Pages

12 November 2013

கிதாரை விற்ற இளைஞன்...






எப்படிங்க ஒரு கிதாரை வித்து பத்து பவுன்ல நகை வாங்கமுடியும்?

மில்லியன் டாலர் கேள்வி இது. விஜய் எப்படி இதை சாதித்துக்காட்டினார்? HOW ப்ரோ HOW என்று கேட்காத ஆளில்லை.

அந்த விளம்பரத்தில் காட்டப்படுவது ஒரு நீண்ட நெடிய வரலாற்றின் கடைசி பக்கங்களைத்தான். அதற்கு ஒரு முன் கதை உண்டு. அக்கதை பல்வேறு சாகசங்களையும் குறியீடுகளையும் காதல் ரொமான்ஸ் அதிரடி ஆக்சன்கள் நிறைந்தது. மூன்று நிமிட விளம்பரத்தில் மிஸ்ஸான அந்த மிச்சக்கதை...

***

இருப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால...

விஜயின் தந்தை ஜெய்ஷங்கர் ஒரு கடமைதவறாத சிபிஐ அதிகாரி.

மிகப்பெரிய கடத்தல்காரர்ரான கோட்டு போட்ட அசோகன் . அவரை பிடிக்க முடியாமல் சர்வதேச காவல்துறையே கையை கசக்கிக்கொண்டிருந்தது. அவரை பிடித்து சட்டத்தின் கையில் ஒப்படைக்க வேண்டிய கடமையை ஏற்றுக்கொண்டார் விஜயின் அப்பாவான சிஐடி ஜெய்ஷங்கர்.

ஆஹ்ஹ்ஹ் என நடுங்கிக்கொண்டே ஹஸ்கி வாய்ஸில் எல்ஆர் ஈஸ்வரி பின்னணி குரல் கொடுக்க குட்டைப்பாவடையோடு ஜெயமாலினி ஆடிக்கொண்டிருந்த குகையில் வைத்து அசோகனை சுட்டுக்கொன்றார் ஜெய்ஷங்கர்.

கூடவே லட்சக்கணக்கான விலைமதிப்புமிக்க வைரங்களையும் , கட்டம் போட்ட காலர் இல்லா டிஷர்ட் மாட்டிக்கொண்டு திரியும் மொட்டைதலை அடியாட்களையும் கைப்பற்றினார் ஜெய்ஷங்கர்.

சாவதற்கு முன்பு அசோகன் ஒரு உண்மையை சொல்கிறார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திருவிழாவில் காணாமல் போன ஜெய்ஷங்கரின் அப்பா அசோகன்தான் என்கிற உண்மை தெரியவருகிறது.

தன் குடும்ப கிதாரையும் மகன் ஜெய்ஷங்கருக்கு பரிசாக கொடுத்துவிட்டு செத்துப்போகிறார். அந்த கிதார்தான்...இந்த கிதார். ஆனால் சாகும்போது கிதாருக்குள் இருந்த பல கோடி மதிப்புள்ள வைரங்களை பற்றி சொல்லவே இல்லை.

***

இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு...

பள்ளியில் பத்தாம்ப்பூ படிக்கிறார் விஜய். அவரும் ஃபகத் பாசிலும் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருக்கிறார்கள். இருவருமே ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள்.

ஒருநாள் நண்பனின் காதலியைத்தான் தானும் காதலிக்கிறோம் என்று தெரிய வர.. அவர் தன் காதலை தியாகம் செய்கிறார். சோகப்பாட்டு பாடுகிறார். சந்தானத்தோடு டாஸ்மாக்கில் குவாட்டர் அடித்து டான்ஸ் ஆடும் வாய்ப்பையும் பெறுகிறார். (பின்னணியில் கானாபாலா குரலில்).

சோகமாக இருக்கிற விஜயிடம் அப்பா ஜெய்ஷங்கர் தன்னோட குடும்ப கிதாரை கொடுத்து ''இதை வச்சி பெரிய ஆளாகுப்பா'' என்று சொல்கிறார்.

விஜய் தெருத்தெருவா போய் கிதார் வாசிச்சி ''வாழும்வரை போராடு'' என்று பாட்டுப்பாடி வளைந்து வளைந்து டான்ஸ்லாம் ஆடி பணம் சேர்க்கிறார். மாபெரும் கோடீஸ்வரனாகிறார். அவரை அமெரிக்கா ஆப்பிரிக்காவிலிருந்தெல்லாம் அழைத்து இசை நிகழ்ச்சி பண்ண சொல்கிறார்கள். ''சொல்லி வச்சா இந்த பொன்னத்தா.. அட தள்ளிவச்சா அட ஏன் ஆத்தா..'' என்று அருமையான பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்கிறார். அவருடைய குரல் உலகெங்கும் ஒலிக்கிறது.

***

தினமும் நிறைய புகைபிடிக்கிற அப்பா ஜெய்ஷங்கருக்கு திடீரென கேன்சர் வந்து விடுகிறது. விஜய் கஷ்டப்பட்டு சேர்த்த காசெல்லாம் ட்ரீட்மென்ட்டுக்கே செலவாகி விடுகிறது. மறுபடியும் நடுத்தெருவுக்கு ஒரே ஒரு ரூபாயோடு வந்து விடுகிறார் விஜய்.

மீண்டும் ஏழையாகி பழைய குடிசைக்கே திரும்புகிறார் விஜய். அப்பாவை கொன்றவர்களை பழிவாங்கலாமா என்று யோசிக்கிறார். ஆனால் அப்படி யாருமே இல்லையென்பதை அறிந்து மனம் வெதும்புகிறார். இந்த தேடலில் அப்பாவுக்கு மருந்து வாங்க மருந்துக்கடைக்கு போன இடத்தில் திரிஷாவை சந்திக்கிறார். மருந்து வாங்க காசில்லாமல் அவரிடம் கடன்வாங்க அது காதலாகிறது. த்ரிஷா காதலை சொல்ல அமவ்ன்டை திருப்பிக் கொடுக்க முடியாமல் காதலை ஏற்கிறார் விஜய்.

***

அந்தநேரத்தில்தான் ஃபகத் பாசிலின் காதல் ஹீரோயின் வீட்டுக்கு தெரியவருகிறது. பிரச்சனைகள் வருகிறது.

இரு வீட்டார் தரும் குத்துகளையும் வெட்டுகளையும் வாங்கிக்கொண்டு விஜய் சண்டைபோட்டு இரண்டுபேர் காதலையும் வாழவைக்கிறார். இதற்காக எல்ஐடி பில்டிங்கிலிருந்து பாய்ந்து இலங்கைக்கு பறக்கிறார். இலங்கையில் ஓடும் ரயிலிலிருந்து ஜம்ப் பண்ணி மலேசியாவில் விழுந்து உயிர்பிழைக்கிறார்.

இறுதியில் ''ஆனந்தம் ஆனந்தம் பாடும்'' என்று அதே கிதாரை வச்சு பாட்டுபாடி கொண்டே புன்னகைக்கிறார். பாத்ரூம்ல போயி விக்கி விக்கி அழுகிறார். கல்யாணம் முடிகிறது.

**

அதற்கு பிறகு நைக்கி ஷூ லீகூப்பர் பேன்ட் அணிந்துகொண்டு வறுமையில் வாடுகிறார். இந்த இக்கட்டான வேளையில் பகத் பாசிலின் தங்கை கல்யாணத்துக்கு பரிசு கொடுக்கலாம் என முடிவாகுது. டீக்கடை பாக்கியையே குடுக்க காசில்லாத விஜய் என்ன செய்வார்?

இருப்பது இந்த கிதார்தான். அதை வச்சு பாட்டு பாடி சம்பாதிச்சு கிப்ட் வாங்க முடிவெடுக்கறார். ஜாய்ஆலுக்காஸ் கடை வாசலில் நின்று பாட்டு பாடுகிறார். ''இன்னிசை பாடி வரும்... இளங்காற்றுக்கு உருவமில்லை...'' வாட்ச்மேன் அடித்து விரட்டுகிறார். சாலையில் போய் விழுந்தாலும் மூக்கில் ரத்தம் வழிந்தாலும் விஜயின் இசை ஓயவில்லை.

மழை ஊத்து ஊத்தென ஊத்துகிறது. மழையில் அவருடைய கண்ணீரும் கரைகிறது. அவருடைய இசைக்கு வெறும் முப்பது ரூபாய்தான் வசூலாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார். டாஸ்மாக்கில் கட்டிங் கூட கிடைக்காது என்று தெரிந்து கண்ணீர் உகுக்கிறார்.

கிதாரை கொண்டு போய் அடமானம் வைக்க சேட்டு கடைக்கு போகிறார். சேட்டு கிதாரை வாங்கி திருப்பி திருப்பி பார்க்கிறார். ''தும்ம்...'' என்று இழுக்கிறார்.

''தும்ம் ஜெய்ஷங்கர் க்கீ பேட்டாவா'' என்கிறார் சேட்டு. ஆமாம் என்கிறார் விஜய்.

''கைகைகை வக்குறா வக்குறா..ஆஆ... வக்குறா'' என்று சேட்டு ஸ்லோமோசனில் பாட..

''கண்ணால என் மனச தேத்துறா தேத்துறா'' என்று விஜய் ஸ்லோமோசனில் பாட...

''அரே பக்வான்.. தூ மேரா தம்பி ஹை'' என்கிறார் சேட்டு. விஜய் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்.

****

யாருக்குமே தெரியாத தன்னுடைய குடும்ப பாட்டை பாடியதும்தான் விஜய்க்கும் தெரிகிறது. இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால டிரைனில் தண்ணீ பிடிக்க போன தன்னுடைய அண்ணன் ப்ரகாஷ்ராஜ்.

''தூ... இதர்... கைசா... '' என்று விஜய் பேச..

''மே இதர்... '' என்று சேட்டு பேச.. கண்ணீர் பெருக்கெடுக்க..

''தம்பி பத்து நிமிஷம் கடைய பாத்துக்கோ'' என்று சொல்லிவிட்டு தம்மடிக்க போகிறார் சேட்டு.

இந்த கேப்பில் கடையிலிருந்த அட்டிகையை ஆட்டையைப்போட்டு அமுக்குகிறார் விஜய். அதை அண்ணன் சேட்டு பார்த்துவிடுகிறார்.

''தம்பி இந்த உயிரே உனக்குதான் எடுத்துக்கோ.. என்னவேணுமோ எடுத்துக்கோ'' என்கிறார்,

இதுதான் சான்ஸ் என்று அப்படீனா இதையும் எடுத்துக்கறேன் என்று இன்னொரு வைர அட்டிகையையும் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார் விஜய். அந்த அட்டிகைகளில் ஒன்றுதான் விஜய் விளம்பரத்தில் பரிசாக கொடுத்தது. கிதாரும் அப்படித்தான் திரும்பி விஜய்க்கே வந்தது.

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்து அண்ணனோடு ஆனந்தமாக வாழ்கிறார்.

அடகுக்கடையில் அநியாயங்கள் நடக்கிறது. அண்ணன் ப்ரகாஷ்ராஜ் ஒரு மாபெரும் தாதா என்பதும் தெரியவருகிறது. பானிபூரி என்கிற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைபொருட்களை கடத்துகிறார்.

ஒரு நல்ல நாளில் வில்லன்களை துவம்சம் பண்ணி அண்ணன் ப்ரகாஷ் ராஜையே அரெஸ்ட் பண்ணுகிறார் விஜய். யெஸ் ஆமாம் ஹான்ஜி... கிளைமாக்ஸில்தான் தெரிகிறது தம்பி விஜய் ஒரு போலீஸ் அதிகாரி என்பது. அவரும் தன் தந்தையைப்போல ஒரு கடமைதவறாத காவல் அதிகாரிதான்.

கடைசிவரை கிதாரில் இருக்கிற வைரங்களை பற்றிய உண்மையே தெரியாமல் போகிறது. அண்ணன் ஜெயிலுக்கு போக.. தம்பி விஜய் திரிஷாவை கைபிடிக்கிறார். சுபம்.


**********

(உண்மையில் அந்த நகைக்கடை விளம்பரத்தில் காட்டப்படுகிற கிதார் மிகவும் புகழ்பெற்றது. அது ஜிப்சன் லெஸ் பால் என்பவரால் பயன்படுத்தப்பட்டது. மிகவும் காஸ்ட்லியானது. அதை விற்றால் 25பவுன் நகை கூட வாங்கமுடியுமாம்!)