Pages

20 July 2015

சென்னை மெட்ரோவில்...




ஹாலிவுட் படமா அல்லது ஹார்பிக் விளம்பரமா என ஐயுறும் வகையில் அத்தனை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் புதிய மெட்ரோ ரயில் நிலையத்தை! தரையை பார்த்து தலைவாரலாம், வாரிய தலையை சரிபார்க்கலாம்! காணுமிடமெல்லாம் வடநாட்டு முரட்டு செக்யூரிட்டிகள். எங்கு நோக்கினும் அழகழகான இளம் பிஞ்சு மகளிர் சிப்பந்திகள், அமெரிக்கா போவதற்கு கூட இவ்வளவு சோதனைகள் இருக்குமா தெரியவில்லை, ஆனால் எத்தனை படிகள் எத்தனை தடைகள் எத்தனை கேள்விகளை தாண்ட வேண்டியிருக்கிறது, அரும்பாக்கம் போகிறோமா அண்டார்டிகாவுக்கான சாகசப்பயணமா என்கிற சந்தேகம் எழுந்தபடியேயிருந்தது!

பத்து படிகளுக்கும் கூட எஸ்கலேட்டர் வசதி. ஒற்றை மாடிக்கே லிஃப்ட் வசதி! டிக்கட் எடுக்க தானியங்கி இயந்திரம், மிச்சக்காசை புத்தம் புது பத்துரூபாய் காயின்களாகவே அள்ளித்தருகிறது. எங்கு பார்த்தாலும் எதையாவது எழுதி எழுதி வைக்கப்பட்டிருக்கும் போர்டுகள்! தமிழ், இங்கிலீஸ் இந்தி என மும்மொழி கொள்கை! ஆனால் இன்னமுமே பயணிகள் யாரும் பயணிக்க ஆரம்பித்துவிட்டதாய் தெரியவில்லை. நான்கு கிலோமீட்டர் ரயில் பயணத்திற்கு இரண்டுகீலோமீட்டர் நடக்கவும் சுற்றவும் படியேறவும் இறங்கவும் என சிந்துபாத் பயணமாக இருப்பதால் அப்படி இருக்கலாம். கூடவே எக்கச்சக்கமான டிக்கட் விலையும். ஒரு வேளை சென்னை முழுக்க எல்லா பாதைகளும் தயாராகி இணைக்கப்பட்டுவிட்டால் இனிக்குமோ என்னமோ! ஆனால் இப்போதைக்கு இது பொருட்காட்சி ராட்டின சாதனம் போல் குடும்பங்கள் கொண்டாடும் மூன்றாவது வாரம்!

கவனித்ததில் இந்த ரயில்களில் ஒரு ஏழையைக்கூட பார்க்க முடியவில்லை. அங்கு மட்டுமல்ல ரயில்நிலையம் இருக்கிற ஏரியாவிலும் கூட! மிக நன்றாக சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்!. டிக்கட் விலை நிர்ணயம் தொடங்கி இந்த தானியங்கி ப்ளாப்ளாக்கள் வரை எல்லாமே படித்த நடுத்தரவர்க்கத்தினருக்காகவே உருவாக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. ஆனால் பார்க்கிங்கில் சைக்கிள்களுக்கு ஃப்ரீ என்று போட்டிருந்தார்கள், சைக்கிள்கள் எதையும் காணவில்லை! உள்ளே அனுமதிப்பார்களா என்கிற தயக்கம் காரணமாக இருக்கலாம். இன்னுமே கூட சென்னையின் படித்த லோயர் நடுத்தரவர்க்கத்திற்கு இதுமாதிரி சுத்தபத்தமான ஆச்சாரமான இடமென்றால் தயக்கங்கள் தாறுமாறாக இருப்பதை கவனித்திருக்கிறேன்.

எல்லோர் கையிலும் தவறாமல் செல்போன் மினுக்குகிறது. உலகிலேயே அதிக செல்ஃபிகள் எடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் இதுதான் என்கிற சாதனை விரைவில் நிகழ்த்தப்படலாம். நின்றுகொண்டு உட்கார்ந்து கொண்டு, கம்பியை பிடித்துக்கொண்டு பிடிக்காமல், சேர்ந்து பிரிந்து, கதவுக்கு பக்கத்தில் ஜன்னல் ஓரம், உட்கார்ந்து என இஷ்டம்போல் படமெடுக்க முடிகிறது. நம்மை தடுக்கவோ தட்டிக்கேட்கவோ ஈ காக்கா கூட இல்லை!

