Pages

27 February 2015

நிலம் கையகபடுத்தும் சட்டம் - ராட்சத முகங்காட்டும் ரட்சகர்




ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் உருப்படியாக எதையும் செய்து விடவில்லை. எல்லாமே வெற்று வாய்சவடால்களாக மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஜில்ஜில் ஜிகினா ‘’சொச்சு பாரத்’’ திட்டம் போலவே!

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரைகூட எதையெல்லாம் எதிர்த்து அப்பாவி மக்களை ஏமாற்றி கலர் கலராக பிட்டுப்படம் காட்டி ஆட்சிக்கு வந்ததோ, இப்போது அதே குற்றங்களை கூச்சநாச்சமேயில்லாமல் செய்ய ஆரம்பித்திருக்கிறது பிரதமர் மோடியின் காவிய அரசு. இதற்கு நல்ல உதாரணம் தற்போது அவசரமாக அமல் படுத்த துடித்துக்கொண்டிருக்கிற ‘’நில கையகப்படுத்துதல் சட்டம்’’.

இச்சட்டத்தை ஊரே சேர்ந்து கழுவி ஊற்றுகிறது, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். அதில் உள்ள குறைகளை பிழைகளையும் இச்சட்டத்தால் எப்படியெல்லாம் கார்பரேட் முதலாளிகள் மட்டும் பயனடைவார்கள் விவசாயிகள் அழிவார்கள் என்பதையெல்லாம் மீடியாக்களில் அறிஞர்கள் தொடர்ந்து புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டு காட்டுகிறார்கள். ‘’அதெல்லாம் கட்டுக்கதை நம்பாதீங்க, இது விவசாயிகள் நலனை காப்பதற்கான சட்ட திருத்தம்’’ என புன்னகையோடு அறிக்கை விடுகிறார்‘’ மோடி! இச்சட்டம் குறித்தும் இணையத்திலும் பேப்பர்களிலும் படிக்க படிக்க ‘’இவனுங்களுக்கு போய் ஓட்டு போட்டுட்டீங்களேடா’’ என்று மக்கள்மீதுதான் கோபம் வருகிறது. பாஜகவிற்கு வேண்டப்பட்ட சிவசேனா மாதிரியான கட்சிகள் கூட இச்சட்டத்தை எதிர்க்கின்றன. ஆனாலும் மோடி விடாப்பிடியாக இருக்கிறார்.

இந்த சட்டம் குறித்து இதுவரை எதுவுமே தெரியாவிட்டாலும் ஒன்று குடிமுழுகிப்போய்விடவில்லை. இப்போதாவது அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுவோம்.

1894 ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நிறைவேற்றப்பட்டது நிலம் கையகப்படுத்துதல் சட்டம். இச்சட்டத்தின் படி இந்திய எல்லைக்குள் யாருடைய நிலத்தையும் எவ்வித நிலத்தையும் என்ன அளவிலும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு உரிமையாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து பிடுங்கிக்கொள்ளலாம்.

இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆதிவாசிகள்தான். இந்தியா முழுக்க நடைபெற்ற வெவ்வேறு நிலகையகப்படுத்தலின் போது லட்சக்கணக்கான ஆதிவாசிகள் இடம்பெயர வேண்டியிருந்தது. இன்று இந்தியாவில் வாழும் ஆதிவாசிகளில் பத்தில் ஒருவர் இப்படி நிலகையகப்படுத்துதல் சட்டத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர். இப்படி கையகப்படுத்தும் நிலத்திற்கு தரப்படும் தொகையும் மிகவும் குறைவான அளவே வழங்கப்படும். மாற்று நிலமும் கிடைக்காது! இதனால் பெரும்பாலான ஏழை மக்கள் வறுமையில் சிக்கி வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டனர். நிலமிழந்தோரைவிட அந்நிலத்தை நம்பி கூலி வேலை பார்த்துக்கொண்டிருந்த தலித்துகளும் கடைநிலை சாதியினரும் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டனர் என்பதே வரலாறு. இப்போது பாஜக அரசினால் பாதிக்கப்படப்போவதும் ஏழை விவசாயிகளும் கூலிகளும்தான்.

கிட்டத்தட்ட நூற்றிபத்து ஆண்டுகளுக்கு பிறகு இச்சட்டத்தை மாற்றியமைத்து இதில் சில விஷயங்களை நீக்கி சில விஷயங்களை சேர்த்து 2013ல் 'நிலம் கையகப்படுத்துதலில், நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் வெளிப்படையான தன்மை, மறுகுடியமைப்பு, மறுகுடியேற்ற திருத்த சட்டம்' (LARR) என்கிற பெயரில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது முந்தைய மன்மோகன் அரசு. அச்சட்டத்தில் தனியாரிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் போது குறிப்பாக விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் போது என்னென்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், எப்படிப்பட்ட இழப்பீட்டினை வழங்கவேண்டும் என்பது மாதிரியான பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் இப்போது ‘’அம்மா.. தாயே.. தயவு செஞ்சு… மேக் இன் இந்தியா’’ என்று தட்டேந்தி காத்திருக்கிறது மோடி அரசு. முழுக்கவும் கார்பரேட்களின் தயவையும் கடைக்கண் பார்வைக்காகவும் காத்திருக்கும் இந்த அரசு புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது 2011 LARR சட்டத்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என பயந்துபோய் இப்போது அவசரமாக இச்சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

விவசாயிகளின் காவலரான பிரதமர் மோடி அவர்களுக்கு என்ன மாதிரியான நன்மைகளை செய்யப்போகிறார் தெரியுமா?

1894 சட்டத்தில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதி LARR 2013 சட்டத்தில் வேண்டாமென்று விலக்கி வைத்திருந்த 13 சட்டங்களை மீண்டும் அவசர சட்டத்தில் சேர்த்திருக்கிறார்!

இதனால் என்னாகும்? இனி அரசு உங்களுடைய விவசாய நிலத்தை கையகப்படுத்துவது என முடிவெடுத்துவிட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்களால் அதை எதிர்க்க முடியாது வா.சூவை பொத்திக்கொண்டு சரிங்க எஜமான் என்று நீட்டிய காகிகதத்தில் கையெழுத்தோ கைநாட்டோ வைத்துவிட்டு டவுன் பக்கமாக போய் பஸ் ஸ்டான்டில் கர்சீப் விற்று பிழைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

‘’சும்மா சொல்லாதீங்க சார் அஞ்சே அஞ்சு விஷயங்களுக்காக நிலம் கையக படுத்தும்போதுதான் அப்படி கேள்விகேட்க விடாம நிலத்தை புடுங்குவோம், மத்த படி அவங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு’’ என்று பாஜக தரப்பு சொல்கிறது.

ஆனால் அந்த ஐந்து விஷயங்களுக்காக மட்டும்தான் நம் நாட்டில் நிலங்கள் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை கையகபடுத்தப்படுகின்றன. தொழில் வளாகங்கள், தனியார் பொதுத்துறை திட்டங்கள், கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள், குறைந்த விலை வீட்டுவசதி திட்டங்கள், ராணுவம் தொடர்பானவை என இந்த ஐந்து விஷயங்களுக்காகதான் நிலங்கள் வளைக்கப்பட போகின்றன. இவை தவிர்த்து வேறு எதற்காக அரசு நிலங்களை கையகப்படுத்தும் என்பது விளங்கவில்லை.

இப்படி கையகப்படுத்தும் போது சமூக பாதுக்காப்பு அறிக்கை என்று ஒன்றை தரவேண்டும். இந்த கையகபடுத்துதலால் என்னமாதிரி பாதிப்புகள் வரும் என்பதை ஆராய்ந்து கொடுக்கிற சர்டிபிகேட். இனி அது தேவையில்லை. அதே போல பயிர் செய்துகொண்டிருக்கிற விவசாய நிலங்களையும் அப்படியே பிடுங்கிக்கொள்ளலாம்.

இப்படி யோசிப்போம், அரசு ஒரு விவசாய நிலத்தை தொழிற்சாலை கட்டுவதற்கென்று கையகப்படுத்துகிறது. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அல்லது அந்த ப்ராஜெக்டே ட்ராப் ஆகிவிடுகிறது. அடுத்தது என்ன? ‘’பழைய உரிமையாளருக்கே நிலத்தை கொடுத்துவிடலாம்’’ என்று முந்தைய மன்மோகன் அரசின் சட்டத்தில் இருந்த திருத்தத்தை இப்போது தூக்கிவிட்டார்கள். ஒருவேளை ப்ராஜக்ட் ட்ராப் ஆனாலும் புடுங்கினது புடுங்கினதுதான் இனிமே தரமுடியாது என்பதே புதிய சட்டபடி பிரதமர் மோடி நமக்களிக்கும் செய்தி.

விவசாயிகளை வெட்டினால் மட்டும் பத்தாது கொத்துக்கறி கூட போடலாம். அதற்கும் இந்த புதிய சட்டத்தில் ஆப்சன் இருக்கிறது. 2013 சட்டப்படி தனியாரிடமிருந்து ஒரு நிலத்தை கையகப்படுத்தும் போது அதற்கு அந்த நில உரிமையாளர்களில் 80 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற்ற பின்பே பெற முடியும். ஆனால் இப்போது மோடி அரசு கொண்டுவரவிருக்கும் சட்டத்தில் அந்த விஷயம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஒரு கேவலமான சட்டத்தை இப்போது எதற்கு இவ்வளவு அவசரமாக நிறைவேற்றுகிறார்கள்? தண்டகாரன்யாவில் தொடங்கி இங்கே கொங்குமண்டலத்தில் கெய்ல் எரிவாயுக்குழாய் பதிப்பு, நியூட்ரினோ என விவசாய நிலங்களும் விவசாயத்தை பாதிக்கும் வகையில் நிலங்கள் அபகரிக்கப்படும் போதும் நடக்கிற தொடர் போராட்டங்களும் இனி இருக்கக்கூடாது என்பதே இச்சட்டத்தின் நோக்கம்.

கெயில் எரிவாயுக்குழாய் பதிப்பின் போது நடந்த போராட்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன். மிகவும் உக்கிரமான போராட்டம். விடாமல் கோர்ட்டுக்கும் ஜெயிலுக்குமாக அலைந்த ஏழை விவசாயிகளின் கண்ணீரை அறிந்திருக்கிறேன். இனி அவர்களால் அரசை எதிர்த்து சின்ன முணுமுணுப்பையும்கூட காட்ட முடியாமல் போகும். எந்தக்கேள்வியுமின்றி இனி நாட்டை கூறு போட்டு கூவி கூவி விற்கலாம். இப்போது பிரதமராகிவிட்ட திருவாளர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது 2006-2008 சமயத்தில் மட்டும் அவருடைய ஆத்ம நண்பர் அதானிக்கு ஒரு சதுரமீட்டருக்கு ஒரு ரூபாய் என்று பதினைந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை வாரி கொடுத்தவர்தான். (அதானி அந்த நிலத்தை ப்ளாட் போட்டு விற்று லாபம் ஈட்டினார் என்பது தனிக்கதை)

இப்போது அதே பாணியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், உள்ளூர் கார்பரேட் முதலாளிகளுக்கும் விவசாய நிலங்களை சல்லிசு ரேட்டில் வாரி வழங்கப்போகிறார். நாமெல்லாம் அதை விரல்சப்பிக்கொண்டு வேடிக்கை பார்க்க போகிறோம்.


(பிரதமர் மோடி 2006-2008 காலத்தில் மிகவும் குறைந்த விலையில் தன்னுடைய ஆத்ம நண்பர் அதானிக்கு அள்ளிக்கொடுத்த 15ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்து தெரிந்து கொள்ள http://www.business-standard.com/article/companies/adani-group-got-land-at-cheapest-rates-in-modi-s-gujarat-114042501228_1.html )

25 February 2015

மடலேறிடுவேன் மைன்ட் இட்!




