாரையும் சிறுவர் மலர் பொறுப்பாசிரியர் தவிர உலகில் வேறு யாரும் நல்ல கதை எழுதுவதில்லை போலிருக்கிறது என்று நினைத்திருக்கிறேன். மாமா நிறைய படிப்பவர் அடிக்கடி சுஜாதா என்பார் புதுமைப்பித்தன் என்பார் லாசரா மௌனி என்றெல்லாம் பிதற்றுவார். அவர்களெல்லாம் சினிமா தொடர்பானவர்கள் என்கிற ஆவலோடு அவரிடம் விசாரிப்பேன் , அவர் இலக்கியம் அது இது என எனக்கு கொஞ்சமும் புரியாத மொழியில் கடுப்படிப்பார். இவரே இப்படினா அவங்கல்லாம் அய்யயோ என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுவேன்.

சுஜாதா என்றால் ரஜினி,கமல்,பிரபுவுக்கெல்லாம் அம்மாவாக நடிப்பவர் என்பதே என்னுடைய அறிவு தெளிவெல்லாம். விக்ரம் திரைப்படத்திலிருந்து ஏதோ ஒரு காட்சி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் போது ச்சே என்னமா ரசிச்சு வசனம் எழுதிருக்காருங்க இந்த சுஜாதா என்று மாமா பேசும்போது ஓஹோ அந்த அம்மா படத்துல வசனம் கூட எழுதுவாங்க போலருக்கு என்று நினைத்திருக்கிறேன். டிவியில் என் இனிய இயந்திரா எனக்கு பிடித்தமான தொடர். ஆல் டயம் பேவரைட் என்றும் சொல்லலாம் , வேறு எந்த தொடரும் என்னை அவ்வளவாக வசீகரிக்கவில்லை. ஆனால அது ஒரு மோசமான மேக்கிங் , லோ பட்ஜட் முயற்சி என்றெல்லாம் இப்போது பலர் விமர்சித்தாலும் நான்காம் வகுப்பு படிக்கும் போது அதுதான் நான் கண் கண்ட அவதார்!

பின்னாளில் அது சுஜாதா எழுதிய கதை என்று மாமா சொன்ன போது ஆச்சர்யமாக இருந்தது. அட ரஜினிக்கு அம்மாவ நடிக்கறவங்க எவ்ளோ நல்ல கதை எழுதிருக்காங்க! . தொடர்ச்சியாக சுஜாதா குறித்து மாமாவிடம் கேட்கும் போதெல்லாம் அவருடைய பிரியா,கரையெல்லாம் செண்பகப்பூ,காயத்ரி என்று சினிமா தொடர்பான அவரது கதைகளை சுட்டிக்காட்டிப் பேசுவார். ஏனோ எங்கள் ஊர் நூலகத்தில் சுஜாதா புத்தகங்கள் ஏதுமில்லை. எல்லாமே சிறுவர் கதைகள்தான். மாமாவிடம் கேட்டால் தம்பி இன்னும் நீ வளரணும் அதுக்கப்பறம்தான் சுஜாதாலாம் படிக்கணும் போ என்று விரட்டுவார். அதற்கான காரணம் எனக்கு அப்போதெல்லாம் விளங்கவில்லை. இப்போதும். பின் சில ஆண்டுகள் சுஜாதாவுக்கும் எனக்குமான தொடர்புகள் ஏதுமின்றி இருந்தேன்.

இன்டர்வியூவிற்காக திருச்சி செல்ல வேண்டி இருந்தது. ரயிலில். கோவையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் செல்வது மகா கொடுமையாக இருக்கும். சின்னசின்ன ஸ்டேஷன்களிலும் நின்று நின்று ஆமை வேகத்தில் செல்லும். அந்த நேரத்தில் அமெரிக்கா போய் திரும்பிவிடலாம். என்னோட பயணித்த சக பயணி ஏதோ ஒரு புத்தகத்தை படித்த படி வந்தார். நடுவே மூடிவைத்துவிட்டு ஜன்னலோரம் பராக்கு பார்க்க ஆரம்பித்தார். அந்த புத்தகம் ‘ஆ’ அதை அவரிடமிருந்து ஏன் இரவல் வாங்கினேன் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை அந்த தலைப்பு ஈர்த்திருக்க வேண்டும். ஏனோ வாங்கிவிட்டேன். புரட்டத்துவங்கினேன். திருச்சி வரும் போது முக்கால் வாசி புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். பயணம் இன்னும் கொஞ்சம் நீண்டால் தேவலை என்பது போலிருந்தது. ஆனாலும் புத்தகம் பிடுங்கப்பட்டது. என் வாழ்வில் முதல்முறை ஒரு தமிழ்புத்தகத்தை திருச்சியில் இறங்கியதும் வாங்கினேன். அது ‘ஆ’ . அந்த புத்தகத்தை விட அதை எழுதியவர் என் மூளைக்குள் ஏதோ வசியம் வைத்துவிட்டதை உணர்ந்தேன். புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கும் வரை அதை எழுதியவர் யார் என்பது தெரியாமலேயே படித்திருக்கிறேன். புத்தகத்தின் பின் அட்டையிலிருந்த சுஜாதாவின் புகைப்படத்தை பார்த்தபின்தான் அது நடிகை சுஜாதா அல்ல என்பதை அறிந்தேன். அப்போது எனக்கு வயது 18.

தொடர்ச்சியாக சுஜாதா புத்தகங்கள் கண்ணில் படும்போதெல்லாம் வாங்கி படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் பெயரை எங்கு காணினும் வாசிக்கத் துவங்கினேன். மண்டைக்குள் அத்தனை காலம் அமர்ந்திருந்த ராஜேஷ்குமார் காணாமல் போய் , சிறந்த கதைகள் எழுதுபவர் ஒரே ஆள்தான் அவர் சுஜாதா. உலகிலேயே அவர் மட்டும்தான் கதைகள் எழுதுகிறார். தொடர்ந்து விகடனில் வெளியாகும் அவருடைய கட்டுரைகள் படிக்கும் போது ச்சே இந்தாளு ஜீனியஸ்ப்பா , எல்லா விசயமும் தெரிஞ்சு வச்சிருக்காரே என்று நினைப்பேன். அவரைப்போலாக வேண்டும் என்கிற உந்துதல் எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால் அது நிச்சயம் சாத்தியமில்லை என்பதை நல்ல வேளையாக ஆரம்பத்திலேயே உணர்ந்துவிட்டேன். என்னை போன்றவனை அடுத்தடுத்து மேலும் பல தமிழ் புத்தகங்களைத் தேடிப் படிக்க வைத்தது அந்த மனிதரால் மட்டுமே சாத்தியமாயிற்று. என்னை மட்டுமல்ல பல ஆயிரம் தமிழ்
வாசகர்களின் வாசிப்புக்கு பின்னால் அவருடைய பங்கு மிகமிக அதிகம்.

அவருடைய வசீகரிக்கும் எழுத்து , வாசகர்களை மட்டுமல்ல பல எழுத்தாளர்களையும் உருவாக்கியுள்ளது. நல்ல வேளையாக அவர் எழுதுகிற காலத்தில் நான் எழுதவில்லை.

