Pages

25 March 2015

வாணிபர் காந்தி




வள்ளுவர் கோட்டத்தில் இப்போதெல்லாம் தினமும் ஒரு போராட்டம் நிச்சயமாக நடக்கிறது. யாருக்காக எதற்காக என்பதெல்லாம் முக்கியமில்லை. மக்களுக்கும் அதைப்பற்றி அக்கறை இல்லை. வள்ளுவர் கோட்டத்து சிக்னலுக்கும் அங்கே போராட்டம் பண்ணுகிற மக்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டையும் யாருமே மதிப்பதில்லை. ஆனாலும் இங்கே போராட்டம் பண்ண ஆர்ஏசி ரிசர்வேசன் எல்லாம் உண்டு. முந்தினால்தான் உங்களுக்கு இடம் கிடைக்கும். அவ்வப்போது ஆளுங்கட்சியினரை குளிர்விக்க அம்மாவை குஷிப்படுத்த கோடாம்பாக்கத்தினரின் குளிர்கண்ணாடி போராட்டங்கள் நடத்துவதுண்டு. அப்படிப்பட்ட காலங்களில் மட்டும் கூட்டம் அம்மும்.

தினமும் அவ்வழியாகத்தான் அலுவலகத்திற்கு வருவது வழக்கம். அதனால் அங்கே என்ன போராட்டம் எதற்காக என்று நின்று விசாரித்துவிட்டு செல்வதை வழக்கமாக்கியிருக்கிறேன். சில போராட்டங்கள் ஜாலியான கோரிக்கைகளுக்காக நடத்தபடுவதுண்டு. நேற்று வாணியர் சங்கம் என்கிற அமைப்பு மார்கேண்டேய கட்ஜூவை கண்டித்து ஒருகூட்டம் நடத்திக்கொண்டிருந்தது.

இந்தசங்கம் செட்டியார் சாதி ஆட்களுடைய அமைப்பு என்பதை போஸ்டரிலேயே தெரிந்தது. மார்கண்டேயே கட்ஜூ சிலதினங்களுக்கு முன்பு மகாத்மா காந்தியை பற்றி சில கருத்துகளை தன்னுடைய வலைப்பூவில் வெளியிட்டிருந்தார். அதில் காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று விமர்சித்திருந்தார்! இதைதான் வள்ளுவர் கோட்டத்தில் 99டிகிரி வெயிலில் நின்று கண்டித்துக்கொண்டிருந்தனர். மார்கண்டேயே கட்ஜூவே மன்னிப்புக்கேள், நாட்டைவிட்டு வெளியேறு என்பது போன்ற விசித்திரமான கோரிக்கைகளை முன்வைத்து அந்தப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் உடனே அங்கிருந்து கிளம்பவேண்டியிருந்தது. ஆனாலும் ஒருவிஷயத்தில் குழப்பமாகவே இருந்தது. அதனால் அங்கேயே பராக்கு பார்த்துக்கொண்டு நின்றேன். எத்தனையோ அமைப்புகள் இருக்கும்போது, காங்கிரஸ் கூட போராட்டம் பண்ணாமல் இருக்கும்போது இவர்களுக்கு ஏன் காந்தி மேல் இவ்வளவு அக்கறை? ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை. அங்கேயிருந்த ஒரு ஆவேச போராட்டக்காரரிடம் விசாரித்தேன். காந்தியும் நம்மாளுங்கதான்ங்க என்றார். எனக்கு புரியவில்லை. என்னது காந்தி செட்டியாரா? என்று சிந்தித்துக்கொண்டே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.

சில நிமிட யோசனைக்கு பிறகுதான் புரிந்தது. காந்தி பனியா சாதியை சேர்ந்தவர். பனியா சாதியினர் வாணிபத்திற்கும் வட்டிக்கு பணம் கொடுப்பதற்கும் பேர் போனவர்கள்! அந்த வகையில் இந்த வாணியர் சங்கம் சகவாணிபரான காந்திக்காக களமிறங்கியிருக்கிறார்கள்!

***

நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் சென்ற வாரத்தில் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். ‘’காரியம் செய்வது’’ என்று அந்த புனிதமான விஷயத்தை சொல்லக்கூடாது. வேறெப்படி சொல்வதென்று தெரியவில்லை. ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பிரஜையை இந்துமதத்திற்கு இட்டுக்க்கொண்டு வந்திருக்கிறார். மதமாற்றம் செய்துவிட்டு அந்தப் புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.

‘’பிறப்பில் ரஷ்யரான திருவாளர்.ரோமன் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர். இவர் நம்முடைய மாபெரும் இந்துத்வத்திற்கு மாறியிருக்கிறார். இனி அவர் ஸ்ரீ.லோகனாதன் என்றும் அவருடைய மனைவி ஸ்ரீமதி.சந்திரா என்றும் அழைக்கப்படுவார்கள்’’ என்று ஆங்கிலத்தில் ஒரு ஸ்டேடஸையும் போட்டு லைக்ஸ்களை வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறார்! ஆங்கிலத்தில் போட்டால்தானே அகில உலக ரீச் கிடைக்கும் என்று நினைத்திருக்கலாம். பாரினிலிருந்து நிறைய பேர் இந்துமதத்திற்கு வந்தால் நல்லதுதானே.

