Pages

20 June 2011

லீவ் லெட்டர்




விடுநர்

டி.சுரேஷ்குமார்,
விற்பனை பிரதிநிதியாளர்
மகிமை சொல்யூசன்ஸ்
சென்னை-18


பெறுநர்

மேலாளர்
விற்பனை பிரிவு
மகிமை செல்யூசன்ஸ்
சென்னை -18


பொருள் – விடுப்பு வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா,

கடந்த ஆறு ஆண்டுகளாக நம் மதிப்பிற்குரிய நிறுவனத்தில் நான் நேரத்தைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். இக்கால கட்டத்தில் நான் அதிகமாக விடுப்பு கோரியதுமில்லை, மிக குறைந்த நாட்களே என் திருமணத்திற்காக மட்டும் மூன்று நாள் விடுப்பில் சென்றுள்ளேன். தற்சமயம் வேறு வழியின்றி விடுப்பு கோரி இந்த கடிதத்தை பெருமதிப்பிற்குரிய உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

உங்களுக்கு தெரியாததில்லை. ஏற்கனவே நம்முடைய நியூஸ் சேனல்களும் செய்தித்தாள்களும் நாளை காலை பதினோரு மணிக்கு ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடப்போவதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதை உறுதிப்படுத்துவதைப்போல உலகம் முழுக்க ஆங்காங்கே கடல்சீற்றமும் எரிமலை வெடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. அதை நீங்கள் அறிந்திருந்தும் இதோ இப்போது மணி மாலை ஐந்தாகிவிட்டது இதுவரை விடுமுறை அறிவிக்கவில்லை என்பதால் நாளை எப்போதும்போல வேலைக்கு வரவேண்டும் என்பதை உணர்கிறேன்.

உலகம் மொத்தமாக அழிவதால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. சொல்லப்போனால் மகிழ்ச்சிதான். ஆனால் என்னுடைய வீட்டில் என் மனைவியும் குழந்தையும் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்களை இதுவரை நான் எங்குமே அழைத்து சென்றதில்லை. என்மீது அளவிடமுடியாத காதலை வைத்திருக்கும் என் மனைவியோடு பத்து நிமிடத்திற்கு மேல் பேசியதேயில்லை. எப்போதும் வேலை வேலை என்றே இருந்துவிட்டேன். இந்த நிலையில் நாளை உலகம் அழிந்து அதில் மாண்டுபோகும் அனைவரோடும் என் மனைவியும் குழந்தையும் இறந்துபோனால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையாது. அதனால் நாளை அரைநாளாவது அவளோடு செலவிட முடிவு செய்துள்ளேன். நாளைக்கு உலகம் உண்மையிலேயே அழிந்து போனால் இந்த விடுப்பு விண்ணப்பத்திற்கு வேலையில்லை.

ஆனால் ஒரு வேளை நாளை மதியம் பதினொரு மணிக்கு உலகம் அழியாமல் போனால் திங்கள் கிழமை எப்போதும் போல நிச்சயமாக வேலைக்கு வந்துவிடுவேன் என்பதையும் உளமாற உறுதியுடன் கூறுகிறேன். எனவே தயை கூர்ந்து உங்கள் அளவிடமுடியாத கருணையோடு ஒரு நாள் விடுப்பை அளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இக்கடிதம் கண்டு கோபம் கொண்டு என்னை வேலையை விட்டு மட்டும் நீக்கிவிட வேண்டாம் என்றும் வேண்டி விரும்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

உண்மையுள்ள ஊழியன்

டி.சுரேஷ் குமார்.

11-12-2012


(நன்றி - தினகரன்)