2002ல் சென்னை வந்திருந்த புதிதில் டிநகரில் இருக்கும் 149 மாம்பலம் ஹைரோடில் தங்கியிருந்தேன். பாழடைந்த பங்களாவின் அவுட் ஹவுஸ் அது. அதன் ஜன்னலிலிருந்து பார்த்தால் அடுத்த வீடு தெரியும். அது ஏதோ மென்பொருள் நிறுவனமாம். தனிமையில் அந்த நிறுவனத்தையும் அதன் கணினிகளையும் ஜன்னலினூடே பார்த்துக்கொண்டேயிருப்பேன். பின்னாளில்தான் தெரிந்தது , அது சுஜாதாவின் பில்டிங் என்று. அவர் அடிக்கடி வந்து போவார் என்பதும் தெரிந்தது. வாட்ச்மேனுக்கு சுஜாதா அத்தனை பரிச்சயமில்லை. ஆனால் நான் வாட்ச்மேனுக்கு பரிச்சயம் , ஓனர் எப்பண்ணா வருவாரு என்பதை தினமும் கேட்க தவற மாட்டேன். அவரும் 10 மணிக்கு வந்தாரு வினோ , நீ இல்ல என்பார். ஒரு நாள் ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு வாட்ச் மேனோடு அவருக்கு பக்கத்திலேயே அமர்ந்து விட்டேன். ஒவ்வொரு கார் வரும்போதும் இதுல வருவாரோ இதுல வருவாரோ என்கிற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன். அன்றைக்கு அவர் வரவில்லை. அவரை பார்க்கும் முயற்சியை அத்தோடு கைவிட்டுவிட்டேன்.

ஒரு சுபமுகூர்த்த நாளில் பக்கத்துவீட்டு வாசலில் ஒல்லியாய் ஒரு பெரியவர். நீல நிற சட்டையோடு உயரமாய் நின்று கொண்டிருந்தார். அருகில் சென்றேன். கண்டேன். சுஜாதா. ஷாக். உச்சி மண்டையில் சுர்ர்ர். கைகளிலிருந்த முடியெல்லாம் குத்திக்கிச்சு. காருக்காக காத்திருந்தார். நான் அருகில் சென்றேன். புன்னகைத்தேன். அவரும்.

சார் என் பேரு வினோத் இதோ பக்கத்துல இருக்கேன் , ‘மீண்டும் புன்னகை’ , உங்க புக்கெல்லாம் படிச்சிருக்கேன் , ரொம்ப நல்லா எழுதறீங்க , உங்க கதைனா எனக்கு உயிரு , ‘தலையை ஆட்டிய படி புன்னகை’ அவருடைய கார் வந்தது , நீல நிறக்கார் என்ன மாடல் என்ன கம்பெனி என்பதையெல்லாம் பார்க்கவில்லை , ஆனால் அவர் அந்த காரில் சென்றார். தலைசுற்றுவதை போலிருந்தது. அவசரமாக வீதி முக்கு பொட்டிக்கடைக்கு ஓடினேன். கடைகார நண்பனிடம் சொன்னேன். அவனுக்கு சுஜாதாவை தெரியாது. என் மகிழ்ச்சியும் தெரியாது. யார் அவரு என்றான். பாய்ஸ் ஷங்கர் என்றெல்லாம் விளக்கினேன். ஓ அவுரா என்றான் முகத்தில் எந்த ரியாக்சனும் இல்லாமல். கோபமாய் வந்தது. ஒரு கோல்ட் பில்டரை வேகவேகமாக இழுத்தபடி அதே வீதியில் இளநீர் விற்கும் இன்னொரு நண்பனிடமும் சொன்னேன் அவனிடமும் அதே!

அன்றைக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. சுஜாதா என்னைப்பார்த்து புன்னகைத்த அந்த நொடி , வாவ்.. என்று இருந்தது. பின் அடிக்கடி அவர் காரில் பக்கத்து வீட்டிற்குள் செல்லும்போது புன்னகைப்பேன் . அவர் என்னைப்பார்த்து புன்னகைத்தாரா தெரியாது. புன்னகைத்தேன்.

ஒருவேளை இப்போது அவர் நம்மோடு இருந்திருந்தால் நிச்சயம் அவரோடு உரையாடுகிற வாய்ப்பு கிடைத்திருக்கும். அவரோடு அமர்ந்து பேசுகிற வாய்ப்பு கிடைத்திருக்கும். பத்திரிக்கையாளனாய் ஒரு பேட்டியாவது எடுத்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

வீ மிஸ் யூ சுஜாதா..

Read more...

பத்து-பத்து

>> 26 February 2010


மூக்கு ஈரமாய் இருக்கிறது. காதிற்குள் ‘ங்ங்ங்ங்ங்ங்’ என விடாமல் ஒலி. காதோரம் யாரோ நடந்து வருகிற சப்தம். குப்புற விழுந்து கிடந்தவன் தூரத்தில் வருகிற கறுத்த காலடிகளை மெதுவாக கண்களைதிறந்து பார்த்தான். மங்கலாக அது தன்னை கடந்து செல்வது போல் தெரிகிறது. மூச்சு விடமுடியவில்லை. முதுகில் உதைத்ததால் விண்விண் விண்விண் என இதயம் துடிப்பதைப் போல விட்டுவிட்டு வலித்துக்கொண்டுருந்தது. விலகிச்செல்லும் கால்களை நிமிர்ந்து பார்க்கலாமா? அல்லது கண்களை இறுக்க மூடிக்கொள்ளலாமா? யோசித்தான். வேண்டாம்! கண்திறந்தால் மீண்டும் அடிபட வேண்டியிருக்கும் , முட்டியில் வலித்தது. கண்ணை மூடிக்கொண்டான். இடது கண்ணில் கண்ணீர் கசிந்துகொண்டே இருந்தது. தூரத்தில் இவனை அழைக்கும் சத்தம். லூசு...!

தட்டுதடுமாறி எழுந்து கொண்டான். மூக்கை புறங்கையால் துடைத்தான். சளி போல இல்லை. கெட்டியாக காய்ந்திருந்தது. கன்னத்திலும். அது ரத்தம். விழுந்து கிடந்தவனை முகத்தில் எட்டி உதைத்த போது சிறுமூக்கு உடைந்திருந்தது. வலி இல்லை. ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. விடாமல். சொட்டு சொட்டாக...

‘’டேய்...லூசு.. என்னடா பண்ற எவ்ளோ நேரமா கூப்படறேன்’’ படுக்கையறையிலிருந்து ராஜன் சார் கூப்பிடும் சத்தம் கேட்டது. லூசு அவன் பெயர் அல்ல!. பாஸ்கர், ஒன்பது வயது. கடைசியாக இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது அவனது அப்பா வேலைக்கு சேர்த்து விட்டிருந்தார். ஆந்திராவிற்கு பக்கத்தில் ஒரு சிறிய கிராமம் அவனுடையது. மெக்கானிக் வேலை என்றுதான் சேர்த்துவிட்டிருந்தார். ஆனால் கழிவறையை சுத்தம் செய்வதில் துவங்கி சகலமும் இவனே செய்ய வேண்டியிருந்தது. எப்போதும் குடி நிறைய பெண்கள் அடி உதை என சினிமாவில் பார்த்து ரசித்த வில்லன்களுக்கு சற்றும் சளைத்தவனல்ல ராஜன் என்பதை உணர்ந்திருந்தான். ராஜனுக்கு லேசான கிறுக்கு இருக்கலாம் என்று நினைப்பான். தூங்கும் போது தலையில் கல்லைப்போட்டுவிட வேண்டும் என்று யோசிப்பான். கல்லை தூக்க முடியாது. சின்னக்கல்லைப் போட்டால் சாக மாட்டான்.

நேற்று ராஜன் அலுவலகத்தில் சிறிய பார்ட்டி. போதையில் டேபிள் டிராயரில் வைத்துவிட்டுச் சென்ற சிசர்ஸ் சிகரட்டுகள் மூன்றை காணவில்லையாம். இவன்தான் அதை புகைத்திருக்க அல்லது எடுத்திருக்க வேண்டும் என அடித்து உதைத்திருந்தான். சிறுவன் மயங்கி விழுந்து கிடந்தான். இப்போது மீண்டும் அவனைத்தான் அழைக்கிறான். ஹாலில் மயக்கமாகி விழுந்து கிடந்தவன் அவசர அவசரமாக ரத்தம் வழியும் மூக்கை சிந்திவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தான். மீண்டும் அடி விழலாம். திக்திக்திக் இதயம் வேகம் எடுத்தது. முதுகில் விண் விண். வலித்தது.

படுக்கைக்கு அருகில் ராஜன் ஒரு சேரில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தான். கொஞ்சம் தள்ளி நின்று முகத்தை தரையை நோக்கி வைத்துக்கொண்டு , கையை கட்டி நின்றான்.

‘’ஸ்ஸ்ஸ்.. மூக்குல என்னடா ரத்தம்!’’.

‘’சாங்! நீங்க மூங்சீல மிதிச்சீங்கங்ஙக , சின்னமூக்கு உங்ஞ்சிபோச்சிசார் அதாங்’’ மூக்கிலேயே புரியாதபடிக்குப் பேசினான். இன்னும் துளிதுளியாக சீரிய இடைவெளியில் ரத்தம் சொட்டு சொட்டாக கசிந்து கொண்டுதானிருந்தது.

அருகில் இருந்த ஏதோ ஒரு துணியை எடுத்து அவனிடம் நீட்டினான். பழுப்புத்துணி. ஈரமாய் இருந்தது. ‘’இந்த மூக்க துடைச்சுட்டு , பாத்ரூம் போய் மூஞ்ச கழுவிக்க! முடிச்சிட்டு வா! வேல இருக்கு..’’ அதட்டினான். சிறுவனுக்கு எரிச்சலாக இருந்தது , வயிறும் மூக்கும் மனமும்.

கழிவறைக்கு சென்று சோப்புப்போட்டு முகத்தை கழுவினான். ஆனாலும் காய்ந்திருந்த ரத்தம் போகவில்லை. அழுத்தி தேய்த்து,சுரண்டி அதை போகவைக்க முயற்சித்தான் ஒரளவு போயிருந்தது. கொல்லைப்புறத்தில் இருந்த உடைந்த கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். கோடுபோல தெரிந்தது. அதற்குள் உள்ளேயிருந்து இன்னுமாடா என்னும் குரல் கேட்டது. அமைதியான கொல்லைப்புறத்தின் திடீர் குரலால் அதிர்ந்தான். உடல் சிலிர்த்து ஈரக்கையில் பொறியாய் இருந்தது. அதை தடவிப்பார்த்தான். குறுகுறுப்பாய் இருந்தது. சிரித்துக்கொண்டான்.

படுக்கையறைக்குள் நுழைந்தான். புகை மண்டலமாக இருந்தது. புகை விலக ராஜன் நிமிர்ந்து படுத்திருக்க அவனது மார்போடு சாய்ந்திருந்தாள் அவள். ராஜனுடைய காதலி. முன்னால் வரும்போது பாத்ரூமில் இருந்திருக்க வேண்டும். படுக்கைக்கு அருகில் இருந்த டேபிளில் பாதி அருந்தி ஜூஸ் இருந்தது. இட்லி. இரவு சாப்பிடததால் வலியில் பசி தெரியாமல் இருந்திருந்தான். இப்போது அதை பார்த்ததும் வயிறு பசிப்பது போல் இருந்தது. ர்ர்ர்ர் வயிற்றில் அலாரம் அடித்தது.

‘’டேய் என்னடா அங்க நின்னுட்டு பராக்கு பாத்துக்கிட்டு இருக்க! அந்த சட்டைய எடு’’ ஆர்டர் பறந்தது.

ஹேங்கரில் இருந்த சட்டையை எடுத்து வந்து அவனது கையில் கொடுத்தான். அதிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி , ‘’நம்ம குமார் கடைக்கு போய் ஒரு பாக்கட் கோஹினூர்னு கேளு தருவான் வாங்கிட்டு வா , மிச்சக்காசு இருபது ரூவா தருவான் சரியா பாத்து வாங்கிட்டு வா!’’. பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

‘’டேய் நில்லு என்ன வாங்கிட்டு வருவ’’

‘’கோங்கினார் ஒரு பாங்க்கட்’’ ,மூக்கிலேயே இவன் சொல்ல அருகில் படுத்திருந்தவள் ஹாஹாஹாஹா என பேயைப்போல சிரித்தாள். இவனுக்கு முகத்திலேயே குத்த வேண்டும் போல் இருந்தது.

போகும் வழியெல்லாம் கோகினார்.. கோகினார்.. கோகினார்.. கோசிமார்.. கோஜியார்.. என சொல்லிக்கொண்டே சென்றான். கையிலிருந்த அழுக்குத்துணியால் மூக்கைத்துடைத்துக்கொண்டான். குமாரின் மெடிக்கல் ஷாப் வந்தது.

‘’அண்ணே ஒரு பாங்க்கட் ஙோஜியார்.. குடுங்க.. சார் வாங்கிகினு வரசொன்னாரு’’ , முக்கு அடைப்பு விலக லேசாக வாயிலும் பேச ஆரம்பித்திருந்தான்.

‘’அதென்னடா ஙோஜியாரு.. ஏன்டா காலைல வந்து ரப்ச்சர குடுக்கற.. போடா நல்லா கேட்டுட்டு வா..’’

‘’அண்ணே திரும்பி போனா , சார் அடிப்பாருண்ணே!..’’.

‘’என்னடா மூக்குகிட்ட கரை.. இங்க வா’’ அருகில் வந்தவன் மூக்கை பார்த்தான். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. நடந்ததை சொன்னான். ராஜனின் நண்பர் கடை அது. குமார் அங்கே வேலை பார்ப்பவன். அவனால் ஒன்றும் செய்ய முடியாது. பையனை உள்ளே அழைத்து சென்று அவசர அவசரமாக மருந்து போட்டு விட்டான். முட்டியில் சதை கிழிந்திருந்தது. டெட்டாலால் அதை சுத்தம் செய்து பஞ்சு வைத்து கட்டிவிட்டான்.

‘’டேய் எங்கிட்டாவது ஓடிப்போய்யிர்ரா! இவங்கிட்ட கிடந்த ஏன்டா அடிவாங்கி சாவற’’ வருத்ததோடு சொன்னான்.

‘’அண்ணே எங்கனே போவன். ஊருக்கு ஒருவாட்டி ஓடிப்போனதுக்கே எங்கப்பா அடிச்சாரு, சாரும் அடிச்சாரு , நான் இங்கயே இருந்துக்குறேன்’’ பேசபேச சிறுவனுக்கு தொண்டை அடைத்து கண்களில் லேசாக கண்ணீர் முட்டிக்கொண்டிருந்தது. புறங்கையால் கண்களை துடைத்துக்கொண்டான்.

‘’சொன்னா கேளுடா.. இங்க இருந்த அடிச்சே கொன்னுருவானுங்க’’ பேசியபடியே ஒரு குட்டி மிட்டாயை அவனிடம் நீட்டினான்.

‘’அண்ணே அதெல்லாம் இருக்கட்டும், கோஜியூர் ஒரு பாக்கட் குடுங்கண்ணே.. லேட்டா போனா சார் அடிப்பாரு’’

‘’ஓஹ் கோஹினூரா!..’’ மனதிற்குள் ங்கோ^%$$ தே&%% பையன் சின்னப்பையன்கிட்ட என்ன வாங்கிட்டு வரச்சொல்லிருக்கான் பாரு என திட்டியபடியே உள்ளே இருந்து ஒரு பாக்கட்டை எடுத்து நீட்டினான்.

சிறுவன் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு மீதி காசிற்காக காத்திருந்தான். ‘’ என்னடா கிளம்பு’’,’’இல்லண்ணே மீதி இருபது ரூவா தருவீங்க அத வாங்கிட்டு வரச்சொன்னாரு சாரு’’ ,’’உங்க சார்கிட்ட சொல்லு சின்ன பாக்கட் இல்ல பெரிய பாக்கட்தான் இருக்காம்னு , பெரிசு அம்பது ரூவாயாம்னு சொல்லு’’

‘’அண்ணே பாருங்கண்ணே சின்னபாக்கட்டே குடுங்க.. இல்லாட்டி நான் மறந்து போய் வாங்கிட்டு வந்துட்டேனு அதுக்கும் அடிப்பாரு’’

‘’டேய் இல்லடா, இரு’’ என ஒரு பேப்பரில் ‘சிறிய பாக்கட் இல்லை, பையனிடம் பெரிய பாக்கட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக்கொள்ளவும்’ என்றெழுதி கொடுத்தனுப்பினான். சிறிது தூரம் சென்றவன். திரும்பி வந்தான்.

‘’அண்ணே முந்தாநாளு , டீக்கடை பக்கத்துல ஒரு அண்ணன், எனக்கு நோட்டீஸ் குடுத்தாங்க,அதுல 10-10 னு எழுதிருந்துச்சு , அதுக்கு என்ன அர்த்தம்’’

‘’ அதுவா ஆமான்டா , உங்க சார் ஆபீஸ் ரூம்ல ஒரு போன் இருக்குல்ல அதுல 1010 நம்பருக்கு போன் போட்டு , என்னை இங்க அடிக்கறாங்க என்ன காப்பாத்துங்கனு சொல்லு , உன்னை போலீஸ்காரங்க வந்து கூட்டிக்கிட்டு போயி படிப்பு சொல்லித் தருவாங்க, என்னோட மொபைல்ல கால் பண்ண முடியாது , வீட்டு போன்லருந்துதான் பண்ண முடியுமாம்.. நானே சொல்லணும்னு நினைச்சேன்’’ என ரேடியோ விளம்பரத்தில் வருவது போல சொன்னான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சார் தேடுவாரே என நினைத்தவன் அங்கிருந்து ஓடத்துவங்கினான்.

வீட்டை அடைந்ததும் நேராக படுக்கையறை வாசலுக்கு சென்று தன் அரைடிரவுசர் பாக்கட்டில் கையை விட்டு கோஹினூர் பாக்கட்டை தேடினான். காணவில்லை. படுக்கை அறையின் உள்ளேயிருந்து சிரிப்புகளோடு வினோதமான ஒலிகள் வந்து கொண்டிருந்தது. ஐய்யயோ பாக்கெட்ட காணோம் , சார்கிட்ட என்ன சொல்றது , தொலைஞ்சு போச்சுனு சொன்னா கரண்டிய சூடு பண்ணி கால்ல போட்டுருவாரே! என மனதிற்குள் பதறியபடி வந்த வழியில் மீண்டும் ஓடத்துவங்கினான். வேர்த்து வேர்த்து கொட்டியது. காலை வெயில் மெதுவாக உச்சிக்கு வந்து கொண்டிருந்தது. இதயத்துடிப்பு படபடபடபடபடவென எக்ஸ்பிரஸ் ரயில் போல அடித்துக்கொண்டிருந்தது. எங்கும் காணவில்லை. கடை வரைக்கும் வந்துவிட்டிருந்தான். கடையில் குமார் இல்லை , கடை முதலாளி அமர்ந்திருந்தான். என்ன செய்வதென்றே தெரியாமல் மீண்டும் கடையிலிருந்து வீடு வரைக்கும் வழியெல்லாம் தேடியபடியே வந்தான். கறுப்பு பாக்கட்டு , பொம்பளைங்க படம்.. கறுப்பு பாக்கட்... பொம்பளங... என நினைத்தபடியே வந்தான். இல்லை. காணவில்லை. எங்குமில்லை.

இன்னைக்கு காலில் சூடு நிச்சயம். என ஏதேதோ நினைத்த படி வீட்டிற்கு அருகில் வந்துவிட்டான். படுக்கையறையில் இருந்து ஆ..ஊ என விதவிதமான ஒலிகள் அதிகமாக வந்துகொண்டிருந்தது. இவனுக்கு அந்த சப்தம் பழக்கமானதுதான்.. இது போல சத்தம் வரும் சமயங்களில் ஒரு மிகப்பெரிய அது ஓய்ந்த பின்தான் ராஜன் வெளியே வருவார் என்பது. அதற்குள் 1010,துன்பறதுபடுகறீங்கள?விற்கு போன் போட்டு சொல்லிவிடவேண்டும். போன்.. ராஜனின் அலுவலக அறையில். அது படுக்கையறைக்கு பக்கத்து அறை. அங்கே நிச்சயம் அவர்களது முனகல் கேட்கும். அதற்குள் போன் பண்ணிவிடலாம். என அலுவலக அறைக்குள் நுழைந்தான். ஆ..ஊ சப்தம் இப்போது அதிகமாகியிருந்தது.. உச்ச ஸ்தாயியில் இருவரும் கத்திக்கொண்டிருந்தனர்.

சிறுவன் நேராக டெலிபோன் அருகில் வந்தான். இதுவரை அவன் போனை உபயோகித்ததே இல்லை. பேசுவதைப் பார்த்திருக்கிறான். அருகில் சப்தம் வந்துகொண்டுதானிருந்தது. அருகில் சென்றவன் என்ன பேச வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டான் , ‘’சார் என்னை இங்கே அடிஅடினு அடிக்கிறாங்க, உடனே வாங்க சார், இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க.. ‘’ அழ முயற்சித்து பேசிப்பார்த்தான். சரியாக வரவில்லை. மீண்டும் ஆரம்பித்தான்.. சார் என் பேரு கோபி.. ஊரு கே.புதுப்பட்டி, இங்க வேலைக்கு சேர்த்து விட்டாங்க , இங்க என்னை அடிக்கறாங்க.. தயவு பண்ணி வந்து காப்பாத்துங்க, ம்ம்ம்ம்.. அழுது பார்த்துக்கொண்டான். சரியாக வருகிறது. புலி பதுங்குவது போல பதுங்கி போனுக்கு அருகில் போய் நம்பர்களை எண்ணத்துவங்கினான் ஒன்னு,ரெண்டு...எட்டு... ஒன்பது..ஜீரோ.. ஐயோ பத்த காணோமே!. பதறிப்போனான். பத்துபத்து நம்பருக்குள்ள குமார் அண்ணே போன்போட சொல்லிச்சு அங்க பத்தாம் நம்பரையே காணமே!
அருகில் சப்தம் மெதுவாக குறைவதைப்போல் இருந்தது. இவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. நேற்று வாங்கின உதையே இன்னும் வலி தீரவில்லை. இரவில் புரண்டு படுத்து உறங்க முடியாது. அதற்குள் இன்னொன்னா!. சப்தம் வேறு குறைகிறது. பத்துபத்து.. என்ன செய்வது.

‘’பத்து . ஒன்னு ஜீரோ ஒன்னா போட்டா பத்து! ‘’ டக்கென ரிசீவரை எடுத்தான். 1...0...1...0 பட்டனைகளை வேகவேகமாக அழுத்தினான்.

ஒரு பெண்ணின் இனிமையான குரல்.. எதற்காகவும் காத்திருக்காமல்


‘’சார்..இல்ல இல்ல அம்மா.. இல்ல இல்ல அக்கா.. என் பேரு கோபி..’’

‘’வணக்கம் குழந்தைகள் நல நிறுவனம் உங்களை வரவேற்கிறது.. சைல்ட் புரொடக்சன் வெல்கம்ஸ் யூ..’’

‘’அக்கா! அதெல்லாம் தெரியாதுக்கா! எங்க ஊரு.. இல்ல.. என்ன ரொம்ப அடிக்கிறாங்க, கொஞ்சம் வந்து காப்பாத்துங்க்கா, இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க’’

‘’தமிழில் தொடர எண் ஒன்றை அழுத்தவும், ஃபார் இங்கிலீஷ் ப்ரஷ் டூ.. ஹிந்தி மே..’’

‘’அக்கா எனக்கு அதுலாம் தெரியாதுக்கா.. இங்க இங்க.. எனக்கு கால்ல சூடு போடப்போறாங்கக்கா காப்பாத்துங்க , எனக்கு கால்லாம் வலிக்குதுக்கா.. எங்க அப்பாட்ட சொன்னா அவரும் அடிக்கறாருக்கா..’’ என நிஜமாகவே போனை கெட்டியாக காதோடு அணைத்துக்கொண்டு தேம்பிதேம்பி அழத்துவங்கியினான்.

