Pages

31 December 2011

நண்பர்களின் ஆண்டு







மீண்டும் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஆண்டும் எதையும் சாதிக்கவில்லை. அடுத்த ஆண்டாவது எதாவது சாதனைகள் செய்யவேண்டும் என்கிற லட்சியவெறி மட்டும் ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் சடங்கு போல எஞ்சியிருக்கிறது.


எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நண்பர்களின் எண்ணிக்கை 2011ல் கணிசமாக அதிகரித்திருக்கிறது. பத்திரிகை பணி தொடர்பாக சந்தித்த நண்பர்கள் போக ஃபேஸ்புக்,டுவிட்டர் என புதிய தளங்களிலிருந்து நிறைய நிறைய நண்பர்கள்.


நிறைய வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் இளைப்பாற நல்ல இடமாக டுவிட்டரும் ஃபேஸ்புக்கும் இருந்தன. அங்கே பலரோடு வேடிக்கையாக சண்டைகள் போட்டாலும் புதிய நட்புகளுக்கான இடமாக அமைந்தது. தொடர்ந்து நம் வலைப்பூவிலும் மாதத்திற்கு ஐந்து கட்டுரைகள் என்கிற அளவில் எழுதியே வந்துள்ளேன். முடிந்தவரை சினிமா தொடர்பான விஷயங்களை தவிர்த்து புதிதாக எழுத முயற்சி செய்துள்ளேன். சீமானை விமர்சித்து எழுதப்பட்ட பதிவுக்காக நிறைய அனானி ஆபாச போன் கால்களை சந்திக்க நேர்ந்தது பெருமையாக இருந்தது. நம் தளத்தில் எழுதிய வாகைசூடவா விமர்சனத்தின் வரிகள் அப்படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் உபயோகிக்கப்பட்டது இன்னும் மகிழ்ச்சி.


சென்னையை சேர்ந்த டுவிட்டர் நண்பர்கள் இணைந்து வாராவாரம் கிரிக்கெட் ஆடியதை மறக்கவே முடியாது. அடுத்த ஆண்டும் கிரிக்கெட் ஆட முயற்சி செய்ய வேண்டும். கிரிக்கெட் என்பதையும் தாண்டி அது சின்ன வயது சிநேகித உணர்வுகளை மீட்டுக்கொடுத்துள்ளது. முன்னெடுத்து சென்ற உருப்படாதது நாராயணனுக்கும் மச்சி கார்க்கிக்கும் நன்றி.


விகடனின் வலைபாயுதே பக்கத்தில் தொடர்ந்து வெளியான என்னுடைய ஏகப்பட்ட டுவிட்டுகளும் ஸ்டேடஸ்களும் பலரையும் கவர்ந்ததாக அறிகிறேன். அதை படித்துவிட்டு தொடர்ந்து பாராட்டும் வாழ்த்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

இந்த ஆண்டு நிறைய புத்தகங்கள் வாசிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 500க்கும் மேல் திரைப்படங்கள் பார்த்திருப்பேன். பைத்தியகாரன் சிவராமன் நிறைய புத்தகங்கள் மற்றும் சிடிக்களை தொடர்ந்து கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. இலக்கியம் குறித்து தொடர்ந்து புட்டிப்பால் ஊட்டிவரும் மச்சிசார் மாமல்லன் மற்றும் ஜ்யோவ்ராமின் இனிய நட்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. காமிக்ஸ் விஷ்வா மற்றும் பின்தொடரும் நிழலான தோழர் யுவகிருஷ்ணாவின் தயவில் நிறைய காமிக்ஸ்கள் படித்தேன்.


பயணங்கள் அதிகமில்லாத ஆண்டாக இது அமைந்தது. யானைகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைக்காக மேற்குதொடர்ச்சி மலையெங்கும் சுற்றியது தவிர பெரிய பயண அனுபவங்கள் ஏதுமில்லை. அடுத்த ஆண்டாவது நிறைய சஞ்சாரம் செய்ய நினைத்திருக்கிறேன்.


பல ஆண்டு கனவான சொந்தமாக ஒரு கேமரா வாங்கவேண்டும் என்கிற ஆசை நிறைவேறியது. டிஜிட்டல் கேமராதான்.. (எஸ்எல்ஆர் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி.) அதை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட படங்கள் எடுத்து தள்ளினாலும் சில படங்கள் பலரையும் கவர்ந்தது ஊக்கமளித்தது, அதிலும் புகைப்பட கலைஞர் ஜீவ்ஸ் கிருஷ்ணனின் தொடர்ச்சியான புகைப்படக்கலை குறித்த தகவல்களும் அவருடைய போட்டோகிராபி இன் தமிழ் வலைப்பூவும் நிறையவே உதவின. அவருக்கு நன்றி. முதல் முறையாக என்னை மேடையேற்றி அழகுபார்த்தனர் ஈரோடு பதிவர்கள்.


சீமான்,விஜய்,அன்னாஹசாரே,கருணாநிதி,ஜெயலலிதா,மன்மோகன்,சோனியா,விஜயகாந்த் என பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் நமக்கு இணையத்தில் பொழப்பு ஓடுகிறது! நன்றி சொல்ல இன்னும் நிறைய பேர் இருந்தாலும் முக்கியமான ஒரு சிலர் அதில் உண்டு.


தீபாவளிக்கு முதல் நாள் ஒரு போன்கால்! ‘’அண்ணா வணக்கம் நான் இருளாயி பேசறேன்’’ என்றது எதிர்முனை. பேரைச்சொன்னதும் உடனே நினைவுக்கு வந்துவிட்டது. பிளஸ்டூ தேர்வில் நர்சிங் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி இருளாயி. படிக்க வசதியில்லாமல் செங்கல் சூளையில் செங்கல் சுமந்துகொண்டிருந்தவரை பழனிக்கே போய் பார்த்து அவரை பற்றி நான் பணியாற்றும் பத்திரிகையிலும் நம்முடைய இணையதளத்திலும் எழுதியிருந்தோம். அந்தப்பெண்தான் செல்போனில் அழைத்திருந்தாள் ‘’சொல்லும்மா! எப்படி இருக்க, தம்பிங்க நல்லாருக்காங்களா? ஸ்கூல் போறாங்களா?, குடிசைவீட்டை மாத்திட்டீங்களா?’’ என கேள்விகளை அடுக்கினேன்.




‘’அண்ணா இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேங்ண்ணா. கிட்டத்தட்ட ஒருலட்ச ரூபாய் வரைக்கும் உதவிகள் கிடைச்சிருக்குண்ணா.. எனக்கு உதவி செஞ்சவங்க யார்னு கூட தெரியல , அவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணும் தெரியலண்ணா.. இப்போ நான் மட்டும் படிக்கல அந்த தொகையால செங்கல் சூளைக்கு போய்கிட்டிருந்த என் ரெண்டு தம்பிகளும் கூட படிக்கறாங்கண்ணா’’ என நெகிழ்ச்சியாக சொன்னாள். எனக்கும் கூட இப்போது வரைக்கும் தெரியாது ஆஸ்திரேலியாவிலிருந்தும் கனடாவிலிருந்து ஐரோப்பாவிலிருந்து இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் ஏகப்பட்ட பேர் தங்களால் முடிந்த உதவிகளை அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அவளுக்கு கல்லூரியில் சீட் தர எத்தனையோ நண்பர்கள் முன்வந்தனர். ஆனால் விடாப்பிடியாக அரசுக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். கோவையிலிருந்து ஒருநண்பர் அவருக்கு மாதந்தோறும் ஒரு சிறுதொகையை அனுப்பிவருகிறார்.


இதுவரை இதைவிடவும் பெரிதாக மகிழ்ந்த நெகிழ்ந்த கண்ணீர் விட்டழுத சம்பவம் எதுவுமே எனக்கு நினைவில்லை. உதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் என்னால் ஒரு நன்றியைக்கூட சொல்லமுடியவில்லை என்கிற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அப்பெண்ணுக்கு உதவி செய்தவர்கள் இதை படிக்க நேர்ந்தால் அந்த நல்ல உள்ளங்களுக்கு என் சார்பிலும் இருளாயியின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.


இந்த ஆண்டில் என்னென்னவோ நல்லதும் கெட்டதும் நடந்திருந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த 2011 மட்டும் இருளாயியாலும் அவருக்கு உதவி செய்த நண்பர்களாலும் நிச்சயமாக நினைவிலேயே இருக்கும்.



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்