சென்ற வார நீயா நானாவில் திருக்குறளின் சிறப்பு பற்றி எண்ணற்ற சான்றோர்கள் பேசியதை கேட்டு தமிழ்நாட்டில் நான்குபேராவது திருக்குறளின் மீது ஆர்வமாகி அதை வாசிக்க ஆரம்பித்திருப்பார்கள். அவ்வகையில் அடியேன் ஐந்தாவது ஆள். நன்றி ஆன்டனி மற்றும் கோபிநாத் கூட்டணி.

பள்ளியில் முட்டிபோட வைத்து திருக்குறளையும் பாரதியார் பாடலையும் மனப்பாடம் பண்ணவைத்து தப்பாக சொன்னதற்காக பிரம்படி பட்ட புண் காரணமாக இருக்கலாம். அந்த காண்டு திருவள்ளுவர் மீதும் பாரதியார் மீதும் இன்னமும் மிச்சமிருக்கலாம். அல்லது திருக்குறள் என்பது சான்றோர்களாக ஆவதற்கான விஷயம் என்கிற எண்ணம் எப்போதும் உண்டு. அதனாலேயே நாம ஏன் நைட் பன்னென்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போகணும் என்கிற நினைப்பாகவும் இருக்கலாம். அல்லது இதையெல்லாம் படித்து எங்கும் பெருமை பீத்தல் விடமுடியாது என்பதும் காரணமாக இருக்கலாம். மச்சி நீ ரேமன்ட் கார்வர் படிச்சிருக்கியானு கேக்குறது கெத்தா.. நீ திருக்குறள் படிச்சிருக்கியானு கேக்குறது கெத்தா?

ஆன்ட்ராய்ட் மற்றும் IOS ஸ்டோர்களில் ஏகப்பட்ட திருக்குறள் ஆப்கள் கிடைக்கிறது. அதில் ஒன்றை பல மாதங்களுக்கு முன்பே தரவிறக்கி வைத்திருந்தும் ஒருமுறைகூட ஓப்பன் பண்ணி பார்த்ததில்லை. போன வாரம் ஒப்பன் பண்ணி பார்த்தபோதுதான் அது கலைஞர் உரை எழுதிய திருக்குறள் என்பது தெரிய வந்தது. இதுபோல பொன்னியின் செல்வன், பாரதியார் பாடல்கள், ஜெயகாந்தன் சிறுகதைகள் கூட ஆப்களாக அப்படியே பல ஆண்டுகளாக கிடக்கின்றன.

‘’ப்ரோ திருக்குறள் வாசிக்கறதா இருந்தா தயவு செஞ்சு காமத்துப்பாலிலிருந்து ஆரம்பிங்க அப்புறம் வைக்க மாட்டீங்க’’ என்று நண்பர் பரிந்துரைத்தார். கலைஞர் உரையுடன் காமத்துப்பாலின் ஒவ்வொரு குறளாக படிக்க ஆரம்பித்தேன். காதலும் காமமும் கவித்துவமுமாக திருவள்ளுவர் ஒருபக்கம் கம்பு சுற்றினால் அதற்கான உரையில் தன் கைவரிசையை காட்டி அசத்தியிருக்கிறார் கலைஞர்! கலைஞரும் காதல் விஷயத்தில் பேர் போன வல்லுனர் மற்றும் ஆராய்ச்சியாளர் என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார்.

கற்பியலில் பிரிவாற்றாமை என்கிற அதிகாரத்தில் இரண்டாவது குறள்

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

இதற்கான கலைஞரின் உரை

முன்பெல்லாம் அவரை கண்களால் தழுவிக்கொண்டதே இன்பமாக இருந்தது, ஆனால் இப்போது உடல் தழுவிக்களிக்கும் போதுகூட பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!

ஒரு மாடர்ன் க்ளாசிக் கவிதை போலிருக்கிறது இல்லையா? களவியல் முழுக்கவே எல்லாமே கவித்துவம்தான். தபூஷங்கருக்கு சவால் விடுகிற கவிதைகளும் கூட நிறைய இருக்கிறது, இழுக்க இழுக்க இன்பம் என்று அந்தக்காலத்தில் சிகரட் விளம்பரங்கள் வரும். இது அதுமாதிரியே படிக்க படிக்க இன்பம்தான்! கற்பியலில் எல்லாமே ஒருமாதிரி சோகமும் பிரிவும் அது தரும் வலியுமாக இருக்க, களவியலில் முழுக்க ஒரே காதல்களியாட்டம்தான். இதையெல்லாம் டீன்ஏஜில் யாராவது பள்ளியிலேயே அறிமுகப்படுத்தியிருந்தால் இந்நேரம் 1330 குறளையும் கரைத்துகுடித்திருப்போம்! நம்முடைய மனப்பாடப்பகுதியை அறம் பொருளோடு நிறுத்திவிட்டது யார் செய்த துர்பாக்கியம்.

காமத்துப்பாலில் ஒரு குட்டிக்கதை கூட வருகிறது. புலவி நுணுக்கம் என்கிற அதிகாரத்தில் அடுத்தடுத்து வரும் நான்கு குறள்கள் ஒரு காதல் கதையில் வரும் சூப்பர் ரொமான்டிக் ஊடல் காட்சியாக இருக்கிறது. குறள் எண்கள் 1317,1318,1319,1320 (தேடி வாசிக்கவும் என்னுரை மட்டும் கீழே)

1317 – காதலன் தும்முகிறான். அவனுடைய தும்மலை கண்டதும் முதலில் வாழ்த்துகிறாள் காதலி (அந்தகாலத்தில் தும்மினால் வாழ்த்துவது மரபு போல) வாழ்த்தும்போதே என்னமோ யோசித்துவிட்டு நான் இங்கே இருக்கும்போது வேற யார் உன்னை நினைத்ததால் தும்மினீர் என்று கேட்டு சண்டைபோட்டு அழ ஆரம்பித்து விடுகிறார்.

1318 - காதலனுக்கு அடுத்த தும்மல் வர அதை அப்படியே அடக்கிக்கொள்கிறாள். அதை அழுதுகொண்டிருக்கும் காதலி பார்த்துவிடுகிறாள். இந்த முறை ‘’ஒ உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க உன்னை நினைக்கிறாங்கனு எனக்கு தெரியாத மாதிரி மறைக்கிறியா’’ என்று கேட்டு மறுபடியும் சண்டை போட ஆரம்பிக்கிறாள்.

1319 – காதலன் பணிந்துபோய் அவளை சமாதானப்படுத்தி மகிழ்விக்கிறான். அப்போதும் அந்த காதலி விடுவதாக இல்லை. ஓ நீ இப்படித்தான் மற்ற பெண்களையும் சமாதானப்படுத்துவியோ என்று சண்டை போடுகிறாள்.

1320 – கடைசியில் எதுவுமே பேசாமல் அவளையே இமை கொட்டாமல் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருக்கிறான் காதலன். அப்போதும் காதலி விடுவதாயில்லை. யாருடன் என்னை ஒப்பிட்டு உற்று பார்க்கிறாய் நீ என்று கோபம் கொள்கிறாள்.

அதோடு கதை முடிகிறது. அனேகமாக திருவள்ளுவருக்கு நேர்ந்த சொந்த அனுபவமாக இருக்கலாம். இதையெல்லாம் வாட்ஸ் அப் காலத்தில் அடிக்கடி நாம் எதிர்கொண்டிருப்போம். இப்படி பலவித சூப் பாய்ஸ்களின் சேம் ஃபீலிங்குகளை கற்பியலில் எதிர்கொள்ள முடிகிறது.

களவியலில் நாணுத்துறவுரைத்தல் என்கிற பகுதியில் மடலூர்தல் என்கிற விஷயம் வருகிறது. மடலூர்தல் அல்லது மடலேறுதல் என்றால் என்னவென்று கூகிளிட்டு பார்த்த போது இது அந்த காலத்து ப்ளாக்மெயிலிங் டெக்னிக் என்று தெரியவந்தது. பெண்கள் பையன்களின் காதலை ஏற்காவிட்டாலோ அல்லது காதலித்து ஏமாற்றிவிட்டாலோ பையன்கள் ஆசிட் அடிப்பேன், பூரான் வுட்ருவேன், வீட்டுக்கு மொட்டை கடுதாசி போடுவேன் என்று மிரட்டுவதைப்போல இந்த மடலேறுதல்.

லவ் பெயிலியர் ஆனவனும், லெட்டர் கொடுத்து பல்பு வாங்கினவனும் கோபத்தில் தன்னை ஏமாற்றிய பெண்ணை அல்லது காதலை ஏற்க மறுத்த பெண்ணை பழிவாங்குவதற்காகவும் அல்லது ப்ளாக்மெயில் செய்வதற்காகவும் காதலை ஏற்க வைப்பதற்காகவும் மடலேறுகிறார்கள்.
மானம் ரோஷத்தையெல்லாம் விட்டுவிட்டு, பனை கருக்கு ஒன்றில் ஏறிக்கொண்டு அதன்மீது குதிரைமேல் அமர்ந்திருப்பது போல அமர்ந்துகொள்ள அதை அவனுடைய நண்பர்கள் ஊருக்குள் இழுத்துச்செல்ல , அவன் தலையில் எருக்கம்பூ மாலையை அணிந்துகொண்டு உடலில் சாம்பலை பூசிக்கொண்டு, கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டு, கையில் அவளுடைய உருவத்தை வரைந்த கொடியை பிடித்துக்கொண்டு, ஊருக்குள் அவளை மோசமான முறையில் திட்டிக்கொண்டே ஊர்வலம் வருவான். இதனால் ஊர் மக்களுக்கு அப்பெண் குறித்து விஷயம் தெரிந்து அந்த பெண்ணை மோசமாக திட்டி அவமானப்படுத்துவார்கள். அவளுக்கு அதற்கு பிறகு திருமணம் நடக்காது. இதனால் சோகமாகும் பெற்றோர் அந்த பெண்ணை மடலேறியவனுக்கே மணமுடித்து வைத்துவிடுவார்கள். அல்லது அந்தப்பெண் தற்கொலை பண்ணிக்கொண்டு சாகவேண்டியதுதான். அல்லது அந்தப்பெண் அய்யோ பாவம் நமக்காக இவன் எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறான் என்று நொந்து அவனை ஏற்றுகொள்வாளாம். காதலித்த பெண்ணின் மானத்தை வாங்குவதும், ப்ளாக்மெயில் பண்ணி பணிய வைப்பதும்தான் இந்த மடலேறுதலின் ஒரே நோக்கமாக இருந்திருக்கவேண்டும்.

மார்ஃபிங் பண்ணி காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் பகிர்ந்துகொள்கிறவன்கள், காதலியின் செல்போன் நம்பரை விபச்சாரியின் எண் என்று சமூகவலைதளங்களில் போடுகிறவன்கள், அந்தப்பெண் குறித்து கேவலமாக ஸ்டேடஸ் போடுகிறவன்கள், மோசமான விஷயங்களை வதந்தி பரப்புகிறவன்களின் அந்தக்காலத்து வெர்ஷன் இந்த மடலேறுதல் போல. இப்போதும் அந்த நடைமுறை இருந்தால் அப்படி யாராவது மடலேறினால் அதை வீடியோவாக எடுத்து யூடியூபிலும் வாட்ஸ்அப்பிலும் போட்டு வைரலாக்கிவிடுவார்கள்!

(சங்க இலக்கியங்களில் யாரும் மடலேறியதாக பாடல்கள் இல்லை, ஆனால் மடலேறிவிடுவேன் என்று மிரட்டியதாக நிறைய பாடல்கள் இருப்பதாகவும் பெண்கள் யாரும் மடலேறியதாக குறிப்புகள் இல்லை என்றும் தமிழ்த்துறை பேராசிரியர் ஒருவர் சொன்னார்.)



19 February 2015

டமில் கமென்ட்ரி



வியூகம் என்கிற சொல்லை மகாபாரதத்தில்தான் அதிகம் படித்திருப்போம். அல்லது கேட்டிருப்போம். மகாபாரதத்தில் ஆறு வகையான வியூகங்கள் சொல்லப்படுகிறது. கிரௌஞ்ச வியூகம் (கிரௌஞ்ச பறவை) , மகர வியூகம் (மீன்) , கூர்ம வியூகம் (ஆமை) , திரிசூல வியூகம் (திரிசூலம்) , பத்ம வியூகம் (தாமரை) , சக்கர வியூகம் ( சக்கரம்) என இவை அதனுடைய வெவ்வேறுவிதமான வடிவங்களுக்கு ஏற்றபடி பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. போர் முனையில் படைவீரர்களை வெவ்வேறு இடங்களில் அணிவகுத்து நிறுத்தி எதிரிகளின் படைகளை முன்னேறி செல்லவிடாமல் தடுக்கவும் அவர்களை சுற்றி வளைத்து தப்பவிடாமல் கொன்றுகுவிக்கவும் பயன்பட்ட அந்தக்காலத்து டெக்னிக் இது. இந்தியாவில் இதுவரை எடுக்கப்பட்ட மகாபாரத தொடர்களில் இந்த வியூகங்கள் சரியாக காட்சிப்படுத்தப்பட்டதில்லை.

சீனப்படமான RED CLIFF (1-2)ல் இவ்வகை வியூகங்கள் பயன்படுத்தப்பட்ட முறைகளையும் அந்த வியூகங்களை பயன்படுத்தி எப்படியெல்லாம் அந்தகாலத்து சீனாக்காரர்கள் போரிட்டார்கள் என்பதையெல்லாம் பல நூறு கோடி பட்ஜெட்டில் காட்டியிருப்பார்கள். சூப்பர் ஹிட் படம் அது. தமிழ் டப்பிங்கில் கூட காணக்கிடைக்கிறது. பத்ம வியூகம், கூர்ம வியூகமெல்லாம் கூட காணகிடைக்கும்.

இந்த வியூகம் என்கிற வார்த்தையை போர்முனை தவிர வேறெங்கே பயன்படுத்த முடியும்? வேறெங்குமே முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதை மிகச்சரியாக வேறோரு இடத்தில் பயன்படுத்தியவர் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார். ஃபீல்டிங் செட் செய்வதற்கு வியூகம் வகுப்பது என்கிற சொல்லை அவர்தான் முதன்முதலில் பயன்படுத்தியவர்.

‘’வாலஜாமுனையிலிருந்து பந்து வீச பாய்ந்தோடி வருகிறார் ஜகவல் ஸ்ரீநாத்,’’ என்கிற அவருடைய குரல் இப்போதும் கூட காதில் கேட்கிறது. கிரிக்கெடில் தமிழ் வர்ணனையின் முகமும் குரலும் அவருடையதுதான். கமென்ட்ரி என்பதை வர்ணனை என்று மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை ஆனால் நிஜமாகவே கிரிக்கெட் ஆட்டத்தை கம்பன் போல வார்த்தைக்கு வார்த்தை வர்ணித்து பேசியது அப்துல் ஜப்பார்தான். தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் கிரிக்கெட் கற்றுக்கொடுத்ததில் அவருக்கு மிகமுக்கிய பங்கிருக்கிறது.

உலக கோப்பை போட்டிகள் விஜய்டிவியில் தமிழ் கமென்ட்ரியோடு ஒளிபரப்பாகவுள்ளது என்றதுமே கூடவே நினைவுக்கு வந்த முதல் பெயர் அப்துல் ஜப்பாருடையதுதான். அவருடைய வெண்கலக்குரலும் லாகவமான உச்சரிப்பும் ஸ்டைலும்தான் நினைவுக்கு வந்து போனது. ஆனால் விஜய்டிவி ஏனோ அவரை பயன்படுத்தவில்லை என்று தெரிந்தபோது மிகுந்த மனவருத்தமடைந்தேன்.

எல்லோர் வீட்டிலும் டிவி இல்லாத ஒரு காலத்தில் அப்துல் ஜப்பாரின் குரல் வழி எத்தனையோ ஆட்டங்களை மனதிற்குள் காட்சிப்படுத்தி ரசித்திருக்கிறேன். வானொலி கேட்டு கேட்டு ஒரு கிரிக்கெட் போட்டியை மனதிற்குள் காட்சிப்படுத்துவது கூட ஒரு சுவராஸ்யமான விளையாட்டாக அப்போது இருந்தது. கற்பனையில் நாமாக ஒரு மைதானத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அங்கே நாமாகவே ஃபீல்டர்களை வர்ணனையாளர் சொல்கிற இடங்களில் நிறுத்திவைக்க வேண்டும். பின்னணியில் பார்வையாளர் இரைச்சலின் வழி அந்த கூட்டத்தையும் நிரப்பவேண்டும். பந்துவீச்சாளர் பந்துவீச வரும்போது நாமும் கூடவே ஓடி பேஸ்ட்ஸ்மேன் பந்தை அடிக்கும்போது அடித்து அது சிக்ஸருக்கு பறக்க பந்தோடு நாமும் பறந்ததெல்லாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடியதா? சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது மட்டும்தான் தமிழ் கமென்ட்ரி மற்ற நேரங்களில் பல்லேபாஸிகளின் சௌக்கா, ச்சார் ரன் கேலியே என்று இந்திதான்!

அப்துல் ஜப்பாரோடு கூத்தபிரான்,ராமமூர்த்தி என இன்னும் சிலரும் வர்ணனையில் கலக்குவார்கள். கூத்தபிரான் இலக்கியசொற்பொழிவைப்போல பேச, ராமமூர்த்தி மெட்ராஸ்தமிழில் அசத்துவார் (ராமமூர்த்தியா அல்லது வேறு பெயரா நினைவில்லை).

இப்போதும் கூட எப்போதாவது சென்னையில் போட்டிகள் நடக்கும்போது தமிழ் கமென்ட்ரி கேட்பதுண்டு. ஆனால் கடைசியாக எப்போது கேட்டேன் என்று நினைவில்லை. ஆனால் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் ஹலோ எஃப்எம்மில் ‘’சொல்லி அடி’’ லைவ் கமென்ட்ரியோடு சேர்ந்த ஜாலி விளையாட்டு நிகழ்ச்சியை தவறவிடாமல் கேட்கும் பழக்கம் உருவாகியிருக்கிறது. போட்டியையும் ரசித்தபடி கூடவே பாட்டும் காமெடியும் ஜாலியுமாக செல்லும். சிசிஎல் போட்டிகளின் போது பாஸ்கி, படவா கோபி மாதிரியானவர்களின் கமென்ட்ரி கேட்க கொஞ்ச நேரம் ஜாலியாக இருந்தாலும் பெரும்பாலும் அது போர் அடிப்பதாகவும் நேரத்தை கடத்துவதற்காக எதையாவது உளறிக்கொண்டிருப்பதாகவுமே தோன்றும்.

