Pages

27 June 2012

கடவுளே உனக்கு கருணையே இல்லையா?






இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே யதார்த்த படங்களாக பார்த்து பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சிபோச்சு.. விளிம்பு நிலை மக்களின் சொல்லப்படாத பக்கங்களை புரட்டி புரட்டி.. விரல்கள் பத்தும் வீங்கிபோச்சு. அழுக்கு முகங்களையும் இருட்டு மனிதர்களையும் ரத்தம் சொட்டும் அரிவாள்களையும் பார்த்து பார்த்து கிட்டத்தட்ட அரைமென்டலாகித்தான் அலைந்துகொண்டிருக்கிறோம். இதுமாதிரி நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாக மூச்சுவிடவும் உழைச்ச களைப்பு தீரவும் வீங்கின நெஞ்சை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்... நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, நிறைய காமெடி, கொஞ்சம் ரொமான்ஸ், ஒருகவர்ச்சி டான்ஸ் என நல்ல மசாலா படமொன்று வராதா என ஏங்கிக்கொண்டிருந்தோம்.

உன்னதமான ஆகச்சிறந்த மசாலா படம் வேண்டி பெருமாள் கோயிலுக்கு பொங்க வைத்து கடாவெட்டி பிரார்த்தித்தோம். தவமாய் தவமிருந்தோம். இந்த கடவுள் இருக்கிறாரே.. கடவுள்.. கொஞ்சம் கூட கருணையேயில்லாதவர். முதலில் விக்ரம் வாழ்ந்த ராஜபாட்டையை நமக்கு பரிசளித்தார்.. அய்யோ அம்மா.. என்று கதறினோம்.. நம்முடைய குரல் கடவுளின் காதுகளை எட்டவேயில்லை. பிறகு சிம்பு நடித்த ஒஸ்தியை வழங்கினார்.. கடவுளே எங்கள விட்டுடு.. தெரியாம கேட்டுட்டோம் என தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டோம்..

எங்களுக்கு மசாலாவும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம் ஆளவுடு என கெஞ்சினோம்.. ஆனால் கொஞ்சம் கூட இதயத்தில் ஈவு இரக்கமேயில்லாத கடவுள் இதோ இப்போது சகுனியை கொடுத்திருக்கிறார்.. நாங்க என்ன பாவம் செஞ்சோம்.. கடவுளே... முடியல..

‘’மைநேம் இஸ் ரஜினி.. ஐயாம் கமல்’’ என மிரட்டலாக.. ட்ரைலரிலேயே அடடே போடவைத்த சகுனி சென்ற வாரம் ரிலீஸானது. உதயம் தியேட்டரில் நுழையும்போதே ஒரே கூச்சல்.. ஆராவாரம்.. குத்தாட்டம்தான்.. கும்மாளம்தான்.. அடேங்கப்பா கார்த்திக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சர்யகுறியை தலைக்குமேல் போட்டு உள்ளே நுழைந்தோம்.. படம் ஆரம்பித்து. பத்தே நிமிடங்கள்தான்.. ஜஸ்ட் டென்மினிட்ஸ்.. கூச்சலும் கும்மாளமும் அடங்கியது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்னும் பாடலுக்கேற்ப நாம் இருப்பது உதயம் தியேட்டரா அல்லது கண்ணம்மாபேட்டை சுடுகாடா என்கிற சந்தேகமே வந்துவிட்டது!

ஓக்கே திஸ் டைரக்டர் நமக்கு வேற ஏதோ வித்தியாசமான படம் காட்டப்போறார் போல.. நாமதான் வேற எதையோ எதிர்பார்த்து வந்துட்டோம்.. லெட் அஸ் கான்சென்ட்ரேட் ஆன் திஸ் மூவி என்று மும்முரமாக படத்தை பார்க்கத்தொடங்கினோம். கடவுள் சிரித்தார்!
தன் வீட்டை இடிக்க போகிறார்கள் என மந்திரியிடம் மனு கொண்டு போய் கொடுக்கிறார் ஹீரோ.. மந்திரி மனுவை வாங்கிக்கொள்கிறார்.. ஹீரோ மகிழ்ச்சியாக மந்திரிவீட்டு வாசலில் இருக்கிற தள்ளுவண்டி பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிடுகிறார்.. பஜ்ஜி ஆயிலை கசக்க பேப்பரை எடுத்தால் ஹீரோ கொடுத்த மனு! ஹீரோ அப்படியே ஷாக் ஆகிறார். வாவ் வாட் ஏ சீன்.. நூறாண்டு இந்திய சினிமா இப்படியொரு பிரமாதமான காட்சியை கண்டதுண்டா! இதுமாதிரி பல காட்சிகள் அடங்கிய அற்புதமான திரைப்படம்தான் சகுனி!

