Pages

30 June 2013

பாரதிராஜாவின் அர்ணாக்கொடி!




பாரதிராஜா இதுவரை வெவ்வேறு ஜானர்களில் படமெடுத்திருக்கிறார். ஆனால் இதுவரை அவர் ஒரு முழூநீள காமெடி படமெடுக்கவில்லையே என்கிற ஏக்கம் எல்லோருக்குமே உண்டு. அவருடைய மகன் மனோஜ் அறிமுகமான தாஜ்மகால் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்றென கருதலாம். அதில் காமெடி அந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. படுதோல்வியடைந்த படம். ஆனால் சமீபத்தில் திரைகண்டிருக்கிற அன்னக்கொடி இதுவரை தமிழில் வந்த சகல காமெடி படங்களின் சாதனைகளையும் ஒரே பாய்ச்சலில் டுபக்காய் டுபுக்காய் என்று தாண்டிவிடுகிறது.

தியேட்டர்களில் முதல் காட்சியில் தொடங்கும் சிரிப்பலை ''அன்புடன் பாரதிராஜா'' என்கிற கட்டைகுரல்வந்து திரை இருளும் வரை நீளுகிறது. சமீபத்தில் வெளியான எந்த படமும் இந்த அளவுக்கு ரசிகர்களை சிரிக்கவைத்திருக்காது. சூதுகவ்வும், பீட்சா, நகொபகாணோம் முதலான இளம் இயக்குனர்களின் காமெடிகளை ஒருசிலகாட்சிகளில் அடித்து தொம்சம் பண்ணுகிறார் இயக்குனர் இமயம். யெஸ் ஹீ ஈஸ் பேக்!

நகைச்சுவை மட்டுமல்லாது சமகால ரசிகர்களை குஷிப்படுத்த படம் முழுக்க கில்மா காட்சிகளை ஆங்காங்கே தூவி விட்டு அனைத்து தரப்பினருக்குமான படமாக படத்தை மாற்றுகிறார். மாமனாரின் இன்பவெறி என்கிற படத்திலிருந்து சில காட்சிகளையும் லாவகமாக படத்தில் கையாண்டிருப்பது சிறப்பு. அந்த படத்துக்கு ட்ரீபூட்டாக இருக்குமோ என்னவோ? படத்தில் ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக சோக காட்சியிலும்கூட ஹீரோயின் ஜாக்கெட்டை கழட்டி ஓடவிட்டு படமாக்கியிருக்கிறார். அவர் மட்டுமல்லாது அம்மாவின் கைப்பேசி புகழ் ஆன்ட்டியும் ஜாக்கெட்டில்லாமல் சைடு வாக்கில் சிலகாட்சிகளில் கவர்ச்சி விருந்து படைக்கிறார்.

படத்தின் முதல்பாதி முழுக்க ரொமான்டிக் கில்மா காமெடி நிறைந்திருக்கிறது. ஹீரோவும் ஹீரோயினும் போலீஸ்துரத்துகிறது என்று ஓடுகிறார்ள். ஓடும்போது ஹீரோ காலில் முள்ளுகுத்திவிடுகிறது. உடனே ஹீரோயின் தன் ஒருகால் செருப்பை கழட்டி கொடுக்கிறார். அன்றைய இரவு ஒரு கயிற்றில் அந்த செறுப்பை கட்டிவைத்துக்கொண்டு மோப்பம் புடிக்கிறார் ஹீரோ.. அதற்கு முத்தம் கொடுக்கிறார். அவ்வப்போது மோந்து மோந்து பார்க்கிறார். தமிழ்சினிமா இதுவரை கண்டிராத காட்சி அல்லவா இது!

தமிழ்சினிமா கண்டிராத இன்னொரு காட்சி ஹீரோயின் விரல்சப்பும் காட்சி. இந்த முறை ஹீரோயினுக்கு காலில் முள் குத்திவிடுகிறது. இம்முறை ஹீரோ அதற்கு ஒரு வைத்தியம் சொல்கிறார். சுனை தண்ணி கலந்த களிகஞ்சி தின்ன விரலை சூப்பினா விஷமுள் குத்தின காயம் ஆறிடுமாம். (சிவராஜ் சித்தவைத்தியர் ப்ளீஸ் நோட்!) அதனால் ஹீரோயினுக்கு நேராக வெள்ளை கஞ்சி வழிய நடுவிரலை நீட்டுகிறார் ஹீரோ... அதை ஹீரோயின் வாயில் வைத்து (க்ளோஸ் அப்பில்!) சூப்புகிறார். உடனே ஹீரோ தனது ஆட்காட்டி விரலை நீட்டுகிறார்.. மீண்டும் க்ளோஸ் அப். ஹீரோயின் வாய். சூப்புதல். அடுத்து மூன்றாவது விரல். இந்த முறையும் அதே. போர்னோ படங்களுக்கு சவால் விடுகிற காட்சி இது!

படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், வில்லனின் அப்பா என எல்லா முக்கிய கேரக்டர்களுமே ஏதாவது ஒரு காட்சியில் விரல் சூப்புவதாக காட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர் இமயம். அவர் இந்த நாட்டுக்கு ஏதோ சொல்ல நினைத்திருக்கிறார். என்னைப்போன்ற ட்யூப்லைட்டுக்குதான் புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிந்தாலும் புரியலாம். இதுபோக ஹீரோயினை தோளில் உட்காரவைத்து தொடைமுனையில் முத்தம் கொடுக்கிற எழுச்சிமிகு காட்சிகளும் நம் புரட்சி இயக்குனரின் படத்தில் உண்டு.

தீப்பெட்டி கூட இல்லாத கரிசல் காட்டு கிராமத்தில் ஹீரோயின் கார்த்திகா புருவத்துக்கு த்ரெடிங் பண்ணி இமைகளில் ஜிகினா போட்டு, உதட்டில் லிப்க்லாஸ் பளிரிட கண்களை உருட்டி உருட்டி க்ளோஸ் அப்பில் பார்க்கிறார். பாரதிராஜா இந்த பாவிப்பயபுள்ளய நடிக்கவைக்க படாதபாடு பட்டிருப்பாரு போல.. அந்த பிள்ளையும் 'சார் இப்ப நடிக்கறேன் பாருங்க..' இதோ இப்ப பாருங்க நல்லா நடிக்கறேனு படம் முழுக்க நடியா நடிக்குது. இதுக்குபதிலா ஜோடி நம்பர் ஒன் ஷூட்டிங்லருந்து ராதாவையே இட்டுகினு வந்து நடிக்க வச்சிருக்கலாம் இயக்குனர் இமயம்.

படத்தின் ஹீரோவான புதுமுகம் லக்ஸ்மன் கிரிக்கெட் வீரராம். விவிஎஸ் லக்ஸ்மன் இல்லை. இவர் யாரோ தேனீ லக்ஸ்மனாம். நன்றாக கிரிக்கெட் ஆடுவாராம். இமயத்துக்கு தெரிந்தவர் போல. படம் முழுக்க ஒரு பக்கமாக கம்மல் போட்டுக்கொண்டு, மீசை தாடியெல்லாம் ட்ரிம் பண்ணிக்கொண்டு அல்ட்ரா மாடர்னா வருகிறார்.

இப்படி படத்தின் ஹீரோவும் ஹீரோயினும் நடிப்பதற்காக போராடிக்கொண்டிருக்க.. இயக்குனர் மனோஜ் என்ட்ரி! என்னைக்கு மனோஜ் வயதுக்கு வந்தாரோ அன்றிலிருதுதான் பாரதிராஜாவின் ஜாதகத்தில் சனிபகவான் சம்மனமிட்டு அமர்ந்தார் என்பது வரலாறு. இப்படம் ஆல்ரெடி பப்படமாகிவிட்டிருந்ததால்... மனோஜ் வந்துதான் அதை காலிபண்ணினார் என்கிற அவப்பெயரை அவருக்கு மட்டுமே தரக்கூடாது.

வெடக்கோழி கொழம்புதான் விளைஞ்ச நெல்லு சோறுதான் டன்டனக்கா டனக்குதான் சடயன் போட்ட கணக்குதான் என்று மனோஜ் கீச்சு குரலில் கீய்ங் கீய்ங் என்று பாட்டு பாட.. அவர்குரலில் குயில்களும் கிளிகளும் தோற்கின்றன. அவர்தான் வில்லனாம். அதனால் ஒட்டு மீசை வைத்துக்கொண்டு பட்டாப்பட்டி தெரிய வேட்டி கட்டிக்கொண்டு ஏய் ஓய் என்று முறைத்தபடி மாட்டுவண்டியில் சுற்றுகிறார்.

மேமேமேமே என்று எந்திரன் ரஜினிபோல படம்முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார். இவருக்கு பதிலாக ஒரு நல்ல ஆட்டை நடிக்க வைத்திருக்கலாம். அது இவரைவிட சிறப்பாக மேமேமே என்று கத்துவதோடு ஒரிஜினல் தாடியோடு நடித்திருக்கும் இல்லையா? அமீரும் பார்த்திபனும் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள்.

படத்தில் ஒரு கொடூரமான போலீஸ் கதாபாத்திரம் வருகிறது. விழிகளை மிரட்டி உருட்டி.. ஏய் அவனை பிடிச்சு கட்டு இவனை போட்டு உதை என்றெல்லாம் கத்தி ஆர்பாட்டம் பண்ணுகிறார். படத்தின் ஃபைனான்சியர் போல கடன்பாக்கிக்காக ஒரு கேரக்டரை கொடுத்திருப்பாராயிருக்கும் இயக்குனர் இமயம்.