கிரிக்கெட் வர்ணனையில் வானொலிக்கும் தொலைகாட்சிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. வானொலி வர்ணனையில் ஆட்டத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் விழிதிறனற்ற மனிதருக்கு சொல்வதைப்போல அச்சுபிசகாமல் சொல்லவேண்டியிருக்கும். குரலில் மிடுக்கும் மொழியில் அழகும் மிகவும் அவசியம். ஆனால் தொலைகாட்சி வர்ணனைக்கு அந்த அம்சங்கள் எதுவும் தேவையில்லை. அதற்குரிய தேவைகள் வேறு மாதிரியானவை.

நிறைய சுவராஸ்யமான தகவல்கள், கொஞ்சமாக நகைச்சுவை, ஆட்டத்தின் போக்கை உத்தேசித்து முடிவை கணிப்பது, ஆட்டத்தில் என்னவெல்லாம் செய்து போக்கை மாற்றலாம் என யோசனைகள் சொல்வது, தன்னுடைய பர்சனல் அனுபவத்திலிருந்து சில நினைவுகளை பகிர்ந்துகொள்வது. இவையெல்லாம் ஆட்டத்தை தொலைகாட்சியில் ரசிக்கிறவனுடைய ஆர்வத்தை தூண்டக்கூடியவை அவனும் வர்ணனையாளரோடு சேர்ந்துகொண்டு மனதிற்குள்ளோ அல்லது அருகிலிருப்பவரிடமோ அணிக்கு ஆலோசனை வழங்கவும் தன்னுடைய வீரதீர பரக்கிரமங்களை சொல்லவும் தொடங்குவான்! இதனால்தான் இன்று கிரிக்கெட் ஒளிபரப்புகிற எல்லா சேனல்களும் முன்னாள் வீரர்களையே பயன்படுத்துகின்றன. அவர்கள் ஆலோசனை சொல்லும்போதும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போதும் ஒரு நம்பகத்தன்மை உருகாறிது. இதனால்தான் கோடிக்கணக்கில் கொடுத்து கான்ட்ராக்ட் போட்டு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை முழுவீச்சில் உபயோகிக்கின்றன தொ.காட்சி நிறுவனங்கள். அந்த வகையில் கவாஸ்கர்தான் இந்திய கமென்ட்ரி அணிக்கு குருசாமி!

ஸ்டார் குழுமம் தமிழில் வர்ணனை என்று முடிவெடுத்ததும் கவாஸ்கர் டூ கங்கூலி ஸ்ட்ரேடஜியையே பயன்படுத்தி தமிழ்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பொறுக்கி போட்டு ஒரு வர்ணனை அணியை உருவாக்கி களமிறக்கியுள்ளதாக தோன்றுகிறது. ( சடகோபன் ரமேஷ், ஸ்ரீராம்,பதானி.. மற்றும் குழுவினர்) ஆனால் அப்படி பொறுக்கிப்போட்டவர்கள் அத்தனைபேரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் வர்ணனை என்று வாயை திறந்தாலே அவாள் இவாள் என்று பேசக்கூடியவர்களாகவும் இருந்தது ஆச்சர்யமான விஷயம். இந்த வர்ணனைகளில் நேர்த்தியில்லை. தகவல்கள் இல்லை. சுவாரஸ்யம் இல்லை. கிளிப்பிள்ளைபோல சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதாகவே தோன்றியது.

சடகோபன் ரமேஷ் ஒரு மேற்கிந்திய தீவுகள் அணி வீரரை ‘’இவனுக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல ’’ என்று கேவலமாக பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ‘’இவா இப்படி போட்டுண்டிக்கச்சே அவா அப்படி அடிச்சுட்டா’’ என்பது போல ஸ்ரீராமோ நானியோ பேச, பதானி மனசாட்சியே இல்லாமல் ‘’இங்கே வாங்கோ நம்மள்க்கி நல்லா பேஸ்றான்’’ என்று அடகுகடை சேட்டு போல பேசிக்கொல்ல… இவர்கள் இம்சை தாங்கமுடியாமல் கேபிள் காரனுக்கு நூறு ரூபாய் அழுது அமவ்ன்ட் கட்டி ஸ்டார்ஸ்போர்ட்ஸில் இந்தி கமென்ட்ரியே கேட்க ஆரம்பித்துவிட்டேன்.

தமிழில் கிரிக்கெட் குறித்து மிக அருமையாக பேசக்கூடிய எத்தனையோ பேர் இருக்கிறார்கள். டெக்கான் க்ரானிக்கிளின் ஆர்.மோகன் கிரிக்கெட் பற்றி அழகுதமிழில் ஒவ்வொரு விநாடியும் ஒரு தகவலை சொல்லக்கூடியவர். நன்றாக பேசக்கூடியவர். அப்துல் ஜப்பார், கூத்தபிரான் மாதிரியான முன்னோடிகளை பயன்படுத்தியிருக்கலாம். வர்ணனையில் என்னமாதிரி விஷயங்கள் பேசப்படவிருக்கின்றன என்பதை இன்னும் சிறப்பாக திட்டமிட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இயல்பாக கொட்டப்படும் பிராமண பாஷைகளும், பதானி குழப்பங்களும், இல்லாமல் நல்ல தமிழில் சிறந்த வர்ணனைகள் கிடைத்திருக்கும். எனவே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டம்ளர்ஸ்.

17 February 2015

அய்யோ போலீஸ்கார்!




