Pages

31 December 2011

நண்பர்களின் ஆண்டு







மீண்டும் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஆண்டும் எதையும் சாதிக்கவில்லை. அடுத்த ஆண்டாவது எதாவது சாதனைகள் செய்யவேண்டும் என்கிற லட்சியவெறி மட்டும் ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் சடங்கு போல எஞ்சியிருக்கிறது.


எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நண்பர்களின் எண்ணிக்கை 2011ல் கணிசமாக அதிகரித்திருக்கிறது. பத்திரிகை பணி தொடர்பாக சந்தித்த நண்பர்கள் போக ஃபேஸ்புக்,டுவிட்டர் என புதிய தளங்களிலிருந்து நிறைய நிறைய நண்பர்கள்.


நிறைய வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் இளைப்பாற நல்ல இடமாக டுவிட்டரும் ஃபேஸ்புக்கும் இருந்தன. அங்கே பலரோடு வேடிக்கையாக சண்டைகள் போட்டாலும் புதிய நட்புகளுக்கான இடமாக அமைந்தது. தொடர்ந்து நம் வலைப்பூவிலும் மாதத்திற்கு ஐந்து கட்டுரைகள் என்கிற அளவில் எழுதியே வந்துள்ளேன். முடிந்தவரை சினிமா தொடர்பான விஷயங்களை தவிர்த்து புதிதாக எழுத முயற்சி செய்துள்ளேன். சீமானை விமர்சித்து எழுதப்பட்ட பதிவுக்காக நிறைய அனானி ஆபாச போன் கால்களை சந்திக்க நேர்ந்தது பெருமையாக இருந்தது. நம் தளத்தில் எழுதிய வாகைசூடவா விமர்சனத்தின் வரிகள் அப்படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் உபயோகிக்கப்பட்டது இன்னும் மகிழ்ச்சி.


சென்னையை சேர்ந்த டுவிட்டர் நண்பர்கள் இணைந்து வாராவாரம் கிரிக்கெட் ஆடியதை மறக்கவே முடியாது. அடுத்த ஆண்டும் கிரிக்கெட் ஆட முயற்சி செய்ய வேண்டும். கிரிக்கெட் என்பதையும் தாண்டி அது சின்ன வயது சிநேகித உணர்வுகளை மீட்டுக்கொடுத்துள்ளது. முன்னெடுத்து சென்ற உருப்படாதது நாராயணனுக்கும் மச்சி கார்க்கிக்கும் நன்றி.


விகடனின் வலைபாயுதே பக்கத்தில் தொடர்ந்து வெளியான என்னுடைய ஏகப்பட்ட டுவிட்டுகளும் ஸ்டேடஸ்களும் பலரையும் கவர்ந்ததாக அறிகிறேன். அதை படித்துவிட்டு தொடர்ந்து பாராட்டும் வாழ்த்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

இந்த ஆண்டு நிறைய புத்தகங்கள் வாசிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 500க்கும் மேல் திரைப்படங்கள் பார்த்திருப்பேன். பைத்தியகாரன் சிவராமன் நிறைய புத்தகங்கள் மற்றும் சிடிக்களை தொடர்ந்து கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. இலக்கியம் குறித்து தொடர்ந்து புட்டிப்பால் ஊட்டிவரும் மச்சிசார் மாமல்லன் மற்றும் ஜ்யோவ்ராமின் இனிய நட்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. காமிக்ஸ் விஷ்வா மற்றும் பின்தொடரும் நிழலான தோழர் யுவகிருஷ்ணாவின் தயவில் நிறைய காமிக்ஸ்கள் படித்தேன்.


பயணங்கள் அதிகமில்லாத ஆண்டாக இது அமைந்தது. யானைகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைக்காக மேற்குதொடர்ச்சி மலையெங்கும் சுற்றியது தவிர பெரிய பயண அனுபவங்கள் ஏதுமில்லை. அடுத்த ஆண்டாவது நிறைய சஞ்சாரம் செய்ய நினைத்திருக்கிறேன்.


பல ஆண்டு கனவான சொந்தமாக ஒரு கேமரா வாங்கவேண்டும் என்கிற ஆசை நிறைவேறியது. டிஜிட்டல் கேமராதான்.. (எஸ்எல்ஆர் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி.) அதை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட படங்கள் எடுத்து தள்ளினாலும் சில படங்கள் பலரையும் கவர்ந்தது ஊக்கமளித்தது, அதிலும் புகைப்பட கலைஞர் ஜீவ்ஸ் கிருஷ்ணனின் தொடர்ச்சியான புகைப்படக்கலை குறித்த தகவல்களும் அவருடைய போட்டோகிராபி இன் தமிழ் வலைப்பூவும் நிறையவே உதவின. அவருக்கு நன்றி. முதல் முறையாக என்னை மேடையேற்றி அழகுபார்த்தனர் ஈரோடு பதிவர்கள்.


சீமான்,விஜய்,அன்னாஹசாரே,கருணாநிதி,ஜெயலலிதா,மன்மோகன்,சோனியா,விஜயகாந்த் என பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் நமக்கு இணையத்தில் பொழப்பு ஓடுகிறது! நன்றி சொல்ல இன்னும் நிறைய பேர் இருந்தாலும் முக்கியமான ஒரு சிலர் அதில் உண்டு.


தீபாவளிக்கு முதல் நாள் ஒரு போன்கால்! ‘’அண்ணா வணக்கம் நான் இருளாயி பேசறேன்’’ என்றது எதிர்முனை. பேரைச்சொன்னதும் உடனே நினைவுக்கு வந்துவிட்டது. பிளஸ்டூ தேர்வில் நர்சிங் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி இருளாயி. படிக்க வசதியில்லாமல் செங்கல் சூளையில் செங்கல் சுமந்துகொண்டிருந்தவரை பழனிக்கே போய் பார்த்து அவரை பற்றி நான் பணியாற்றும் பத்திரிகையிலும் நம்முடைய இணையதளத்திலும் எழுதியிருந்தோம். அந்தப்பெண்தான் செல்போனில் அழைத்திருந்தாள் ‘’சொல்லும்மா! எப்படி இருக்க, தம்பிங்க நல்லாருக்காங்களா? ஸ்கூல் போறாங்களா?, குடிசைவீட்டை மாத்திட்டீங்களா?’’ என கேள்விகளை அடுக்கினேன்.




‘’அண்ணா இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேங்ண்ணா. கிட்டத்தட்ட ஒருலட்ச ரூபாய் வரைக்கும் உதவிகள் கிடைச்சிருக்குண்ணா.. எனக்கு உதவி செஞ்சவங்க யார்னு கூட தெரியல , அவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணும் தெரியலண்ணா.. இப்போ நான் மட்டும் படிக்கல அந்த தொகையால செங்கல் சூளைக்கு போய்கிட்டிருந்த என் ரெண்டு தம்பிகளும் கூட படிக்கறாங்கண்ணா’’ என நெகிழ்ச்சியாக சொன்னாள். எனக்கும் கூட இப்போது வரைக்கும் தெரியாது ஆஸ்திரேலியாவிலிருந்தும் கனடாவிலிருந்து ஐரோப்பாவிலிருந்து இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் ஏகப்பட்ட பேர் தங்களால் முடிந்த உதவிகளை அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அவளுக்கு கல்லூரியில் சீட் தர எத்தனையோ நண்பர்கள் முன்வந்தனர். ஆனால் விடாப்பிடியாக அரசுக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். கோவையிலிருந்து ஒருநண்பர் அவருக்கு மாதந்தோறும் ஒரு சிறுதொகையை அனுப்பிவருகிறார்.


இதுவரை இதைவிடவும் பெரிதாக மகிழ்ந்த நெகிழ்ந்த கண்ணீர் விட்டழுத சம்பவம் எதுவுமே எனக்கு நினைவில்லை. உதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் என்னால் ஒரு நன்றியைக்கூட சொல்லமுடியவில்லை என்கிற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அப்பெண்ணுக்கு உதவி செய்தவர்கள் இதை படிக்க நேர்ந்தால் அந்த நல்ல உள்ளங்களுக்கு என் சார்பிலும் இருளாயியின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.


இந்த ஆண்டில் என்னென்னவோ நல்லதும் கெட்டதும் நடந்திருந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த 2011 மட்டும் இருளாயியாலும் அவருக்கு உதவி செய்த நண்பர்களாலும் நிச்சயமாக நினைவிலேயே இருக்கும்.



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

28 December 2011

பவுடர் ஸ்டார்

முன்னெச்சரிக்கை - (இந்தப்பதிவு உங்கள் உடல்நலத்திற்கு கேடுவிளைவிக்கலாம்)




இந்த ஆண்டு எத்தனையோ பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றிருந்தாலும் எந்தப்படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியதாக தெரியவில்லை. இப்படியொரு மகா மோசமான தமிழ்சினிமா சூழலில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்கிற புதுமுகம் நடித்த லத்திகா என்கிற மாகாவியம் 300 நாட்களை கடந்து இன்னமும் சக்கைப்போடு போடுகிறது.. (ஒரே தியேட்டரில்). மொக்கையான கதை, மட்டமான நடிப்பு, கேவலமான இசை, தாங்கமுடியாத தலைவலி படம் எப்படி 300நாட்களை கடந்தும் ஓடுகிறது என்கிற வியப்பு நம் அனைவருக்குமே இருக்கலாம்!


‘’ஆமாய்யா காசு கொடுத்துதான் படத்தை ஓட்டுறேன், ரசிகர்களுக்காக ஓட்டித்தானே ஆக வேண்டியிதாருக்கு’’ என விகடன்,குமுதம்,விஜய்டீவி,சன்டிவி முதலான பிரபல பத்திரிகைகளில் டிவியில் பேட்டியும் கொடுத்திருக்கிறார் படத்தின் நாயகன் பவர்ஸ்டார். தமிழ்சினிமாவின் சூப்பர் நாயகர்களில் யாருமே இதுபோல ஒன்றை செய்ததாக தெரியில்லை.. ரசிகர்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத மாமணியாக பவர்ஸ்டார் இருக்கிறார். அதனால்தான் ரசிகர்களின் நலன் கருதி வருடத்திற்கு ஒருபடம் நடிக்கிறாரோ என்னவோ?


அவருடைய லத்திகா திரைப்படங்களின் காட்சித்தொகுப்பு.. கண்டு மகிழுங்கள். பார்த்துவிட்டு வாட் ஏ மேன் என வியந்துபோவீர்கள்!







அதுதவிர படம் வெளியாகி ஒரு வருடமாகியும் இன்னமும் திருட்டு டிவிடி வெளிவராத ஒரே திரைப்படம் லத்திகா மட்டும்தான்! திருட்டு டிவிடியை ஒழிக்க நம் தமிழக காவல்துறையும் முட்டிப்போட்டு குட்டிகரணம் அடித்தும் முடியாதிருக்க.. சத்தமேயில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புரட்சியை பண்ணிவிட்டு சின்னகவுண்டர் விஜயகாந்த் போல துண்டை தூக்கி தோளில் போட்டுகிட்டு போய்கொண்டே இருக்கிறார் பவர்ஸ்டார்.