‘’நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை... தமிழில் தொடர..’’ விடாமல் சொன்னதையே திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது.. அக்கா அக்கா என போனை அணைத்துக்கொண்டு பிதற்றி கொண்டிருந்தவன் கால்தட சப்தம் கேட்டு போனை கீழே வைக்க முயன்றான். ராஜனுடன் படுத்திருந்த அந்த பெண் நின்று கொண்டிருந்தாள்.. அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனிடமிருந்து ரிசீவரை பிடிங்கி தன் காதில் வைத்து கேட்டாள் எதிர்முனையில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இருவரும் மௌனமாய் நின்று கொண்டிருக்க ராஜன் உள்ளே நுழைந்தான். வாசலில் காலிங் பெல் சப்தம் கேட்டது. டிங் டாங்... கோபி தன்னை காப்பற்ற யாரோ வந்துவிட்டனர் என்று புன்னகைத்தான்.

_____

*- கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனமும் எண்ணும் நிகழ்வுகளும் கற்பனையே!


படம்- http://www.stolenchildhood.net

Read more...

வாழ்த்துக்கள்

>> 25 February 2010


சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிறந்தநாளில் , யாருமில்லா தனி அறையில் வாழ்த்த ஆளின்றி , கனத்த மனத்தோடு தனிமையில் இருந்திருக்கிறேன். நண்பர்கள் அதிகமில்லாமல் சென்னையின் இருண்ட மேன்சன்களில் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை வாழ்த்துக்களே இல்லாமல் கடந்திருக்கிறேன்.எத்தனையோ தீபாவலிகளும் பொங்கலும் பிறந்தநாளும் வெறுமையாய் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் நம்மை வாழ்த்த யாருமே இல்லையே என்று ஏங்கியிருக்கிறேன். அது போன்ற சமயங்களில் யாரவது போனில் அழைத்துப்பேசும் போது வாழ்த்து சொல்லத்தான் அழைக்கின்றனர் என்று போனை எடுத்தால் வேறு ஏதாவது செய்தியாக இருக்கும். மனவருத்ததோடு அதையும் கடந்து சென்றிருக்கிறேன்.

இதோ ஆண்டுகள் இரண்டு கடந்துவிட்டது. என்னை சுற்றியிருந்த சூழல் மொத்தமாய் மாறியிருக்கிறது. இப்போது எல்லாமே தலைகீழ். ஒற்றை அழைப்புக்காகவும் வாழ்த்துக்காகவும் ஏங்கியவனின் வாழ்க்கை புரட்டிப்போட்டது போலிருக்கிறது. பிப்ரவரி 18 2010 எனது திருமணம். 500க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் , தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் , டுவிட்டரில் , வலைப்பதிவுகளிலில் , பின்னூட்டங்களில், நேரிலும் பலர் என வாழ்த்துக்களாலும் அளவில்லா அன்பாலும் பலரும் திக்குமுக்காட செய்தனர். இதில் பலரும் முகம் அறியாத நண்பர்கள். ஒரு கட்டத்தில் என்னால் போனில் அழைத்து வாழ்த்துபவர்களிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் அனைவருக்கும் சொல்லிவைத்தாற்போல நன்றிங்க , ரொம்ப நன்றிங்க என்பதைத்தவிர வேறெதையும் சொல்ல முடியவில்லை.வேறெதையும் சொல்லவும் முடியவில்லை. என்னால் அனைவரையும் நேரில் அழைக்க முடியாவிட்டாலும் அழைக்காமலே பல நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியது மகிழ்ச்சியளித்தது.

அதை இணையத்தை தவிர வேறெதுவும் சாத்தியமாக்கவில்லை. அப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிய இணையத்துக்கும் கூகிளுக்கும் முதல் நன்றி. நேரில் வந்து வாழ்த்திய திருப்பூர் கோவை சென்னை ஈரோடு வலைப்பதிவர்களுக்கு நன்றிகள். திருமண நாள் படங்களை அன்றைக்கே வலைப்பதிவில் ஏற்றி திருமணத்திற்கு வரமுடியாது போனவர்களுக்கு உதவிய பதிவர் கோவை ஷர்புதீனுக்கு நன்றி. (படங்கள் இங்கே )


மற்றபடி மின்னஞ்சல் , குறுஞ்செய்தி , டுவிட்டர் ,பேஸ்புக் , சாட் என எல்லா இடங்களிலும் என்னை மனதார வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

நிஜமாகவே என்ன சொல்வதென்று தெரியவில்லை. நன்றிங்க ரொம்ப நன்றிங்க


சென்னையிலும் பிற ஊர்களிலும் பல நண்பர்கள் திருமணத்திற்கு வருவதாக 100% வாக்களித்துவிட்டு வராமல் ஏமாற்றியிருந்தாலும் அவர்களுடைய சூழ்நிலையை உணர்கிறேன். பரவாயில்லை. ஊரில் உட்கார்ந்து கொண்டே வாழ்த்திய அந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல...


********

Read more...

அன்புடன் அழைக்கிறேன்

>> 13 February 2010

லக்கி மாதிரி பெருசுங்க கூடல்லாம் தறிகெட்டு சுத்திக்கிட்டிருக்கறப்போ, சின்னப்பையனான எனக்கு பால்யவிவாகம் செஞ்சி வெக்குறாங்க. அவசியம் வந்துடுங்க மக்களே!


விபரங்களுக்கு (பத்திரிக்கையை சுட்டினால் பெரிதாக காட்டும்)



திருமணம் கோவையில் நடைபெற உள்ளதால்  வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் முன் விபரங்களுக்கு என்னை தொடர்புகொள்ள   - 9884881824


அனைவரும் கட்டாயம் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நல்வரவை நாடும்

அதிஷா

Read more...

தன்னம்பிக்கை

>> 09 February 2010

கோவை, இடையர்பாளையத்திலிருந்து வடவள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் வீடு. அவரை சந்திக்க காலையிலேயே அவரது முகவரி கேட்டு போனில் பேசினோம். வடவள்ளி சாலையில் நுழைந்து குழந்தையிடம் கேட்டால் கூட என் வீட்டை காட்டிவிடும் என்று கூறியிருந்தார். அந்த பாதையில் நாமும் நுழைந்தோம். சுற்றிலும் பல வீடுகள் இருந்தாலும் சாலைகளில் யாருமில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் குழந்தைகள் சிலர் கண்ணில் தென்பட்டனர். அவர் விளையாட்டுக்காக அப்படி கூறியிருந்தாலும் வேறு வழியில்லாமல் குழந்தைகளிடமே கேட்டோம் , ‘ரைட்டு திரும்பி,லெஃப்ட்ல ஃபோர்த் வீடு!’ என்று தமிழில் பதில் சொன்னார்கள்.

குழந்தைகள் காட்டிய வீட்டில் நமக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவரிடம் ‘ஏனுங்க பெரியவரே இங்க எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வீடெதுங்க’ என்றோம், நம்மை திரும்பிப்பார்த்தவர் ‘’இதானுங்க’’ என்று சொல்லிவிட்டு ஸ்டைலாக ‘உடலை’ திருப்பியபடி மீண்டும் வாசற்படியிலிருந்த புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டார். ஆனால் அவர் தன் கைகளால் புத்தகத்தின் பக்கங்களை திருப்பவில்லை , தன் முகத்தை பயன்படுத்தி திருப்பிக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர்தான் கிருஷ்ணமூர்த்தி என்பது புரிந்தது.

எங்களோடு திரும்பி பார்த்துப் பேசும் போது முகத்தை திருப்பாமல் உடலை திருப்பி பேசியிருக்கிறார். இரண்டு கைகள்-கால்கள் இல்லை! இடுப்புக்கு கீழ் உடலே இல்லை! உலகிலேயே இது போன்ற உடலமைப்பு கொண்டவர்கள் மூன்று பேர் மட்டுமே இன்றும் நம்மிடையே உள்ளனர். அதிலும் அறுபது வயதைக் கடந்தும் வாழ்க்கைச்சவாலை எதிர்கொண்டு போராடிவரும் ஒரே இந்தியர் இவர். நான்கடவுள் திரைப்படத்தில் மௌனசாமியாராக வந்து தன் உருட்டும் விழிகளால் மிரட்டியிருப்பார் இந்த 62 வயது அறிமுக நடிகர்!

ச்சே இவர்லாம் வாழ்றதே அற்புதமென நினைத்துக்கொண்டிருக்கையில் கர்நாடக இசையில் பல சாதனைகளை புரிந்து விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார் இந்த கலைமாமணி!
சிறுவயதில் சமூகத்தையும்,கேலிகிண்டல் செய்பவர்களையும் நினைத்து வருந்தி வெளியில் எங்கும் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தவரை , அவருடைய தந்தைதான் உற்சாகமூட்டி ஊக்கமளித்துள்ளார். மூன்றரை வயதில் தன் வீட்டுத்திண்ணையில் தனியாக அமர்ந்திருப்பார். பக்கத்து வீட்டில் இருந்த ஆசிரியர் ஒருவர் பாட்டு வகுப்புகள் எடுத்துக்கொண்டிருப்பார். அங்கே கற்றுக்தரப்படும் பாடல்களை திண்ணையிலிருந்தே பாடிப்பழக ஆரம்பித்தார். இவர் தினமும் பாடுவதை கவனித்த அந்த பாட்டு ஆசிரியர் இவரை அழைத்து தினமும் இசை கற்றுக்கொடுக்க துவங்கினார். தன் 17 வயதில் அரங்கேற்றம். படபடப்போடு மேடையேறிய அந்த இளைஞருக்கு மட்டுமல்ல , அதை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே தெரியாது இவர் எப்படி பாடப்போகிறார் என்று. பாடி முடித்தார். அரங்கமே அமைதியாக இருந்தது , என்னடா ஒருவருக்கு கூடவா நம் பாட்டு பிடிக்கவில்லை , யாருக்குமே கைத்தட்டணும்னு தோணலையா என நினைத்து கண்கள் கலங்க அமர்ந்திந்தவருக்கு முதல் கைத்தட்டல் ஒலி கேட்டதாம். தொடர்ந்து இரண்டு மூன்று என ஐந்து நிமிடங்கள் கைத்தட்டல்களும் பல ஆயிரம் துளிகள் கண்ணீருமாய் முடிந்தது அந்த அரங்கேற்றம். இவரது திறமை கண்டு அரங்கமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது. அதற்கு பின் ஏறிய மேடைகளெங்கும் கிருஷ்ணமூர்த்தியின் இசை ராஜ்யம்தான்.

இதுவரைக்கும் 2000க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியிருக்கிறார். பல வெளிநாடுகளிலும் இவரது கச்சேரிகள் அரங்கேறியுள்ளது. தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக அவர் விவரிப்பது அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி மாளிகையிலேயே (ராஷ்டிரபதி பவன்) பாட அழைத்திருக்கிறார். அது வெகு சில இசைக்கலைஞர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய மரியாதை. அது தனக்கு கிடைத்ததாக சிலாகித்து கூறினார்.

இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போதே இரண்டு பெண்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். வந்ததும் அவருக்கு வணக்கம் கூறி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

யாரிவர்கள் என நாங்கள் கேட்க நினைத்தோம். அதற்கு முன் அவரே சொல்லத்துவங்கினார் , ‘’எனக்கு 35 வயதாக இருக்கும் போது , எனக்கு கிடைத்த இசை என்னும் இந்த ஆற்றலை , மற்றவருக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும், எப்போதும் வீட்டிலேயே நான்கு சுவர்களை பார்த்துக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் நாலு பேருக்கு சங்கீதம் கற்றுத்தந்தால் நன்றாக இருக்குமே என இசை ஆர்வம் உள்ளவர்களுக்கு இசை கற்றுக்கொடுக்கத்துவங்கினேன் , இதோ இவர்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து லீவிற்கு இங்கே வந்திருக்கின்றனர், தினமும் நான் கற்றுத்தரும் பாடங்களை அப்படியே ரிகார்ட் செய்து கொண்டு ஊரில் போய் கேட்டு கேட்டு பயிற்சி பெறுவார்கள்! இது தவிர தினமும் நான்கு பேருக்கு பயிற்சி அளிக்கிறேன், 700 பேருக்கும் மேல் கர்நாடக இசைக்கலைஞர்களை உருவாக்கியிருக்கிறேன்!’’ என்றார். ஆச்சர்யமாக இருந்தது!

2006ல் கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார். 2001ல் ஜனாதிபதியிடமிருந்து தேசிய அளவில் மாற்றுதிறன் படைத்தவர்களில் சாதனை புரிந்தவர் என்ற விருதை பெற்றுள்ளார். ஜனாதிபதி மாளிகளையில் பாடும் வாய்ப்பும் கிடைத்து அப்துல்கலாம் முன்னிலையில் பாடி தன் குரலால் அப்துல்கலாமையே இவருக்கு ரசிகராக்கியிருக்கிறார். விருதுகள் வாங்குவதும் பாராட்டுகள் பெறுவதும் அவருக்கு காபி குடிப்பது போலாகியிருக்க வேண்டும். அறை முழுக்கவே விருதுகளாலும் கேடயங்களாலும் வாழ்த்து மடல்களாலும் நிரம்பி வழிகிறது. அத்தனை விருதுகளும் அவரைவிட உயரமானவை.

பல்கலைகழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும் எடுக்கிறார். தன்னம்பிக்கையைப்பற்றிப் பேச இவரைவிட சிறந்த ஆள் உண்டா?
‘’என்னால் சாதிக்க முடிந்தால் மட்டும் போதுமா என்னை போலிருக்கும் அனைவரும் சாதிக்க வேண்டும் , மற்றவர்களை காட்டிலும் அதிகம் உழைத்து வாழ்க்கையில் எதையாவது நிகழ்த்தி காட்டவேண்டும் என்கிற துடிப்பும் வேகமும் வேண்டும், எந்த சமூகம் நம்முடைய குறையை சுட்டிக்காட்டி கேலி பேசுகிறதோ அதே சமூகத்தில் உயர்ந்த இடத்தில் சாதனையாளனாக உயர வேண்டும் , இந்த உணர்வுகள்தான் என்னை மேம்படுத்துகிறது , இந்த உணர்வுகள்தான் என்னையும் சாதனையாளனாக மாற்றியது, இதைத்தான் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன் , நான் எப்போதும் என்னை குறைவாக நினைத்ததே இல்லை , அல்லது எனக்கு குறைகள் இருப்பதாகக்கூட நினைத்ததில்லை , என்னால் ஒரு காரியம் முடியாவிட்டால் அது யாராலும் செய்ய முடியாத ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன், இந்தியாவுக்கு பெருமைத்தேடி தருவதைப் போல ஒரு இசை நிகழ்ச்சியை நடத்திக்காட்டி விட வேண்டும் , இசையில் இன்னும் சாதிக்க வேண்டும்! அதற்காகத்தான் இன்றும், எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கிறேன்’’ படபடவென சிவகாசி சரவெடியாகப் பேசினார்.

பள்ளிக்கே சென்றிராதவர் , வீட்டிலிருந்தே சமஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பட்டம் பெற்றுள்ளார். பொழுது போக்கிற்காக சித்ராலயா ஓவியப்பள்ளியில் அஞ்சல் வழியில் ஓவியமும் பயின்றுள்ளார். ஏழு மொழிகள் எழுத படிக்க பேசவும் தெரிந்து வைத்துள்ளார். தன் வீட்டிலேயே குட்டி லைப்ரரியும் வைத்துள்ளார். அவருடைய திரைப்பட அனுபவம் குறித்து கேட்டோம்.

‘’இயக்குனர் பாலா என்னைப்பற்றி அறிந்து கொண்டு ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் நடிக்க அழைத்தார், இளையராஜா ஒரு படத்தில் பாடவும் வாய்ப்பளிப்பதாக கூறியிருக்கிறார். பல தொலைகாட்சித்தொடர்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தாலும் , உடல் ஒத்துழைப்பதில்லை, நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கிறது , மற்றபடி நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் போது நிச்சயம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன், என்னதான் திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் இசைதான் என்னை வழிநடத்தி செல்கிறது, அதுதான் என் உயிர் , அதுதான் எனக்கு எல்லாமே’’ என புன்னகைக்கிறார்.
தன் வீட்டிற்குள் எங்கு போவதாக இருந்தாலும் உருண்டேதான் செல்கிறார். புதிதாக பார்க்கும் நமக்கு மனம் பதட்டமடைகிறது. அவரோ நடக்கும் வேகத்தில் ஒரு அறையிலிருந்து மற்ற அறைக்கு உருண்டே செல்கிறார். தன் புத்தகங்களை தாழ்வாக வைக்கப்பட்டிருக்கும் அலமாரியிலிருந்து தானே எடுத்து தன் தோளின் உதவியுடன் பக்கங்கள் புரட்டி படிக்கிறார். செல்போன் அழைத்தால் அவரே எடுத்து பேசுகிறார். ஆச்சர்யம்தான்!

‘’எனக்கு இறைவன் அருளால் எந்த குறையுமில்லை , நான் வீழும் போதெல்லாம் தூக்கிவிட என் அண்ணன்கள் இருக்கின்றனர். எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது, எனக்கு எப்போதும் உதவியாய் என்னோடு இருக்கும் சீனிவாச ராகவன் இருக்கிறார் , வேறென்ன வேண்டும். சில மாற்றுத்திறனாளர்களை காணும் போது நான் எவ்வளோவோ பரவாயில்லை என்று எண்ணுவேன் , அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்து அவர்களுக்கு தேவையான ஊக்கம் அளிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன், அதுவே என்னை இன்னமும் வழிநடத்திச்செல்லும் ஊக்கமாய் இருக்கிறது’’ என பேசும் போதே அந்த ஊக்கம் நமக்கும் கிடைக்கிறது.



நன்றி - புதியதலைமுறை

Read more...

தமிழ்(ப்?)படம் விமர்சனம்

>> 01 February 2010





மூன்றே நாளில் முப்பத்தி மூனே முக்காலே அரைக்கால் ஹிட்ஸ்களை வாரி வழங்கிய சன்பிக்சர்ஸ் ஏவிஎம் ராடன் டிவி கலைஞர் ஷகிலா சாருநிவேதிதா ஜெயமோகன் அதிஷா வினோத் என் பக்கத்துவீட்டு ஆயா அனைவருக்கும் நன்றி.


(மேலே இருக்கும் வரிகள் அணைந்து அணைந்து டிஸ்பிளே ஆகுமளவுக்கு நம்முடைய விமர்சனம் ஹை பட்ஜெட் இல்லை அதனால் நீங்களே கண்ணை மூடி மூடி பார்த்து மகிழவும்)


தமிழ் இணைய வரலாற்றில் முதல்முறையாக ஐஎஸ்ஓ ஐஎஸ்ஐ பிசிஓ ஏபிசிடி ஐஜேகே தரச்சான்று முத்திரை அனைத்தும் பெற்ற நியாயமான உண்மையான விமர்சனம் இது என்று பங்களாதேஷ் அரசின் சான்றிதழ் பெற்றது.


முன்குறிப்பு ; தமிழ்த்திரைப்படம் ஓடும் மெலோடி தியேட்டரின் மூன்றாம் வகுப்பு பத்து ரூபாய் டிக்கட்டில் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு கையில் லேப்டாப் சகிதம் இந்த விமர்சனத்தை அடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் இணையத்தில் வெளியாகும் முதல் விமர்சனமும் இதுவே. ஏர்பெல் கனெக்சன் படுமட்டமாக இருப்பதால் இது நான்கைந்து நாட்கள் கழித்தும் வெளியாகலாம்.


பல நூறு வெற்றிப்படங்களை தயாரித்த தயாநிதி அழகிரி அசத்தல் நாயகன் கலியுக கர்ணன் பெரிய தளபதி வைஸ் கேப்டன் மிர்ச்சி சிவா நடிக்கும் படமென்பதாலும் படத்துக்கு ஆறுகோடி தமிழர்கள் பத்து கோடி தமிழ் பிளாக்கர்கள் பதினைந்து கோடி டுவிட்டர்கள் இதுதவிர சில கோடி கீளினர்கள் பல லட்சம் டிரைவர்கள் என பல ஆயிரம் கோடி தமிழ் மக்களின் பயங்கரமான காட்டுத்தனமான முரட்டுத்தனமான எதிர்பார்ப்புக்கு பின் இந்த படம் வெளியாகியுள்ளது. என் எதிர்பார்ப்புகள் முக்கியமல்ல, நமக்கு விமர்சனம்தான் முக்கியம். அதனால் படம் எக்கேடு கெட்டுப்போனாலும் நாசமாக போனாலும் நல்லபடியாக சிறந்த விமர்சனம் செய்ய அருள்புரிய எல்லாம் வல்ல ஜிகிடானந்த பிரகஸ்பதி சுவாமிகளை வேண்டுகிறேன்.


இவ்வளவு எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்த படம் அதை பூர்த்தி செய்துள்ளதா? அதை இப்போதே சொல்லிவிட்டால் , அதிஷா அசத்தல் , கண்ணைமூடிக்கொண்டு ஏதாவது ஒரு வரியை காப்பி பேஸ்ட் செய்து அதிஷா டச் அல்லது அதிஷா நச் பிச் உச் அச் என தும்மிவிட்டு இதுவரை படித்த விமர்சனத்திலேயே இதுதான் சூப்பர் என்று உட்டாலக்கடியாய் பின்னூட்டமிட்டுவிட்டு ஓடிவிடுவீர்கள் என்று எனக்குத்தெரியும். படம் பார்க்கலாமா வேண்டாமா என்பதை பதிவின் ஏதாவது ஒரு வரிக்கு நடுவில் எழுதியிருப்பேன் , பதிவை நாலைந்து முறை படித்துவிட்டு நீங்களே தேடி கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.. போலவே அது இல்லாமலுமிருக்கலாம்.


வீராசாமி திரைப்படத்திற்கு பின் தமிழ்திரையுலகில் நல்ல திரைப்படங்களுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் நான் பொதுவாக தமிழ்ப்படங்களை பார்ப்பதில்லை. எப்போதாவது யாராவது ஓசியில் ஐநாக்ஸில் படம் காட்டினால் மட்டும் பார்ப்பேன். சமீபத்தில் அப்படித்தான் தளபதி நடிகரின் வேட்டைக்காரன் படத்திற்கு அவரது ரசிகர் ஓசி டிக்கட் பிளஸ் பாப்கார்ன் பிளஸ் இரவு சரக்கு பிளஸ் ஆட்டோ துட்டு ஐம்பது ரூபாய் கொடுத்து காட்டினார். இனிமேல் இது போன்ற ஆட்களிடம் சேரக்கூடாது என முடிவெடுத்துவிட்டேன். இதுபோன்ற தமிழ்ப்படங்களை பார்த்து விசிலடிச்சான் குஞ்சுகள் பாராட்டலாம். மேலோட்டமாக ஒரு பிரதியை அணுகுபவர்கள் மட்டுமே இந்த கண்றாவியையெல்லாம் ரசிக்க முடியும்.