காவல்நிலையத்திற்கு சென்று ஒரு புகார் கொடுப்பதும் தொலைந்து போன ஒன்றைக்குறித்து அவர்களிடம் விசாரிக்க கேட்பதும் மாதிரி கடினமான வேலை உலகத்திலேயே கிடையாது. காரணம் பாம்பும் காவல்துறையும் ஒன்று. இரண்டையுமே பயத்தோடு அணுகினால் அதனிடம் கடுமையாக சீண்டப்படுகிற வாய்ப்பு தொன்னூற்றொன்பது சதவீதம் உறுதியாக உண்டு. அச்சமின்றி அலட்டலாக நடந்துகொண்டாலும் கடி உறுதி. பூசின மாதிரியும் இல்லாமல் பூசாத மாதிரியும் இல்லாமல் மரியாதை இருப்பது மாதிரியும் இருக்க வேண்டும் ஆனால் கண்களில் பயத்தை வெளிப்படுத்திவிடாமல் தைரியமாகவும் பேசிக்கொண்டே பணிவையும் வெளிப்படுத்த வேண்டும். குழப்பமான வேலைதான் இல்லையா?

சென்றவாரம் சென்னையிலிருக்கிற ஒரு காவல்நிலையத்திற்கு ஒரு புகார் கொடுக்க சென்றிருந்தேன். கிளம்பும்போதிருந்து வண்டியை வாசலில் எங்கே பார்க்கிங்கில் விடுவது என்பதில் தொடங்கி பல்வேறு குழப்பங்கள், பதட்டங்கள். எப்படி பேசுவது என்ன பேசுவது, ஒருவேளை லஞ்சம் கேட்டால் சார் நான் பத்திரிகை ஆளு சார் என்று சொல்லி நிரூபிக்க விசிட்டிங் கார்ட் ஐடி கார்டெல்லாம் எடுத்துக்கொண்டு மிகுந்த முன்தயாரிப்புகளுடன் என்ன்னென்ன வசனங்கள் பேசவேண்டும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று முன்பே ஒத்திகைகள் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினேன். காதலியிடம் காதலை சொல்லக்கூட இவ்வளவு டென்ஷனும் ரிகர்சலும் எனக்கு தேவைப்பட்டதில்லை!

வாசலிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நம்மை இன்முகத்தோடு வரவேற்கிறார் ஒரு பெண்காவலர் அல்லது ரிசப்ஷனிஸ்ட். இதைவிட ஒரு இந்தியத்தமிழ்க்குடிமகனை பயமுறுத்த காவல்துறையால் முடியுமா? அவரிடம் வந்த விபர விஷயங்களை சொன்னால் அடுத்து எங்கே செல்லவேண்டும், என்னென்ன ஃபார்மாலிட்டிஸ் உண்டு என்ன செய்யவேண்டும் என்பதுமாதிரி விபரங்களை கடகடவெனத் தருகிறார். எனக்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது. கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாட்டை ஆண்டால் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன். இதுவரை போலீஸ் வேடமே ஏற்றிடாத அம்மாவின் ஆட்சியிலேயே இப்படியெல்லாம் நடக்கிறதென்பது நிச்சயம் நம்ப முடியாததுதான் இல்லையா?

சென்னை முழுக்க எல்லா காவல் நிலையங்களிலும் இதுமாதிரி ஏற்பாடு உண்டு என்பதை முன்பே அறிந்திருந்தாலும் முதன்முதலாக ரிசப்சனிஷ்ட் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று அந்த சேவையை அனுபவித்து மகிழ்ந்தது இப்போதுதான். காவல்நிலையத்தில் கூட புன்னகைப்பார்கள் என்பதெல்லாம் எப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான மனநிலையை நமக்குள் உருவாக்கும் என்பதை முதன்முதலாக அறிந்துகொண்டேன்.

தாகமாக இருந்ததால் தண்ணீர் கேட்டேன் (தயக்கத்துடன்தான்!). காவல்நிலையங்களில் இருக்கிற நொடிகள் ஒவ்வொன்றும் மிகவும் பதட்டமானவை. எந்த போலீஸ்காரர் நம் மீது எப்போது கோபப்படுவாரோ என்கிற அச்சம் உள்ளுக்குள் காரணமேயில்லாமல் நிலைத்திருக்கும். இந்த மனநிலைக்கு நாம் குற்றவாளியாகவோ அல்லது எதாவது பிரத்யேக காரணமோ இருக்கத்தேவையேயில்லை. நானெல்லாம் கண்ணை உருட்டி கொஞ்சம் மிரட்டினால் கூட அப்ரூவர் ஆகிவிடுவேன். கேஸே இல்லாவிட்டாலும் கூட.

தண்ணீர் கேட்கவும் கூட பம்மும் குரலில் எச்சூஸ்மீ மேடம் வாட்டர் ப்ளீஸ் என்றுதான் கேட்டேன். ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் அடுத்த நொடி தன்னுடைய பாட்டிலையே எடுத்து புன்னகையோடு நீட்டினார் காவலர். அதை வாய் வைக்காமல் இரண்டு மடக்கு குடிக்கும்போது கூட டேபிளில் சிந்திவிடுமோ என்கிற அச்சம்தான் மனதில் வியாபித்திருந்தது. அதனால் சுமாராகத்தான் தாகம் தணிந்தேன்.

யாராவது லஞ்சம் கேட்பார்கள், கட்டிங் மாமூல் மாதிரி கொடுக்க வேண்டியிருக்கும்… நல்லஅனுபவமாக இருக்கப்போகிறது என்கிற நினைப்போடு ஒவ்வொரு படியாக தாண்ட தாண்ட எங்குமே எந்த சிக்கலுமே இல்லை. சொல்லப்போனால் நம்மிடம் எல்லாவிதமான ஆவணங்களும் நியாயமான காரணங்களும் உண்மையும் இருந்தால் ஐந்து ரூபாய் கூட செலவழிக்காமல் காவல்நிலையங்களில் காரியமாற்றிட முடியும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சமுத்திரகனி படத்தில் காட்டுவதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. போன வேலை சுமூகமாக முடிந்தது. (கடைசி வரை பத்திரிகையாளர் என்கிற அடையாளமெல்லாம் பயன்படுத்தபடவில்லை)

கிளம்பும்போது இந்தக் காவல்நிலையத்தின் வாசலில் ஒரு விஷயத்தை கவனித்தேன். ஒரு போர்டு வைத்து அதில் பொது அறிவு தொடர்பான ஒரு கேள்விபதிலும், கீழேயே ஒரு திருக்குறள் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்கள். அது யாருக்காக எழுதப்பட்டிருகிறது, எதற்காக என்பதை யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன். ஒருவேளை காவல்நிலையத்துக்கு வருகிற குற்றவாளிகள் இதை படித்து திருந்தவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது என்னைப்போன்றவர்கள் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளவும் கூட இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட வாசகங்கள் படிக்கிறவர்களை விட இதை தினமும் வேலைமெனக்கெட்டு எழுதுகிறவர்களுக்கு மிகவும் பயன்படும். தினமும் எழுதுகிறோமே என்றாவது அவர்கள் அதை பின்பற்றும் வாய்ப்பிருக்கிறது.

நம்மை சுற்றியுள்ள மனிதர்களில் காவல்துறையினர் பற்றித்தான் நம்மிடம் மிக அதிகமான முன்தீர்மானங்களும் அவநம்பிக்கைகளும் இருக்கின்றன. இந்த அவநம்பிக்கைகள் அத்தனையும் சினிமா,சீரியல் முதலான ஊடகங்களின் வழி காட்சி மற்றும் பத்திரிகை எழுத்துகளின் வழி நமக்குள் எங்கோ உருவாக்கப்பட்டவை. ஆனால் வேறெந்த வேலைகளையும் விட மிகுந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியமான துறைகளில் காவல்துறையும் ஒன்று. சிஎம் சட்டசபை செல்லும் வழியெங்கும் உச்சி வெயிலில் தன்னந்தனியாக ஆர்கே சாலையில் தேவுடு காக்கும் லேடி கான்ஸ்டபிளில் பேசிப்பார்த்தால் முழுநீள திரைப்படமே எடுக்கும் அளவிற்கு அவ்வளவு கதைகள் சொல்வார்! கல்நெஞ்சக்காரர்களும் ஒவ்வொரு படிநிலைகளிலும் தனக்கு முந்தைய மூத்த அதிகாரியின் வழி கீழுள்ளவர் சந்திக்கிற அவமானங்களும் அசிங்கங்களும் சொல்லி மாளாது. ஒவ்வொரு நாளும் தங்களை கொஞ்சமும் மதிக்காத மனிதர்களோடு பழகக்கூடியவர்கள். அவர்களிடம் நம்மால் ஒரு புன்னகைக்கு மேல் எதையும் எதிர்பார்க்கிற ரைட் நமக்கு கிடையாது.

கோவை க்ராஸ்கட் ரோட்டிற்கு எப்போதாவது சென்றால் அங்கே நடக்கிற பாதசாரிகளையும் ட்ராபிக்கையும் மைக் வழி ஒழுங்கபடுத்துகிற காவல்துறையினரின் குரல் காதில் விழுந்து கொண்டேயிருக்கும். அந்தக்குரலில் துளியளவும் கூட உங்களால் ஆணவத்தையோ அதட்டலையோ உணரமுடியாது. மாறாக அவர்கள் அன்பாக ‘’இப்படி ராங்ரூட்ல வரக்கூடாது கண்ணா ஒரமா போங்க…’’ ‘’அம்மா ஆக்டிவா… இது ஒன்வே திரும்பிப்போ.. அங்கல்லாம் வண்டியை பார்க் பண்ணக்கூடாதும்மா’’ என்பதுமாதிரி கனிவாக பேசுவதை கேட்டிருக்கலாம். கேட்டிராதவர்கள் ஒருமுறை க்ராஸ்கட் ரோடில் அங்கிமிங்கும் ஓடி போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் போலீஸ்காரர் உங்களிடமும் கனிவாக ‘’தம்பி இப்படியெல்லாம் ரோட்ல ஓடக்கூடாது நடைபாதையை பயன்படுத்துங்க என்று சொல்வதை கேட்டு ரசிக்கலாம். சென்னையில் இது கொஞ்சம் மோசமாக இருக்கும். காரணம் இங்குள்ளவர்களிடம் அன்பாக சொன்னாலும் அதட்டிச்சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அடேய் சான்ட்ரோ வழியுட்ரா நாயே என்று மைக்கில் கத்தினால்தான் ஆம்புலன்ஸிற்கு கூட வழி விடுவார்கள். கோயம்புத்தூர்காரர்கள் லேசான அதட்டலுக்கே அஞ்சுகிறவர்களோ என்னவோ என்னைப்போலவே…

ஏன் இந்த போலீஸ்காரங்களுக்கும் நமக்கும் ஒத்துவரமாட்டேனுது என்கிற கேள்வி எனக்கு அடிக்கடித்தோன்றும். காவலர்களுடனான நம்முடைய பெரும்பாலான எதிர்கொள்ளல்கள் அசந்தர்ப்பமான சூழ்நிலைகளில் மட்டுமே நடப்பவை. லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் இல்லாமல் வண்டியோட்டி பிடிபடுவது, மொபைலில் பேசிக்கொண்டே காரோட்டி மாட்டிக்கொள்வது, குடித்துவிட்டு மாட்டிக்கொள்வது மாதிரி சந்தர்ப்பங்களில் குற்றவாளியாக சிக்கிக்கொண்டுதான் காவலர்களோடு நேருக்கு நேர் உரையாடுகிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அதற்குரிய ஃபைனை கட்டாமல் லஞ்சம் கொடுத்து தப்பிக்க முயல்கிறவர்களாகவே இருக்கிறோம். அல்லது யாராவது பெரிய ஆளுக்கு போன் போட்டு கொடுத்து தப்ப நினைக்கிறோம். இப்படி எப்போதும் குற்றவாளியாக மட்டுமே அவர்களை சந்திப்பதால்தானோ என்னவோ கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகறதில்லைபோல! ஒரு குற்றவாளியாக காவலர்களிடம் மட்டுமல்ல காதலிக்கிறவர்களிடம் கூட சகஜமாக பழகமுடியாது என்பதுதான் யதார்த்தம்.