ஜேகே ரித்திஷ் அரசியலில் பிஸியாகிவிட்ட சூழலில் அவருடைய இடத்தை நிரப்ப ஒரு தலைவன் வரமாட்டானா என ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் சம்முகத்திற்கு கிடைத்த வரம்தான் பவர்ஸ்டார். சினிமாவிலிருந்து அரசியல் என்பதே ரூட்டு அதை மாத்திப்போட்டு அடிச்சாரே ரிவீட்டு. அவர்தான் அரசியலிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் சொக்கத்தக்கம்தான் பவுடர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் ஸ்ரீனிவாசன். சினிமாவில் ஆயிரக்கணக்கான போலிடாக்டர்கள் (விஜய்,விக்ரம் etc) இருந்தாலும் இவரு மெய்யாலுமே படித்து பட்டம் வாங்கிய ஒரிஜினல் டாக்டர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருத்துவர் அணித்தலைவராக மட்டுமே இருந்தவர்.


ரஜினியைப்போலவே வில்லனாக தொடங்கியது பவரின் பயணம். மேகம்,போகம்,மண்டபம் என ஒன்றிரண்டு கில்மா படங்களில் அவ்வப்போது பத்து பெண்களை கற்பழிக்கும் ஒற்றை வில்லனாக முகத்தில் எந்த சுரணையுமேயில்லாமல் வெறித்தனமாக நடித்துக்கொண்டிருந்தார். என்ன ஆச்சோ ஏதாச்சோ நம் பயுபுள்ள பவர்ஸ்டார் தீர்ப்பு சொல்லும் பண்ணையாராக வாழ்ந்த ‘’நீதானா அவன்’’ என்கிற படத்தின் வரலாறு காணாத மாபெரும் வெற்றி அவருக்கு கதாநாயக அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது.
அந்தப்படத்தின் டிரைலர்..





ஹீரோ அந்தஸ்து கிடைத்தும் புரோடியூசர் கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாதே என்கிற ஒரே காரணத்திற்காகவும்.. தமிழ் மக்களுக்காகவும்.. பாரதமண்ணிற்காகவும்.. சொந்தகாசில் லத்திகா என்கிற படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்கு பிறகு லத்திகா பெரும் வெற்றியடைந்து தமிழ்நாடு டாராந்துபோனதெல்லாம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் வரலாறு..


பவர்ஸ்டாரின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களையும் பிலிம் இன்டஸ்ட்ரியையுமே மூச்சுபேச்சில்லாமல் செய்திருக்கிறது. அண்ணாரின் அடுத்த படமான ஆனந்த தொல்லை இதனாலேயே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.


இதுதாண்டா டிரைலர் என்று சொல்லுமளவுக்கு அண்ணலின் இரண்டாவது படத்தினுடைய டிரைலர் வெளியாகியிருக்கிறது. இரண்டரை நிமிட டிரைலரே இந்த அளவுக்கு மிரட்டுதுன்னா இரண்டரை மணிநேர படம் வெளியானா தமிழ்நாடு என்னத்துக்கு ஆவறது என்கிற அச்சமும் நம் மனதில் உதிக்காமல் இல்லை! கூடங்குளத்தையே தாங்குகிற தமிழினம் இதை தாங்காதா? நம் தமிழ்மக்கள் மேல்தான் தலைவனுக்கு என்ன ஒருநம்பிக்கை. அதைதான் இந்த டிரைலரும் நமக்கு காட்டுகிறது.


உங்களுக்காக அந்த அதி அற்புத டிரைலர். டிரைலரையே இரண்டு மணிநேரம் கூட பார்க்கலாம்! அதிலும் குறிப்பாக 1:54 நிமிடத்தில் வருகிற சண்டைக்காட்சியை கண்டு அர்னால்டுக்கே குலைநடுங்கும். வாட் ஏ ஃபைட் ஆஃப் தி டுவென்டி பஸ்ட் செஞ்சுரி பாக்ஸ்.







டிரைலர் பார்த்தாச்சா.. அதை பார்க்காவிட்டால் இந்த பதிவின் நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. பார்க்காமல் போக நேர்ந்தால் அது நீங்கள் செய்த புண்ணியாபலனாகவும் இருக்கலாம். இந்தப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. விஜயின் நண்பன், தனுஷின் 3, ஆர்யாவின் வேட்டை என பிரபலங்களின் படங்களுக்கு நடுவே சந்துகேப்பில் சிந்துபாட தயாராகி வருகிறது ஆனந்ததொல்லை. படம் வெளியானால் விஜய் அஜித் சிம்பு தனுஷெல்லாம் ஃபீல்ட் அவுட் ஆகப்போவது உறுதியாக இப்போதே தெரிகிறது.






கடைசியாக ஒரு பிட்டு-









பிரபஞ்ச நாயகன் , நடிப்பு புயல் , அண்டம் வியக்கும் அண்ணன் பவர்ஸ்டாரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

20 December 2011

செய்யாத தப்புக்கு தண்டனை!






எழுத வந்து இத்தனை ஆண்டுகளில் இதுதான் முதல் மேடை. முதல் கௌரவம். முதல் சால்வை, முதல் போர்வை. கிட்டத்தட்ட முதல் இரவுக்கு காத்திருக்கும் புதுமாப்பிள்ளையின் அநேக குழப்பங்களோடு ஈரோடு கிளம்பினேன். ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் உங்களை கௌரவிக்கப்போறோம் என்று கதிர் சொன்னபோது சும்மா கலாய்க்கிறாங்களோ என்றுதான் நினைத்தேன். நம்மலெவலுக்கு அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது. என்னத்த எழுதி கிழித்துவிட்டோம் என்கிற மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.

மேடையில் என் பெயர் சொல்லி அழைக்கும்வரை என்னால் அதை நம்பவே முடியவில்லை. காரணம் இதுவரை நான் எதையும் உருப்படியாக செய்ததாக நினைவில்லை. பண்ணிடாத குற்றத்துக்கு தண்டனைபெறுவதைப் போல செய்யாத சாதனைக்கு கௌரவிக்கப்படுவதும் பெரும் மன உளைச்சலை அனுபவிக்க நேருகிறது. அப்படியொரு மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.

அதைவிடுங்க.. விருந்தோம்பலில் சும்மாவே காட்டு காட்டென்று காட்டும் ஈரோடு பதிவர்கள் சங்கமம் என்று வந்துவிட்டால் என்ன காட்டுகாட்டுவார்கள் என்பதை கடந்த ஞாயிறு ஈரோடு போயிருந்தால் உணர்ந்திருக்கலாம். ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் ஆண்டுதோறும் நடத்துகிற சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிளம்பினேன்.
ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஈரோட்டுக்கு வந்துசேர்ந்துவிட்ட என்னையும் தோழர் யுவகிருஷ்ணாவையும் வரவேற்க ஆறுமணிக்கே காத்திருந்தார் நண்பர் ஜாஃபர். லாட்ஜில் ரூம் போட்டுக்கொடுத்து தேவையான உதவிகளை அரங்குக்கு செல்லும்வரை கூடவே இருந்து செய்து உதவினார். அரங்கில் பிரமாதமான காலை உணவு பரிமாறப்பட்டது. 200க்கும் மேல் பதிவர்களும் சமூகவலைதள நண்பர்களும் கூடியிருந்தனர். வாசலிலேயே தாமோதர் சந்துருவும் ஈரோடுகதிரும் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். பாலாசி ஓடியாடி துடிப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சங்கோவி,கார்த்திக்ஈரோ,லவ்டேல் மேடி என என்னுடைய வாசகநண்பர்கள் நிறையபேர் என்னிடம் ஆட்டோகிராப் பெற நினைத்துக்கொண்டேயிருந்தனர்.

திருப்பூர் பதிவர்கள் சேர்தளம் என்று ஒரு இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். வெள்ளை டிஷர்ட்டில் சேர்தளம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு திருப்பூரிலிருந்து பலரும் வந்திருந்தனர். பார்க்கவே தமாஷாக இருந்தது. வெயிலான்தான் தலைவர் என நினைக்கிறேன். அவரும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார். சென்னையிலிருந்து மணிஜியும் அகநாழிகையும் பிலாசபி பிராபகரனும் இன்னபிற நண்பர்களும் வந்திருந்தனர். கேஆர்பி செந்திலும் ஜாக்கிசேகரும் உண்மைதமிழனும் கூட வந்திருந்தனர். அவர்களும் என்னோடு கௌரவிக்கப்பட்டனர். மதுரையிலிருந்து சீனா,தருமி என மூத்தபதிவர்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த பதிவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சில குடிகாரர்களையும் அரங்கில் பார்க்க முடிந்தது. குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு என்பதை அழுந்த சொல்லி அவர்களையெல்லாம் திருத்த முயன்றேன்.

பிரமாண்டமான ஏற்பாடுகளை கண்டு பிரமிப்பாக இருந்தது. நமக்குத்தெரிந்த பதிவர் சந்திப்பெல்லாம் மெரீனாவின் கடற்கரையில் எளிமையாக அளவளாவி டீக்கடையில் அரசியல் பேசிக்கலைவது மட்டும்தான். அதன் சுகமே தனி! இது வேறு மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒழுங்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட போர்டு மீட்டிங்கை போல இருந்தது. நிறைய பெண் பதிவர்களும் , சிலபதிவர்கள் குடும்பத்துடனும் வந்திருந்தனர். தோழர் ஆரூரான் இனிமையாக பேசி விழாவை துவக்க.. சாதனையாளர்கள் அழைக்கப்பட்டனர். என்னையும்தான்! அப்போதும் கூட எனக்கு உள்ளுக்குள் ஒருவித லஜ்ஜையாகவே உணர்ந்தேன். ஒவ்வொருவரையும் அழைக்கும்போதும் நாதஸ்வரம் வாசித்தது புதுமையாக காமெடியாக இருந்தது.

நான் யாருக்கெல்லாம் ரசிகனோ அத்தனைபேரும் அந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக நான் யாரைப்பார்த்து எழுதவந்தேனோ அந்த நபர் தோழர் லக்கிலுக், என்னை எழுதவைத்த பாலபாரதி, சிறுவயதில் நான் வியந்து பார்த்த கட்அவுட்களை வரைந்தவரும் தேசிய விருது பெற்ற எழுத்தாளருமான ஜீவநாதன், நாளைய இயக்குனரில் பல முறை என்னை கலங்கவைத்த குறும்பட இயக்குனர் ரவிக்குமார், எனது புகைப்படகலை ஆசான் ஜீவ்ஸ் என அத்தனை பேருக்கும் நடுவில் என்னையும் கௌரவித்தது சிலிர்ப்பூட்டியது.