படத்திற்கு குளோஸ் அப் டூத் பேஸ்ட் கம்பெனி ஏதாவது ஸ்பான்சர் பண்ணியிருப்பார்கள் போல. படத்தில்வருகிற எல்லா பாத்திரங்களுக்கும் தலா பத்து குளோஸ் அப் என்கிற அடிப்படையில் படம் முழுக்க ஆயிரக்கணக்கான குளோஸ் அப்கள். எல்லாமே கதற அடிப்பவை ரகம். பேய்ப்படம் மாதிரி எவ்வளவு முறைதான் பயந்துபோய் கண்ணை பொத்திக்கொள்வது இமயம்சார்.

படத்தின் இசை ஜி.வி.பிரகாஷாம். சமீபத்தில் இவ்வளவு கேவலமான பின்னணி இசை கொண்ட படத்தை பார்த்திருக்க முடியாது.காட்சிக்கும் இசைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாமல்... இசை என்கிற பெயரில் அவரும் காமெடிதான் பண்ணிருக்கிறார் போல...

தமிழ்சினிமா கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு நிலைகளில் பரிணாம வளர்ச்சியடைந்து இன்று சூதுகவ்வி பீட்சா தின்றபடி மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாரதிராஜா மட்டும் இன்னமும் முதல்மரியாதை காலத்திலேயே பழைய நினைப்பிலேயே ஆலமரத்தடியில் தூங்கிக்கொண்டு தேங்கிவிட்டிருக்கிறார். அவர் கடைசியா பார்த்தா இங்கிலீஸ் படம் ஷோலேவாய் இருக்குமோ என்னமோ? இன்னமும் பதினாறு வயதினிலே காலத்து ஓட்டு வண்டியையே ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

கார்த்திகா விரல் சூப்பும் காட்சி பற்றி பார்த்தோம் இல்லையா.. அந்த காட்சியின் முடிவு என்ன தெரியுமா? ஹீரோவோடு கோபித்துக்கொண்டு தன் தோழிகளோடு நடந்துபோகிறார் ஹீரோயின். திடீரென வயிற்றைப்பிடித்துக்கொண்டு நடுரோட்டில் உட்கார்ந்து கொள்கிறார். கட் பண்ணினால் குலவை சத்தம்... கார்த்திகா வயசுக்கு வந்துவிட்டாராம்!

கிளைமாக்ஸில் வில்லன் ஓடி வந்து ஹீரோவை வெட்ட பாய ஹீரோ குனிந்துவிட அரிவாள் அவனுடைய கழுத்தையே வெட்டிவிடுகிறது. ஆனாலும் வில்லன் சாவதற்கு முன்பு அவனுடைய டிரேட் மார்க் பாடலான வெடக்கோழி குழம்புதான் பாடலை.. சோகமாக... வெட....க்கோழி... குழம்புதான்.. என்று முழுசாக பாடிவிட்டுத்தான் மண்டையை போடுகிறார்.

ஒரு தலித்தை நாயகனாக ஆக்கி முழுப்படம் எடுக்க முனைந்ததும், உயர்சாதிக்காரனை ஆண்மையற்றவனாக சித்தரித்ததும் முற்போக்கு சிந்தனையாளர்களால் நிச்சயம் பாராட்டப்படும். ஆனால் அதற்காக மிகமிக சுமாரான பலமுறை ஏற்கனவே அரைத்த காட்சிகளையும் கொஞ்சமும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையையும் சகித்துக்கொள்ள முடியவில்லையே. திரைக்கதை முழுக்க ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.

பாரதிராஜாவின் வெற்றிக்கு பின்னால் இளையராஜா,செல்வராஜ்,மணிவண்ணன்,பாக்யராஜ்,வைரமுத்து என பலரும் இருந்திருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது அன்னக்கொடி. இன்று அத்தனை பேரையும் புறக்கணித்துவிட்டு ஒற்றை ஆளாக தன்னை நிரூபிக்க போராடுகிறார் பாரதிராஜா. ஆனால் அவரால் ஒரு அடிகூட முன்னால் நகரமுடியவில்லை.

அவரிடம் நல்ல கதையில்லை.. அவரே யோசித்த மொக்கைகதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை.. உருக்காமான காட்சிகளுக்கேற்ற இசை இல்லை.. பாடல்களில் உயிரில்லை.. இப்படி வேரான விஷயங்கள் ஏதுமின்றி அர்ணாகொடியில்லாத கோவணம்போல வந்திருக்கிறது இந்த அன்னக்கொடி!

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பாரதிராஜாவின் தெக்கத்தி பொண்ணு சீரியல் ரொம்ப சுமார்தான் என்று ஒரு விமர்சனம் உண்டு! ஆனால் அன்னக்கொடி படத்தை பார்த்து முடிக்கும்போது தெக்கத்திப்பொண்ணு எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது.