Pages

30 October 2012

வெட்டி எறியப்படும் நம் சிறகுகள்!







நாம் எல்லோருமே தினத்தந்தி செய்தி படித்துவிட்டு தீர்ப்பு எழுதும் காமன்மேன்கள்தான். நாம் இலக்கியவாதிகளோ அறிவுஜீவியோ கிடையாது. சாதாரண பொதுஜனம். செய்தியின் பின்புலத்தையும் அதன் அரசியலையும் ஒருநாளும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர விசாரிக்க நமக்கெல்லாம் துப்புகிடையாது. ஸ்டிரைட்டா ஹீரோதான். என்னது செக்ஸ் டார்ச்சரா.. கற்பழிப்பு வழக்கை போட்டு அவனை புடிச்சி தூக்கில போடுங்க சார் என அறைகூவல் விடுத்துவிட்டு நம்முடைய வேலைகளில் மூழ்கிவிடுவோம்.

ஆனால் எதையும் பகுத்தறிந்து ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்லுகிற முற்போக்காளர்களாக அறியப்படும் சில எழுத்தாளர்கள் கூட அதே பாணியில் தீர்ப்பு எழுதுவதையும், இதுதான் சாக்கு என நானும் உத்தமன்தான்.. பெண்களை தாயாக மதிக்கிறேன்.. என நிருவ முயல்வதையும் ‘’ பிரபல பாடகி சின்மயி - ஆபாச ட்விட்’’ விவகாரத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. என்னதான் அறிவுஜீவிகள் சொன்னாலும் உண்மை வேறு மாதிரி இருந்தது.

பாடகி சின்மயி விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். இந்த ஃபிளாஷ்பேக் துவங்குவது சென்ற ஆண்டு ஜனவரி மாதம்.
இட ஒதுக்கீடு தொடர்பாக ஆட்சேபனைக்குரிய சில கருத்துகளை சின்மயி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிடுகிறார். அதுபோக தலித்துகளை ‘’சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்’’ என்று வசைமாரி பொழிந்ததோடு, தலித் இயக்க தலைவர்கள் அந்த மக்களை கீழானவர் என சொல்லி சொல்லி ஏமாற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.

இதை படித்த சில இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் அவரோடு வாக்குவாதம் செய்கின்றனர். இதில் ராஜன் பாதியில் பேச ஆரம்பிக்கிறார். சில ட்விட்டுகளில் மிகவும் மென்மையாக பேசிவிட்டு பிறகு விலகிவிடுகிறார். இதற்கு பிறகும் கூட ராஜனுக்கும் சின்மயிக்கும் இடையே ஒரு சண்டையும் வம்பும் இருந்ததாக தெரியவில்லை.

அதுகுறித்த முழுமையான பேச்சுகள் இந்த இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த விவாதத்தை இங்கே காணலாம்.

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

அதற்கு பிறகு அதே ஜனவரியில் இலங்கை கடற்படையால் கொல்லப்படும் மீனவர்களை காக்க ட்விட்டரில் ஒரு இயக்கம் தொடங்கப்படுகிறது. அதில் தமிழர்கள் மட்டுமல்லாது வட இந்தியர்களும் ஆர்வத்துடன் இணைந்து மீனவர்களின் உயிருக்காக குரல் கொடுக்கின்றனர். அந்த சமயத்தில் ஒரு ஆன்லைன் பெட்டிஷனில் கையொப்பமிட எழுத்தாளர் மாமல்லன் சின்மயியிடம் முறையிடுகிறார். ஆனால் அவரோ நாங்கள்லாம் உயிர்களை துன்புறுத்துறவங்க இல்ல.. வெட்டி சாப்பிடறவங்களும் இல்லை.. என்று பதில் சொல்கிறார்.

இது எந்த அளவுக்கு அந்த இயக்கத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவரையும் கடுப்பேற்றியிருக்கும் என்பது முக்கியம். அதோடு மீனவர் ஆதரவுட்விட்டுகளை ‘’ஓவர் ஆட்டமாருக்கு’’ என வர்ணிக்கிறார். அதோடு இப்போதும் கூட ஏதோ போக்கிரிகள் சேர்ந்து கொட்டம் அடித்ததை போலவேதான் டிஎன்ஃபிஷர்மேன் டேகில் இணைந்தவர்களை பற்றி சிலாகிக்கிறார். அதை கண்டித்த சிலபல ட்விட்டர்களையும் ப்ளாக் செய்கிறார். கெஞ்சி கெஞ்சி கேட்டவர்களை கேலி செய்து ரசிக்கிறார்.

இதுகுறித்த முழுமையான உரையாடல் இங்கே

http://365ttt.blogspot.in/2012/10/tnfishermen-tamil-twitter-conversation.html

இந்த இட ஒதுக்கீட்டு களேபரங்களும் மீனவா மீனை கொன்றா ஸ்டேட்மென்ட்களும் அவரை தமிழ் ட்விட்டர்களிடமிருந்து பிரித்துவிட்டது. அதோடு ஒருமுறை ஹிந்துவில் வெளியான செய்தியின் லிங்கையும் கொடுத்து.. ஏழைகள் மின்சாரைத்தை திருடுகிறார்கள் அவர்களை கண்காணிக்கவேண்டும் என்றெல்லாம் பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போதும் அவரை தமிழில் எழுதும் ட்விட்டர்கள் தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

ட்விட்டரில் தன்னை தொடர்பவர்கள் கேள்விகள் கேட்காமல் கூழைக்கும்பிடு போடவேண்டும் என எதிர்பார்த்தவருக்கு இது எரிச்சலை உண்டாக்கியிருக்க வேண்டும். இதனால் தமிழ் ட்விட்டர்கள் யாருமே அவரை சீண்டுவதேயில்லை.