அந்த மேடையில் அமரும் தகுதியற்றவனாக நெளிந்தபடி மேடையில் அமர்ந்திருந்தேன்.
ஒவ்வொருவரை குறித்தும் ஒரு அறிமுகத்தினை வாசித்தனர். என்னைப்பற்றிய அறிமுகத்தையும் வாசித்தனர். அதை கேட்டபோது என் குற்றவுணர்வு அதிகரித்து மவனே மரியாதையா மேடைலருந்து இறங்கி ஓடிடு என பயமுறுத்தியது. கௌரவிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுக்கு உபயோகமான போர்வை பரிசாக அளிக்கப்பட்டது. வீட்டில் காட்டியபோது அம்மா அகமகிழ்ந்து போர்வை நல்லா காஸ்ட்லியா இருக்கும்போலருக்கு, நீ எழுதி எழுதி உருப்படியா வாங்கினது இதுதான் என்று வியந்து பாராட்டினார்.

முதல்மேடை என்பதால் உட்காருவதற்கே ரொம்பவே சங்கோஜமாக உணர்ந்தேன்.
பார்வையாளர்கள் அனைவருமே நம்மையே பார்ப்பது போன்றதொரு பிரமை. படபடப்பாகவும் கிலியாகவும் இருந்தது. இதில் ஒவ்வொருவரும் ஒருநிமிடம் பேசியே ஆகவேண்டும் என்று சொல்ல.. கையில் மைக் பிடித்தது மட்டும்தான் நினைவிருக்கிறது என்ன பேசினேன் என்றே தெரியவில்லை. இருந்தும் செய்யாத சாதனைக்கு விருது என்கிற என்னுடைய குற்றவுணர்ச்சிவேறு வந்துவந்து அச்சுறுத்தியது. ஓடக்காத்திருக்கும் ஓட்டப்பந்தய வீரனைப்போலவே சீட்டு நுனியில் அமர்ந்துகொண்டு விட்டாப்போதும் என்றே அமர்ந்திருந்தேன்.

எந்த விழாவாக இருந்தாலும் நம்முடைய கவனமெல்லாம் சாப்பாடுதான். ஈரோடு பதிவர்கள் சாப்பாட்டு விஷயத்தில் எப்போதுமே கில்லிதான். ஒரு வருடத்திற்கு முன் ஈரோடு சென்றிருந்தபோது கதிரும் நண்பர்களும் பிரமாதமான ஒரு ரோட்டுக்கடையில் அருமையான முட்டை தோசை வாங்கிக்கொடுத்து அசத்தினர். அதனால் மதிய உணவிலும் அதுமாதிரி புதுமைகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் முட்டை அப்பம், தலைக்கறி, சிக்கன் ஃபிரை, மட்டம் ஃபிரை, சிக்கன் சூப் என நான்வெஜ்ஜிலும்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத தாவரங்களை சமைத்து வெஜ்ஜிலும் அசத்தியிருந்தனர். வயிறார சாப்பிட்டேன்.

மற்றபடி ஈரோடு பதிவர் சங்கமம் மிகச்சிறந்த நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான அனுபவத்தை தந்தது. விருந்தினர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுத்தந்தது. ஒரு சிறிய விழாவாக இருந்தாலும் அதை எப்படி குறைந்த செலவில் பிரமாண்டமாக நடத்தமுடியும் என்பதை போதித்தது. இன்னும் நிறைய சொல்லலாம். ஈரோடு பதிவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். என்னை வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

அடுத்த முறை கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய விழாக்களில் சங்கமமும் ஒன்றென உணர்ந்தேன். இத்தனைக்கும் நடுவில் உள்ளுணர்வு இன்னமும் உனக்கேன் இதெல்லாம் குடுத்தாங்க சொல்லு என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறது! இனியாச்சும் ஒழுங்கா நல்லதா நாலு கட்டுரை எழுதோணும். இல்லாட்டி என் மனசாட்சியே என்னை கொன்னுபோடும்!


15 December 2011

வெள்ளிச்சங்கு





அன்றையதினம் விடிவதற்கு சற்றுமுன்பாகவே கிஷ்ணனின் உயிர்த்தோழன் அருண் தன்னுடைய ஆன்ட்ராய்ட் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியொன்றை அனுப்பினான். அதை ஆதியில் செல்போனாக கருதப்பட்ட இரட்டை ஒன்று இரட்டை பூஜ்யம் ரக செல்போனில் கிஷ்ணன் பார்த்தான். அதில் ‘’மச்சான் ஐயாம் பிளஸ்ட் வித் ஏ பாய்’’என்று சொல்லியிருந்தான் அருண்.

கிஷ்ணன் அதை அரைத்தூக்கத்தில் பார்த்துவிட்டு மீண்டும குப்புறப்படுத்து தூங்கிவிட்டான். அந்த குறுஞ்செய்தி பின்னாளில் அவனுடைய வாழ்க்கையையே புரட்டிப்போடப்போகிறதென்பது தெரியாது. விடிந்ததும் தோழனுக்கு எதையாவது பரிசு கொடுக்கணுமே என நினைத்து, வீட்டிலே பரணில் உறங்கிக்கொண்டிருந்த வெள்ளிச்சங்கினை எடுத்து தூசி தட்டி புளிபோட்டு கழுவி பளபளவென்றாக்கி ஜிகினா பேப்பரில் சுற்றி புதிதுபோல மாற்றிப் பரிசளித்தான். அருண் அதைக்கண்டு நண்பனின் நட்பை வியந்து உச்சிமுகர்ந்தான். கிஷ்ணனுக்கு பெருமையாக இருந்தது.

அந்த வெள்ளிச்சங்கு அவனுடைய குடும்பத்தில் பரம்பரையாக உபயோகித்து வந்த ஆதிகாலத்து பால்குடி சங்கு. கிஷ்ணனுக்கு அதில்தான் பால் புகட்டப்பட்டது. என்றைக்கு கிஷ்ணன் டியூப் வைத்த டம்ளரில் பால் குடிக்கத்தொடங்கினானோ அன்றையதினத்திலிருந்து வெள்ளிச்சங்கு பரணுக்குள் முடங்கியது. கிட்டத்தட்ட 25ஆண்டுகளாக அது வைத்த இடத்திலேயேதான் கிடக்கிறது. அதைப்பற்றி வீட்டிலிருக்கும் அம்மாவுக்கோ ஆயாவுக்கோ அப்பாவுக்கோ ஒரு கவலையுமில்லை. பிறகு என்ன மயித்துக்கு அந்த கெரகத்த அங்க வச்சிருக்கணும்.. எனவே அது அருணுடைய குழந்தைக்கு பரிசளிக்கப்பட்டது.

ஓர் இரவில் கிஷ்ணனின் அம்மாவுக்கு ஒரு நல்ல கனவு வந்தது. அந்தக்கனவில் பூச்சூடியம்மன் காட்சியளித்தது. அம்மனோடுனான கனவுரையாடலில் ‘’கிஷ்ணனுக்கு ஒரு கல்யாணங்காச்சி பண்ணிப்பாக்கணுமாத்தா! அதுக்கு நீதான் ஒதவோணும்’’ என்று கிஷ்ணனின் அம்மா வேண்டுகோளை முன்வைக்க.. யோசித்துவிட்டு அம்மன் சொன்னது ‘’என்ர கோயிலுக்கு வாராவாரம் வந்து உன்ர வூட்டுபரணுமேல கெடக்கற வெள்ளிச்சங்குல வெளக்கேத்தி வச்சியன்னா மூன்ற மாசத்துல டான்னு கல்யாணமாகிப்போயிடும்’’ என்றது. இப்படியாக அந்த கனவு நீண்டது. விடிந்தது.

விடிந்ததும் அம்மா அரக்கபரக்க கிஷ்ணனை எழுப்பினாள். ‘’கிஷ்ணா கொஞ்சம் பரண் ஏறி அந்த வெள்ளிச்சங்கை எடுத்துக்குட்ரா’’. தூங்கிக்கொண்டிருந்த கிஷ்ணன் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தான். ‘’என்னகேட்ட.. வெள்ளிச்சங்கா?’’.. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் வேறுவழியின்றி அதை தேடுவதுபோல பாவலா காட்டினான். ‘’இங்கே இல்லம்மா..’’ என கடிந்துகொண்டான். ‘’தம்பீ பத்துரூவா வேணா வாங்கிக்க.. அதை எப்படியாச்சும் எடுத்துக்குட்றா’’ என்றாள்.

‘’ இப்ப என்னத்துக்கு அத வேலமெனக்கெட்டு தேடிக்கிட்டிருக்க.. அப்படியென்ன கொள்ளகொண்டுபோற அவசரம்’’ என மேலும் கோபங்கூட்டினான் கிஷ்ணன்.

‘’இல்ல தம்பீ..நேத்து நைட்டு கனவுல...’’ என பூச்சூடியம்மனுடனான உரையாடல் குறித்து ஃபிளாஷ்பேக்கில் விளக்கினாள். கிஷ்ணன் கோபமாக தேடிதேடி நடித்தான். தேடலில் எதுவுமே அகப்படவில்லை என்கிற வருத்ததுடன் ‘’வேற வழியில்ல தம்பீ பேசாம மொளகாயரைச்சிர வேண்டியதுதான்’’ என தன் முடிவையும் தெரிவித்தாள். ம்க்கும் என்ன செஞ்சிடும் மொளகா.. என தெனாவெட்டாக மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் ஒருவித பயம் அவனுடைய இதயத்தில் உருவானது.

‘’அடப்போம்மா அதெல்லாம் சும்மா , அந்த பூசாரிப்பய ஊர ஏமாத்திட்டு திரியறான் நீ வேற.. என்னமோ பீடத்துல மொளகாவ அரைச்சு தேப்பாய்ங்களாம்.. உடனே உடம்பு எரிஞ்சிருமாம்.. ரத்தம் கக்குமாம், மெட்ராஸ் வெயில்ல அவனவன் இதெல்லாம் இல்லாமயே வெந்துபோய் ரத்தம் கக்கிட்டுதான் அலையறான்.. நீ வேற, இன்டெர்நெட்டு த்ரீஜி ஃபோர்ஜினு போய்கிட்டிருக்கோம்..ஒன்னு பண்ணு பேசாம போலீஸ்டேசன் போவோம் கம்ப்ளைன்ட் குடுமப்போம். சட்டப்படி செய்வோம்’’ என கடிந்துகொண்டான். தண்ணீரில் விட்ட ஒருதுளி சொட்டுநீலம் போலவே பயம் மெதுவாக உள்ளுக்குள் கரையத்தொடங்கியது.

‘’என்ரா பெரிய போலீஸு மயிராண்டி.. சாமியவுட உன்ர போலீஸு பெரிய இதுவா.. பூச்சூடியம்மனோட மகிமை உனக்கெங்க தெரியப்போவ்து.. போன வாரம் நம்ம சுப்பு கம்மல் தொலைஞ்சிருச்சினு மொளகா அரைச்சு தேச்சி வச்சு.. ஒரே ஒரு வாரந்தான்.. அவ தெருவுல ஒருத்தன் ரத்தங்கக்கி கைகால் விளங்காம போயி கண்ணு அவுஞ்சு உடம்பு எல்லாம் கொப்புளமா கிடந்து அழுகிப்போய் செத்துப்போனான் தெரியுமில்லே... டாக்டருங்களாலயே ஒன்னும் பண்ணமுடியல’’ என்றாள். அது சொட்டுநீலத்தை மேலும் கரைத்தது.

