Pages

26 February 2013

முறிக்கப்படுகிறது முதுகெலும்பு!





மத்திய அரசு நிறுவனத்தின் எரிவாயுக்குழாய்ய் அமைக்கும் திட்டத்தால் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது

தென்னை மரங்களும், மாமரங்களும் வேரோடு பிடுங்கி எறியப்படுகின்றன. கரும்பு, பருத்தி, கடலை, செவ்வந்திப்பூ என செழித்து வளர்ந்த செடிகள் முற்றிலுமாக அகற்றப்படுகின்றன. பொக்லைன் இயந்திரங்கள், மூர்க்கமாக அந்த வயல்வெளியின் இதயப்பகுதியை தன் இரும்புக்கரங்களால் கிழித்துக்கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்து அலறுகிறார் ஒரு மூதாட்டி! ‘என் நிலத்தை விட்டு வெளியே போங்கடா... பாவிங்களா!’ -அவரது நடுங்கும் குரல் அந்தப் பகுதி முழுவதும் ஒலிக்கிறது.

அந்த மூதாட்டியையும் அவரது குடும்பத்தினரையும் காவல்துறை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு போய் அவர்களுடைய நிலத்துக்கு வெளியே வீசி, ‘எங்க வேலை முடியறவரைக்கும் காட்டுக்குள்ளார வரக்கூடாது. மீறி வந்தா, அரெஸ்ட் பண்ணி 15 நாள் ரிமாண்ட்ல வச்சுடுவோம்’ என்று மிரட்டுகிறது. அதிகம் படித்திராத அந்த விவசாயக் குடும்பம் வேறுவழியின்றி அழுதபடி தங்களுடைய நிலத்தினுள்ளே செல்லமுடியாமல் வெளியே காத்திருக்கிறது.

பதினோரு தலைமுறையா இந்த நிலத்துலதானுங்க சாமீ நாங்க வாழறோம்... எங்களை வெளிய நிக்கவச்சுட்டு எங்க கண்ணு முன்னால நாங்க கஷ்டப்பட்டு உருவாக்குன வயக்காட்டை அழிக்கிறாங்களே... எங்களால எதுமே பண்ண முடியல... செத்துப்போயிரலாம் போல இருக்குங்க...சாமீ! நீங்கதான் எங்களுக்காக அரசாங்கத்துக்கிட்ட பேசணும்" என்று சோல்லும்போதே, கஞ்சம்மாவின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்கிறது. அதற்குமேல் பேசவும் முடியாமல் கதறி அழுகிறார்.

கஞ்சம்மா, ஊத்துக்குளி அருகேயிருக்கிற முல்லைநாயக்கனூர் கிராமத்தில் வாழும் மிகச் சிறிய விவசாயி. அவருடைய நிலத்துக்கு மத்தியில்தான் கெயில் (GAIL - Gas Authority of India Ltd) அமைப்பின் எரிவாயு பைப் லைன் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அந்த பைப் லைன் செல்லும் பாதை, அவருடைய அரை ஏக்கர் நிலத்தினையே இரண்டாகப் பிளந்து கூறுபோடுகிற வகையில் அமைந்துள்ளது. அரை ஏக்கர் நிலத்தின் மத்தியில் இருபது மீட்டர் அகலத்துக்கு ஒரு பாதை போட்டால் எவ்வளவு நிலம் எஞ்சியிருக்கும்? அங்கே என்ன பயிர் பண்ண முடியும்? எப்படி ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு தண்ணீர் பாச்சுவது? டிராக்டரால் உழுவது?

இந்தக் கொடுமை நிகழ்வது கஞ்சம்மாவின் நிலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் இருக்கிற 131 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குறு மற்றும் சிறு விவசாயிகளின் விளைநிலங்களின் ஊடாகத்தான் இந்த எரிவாயு பைப் லைன் அமைக்கப்படவுள்ளது. எந்த விவசாயியிடம் பேசினாலும் இதே மாதிரியான சம்பவங்கள்தான். முழுமையான அடக்குமுறை. நிலம் கொடுக்க மறுக்கிற விவசாயிகள், காவல்துறையால் மிரட்டி பணியவைக்கப்படுகிறார்கள். ‘மரியாதையா இழப்பீடு காசோலைய வாங்கிட்டு கையெழுத்தப் போட்டுக்குடுத்துட்டு ஓரமா நின்னு வேடிக்கை பாரு’ என்பதுதான் அரசு அதிகாரத்தின் ஒரே குரல்.

ஏழு மாவட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் அறிவிக்கப்படாத 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கெயில் நிறுவன வேலை நடக்கும் பகுதிகளெங்கும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் தொடர் மிரட்டலுக்குப் பயந்து, ஊருக்குள் பல விவசாயிகளும் பக்கத்து ஊர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்விவகாரத்தில் போராட்டம் நடத்திய இரண்டுபேர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு, பதினைந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பல நூறு ஹெக்டேர் அளவுள்ள விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும். இந்த நிலங்களை ஒட்டியுள்ள நிலங்களிலும் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும்" என்கிறார், சென்னிமலை பகுதி விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த கோபிநாத்.

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தமிழ்நாடு வழியாக கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுயைக் கொண்டு செல்லும் திட்டம்தான் கேகேபிஎம் புராஜெக்ட் (கொச்சின்-கோட்டநாடு-பெங்களூரு-மங்களூர் புராஜெக்ட்) . இதற்கென மத்திய அரசுத் துறை நிறுவனமான ‘கெயில்’ மூன்று மாநிலங்களிலும் குழாய்ய்களைப் பதிக்க முடிவுசெய்துள்ளது.

தமிழ்நாட்டில் 370 கி.மீ. மற்றும் கர்நாடகா மற்றும் கேரளாவுக்கும் சேர்த்து 840 கி.மீ. தொலைவுக்கு குழாய்ய்கள் பதிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக குழாய்ய்கள் பதிக்கவுள்ளது. 3,263 கோடி ரூபா செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கெல்லாம் இதற்கான வேலைகள் பல இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்தான் காவல்துறை உதவியோடு வேலையை முடுக்கிவிட்டுள்ளது கெயில் நிறுவனம். ஆனால், காவல்துறை கெயில் நிறுவனத்துக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என சென்ற மாதம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டே இத்திட்டத்தினை நிறைவேற்ற விவசாய நிலங்களில் வேலையை தொடங்கியது கெயில் நிறுவனம். அந்த நேரத்திலும் சென்ற ஆண்டு ஆகஸ்ட்டிலும் விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைகளை தடுத்து நிறுத்தினர். இதனால், கெல் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும், எங்களுடைய வேலைக்கு இடையூறாக இருக்கிறார்கள், அவர்களை தடுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்துக்குச் சென்றது. அதோடு, விவசாயிகளிடம் அனுமதி பெற்று உரிய இழப்பீடு வழங்கியே இவ்வேலைகள் நடைபெறுவதாகவும் பெரும்பாலான விவசாயிகளிடமிருந்து ஆட்சேபனை இல்லை, மிகச் சிலர்தான் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கெயில் நிறுவனத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கூடாது என்றும், விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டு அவர்களோடு கலந்துபேசி, எரிவாயுக்குழாயை மாற்றுவழிகளில் அமைப்பது பற்றி யோசிக்கவும் வலியுறுத்தியது. அதோடு, ஏழு மாவட்ட ஆட்சியர்களும் கூடிப் பேசி விவாதித்து மாற்றுவழிகளில் எப்படி இந்த எரிவாயுக்குழாய்யினை எடுத்துச்செல்வது என்பதை முடிவுசெய்யவும் வலியுறுத்தியது. இதையடுத்து, கெயில் நிறுவனம் மேல்முறையீடு செய்தபோதும் கோர்ட் முந்தைய தீர்ப்பையே வழிமொழிந்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, ‘தமிழகத்திலும் ஒரு
சிங்கூர், நந்தி கிராமத்தை உருவாக்காதீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், கோர்ட் பரிந்துரைத்த எதையுமே கெயில் நிறுவனமோ தமிழக அரசோ முன்னெடுக்கவில்லை. மாறாக, கோர்ட் உத்தரவையும் மீறி காவல்துறையைக் குவித்து, விவசாயிகளின் நிலத்தில் குழாய்கள் பதிக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்துள்ளது.

இங்கே குழாய்ய் பதிக்கும் வேலைகளை முடித்துவிட்டால்... இதைக் காட்டியே கேரளா மற்றும் கர்நாடகாவிலும் விவசாயிகளை மிரட்டி அங்கும் வேலையைத் தொடங்க, கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கருதுகிறோம். ஆனால், இதை நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம். காவல்துறை அடக்குமுறையை ஏவி, விவசாயிகளின் விளைநிலங்களைப் பறிக்கும் மத்திய - மாநில அரசுகளின் செயல்களை எங்கள் போராட்டத்தினால் முறியடிப்போம்" என்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. சண்முகம்.

இத்திட்டத்துக்காக 1962ம் ஆண்டின் நில கையகப்படுத்துதல் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏழு மாவட்ட விவசாயிகளின் நிலங்களின் உபயோக உரிமையை கையகப்படுத்தியது கெயில் நிறுவனம். அதோடு, இந்த நிலத்துக்கு இழப்பீடாக அரசு நிர்ணயித்துள்ள சந்தை மதிப்பில் பத்து சதவிகிதம் தொகையைத்தான் வழங்கி வருகிறது (அதாவது நிலத்தை எடுத்துக்கொள்வதில்லை, அதைப் பயன்படுத்தும் உரிமையை எடுத்துக்கொள்வதால் வெறும் பத்து சதவிகிதம்தானாம்).

இழப்பீடு நிர்ணயிக்க மதிப்பிடப்படும் அந்த சந்தை மதிப்பும் கூட பழைய விலைதான். சென்ற ஆண்டு ஏப்ரலில் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட புதிய மதிப்பு கூட கிடையாது. இது விவசாயிகளை மேலும் காயப்படுத்துகிற வகையில் அமைந்தது.

பத்து வருஷத்துக்கு முன்னாலயே எங்க நிலத்துல வாக்கால் வரப்போகுதுனு சொல்லிதான் எங்ககிட்ட கையெழுத்து வாங்கினாங்க. நாங்களும் நிலத்துக்குப் பக்கத்துலயே வாக்கா இருந்தா சௌகரியமா இருக்குமேனுதான் கையெழுத்துப்போட்டோம்.திடீர்னு போன வருஷம் வந்து, ‘எரிவாயு பைப்லைன் போடப்போறோம்... அதுவும் இருபது மீட்டர் அகல இடம் வேணும்’னு சொன்னப்பதான் எங்களுக்கு விஷயமே புரிஞ்சுது. போன வருஷமே வேலை பார்க்க வந்தவங்கள, எதிர்ப்பு தெரிவிச்சு விரட்டினோம். இதோ இப்போ நூத்துக்கணக்குல போலீஸ்காரங்களக் கூட்டிவந்து வேலை செய்யறாங்க. எங்களால என்ன பண்ண முடியும்?" என்கிறார், ஊத்துக்குளி பகுதி அயர்தோட்டம் விவசாயியான வேலுச்சாமி.

ஊத்துக்குளி பகுதியில் மட்டுமல்லாது, சங்ககிரி, சென்னிமலை, ராயக்கோட்டை, தருமபுரி பகுதி விவசாயிகளிடமும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி நிலம் கையகப்படுத்தும் உரிமையைப் பெற்றுள்ளது மத்திய அரசு. சிலரிடம் வயல்வெளி ஓரமாக சிறிய பைப்தான் வரப்போகிறதென்றும், வாக்கல் வெட்டப்போகிறோம் என்றும், பெரிய இழப்பீடு தருவோம் என்று எரிவாயுக் குழாய் பற்றிய உண்மைகளை மறைத்து, போதிய விவரங்களை தெரிவிக்காமலே அனுமதி பெற்றுள்ளது. அதோடு, யாருக்கும் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜி என்கிற விவசாயிக்கு வெறும் 13 ரூபா காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்ககிரி பகுதியைச் சேர்ந்த அன்பு என்கிற விவசாயி, வெறும் 50 சென்ட் நிலத்தில் கடலை பயிரிட்டு வாழ்ந்து வருகிறார். திருமண வயதில் இரண்டு பெண்கள். இந்த நிலத்தை நம்பித்தான் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கும் கனவில் இருந்தவருக்கு இந்த எரிவாயுக்குழாய் பதிப்பு இடியாக இறங்கியது. அவருடைய நிலத்தின் மையப்பகுதியில்தான் இந்தக் குழாய் செல்கிறது. கிட்டத்தட்ட, இதிலேயே 25 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக கொடுக்கப்பட்ட தொகை என்ன தெரியுமா? 5,000 ரூபா! இன்று அதே பகுதியில் ஒரு சென்ட் நிலம் இருபத்தைந்தாயிரம் வரைக்கும் கூட விலைபோகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, இந்த வேலைக்காக நன்கு வளர்ந்த மாமரங்களும் தென்னைமரங்களும் கூட வேரோடு பிடுங்கப்படுகின்றன. ஒரு தென்னைமரத்தை வளர்க்க, மூன்றாண்டுகளில் பத்தாயிரம் ரூபாக்கும் மேல் செலவாகும், முழுமையாக வளர்ந்த தென்னைமரம் 90 ஆண்டுகள் பலன்தரக் கூடியது. ஆனால், கெயில் நிறுவனம் வெறும் 6,000 ரூபாயைதான் இழப்பீடாக வழங்குகிறது, மாமரங்களுக்கு வெறும் 18,000தான்.இதோ இப்போது இங்கே பருத்தி, சோளம், வாழை பயிரிட்டவர்கள் அறுவடைக்காக காத்திருக்கிறார்கள். மொத்தமாக எல்லாமே போய்விட்டது. அதோடு, பம்பு செட்டுகளும் அகற்றப்பட்டுள்ளன" என்று கோபத்தோடு பேசுகிறார், திருப்பூர் விவசாயி கருப்புசாமி.

''ஒரு விவசாய நிலத்தில் இந்த எரிவாயு பைப்லைன் அமைக்கப்பட்டால், அந்த இடத்தில் மரங்கள் வளர்க்கக் கூடாது. அதைச் சுற்றி வீடுகள் கட்ட முடியாது. ஆழ்குழாய்ய் கிணறு அமைக்கவும் கூடாது என்று கெயில் முன்பே குறிப்பிட்டுள்ளது. அவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், முற்றிலுமாக விவசாயமே பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, இந்த நிலத்தை யாரும் வாங்கவும் முன்வரமாட்டார்கள். எங்களால் இந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்கவும் முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகளால் என்னதான் செய்யமுடியும்? இந்தத் திட்டம் குறித்து எந்த விவரமும் கொடுக்காமலேயே வாய்க்கால் வெட்டுகிறோம், சிறிய இடம்தான் எடுக்கப்போகிறோம் என்றெல்லாம் பொய் சொல்லி, முதலிலேயே கெல் நிறுவனம் பஞ்சநாமா பத்திரத்தில் கையொப்பம் வாங்கியுள்ளது. இது தவறில்லையா?" என்று கேள்வியெழுப்புகிறார், திருப்பூரைச் சேர்ந்த சுதா. இவர், விவசாயிகள் வாழ்வுரிமைக் குழு என்கிற அமைப்பில் இணைந்து செயலாற்றி வருபவர்.

இவர் மேலும் பேசுகையில், ஒருவேளை குழாய்ய்கள் பதிக்கப்பட்ட பின் அக்குழாய்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு நிலத்துக்கு உரிமையுள்ள விவசாயிதான் பொறுப்பு. உடனடியாக அவரை கைது செய்யவும் மூன்றாண்டுகள் வரை சிறையிலடைக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. இது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.ஆனால், அதற்கெல்லாம் பதில் சொல்ல கெயில் நிறுவனம் தயாராக இல்லை. இப்படி ஒரு நிலையில் எந்த விவசாயி இதற்கு சம்மதிப்பான்?" என்று காட்டமாக தன் வாதங்களை முன்வைக்கிறார் சுதா. திருப்பூர் பகுதி விவசாயியான மயில்சாமி தன் தோட்டத்தின் ஒரு பகுதியில் சில லட்சங்கள் செலவில், மூன்று குட்டைகளை உருவாக்கி வைத்துள்ளார். இந்தக் குட்டைகளில் தேங்கும் மழைநீர்தான் சுற்றியுள்ள மற்ற விவசாயிகளுக்கும் பயன்படுகிறது. இந்த எரிவாயுக்குழாய் அந்தக் குட்டைகள் வழியாகத்தான் செல்கிறது. அதனால், குட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக நம்மிடம் மிகுந்த மனவருத்தத்தோடு பேசினார். அதோடு, அண்மையில்தான் தன்னுடைய தென்னந்தோப்பில் சோட்டுநீர்ப் பாசனத்துக்கான குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அதையும்கூட இந்த எரிவாயுக்குழாய் திட்டத்திற்கென இழக்க வேண்டியிருக்கும் என அஞ்சுகிறார்.

கோர்ட் உத்தரவின்படி மாற்றுவழிகளைப் பற்றி எந்த முன்னெடுப்பும் இல்லாமல், திடீரென ஏன் இவ்வளவு அவசரமாக காவல்துறை உதவியோடு இத்திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது? தமிழக அரசு ஏன் இவ்விஷயத்தில் விவசாயிகளுக்கு எந்த உதவியையும் செய மறுக்கிறது? " என்று கேள்விகளை அடுக்குகிறார், திருப்பூர் பகுதி
விவசாயியான கருப்புசாமி. இவர் பட்டப்படிப்பு முடித்தபிறகு, விவசாயத்தை தொடர்பவர். இவருடைய நிலத்தையும் கூறுபோட்டிருக்கிறது கெயில்.

சரி, இதற்கு தீர்வுதான் என்ன?

விவசாயிகள் சங்கத்தலைவரான பி.சண்முகமே அதையும் கூறுகிறார். கேரளாவில் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தபோது, 40 கிலோமீட்டர் அளவுக்கு விவசாய நிலங்களில் போடவேண்டிய குழாய்களை,தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக கொண்டு வருகிறார்கள். அதை ஏன் இங்கும் செய்யக்கூடாது? கேரளாவில் எடுபடுகிற விவசாயியின் குரல், இங்கே ஏன் ஏற்கப்படவில்லை? நம்முடைய தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியோ அல்லது ரயில்வே டிராக்குகளை ஓட்டியோ, ஆற்றுப்படுகைகளிலோ இந்த எரிவாயுக்குழாய்களை தாராளமாக கொண்டுவரலாமே? இத்திட்டத்தை நாங்கள் யாருமே எதிர்க்கவில்லை. ஆனால், விவசாயிகளின்வயிற்றில் அடித்துதான் இதை நிறைவேற்ற வேண்டுமா என்பதை மத்திய - மாநில அரசுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்கிறார்.

விவசாயிகள் சங்கங்கள் இதுவரை கெயில் நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. மாற்றுப்பாதையில் எரிவாயுக் குழாய்யினை எடுத்துச் செல்வதைப் பற்றி பேசவே மறுத்துவிட்டது கெயில் நிறுவனம். ‘என்ன ஆனாலும் விவசாய நிலங்களின் ஊடாக மட்டும்தான் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்; தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் குறுக்கும் நெடுக்குமாக இருப்பதால், அது சாத்தியமில்லை’ என்றும் மறுக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்புதான் பெருந்துறை - பவானி இடையே நாற்கரச் சாலை அமைப்பதற்கென விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் எண்ணற்ற விவசாய நிலங்களும் தென்னைமரங்களும் பம்புசெட்டுகளும் வீடுகளும் கூட பறிபோயின. ஏற்கெனவே இப்பகுதியில் சாயப்பட்டறைக் கழிவுகளால் நொய்யல் ஆறு முற்றிலுமாக அழிந்துவிட்டது. மின்சாரம் இல்லாமல், பம்பு செட்டுகளை இயக்கவும் முடியாமல்
விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த எரிவாயுக்குழாய் பதிக்கும் பணியால் தமிழகத்தின் மேற்குப்பகுதி முழுக்க, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொத்துவிடுவது ஒருபுறம், பயிராகும் நேரத்தில் தரவேண்டிய நீரைத் தர மறுக்கிற அண்டை மாநிலம் மறுபுறம், இதனால் கட்டவேண்டிய கடனை கட்ட வழி இல்லாமல், விவசாயிகள் உயிரை மாத்துக் கொள்கிற அவலம் போதாதென்று, இதோ இப்போது இந்த எரிகுழாய் பிரச்சினை வேறு எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகிறது! பேசாமல், ஒரேயடியாக ஒட்டுமொத்த விவசாய நிலங்களையும் சுடுகாடாக ஆக்கிவிடுங்களேன்!

****************



தகவலுக்காக

இதுவரை இந்தியா முழுக்க 53,189 கிலோமீட்டர் தூரத்துக்கு பெட்ரோலிய மற்றும் எரிவாயு பைப்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டுமே 10,119 விபத்துகள் நடந்துள்ளன. இதில் பாதிக்கும் மேல், விவசாய நிலங்களில் நடைபெற்றுள்ளன. விவசாய நிலங்களில் உண்டாகும் இவ்வகை விபத்துகள், அந்த நிலத்தையே முற்றிலுமாக எதற்குமே பயன்படாத ஒன்றாக மாற்றிவிடுகின்றன. அதோடு, இவ்விபத்துகளால் இதுவரை 391 பேர் பலியாகியுள்ளனர். 1,599 பேர் காயமடைந்துள்ளனர். 2010ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்ற எரிவாயுக்குழாய் விபத்தில் 500 தென்னைமரங்கள் முற்றிலுமாக சாம்பலாயின. 30 ஏக்கர் பரப்பளவுக்கு நிலத்தடிநீரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாயின. 8 செப்டம்பர் 2008ம் ஆண்டு இதே ஆந்திர மாநிலம் அமலாபுரம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்த விபத்தில் 8 பேர் இறந்து போனார்கள்.


**************

(புதியதலைமுறை வார இதழுக்காக எழுதிய கட்டுரை.
நன்றி-புதியதலைமுறை)

23 February 2013

ஏ மாஃபியாசோ ஆக்சன் சமோசா





தமிழ்நாட்டைவிட்டு தாய்லாந்துக்கு தன் தாய் தங்கையோடு வருகிறார் தாடிவைத்த ஹீரோவான தாதி... சாரி.. ஆதி (ஜெயம்ரவி)!. தமிழ்நாட்டிலிருந்து பஞ்சம்பிழைக்க முதன்முதலாக தாய்லாந்துக்கு சென்ற குடும்பம் நம்ம ஹீரோவுடைய குடும்பம்தான். வந்த இடத்தில் ஆதிக்கு கலெக்டர் வேலை கிடைக்கவில்லை என்பதால் அவர் கஞ்சாபொட்லம் விற்கும் வேலையில் கஷ்டப்பட்டு சேருகிறார்.

நான்கு நாட்கள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து கஞ்சாபொட்லம் விற்றதில் நிறைய பணம் கிடைக்கிறது. அதைவைத்து ஐந்தாவது நாள் கோடீஸ்வரன் ஆகி விடுகிறார். பெரிய கோடீஸ்வரன் ஆகிவிட்டதால் ஆறாவது நாள் மாபெரும் டான்களோடு யாருமே இல்லாத இடங்களில் சூட்கேஸ் மாற்றி மாற்றி ஏதேதோ பேசுகிறார். அப்படியே ஏழாவது நாளில் போகிற போக்கில் அவரும் ஒரு பெரிய டான் ஆகிவிடுகிறார். டான் ஆகிவிட்டதால் தாடியை வெட்டி ஒட்டி டேவிட் பூன் போல மீசை வைத்துக்கொள்கிறார். பிறகு கோட்டும் கறுத்தகண்ணாடியும் மாட்டிக்கொள்கிறார்.

படம் சின்ன பட்ஜெட் என்பதாலோ ஆள்பற்றாக்குறையோ இந்த டானுக்கு ஒரே ஒரு அல்லக்கைதான். அதோடு டான் என்றால் நாலு படி ஏறி இறங்கி தேவையில்லாமல் துப்பாக்கியை எடுத்து கோட்டுக்குள் சொறுகிக்கொள்ள வேண்டும் , அதை எடுத்து திரையைப்பார்த்து சுடவேண்டும், தமிழ்நாட்டில் வழக்கொழிந்துவிட்ட நைட் டிரஸ் போட்டுக்கொண்டு சரக்கடிக்கவேண்டும்... உச்சா போவதாக இருந்தாலும்.. கட்டைக்குரலில்.. ‘’ஏ.....ய் டாய்லெட்.. எங்..க்க்..க இரு...க்கு..’’ என்று முக்கி முக்கி பேசவேண்டும். பில்லா படங்களில் தல அஜித் என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் செவ்வனே செய்கிறார் ஆதி. (டான் ஆகிட்டாராம்.).

ஆதி டான் ஆகி நிறைய சம்பாதிப்பது அவருடைய அம்மாவுக்கு பிடிக்கவில்லை. ‘தீ’ ‘பில்லா’ காலத்திலிருந்து இந்த அம்மாங்களே இப்படித்தான்! டான்களோட மனசை புரிஞ்சிக்கவே மாட்டாங்க.. அதனால் ஆதியின் அம்மாவை காட்டும்போதெல்லாம் ஆதியும் அம்மாவும் மாறி மாறி அழுகின்றனர். ‘’ம்ம்ம்மா..’’ என்று ஆதி அழும்போது திரிசூலம் படத்தில் சிவாஜிசார் ‘’ம்ம்ம்மா சும்ம்ம்த்தீ..’’ என்று அழுவது நினைவுக்கு வந்துவிடுகிறது!

டானுக்கு ஒரு தங்கை இருந்தால்.. அவள் யாராவது மொக்கை வில்லனை லவ்பண்ண வேண்டும்தானே.. அதுதானே டான்களின் விதி. அதற்குத்தான் டான்களுக்கு தங்கைகளே பிறக்கிறார்கள். ஆதியின் தங்கையும் லவ்பண்ணுகிறார். தங்கை காதலித்த மொக்கை வில்லனை ஆதி ஒரே புல்லட்டில் காலிபண்ணுகிறார். வாவ்!

இப்படியாக கதை போய்க்கொண்டிருக்க.. நமக்கு கொட்டாவி கொட்டாவியாக வருகிறது. அப்போதுதான் ஹீரோயின் ராணி (நீத்து சந்திரா) வருகிறார். டானை காதலிக்கிறார். அப்பாடா இனிமே ஏதோ நடக்கப்போகுது பாரு என்று நாம் நிமிர்ந்து உட்காரும்போதே படத்தில் பாதி முடிந்துவிடுகிறது. அதற்கு பிறகு இன்டர்வெல்லுக்கு முன் ஒரு மொக்கையான யூகிக்க கூடிய சஸ்பென்ஸ்.. ஆமாம் ராணியின் காதல் பொய்.. அவர் ஆதியை சிக்கவைக்க நடித்திருக்கிறார். ஏன்னா அவர் வில்லனோட காதலி.. வில்லன் யாருன்னா.. இன்னொரு ஜெயம் ரவி. அதுவும் அவர் ஒரு பெண்மை நிறைந்த ஆண்! பெயர் பகவான். (ஆதி-பகவான்.. டைட்டில வந்துடுச்சா)

அப்பாடா இனியாச்சும் குடுத்த நூறுரூவாய்க்கு நல்ல கதையா சொல்லுவாங்கய்னு நிமிர்ந்து உட்கார்ந்தால்... முதல்பாதியில் நம்மை மொட்டை அடிக்கிறார்கள் என்றால். செகன்ட் ஆஃப்பில்தான்டி மாப்ளே உனக்கு இருக்கு.. என்று நமக்கு அந்த மொட்டை மண்டையில் முட்டை உடைத்து ஆஃபாயில் போட்டு ஆணி அடிக்கிறார் இயக்குனர். தியேட்டரே கதறுகிறது.

சமீபத்தில் இவ்வளவு மொக்கையான ப்ரடிக்டபிள் ட்விஸ்டுகளுடன் ஒரு படத்தை பார்த்ததேயில்லை. 1965க்கு முன்பு இப்படம் வெளியாகியிருந்தால் ஃப்ரஷ்ஷாக இருந்திருக்குமோ என்னமோ? ஒருவேளை இது ஸ்கார்ஃபேஸ் படத்துக்கான ட்ரிபூட்டோ என்னவோ?

ஒரே ஒரு ட்விஸ்டை மட்டுமே நம்பி முன்னும் பின்னும் கதை பின்னியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அந்த ட்விஸ்ட் கூட ரொம்ப பழைய ‘’அத்தனையும் நடிப்பா’’ என்று கதறும் சிவாஜி, ‘’இல்லை கோப்பால் இல்லை..’’ என்று கதறும் சரோஜாதேவி காலத்து ட்விஸ்டுதான்!
ஆதியை கொல்வதற்காக போலீஸ்கும்பல் அவனை சங்கிலிபோட்டு அழைத்துச்செல்கிறது. போகிற வழியில் சில வில்லன்களிடம் ஒரு இரவுக்கு மட்டும் ஒப்படைக்கிறார் காவல்துறை அதிகாரி. அப்போதே தெரிந்துவிடுகிறது ஆதி தப்பிவிடுவான்னு. இருந்தும் அதை ஏன் அரைமணிநேரம் ஓட்டவேண்டும்! கிளைமாக்ஸில் கர்ணன் காலத்து சேஸிங் வேற.. நல்லவேளை அதிரடி சேஸிங்குகள் நிறைந்தபடம் என்று விளம்பரமெல்லாம் போடவில்லை.

கிளைமாக்ஸில் இரண்டு ஜெ.ரவிகளும் சந்திக்கும் காட்சியில் எங்கே பக்வான் ஆதியை பார்த்து ‘’தம்பி’’ என்றும் ஆதி இவனை பார்த்து ‘’அண்ணா’’ என்றும் கத்திவிடுவார்களோ.. என்று பயந்துகொண்டே படம் பார்க்க வேண்டியதாகிவிட்டது.

அதுபோக ஏதாவது ஆயா திடீரென வந்து ‘’இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால நீங்க இரண்டுபேரும் இரட்டை பசங்க.. ஒரு பிரச்சனையால பிரிஞ்சுட்டீங்க, அம்மாவோட ஒருத்தன் அப்பாவோட ஒருத்தன்னு...’’ என்றெல்லாம் பிளாஷ்பேக் சொல்லி கடுப்பாடிப்பாரோ அமீர் என்றெல்லாம் யோசிக்க வேண்டியதாகிவிட்டது. ஏன் என்றால் படம் முழுக்க எழுபதுகளின் இறுதியில் வெளியான அத்தனை படங்களின் சாயலும்! இந்த ஒரே ஒரு ட்விஸ்ட்டை மட்டும் ஏனோ அமீர் கையாளவில்லை. அதையும் கூட பயன்படுத்தியிருக்கலாம் பெரிய சேதாரம் இருந்திருக்காது.

ஆளவந்தான் படம் வெளியாகி பத்து வருடம் இருக்குமா? அந்த அளவுக்காவது கிளைமாக்ஸ் சண்டை அமைந்திருக்க வேண்டாமா? நீரும் நெருப்பும் காலத்து யுக்திகளை பயன்படுத்தி கிளைமாக்ஸ் சண்டையை படமாக்கியிருக்கிறார் அமீர். அவர்தான் ஸ்டன்ட் டிசைனாம்! படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற எதுவுமே மனதில் ஒட்டவில்லை என்பதைவிட புரியவில்லை! ஏன் எதுக்கென்றே தெரியாமல் ஒருஹிந்திப்பாட்டு வேற. படம் முடிந்தபிறகு அமீரே குத்தாட்டம் போடும் ஆங்கில ராப் சாங் கொடுமைகளும் உண்டு!

டேய் படம் முடிஞ்ச பின்னாடியும் துரத்தி துரத்தி டார்ச்சர் குடுக்கறாங்கடா.. என்று கத்த வேண்டும் போல இருந்தது.

ஜெயம்ரவி படம் முழுக்க சிவாஜியை மிமிக்ரி செய்கிறார். அவருக்கு முகமும் உடலும் முதிர்ந்த அளவுக்கு நடிப்பும் உடல்மொழியும் வாய்ஸ்மாடுலேஷனும் முதிர்ச்சி அடையவில்லை. மீசை வச்சிட்டா மட்டும் பூனை புலியாகிடுமா.. ஜெயம்ரவி சீரியஸாக பஞ்ச்வசனம் பேச ஆரம்பித்தாலே தியேட்டரே சிரித்து மகிழ்கிறது. நீத்து சந்திரா படம் முழுக்க நிறைய புகைபிடிக்கிறார். இவை தவிர சொல்ல ஒன்றுமில்லை.

ஜெயம்ரவிக்கு அஜித் ஆகவேண்டும் என்று ஆசை வந்திருக்கலாம்.. ஆனால் அமீருக்கு ஏன் விஷ்ணுவர்த்தன் ஆகவேண்டும் என்று ஆவல் வந்ததது என்றுதான் புரியவில்லை. ஸ்டைலிஷ் மேக்கிங் மட்டுமே ஒரு படத்தை காப்பாற்றிவிடும் என்று நினைத்திருப்பார் போல..ம்ம் அமீர் மேல் இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது.

22 February 2013

எப்படி ஜெயித்தார் எம்ஜிஆர்





1937 ஆண்டு. கல்கத்தாவில் மாயா மச்சீந்திரா என்கிற படத்தின் சூட்டிங். அப்போது எம்ஜிஆர் சாதாரண ராமசந்தராகத்தான் இருந்தார். புரட்சிதலைவரெல்லாம் கிடையாது. துடிப்பான இளைஞரான எம்ஜிஆர் அக்காலகட்டத்தில் ஏகப்பட்ட ஆங்கிலப்படங்கள் பார்க்கிறார். இத்தனைக்கும் எம்ஜிஆருக்கு அந்த சமயத்தில் ஆங்கிலம் சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் சினிமாவின் மீது தீராத ஆர்வமும் குறுகுறுப்பும் துறுதுறுப்புமாக திரிந்த காலம் அது.

ஒரு நாள் சில நண்பர்களுடன் ஆங்கில படம் ஒன்றை பார்க்கிறார். அப்படத்தின் பெயர் 'இஃப் ஐ வேர் ஏ கிங்''. ரொனால்ட் கால்மேன் என்கிற நடிகர் நடித்த சூப்பர் ஹிட் படம் அது. படம் முழுக்க IF I WERE A KING என்கிற வசனம் படம் முழுக்க இடம்பெறுகிறது. அந்த வசனத்துக்கும் மட்டும்தான் அர்த்தம் தெரிந்துவைத்திருந்தார் எம்ஜிஆர். படம் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்து விதவிதமாக 'நான் மன்ன்னானால்' என்கிற வசனத்தை விதவிதமாக சொல்லிப்பார்க்கிறார். ஒருவேளை தான் தமிழ்நாட்டுக்கே மன்னனானால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சிந்தித்துப்பார்க்கிறார்.

''அந்தகாலத்திலேயே ஏழ்மையை பற்றியும் மக்களின் நிலையைப்பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக்கொண்டிருந்தேன் என்பதே சரியானது.. நாட்டிலே இதுபோன்ற தொல்லைகள் ஏன் இருக்க வேண்டும் என அடிக்கடி எண்ணுவேன்.. அதுதான் இந்த நாடோடியை மன்னனாக மாற்றியது'' என்கிறார் எம்ஜிஆர்.

பின்னாளில் எம்ஜிஆர் தமிழ்நாட்டுக்கே மன்னன் ஆனதெல்லாம் வரலாறு. அவர் நடித்து வெளியாகி சரித்திரம் படைத்த நாடோடி மன்னன் திரைப்படத்துக்கான கருப்பொருள் இப்படித்தான் உருவானது. இச்சம்பவத்தை தன்னுடைய புத்தகமொன்றில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் எம்ஜிஆர். நாடோடி மன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றபோது அதற்காக வெள்ளிவிழா மலர் தயாரிக்கப்பட்டது. அதில் இப்படத்தின் பின்னணிகள் குறித்து ஏகப்பட்ட தகவல்களை பகிர்ந்திருக்கிறார் எம்ஜிஆர். 'யாருக்கு வெற்றி' என்கிற பெயரில் வெளியான இக்கட்டுரைகளை எழுத்தாளர் அஜயன்பாலாவின் நாதன் பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது.

''எப்படி ஜெயித்தேன்'' என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகத்தில், நாடோடி மன்னன் திரைப்படத்தை தயாரிக்கவும், இயக்கவும் எம்ஜிஆர் பட்ட பாட்டினை அறிந்துகொள்ள முடிகிறது. படத்தை தயாரிப்பதில் தொடங்கி அதை படமாக்குவதில் பட்ட இன்னல்களை தனக்கேயுரிய அடக்கத்துடன் பகிர்ந்துகொள்கிறார் எம்ஜிஆர்.

இன்று ஏகப்பட்ட ஹாலிவுட் மற்றும் உலகசினிமாவிலிருந்து கதையை சுட்டு படமெடுப்பதை பார்க்க முடிகிறது. நாடோடி மன்னனும் கூட பிரிசனர் ஆஃப் ஜென்டா என்கிற படத்தின் தழுவல்தன். ஆனால் அதை தன் படத்துக்கான முதல் விளம்பரத்திலேயே அறிவித்திருக்கிறர் எம்ஜிஆர். அதோடு ஆங்கிலக்கதையை எப்படி தமிழுக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தார் என்பதையும் குறிப்பிட்டு ஒரு கட்டுரையில் விளக்குகிறார்.

நாடோடி மன்னன் திரைப்படம் பாதி கறுப்பு வெள்ளையிலும் மீதி கலரிலும் இருக்கும். படத்தின் ஒளிப்பதிவாளரான ராமுவின் மீது எம்ஜிஆருக்கு அப்படி ஒரு மரியாதை. அதனால் படம் முழுமைக்கு அவரை ஒளிப்பதிவாளராக பயன்படுத்துவது என முடிவாகிறது. ஆனால் ராமுவோ தான் கலர் படத்தில் வேலை பார்த்த அனுபவமே கிடையாது வேறு யாராவது நல்ல நிபுணரை பயன்படுத்திக்கொள்ளுங்களேன் என்று எம்ஜிஆரிடம் கேட்கிறார். ஆனால் எம்ஜிஆரோ நீங்கள்தான் வண்ணக்காட்சியையும் படமாக்க வேண்டும்.. இல்லையென்றால் படத்தில் கலரே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

அதோடு ராமுவை வைத்து ஒருநாள் மட்டும் கலர் படமெடுக்கிற கேமராவில் டெஸ்ட் சூட்டிங் செய்து அதை மும்பைக்கு அனுப்பி சோதனை செய்கிறார். நன்றாக வந்திருக்கிறது என்று மும்பையிலிருந்து தகவல் வர.. மீதி படம் கலரிலேயே ராமுவை வைத்து எடுக்கப்படுகிறது. ராமு தவிர படத்தின் இசையமைப்பாளர்,எடிட்டர் தொடங்கி சாதாரண லைட் பாய் வரைக்கும் இப்படத்தின் வெற்றிக்காக உழைத்த ஒவ்வொருடைய பின்னணியையும் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் குறிப்பிட்டு எழுதியுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமல்லாது படத்தின் நடிக நடிகையர் அனைவரது உழைப்பையும் விளக்கும் வகையில் சில கட்டுரைகளும் இப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக சந்திரபாபு குறித்தும் அவருடனான எம்ஜிஆரின் தள்ளுமுள்ளுவும் சுவாரஸ்யமானது.

எம்ஜிஆர் ஒரு காட்சிக்காக சில குதிரைகளை ஏற்பாடு செய்கிறார். அதில் ஒன்று முரட்டுக்குதிரை. சந்திரபாபு அந்தக்குதிரையில்தான் பயணிப்பேன் என்று அடம்பிடிக்கிறார். எம்ஜிஆர் எவ்வளவோ தடுத்தும் கேட்கமல் அதில் ஏறி.. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கீழே விழுந்து கைகால்களில் காயத்தோடு திரும்புகிறார். அச்சமயத்தில் எம்ஜிஆர் சந்திரபாபுவுக்கு கொடுத்த அறிவுரை சினிமா கலைஞர்கள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

''சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள் புகழுகிறார்கள் என்றால் அந்த சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத்திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையே எத்தனை எதிர்பார்ப்புகளுக்கிடையே கற்றுக்கொண்டிருப்பார். அதற்காக எத்தனை வருடங்கள் உழைப்பு தேவைப்பட்டிருக்கும். அவைகளை எல்லாம் ஒரேநாளில் நினைத்ததும் பெறமுடியாத அந்த திறமைகளையெல்லாம் ஒரே விநாடியில் இழந்துவிடும் நிலைக்கு நம்மை கொண்டு செல்வது ஒரு கலைஞன் மக்களுக்கு செய்கிற மகத்தான துரோகமில்லையா'' என்று குறிப்பிடுகிறார்.
இதுபோல இன்னும் ஏகப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள் புத்தகமெங்கும் நிறைந்திருக்கிறது. அந்தகாலத்து சலிப்பூட்டும் எழுத்து நடைதான் என்றாலும் சம்பவங்கள் பலதும் அட போட வைக்கின்றன. அக்காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச்செல்கின்றன. புத்தகத்தின் இறுதியில் அறிஞர் அண்ணா இப்படத்துக்கு எழுதிய மதிப்புரை (விமர்சனம் என்று சொல்லமுடியாது) இடம்பெற்றுள்ளது. அதில் திராவிட இயக்கத்துக்கும் இப்படத்துக்குமான அரசியில் தொடர்புகளை விலாவாரியாக விளக்கி குறிப்பிட்டுள்ளார். படத்தில் இருக்கிற குறியீடுகள் குறித்தெல்லம் பேசுகிறார்!

புத்தகம் முழுக்க எம்ஜிஆர் தன்னுடைய புரட்சிதலைவர் இமேஜையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு ஒரு சாதாரண ராமசந்தராகவே நம்மோடு உரையாடுகிறார். அந்த எளிமையும் தன்னடக்கமும்தான் ராமசந்தர் என்கிற நாடோடியை மன்னனாக்கியதோ என்னவோ!
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது தனிநபருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அதன் ஒவ்வொரு ஃப்ரேமுக்கு பின்னாலும் எண்ணற்ற மனிதர்களின் வியர்வையும் உழைப்பும் அடங்கி இருக்கிறது. அந்த மகத்தான உழைப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் வெற்றியின் சூத்திரம் அடங்கியிருக்கிறது. அதை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இந்த எப்படி ஜெயித்தேன்!

****

''எப்படி ஜெயித்தேன் - எம்ஜிஆர்''
நாதன் பதிப்பகம்
விலை - 50
nathanbooks03@gmail.com
044-45542637


(நன்றி - cinemobita.com)

12 February 2013

நாய்குட்டிகள் வேண்டுமா?




வீட்டுக்கு அருகில் ஒரு தெருநாய் சிலநாட்களுக்கு முன் எட்டு குட்டிகளை ஈன்றது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். சரியான சுட்டிகள். ரொம்பவும் அழகு!

வீட்டுக்கு எதிரேயிருந்த ஒரு சாக்கடை ஓரம்தான் அவை வசித்தன. குட்டிநாய்கள் பத்துநாட்களிலேயே பயங்கர சுட்டியாக மாறிவிட்டன. இதனால் அவை சாலைக்கு வந்துவிடுவதும், அருகேயிருக்கிற வீடுகளுக்குள் நுழைந்துவிடுவதுமாக இருந்தன.

இதனால் கோபமடைந்த சில வீட்டுக்காரர்கள் அதனை அடித்தும் துன்புறுத்தியும் வந்தனர். அதோடு வாகன ஓட்டி ஒருவர் ஒரு குட்டியின் மேல் வண்டியை ஏற்றி கொன்றும் விட்டார். ப்ச்.

பார்க்க பாவமாக இருந்ததால் மீதியிருந்து ஏழு குட்டிகளையும் அதன் தாயையும் எடுத்துக்கொண்டு போய் எங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கிற காலி நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களுக்கு நடுவில் வைத்தோம். அங்கே அவை பாதுகாப்பாகவே இருந்தன. அம்மா அவ்வப்போது அந்த குட்டிகளுக்கு பாலும் பிஸ்கட்டும் கொடுத்து வந்தாள். (எங்கள் வீட்டில் ஏற்கனவே மூன்று பூனைக்குட்டிகளும் அதன் தாயும் இருப்பதால் அதோடு இவற்றை வைக்க முடியாத நிலை)

ஆனால் எத்தனை நாளைக்குத்தான் அவைகளை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதால் நான் ப்ளுக்ராசுக்கு போன் செய்து குட்டிகளை எடுத்துச்செல்ல இயலுமா என்று விசாரித்தேன். 50 நாட்களுக்கு பிறகுதான் முடியும் என்றும் சொல்லிவிட்டனர். போனவாரத்தில் அந்த குட்டிகள் 48 நாட்களை கடந்துவிட்டதால் மீண்டும் அழைத்துச்சொன்னேன். ஒருவாரம் கழித்து எடுத்துக்கொள்வதாக வாக்களித்திருந்தனர். நான் அதுவரை இதை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள் அம்மா.

இன்று காலை புதர் மண்டிக்கிடந்த நிலத்தின் ஓனர் ஒரு பொக்லைன் இயந்திரத்தோடு வந்து அந்த இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அதோடு நிலத்தையும் சமன் செய்துகொண்டிருந்தார். ஓடிப்போய் அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் நானும் போய் குட்டிகளை தேடி எடுத்துவந்து மீண்டும் பழைய இடத்தில் சேர்த்தோம். நான்கு குட்டிகள்தான் கிடைத்தன.

மீதி இரண்டை காணவில்லை. எங்கெங்கோ தேடியும் அகப்படவில்லை. அங்கே எங்களை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர்.. ஏம்ப்பா அந்த இரண்டுகுட்டிகளும் மண்ணுலயே பொதஞ்சிடுச்சிப்பா என்று மிகமிக சாதாரணமாக கூறினார். நானும் அம்மாவும் பதறிப்போய் ஒவ்வொரு இடமாக தோண்டி தோண்டிய பார்க்க.. இரண்டுகுட்டிகளும் மண்ணுக்குள் கிடந்தன.

ஒரு குட்டியை வெளியே எடுத்ததும் கீக்கீ என கத்திக்கொண்டு துள்ளிக்குதித்து ஓடியது. இன்னொன்றோ உஸ்உஸ் என வாயிலிருந்து காற்றைவிட்டுக்கொண்டு போராடிக்கொண்டிருந்தது. மருத்துவமனைக்கு எடுத்து செல்லலாம் என்று அம்மாவும் நானும் முடிவெடுத்தோம். இதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த பெரியவர்

''ஏம்ப்பா இதை காப்பாத்தி என்ன பண்ணப்போறீங்க.. இதென்ன படிச்சி கலெக்ட்ரா ஆகப்போவுது'' என்றாரே பார்க்கணும். அம்மாவுக்கு செம கோபம் வந்துவிட்டது.

''ஏன்யா நீ மட்டும் இன்னும் உயிரோட இருக்க.. படிச்சி தாசில்தாரா ஆகப்போற சாகறதுதானே'' என்றதும் அந்த பெரியவருக்கு முகமேயில்லை. அப்படியே நகர்ந்துபோய்விட்டார்.

அதற்குபிறகு அம்மாவும் நானும் அருகில் இருக்கிற ஒரு கால்நடைமருத்துவரிடம் எடுத்துசென்றதும் அவர் சிகிச்சை செய்து நாய்க்குட்டியை சரிபண்ணினார். ஆறுகுட்டிகளில் ஒன்றை பக்கத்து தெரு நண்பர் ஒருவர் தன் வீட்டில் வளர்க்க எடுத்துச்சென்றுவிட்டார். மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது.

நாளைக்கோ நாளை மறுநாளோ அந்த ப்ளூக்ராஸ் காரர்கள் வந்து மீதி குட்டிகளையும் அதன் தாயையும் எடுத்துச்சென்றுவிட்டால் நன்றாக இருக்கும். அவர்களோ இன்று நாளை என ஏதாவது சாக்குசொல்லிக்கொண்டேயிருப்பது வருத்தமாக இருக்கிறது. இன்னும் ஐந்து குட்டிகள் உள்ளன.

இந்தகுட்டிகளை எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வளர்க்க நினைக்கிறவர்கள் என்னை தொடர்புகொள்ளலாம். dhoniv@gmail.com . என்னுடைய வீடு முகப்பேர் மேற்கில் இருக்கிறது.



09 February 2013

கண்ணா ஆஸ்கர் வாங்க ஆசையா?





‘’அண்ணே உங்க அறிவுக்கும் திறமைக்கும் நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லண்ணே.. நீங்க மட்டும் அமெரிக்காவுல பொறந்திருந்தா இந்நேரம் வெள்ளை மாளிகைல உக்காத்தி வச்சி விழா கொண்டாடிருப்பாய்ங்க, அந்தூருக்கே நீங்க ஜனாதிபதி ஆகிருப்பீங்க..உங்க மூளைல மட்டும் அம்புட்டும் அறிவுண்ணே!’’

‘’உனக்கு தெரியுது.. ஆனா இந்த ஊர்க்காரய்ங்களுக்கு தெரியலையே.. அட அந்த அமெரிக்கா காரனுக்கும் தெரியலையேப்பா!’’

‘’அண்ணே உங்ககிட்ட எம்பூட்டு காரு இருக்கு.. ஆனா இந்த ஆஸ்கார் மட்டும் ஏன்னே இல்ல’’

‘’எனக்கு மட்டும் என்ன ஆசையா.. போனமாசம் ஆடிக்காரன் கடை ஆரம்பிச்சப்ப முத ஆளாபோயி ஆடித்தள்ளுபடில காரு வாங்கினது யாரு.. இந்த அண்ணன் தானடா.. ஆஸ்காரும் அதுமாதிரி எங்காயவது மவுண்ட்ரோட் ஆழ்வார்பேட்டை பக்கமா கடைய விரிச்சி வித்தாய்ங்கண்ணா விலை என்னானு விசாரிச்சி நாலு வாங்கி ஏழைகளுக்கே ஓட்டலாம்தான்...நமக்கு கொடுப்பன இல்லையே.. அட நேத்து வந்த பய அவன் ஒன்னுக்கு ரெண்டா வாங்கி வச்சிகிட்டு வம்பிழுக்கறான்.. இத்தனைக்கும் நான் பத்தாவது பெயிலு அவன் எட்டாங்கிளாஸ் பாஸுடா.. அதையெல்லாம் பார்க்கும்போது இதை தலைகுனிவு என்றும் சொல்லலாமா..அல்லது அவமானம் என்றும் சொல்லலாமா என்று வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடிக்க நினைக்கிற கலைஞனின்... ஆங்ங்ங்ங் ஆங்ங்ங்ங்’’

‘’அட அழாதண்ணே.. இதுக்குபோயி சின்னபிள்ளையாட்டம்.. ஆமா ஏன்னே இன்னும் உங்களுக்கு மட்டும் ஆஸ்காரு குடுக்கல’’

‘’அதெல்லாம் ஒரிஜினல் கதைல நடிச்சாத்தான் குடுப்பாய்ங்களாம்.. நாம என்னைக்கு சொந்தமாக கதை ரெடி பண்ணினோம்.. எப்பயும் எங்கயாச்சும் ஹாலிவுட்டுல சுட்டுத்தானே படமெடுக்கறது! அவன் ஊரு படத்தை சுட்டு படமெடுத்துட்டு அதை அவனுக்கே போட்டுகாட்டினா அல்லைல மிதிக்காம அடேங்கப்பான்னா சொல்லுவான்.. இதுல ஆஸ்காராம்ல ஆஸ்கார்ரு.. அப்படியே பழகிடிச்சிடா தம்பி’’

‘’அண்ணே அமெரிக்கா காரனுக்கு நாம யாருனு காட்டணும்ண்ணே’’

‘’ஏன்டா ஏன்.. மெதுவா பேசுடா.. எவனாவது கேட்டுகிட்டு தொலைச்சிரப்போறான்.. அப்புறம் ஆஸ்கார் அவார்ட் குடுக்கற தெருப்பக்கம் கூட நம்மள வுடமாட்டாய்ங்க’’

‘’அண்ணே அப்புறம் என்னதாண்ணே பண்ணலாம்’’

‘’ஒரு படமெடுப்போம்டா.. அத பார்த்து அமெரிக்காகாரன் கதறணும்.. இங்கிலாந்துகாரன் குட்டிகரணம் அடிக்கணும்.. ஒட்டுமொத்த உலகமுமே டே ராசா இத்தன நாளா எங்கடா இருந்த.. குடுத்த காசுக்கு மேலயே கூவுறியேடா கொய்யாலனு பாராட்டணும்.. அப்படி ஒரு படம் எடுத்து அந்த ஒபாமாவுக்கே ஒடசல குடுப்போம்டா..’’

‘’சூப்பர்ண்ணே’’

‘’கதைப்படி ஒரு ரகசிய ஏஜன்ட்டு.. சாதாரண ஆளா அமெரிக்கால வாழறான்.. அவன் ஏஜன்ட்டுனு அவன் பொண்டாட்டிக்கே தெரியாது.. ‘’

‘’அண்ணே அண்ணே இது ஜேம்ஸ்காமரூன் எடுத்த ட்ரூலைஸ் கதைண்ணே’’

‘’டேய் மண்டையா.. அது ட்ரூ லைஸ் கதைதான்.. ஆனா அதுமாதிரி தெரியாம இருக்கத்தான்.. ஹீரோ சாதாரணமா இருக்கும்போது கரகாட்டம் ஆடறதா மாத்திட்டேன்.. சேல்ஸ் ரெப்பு கிடையாது.. தலையில கரகத்த வச்சுகிட்டு ஓபனிங்லயே மாங்குயிலே பூங்குயிலே ஹே பூங்குயிலேனு ஆடறான்.. ஜேம்ஸ்காமரூனாலேயே கண்டுபுடிக்க முடியாது எப்படி!’’

‘’அண்ணே பிரமாதம்ண்ணே..’’

‘’அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாதிகளால பிரச்சனை வருது.. தீவிரவாதிங்க எப்பயும்போல பாம்வைக்கிறாங்க... அதை புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து எடுத்து.. அமெரிக்காவ காப்பாத்துறாங்க..’’

‘’அப்ப இந்தியாவ யாருண்ணே காப்பாத்தறது..’’

‘’டே டைம்பாம் மண்டையா.. கேப்டனும் அர்ஜூனும் ரிடையர்டாகிட்டதால இப்ப விஜய் அந்த வேலை எடுத்துருக்காப்டியே.. அதுமில்லாம அமெரிக்காதான் பாவம்.. காப்பாத்த யாருமே இல்லாம கெடக்கு‘’

‘’ஆமால்ல.. சூப்பர்சூப்பர்ண்ணே, ஆமா ஏன்னே அல்கொய்தா’’

‘’அமெரிக்காவுக்கு ஆயில் வேணும்.. நமக்கு ஆஸ்கார் வேணும்! அவ்ளோதாண்டா மண்டையா’’

‘’நீங்க ஒரு பஞ்சதந்திரிண்ணே’’

‘’ஒரு சீன் வச்சிருக்கேன் பாரு அமெரிக்காகாரனுங்க பாத்தா கதறிடுவானுங்க, அல்கொய்தா தீவிரவாதிங்க மேல அமெரிக்கா தாக்குதல் பண்ணுது.. அப்ப ஒரு தீவிரவாதி சொல்லுவான் அமெரிக்கா படைங்க ரொம்ப்ப்ப நல்லவனுங்க பெண்கள் குழந்தைகள் மேலலாம் தாக்குதல் பண்ணமாட்டாங்கன்னு.. ஜார்ஜ் புஷ்ஷூ பார்த்தாருண்ணா மிரண்டுருவாரு.. ஹிலாரி கிளின்டன் நமக்கு ஆஸ்கர்ல வொய்ல்ட் கார்டு ரவுண்டலயாச்சும் வாய்ப்புகுடுக்கும். அதுமில்லாம படம் பூரா இஸ்லாமியர்கள பயங்கர பயங்கரவாதிங்களா காட்றோம்.. இன்னொருபக்கம் அமெரிக்காவ அற்புதரட்சகர்களா காட்றோம்..’’

‘’அட அட அட... எனக்கே அழுகை வருது.. ஒபாமா பார்த்தாருண்ணா தம்பி உனக்கு எவ்ளோ நாட்டுப்பற்றுடானு கட்டிபுடிச்சி கிஸ் அடிச்சி...நூறுடாலரும் குடுப்பாருண்ணு தோணுதுண்ணே..’’

‘’அப்புறம் என்ன.. அடுத்தபடம் ஆலீவுட்டுலதான்..’’

‘’ஆமா இதுலயும் உங்களுக்கு புடிச்ச கிஸ்ஸு பிட்டு மேற்படிலாம்.. ம்ம் ம்ம்’’

‘’அதெல்லாம் இரண்டாவது பார்ட்லதான் காட்றோம்..’’

‘’சரி இந்தபடம் ஓடுமாண்ணே..இல்ல அந்த அசந்தவந்தான் படம்மாதிரி..’’

‘’அதெல்லாம் பயப்படாத.. அவிங்களுக்கு எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அடிக்கறோம்.. கடுப்பாகி சில முட்டாப்பசங்க எதிர்ப்பு அது இதுனு நமக்கு பப்ளிஷிட்டி பாத்துக்குவாங்க.. நாம நோகாம நோம்பிகும்படலாம்.. ஹோ கய்யா.. ஹோகய்யா.. ஓமஞ்சே ஓநெஞ்சே..ஓகயாஆஆஆஆ’’

‘’அண்ணே எங்கயோ போயிட்டீங்கண்ணே! ஆமா ஆஸ்கார் இந்தவாட்டியாச்சும் கிடைச்சிருமாண்ணே’’

‘’கிடைக்கும் என்றும் தோன்றுகிறது.. கிடைக்காது என்றும் தோன்றுகிறது. வாழ்வின் பெருவெளியில் கிடைப்பது கிடைத்தாலும் உடைப்பது உடைக்காது.. ஆங்ங் ஆங்ங்ங்..’’

‘’அண்ணே வாய மூடுங்க.. நாலு ஈ போயிடுச்சி!’’

(தொடரும்.. கண்ணா ஆஸ்கர் வாங்க ஆசையா பாகம் 2)


பிகு – இக்கதையில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனையே. உயிரோடோ பிணமாகவோ இருக்கிற யாரையும் குறிப்பிடுபவன அல்ல. உங்களுக்கு சிரிப்பு வந்திருந்தால் இதுமுழுக்க முழுக்க நகைச்சுவையே.. சிரிப்பு வராமல் போயிருந்தால் நேரில் வந்தால் கிச்சி கிச்சி மூட்டி சிரிப்பு காட்டுவேன் என உறுதியளிக்கிறேன். இப்படிக்கு - ஆஸ்கார்நாயகன் டாக்டர்.அதிஷா பிஏபிஎல் பிஈ எம்பியே.

08 February 2013

கடலும் கடல் சார்ந்த படமும்






சென்ற வார இறுதியில் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஒரு படம் மணிரத்னம் இயக்கிய பிரமாண்டமான கடல். இன்னொன்று விக்ரம் மற்றும் ஜீவா இணைந்து நடித்திருக்கும் டேவிட். இரண்டு படங்களுக்கும் ஏகப்பட்ட தொடர்புகள் உண்டு.

இரண்டுமே கடல் தொடர்பான படங்கள். டேவிட் படத்தின் இயக்குனர் பிஜோய் நம்பியார் கடல் பட இயக்குனர் மணிரத்னத்தின் சிஷ்யர்! கிறித்தவர்களின் வாழ்க்கை பின்னணியில்தான் இரண்டுபடங்களுமே இயங்குகின்றன. இரண்டிலும் பாதிரியார்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். சாத்தானுக்கும் கடவுளுக்கும் நடக்கிற அக மற்றும் புற யுத்தம்தான் இரண்டுபடங்களிலுமே கதையின் கரு. இரண்டுபடங்களிலும் இரண்டு வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.. இரண்டுமே வித்தியாசமான முயற்சிகள். அதோடு இரண்டு படங்களுமே நம் பொறுமையை சோதிக்கக்கூடிய மரணமொக்கைகள்!

மணிரத்னத்தின் முந்தைய படமான ராவணன் பார்த்து அகில உலகமே அய்யோ எங்களை விட்ருங்க மணிசார் எங்களால முடியல என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறியதை அனைவருமே அறிவோம். மணிசார் அந்த சாதனையை இந்த படத்தில் முறியடிக்க முயற்சி செய்திருக்கிறாரோ என்கிற சந்தேகங்களும் உண்டு.

கிரிக்கெட்டில் உலக லெவன் அணி என்று ஒன்றை உருவாக்கி, உலக சாம்பியனாக இருக்கிற நாட்டின் அணியோடு காட்சி போட்டியொன்றில் மோதவிடுவார்கள். உலக லெவன் அணியில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவார்கள். அது கனவு அணியினைப்போல இருக்கும். இப்படி ஒரு டீம் இருந்தா யாராலயும் ஜெயிக்கவே முடியாதுப்பா என்று நினைக்கிற அளவுக்கு வலுவான அணியாக அதை உருவாக்குவார்கள்.
ஆனால் பாருங்க இதுவரை அதுபோல உருவாக்கப்பட்ட எந்த உலக லெவன் அணியும் உருப்பட்டதாக சரித்திரமே கிடையாது. மிகமோசமான முறையில் அந்த அணிகள் மண்ணைக் கவ்வும். அதுதான் கடலுக்கும் நடத்திருக்கிறது.

TOO MANY COOKS SPOIL THE BROATH என்றும் ஒரு பழைய வாக்கு இருக்கிறது. அதுபோலவேதான் மணிரத்னம்,ரஹ்மான்,ராஜீவ்மேனன்,ஸ்ரீகர்பிரசாத் என ஜாம்பவான்களின் டீம். போதாக்குறைக்கு இலக்கியப்புலியான ஜெயமோகனும் வேற! என்னமாதிரியான கூட்டணி. அர்ஜூன் வில்லன். அர்விந்த்சாமி ஆப்டர் ஏ லாங் டைம் ரிட்டர்ன். கார்த்திக் பையன் ராதாபொண்ணு.. அடடா!
ஆனால் படம் பார்த்து முடித்தபின் இந்த கதைக்கு ஏன் இவ்ளோ பேர கஷ்டப்படுத்திருக்காரு மணிசார்.. ஏன் இவ்ளோ செலவு.. இதை ரொம்ப சாதாரணமான ஆளுங்களை வச்சு ரொம்ப ரொம்ப குறைஞ்ச செலவுல எளிமையா எடுத்திருந்தாலே அழகா வந்திருக்குமே... என்கிற எண்ணம்தான் எஞ்சி நிற்கிறது.

ஒரு சாதாரண கதையில் தேவையில்லாத பிரமாண்டத்தையும் ரிச்னஸ்ஸையும் வலிந்து திணித்தால் என்னாகும் என்பதற்கு கடல் ஒரு நல்ல உதாரணம். சில கதைகளுக்கு எளிமைதான் அழகே.. உதாரணத்துக்கு இதே மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தை பல கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்தால் எப்படி இருக்கும்!

கடலின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒருவித அன்னியத்தினை உணர முடிகிறது. தாஜ்மகால் என்கிற படம் பார்க்கும்போது நாம் பார்ப்பது தமிழ்படம்தானா அல்லது பீகாரில் எடுக்கப்பட்ட டப்பிங் படமா என்று சந்தேகம் வந்து பக்கத்து சீட்டு நண்பரிடம் கேட்டது நினைவிருக்கிறதா..? அதேதான். இதுபோன்ற மீனவ கிராமம், சந்தை, மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை.. எல்லாமே கொஞ்சமும் கதையோடு சேராமல் தனித்து நிற்கின்றன. எல்லாமே செட்டுதான்.. அங்கே சுற்றுகிறவர்கள் எல்லோருமே நடிகர்கள்தான் என்றுதான் தோணுதே தவிர.. அந்த கடல் வாசனையும் முரட்டு மனிதர்களையும் நம்மால் எங்குமே பார்க்க முடியவில்லை.
படத்தின் இயக்குனர் ஒவ்வொரு காட்சியிலும் எதையோ நிரூபிக்க ரொம்பவே மெனக்கெடுகிறார். பைபிளின் வார்த்தைகளை ரொப்பி ரொப்பி ஜெயமோகன் வசனாபிஷேகம் பண்ணுகிறார். ராஜீவ்மேனன் கேமரா வேறு அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.. ஆனால் காட்சியின் தன்மையை பார்வையாளனின் மனதில் பதிக்கிற ஒளியும் நிறமும்தானே நமக்கு வேணும்.

நாகர்கோவிலோ தூத்துக்குடியோ கொஞ்சம் எடக்கு மடக்கான தமிழில் பாத்திரங்கள் பேச.. அதை புரிந்துகொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கும்போது நடுவே ஜிச்சாம் பிச்சாம் பக்காம்.. பிக்காம் என ரஹ்மான்சார் வேறு டிஸ்டர்ப் பண்ணுகிறார்.
செட் ப்ராப்பர்ட்டி தொடங்கி வசனங்கள், கதாபாத்திரங்களின் உடை நிறங்கள் என பார்த்து பார்த்து பலவிஷயங்களும் செய்திருந்தாலும் எல்லாமே கதையோடு ஒட்டாமல் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்யாமல் தனித்து நிற்பதே படத்தின் மிகப்பெரிய சறுக்கலாக இருக்கிறது.

சமகாலத்தில் தெலுங்கு சினிமாவின் மிகமுக்கியமான திறமையான நடிகையான லட்சுமி மஞ்சுவை ஏன் கொசுறுபோல பயன்படுத்தினார் என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதோடு அர்ஜூன் ஏன் படம் முழுக்க ‘’நான் சாத்தான்டே நான் சாத்தான்டே’’ என சொல்லிக்கொண்டேயிருக்கிறார். அவர் இதற்குமுன்பு பல படங்களில் ஹீரோவாக நடித்தவர்தான்.. முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்தான்.. அதற்காக அவர் வில்லனாகிவிட்டார் என்று படம் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமா.. மக்களே புரிந்துகொள்ள மாட்டார்களா? அர்விந்த்சாமி எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்.. ம்ம் ஆன்ட்டிகள் சாபம் மணிசாரை சும்மாவிடாது பார்த்துக்க மக்கா!

படம் பார்த்து முடித்து வெளியே வரும்போது ஆவிகளின் எழுப்புதல் சுவிஷேச கூட்டத்தில் இரண்டு மணிநேரம் இடைவிடாத பிரசங்கம் கேட்ட உணர்வு.. பரலோகத்தில் இருக்கிற பரமபிதாவே இறங்கிவந்து நம் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து ஞான்ஸ்தானம் வழங்கியதுபோல உணரமுடிந்தது. பாப்கார்ன் அப்பமாகவும் ஐஸ்க்ரீம் யேசுவின் ரத்தமாகவும் மாறியதைப்போலொரு மாயை!

இதுதான் இப்படி என்று சிஷ்யப்பிள்ளை பிஜோய் நம்பியாரின் படம் பார்க்க போனால்.. கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை கலாமாஸ்டரோட ஆடுதாம் என்பதற்கிணங்க.. டேவிட் படம் கடலோடு போட்டியிட்டு நம்மை துன்புறுத்துகிறது. ஆனாலும் கடல் அளவுக்கு கிடையாது. விக்ரம் கூட இப்படத்தில் ஒரு புரொடியூசர் என்று தெரிகிறது. அதனாலேயே அவருக்கு கொஞ்சம் ஓவர் பில்டப்பெல்லாம் போட்டிருக்கிறார் இயக்குனர். ஜீவாவின் கதை ஆறுதல். அண்மையில் இந்து பயங்கரவாதம் குறித்த நேர்மையான விமர்சனத்தை எந்த திரைப்படமும் பேசியதில்லை. அதற்காகவே பிஜோய் நம்பியாரை பாராட்டலாம். ஆனால் அதுமட்டுமே ஒரு திரைப்பட அனுபவத்தை கொடுத்துவிடுமா என்ன?

இதுமாதிரி இரண்டுவெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் வெவ்வேறு கதைகள் ஓரிடத்தில் சந்திப்பதுபோன்ற படங்கள் ஹாலிவுட்டில் நிறையவே எடுக்கப்பட்டாலும் நமக்கு புதுசுதான். ஆனால் இரண்டு கதைகள் மாறி மாறி காட்டப்படுவதால் காலக்குழப்பமும் கதைக்குழப்பமும் உருவாகி நம்மால் எந்த கதையுடனும் ஒன்றமுடியவில்லை. விக்ரமின் கதையில் வருகிற காதல்காட்சிகள் எல்லாமே செம திராபை. காமெடி என்றபெயரில் என்னென்னவோ குரங்கு சேஷ்டைகள் செய்தும் எதுவுமே எடுபடவில்லை. ஜீவாவின் கதை சீரியஸாக போய்க்கொண்டிருக்க திடீர் திடீர் என விக்ரம் தென்பட.. எரிச்சலே மிஞ்சுகிறது.

கடலும் சரி, டேவிட்டும் சரி தொழில்நுட்ப ரீதியில் மிக சிறப்பான படங்கள். அதிலும் கேமரா கோணங்களும் எடிட்டிங்கும் அசாத்தியமாக கையாளப்பட்டுள்ளன. ஆனால் வெறும் தொழில்நுட்பம் மட்டுமே ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கிவிடாது. அதன் ஜீவநாடி திரைக்கதையில் இருக்கிறது. நம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கிற கடவுளுக்கும் சாத்தானுக்குமான போராட்டம், அதில் கடவுள் தன்மை எப்படி வெல்லுகிறது என்பதே இப்படங்கள் சென்றடையும் புள்ளி. அப்படி பயணிக்கும் திரைக்கதை, அந்த பயணத்தை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்திருக்க வேண்டும். அதோடு கதாபாத்திரங்கள் அதனுடைய இயல்பில் யதார்த்தத்தில் இருக்க வேண்டியதும் அவசியம். இரண்டுபடங்களுமே அந்த விதத்தில் பெரிய சறுக்கலையே சந்திக்கின்றன.

இரண்டு படங்களிலுமே அழகான தருணங்கள் ஏராளம் உண்டு.. ஆனால் அவை நல்ல காட்சிகளாக விரிவடையவில்லை.. ஒரு பூ மலர்வதற்கு முன்பே உதிர்ந்துவிடுவதைப்போல அவை தொடங்குவதோடு முடிந்துபோகின்றன.. அல்லது அந்த வியப்பை கொலைசெய்துவிடுகின்றன.



(நன்றி - www.cinemobita.com)


07 February 2013

கூடையில் என்ன பூ?






நாளுக்கு நாள் குஷ்பு மீதான மரியாதை அதிகரித்தவண்ணமிருக்கிறது. அது நமக்கே அச்சம் தரக்கூடிய அளவுக்கு வளர்ந்துவருகிறது. குஷ்புவின் சமகால பேட்டிகள் எல்லாமே ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் லாவகத்தோடு, ஏடாகூடமான கேள்விகளுக்கும் கழுவுற மீனில் நழுவுற மீனாக தப்பிச்செல்லும் அபார ஆற்றலையும் கொண்டதாக இருக்கிறது. அரசியல் தந்திரம்தான் என்றாலும் அது நாள்பட ரசிக்கும்படி மாறிக்கொண்டிருப்பதே நம் அச்சத்துக்கு காரணம்.

ஆங்கில ஊடகங்களுக்கு திராவிட இயக்கத்தின் முகமாக குஷ்பூ ஏற்கனவே மாறிவிட்டார். இதை உடன்பிறப்புகள் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அவர்களாலே கூட இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. குஷ்பூவின் ஆங்கிலப்புலமையும் திமுகவின் கொள்கைகளை செயல்பாடுகளை சாதனைகளை கலைஞர்பாணியில் எடுத்துரைக்கிற பாங்கும் அவருடைய தோற்றமும் கூட ஆங்கில ஊடகங்களுக்கு அல்வாவை போல அமைந்திருப்பதாக அவதானிக்கலாம். உண்மையோ பொய்யோ! திமுகவின் மற்ற யாரையும் விட அக்கட்சியின் மேல் அதன் தலைவரின் மேல் அளவில்லா அன்பும் பற்றும் ஈடுபாடும் கொண்டவராக தன்னை வெளிபடுத்திக்கொள்கிறார் குஷ்பூ.

எத்தனையோ நடிகர் நடிகையர்கள் தேர்தல் சமயத்தில் மட்டும் தலைகாட்டி துட்டை வாங்கிக்கொண்டு ஓட்டு கேட்டு தெருத்தெருவாக அலைந்து நடித்து ஒய்ந்து தேர்தலுக்கு பின் தன் வேலையை பார்க்க போய்விடுவதே வாடிக்கை. ஆனால் குஷ்பூ மட்டும்தான் அவர் சார்ந்த கட்சி ஒரு மகத்தான தேர்தல் தோல்வியை சந்தித்த பின்னும் கூட அதே இடத்தில் நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. (வடிவேலுவைப்பற்றி இங்கே நினைத்துப்பார்க்க வேண்டும்) அதோடு குஷ்பு தன்னை முழுமையான திராவிட இயக்க தொண்டனாக (வேறு வார்த்தைகள் இருக்கிறதா?) திமுகவின் மிகமுக்கிய அங்கமாக மாற்றிக்கொண்டிருப்பது ஆர்வத்தை அதிகரிக்கிறது.

இந்த வார விகடனில் வெளியாகியிருக்கிற குஷ்புவின் பேட்டியே இதற்கு நல்ல உதாரணம். அழகிரியா ஸ்டாலினா நீங்கள் யார்பக்கம் என்று நிருபர் திரும்ப திரும்ப வெவ்வேறு விதமாக கொக்கிபோடுகிறார். ஆனால் எதற்கும் அஞ்சாத குஷ்புவோ தலைவர் எவ்வழியோ நானும் அவ்வழியே என்று ஜோராக நழுவுகிறார். அதோடு அழகிரியை அண்ணன் என்று அன்போடு அழைத்து எப்பக்கமும் சேதாரமின்றி அரசியல் காய்களை அஞ்சாமல் நகர்த்துகிறார். அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா என்கிற கேள்விக்கு அவர் கொடுத்திருக்கிற பதிலே அலாதியானது (விகடன் வாங்கி படித்துப்பாருங்கள்). எனக்கு பயமென்றால் என்னவென்றே தெரியாது என்று நம் முதல்வர் பாணியில் பஞ்ச் டயலாக் கூட உண்டு.

திமுகவில் நடக்கிற வாரிசு அதிகாரப்போட்டியில் குஷ்பு ஒரு டார்க் ஹார்ஸாக இருப்பாரோ என்று கூட தோன்றுகிறது. திமுகவில் சகலரோடும் நட்பு பாராட்டுபவராகவும் யாரையும் பகைத்துக்கொள்ளாமலும் எதிர்ப்புகளில்லாமல் உயருகிறார். அவருடைய அபரிமிதமான வளர்ச்சி உடன்பிறப்புகள் சிலருக்கு எரிச்சலூட்டினாலும் ஒருகட்டத்துக்கு மேல் குஷ்பூவையும் சக உபியாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டதாகவே தோன்றுகிறது. இணையமெங்கும் குஷ்புவை முன்வைத்து அதிமுகவினர் தொடுக்கிற விமர்சனங்களை புறங்கையால் தகர்த்து செல்கின்றனர் உடன்பிறப்புகள்.

கலைஞரும் கூட குஷ்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவே அவருடைய மேடை நடவடிக்கைகள் காட்டுகின்றன. திமுகவின் எல்லா மேடைகளிலும் குஷ்புவுக்கு ஒரு நாற்காலி ஒதுக்கப்படுகிறது. அது தலைமைக்கு மிக நெருக்கமான நாற்காலியாகவே எப்போதும் அமைந்துவிடுகிறது. HISTORY REPEATS ITSELF என்று யாரோ சொன்னதற்கிணங்க.. எதுவும் நடக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. நமக்கும் திமுகவுக்கும் இது புதுசில்ல.. பழகினதுதான்.