தானியங்கி கதவு என்பதால் புட்போர் அடிக்க முடியாது. உள்ளே சைட் அடிக்கவோ ஈவ்டீசிங் பண்ணவோ எச்சில் துப்பவோ தம்மடிக்கவோ முடியாதபடி ஏகப்பட்ட கெடுபிடிகள் போதாகுறைக்கு எங்கு பார்த்தாலும் கேமராக்கள் கண்ணடிக்கின்றன. இதெல்லாம் இல்லாமல் என்ன ரயில் பயணமோ… என்று சலிப்பாகவே இருக்கிறது.
கோச்சுகளின் உள்ளே ஒரு பெண்ணின் இனிமையான குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. மகளிருக்கு இடம்கொடுங்கள், ஹெட்போனில் பாட்டு கேளுங்கள், இடதுபக்க கதவு திறக்கப்போகிறது, கோயம்பேடு வந்துவிட்டது என சொல்லிக்கொண்டே வருகிறது! பொதுவாக கரகரப்பான ஆன்டிகள் குரலையே கேட்டுப்பழகிய நமக்கு ஜிலுஜிலுவென ஹஸ்கி வாய்ஸில் பேசும் இக்குரல் மயக்குகிறது! பயணிகளை மகிழ்விக்க அழகு குறிப்பு, வீட்டு மருத்துவம், ஜோதிடம் என சுவராஸ்யமான செய்திகள் கூட சொல்லலாம்!

இந்த ரயிலிலிருந்து சென்னையை பார்க்க வெறுப்பாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பில்டிங் பில்டிங்காக பத்தவைக்காத பட்டாசு மாதிரி மொக்கையாக… ஆனால் இரவில் பார்க்கும்போது ஜாலியாக ஒளிமயமாக இன்பம் தரும்வகையில் தீபாவளி போல் இருக்கிறது.

ஒருவட்டமான சாப்பாட்டு டோக்கன் போல் ஒன்றைத் தருகிறார்கள், அதுதான் டிக்கட்டாம்!! அதை தேய்த்தால்தான் ரயில் நிலையத்தின் உள்ளே செல்லகதவு திறக்கிறது. ரிட்டர்ன் வரும்போது அதை மீண்டும் உண்டியலில் போட்டால்தான் வெளியேற முடியும்! (ஏற்றிவிட வருபவர்கள் ரயில் நிலையத்தில் உள்ளே செல்ல முடியாது, ப்ளாட்பார்ம் டிக்கட்டெல்லாம் இல்லை). டிக்கட் இல்லாமல் பயணிப்பவர்ளை பிடிக்க இந்த டோக்கன் ஐடியாவை பிடித்திருக்கிறார்கள். டிக்கட் இல்லாமல் பயணித்தால் உள்ளேயே மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்! வடபழனிக்கு டிக்கட் வாங்கிவிட்டு கோயம்பேடு வரைக்கும் பயணித்தும் ஏமாற்ற முடியாது!

ஆனால் அதெல்லாம் நம்முடைய சென்னை பாய்ஸிடம் செல்லாது! எங்களோடு பயணித்த கல்லூரி மாணவர்கள் சிலர், பத்துபேருக்கு ஐந்துடிக்கட் மட்டும் எடுத்துக்கொண்டு இன்பமாக பயணித்து அசத்தினார்கள்! காய்ன் தேய்க்கும் இடத்தில் இரண்டுபேர் சேர்ந்தாற்போல ஒட்டிக்கொண்டும் கட்டிக்கொண்டும் நின்றுகொள்ள வேண்டும். தேய்த்ததும் அந்த சிறிய கதவு திறக்கும்போது இருவரும் எதிர்புறம் அப்படியே ஓடிவிடவேண்டும். திரும்பும்போதும் இதே கட்டிப்புடி டெக்னிக்தான்! இதை செய்து முடித்து வெளியே வந்து கெத்துடா என்று சொல்லிக்கொண்டிருந்தனர்! செக்யூரிட்டி இருந்திருந்தால் கதை வேறுமாதிரி இருந்திருக்கும்! ஆனாலும் அவர்களுடைய முயற்சி மேற்கோள் காட்டப்படவேண்டியது. நிச்சயம் இது ஒரு முயற்சி செய்து பார்க்கவல்ல நல்ல ஐடியாதான். ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்… காதலியோடு!