முடிந்தவரை அம்மாவின் பேச்சுக்கு காதுகொடுக்காமல் அதைப்பற்றி கவலைப்படாமல் சுவரில் மாட்டியிருந்த சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பும்போது ஹாலிலிருந்த பீரோகண்ணாடியில் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே கிளம்பினான். வ.உ.சி பூங்காவில் பூச்சூடியம்மன் கோயில் பூசாரியின் மகளான உஷா காத்திருப்பாள்!

நமக்குநாமே திட்டம்போல கிஷ்ணன் தனக்கான மொளகாயை தானே அரைக்க அம்மாவினால் அழைக்கப்பட்டான். முதலில் மறுத்தாலும் தற்போது வேலைவெட்டியில்லாமல் இருப்பதாலும் அவ்வப்போது பெட்ரோலுக்கும் தம்முக்கும் அம்மாவிடம் அஞ்சுபத்துக்கு போயி நிற்கவேண்டும் என்கிற காரணத்தாலும் பைக்கை எடுத்துக்கொண்டு அம்மாவை பின்னால் அமர்த்திக்கொண்டு கோயிலை நோக்கி புறப்பட்டான். வயிற்றுக்குள் ஏதோ எரிவதைப்போலவும், இதயம் என்றைக்கும் இல்லாமல் இன்று அதிவேகமாய் துடிப்பதாகவும் உணர்ந்தான். மொம்மது தெருவில் இருந்தது பூச்சூடியம்மன் கோயில்.

தெருவில் இருக்கிற நூறு கடைகளுக்கு நடுவே பெரிய இடத்தை வளைத்துப்போட்டு ஒரு கரையான் கட்டிய புற்றுதான் பூச்சூடியம்மன் கோவில். அந்த புற்றில் ஆதிகாலத்தில் பாம்பு வசித்திருக்கலாம். ஊரின் சந்தை சாலையாக மாறிவிட்ட காலத்திலும் அதில் பாம்பு இருப்பதாக ஊர் நம்பியது. அதனால் புற்றை சுற்றி சுவர் எழுப்பி நடுவில் புற்றை வைத்து அதன் மீது மஞ்சள் குங்குமம் கொட்டி.. அதன் துளைகளில் பால் ஊற்றி.. முட்டையை உடைத்து போட்டு.. பூவைத்து.. பொட்டு வைத்து.. புற்றுக்கு கண்மலர்கள் வைத்து.. வெள்ளியில் மூக்கு வைத்து வாய் வைத்து.. கிட்டத்தட்ட அந்த புற்றை அம்மன் சிலைபோல மாற்றிவைத்திருந்தனர்.

அதை பார்த்தால் யாருக்குமே பக்தி பீறிட்டு வந்துவிடும். புதிதாக வருகிறவர்களுக்கு அந்த பூச்சூடியம்மனே இறங்கி ஆட்கொண்டு அருள்வாக்கு சொல்வதும் உண்டு! எந்த ஊரில் எது தொலைந்தாலும் இங்கே வந்து மொளகாயரைக்கலாம். மாவட்டத்திலேயே பவர்ஃபுல் அம்மன் என்றால் அது பூச்சூடியம்மன்தான்! இங்கே வாசலிலேயே சூனியம் வைக்க வருகிறவர்களுக்கு வசதியாக அம்மிக்கல்லும் குளவியும் வைத்திருப்பார்கள். அதில் மிளகாயை அரைத்து அந்த காரமான சட்னியை கொண்டுபோய் புற்றுக்கு முன்னால் இருக்கிற கல்லில் பூசிவிட்டால் போதும். சோளி முடிந்தது! ரத்தம் கக்க அம்மன் கியாரண்டி என்பார் பூசாரி! பூசாரியின் குடும்பம்தான் பரம்பரையாக அங்கே பூஜை செய்துவந்தது.

‘’அம்மா இதெல்லாம் எதுக்கும்மா.. ஆப்டரால் வெள்ளிச்சங்கு.. ஐநூறு ரூவா பொறுமா.. அதுக்குபோயி மொளகாயரைச்சி சூனியம் வைக்கறேனு கிளம்பிருக்கியா.. திருடினங்களுக்கும் குடும்பங்குட்டி இருக்கும்ல.. நாளைக்கே ஏதாச்சும் ஒன்னாயி செத்துப்போயிட்டான்னா அவன் குடும்பம் அநாதையா நிக்காதா? யோசிச்சு பாரு.. அந்த வெள்ளிச்சங்க கொண்டுபோயி அவனென்ன லச்சுமிமில்ஸையா வெலைக்கு வாங்கப்போறான்.. வுட்டுத்தொலையேன்..’’ என பைக் ஓட்டியபடி அம்மாவோடு பேசிக்கொண்டே வந்தான்.

‘’இவரு பெரிய இவரு.. சொல்லிட்டாரு.. அடப்போடா.. அப்படியே வண்டிகாரன்வீதிகிட்ட நிறுத்து..’’ என கிஷ்ணனின் பேச்சுக்கு துளிகூட மரியாதை கொடுக்காமல் பேசினாள் அம்மா. வண்டிக்காரன் வீதியில்தான் உஷாவின் வீடிருந்தது. துன்பத்திலும் ஒரு இன்பம் என நினைத்துக்கொண்டு வீதிக்குள் வண்டியை நுழைத்தான். வேண்டுமென்றே உஷாவின் வீட்டு வாசலுக்கு அருகில் வண்டியை நிறுத்தி இரண்டொருமுறை ஹாரன் அடித்தான். ‘’நீ போயி அண்ணாச்சிக்கிட்ட நான் சொன்னேனு சொல்லி ஒரு கிலோ காஞ்ச மொளகா வாங்கிக்க.. அப்படியே ஒர்ரூவாக்கு கற்பூரமும், ரெண்ட்ர்ரூவாக்கு வெத்தல பாக்கும்.. ஊதுபத்தி அஞ்சுரூவா பாக்கட்டும் வாங்கிக்க..’’ என்று கட்டளையிட்டாள் அம்மா. தனக்கு சூனியம் வைக்க தானே இதையெல்லாம் வாங்கவேண்டிய பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.

உஷாவீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு ‘’ஏன்டி இவளே கொஞ்சம் தண்ணிகொண்டாடி’’ என சப்தமிட்டாள் அம்மா. உஷா வெளியே ஓடிவந்து சுடிதார் ஷாலை சரிசெய்தபடி ‘’வாங்த்த.. எப்படி இருக்கீங்’’ என சொன்னாலும் வாசலில் நின்ற கிஷ்ணனின் பைக்கை பார்த்து அவனெங்கே என நோட்டம்விட்டாள். கிஷ்ணன் எதிர்த்த கடையில் சாமான் வாங்கிக்கொண்டிருந்தான். ‘’எங்கே கிளம்பிட்டீங்க..’’ என அம்மாவிடம் கேட்டபடி அண்ணாச்சிகடையையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘’உங்க அய்யனெங்கே.. கோயில்லயா.. அங்கதான் போறோம்’’ என்றாள் அம்மா. ‘’காத்தால போனவரு இன்னும் வரலீங்த்த.. ‘’ என பேச்சிக்கொண்டிருக்க கிஷ்ணன் வந்தான்.

அவளைப்பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தான். அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். அம்மா அதை கவனித்தாள். ‘சரிடி இவளே நான் கிளம்பறேன்..’’ என இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பொறுமையாக எழுந்து பைக்கில் அமர.. கண்களாலேயே உஷாவுக்கு ஒரு டாட்டாவை உதிர்த்துவிட்டு கிளம்பினான் கிஷ்ணன்.

கிஷ்ணனுக்கு வழியெல்லாம் பதட்டமாகவே இருந்தது. மொளகா அரைக்கும் முன்னமே வயிறு எரிவது போலவும் கண்கள் சிவப்பது போலவும் ஒரு உள்ளுணர்வு. லேசாக இடதுகால் கொஞ்சம் வீங்கி அதன் எடை அதிகரிப்பதைப்போலவும் இருந்தது. இதயம் வேறு திக்திக் என அடித்துக்கொண்டும் எரிச்சலாகவும் இருந்தது. விரல்கள் நடுங்கின. வியர்த்துக்கொட்டியது. அதோடு வண்டியோட்ட முடியாமல் ஓரிடத்தில் நிறுத்தினான். ‘’தம்பீ என்னடா ஆச்சு..’’ பதறினாள் அம்மா. ‘’ஒன்னுமில்லே லைட்டா தலைசுத்தல்’’ என சமாளித்தான். ‘’கண்டபசங்களோட சேர்ந்து கண்டதையும் குடிக்கறது.. கேட்டா அதெல்லாம் இல்லனு சொல்லவேண்டியது’’ என சலித்துக்கொண்டாள் அம்மா. அப்படியே ஒரமாக வண்டியை நிறுத்தி இருவருமாக வேப்பமர நிழலில் கொஞ்சநேரம் நின்றனர்.

வேப்பமரம் அருகிலேயே ஒரு கரையான் புற்று.. ஏன் இந்த இடம் இன்னும் கோயிலா ஆகல என்கிற கேள்வி அவனுக்குள் எழுந்தது.

அம்மா எதையாவது பேச வேண்டுமே என பேசினாள். ‘’உனக்கு தெரியுமா.. ஒருக்கா பூச்சூடியம்மன் கோயில்லயே ஒருத்தன் கைய வச்சிட்டான்.. உண்டியல உடச்சிட்டான்.. பூசாரி வுடுவாரா.. ஒருமூட்டை .. நாப்பது கிலோ மொளாகா வாங்கிட்டு வந்து அரைச்சு தேய்ச்ச மூனாம்த்து நாளு அவனா வந்து கால்ல வுழுந்தான்.. சாமீ என்ன காப்பாத்துங்க தெரியாம கைய வச்சிட்டேன்.. எடுத்த காச திருப்பிகுடுத்துட்டான்.. ஏன்னு பார்த்தா.. அவனுக்கு யானைக்கால் வந்து ஒரு காலே வீங்கிப்போயி கிடக்கு..நாம எவ்ளோ மொளகா அரைக்கிறமோ அவ்ளோக்கவ்ளோ திருடனுக்கு ஆபத்து.. வெள்ளிச்சங்குக்கு ஒரு கிலோ போதும்னுதான் விட்டுட்டேன்’’ என்றாள் அம்மா. கிஷ்ணனின் பயத்தை இது இரட்டிப்பாக்கியது. முன்னைவிடவும் வேர்த்துக்கொட்டியது. காலுக்குள் புழு ஊறுவதைப்போலவும் கண்கள் இருண்டு தூரத்தில் மரணம் காத்திருப்பதாகவும் உணர்ந்தான்.

பேசாம கிஷ்ணா உண்மைய சொல்லிடு.. என்றது மனசாட்சி. அதை சொன்னா ஏற்கனவே தொலைந்து போன மூக்குத்தி.. குத்துவிளக்கு கேஸெல்லாம் மீண்டும் தூசித்தட்டப்படும் என்பதால் அதுவும் முடியாது. சங்கை போய் திருப்பிக்கேட்டா அருண் மட்டுமா காறித்துப்புவான்.. ஊரே துப்புமே.. நமக்கு ஒரு ஆபத்துன்னா ஆண்டவன்கிட்ட போகலாம்.. ஆனா ஆபத்தே அந்த ஆண்டவனாலதான்னும் போது யாருகிட்ட போறது! மனதிற்குள் புலம்பிக்கொண்டே அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தான்.

கோயிலை நெருங்க நெருங்க அவனையும் மீறி அவனுக்குள் ஒரு படபடப்பு. உஷாவின் காதல்வேறு கண்முன்னால் வந்துவந்து மறைந்த்து. ‘கண்ணே! உஷா! உன்னை வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்காம செத்திடுவேன் போலருக்கேமா.. நான் செத்துட்டா வேற யாராயாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா வாழணும்.. ‘’ என மனசுக்குள் மத்தாப்பு கதறினான். தயங்கி தயங்கி மார்க்கெட் ரோடில் வண்டியைவிட்டான். பார்க் செய்தான். தூரத்தில் ஒரே கூட்டம். அம்மாவும் மகனும் பரபரக்க கோயில் இருந்த இடத்தை நோக்கி ஓடினர்.

கூட்டத்தை கலைத்துவிட்டுப்பார்த்தால் கோயிலையே காணோம்! புற்றையும் காணோம். மொளகா பீடத்தையும் காணோம். பதினெட்டாவது மாடியிலிருந்து விழும் ஒருவன் உயிர்பிழைத்தால் என்ன செய்வானோ எப்படி மகிழ்வானோ அப்படி ஒரு மகிழ்ச்சி கிஷ்ணனின் மனது முழுக்க நிறைந்தது. விஜய் ஆன்டனி இசையில் ஒரு குத்துப்பாட்டு போட்டு செம டான்ஸ் ஆடவேண்டும் போல இருந்தது.

அம்மா தன் இதயத்தில் கைவைத்தபடி அப்படியே கிஷ்ணனின் தோளில் சாய்ந்தாள். வத்தாத நதியெல்லாம் அந்த கடலை பார்த்து ஆறுதல் அடையும் அந்த கடலே காணாம போயிடுச்சின்னா.. கோயிலிருந்த இடம் காலியாக இருந்தது, ஓரமாக பூசாரி கண்கள் வீங்க அமர்ந்திருந்தார். அவர் முகமெல்லாம் இருண்டு போய்.. கவிழ்ந்து போன டைடானிக் கப்பலின் கேப்டன் போல கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். வெள்ளிசங்க காணோம்னு கோயிலுக்கு வந்தா இங்கே கோயிலையே காணோமேடா.. என்று அம்மா அலறினாள். அம்மாவை பூசாரிக்கு அருகில் அமரவைத்துவிட்டு கூட்டத்தில் விசாரித்தான்.

‘’பஞ்சாயத்துல புதுசா யாரோ ஆபீசரு.. மொத்தமா தூக்கிட்டான்!''

‘’கிரேன் வச்சி இடிச்சாங்களாம்யா.. ‘’

நான் பாக்காம போயிட்டேன்... தூங்கிட்டேன்பா..

புத்த இடிச்சப்பா உள்ளே பத்தடி நீளத்துல ராஜநாகம் வெளிப்பட்டுச்சாம்.. அதை பார்த்து ஆபீசரே அலறிட்டாராம்..

சன்டிவில படம் புடிச்சாங்களாம்யா.. ஊர்காரய்ங்களே பேட்டி வேற எடுத்தாங்களாம்.. நான் அப்பதான் பஸ் புடிச்சி கொழுந்தியா வீட்டுக்கு போனேன்பா..

ஆபீசருக்கு சாமினா புடிக்காதாம், அதான் மொத்தமா தகர்த்துட்டாராம்

போக்குவரத்துக்கு இடையூறுனு கோர்ட்டுல ஆர்டர் வாங்கிட்டாய்ங்களாம்பா ’’
என்று பலரும் பல கதைகள் சொன்னார்கள். கோயிலோடு சேர்ந்து இடிந்துபோய் அமர்ந்திருந்தார் பூசாரி. அவனுக்கு மனதுக்குள் ஒரே மகிழ்ச்சி. அந்த பலிபீடக்கல்லையும் கொண்டு போய்விட்டார்கள் போல காணோம். விட்டிருந்தா ஆபீசருக்கே மொளகா அரைச்சிருப்பாய்ங்க முட்டாப்பயலுங்க. கைகொட்டி கண்களில் நீர்வழிய சிரிக்க வேண்டும் போல இருந்தது.

அவனுடைய மகிழ்ச்சி குதூகலத்திற்கு மத்தியில் அம்மா எழுந்து நின்று ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என அலற.. கூட்டம் அம்மாவை சுற்றி வளைத்தது. கிஷ்ணனும் அருகில் போய் நின்றான்.
கண்கள் சிவக்க.. தலையை அவிழ்த்துவிட்டு.. குத்துப்பாட்டுக்கு நடனமாடுகிறவர்கள் நாக்கைமடிப்பதுபோல மடித்துக்கொண்டு ‘’யேய்.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.’’ என்று சப்தமிட சலசலப்புடனிருந்த கூட்டம், மொத்தமாக அமைதியானது.

‘’எவன்டா என் கோயில இடிச்சது.. ம்ம்ம்ம்ம்ம்ம்..ஸ்ஸ்ஸ்ஸ் ‘’ , அம்மன் பாம்போடு தொடர்புடையவர்என்பதால் அம்மாவும் கைகளை பாம்பு போல் வைத்துக்கொண்டு ஸ்ஸ்ஸ் என பாம்பினைப்போல சத்தம் கொடுத்தார்.

பூசாரிக்கு தெம்புவந்துவிட்டது.. முகத்தில் உற்சாகம், மூலையில் கிடந்த அவருடைய பிரசாத தட்டையும் வேப்பில்லையையும் எடுத்துக்கொண்டு அருகில் ஓடி வந்தார்.

‘’தாயீ.. யாரு தாயீ வந்திருக்க..’’

‘’நான்தான்டா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பூச்சூடியாத்தாடா..’’ என்று கைகள் இரண்டையும் மேலே உயர்த்திப்பிடித்து நாக்கை மடக்கிக்கொண்டு, பல்லால் கடித்தபடி அச்சு அசல் சாமியாடுகிறவர்களை போலவே இருந்தாள். கிஷ்ணன் இதற்கு முன் அம்மா சாமியாடி பார்த்ததேயில்லை. இதென்ன புதுப்பழக்கம்! அவனுக்கு இதில் ஏதோ சூது இருப்பதாக புரிந்தது.

‘’ஊருக்கு வெளியே போ! அங்கே ஒரு புத்திருக்கு.. அங்கே எனக்கு கோயில வையி.. எனக்கு அமைதி வேணும்.. அமைதி வேணும்..’’ என்றாள் அம்மா!

வரும்வழியில் வேப்பமரத்தடியில் பார்த்த புத்து. இங்கே அதையே பிட் ஆக போட்டது அவனை சிரிக்க வைத்தது . அம்மா அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். பார்வையே பயமுறுத்தியது. அருந்ததி அனுஷ்காவையும் சந்திரமுகி ஜோதிகாவையும் கலந்து செய்த கலவைபோல பார்வை. ஆனாலும் அம்மாவின் பார்வைதான்.. நிஜமாவே சாமி வந்திருக்குமா?

‘’தாயீ இந்த கோயில என்ன பண்ணுறது..’’

‘’அதை இடிச்சவன நான் பாத்துக்கறேன்டா.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நீ போயி கோயில கட்டுற வழியப்பாருடா.. ம்ம்ம்ம்ம்ம்’’ என்று தலையையும் உடலையும் ஒரேநேரத்தில் சுற்றி சுற்றி சொல்ல.. பூசாரியும் அம்மாவுக்கு ஏற்றபடி அதே சுருதியில் சுற்றினார். வாயில் ஒரு முழூ எலுமிச்சம்பழத்தையும் போட்டு அம்மா அதை நறநறவென கடித்து தின்ன கிஷ்ணனுக்கு பல் கூசியது! ஒரு கற்பூரத்தையும் வாயில் போட்டு அம்மனை சகல மரியாதைகளுடன் மலையேற்றிவைத்தார் பூசாரி. அம்மாவும் மற்ற சாமியாடிகளை போலவே மயங்கி விழுந்தார்.

அவள் விழித்த போது லேசாக இருட்டியிருந்தது. அம்மன் இறங்கி கிளம்பியபின் அம்மா தலையை வாரிமுடிந்துகொண்டு நார்மலானார். டீக்கடையில் ஸ்ட்ராங் டீ மூன்று சொல்லப்பட்டது.

‘’பூசாரி.. நான் என்ன பாக்கியம் பண்ணினேன் அந்த பூச்சூடியம்மனே என்மேல வந்து எறங்க..’’

‘’அம்மா உங்கூட்ல ஏதோ நல்லது நடக்கபோவுதுனு நினைக்கிறேன்.. கைல என்ன மொளகா’’

‘’அதுவா.. அது பெரிய கதை.. மொதல்ல புதுக்கோயில கட்ற வேலைய பாருங்க.. அது யாரு நெலம்..’’ டீ குடித்தபடி பேசினாள் அம்மா. அது யாருநிலமா? கிஷ்ணன் திடுக்கிட்டு நின்றான்.. பூசாரி ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினார்.. அம்மா லேசாக நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

‘’நம்ம மூலக்கட முருகனோடது.. கறாரான ஆளு.. அதான் என்ன பண்றதுனு யோசிக்கறேன்.. உஷாவுக்கு வேற கல்யாணம் பண்ணோனும்.. ஆடிமாசம் வரப்போவுதே கொஞ்சம் வருமானம் வரும் முடிச்சுட்ரலாம்னு இருந்தேன்.. இப்ப பாருங்க..’’ என்று சலித்துக்கொண்டார் பூசாரி.

‘’நிலத்த பத்தி கவல படாதீங்க பூசாரி.. ஆத்தா பாத்துக்குவா.. ஏன் என் பையன பார்த்தா பையனாட்டம் தெரியலையா.. அஞ்சு காசு குடுக்க வேணாம்… ‘’

பூசாரி அசையாமல் நின்றார். கிஷ்ணனுக்கு குலை நடுங்கியது. அப்படியே அம்மாவின் காலில் விழுந்தார். சூனியம் வைக்க வாங்கிய மொளகாயில் அடுத்த நாள் பூசாரிக்கு கறிக்கொழம்பு விருந்து வைக்கப்பட்டது.

கோயில் நிலம் மூலக்கடை முருகனுக்கு சொந்தமானது. அவன் அதெல்லாம் முடியாது.. ஆத்தாவாவது அம்மனாவது.. யோவ் அது நாலு லட்சம் போகும்யா.. என்று கொடுக்க மறுத்தான். அம்மாவின் மீது மட்டுமே பூச்சூடியம்மன் இப்போதெல்லாம் அடிக்கடி இறங்குவது போலவே அன்றைக்கும் இறங்கினாள்.