சின்மயி என்று ஒருவர் ட்விட்டரில் இருந்ததையே எல்லோருமே மறந்து போயிருந்த நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் மார்ச் 10 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகிறது. ”தி அதெர் வாய்செஸ்” என்கிற அந்தக் கட்டுரையில் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் தவிர்த்து மக்களிடையே இப்போது இணைய ஊடகங்கள் மூலமாக மக்கள் செய்தியாளர்கள் பெருகியுள்ளனர் என மகேஷ் மூர்த்தி என்கிற நிருபர் எழுதியிருந்தார். அதில் பொழுதுபோக்குப் பாட்ஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராஜனையும் குறிப்பிட்டிருந்தார். இதுதான் சின்மயி-ராஜன் இடையேயான கைது விவகாரத்தில் மிக முக்கியமான ஒன்று.
அந்த கட்டுரை இங்கே இருக்கிறது

http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx

இதில் பிரபல பாடகியான சின்மயிக்கு உடன்பாடில்லை என்பதும், அவர் அந்த பட்டியலை வெளியிட்ட மகேஷ்மூர்த்தி என்பவருக்கு தொல்லை கொடுத்து ராஜனின் பெயரை நீக்க வேண்டும் என்றும் கோரினார். பல விருதுகளைவென்ற பிரபல பாடகியான பல லட்சம் பேர் பின்தொடரும் தன் பெயரோடு ஆஃப்டர் ஆல் 2000 பேர் கூட தொடராத காமன் மேனான ராஜனின் பெயர் எப்படி இடம்பெற முடியும் என மகேஷ்மூர்த்தியிடம் சண்டைபோடுகிறார்.
ஆனால் மகேஷ்மூர்த்தியோ விடாப்பிடியாக நீக்கமுடியாது என்றும் அதற்கான காரணங்களையும் முன்வைக்கிறார். ஆனால் சின்மயியோ விடாபிடியாக சண்டையிடுகிறார்.

ஒன்று என் பெயரை நீக்கு அல்லது ராஜன் பெயரை நீக்கு என்றெல்லாம் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் பத்திரிகையாளர்மகேஷ்மூர்த்தியோ என்னால் எதுவும் செய்யமுடியாது.. உன்னால் முடிந்ததை செய்துகொள் என விலகிவிடுகிறார். இது சின்மயிக்கு செம கடுப்பை உண்டாக்கியது. இதுதான் ராஜன் மீதான வன்மத்திற்கான முதல் விதை விழுந்த இடம். ராஜனை பழிவாங்க வேண்டும் என அப்போதே முடிவு செய்திருக்கிறார்.

சின்மயியின் இந்த குடுமிபிடி சண்டையை கவனித்துக்கொண்டிருந்த ராஜனும் அவருடைய நண்பர்களும் சின்மயியின் தோல்வியை பகடி செய்யும் வகையில் அசிங்கப்பட்டாள் சின்மயி என்கிற ஹேஷ்டாகின் கீழ் அவரை கேலி செய்தனர். அதிலும் கூட ராஜனோ அவருடைய கூட்டாளிகளோ வரம்புமீறி எதையும் சொல்லவில்லை. குறிப்பாக ஆபாசமாக எதையும் ட்விட்டவில்லை.

ஆனால் கடுமையான மன உளைச்சலிலும் பழிவாங்கு உணர்ச்சியோடு இருந்த சின்மயியோ இந்த ஹேஷ் டேகில் பேசிய அனைவரையும் ப்ளாக் செய்தார். முன்கதை சுருக்கம் தெரியாமல் சின்மயி போன்ற நல்ல பாடகியை ஏன் கேலி செய்கிறீர்கள் என்று தமிழில் ட்விட்டிய ஒரே காரணத்திற்காக என்னையும் கூட ப்ளாக் செய்தார் இந்த பிரபல பாடகி.
இந்த சமயத்தில்தான் சின்மயி தமிழில் ட்விட்டுபவர்கள் அனைவருமே பொறுக்கிகள் என எழுதி ட்விட் செய்து பின் அழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பிறகு சின்மயி தொடர்ச்சியாக ராஜனை சீண்டும் வகையில் ட்விட்டுகள் போடுவதும்.. அதனால் கடுப்பான ராஜனின் நண்பர்கள் சின்மயியை கேலி செய்யும் வகையில் ட்விட்டுகள் போட்டதும் தொடர்ந்தன. ராஜன் இந்த நேரத்திலும் கூட கண்ணியக்குறைவாக எதையும் ட்விட்டவில்லை. ஆனால் கடந்த மார்ச் மாதம் ஒரு கட்டுரை எழுதி அதில் ராஜனை

’பெண்கள் குறித்து வக்கிரமாக எழுதுவதையே பிழைப்பாக் கொண்ட ஒருவனால் ஒரு வருடமாக உளைச்சல் அடைந்து வருகிறேன்’

என்று எழுதுகிறார். இது ராஜனுக்கு பெரிய மன உளைச்சல் உண்டாக்க அவர் அதற்காக ஒரு பதிலை தன்னுடைய வலைப்பதிவில் பகிர்கிறார். அதில் சின்மயியிடம் சில கேள்விகளையும் முன்வைக்கிறார்.
அந்த பதிவை படிக்க

http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

ஆனால் எந்தகேள்விக்கும் எந்த பதிலையும் சொல்லாமல் கமுக்கமாக அமைதியாகிவிடுகிறார் சின்மயி.

அக்டோபர் மாத துவக்கத்தில் டெக்கான் க்ரானிக்கிள் பத்திரிகையின் துணை இதழில் சின்மயி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். ட்விட்டரில் உள்ளவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் இதை தடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த பத்திரிகை செய்தியும் ஒருதலைபட்சமாக அவருடைய பேட்டியை மட்டுமே வாங்கி போட்டிருந்தது.

அதை படித்த சிலர் சின்மயியை கண்டித்து மீண்டும் ட்விட்டுகளை வெளியிடத்தொடங்கினர். இந்த சமயத்தில் சில விஷமிகள் சின்மயியை தூண்டிவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ராஜனும் அவருடைய நண்பர்களும் போட்ட ட்விட்டுகளின் ஸ்கீரின் ஷாட்களையும் எடுத்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு ப்ளாக் செய்துவிட்ட பின் அவர் என்ன எழுதினாலும் சம்பந்தப்பட்டவருக்கு தெரியாது.. அப்படியிருக்க சின்மயிக்கு மட்டும் ராஜன்,சரவணகுமார் ட்விட்டுகள் எப்படி தெரிந்தது என்கிற கேள்விக்கான விடையே மேலே குறிப்பிட்டிருப்பது.
இதுதவிர அவ்வப்போது தான் ஒரு ஐயங்கார் என்பதைக்கூட highயெங்கார் என்கிற மிதப்போடு எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார் சின்மயி. சாதிய பெருமிதத்தோடு இப்படியெல்லாம் ட்விட்டுவது தவறு என கண்டித்த ஒவ்வொருவரையும் அவர் ப்ளாக் செய்திருக்கிறார்.

டெக்கான் க்ரானிக்கிள் செய்திக்கு கிடைத்த எதிர்வினைகளை கண்டு கோபம் கொண்ட சின்மயியின் தாயார் சின்மயிக்கு எதிராக ட்விட்டும் சிலரை போனில் அழைத்து மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த அலைப்பேசி எண்கள் கூட சின்மயியின் அல்லக்கைகளாகவே மாறிப்போன அந்த விஷமிகள் தேடி வாங்கிக்கொடுத்தவையே! (பிரபல பாடகிக்கு வேறு வேலையே இருக்காதா?)

வலைப்பதிவரான பரிசல்காரனுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. பிரச்சனையை சுமூகமாக முடிப்பதற்கே நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர். ராஜனும் கூட நான் போட்ட ட்விட்டுகளுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றெல்லாம் சொல்லியும்.. உங்களையெல்லாம் சும்மா விடமாட்டேன்டா என்கிற வகையில் பேசிவிட்டு தொடர்பை துண்டித்திருக்கிறார்.
அப்படித்தான் சின்மயியின் தாயார் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இன்னொரு நபரான செந்தில் என்பவரையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரோ உங்கள் மகளை அமைதி காக்க சொல்லுங்கள் எல்லாமேசரியாகிவிடும் என்பதாக பேசியுள்ளார். அதை அவர் ட்விட்டரில் சொல்ல.. சரவணகுமார் மிக மிக சாதாரண அளவில் ‘’கடலைபோடதானே’’ என்கிற வார்த்தையை உபயோகித்து கிண்டல் செய்திருக்கிறார். பொதுவெளியில் இதைவிடவும் மோசமான விமர்சனங்களை பிரபலங்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பிறகு ராஜன் சின்மயி பற்றி எதுவும் பேசாமல் இனி ஜென் நிலையில் இருப்பேன் என அறிவித்துவிட்டு ராஜென் என தன் பெயரை மாற்றிவைத்துவிட்டு அமைதியாகவே இருந்தார். ஆனால் சின்மயியை இவ்விஷயத்தில் சில பார்ப்பன ஆதரவாளர்கள் அதெல்லாம் சும்மா விடக்கூடாது இவர்களை பழிவாங்கவேண்டும் என தூபம் போட்டிருக்கிறார்கள்.

அதோடு அக்டோபர் 5 ஆம் தேதி சரவணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சின்மயி இதற்காக உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என ட்விட்டரிலேயே சபமிட்டுள்ளார். ஆனால் சில மணிநேரங்களில் அந்த ட்விட்டுகள் நீக்கப்பட்டன. அவை மட்டுமல்லாது.. ராஜனை அவதூறாக எழுதிய ட்விட்டுகளும் இட ஒதுக்கீடு , மீனவர்கள் மீன்களை கொல்லுகிறார்கள் மகேஷ்மூர்த்தியிடம் மன்றாடியது என பல ட்விட்டுகளும் அதிரடியாக நீக்கப்பட்டன. (இதற்காக தனிப்படை வேலை பார்த்ததோ என்னவோ!)

ராஜன் ,சரவணன்,செந்தில் உள்ளிட்ட சிலர் போட்டதாக சொல்லபடும் ட்விட்களை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு புகார் ஒன்றை கமிஷனரிடம் கொடுக்க.. அதிரடியாக ராஜனும் சரவணனும் கைது செய்யப்படுகின்றனர். ஒரு சாதாரண பொதுஜனம் கம்ப்ளைன்ட் கொடுத்தால் நம்முடைய காவல்துறை எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.(சைபர் கிரைமில் பொதுஜனங்கள் கொடுத்த 19 வழக்குகள் பென்டிங்கில் இருப்பதாக கமிஷனரே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)

இங்கே ஒரு கேள்வி இருக்கிறது. ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்க வெறும் ஸ்கிரீன் ஷாட்டுகள் மட்டுமே போதுமா.. தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில் யார்வேண்டுமானாலும் யார் எழுதியது போலவும் ஸ்கிரீன் ஷாட் தயார் செய்ய இயலும். அதைப்பற்றியெல்லாம் கவலையேயில்லாமல் காவல்துறை தன் கடமையை உடனடியாக நிறைவேற்றியிருக்கிறது.

போகட்டும் இதோ பதினைந்து நாட்கள் இருவரும் சிறையலடைக்கப்பட்டுள்ளனர். அந்த இருவருடைய குடும்பங்களும் சொல்லவொண்ணா துயத்தை சந்தித்துள்ளனர். பிள்ளைகள் தந்தையில்லாமல் வாடிப்போயிருக்கின்றன. தொலைக்காட்சிகள் ஏதோ காமவெறியர்களை போல இருவரையும் சித்தரித்து செய்திகள் வெளியிடுகின்றன.

இருவர் மீதும் சின்மயி முன்வைத்த குற்றச்சாட்டு என்ன? இருவரும் ஆபாச ட்விட்டுகள் வெளியிட்டதாக சொல்லப்படுவதே. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சின்மயியிடமே கிடையாது. அவர்கள் இருவரும் அப்படி ஏதாவது செய்திருந்தால்தானே ஆதாரங்கள் கிடைப்பதற்கு. தன்னை பற்றி ஆபாச ட்விட்டுகள் இல்லையென்கிற காரணத்தால் உடனடியாக அரசியல் தலைவர்கள் குறித்து ராஜனும் சரவணகுமாரும் ட்விட்டியதையெல்லாம் ஸ்கீரின் ஷாட் எடுத்து ஆதாரம் என நீட்டுகிறார்கள். சின்மயியின் புகார் அவரைப்பற்றி ட்விட்டியதாக சொல்லப்படுவதுதானே..

சின்மயியின் நோக்கம் என்ன? பழைய பகையையும் தமிழில் எழுதும் ட்விட்டர்களின் மீதான தன்னுடைய வன்மத்தையும் தீர்த்துக்கொள்ள இப்படி ஒரு பொய்யான புகாரை சின்மயி கொடுத்திருக்கிறார். அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்திருக்கிறார். சின்மயி அம்மா குறித்து பகடியாக சரவணகுமாரும் செந்திலும் பேசியதை பிடித்துக்கொண்டு அதைவைத்து ஆதரவை திரட்டுகிறார்.

குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ராஜனோ சரவணகுமாரோ ட்விட்டரிலோ வேறு தளங்களிலோ சின்மயியின் ஆபாசப்படங்களையோ அல்லது அவரை ஆபாசமாக வர்ணித்தோ எதையுமே எழுதவில்லை. அவரை மின்னஞ்சலில் மிரட்டவில்லை. நேரிலோ தொலைபேசியிலோ கூட பேசியதில்லை. சொல்லப்போனால் இவர்கள் யாருமே சின்மயியை பார்த்ததே கிடையாது. அப்படியிருக்க நம்முடைய காவல்துறை இவர்கள் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது என்பது ஆச்சர்யமான விஷயம்.

அதிகாரவர்க்கம் பிரபலங்களுக்கு துணைபோவது இன்று நேற்றல்ல எப்போதுமே அப்படித்தான்..

ஏற்கனவே சமூக வலைதளங்களால் பெரிய அளவில் பாதிகப்பட்டிருக்கும் ஆளும் அதிகாரம்.. இதுதாண்டா சான்ஸு இவனுங்களை அடக்குவதற்கு என்கிற ரேஞ்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இது நம்முடைய கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை. நாளையே ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ ஊழல் ஒழிப்போ, ஈழப்போராட்டமோ, மீனவர் படுகொலையோ, கூடங்குளமோ ஏதோ ஒரு பிரச்சனை.. ஆனால் அதிகாரத்திற்கு எதிரானதாக இருந்தால் எழுதியவரை வெறும் ஸ்கிரீன் ஷாட் உதவியோடு கூட கைது செய்து சிறையிலடைத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதியவன் என முத்திரைகுத்தி தீவிரவாதியாக்கிவிட இயலும்.

இன்று ஊடகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாகவே செயல்படுகின்றன. அப்படியிருக்க மாற்று ஊடகமான இணைய வெளியிலும் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் முயல்கிறார்களோ என அஞ்சவேண்டியிருக்கிறது. உண்மை எங்கிருந்தாலும் ஊழல் பேர்வழிகளுக்கு உறுத்தலாகத்தானே இருக்கும்.