அந்த மட்டமான தளபதி படம் பார்த்து பாதி படத்திற்கு மேல் பாத்ரூமிலேயே சரண்டைய வேண்டியிருந்தது.கடுமையான பேதி. அதனால் லத்தீன் அமெரிக்க இயக்குனர் பிஞ்சோசெருப்போ மற்றும் துடப்பக்கட்டோ விளக்கமாரோ போன்ற அறிவு ஜீவி இயக்குனர்களின் படங்களை மட்டுமே பார்த்து வருகிறேன். அதிலும் துடப்பக்கட்டோவின் படங்களின் நாம் காணும் பிரதிகள் பார்ப்பவனின் கண்களில் பல பிம்பங்களை உருவாக்கி அதிலிருந்து புறப்படும் சூட்சும வெளிச்சம்.. ச்ச்சே ச்சே உங்களுக்கு அதெல்லாம் புரியாது. அது புரிந்தால் என் விமர்சனத்தின் நான்காவது பாரா வரைக்கும் வந்திருக்க மாட்டீர்கள்.
தமிழ்ப்படத்தில் கதையே இல்லை. ஆனாலும் விமர்சனத்தில் முழுக்கதை திரைக்கதை வசனம் என நான்கு பக்கம் எழுதவேண்டும் என்பது இணைய வழக்கம். என்ன செய்வது விமர்சனம் எழுதும் போது இடைவேளை வரைதான் படம் ஓடியிருக்கிறது. அதனால் அது வரைக்குமான கதையை மட்டும் போட்டுவிடுகிறேன்.


ஒரு ஊரில் ஒரு ஆளு. அவருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. அதில் ஒன்றை ஒரு பாட்டி தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. அந்த பாட்டி அந்த பேரனை வளர்க்க ரோட்டுல வடை சுட்டு வித்துக்கிட்டு இருந்துச்சு.. அப்போ ஒரு ரவுடி காக்கா கும்பல் அந்த வடைய தூக்கிட்டு ஒடிருச்சு.. அப்போ கோபம் வந்த பேரன் காதலியோட டுயட் பாடினான். அப்புறம் வில்லன்கள் பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளா பிளானு படம் முடிகிறது. கதை தெரிஞ்சிருச்சா. இனி நீங்கள் தியேட்டரில் போய் படம் பார்த்தால் என்ன பார்க்காட்டி என்ன?


அதனால் கதையில்லாத திரைப்படம் எடுத்த இயக்குனர் கழிவறையில் அமர்ந்து கொண்டாவது கதையை யோசித்திருக்கலாம். மகா திராபையான திரைக்கதை. இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஏற்கனவே பல ஆயிரம் முறை அரைத்த மாவையே மீண்டும் அரைத்திருக்கிறார். துவைத்த அதே துணியை துவைத்திருக்கிறார்கள். இதற்கு அரசி சீரியல் பார்க்கலாம். மிக அருமையான சீரியல். சிறந்த சீரியல். (ராடன் வெப்சைட் காரங்க எப்படியாவது இதை படிச்சிருங்கப்பா! )


ஹீரோ சிவாவிற்கு நடிக்கவே தெரியவில்லை. குரலும் சரியில்லை. நடக்கவே தெரியவில்லை. அவருக்கு ரெண்டு கால் இருப்பதே வீண். பாடி லேங்குவேஜ் ரொம்ப வீக். ஜட்டி லேங்குவேஜாவது நன்றாக பண்ணியிருக்கலாம். சிவா நீங்கள் பேசாம முன்னால் மேய்த்துக்கொண்டிருந்த அதே மாட்டையை மேய்க்கலாம். அல்லது ஆட்டை மேய்க்கலாம். நடிப்பெல்லாம் சரியாக வராது. மர்லன் பிராண்டோ,அல்பசீனோ,நிகலொஸ் கேஜ் , தேங்கா பஜ், வெங்காயபோன்டோ போன்ற நடிகர்களின் பாதிப்பு இருக்கிறது. இது தமிழ்சினிமாவிற்கு நல்லதல்ல. இவர் இன்னொரு படம் நடித்தால் இப்படிப்பட்ட நடிகர்களிடமிருந்து ஆண்டவனால் கூட தமிழ்சினிமாவை காப்பாற்ற முடியாது.


ஹீரோயின் ஒல்லியாக இருக்கிறார். இன்னும் சதைபோட்டால் நன்றாக இருக்கும். வில்லன் முறைக்கிறார். அடிவாங்குகிறார். இன்னும் பெட்டராக பண்ணியிருக்கலாம்.
கேமரா.. என்ன எழவு படமெடுக்கிறாங்க. ஒரு காட்சியில் ஹீரோ பேசுகிறார் அவரது மூஞ்சிக்கு நேராக கேமராவை வைக்கின்றனர். அங்கேயா வைப்பது இயக்குனருக்கு கொஞ்சமாவது மூளை வேண்டாமா எப்படிப்பட்ட காட்சியில் நானாக இருந்திருந்தால் கொஞ்சம் கீழே இறக்கி வைட் ஆங்கிளில் காலுக்கு கீழேயோ அல்லது காலை விரித்து நடுவில் குத்தி வைத்திருப்பேன்.


இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது. பிண்ணனி இசையில் மிரட்டியிருக்கிறார். அதிலும் ஹீரோ குச்சிஐஸ் சாப்பிடும் போது அதிரடியாக ஒரு இசை வருகிறதே , மயிர்க்கால்கள் கூச்செரிகின்றன. அவ்வ்வ்வ் என்ன பழையராஜா , பி.ஆர்.பர்மான் அவங்க ஒரு மண்ணாங்கட்டி , தமிழ்சினிமாவிற்கு கிடைத்துவிட்டது ஒரு சிங்கக்குட்டி (அதிஷா டச்!)


மற்றபடி தியேட்டரில் விற்றுக்கொண்டிருந்த பாப்கார்னில் காரமில்லை. இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாம். பாத்ரூமில் தண்ணி வரவில்லை. படத்தில் மறைந்திருக்கும் குறியீடுகள் பலதையும் பாத்ரூமில் தேடினேன். நிறைய குறி யீடுகள் பாத்ரூம் சுவரில் வரைந்து வைத்திருந்தனர். படத்தில் இது தவிர பல குறியீடுகளை காண முடிகிறது. ஏபிசிடி அஆஇஈ சிலுவை 786 பட்டை நாமம் என பல குறியீடுகள் வருகின்றன. இது பனுவலியலின் அராஜகத்திற்கு எதிரான பதிவுகள். அப்படினா என்ன என்று கேட்க கூடாது எனக்கும் தெரியாது. படத்தில் மிக நுணுக்கமாக பல நுண்ணரசியல்கள் இருக்கிறது. அதை குறித்து தனியாக தமிழ்ப்படம் என்னும் பார்ப்பனீய திராவிட கம்யூனிச பாஸிஸ மாவோயிச மண்ணாங்கட்டியிச மலம் என்றொரு பதிவிட எண்ணியுள்ளேன். மறக்காமல் வந்து அதையும் படிக்கவும்.


இறுதியாக விமர்சனம முடிவில் பஞ்ச் வைக்க வேண்டுமே..


தமிழ்ப்படம் – பப்படம் அல்லது வப்படம்.. ப்படம்..படம்.டம்.டும் 


ஆங்கிலத்திலும் பஞ்ச் வைப்பது லேட்டஸ்ட் டிரெண்ட் , நல்ல வேளை எனக்கு ஆங்கிலம் தெரியாது.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து தமிழ்மணம் தமிழிஷ் இங்கிலீஷ் மலையாளிஷ் தெலுங்குமணம்லு இந்தியிஷ் பிரஞ்சுமணம் போன்ற திரட்டிகளில் மைனஸ் வாக்குகள் போட்டு பிரபலமாக்கவும் என்று கையை காலாக நினைத்து கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன்.


*******


படத்தப்பத்தி ஒன்னுமே சொல்லலையே.. .. எந்த படத்தபத்தி விமர்சனம் எழுதிட்டுருந்தேன்..!

Read more...

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP