Pages

17 June 2015

சிக்னலில் ஒரு போராளி



நேற்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த சீசனின் முதல் மழை. அதற்குள்ளாகவே வெள்ளத்தில் சிக்கியதுபோல போக்குவரத்து நெரிசல். சாலையெங்கும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நடுரோட்டில் ஆறுபோல் ஓடுகிறது. இதுமாதிரி டிராபிக்கில் மாட்டிக்கொள்வதில் இருக்கிற பெரிய சிக்கல் ரொம்ப போர் அடிக்கும். அந்த நேரத்தில் சைட் அடிப்பதுதான் வழக்கம். நேற்று மழை என்பதாலோ என்னவோ அதற்கு வாய்ப்பேயில்லாத வகையில் ஒரே ஜென்ட்ஸ் மயம். அதனால் வருத்தப்பட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தேன்.

கொஞ்சம் தள்ளி ஒரு பளபள ஸ்கார்ப்பியோ நின்றுகொண்டிருந்தது. இவ்வளவு வெள்ளையான ஒரு ஸ்கார்ப்பியோவை இதுவரை கண்டதேயில்லை. இந்திரலோகத்து புரவிகளின் நவீன வடிவம்போலிருந்தது என்றும் எழுதலாம். கார் ட்ரைவர்களின் முதலாளி விசுவாசமும் நேசமும் காரின் சுத்தத்தில் வெளிப்படுவதுண்டு. இந்தக்கார் ஓனர் நிச்சயம் பாக்கியசாலிதான் என்று நினைத்தபடி பைக் ஆஃப் ஆகிவிடுமோ என்று குறுங்ங்ங் குறுங்ங்ங் என்று முறுக்கிக்கொண்டிருந்தேன். வண்டிகள் பொறுமையாக நகர்ந்துகொண்டிருந்தன.

அந்த பளிச் பளிச் ஸ்கார்ப்பியோ எனக்கு முன்னால் நகர அதன் பின் பக்க கண்ணாடியில் எழுதியிருந்த வாசகங்கள் ஆச்சர்யத்தை அளித்தன. ப்ரஸ், அட்வகேட், டாக்டர், போலீஸ், கவர்மென்ட், ஈபி, ரேசன் என்றெல்லாம் எழுதிய எத்தனையோ வாகனங்களை பார்த்திருந்தாலும் இது புதுசு! ‘’தமிழினப்போராளி’’ என்று ஷோலே பட ஃபான்டில் அதிரடியாக சினிமா டைட்டில் போல் எழுதியிருந்தது. இப்படி ஒரு டைட்டிலோடு ஒரு மனிதர் சென்னைக்குள் சுற்றுகிறார் இது தெரியாமல் நானெல்லாம் இத்தனை காலமாக வண்டி ஓட்டுகிறேன் என்று நொந்துகொண்டேன்.

ஆனால் இப்படி போட்டுக்கொள்வதால் என்ன லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட படி ‘’ப்ரஸ் அட்வகேட் போலீஸ்’’ என்றெல்லாம் போட்டிருந்தால் ட்ராபிக் போலீஸ்காரர்கள் பிடித்தால் கூட கட்டிங் கொடுக்காமல் தப்பிக்கலாம். ஆனால் இந்த போராளிபட்டத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்களாயிருக்கும் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னென்னவோ சிந்தனைகள். ஃபேஸ்புக்கில் டிராபிக் ராமசாமி படத்தைப்போட்டு ‘’ஒரு போராளியை அரசியல்வாதியாக்கிட்டீங்களேடா’’ என்று நண்பர் எழுதியிருந்தார். அதெல்லாம் நினைவுக்கு வந்தது.

ஸ்கார்ப்பியோ நகர்ந்துகொண்டிருந்தது. நான் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தேன். அந்த தமிழினப்போராளி என்கிற வார்த்தையை சுற்றி தன்னுடைய குடும்பத்தினர் பெயர்களை எழுதி வைத்திருந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் போல, இரண்டு பேர்களிலும் தலா ஒரு ஸ்ரீ இருந்தது (திவ்யாஸ்ரீ ராஜஸ்ரீ.. அதுமாதிரி. ஏதோ , பெயர் நினைவில்லை) அவருடைய பெயரும் அதே ரகமாகவே சமஸ்கிருதமாகவே இருந்தது. தமிழினிப்போராளிகள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்ப்பா என்று நினைத்துக்கொண்டே அந்த வண்டிக்கு பின்னால் சென்றுகொண்டிருந்தேன். கோடம்பாக்கம் டூ எம்எம்டிஏ சாலை (பெரியார் பாதைதானா?) மிகவும் குறுகலானது. மனதுக்குள் இந்த வெண்புரவி போராளி எந்த கட்சியாருப்பாரு என்கிற கேள்வி உதித்தது. வண்டி முன்னே செல்ல அது வளரத்தொடங்கியது.

முதலில் மனதில் வந்தது நாம் தமிழர்தான். இதுமாதிரி காமெடிகளுக்கு பேர் போன தொண்டர்கள் கூட்டம் நிறைந்த கட்சி உலகிலேயே அதுமட்டும்தான். ஒருவேளை இது அண்ணன் சீமானுடைய வண்டிதானாவென உள்ளே எட்டிப் பார்க்க முயன்றேன் இருட்டாக இருந்ததால் தெரியவில்லை. அடுத்து விடுதலை சிறுத்தைகள் , அவர்களும் கூட இதுமாதிரியெல்லாம் போஸ்டர்களில் போட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன். ஒருவேளை தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியாக இருக்குமோ என்கிற எண்ணம்வேறு.

இரண்டுநாட்களாக அவர்தான் ஃபுல்பார்மில் இருப்பது.நெல்சன்மாணிக்கம் ரோட்டில் இருக்கிற ஷோபன்பாபு சிலையை அகற்றவேண்டும் என்று இரண்டுநாட்களுக்கு முன் போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்! ஷோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் முன்பு காதல் இருந்ததால்தான் அந்த சிலை அனுமதிக்கப்பட்டிருக்கிறது அதனால் அதை நீக்கவேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களோ ஆதரவாளர்களோ ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததை சமீபத்தில் பார்க்கமுடிந்தது. மிகவும் மோசமான வார்த்தைகளை கொட்டி திட்டியிருந்தனர். (நெல்.மாணிக். சாலையில் இருக்கிற ஷோபன்பாபுவின் சிலை அவருடைய சொந்தநிலத்தில் வைக்கப்பட்ட பர்சனல் சிலை. ) இணையத்தில் இதுமாதிரியான வசைகள் கலைஞருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கட்சிக்கும்தான் எந்நேரமும் கிடைப்பதுண்டு! முதன்முதலாக…

அடுத்து பால்கனகராஜின் தமிழ்மாநிலகட்சி! கட்சிபெயரே அப்படி இருப்பதால் அதுவும் தோன்றியது. இப்படி அடுத்தடுத்து பல குழப்பங்கள். காருக்குள் இருப்பவர் எந்த கட்சி என்று எப்படி கண்டுபிடிப்பது என்று மூளையை போட்டு திருகினேன். காருக்கு முன்னால் நிச்சயம் கட்சிக்கொடி இருக்குமில்ல.. என்று ஓவர் டேக் செய்ய முயன்றேன். குறுகலான சாலையின் டிராபிக்கில் முடியவேயில்லை. அதற்குள் எம்எம்டிஏ சிக்னலில் கார் வேறு பாதையில் திரும்பி சென்றுவிட்டது. திரும்பும்போது கொடி லேசாக தெரிந்தது கொடியில் மஞ்சளும் சிகப்பும் இருப்பது குத்துமதிப்பாக தெரிந்தது. ஆனால் நிச்சயமாக தேமுதிக கிடையாது.

யாராயிருந்தால் என்ன தமிழை வாழவைக்கும் இப்போராளிகளால்தான் நாமெல்லாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் அதனால் அவர்களுக்கு நன்றி.