ட்விட்டர் ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்கள் நவீன திண்ணையை போன்றது. இங்கே உங்களுக்கு ப்ரியமானவர்களோடு சேர்ந்து உரையாடலாம் திட்டலாம் கொஞ்சலாம் குலாவலாம். பிடிக்கவில்லையா ப்ளாக் செய்துவிட்டு போய்விடலாம். அவர் பேசுவது உங்களுக்கு கேட்காது.. நீங்கள் பேசுவதும் அவருக்கு கேட்காது. அதிலும் குறிப்பாக பிரபலங்கள் என்று அறியப்படுபவர்களுக்கு லட்சக்கணக்கில் பாலோயர்கள் இருப்பது கண்கூடு. ட்விட்டரில் இருக்கிற எந்த பிரபலமும் தன்னை தொடர்பவர் தன்னைப்பற்றி கேலி செய்கிறாரா திட்டுகிறாரா என்று பார்த்துக்கொண்டிருப்பதில்லை. ஆனால் சின்மயி ஒருவரை ப்ளாக் செய்த பின்னும் கொல்லைப்புறமாக உளவு பார்த்து வஞ்சம் தீர்க்க காத்திருந்து பழிவாங்கியிருக்கிறார்.

அவருடைய பழிவாங்கும் உணர்ச்சியை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது அதிகாரவர்க்கம். சமூகவலைதளங்களில் இனி எவனாச்சும் ஏதாச்சும் எழுதிப்பாருங்கடா.. என்று சவால் விடப்பட்டிருக்கிறது. இணையத்தில் இவர்களால் ஒன்றிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்கள் கண்களை உறுத்துகிறது.

முல்லைபெரியார் பிரச்சனையின் போது தமிழர் உரிமைக்காக அறிவியல் ரீதியிலான வாதங்களை முன்னெடுத்தவர் உதவி பேராசிரியர் சரவணகுமார். தொடர்ந்து தலித் மக்களுக்காகவும் ஈழத்தமிருக்காகவும் மீனவர்களுக்காவும் குரல்கொடுத்து வருபவர். சொல்லப்போனால் சின்மயியோடு அவர் உரையாடியது மிக குறைவே. காக்கைசிறகினிலே என்கிற சிற்றிதழையும் முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்திவருகிறார். ராஜன் மிகச்சிறந்த வாசிப்பாளர். தமிழில் எழுதுவதில் மிகச்சிறந்த ஆளுமையை கொண்டிருப்பவர். சின்மயியிடம் அவர் சில கேள்விகளை முன்வைத்து கடந்த மார்ச் மாதம் எழுதிய பதிவை படித்தாலே அவரைப்பற்றி புரிந்துகொள்ள முடியும். வறுமையோடு போராடி இன்று அரசு வேலையில் இருப்பவர். நம்முடைய சமூகத்தின் மீதான கோபத்தை அவருக்கேயுரிய மொழியில் வெளியிடுகிறார். வழக்கு எண் படம் குறித்து அவர் எழுதி பதிவை வாசித்துப்பாருங்கள். எவ்வளவு சிறப்பாக எழுதக்கூடியவர்.


http://www.rajanleaks.com/2012/05/189.html

நம் மக்களுடைய மொழி எப்போதுமே கள்ளங்கபடமில்லாமல் எதையும் நேர்பட பேசுகிறவையாகவே இருந்திருக்கிறது. திமுகவும் அதிமுகவும் மேடைகளில் பேசிடாத ஆபாசத்தினையா ராஜன் பேசிவிட்டார். சரவணகுமாரும் செந்திலும் பேசியது சிறையிலடைத்து தண்டிக்கப்படவேண்டிய குற்றமா? சைபர் போலிஸாரிடம் தரப்பட்ட 19 வழக்குகள் நிலுவையில் இருக்க.. அவசரமாக இந்த வழக்கினை எடுத்துக்கொண்டு தனிப்படை அமைத்து கைது நடவடிக்கை வரைக்கும் இறங்கவேண்டிய காரணம் என்ன? எந்த விசாரணையும் முடிவடையாத நிலையில் ஊடகங்கள் ஏன் அவசரமாக இருவரையும் காமவெறியர்களாக சித்தரித்து தீர்ப்பெழுதின? என்பதுமாதிரியான கேள்விகள் நம்மிடையே எஞ்சியிருக்கின்றன.

விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறவனே நல்ல கலைஞனாக இருக்க முடியும். சின்மயியை போன்றவர்கள் வெறும் பாராட்டுகளை மட்டுமே எதிர்பார்த்து பொதுவெளிக்கு வரும்போது விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தப்புதவறுமாக எதையாவது உளறிகொட்டி சக ரசிகர்களின் கேள்விகளால் திணறுகிறார்கள். சின்மயி கோர்ட்டுக்கு போனதுபோல பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனோ கலைஞர் கருணாநிதியோ கோர்ட்டுக்கு போயிருந்தால் இந்நேரம் சமூகவலைதளங்களை பயன்படுத்துகிற பாதிபேருக்கு ஆயுள்தண்டனையைத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு இருக்கிற பக்குவமும் ஆளுமையும் கூட பிரபல பாடகி சின்மயிக்கு இல்லையே என்பதுதான் நம்முடைய கவலை.

எந்த நாடாக இருந்தாலும், அரசு இயந்திரங்கள் கருத்து பரிமாறல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயன்றபடி இருக்கும். இணையத்தில் இது மிகவும் கடினம் என்பதால், இங்கே அச்சுறுத்தல் தொடங்கியிருக்கிறது. இது மிக மிக மோசமான முன்னுதாரணம். நம்முடைய சிறகுகள் வெட்டி எறியப்படும் முன் இது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

ராஜனுக்காக நாம் குரல் கொடுக்கத்தேவையில்லை. சின்மயியை எதிர்க்க தேவையில்லை. அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நம்முடைய கருத்து சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போம்.

உதவிய இணையதளங்கள் – www.twitter.com , http://365ttt.blogspot.in , http://www.rajanleaks.com , http://www.chinmayisripada.com , www.google.com , மகேஷ்மூர்த்தியின் ட்விட்டுகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை மற்றும் நண்பர்களின் ட்விட் லாங்கர்  கருத்துகள்.









17 October 2012

மாற்றான் : சூர்யாவுக்கு சிலைவைங்க!






வயிறார சாப்பிட்டு முடித்த பிறகு அடிவயிற்றிலிருந்து உருண்டு திரண்டு நெஞ்சை விரித்து மூக்கை அடைத்துக்கொண்டு வாய் வழியாக வெளிவருமே ஒரு உற்சாக வாயு.. ஏப்பம் என்பார்கள். அது தருகிற சுகமே அலாதி. அது திருப்தியின் வெளிப்பாடு. நம் வயிற்றின் வசந்தகீதம். அப்படி ஒரு திருப்தி மாற்றான் படம் பார்க்கும்போது நமக்கு உண்டாகிறது. யேஏவ்வ்வ்வ்வ்...

அர்ஜூனும் விஜயகாந்தும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மேற்கிஸ்தான் கிழக்கிஸ்தான் செங்கிஸ்தான் என எல்லா இஸ்லாமிய நாட்டு தீவிரவாதிகளையும் அழித்தொழித்து புதைத்து அந்த இடத்தில் புல்லு பூண்டு வெங்காயமெல்லாம் முளைத்துவிட்டது.

நம்ம கேப்டன் .. முதல்வர் ரேஸிலும், அர்ஜுன் செகன்ட்ஹீரோ மாஸிலும் பிஸியாகி விட்டதால்.. வெரைட்டியான வெளிநாட்டு தீவிரவாதிகளால் அழிவை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்தியாவை காப்பாற்ற நாதியே இல்லாமல் இருந்தது. முகமூடி ஜீவா, தாண்டவம் விக்ரமெல்லாம் முயன்றும் முடியாத காரியத்தை கனகச்சிதமாக முடித்திருக்கிறார் சூர்யா!

ஏற்கனவே ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மரை உசுப்பிவிட்டு டோங்லீயின் சீனாவிடமிருந்து இந்திய நாட்டை காப்பாற்றி ஜனாதிபதி கையால் விருதுவாங்கிய அனுபவம் இந்தப்படத்திலும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

இதோ இப்போது ரஷ்யாவிலிருந்து ஆபத்து வந்திருக்கிறது. யெஸ் ஏ ஆபத்து ஃபரம் ரஷ்யா கம்மிங் டூ இந்தியா இன் தி ஃபார்ம் ஆஃப் தி பேபி பவுடர் வித் டேஞ்சரஸ் பாய்சன் என்கிறார் மேஜர் சுந்தர்ராஜன்!

சும்மா இருப்பாரா சூர்யா! உடனே வீட்டிலிருந்து தயிர்சாதம் புளிசாதம் சகிதம் ப்ளைட்டை பிடித்து கிளம்பிபோய் ஒரு குத்துப்பாட்டுக்கு பாலே டேன்ஸ் ஆடி, தொப்புள் காட்டும் காஜல் அகர்வால் மற்றும் ரஷ்ய ஃபிகர்களோடு ரொமான்ஸ் பண்ணி, ஊக்கமருந்து பயன்படுத்திய விளையாட்டு வீரர்களின் அவலநிலையை பார்த்து கண்ணீர்வடித்து.. அப்பா சென்டிமென்ட் அம்மா சென்டிமென்ட் தம்பி சென்டிமென்ட் என எல்லாவற்றையும் முறியடித்து துப்பாக்கி குண்டுகளுக்கு தப்பி.. வெடிகுண்டுகளுக்கு தப்பி.. ராக்கெட் லாஞ்சருக்கு தப்பி.. ஒரு ஒட்டுமொத்த ராணுவத்துக்கே தண்ணிகாட்டி.. உஃப் எழுதுவதற்கே கஷ்டமாக இருக்கிறது.. மிக கடினமான இந்த அசைன்மென்ட்டை கண்ணிமைக்கு நேரத்தில் செய்துமுடித்து இந்தியாவை காப்பாற்றுகிறார் சூப்பர் சூர்யா. நமக்கு அப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.

படத்தின் முடிவில் ரஷ்யாவின் சதியிலிருந்து இந்தியாவை காப்பாற்றிய சூர்யாவின் வீரதீர சாகசத்துக்காக ஜனாதிபதி கையால் விருது வாங்குவதை பாக்கும் போது கண்ணில் தண்ணீர் தளுதளுக்கிறது! தியேட்டரே கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கிறது.

சூர்யா சார் தன்னுடைய அடுத்தப்படத்தில் எந்த நாட்டிடமிருந்து இந்தியாவை காப்பாற்றி ஜனாதிபதி கையால் விருதுவாங்குவார் என்கிற கேள்வியும் நமக்கு முன்னால் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பாய் படபடக்கிறது! யெஸ் ஏ பட்டர்ஃபிளை விங்ஸ் ஷேக்கிங் இன் தி கேஎஃப்சி சிக்கன் என்கிறார் மேஜர்.

ஏழாம் அறவில் போதிதர்மர் சைனாவுக்கு போனதுபோல.. இந்தப்படத்தில் சூர்யாவுங்கப்பா ரஷ்யா போகிறார் என்பது தற்செயலானதாக தெரியவில்லை. அருமை.

ஆமா ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றிய படம்னுல சொன்னாங்க.. என்கிற கேள்வி உங்கள் மனதில் எழலாம். படத்தில் விவேக் வடிவேலு மாதிரி காமெடியன்கள் இல்லையென்பதால் சூர்யாவே காமெடியனாகவும் நடித்திருக்கிறார். சமகால படங்களில் காமெடியன்கள் ஹீரோவோடு ஒட்டிக்கொண்டே அலைவதுபோல இதில் காமெடி கம்யூனிச சூர்யா ஒட்டிக்கொண்டே அலைந்து திரிந்து இடைவேளைக்கு முன்னால் ரசிகர்கள் எமோஷனாகி கண்ணீர் சிந்தவேண்டும் என்பதற்காகவே செத்தும் போகிறார். யாரோ அஜித் விஜய் ரசிகர்கள் அந்த சோக காட்சியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.. நான் கேட்கிறேன் ஏனய்யா உங்கள் நெஞ்சுகளில் ஈரமே இல்லையா?

அதிலும் க்ளைமாக்ஸில் சூர்யாவின் அப்பா ’’டேய் நீ ஒரு அப்பனுக்கு பொறந்தவன் இல்லடா.. பத்து பேருக்கு பொறந்தவன்.. ‘’ என்று பேசும்போது என்னமோ ஷகிலா ஷவரில் குளிப்பதை பாத்தாமாதிரி சிரியோசிரியென்று சிரிக்கிறார்கள். டேமிட்.. அதே விஜய் அஜித் ரசிகர்கள்தான்.

இந்தக் காட்சியை தியேட்டரில் நான்மட்டும் கைதட்டி ரசித்தேன். அதோடு ஜனாதிபதி கையால் விருது வாங்கும்போது கண்கள் கலங்க விசிலடித்து சிலிர்த்தேன். இதோடு சேர்த்து இரண்டுமுறையாச்சு!

தமிழ்நாட்டில் அப்துல்கலாமுக்கு அடுத்ததாக நிறைய முறை விஞ்ஞான ரீதியாக நடித்திருக்கும் சூர்யா கூட ஒருவகையில் அணுகுண்டு விஞ்ஞானிதான். அதனால்தான் அவருக்கு உடனடியாக எங்காவது தெருமுனையில் சிலைவைக்க தமிழ்க அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

படத்தின் மிகப்பெரிய பலம் சூர்யாதான். மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். விக்கு வைத்த சூர்யாவுக்கும் விக்கு வைக்காத சூர்யாவுக்கும் எவ்வளவு வேறுபாடு. கண்டே பிடிக்க முடியவில்லை.

தாடிவைத்துக்கொண்டு மாரில் அடித்துக்கொண்டே யோ டூட் வாட்ஸ் அப் என்று பேசும் கேரக்டாகட்டும்... கம்யூனிசம்தெரியுமா பாரதியார் தெரியுமா என மெல்லியகுரலில் பேசும்போதாகட்டும் அடடா!

என்ன.. ஒன்னு.. மெல்லிய குரலில் எதாவது பஞ்ச் டயலாக் பேசும்போதுகூட.. வாங்குங்கள் மலபார் கோல்ட்.. சன்ரைஸ் காஃபிதூள்.. ஏர்செல்.. சரவணாஸ்டோர் சங்குமார்க் ஜட்டிகள் என்று விளம்பர வாசகம் சொல்லிவிடுவாரோ என்கிற அச்சத்தோடேயே படம் பார்க்க வேண்டியதாயிருந்தது. மத்தபடி நடிப்பில் ஹாலிவுட் நடிகர்களான கவுண்டமணி,பால்முனி,டாம்குரூஸ் முதலானவர்களை ஒரே எட்டில் தாண்டிவிடுகிறார்.

படத்தின் இசையமைப்பாளர் படத்துக்கு இன்னொரு மிகப்பெரிய பலம். மற்ற இசையமைப்பாளர்களை போல வெளிதேசத்து இசையை காப்பியடித்து மாட்டிக்கொள்ளாமல் தன்னுடைய பாடல்களையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு மாதிரி இசையமைத்துள்ளார். அதோடு பெண்கள் தியேட்டருக்கு வருவதில்லை என புலம்புவர்களின் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சோக காட்சிகளில் தென்றல் சீரியலில் நம்ம துளசி அழும்போதெல்லாம் ஒலிக்குமே ஒரு சோக கீதம்.. அதே இசையை உபயோகித்திருக்கிறார் என்பது பாரட்டப்படவேண்டியதில்லையா... இந்த இசைக்காகவே பெண்கள் தியேட்டருக்கு படையெடுப்பார்கள் என்பதுறுதி!

படத்தின் இயக்குனரான கேவிஆனந்தும் சுபாவும் இருக்கிற திசைபார்த்து வணங்குகிறேன். இருவருமே மாபெரும் மேதைகளாக இருக்க வேண்டும். அடேங்கப்பா எவ்வளவு தகவல்கள்.. எவ்வளவு சுவாரஸ்யமான திருப்பங்கள். கோ படத்தை மொக்கையென்று ஒருகாட்சியில் சூர்யா திட்டுகிறார். என்ன ஒரு சுய எள்ளல்.. இதுதான் கேவிஆனந்தை ஒரு ஆஸ்கர் இயக்குனராக உயர்த்தியிருக்கிறது.

ஆஸ்கர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. பர்ஃபி படத்துக்கு பதிலாக மாற்றானை உடனடியாக ஆஸ்கருக்கு அனுப்பவேண்டும். படத்தில் நம் வாழ்க்கைக்கு தேவையான ஏகப்பட்ட கருத்துகளும் சிந்தனைகளும் நிறைந்துகிடக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப்படத்தை பார்த்தால் நிச்சயம் திருந்திவிடுவார்கள்.

இப்படத்தில் சூர்யா சொல்கிற ஒவ்வொரு கருத்தினையும் தஞ்சாவூர் கல்வெட்டில்.... இல்லை அங்கே முடியாது ஏழாம் அறிவில் சூர்யா சொன்ன கருத்துகளை ஏற்கனவே தஞ்சாவூர் முழுக்க கல்வெட்டாக வெட்டிவைத்துவிட்டதால்.. வேறு இடங்களில் கல்வெட்டாக வெட்டிவைத்துவிட்டு சூர்யாவை அருகிலேயே அமரவைத்துவிட்டால்.. வருங்கால சந்ததிகள் வாழும் என்பது மட்டும் நிச்சயம்!

இப்படி புகழ்ந்து தள்ளுகிறாயே படத்தில் குறையே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது ஒரே ஒரு குறைதான். இது தமிழ்படமேயில்லை முழுக்க முழுக்க ரஷ்யர்களுக்காகவே எடுக்கப்பட்ட ரஷ்யமொழிப்படம். படம் முழுக்க சின்மயிதான் எல்லோருக்கும் டப்பிங் கொடுத்திருக்கிறார். லோ பட்ஜெட் படமோ என்னவோ.. நாலு ஆட்களை பிடித்து விதவிதமாக டப்பிங் கொடுத்திருக்கலாம். ரஷ்யாவில் இப்படத்தை ஏன் ரிலீஸ் செய்யவில்லை என்று தெரியவில்லை. செய்திருந்தால் கோர்பசேவ் விருது சூர்யாவுக்கும் கேவிஆனந்துக்கும் கிடைத்திருக்கும்.

மற்றபடி ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு ரஷ்யனும் பார்த்து பெருமைப்படவேண்டிய காவியம் இந்த மாற்றான். படம் பார்த்து முடிக்கும்போது உங்களுக்குள் இந்தியன் அல்லது ரஷ்யன் என்கிற கர்வம் உண்டாகி அருகில் இருப்பவர்களை கடித்துவைத்துவிடுகிற அளவுக்கு உணர்ச்சி பொங்கும்... அதை மட்டும் கட்டுபடுத்திக்கொண்டால்.. இந்த படம் மட்டுமல்ல சூர்யா நடித்த எந்தபடமும் இனியபடமாக அமையும்.







06 October 2012

ENGLISH - விங்கிலிஷ்!





English vinglish is an emotional and one perfect family entertainer. Gauri shinde who dons the direction of the film has done a great job. The way she portray the feelings of every Indian house wife was such a beautifully written poetry.

Every frame and dialogue of the movie was superb. Eng-ving talks about everyday problem of angrezi less men and women. Who were treated ruthlessly in our once Englishmen ruled angreziwalonki society.

The story of the film revolves around shashi who is a small time entrepre…pru.. what is it.. leave it. She is a a super cook, loving mom, And her lack of English linguistic skills, makes her shame in front of her 12year old daughter and husband all the time.

Sashi just wants some hizzath or mariyadhai from her family. That’s it. she gets it in style! With some well written comedy, emotional, sentiment, romantic screenplay and our own sridevi’s acting!

She is such a fantabulous actress. We miss her almost fifteen twenty years or more. And she is back. And this is not just coming back from a long gap and doing an amma role for hrithik roshan or ranbir. This is different.

Yes she is old. Nearly hitting half a century. Wrinkles in her face. And much blah blah.. from movie making to acting everything changed significantly in these years. Not her acting. Not her charisma. She is not just a back bone of the movie. She is English-vinglish. And she is the winner all the way!

It is not just English this film talks about. It may be money or knowledge or efficiency or ability. Whenever someone you love hit your weakness and make fun out of it. That hurts a lot. Like padayappa says take every stopping stone or hurting stone make it your stepping stone! That is what English vinglish teaches you.. :-))).

I never wanted to write in English. I never had that courage to do that. But this films gives you the courage to do what you fear. Why not.. my English may be poor. Not my courage. All my life this is my first article or review or anything in English. Someday I will write better than this piece of writing. This film gives me immense energy to do what I panic, fright, terror, scare, dread blah blah…!


ஸ்ஸ்ப்பா.. முடியல..!

What my final verdict about this film is..

மிக சிறந்தபடம். உங்களுடைய வீட்டிலிருக்கிற ஆயா, அம்மா, தங்கை, மனைவி என அனைவரையும் அழைத்துச்சென்று பாருங்கள். ஒரு உன்னதமான அனுபவத்தினை நிச்சயமாக இப்படம் உங்களுக்கு கொடுக்கும்.