முருகனிடம் ‘’டேய் பன்னிப்பயலே ஒழுங்கா நிலத்தை குட்றா இல்ல குலத்தையே நாசம் பண்ணிருவேன்!ஏய்ய்ய்ய்’’ என மிரட்ட.. அவனும் அடிபணிந்தான். புதுக்கோவிலுக்கு புதுப்பீடம் வரவழைக்கப்பட்டது. அதில் அனுதினமும் மொளகாய் அரைக்கப்பட்டது. புது இடம் விசாலமாக இருந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை பெருகி அது வெரி ஃபேமஸ் டெம்பிளாக மாறியது. கிஷ்ணனின் மொளகாவுக்காக பீடம் காத்திருந்தது.

திருமணம் நிச்சயமாகிவிட்டதால்.. வெள்ளிச்சங்கை மறந்தேபோனாள் அம்மா! இதோ கிஷ்ணனுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறக்கப் போகிறது. அம்மா வெள்ளிசங்கு எங்கேயென்று கேட்கலாம்.. அருணிடம் விஷயத்தைச்சொல்லி துப்பினாலும் கொடுத்த பரிசை திருப்பிக் கேட்டுவிட முடிவெடுத்தான்.. இந்த விதிதால் எத்தனை வலியது. அருண் வீட்டிலிருந்த வெள்ளிச்சங்கை யாரோ திருடிவிட்டார்களாம். கிஷ்ணனுக்கு தலை சுற்றியது.

09 December 2011

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே!




சிம்புவை விரல் நடிகர்னு ஊரே நக்கலடிக்கும். அதனால ‘இந்த படத்துலயாச்சும் பத்து வெரலையும் கட்டிவச்சிட்டு நடிங்க பாஸ்’னு டைரக்டர் கொஞ்சி கேட்டிருப்பார் போல. பயபுள்ள வெரலை கட்டிப்போட்டுட்டு கண்ணு காது மூக்கு முழி இடுப்பு உடுப்புனு டோட்டல் பாடி பார்ட்ஸ்லயும் வளைச்சி வளைச்சி வித்தைககாட்டி படம் பாக்கற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணிடுச்சி. அதுவாச்சும் பரவால்லங்க படம் முழுக்க திருநெல்வேலி பாஷை பேசுறேனு அடித்தொண்டைல பேசி ஏலே வாலே ஓலேனு இழுத்து இழுத்து பஞ்ச் டயலாக் பேசி ஸ்ஸ்ஸ்ப்பா.. ஒருமனுஷன் எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே இருக்கறது.

இந்த சிம்புபையன் சாதாரண தமிழ்ல பஞ்ச் டயலாக் பேசினாலே இந்தியாவுக்கே பொறுக்காது.. இதுல திருநெல்வேலி பாஷைல பன்ச் அடிச்சா 2011லயே உலகம் அழிஞ்சிராதா! பயபுள்ள போலீஸ் வேஷத்துல வேற நடிச்சி தொலைச்சிருக்கு. போஸ்டர்ல ஏதோ கிராபிக்ஸ் பண்ணி பாக்க மீசையில்லாத தங்கப்பதக்கம் சிவாஜியாட்டம் லிட்டில் சூப்பர் ஸ்டாரை காட்டிட்டாலும் ஸ்க்ரீன்ல பாக்க சொல்ல கோயம்புத்தூரு ஸ்டேன்ஸ் ஸ்கூலு பத்தாம்ப்பூ பையனாட்டம்.. தியேட்டரே சிரிச்சி மகிழுதுய்யா!

பாவம் தரணி! குருவினு ஒரு படமெடுத்து டோட்டல் தமிழ்நாடே குனியவச்சி குளிப்பாட்டினதாலே கொஞ்சநாள் தலைமறைவாகி மறுபடியும் திரும்பி வந்துருக்காப்ல! இந்த வாட்டி ரொம்பவே ரிஸ்க் எடுக்காம ஹிந்தில சல்மான்கான் நடிச்ச தபாங்கையே ரிமேக்கிட்டாப்ல. நல்லதுதேன். ஆனாப்பாருங்க ஹிந்தில காமெடியா நக்கலா எடுத்த படத்த சிம்புவ வச்சு ஏன் இம்பூட்டு சீரியஸா எடுக்கோணும்னு கேக்கேன்! முழு உழைப்பகொட்டி படமெடுத்துருந்தாலும் ஆக்கின சோத்துல பல்லிவிழுந்த மாதிரி சிம்புவச்சுலா படம் எடுத்துருக்காரு!

நேர்மையான போலீஸு + பயங்கரமான கெட்ட வில்லன் + அம்மாவ கொன்னுடறான் வில்லன் + ஹீரோவோட தம்பி துரோகம் பண்றான் + ஹீரோயின லவ்பண்றான் ஹீரோ + கிளைமாக்ஸ்ல தம்பி திருந்தி வில்லன் சாவுறான்! இவ்ளோதான் கதை. நான் பொறக்கறதுக்கு முன்னாடி வெளியான பழிவாங்கற படம், போலீஸ் படம், அம்மா சென்டிமென்ட் படம்னு அந்தப் படங்களோட கதைகளையெல்லாம் மிக்ஸ் பண்ணி எடுத்த ஹிந்தி படத்தோட கதையப்போயி என்ன மைசூருக்கு காசு குடுத்து ரைட்ஸ் வாங்கி ரிமேக் பண்ணோனுங்கறேன்! அதுமில்லாம இன்னைக்கு பம்பைக்காரனே தமிழ்படத்த ரீமேக்கிட்டு திரியும்போது ஹிந்தி படத்த ரிமேக்கறதெல்லாம் சிம்புவாலதாம்லே முடியும்! (விஜய் காட்டிய வழியா இருக்கலாம்) அது புரொடியூசர் படும் பாடு நமக்கேன் பொச்செரிச்சல்றேன்.

அந்த பொண்ணு ஹீரோயினு படம் முழுக்க அங்கிட்டிருந்து இங்கிட்டு நடக்குது.. இங்கிட்டுருந்து அங்கிட்டு நடக்குது.. ஒன்னு ரெண்டு வசனம் பேசுது.. பாட்டுல கூட சிம்புதான் ஆடுதாரு. ஹீரோயின் நடந்துகிட்டே இருக்குது. அஜித்து அண்ணன்கிட்ட நடிப்பு டிரெயினிங் எடுத்துகிட்ட புள்ளையோ என்னவோ.. இடுப்புல தங்கத்துல அர்ணாகொடியோ என்னவோ மாட்டிகிட்டு ஜிங்கு ஜிங்குனு செம நடப்பு குட் இடுப்பு! அதிர்ச்சியூட்டும் வகைல ஜித்தன் ரமேஷ் ஓரளவு சுமாரா நடிச்சிருக்காப்ல..

வில்லன் நடிகர் சோனுசூட் எப்பயும் போல ஏஏஏஏஏஏய் னு கத்தறதையும் டாடா சுமோவுல பாஞ்சு பாஞ்சு துறத்தறதையும் நல்லா திருப்தியா செஞ்சுருகாப்ல. படத்தோட ஒரே சந்தோசம் பேரரசு இஸ்டைல் மசாலா வசனங்கள்! அப்புறம் அந்த கலாசலா கலாசலானு எல்ஆர் ஈஸ்வரியோட பாடி மல்லிகா ஷெராவத்து ஆடற குத்துப்பாட்டு.. அந்த ஒரே ஒருபாட்டுக்காக படம் பாக்கலாம். சந்தானம் போர் அடிக்க ஆரம்பிச்சிருகாப்ல.. அடுத்தவருஷம் ரீல் அந்துரும்னுதேன் தோணுது.

இத்தன கொடுமைக்கு மத்தில கிளைமாக்ஸ்ல சிம்பு சிக்ஸ்பேக்ஸ் பாடியெல்லாம் காட்டுறாரு. கண்ணு ரெண்டையும் தோண்டி காக்காய்க்கு போட்டுரலாம்போல கொலைவெறி வருது..

மத்தபடி பெருசா சொல்ல ஒன்னுமில்லே.. அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமானு ஒரு படம். எங்களுக்கும் மசாலா படம் புடிக்கும்லே.. ஆனா இது மொன்னை மசாலா. ஒன்னும் அர்ஜன்ட் இல்லலே... டிவில போடுறப்ப பொறுமையா பாத்துக்கலாம்.

07 December 2011

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் டீ சமோசாவும்!




தமிழ் இலக்கிய வரலாற்றில் இப்படியொரு கூட்டத்தை யாருமே கண்டிருக்க முடியாது. ஜெயகாந்தனுக்கு வராத கூட்டம்.. சுஜாதாவுக்கு கூடாத கூட்டம்.. காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்தது. வந்தவர்கள் வாய் பிழந்தனர். இலக்கியவாதிகள் வயிறெரிந்தனர். வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் வாய்வலிக்க வாழ்த்தி மகிழ்ந்தனர். குடும்பத்தோடு ஏதோ திருமணவிழாவிற்கு வந்ததுபோல வாசகர்கள் கூடியிருந்தனர். வாசகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். வெளியீடு முடிந்ததும் குடித்துத்தீர்த்தனர். வெளியிடப்பட்ட புத்தகம் அரங்கிலேயே 500க்கும் மேல் விற்றுத்தீர்ந்தன. பதிப்பத்தினரோ ‘’புத்தக கண்காட்சிக்குள் பிரிண்ட் பண்ணின புத்தகங்கள் தீர்ந்துவிடும் என்றே நினைக்கிறோம்.. புக்ஃபேருக்கு புதிதாகத்தான் அச்சிடவேண்டும் போலிருக்கிறது’’ என உற்சாகமூட்டினர். இவையெல்லாம் நடந்தது சாருவின் எக்ஸைல் நாவல் வெளியீட்டில். கனவு போலத்தான் இருக்கிறது.

ஆயிரங்கோடி ரூபாயில் அவதார் ரிலீஸ் பண்ணினவன் கூட இந்த அளவுக்கு விளம்பரம் செய்திருப்பானா தெரியாது.. கடந்த மூன்று மாதங்களாகவே வெறித்தனமாக எக்ஸைல் நாவல் வெளியீடு குறித்து விளம்பரப்படுத்திவந்தார் சாரு. அவரோடு அவருடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த துடிப்பான இளைஞர்களும் இணைய துண்டுபிரசுரம் தொடங்கி போஸ்டர்,பத்திரிகை விளம்பரம் என அசத்தினர். தமிழில் முதன்முறையாக நாவலுக்கு டிரைலரெல்லாம் வெளியிடப்பட்டது. சென்னையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆண்டுதோறும் உயிர்மை என்னும் குடையின் கீழ் நடைபெறுகிற சாருவின் புத்தகவெளியீட்டு விழா இம்முறை அவருடைய வாசகர்களால் அவருடைய வாசகர்களுக்காகவே நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த செலவும் சாருவின் வாசகர்களுடையது என்றே அவதானிக்கிறேன்.

இதெல்லாம் சிலருக்கு காமெடியாக இருந்தாலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்த நாவலும் இதுவரை கண்டிராதது. இத்தனை விளம்பரம் எதற்கு? வேறு வழியில்லை செய்துதான் ஆகவேண்டும். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரான சுஜாதாவின் புத்தகமே பத்தாயிரம்தான் விற்கிறதென்றால் காரணம் என்ன? அந்த கேள்விக்கான விடையை தன்னுடைய இந்த நாவல் வெளியீட்டின் மூலம் அடிகோடிட்டு காட்டுகிறார் அல்டிமேட் ரைட்டர் என்று அவருடைய வாசகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சாரு!

ஆறு மணி நிகழ்ச்சிக்கு ஆறேகாலுக்குத்தான் செல்ல முடிந்தது. கோட் சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு ரிசப்ஷனில் மணமகளோடு கெக்கேபிக்கே என்று அசட்டு சிரிப்பை உதிர்க்கிற மணமகனைப்போல அழகாக காட்சியளித்தார் சாரு! இப்போதெல்லாம் தலைக்கு டை அடிப்பதில்லை போல.. வெள்ளைத்தலையும் குறுந்தாடியுமாக வெளிநாட்டு எழுத்தாளரைப்போல இருந்தார். அவருடைய பிரமாண்டமான புகைப்பட பேனர் வைக்கப்பட்டு மேடையில் மூன்றே மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இந்திரா பார்த்தசாரதி, வாலிப கவிஞர் வாலி, சாரு மூவர்மட்டும்தான் பேசப்போவதாக சாரு அறிவித்தார். அதற்கு முன்னால் இருபது வாசகர்களுக்கு தன்னுடைய புத்தக பிரதியை மேடையில் வழங்கினார்.

முதலில் பேசிய வாலி சாருவின் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட்டேன்.. அற்புதம் சூப்பர் ஆஹா ஓஹா.. என்றவர் எந்த குறிப்பிட்ட புத்தகம் குறித்தும் பேசவில்லை , விமர்சிக்கப்படுபவன்தான் அறிவாளி என்று இன்னும் பேச, சுவாரஸ்யக்குறைவினால் தூக்கம் கண்களை தழுவியது. அவர் சொன்னதில் எனக்கு நினைவில் இருப்பது இதுதான்.. இந்த எக்ஸைல் நாவல் சாஃப்ட் போர்னாகிராபி கிடையாது ஹார்ட் போர்னாகிராபி என்றார். விழித்துப்பார்க்கும் போது இந்திரா பார்த்தசாரதி இப்படி ஒரு கூட்டத்தை வாழ்க்கைல பார்த்ததில்லை என்றார். நான் டெல்லியில் இருக்கச்சே அவாள்லாம் சேந்துண்டு.. என்று அவர் சின்ன வயசாக இருக்கச்சே ஆதாம் ஏவாளோடு இலக்கியம் வளர்த்த கதையை சொல்லிக்கொண்டிருக்க நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.

சென்ற ஆண்டு தேகம் நாவல் குறித்து பேசிய மிஷ்கின் , இது சரோஜா தேவி என்று குறிப்பிட்டதையே நாசூக்கான மொழியில் இபாவும் வாலியும் குறிப்பிட்டு பேசியதாகவே கருதுகிறேன். ஆனால் சாரு மிஷ்கினை திட்டியது போல இவாளை திட்டமாட்டார் என்றே நினைக்கிறேன்.

மதன் கம்பீரமாக கர்ஜிக்கும் சிங்கத்தினை போல நிகழ்ச்சியின் பாதியில் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவரை பேச சாரு அழைத்தார். அரை மணிநேரம் பேசினார்.. சாரு ஒரு உலக எழுத்தாளர்.. அவரை நாம கொண்டாடனும்.. அவருதான் மாஸ்.. மத்ததெல்லாம் தூஸ், இது உலகத்தரம் வாய்ந்த நாவல் என்பது கணக்காக நிறைய பாராட்டி பேசினார். நான் சாருவின் ரசிகனாகிட்டேன் என பெருந்தன்மையோடு அறிவித்தார்.

அதற்கு பிறகு இந்த தமிழ் இலக்கிய சமூகத்தில் தான் சந்திக்கிற பெருந்துன்பங்களை பட்டியலிட்டு பேசினார் சாரு. இனிமேல் நான் தமிழில் எழுதப்போவதில்லை என அறிவித்தார். அதாவது தமிழில் எழுதி ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துதான் வெளியிடலாம் என்ற யோசனையில் இருக்கிறேன் என்றார். பிறகு மூலிகை வளம்,சித்தமருத்துவம்,பழம்பெருமை பற்றியெல்லாம் பேசினார். வாசகர்வட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். சாரு பேசிமுடித்த அடுத்த நொடி பலரும் அவரை சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். பதிப்பகத்தார் பத்ரி நிகழ்ச்சி முழுவதையும் வீடியோவாக பதிவு செய்துகொண்டார். ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சி படு போர்! சாருவின் நிகழ்ச்சிகளில் நாம் எதிர்பார்க்கிற அந்த ஜோர் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் சாரு ரொம்பவே அடக்கிவாசித்ததால் என்பதாலோ அல்லது கூட்டத்தில் உரையாற்றிவர்களின் பேச்சாலோ இருக்கலாம். ஆனால் இந்தமுறை ஏமாற்றமே!

சாருவின் குசேலரான ஷோபாசக்தியும் நெருங்கிய நண்பர் எஸ்ராவும் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. எழுத்தாளர் மாமல்லன் ஜிகஜிகாவென வெளிர்பச்சை நிற டிஷர்ட்டில் வந்து பயமுறுத்தினார். நிகழ்ச்சி முழுக்க ரொம்பவே அவதியுற்றார். மனுஷ்யபுத்திரன் வருவார் என கிசுகிசுக்கப்பட்டது. அவரும் வரவில்லை. சாருநிவேதிதா உயிர்மையை திட்டுவார் என எதிர்பார்த்து வந்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம். உயிர்மையில் பத்தாண்டுகளாக சினிமாவிமர்சனம் எழுதினேன் எனக்கு பத்துகாசு கூட கொடுக்கவில்லை என பழைய பாட்டையேதான் சாரு பாடினார். அதோடு அந்த நேரத்தில் என்னுடைய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு வேலைகளை பார்த்திருந்தால்.. என்றெல்லாம் பேசினார்.

புத்தகம் அரங்கிலேயே விற்கப்பட்டது. அரங்கத்திற்கு வந்திருந்த பலரும் எக்ஸைலும் கையுமாக அலைந்தனர். சாருவுக்கு ஆகாதவர்கள் பலரும் புத்தகம் வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் திரிந்தனர். நானும் வாங்கலாம் என கடைக்கு போனால் விலை 200,.. 250ரூபாய் மதிப்புள்ள புத்தகம் 200க்கு கொடுக்கப்பட்டது.

ஏற்கனவே பலமுறை எழுதியதுதான் சாருவைப்போலவே அடியேனும் பரம ஏழை. 200ரூபாய்க்கு புத்தகம் வாங்கி படிக்கிற வசதி சமகாலத்தில் அடியேனுக்கு இல்லை. அதனால் புத்தகம் வாங்கியவர்களை ஏக்க பெருமூச்சோடு வேடிக்கை பார்த்தேன். தோழர் ஒருவர் வாங்கிய புத்தகத்தை ஒன்மினிட் ப்ளீஸ் என கேட்டு வாங்கி புரட்டினேன். காசுகொடுத்து வாங்க முடியவில்லையே என்கிற சோகம் மனதை கவ்வியது! கண்களில் நீர் கசிந்தது. துடைத்துப்போட்டுவிட்டு.. அதைவிடுங்க எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்.

ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்தது. என்னை பொருத்தவரையில் இந்த நிகழ்வை அவருடைய வாசகர்கள் எந்தகுறையும் வைக்காமல் சிறப்பாக நடத்தி காட்டியிருக்கின்றனர். பதிப்பத்தின் பெரிய உதவியோ இலக்கியவாதிகளின் அரவணைப்போ எதுவுமேயில்லாமல் வெறித்தனமாக வேலை பார்த்து இவ்வளவு பிரமாண்டமான விழாவை நடத்திய சாருவின் வாசகர்களுக்கு பாரட்டும் வாழ்த்துகளும். இதுபோல வாசகர்கள் தமிழில் எந்த எழுத்தாளருக்கும் இதுவரை கிடைத்ததில்லை என்பது நிச்சயம். நாகேஸ்வரராவ் பார்க்கில் போய் துண்டுபிரசுரம் கொடுக்கிற அளவு அர்ப்பணிப்பை தமிழ் இலக்கயவாசகர்களிடையே மைக்ரோஸ்கோப்பில் தேடினாலும் அகப்படுமா தெரியவில்லை. இது இலக்கியத்திற்கு நல்லதா என்பதையும் தாண்டி என்னை வெகுவாக கவர்ந்தது.

என்னதான் பிரமாண்டமான இலக்கிய கொண்டாட்டமாக இருந்தாலும் என்னளவில் பெரிய ஏமாற்றம்தான். காரணம் டீ காஃபி சமோசா எதுவுமே கொடுக்கவில்லை. ஸ்பான்சர் கிடைக்கவில்லையோ என்னவோ? சமோசா இல்லாமல் என்னத்த இலக்கியம் வளர்த்து.. அடப்போங்கப்பா!

01 December 2011

மாவுத்து, காவடி மற்றும் ஷங்கர்




யானைகுறித்த ஆராய்ச்சிக்காக முதுமலைக்கு சென்றிருந்தபோதுதான் மாதவன் பழக்கமானார். அவர் ஒரு மாவுத்து. மாவுத்து என்றால் யானைப்பாகன் என்று அர்த்தம். மிக இனிமையான மனிதர். முதுமலையில் யானைகளோடு யானைகளாக வாழ்பவர். யானைகள் குறித்து பல அரிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவரோடு ஒருநாள் முழுக்க சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன யானைக்கதைகள் ஏராளம். பாகன்களுக்கும் யானைகளுக்குமான உறவு அலாதியானது. ஒரு நாவலே எழுதலாம்.

மாவுத்து மாதவனுக்கு எல்லாமே ஷங்கர்தான்! தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். கையை தூக்கி கொட்டாவி விட்டபடி வாசலுக்கு வந்தால்.. அப்படியும் இப்படியும் வாலை ஆட்டிக்கொண்டு இலைதளைகளை தின்றபடி காத்திருப்பான் ஷங்கர்! தினமும் கண்விழிப்பது அவன் முகத்தில்தான். ஒருநாள் கூட அவனைவிட்டு பிரியமாட்டார். மாதவனை கண்டதும் உற்சாகமாகி வ்ர்ர்ர்ராங் என தும்பிக்கை உயர்த்தி கத்தி கூச்சலிடுவான் ஷங்கர். புன்னகைத்தபடி அவனருகில் சென்று அவனுடைய காது மடல்களை தடவிக்கொடுத்தால்.. குழைவான்.

