Pages

28 July 2011

தெய்வத்திருமகள்




ஊர்பக்கம் இப்படி சொல்வாங்க.. ஒருத்தன் கஷ்டப்பட்டு நாய்படாத பாடுபட்டு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவானாம்.. பக்கத்துவீட்டுக்காரன் ஈஸியா அவள தள்ளிக்கிட்டு போவானாம்! ஊரே ஒன்னு கூடி கல்யாணம் பண்ணவன கையாலாகதவன்னு திட்டுமாம். தள்ளிகிட்டு போனவன கில்லாடிடானு பாராட்டுமாம். அதுமாதிரிதான் இருக்கிறது தமிழ்சினிமா போகிற போக்கு! ஹாலிவுட்லயோ கொரியாவுலயோ ஈரான்லயோ எவனோ கஷ்டப்பட்டு ஒரு படம் எடுப்பானாம் அவனுக்கு நன்றி கூட சொல்லாம கதைய திருடி தமிழ்ல பேர் வச்சு காஸ்ட்யூம் கூட மாத்தாம படம் எடுப்பாய்ங்களாம்! அடடா என்னதான் திருட்டு பொருளா இருந்தாலும் எம்பூட்டு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கான் பாருயா.. அதுக்காக அவன பாராட்டணும்யானு ஒரு கோஷ்டி வேற பீ..பீ னு இதுக்கு ஒத்து ஊதிகிட்டு திரியுமாம். இதுல அந்த ஊர் படத்தையெல்லாம் தமிழ்மக்களுக்கு காட்டணும்ல.. காட்டணும்னா டப்பிங் பண்ணி காட்டுங்களேன்.. அட்லீஸ்ட் நன்றி போட்டாவது காப்பியடிச்சி தொலையறுத்துக்கென்ன கேடு!

பரவால்ல ஏதோ பண்ணிட்டாய்ங்கன்னு விட்டா.. திருட்டு கோஷ்டி ஒன்னா கூடி டிவிக்கு டிவி பேட்டிவேற குடுக்குது.. இந்த படத்துக்கு திரைக்கதை அமைக்க மூணுவருஷம் ரூம்போட்டு யோசிச்சோம் தெரியுமான்றார் படத்தோட இயக்குனரு.. படத்துல பலூன் வாங்கிட்டு போறத கூடவா காப்பியடிப்பாங்க.. இந்த கேரக்டரா நடிக்கறதுக்காக பலநாள் பல குழந்தைகளோட வாழ்ந்தேனு வாய்கூசாம சொல்றாரு படத்தோட ஹீரோ.. ஒரிஜினல் படத்துல வாய உள்ள இழுத்து நடிச்சா டுபாக்கூர்லயும் அப்படியே நடிக்கணுமா.. என்னங்கடா நாடக கம்பெனியா நடத்தறீங்க.. இல்ல தமிழனுங்க பூராப்பயலும் முட்டாப்பயலாகிட்டானா என்ன? இதுக்கும் மேல ஒருபடி போயி விகடன் மாதிரி பத்திரிகைகள் 50 மார்க் குடுத்து பாராட்டி.. இந்த படத்தின் இயக்குனர்தான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளினு பாராட்டறதுக்கெல்லாம் எந்த சுவத்துல போய் முட்டிக்க!

அப்படீனா கஷ்டப்பட்டு யோசிச்சி ஒரு கதை ரெடிபண்ணி அதுக்கு திரைக்கதை எழுதி புரொடீசர் புடிச்சி நாய்பேயா அலைஞ்சு சொந்தமா படம் எடுக்கறவன்லாம் கேனப்பய.. பைஞ்சுரூவாவுக்கு பர்மா பஜார்ல டிவிடி வாங்கி அதை சுட்டு படமா எடுக்கறன் புத்திசாலி! கோடம்பாக்கத்துல ஃபுல் ஸ்கிரிப்டோட புரோடியூசர் கிடைக்கமாட்டாங்களானு தேடி அலையற ஆயிரக்கணக்கான பேரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட ரெடிபண்ணிவச்சுகிட்டு பைத்தியம் புடிச்சி திரியறான். அவனுக்குலாம் இனிமே என்ன தோணும் மச்சி ஏன் இவ்ளோ கஷ்டபட்டு கதையெல்லாம் யோசிக்கணும் டிவிடிய வாங்கு ஸ்கிரிப்ட்டு ரெடி அதுதான் வொர்க் அவுட் ஆவுது.. அப்பதான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளியா ஆக முடியும்னு தோணுமா தோணாதா!