படத்தின் முதல் பாதி முழுக்க அப்பாவியாகவே திரிகிறார் ஹீரோ.. எலி ஏன் அப்படி திரியுது என்றால் இரண்டாம்பாதியில் முதலமைச்சரை எதிர்த்து சண்டை போடுகிறார். முதலமைச்சரே இவரை பார்த்து அஞ்சுகிறார். எதிர்கட்சி தலைவரை முதல்வராக்குகிறார். அதற்காக அவர் செய்யும் சகுனி வேலைகள்.. தமிழ்சினிமா காணாதது! இறுதியில் ஸ்டேட் கவர்மென்ட்டு முடிந்து சென்ட்ரல் கவர்மென்ட்டும் அவரை அழைப்பதோடு படம் முடிகிறது. செகன்ட் பார்ட் ஹிந்தியில் போல.. நாம தப்பிச்சோம்.. பானிபூரி பாய்ஸ் செத்தானுங்க... மூணாவது பார்ட் ஹாலிவுட்டா இருக்கலாம்.. வெள்ளை மாளிகையை காப்பாற்ற குஷ்பூவை அமெரிக்க அதிபரா ஆக்குவார்னு தோணுது!

சந்தானம் படம் முழுக்க பேசிக்கொண்டேயிருந்தால் படம் ஹிட்டாகிவிடும் என்று யாரோ இயக்குனரிடம் சொல்லித்தொலைத்திருக்க வேண்டும்.. படம் முழுக்க வாய் வீங்க வீங்க சந்தானம் பேசுகிறார். சில இடங்களில் அவர் மட்டும்தான் படத்தையே காப்பாற்றுகிறார். சமீபத்தில் வெளியான பல படங்களிலும் குடிப்பழக்கத்தை ஆதரிப்பது போல வசனங்கள் இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதையெல்லாம் யாரும் எதிர்த்து போராடமாட்டார்களா?

ஹீரோ கார்த்தி சிரிச்ச மூஞ்சியாகவே ஒரே ரியாக்சனுடம் படம் முழுக்க வருகிறார். விஜயை போலவே வளைந்து வளைந்து நடனமாடுகிறார்.. பஞ்ச் டயலாக் பேசுகிறார்! நல்ல வேளை இந்த படம் செம ஃப்ளாப்! இல்லாட்டி போன இன்னும் பத்து படத்திலாவது இதேமாதிரி பஞ்ச் டயலாக் பேசி டான்ஸ் ஆடி நம்மை தாலியறுத்திருப்பார்! விஷால்,பரத் வரிசையில் இந்த தளபதியும் இணைந்து நாட்டுக்கு நன்மை செய்வார் என்பது தெரிகிறது.
படமும் சரியல்லை.. ஹீரோயினும் சரியில்லை.. இயக்குனருக்கு ஆன்ட்டி போபியோவோ என்னவோ ரோஜா,ராதிகா என சீரியல் ஆன்டிகளை வேறு அள்ளிக்கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார். ம்ம்.. என்னத்த சொல்ல.. வில்லனாக பிரகாஷ்ராஜ் இந்தப்படத்திலும் முட்டாளாகவே வாழ்கிறார். கத்துகிறார். சவால் விடுகிறார். டேய்.. என்கிற வார்த்தையை விதவிதமான மாடுலேஷன்களில் சொல்கிறார்.

படத்தில் டெக்னிக்கல் சமாச்சராங்களை கவனிக்கவே முடியாத அளவுக்கு படம் அவ்வளவு சிறப்பாக இருந்ததால் அதைப்பற்றியெல்லாம் எழுதவே தோணலை. படத்தின் இயக்குனர் சிறந்த வசனகர்த்தாவாக இருக்கலாம். படத்தின் பல வசனங்கள் நச்சென்று இருந்தன.

இந்த உலகப்படம் பார்க்கிற அறிவுஜீவிகள்தான் மசாலா படம் பார்க்கிறவனை முட்டாளாக நினைத்து பீட்டர் விடுவதை இச்சமூகம் கண்டிருக்கிறது.. வரவர மசாலா பட இயக்குனர்களே தன்னுடைய ரசிகனை முட்டாளாக நினைக்கத்தொடங்கியிருப்பது மசாலா பட ரசிகர்களை வெறிகொள்ள செய்துள்ளது..

பைனலாக ஒன்றே ஒன்றுதான்.. கடவுளே உனக்கு கருணையே இல்லையா.. மொக்கை மசாலா படங்களிடமிருந்து எங்களை காப்பாற்று யதார்த்த படமொக்கைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்!