அவனை கட்டியிருக்கும் சங்கிலிகளை கழட்டிப்போட்டுவிட்டு.. இருவரும் அங்கிருந்து கிளம்பினால் அடுத்து காட்டுவழிச்சாலை. காட்டிலிருந்து வேப்பங்குச்சியை உடைத்து பல்லு விலக்கியபடி நகர, பெரிய மரத்தில் நல்ல பசுங்கொம்பாய் ஷங்கரும் உடைத்து மென்றபடியே நடைபோடுவான். அருகிலே ஓடும் ஆற்றில் இரண்டுபேருமாக குத்தாட்டம் போட்டு குளித்து எழுந்து.. கால்மணிநேரம் காலார நடந்தால் முதுமலையிலிருக்கிற யானைகள் கேம்ப் வந்துவிடும்! அங்கே ஷங்கருக்கான ‘’டயட் பிரேக் ஃபாஸ்ட்’’ பக்காவாக தயார் செய்து வைத்திருப்பான் ‘’காவடி’’ கணேஷ்!


வேகவைத்த கொள்ளு நான்கு கட்டிகள், ராகி களி இரண்டு கட்டி, அரிசி சோறு மூன்று கட்டி, ஒரு கைப்புடி உப்பு, சர்க்கரை, கொஞ்சம் புரதச்சத்து பவுடர் என எல்லாமே வரிசையில் காத்திருக்கும். ஹாயாக போய் அதன் ‘’பார்க்கிங் ஸ்டான்டில்’’ நின்றுகொண்டால் மேலே சொன்ன அனைத்தையும் மொத்தமாக போட்டு பிசைந்து உருண்டையாக்கி கொண்டுபோய் குட்டிப்பாப்பாவுக்கு ஊட்டுவது போல ஊட்டிவிடுவார் மாதவன்! பொறுமையாக மென்று தின்றபின் அடுத்த உருண்டை.. ம்ம் வேண்டாம் என்று தலையை ஆட்டி அடம்பிடித்தால்.. சாப்பிடு கண்ணா என பிரமாண்ட காதை பிடித்து திருகி.. சாப்பிடவைக்கிறார். சாப்பிட்டு முடித்ததும் ஜாலியாக காட்டுக்குள் கிளம்பினால் மாலைவரை காடு காடு காடுதான்!

காட்டுக்குள் சுற்றும்போதே வேண்டிய அளவு இளைதளைகளை பறித்து ஒன்றாக கட்டி தந்தங்களுக்குள் சொருகி வைத்துக்கொண்டு, ஆற்றுப்பக்கமாக மதியநேர குளியலை முடித்துவிட்டால் ஸ்ட்ரைட்டா முகாம்தான்! முகாமில் கொஞ்சம் ஓய்வு. பிறகு மீண்டும் இருவருமாக வீடு நோக்கி பயணிக்கத்தொடங்கிவிடுவார்கள்.

‘’இதோ இந்த யானைக்கு நான்ன்னா அவ்ளோ இஷ்டம்ங்க.. அப்படியே தும்பிக்கையால கட்டிப்புடிச்சிக்குவான். ஒருமணிநேரம் கூட பிரிஞ்சி இருக்கமாட்டான். கண்ணெதிர்லயே இருக்கணும். குழந்தைமாதிரி.. ஒருவயசு குட்டிலருந்து இவனோடதான் வாழறேன். இவனுக்கு நான்தான் அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,காதலி எல்லாமே!’’ என சிரிக்கிறார் ஒரு மாவுத்து. இவர் மட்டுமல்ல முதுமலையில் இருக்கிற 24யானைகளுக்கும் ஒரு மாவூத்து.. ஒவ்வொருவரும் தன் உயிராக இந்த யானைகளை நேசிக்கின்றனர்.

முதுமலை யானைகள் முகாமில் ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு பாகன்கள். பாகன்களை மாவுத்து என்றே அழைக்கின்றனர். லாரி டிரைவருக்கு ஒரு க்ளீனர் போல ஒவ்வொரு மாவுத்துக்கும் ஒவ்வொரு காவடி! யானையை குளிப்பாட்டுவதில் தொடங்கி அதற்கு சாப்பாடு தயார் செய்வது வரை எல்லாமே காவடிகளின் வேலை. யானையை கட்டுப்படுத்துவது அதற்கு உணவூட்டுவது அதை கவனமாக பார்த்துக்கொள்வது மாவுத்தின் வேலை. குக்கா புக்கா என்று ஏதோ புதுமாதிரியான பாஷையில் யானைகளோடு எப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றனர் இந்த மாவுத்துகள்.

அதுவும் நாய்க்குட்டி போல இவர்களுடைய பேச்சினை அப்படியே கேட்கின்றன. நில் என்றால் நிற்பதும் உட்காரென்றால் உட்காருவதும்.. குதி என்றால் குதிப்பதில்லை.. யானைகள் குதிக்காது. ஆனால் மனிதர்களின் அன்புக்கு எப்போதுமே கட்டுப்பட்டிருக்கின்றனர்.
‘’இதோ இங்கே ரெண்டு பேர் இருக்கானுங்க பாருங்க ஒருத்தன் பேரு விஜய் இன்னொருத்தன் சுஜய், இரட்டை பயலுக சரியான முரட்டு பசங்க.. நம்ம பேச்சை மட்டும்தான் கேப்பானுங்க’’ என்று அறிமுகப்படுத்துகிறார் இன்னொரு மாவுத்து. இவர்கள் யானைகளுடன் பேசுகிற இந்த மொழி மிகவும் வித்தியசமானதாகவும் ஆனால் தெரிந்த மாதிரியும் இருந்ததால் அதுகுறித்து விசாரித்தோம்.

‘’இதுங்களா, உருது,மலையாளம்,தமிழ்னு குறிப்பிட்டு இதானு சொல்லமுடியாத அளவுக்கு நிறைய பாஷைகள் கலந்த பாஷைங்க. பரம்பரையா இதை கத்துக்குறோம். காவடிங்களுக்கு கத்துக்குடுக்கறோம்’’ என்கின்றனர். ஒரு குக்கா புக்கா கட்டளைகள்தான் என்றாலும் யானை தன்னுடைய பாகன் சொன்னால் மட்டும்தான் கேட்டு நடக்கின்றன. மற்றவர்களுக்கு பெப்பேதான்!

ஒரு காலத்தில் பெரிய மரங்களை தூக்கிச்செல்லவும் சுமைகளை ஏற்றிச்செல்லவும் இந்த யானைகள் பயன்படுத்தப்பட்டாலும் அண்மைக்காலங்களில் இவை குமுகியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதென்ன குமுகி! போலீஸ் யானைனு சொல்லலாம்.

‘’ஊருக்குள் எங்கேயாவது காட்டுயானைகள் நுழைந்தாலோ, வயலுக்குள் புகுந்துகொண்டு வெளியேறாமல் இருந்தாலோ, தன் கூட்டத்தை விட்டு சாலைகளுக்கும் முக்கிய பகுதிகளுக்கும் வந்துவிடுகிற யானைகளை விரட்ட மனிதர்களால் முடியவே முடியாது. அதிலும் சில குறும்புக்கார காட்டு யானைகள் உண்டு. என்ன செய்தாலும் நகராது. அந்த நேரத்தில்தான் நம்ம ஸ்பெஷல் கும்கி யானை டீம் அங்கே களமிறங்கி மொத்தமா விரட்டுவாங்க.. இவங்க போயிட்டா வேலை முடிஞ்சா மாதிரிதான்!’’ என்று சிரிக்கிறார் வன அலுவலர்.

முதுமலை சரணாலயத்தில் இருக்கிற இந்த போலீஸ் யானைகளுக்கு டியூட்டி காடுகளுக்குள்தான். வேட்டைத்தடுப்பு காவலர்களோடு காட்டுக்குள் ரோந்து சுற்றும். எல்லைதாண்டும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும். டியூட்டி நேரம் போக மற்ற நேரங்களில் ஓய்வு மட்டும்தான். இந்த குமுகி யானைகளை கண்டால் காட்டுயானைகள் தெறித்து ஓடுமாம்!

‘’இங்கே இருக்கிற ஒவ்வொரு யானையும் எங்களுக்கு நண்பர்களைப்போல அதனால் அவர்களுடைய நலனில் மிகுந்த அக்கறையுண்டு எங்களுக்கு! ஒவ்வொரு யானையும் காலையில் என்ன சாப்பிடவேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற டயட் பிளானை இங்கேயே இருக்கிற மருத்துவர் அளித்துவிடுவார், அந்த அளவு உணவுதான் தரப்படும், நோய்வாய்ப்பட்டால் உடனடியாக மருந்துகளும் சிகிச்சையும் அளிக்கப்படும். மற்றபடி எங்க டிபார்ட்மென்ட்டில் எங்களோடு பணியாற்றுகிற சகபணியாளராக நண்பராகவே இவர்களும் இருக்கின்றனர்! இவங்கள யானைனு சொல்லவே மாட்டோம்.. பேர் சொல்லிதான் அழைப்போம், உலகில் யானைகளை விடவும் மனிதர்களுக்கு நெருக்கமான அன்பை பகிர்ந்துகொள்கிற விலங்கு எதுவுமே கிடையாது!’’ என அடித்துச்சொல்கிறார் வனஅலுவலர்!

அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டுகின்றனர் விஜயும் சுஜயும்!




செம்மொழியான்!



இங்கே புதிதாக இணைந்தவர் மிஸ்டர்.செம்மொழியான் என்கிற வேது! வயது ஒன்று. காட்டில் எப்படியோ தாயை பிரிந்த இந்த குட்டி யானை முதுமலை முகாமில் பத்திரமாக வளர்க்கப்படுகிறது. செம்மொழி மாநாடு நேரத்தில் கிடைத்ததால் செம்மொழியான் என பெயர் வைத்துவிட்டனராம்! இவருக்கு மூன்று வேலையும் லேக்டஜன் 2 கொடுக்கின்றனர். ஆறுமாதம் வரை ட்யூப் மூலமாக லேக்டஜன் ஒன்று கொடுக்கப்பட்டதாம். ஒன்றரை வயதுக்குமேல்தான் சாதாரண உணவுகள் கொடுக்கப்படுமாம். நாம் கையை நீட்ட பாசத்தோடு நம் கைகளை பற்றிக்கொள்ள பிரிந்து வர மனமேயில்லாமல் கிளம்பினேன். என்னதான் தமிழ்ப்பெயர் சூட்டினாலும் ஷார்ட்நேம் முக்கியமென்பதால் வேது என அழைக்கின்றனர்.

இவருக்கு துணையாக இன்னொரு குட்டியும் இருக்கிறாள் அவள் பெயர் வேதா. அவளுக்கு வயது ஆறுமாதம்தான். இன்னும் ரொம்ப குட்டியாக இருக்கிறாள். கிருமித்தொற்று உண்டாகும் என யாரும் அவளை பார்க்க அனுமதிப்பதில்லை. நான் மட்டும் சிறப்பு அனுமதியில் பார்த்தேன். தூங்கிக்கொண்டிருந்தாள். படமெடுக்க மனமில்லாமல் கிளம்பினேன்.