ஐயாம் சாம்னு ஒரு படம். அதை எவன் எடுத்தானோ அவன் இந்தப்படத்தை பார்த்தான்னா ரொம்ப சந்தோசப்படுவான். பாதிகதைதான் திருடிருக்காங்க.. மீதிகதை இவங்களே எழுதிட்டாங்க அதுவரைக்கும் சந்தோசம்னு! அந்த பாதிக்கதைதான் படத்தோட சறுக்கலே.. நீட்டி முழக்கி.. ஓவர் சென்டிமென்ட்ட புழிஞ்சி நடுவுல அனுஷ்கா கால்ஷீட் இருக்குனு ஒரு டூயட்ட வேற போட்டு.. ரொம்ப கடுப்பேத்தறாங்க மைலார்ட்.

என்னதான் காப்பி பேஸ்ட்டா இருந்தாலும் படத்தோட ஆறுதலான அம்சம் ஒன்னு மியூசிக். இன்னொன்னு அந்த குட்டிப்பாப்பா! பாப்பா அவ்ளோ அழகுனா மியூசிக் கதறி அழவைக்குது! இரண்டுக்காகவும் இந்த கொடுமைய சகிச்சிகிட்டு பார்க்கலாம்னுதான் தோணுது. ரொம்ப அழகான கதைதான்.. அருமையான நடிப்புதான்.. சூப்பரான காட்சிகள்தான்.. என்ன செய்ய திருட்டுமாங்காவுக்கு ருசியதிகம்தான். ஆனா இது மாங்கா கிடையாதே!

மத்தபடி இதுமாதிரி இன்னமும் தமிழ்சினிமா ரசிகனை ஏமாத்தலாம்ன்ற ஐடியாவ விஜய்மாதிரி டைரக்டர்கள் கைவிடணும். ஏன்னா இப்பலாம் எல்லா தமிழ்சேனல்லயும் ஹாலிவுட் படத்துலருந்து அயல்சினிமா வரைக்கும் தமிழ்ல டப் பண்ணி மக்கள் கதற கதற தினமும் காட்டறாய்ங்க.. மைன்ட் இட்!

இந்த காப்பி பேஸ்ட் படத்துக்கு இதுபோதும்னு நினைக்கிறேன்!

14 July 2011

ஆட்டோ பிக்சன் 1.0




வலைப்பதிவர்களைப் போலவே உலகில் எது நடந்தாலும் அதைப்பற்றி ஒரு கருத்தும் விஸ்தீரமான வியாக்கியானமும் வைத்திருப்பவர்கள் ஆட்டோக்காரர்கள். சில சமயங்களில் நம் தமிழ் வலைப்பதிவர்களையும் விஞ்சுகிற கருத்துகளை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். அது உண்மைத்தமிழனையும் யுவகிருஷ்ணாவையும் ஜாக்கிசேகரையுங்கூட அதிர்ச்சியடைய வைக்க வல்லவை.

லஞ்ச ஊழல் பற்றி பேசினால் தீப்பொறி பறக்கும். அரசின் அடாவடி பற்றி சொன்னால் எரிமலை வெடிக்கும். காவல்துறையின் அட்டுழியங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.. அவர்களே கதைகளாக கொட்டுவார்கள். ‘’நாடு ரொம்ப கெட்டு போயிடுச்சி சார்.. மக்களே ஊழல்வாதிங்களா ஆகிட்டாங்க..சுயநலவாதி ஆகிட்டாங்க, லஞ்சம் குடுக்கறது ஏதோ ஃபேஷன் ஆகிட்ச்சு, பெட்ரோல் விலை ஏறிடுச்சி எவனுக்குமே அதுபத்தி கவலையில்ல’’ என்றெல்லாம் உதார் வுடுவதில் ஆட்டோ ஓட்டுனர்கள் பிரசித்தி பெற்றவர்கள்.

வேண்டுமானால் ஆட்டோவில் போகும்போது ‘’சார் இந்த பத்மநாபசாமி கோயில்ல.. ஜெயலலிதா பங்கு கேட்டாக்க என்ன?‘’ என்று ஆரம்பித்து வைத்தால் போதும், சாலையை பார்க்காமல் கழுத்து சுளுக்குமளவுக்கு திரும்பி திரும்பி.. ஆமா சார் எல்லா நம்ம சொத்து. தமிழ்நாட்டு நகை.. அத்தனையும் இந்தியாவுக்கு குடுத்தா.. நாட்டுல பஞ்சம் போயிடும்.. சீனாவையே தோற்கடிச்சிரலாம் ரயில் வுடலாம் பிளைட் உடலாம் , உலக வங்கி கடனை அடைச்சிரலாம் , தமிழ்நாட்டுக்கும் அதில பங்கிருக்கு என்கிற ரேஞ்சில் பல கருத்துகளை கொட்டுவதில் வல்லவர்கள் நம்மூர் ஆட்டோக்காரர்கள்.

உலக உத்தமர்கள் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில்தான் ஆட்டோ ஓட்டுகிறார்களோ என்கிற ஐயம் கூட எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு!

ஆனா பாருங்க.. இவர்களுடைய ஆட்டோக்கள் எதிலும் மீட்டர் என்கிற வஸ்து நிச்சயமாக இருக்காது. அரைக்கிலோமீட்டர் தூரம் போகவேண்டுமென்றாலும் , தலையை சொறிந்துகொண்டு நாணிக்கோணியெல்லாம் கேட்காமல் மனசாட்சியே இல்லாமல் நெஞ்சம் நிமிர்த்து அச்சம் தவிர்த்து அநியாயமாக காசு கேட்பதில் மட்டும் சளைப்பதில்லை. குறிப்பாக ஆட்டோக்களுக்கு பின்னால் இவர்கள் போடுகிற கருத்து சிதறல்கள் உலக ஃபேமஸ். ஊழலை ஒழிப்போம்.. லஞ்சத்தை ஒழிப்போம் என்று தொடங்கி மரம்வளர்ப்போம் பயிர்வளர்ப்போம் ஒசாமா ஓழிக வரை விதவிதமான சுவாரஸ்யங்களுக்கு மட்டும் பஞ்சமிருக்காது.

அப்படித்தான் அண்மையில் திநகர் பகுதியில் ஒரு கருத்து குவியலை கண்டு மிரண்டு போனேன். ‘’ராமசந்திரா மருத்துவமனை ஊழியர்களுக்கு அன்பான வேண்டுகோள்! ஆண்டவனை கண்டதில்லை நாங்கள்.. ரஜினிதான் எங்கள் கண் கண்ட கடவுள், ஆண்டவனுக்கே மருத்துவம் பார்க்கிற பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அவரை காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை..’’ என இன்னும் நிறைய எழுதி பிளக்ஸ் பேனரில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டியிருந்தனர். அதை சிலமுறை கண்டு கடுப்பாகி புகைப்படமெடுக்க முயன்றும் முடியவில்லை. இப்போதும் திநகரில் அந்த போஸ்டர் ஒட்டிய ஆட்டோக்களை அடிக்கடி காணமுடியும்.

இவர்கள் பெரும்பாலும் ஸ்டான்டில் அமர்ந்துகொண்டு அன்றைய செய்தித்தாளையோ ஜூவியோ நக்கீரனோ ரிப்போர்ட்டரோ கையில் வைத்துக்கொண்டு மினி நீயா நானா.. அரட்டை அரங்கமெல்லாம் நடத்துவதை பார்க்கலாம். அதில் பல கம்யூனிச தோழர்களும் இருப்பதை காண முடியும். இதுபோல வேறெந்த தொழில் செய்பவர்களும் கூட்டாக அமர்ந்து கொண்டு உலக விஷயங்களை பற்றி விவாதிப்பதை பார்க்க முடியாது. அதுவே அவர்களுக்குள் இருக்கிற கருத்து கந்தசாமிகளை உசுப்பிவிடுபவையாக இருக்கலாம்.

நம் அன்றாட வாழ்வில் எதிலும் அரசியல் கலந்துபோன சூழலில் இப்போதும் எதிலும் இருக்கிற அரசியல் குறித்து ஆராய்கிற மனமும் அதைப்பற்றி பொதுவில் பேசுகிற ஞானமும் நேரமும் ஆட்டோக்கார்ர்களுக்கு வாய்த்திருக்கிறது. மிடில்கிளாஸ் மோரன்களுக்கு சம்பாதிப்பதற்கே நேரமில்லை.

ஒரு ஆட்டோக்கார நண்பரிடமே என்ன தலைவா ஊர்ல இருக்கற எல்லா நொனநாட்டியமும் பேசறீங்க ஆனா அநியாயமா காசு கேக்கறீங்களே என்று கேட்டேன். சென்னை மாதிரியான நகரங்களில் ஓடுகிற ஆட்டோக்களில் முக்கால்வாசி வாடகைக்கு ஓடுபவை.. ஒருநாள் வாடகை எழுநூறு ரூபாயிலிருந்து தொடங்குமாம். அது தவிர அவ்வப்போது டிராபிக் போலீஸிடம் சிக்கினால் தண்டச்செலவு நூறு இருநூறு.. நாள்முழுக்க மாங்கு மாங்குனு ஆட்டோ ஓட்டி அதில் எழுநூறுக்கு மேல் கிடைக்கிற வருமானத்தில்தான் குவாட்டர் கட்டிங் குடும்பம் குட்டியெல்லாம்... எல்லாரையும்போல அவர்களுடைய தவறுகளுக்கும் ஒரு காரணம் இருந்தது. இருந்துவிட்டு போகட்டுமே..

இதில் கவனிக்க வேண்டிய விஷயமொன்றுள்ளது. ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோகாரரிடம் வாயை கொடுத்துவிடக்கூடாது. அவர் சாலையில் கவனமில்லாமல் ஆர்வமிகுதியில் கருத்து சொல்ல முயன்று எங்காவது எதிலாவது முட்டி மோதிவிட வாய்ப்புண்டு! அரைநிமிட மகிழ்ச்சி ஆபத்தில் முடியலாம்.

இது ஒருபுறம் இப்படியிருக்க ஆட்டோக்காரர்களைப் போன்ற அற்புதமான நண்பர்கள் எங்குதேடினாலும் கிடைக்கமாட்டார்கள். அண்ணே.. என்றழைத்தால் உங்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவர்கள் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள். அன்போ கோபமோ எதுவாக இருந்தாலும் டிப்பர் லாரியில் அன்பை கொட்டுபவர்கள் இந்த ஆட்டோக்காரர்கள்.

மற்றபடி இந்த பதிவின் மூலம் நான் சொல்லவரும் கருத்தென்று ஒன்றுமில்லை. மேலே இருக்கிற படத்தில் நீங்கள் காணுகிற ஆட்டோக்காரர் எஸ்.பூபதியின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.

06 July 2011

ஆண்கள் ஜாக்கிரதை




அது ஒரு யாகூ காலம். யாகூ மெசேஞ்சர் பலராலும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்ட நாட்கள் அவை. யாகூவில் நிறைய குழுக்கள் இருக்கும் ஏதேதோ டாப்பிக்கில். குரூப் சாட்டிங்கூட நடக்கும். மகா மொக்கையான வெட்டி அரட்டைகள்தான். எங்களுடைய ஆர்வமெல்லாம் அங்கே ஏதாவது ஃபிகர் மடியாதா.. நம்மையும் திரும்பிப் பார்த்திடாதா என்பதுதான்..

அதற்கேற்ப பல நண்பர்களும் சொல்லும் காமங்கலந்த அஜால்குஜால் கதைகள் ஏராளமாக எங்கள் நட்புவட்டத்திற்குள் சுற்றிக்கொண்டிருக்கும்.. மச்சான் அவன் ஏதோ ஒருபொண்ணை சாட்டிங்லயே புடிச்சி போன வாரம் மருதமலைக்கு கூட்டிட்டு போயி ஒரே ஜாலியாம், நேத்து ஒரு ஃபிகரு வெப்காமரால ஒரே நாக்ரதினா தீரனானா.. மச்சி பாரின்லருந்து ஒரு பொண்ணு கட்டிகிட்டா உங்களத்தான் மாமா கட்டிக்குவேனு ஒரே அடம் என்று இவர்கள் சொல்கிற கதைகள் எங்களை வெறியேற்றும்.

விடலைப்பையனான எனக்கு அந்தகதைகளே உணர்ச்சிகளை தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தன. இதற்காக கஷ்டப்பட்டு காசு சேர்த்து இன்டர்நெட் சென்டர் போய் கிடைக்கிற ஒருமணிநேரத்தில் எப்படியாவது ஒரு ஃபிகரை மடக்கிவிடவேண்டும் என்கிற வெறியோடு திரிந்த காலங்கள் உண்டு.

மெய்யுலகில்தான் எதுவுமே சிக்கவில்லை என்கிற பூர்வஜென்ம கர்மா.. மெய்நிகர்உலகிலும் தொடர்ந்தது. இவர்கள் சொல்லுகிற கதைகளெல்லாம் கட்டுக்கதைகளோ என நினைக்கவும் வைத்தது. இணையம் முழுக்க வெறும் ஆண்களே நிரம்பிவழிந்தனர். சரி பெண்பெயரில் சிலகாலம் நல்ல பிள்ளையாக உலவுவோம் என யாகூ மெசேஞ்சரில் ஒரு ஐடி உருவாக்கி சுற்றிக்கொண்டிருப்பேன். சில பெண்களோடு நல்ல பிள்ளையாக பேசுவேன்.. என்னுடைய கருமாந்திர கிரகம் அந்த ஐடியும் ஏதோ ஒரு பையனுடையதாக இருந்து தொலைக்கும்..

இது பல நாள் நீடித்த கதைதான். இருந்தாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. சில பையன்கள் அல்லது ஆண்கள், பெண் என்று நினைத்து என்னோடு பேச ஆரம்பித்த போதுதான்.. அட ஃபிகர் உஷார் பண்றதவிட இந்த கேம் நல்லாருக்கே என தோன்றியது. பேச ஆரம்பித்தேன். எத்தனை ஆண்கள்.. இந்த இணையவெளியில் ஏதாவது ஒரு பெண் கிடைக்கமாட்டாளா என்கிற வெறியோடு சுற்றித்திரிவதை உணர முடிந்தது.

உன் அட்ரஸ்குடுடா செல்லம்.. உனக்கு மொபைல் போன் வாங்கி அனுப்பறேன்.. பட்டுபுடவை வேணுமா.. அமெரிக்கன் சாக்லேட்ஸ் என்றெல்லாம் பேசுகிற ஆண்களும் உண்டு. அட்ரஸ் கொடுத்து ஆட்டையை போட்டவர்கள் கதைகளும் உண்டு. சிலர் மிகவும் மோசமானவர்கள்.. தன்னுடைய வெப்கேமராவை ஆன் செய்து ஏடாகூடமாக எதையாவது காட்டி கடுப்பேத்துவார்கள். அதையெல்லாம் பார்த்து தொலைக்க வேண்டிய கொடுமைகளும் அரங்கேறும். சிலர் பேங்க் அக்கவுன்ட் நம்பர் குடு எவ்ளோ பணம் வேணும்னாலும் போடறேன்.. ஆனா ஒரே ஒருமுறை என்னோட போன்ல பேசு போதும் என கெஞ்சுவதையும் பார்த்திருக்கிறேன்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் யாகூ மெசேஞ்சர் பயன்படுத்துபவர்கள் மாறிவிட்டனர். ஆர்குட் கூட அழிந்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டுவிட்டரும் இணையத்தை தன் பிடியில் வைத்திருக்கின்றன. ஆனால் இன்னமும் ஒரே ஒரு பெண் கிடைக்கமாட்டாளா என்கிற ஏக்கத்தோடு.. இல்லை இல்லை... வெறியோடு அலைகிற ஆண்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இப்போதும் அது கணிசமாக அதிகரித்துக்கொண்டேதானிருக்கிறது.

சொல்லப்போனால் அப்போதிருந்த நிலையை காட்டிலும் இப்போது ஐடித்துறையின் வளர்ச்சியோ என்ன கருமாந்திரமோ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காமவெறியோடு கையில் நிறைய பணத்தை வைத்துக்கொண்டும் அலைகின்றனர் இணைய ஆண்கள்! விடலைப்பையன்கள் கூட அறியாத வயசு புரியாத மனசு பரவாயில்லை.. விட்டுத்தொலைக்கலாம். ஆனால் திருமணமான ஆட்களும் வயசான பெரிசுகளும் கூட இதுமாதிரியான லீலைகளில் ஈடுபடுவது சமயத்தில் கடும் எரிச்சலை கிளப்பிவிடுகின்றன. இணையத்துக்கு வெளியே எவ்வளவு பெரிய உலகமிருக்கிறது. எத்தனை கோடி பெண்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு முகந்தெரியாத மெய்நிகர் உலகத்தில் ஏதாவது சிக்குமா என நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு அலைவதைப்பற்றி என்னதான் சொல்வது!

இதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பது ஆரோக்யமானதா அல்லது ஆபத்தானதா என்று தெரியவில்லை. போலியான ஐடியை கிரியேட் செய்ய வேண்டியது. யாராவது ஏமாந்த சோனகிரி கிடைத்தால் ஆசைவார்த்தை பேசி மயக்க வேண்டியது.. ஓசியில் கிடைத்தால் யாருக்குத்தான் கசக்கும்! மிஸ்டர் சோனகிரியும் ஆசைவார்த்தைக்கு மறுவார்த்தைகளை கொட்டி வைப்பார். பிரபலமானவர்கள் என்றால் சாட் ஹிஸ்டரியை வெளியிட்டு அவருடைய கேரக்டரை டேமேஜ் செய்து அசிங்கப்படுத்தலாம். பிரபலமில்லாதவர் என்றால் காதல் மொழி பேசி.. செல்போனில் அழைத்து பேசி (இப்போதெல்லாம் கொரியன் மொபைலிருந்தால் எந்த குரலிலும் எதிர்முனையில் இருப்பவரிடம் பேசமுடியுமாம்).. எனக்கு கொண்டைல ஆப்பரேசன் தொண்டைல ஆப்பரேசன் என்று சொல்லி பணம் கறக்கலாம்.

ஃபேஸ்புக்கில் இதுமாதிரியான கதைகள் மெகாசீரியல்கள் போல தினமும் ஒன்று எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவன் என்னை கையபுடிச்சி இழுத்திட்டான்.. அவ என்னை ஏமாத்திட்டா.. காசு புடுங்கிட்டாங்க.. பிளாக்மெயில் பண்றாங்க, கொலைமுயற்சி என தொடர்கிறது இக்கதைகள். நேற்றும் கூட ஒரு பெண் ஆசைவார்த்தை பேசியே ஒருகோடி ரூபாய் வரை உஷார் பண்ணியதாக இணையதள செய்தியொன்று சொல்கிறது!

ஒருபக்கம் இந்த மோசடிபேர்வழிகளால் இணைய மன்மதன்களுக்கு ஆப்புவிழுந்தாலும்.. இன்னொரு பக்கம் என்னைப்போல உங்களைப்போல அப்பாவிகளும் இதனால் பாதிக்கப்படுகிற அபாயமுண்டு. என்னதான் நாம் ஏகப்பத்தினி விரதர்களாகவும் மகாத்மாக்களாகவும் இருந்தாலும் ஒரு பெண்ணே வலிய வந்து பேசினால் யாருக்குத்தான் சறுக்காது.. விசுவாமித்திரருக்கே சறுக்குச்சே? அதனால் இந்த இணையபெருவழியில் ஆண்கள் தங்களுடைய கற்பையும் பர்சையும் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி சர்வ ஜாக்கிரதையாக இருப்பதுதான். யாரிடம் பேசுவதாக இருந்தாலும் ஒருதடவைக்கு நான்கு முறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

பெண்களை பாதுகாக்க பல பாதுகாவலர் இணையத்தில் உலவுவதால், ஆண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. அவர்களுக்கான எச்சரிக்கை குரலாக பொதுநலன் கருதி இப்பதிவு இங்கே எழுதப்பட்டுள்ளது. ஏனென்றால் நாளைவரும் இணைய ஆடவர்சந்ததிகள் இதைபடித்து தெளிவாக நடந்துகொள்ள ஏதுவாக இருக்குமில்லையா?

05 July 2011

அரும்புமீசை குறும்புபார்வை




அண்மையில் இத்தனை மோசமான படத்தை பார்த்ததாக நினைவில்லை. கொஞ்சம்கூட கதைக்கு ஒட்டாத நடிப்பு , மோசமான திரைக்கதை, அதைவிட மோசமான ஒளிப்பதிவு இசை எடிட்டிங் என சினிமாவில் இன்னும் என்னென்ன துறைகள் உண்டோ அத்தனையிலும் தோல்வியடைந்திருக்கிற படம் இது. படம் தொடங்கிய பத்து நிமிடங்களிலேயே அது புரிந்துவிடுகிறது. மெகாசீரியல்களில் கூட இதைவிடவும் நன்றாக படம்பிடிக்கிறார்கள்.. நடிக்கிறார்கள்..

இப்படிப்பட்ட படங்கள் பலவற்றை பார்க்க நேர்ந்தாலும் அதன் பின்ணனியில் இருக்கிற வலி மற்றும் முயற்சியை மதித்து அதை பற்றி விமர்சித்து எழுதுவதை பொதுவாக தவிர்த்தே வருகிறேன். சிறுமுதலீட்டுப்படங்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் சும்மா இருப்பதே சுகம்.

ஒவ்வொரு உதவி இயக்குனரும் தன் முதல் படத்தை முடித்து அதை ரிலீஸ் செய்வதற்குள் படுகிற பாடுகளை சமீபகாலமாக பழகுகிற சில உதவி இயக்குனர்களின் நெருக்கமான நட்பினால் அறிந்துகொள்ள முடிகிறது. அதையும் மீறி இப்படம் குறித்து எழுத நினைத்தது இப்படம் பேசுகிற அரசியல். படத்தின் இயக்குனர் அல்லது கதாசிரியர் அந்த துன்பத்தை அனுபவித்தவராக இருக்கலாம். அற்புதமான கதையை கையிலெடுத்துக்கொண்டு இத்தனை மோசமாகவும் படமெடுத்திருக்க வேண்டுமா என்கிற ஆதங்கமே எழுத தூண்டியது.

அரசு மாணவர்கள் விடுதி குறித்த நேரடி தகவல்களை இந்தப்படம் ஓரளவுக்கு காட்சிப்படுத்துகிறது. ஓரளவுக்குத்தான். அங்கே நடைபெறுகிற அக்கிரமங்களும் ஊழலும் அந்தமாணவர்கள் படுகிற அவஸ்தைகளும் வேதனைகளும் சொல்லிமாளாதவை. இதற்கு மத்தியில் படித்து முடித்து வெளியே வருகிற பையன்கள்தான் என்ன ஆவார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. அண்மையில் கூட சென்னை நந்தனம் அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் , அவர்களுக்கு வழங்கப்படுகிற உணவு மோசமாக இருப்பதாகவும் வசிப்பிடம் சுகாதாரமில்லாமல் இருப்பதாகவும் கூறி சாலையில் இறங்கி மறியல் செய்ததை பத்திரிகைகளில் படித்திருக்கலாம். அதை கண்டித்து சிலர் ச்சே இந்த மாணவர்களுக்கு அறிவே இல்லையா என்று வியாக்கியானம் படித்ததும் நினைவுக்கு வருகிறது. நரகத்திலிருந்து வெளியேற துடிப்பவனின் குரல் அப்படித்தான் ஒலிக்கும். அவனுடைய எதிர்ப்பின் வேகமும் மூர்க்கத்தனமாகத்தான் இருக்கும்.

சமீபத்தில் மதுரைக்கு அருகிலிருக்கிற ஒரு கிராமத்திற்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த போது கூட அங்கிருக்கிற மாணவர் விடுதி பலான காரியங்களுக்கு பயன்படுத்தபடுவதாக ஊர் இளைஞர்கள் புகார் தெரிவித்தனர். அதைபற்றி ஊர்மக்களுக்கு தெரிவித்த போது ஊர்மக்களும் கூட ‘’சக்கிலயப்பயலுகளுக்கு என்ன சொகுசு..’’ என எகத்தாளமாக பேசியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கதைகளும் உண்டு. போலீஸில் புகார் செய்தும் அரசிடம் முறையிட்டும் ம்ஹூம்.. வாசலில் மேயும் மாடுகள், கஞ்சா அடிக்கும் இளைஞர்கள், பலான காரியங்கள் அரங்கேறும் விடுதி.. இதற்கு மத்தியில்தான் இந்த மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது கோபமும் ஆத்திரமும்தான் தொற்றிக்கொண்டது.

இந்த விடுதிகளுக்கு பின்னாலிருந்த சாதி அரசியல் மிக முக்கியமானது. இந்த இளைஞர்களின் வாழ்க்கை பாதைமாறிப்போவதற்கான உளவியல் காரணங்கள் முக்கியமானது. அதைப்பற்றியெல்லாம்தான் இப்படம் பேசியிக்க வேண்டும்... அதைப்பற்றி பேச ஓரளவு முயன்று... பாதை மாறி ஏதோ சொல்ல முயன்று ஏதேதோ சொல்லி கடைசியில் எப்படியோ ஏதோ ஒரு காதலுடன் சுபமாக முடிகிறது! ஆனால் அதற்குள் எருமையே கூட பொறுமையிழக்க நேரிடும்!

தவிர்க்கலாம்!