பேரு ரோமன் ஊரு ஆஸ்திரேலியா, பிறந்தது ரஷ்யா என்று திருவாளர் ரோமரே பெரிய குடாக்காக இருப்பார் போலிருக்கிறது. போகட்டும். அன்னாருக்கு லோகநாதன் என்கிற நல்ல பெயரை தேர்ந்தெடுத்து சூட்டியிருக்கிறார்கள். ரோமர் என்கிற பெயரையே ஒரு எழுத்து மாற்றி ராமர் என்று ஆக்கியிருக்கலாம்! சம்பந்தப்பட்டவர்களை குளிர்வித்து குளிப்பாட்டியிருக்கலாம். இவ்விஷயத்தில் இன்னொரு சந்தேகம் கூட உண்டு. அவருக்கு என்ன சாதியில் அலாட் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அடியேன் ஃபேஸ்புக்கில் இல்லை இருந்திருந்தால் கமென்டில் கேட்டிருப்பேன். என் சார்பாக யாராவது அவரிடம் கேட்டும் சொல்லலாம். அடிக்கடி இதுபோன்ற மதமாற்ற நிகழ்வுகளின் போது வருகிற பல நாள் சந்தேகம்.

***

இணையத்தில் கருத்து சொன்னால் கம்பி எண்ண வைக்கிற கொடூரமான ‘’66ஏ சட்ட பிரிவை’’ ரத்து செய்துவிட்டார்கள். இனிமே ஜாலிதானா, இஷ்டப்படி கும்மி அடிக்கலாம்ல? என்று அட்வகேட் நண்பரிடம் குஷியாக சொன்னேன். வஞ்சகமாக சிரித்துவிட்டு ‘’இது போனா என்ன ஓய், இதுமாதிரி இன்னும் பத்து பிரிவு இருக்கு! உனக்கு கம்பி கன்பார்ம், ரொம்ப ஆடாதீரும்’’ என்றார்.

ஐந்நூறு, ஐந்நூத்தி அஞ்சு, ஐந்நூத்தி ஆறு, ஐநூத்தி ஏழு, எட்டு ஒன்பது… பத்து என அவர் வரிசையாக ஐபிசி சட்டப்பிரிவுகளை அடுக்க ஆரம்பித்தார். நிறுத்தும் ஒய் எதுக்கு இப்போ வரிசையா அடுக்குறீங்க என்றேன். ‘’இந்த பிரிவுகளின் படி கூட ஸ்டேடஸ் போட்டதுக்கும் லைக் போட்டதுக்கும் மீம்ஸ் போட்டதுக்குமாக பிணையில்லாமல் பிடித்து ஜெயிலில் போட்டுவிட முடியும்! அதனால் ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க இணைய மொன்னைகளே’’ என்றார்.

வேற என்னதான் சார் செய்யறது எங்களுக்கெல்லாம் விமோச்சனமேயில்லையா? என்று வருத்தமாக கேட்டேன். ‘’அடிங்க ஆனா ரத்தமும் வரக்கூடாது, சத்தமும் வரக்கூடாது’’ என்றுவிட்டுப்போனார். எனக்குதான் ஒன்றும் புரியவில்லை. ஆனால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது.

18 March 2015

பிரபஞ்சனைப் படித்தால் ஃபிகர் மடியுமா?




ஒரு கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். ‘’வாசிப்பின் அவசியம்’’ பற்றி மீடியா மாணவர்களிடம் உரையாட வேண்டும் என்றார்கள். சுஜாதா, சுபா, ரமணிச்சந்திரன் தொடங்கி ஷோபாசக்தி, சுந்தர ராமசாமி வரை பல நூல்கள் குறித்தும் அவர்களை எல்லாம் ஏன் வாசிக்கவேண்டும் எதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது மாதிரி நிறைய அடங்கிய குறிப்புகளை தயாரித்து எடுத்துச்சென்றிருந்தேன்.இன்றைக்கு நாலு பையன்களையாவது தமிழ் இலக்கியத்துக்கு இட்டாந்துரணும் என்பதுதான் என்னுடைய ஒரே எண்ணமாக இருந்தது.

முன்பே துறைத்தலைவரிடம் ‘’ஐயா தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி பேசலாமா’’ என்று கேட்டிருந்தேன். அந்தப்பக்கமிருந்து ‘’அவங்க எந்த கருமத்தையாவது படிச்சா போதும், நீங்க கூச்சப்படாம பேசுங்க’’ என்றார்கள். இதில் கூச்சப்பட என்ன இருக்கிறது. ஆனால் ‘’எந்த கருமத்தையாவது’’ என்று சொல்லும்போதே நான் சுதாரிப்பாக இருந்திருக்கலாம்.

அரங்கில் நூறு அல்லது நூற்றி பத்து மாணவர்கள் இருந்திருக்கலாம். எல்லோருமே பட்டப்படிப்பு முடித்தவர்கள். சில கேள்விகளுடன் பேச்சைத் துவங்கினேன். ‘’இங்கே எத்தனை பேர் தமிழ் நூல்கள் படிப்பவர்கள்?’’ அரங்கத்திலிருந்த அத்தனை பேரும் காலை உணவாக இரண்டு டப்பா பெவிகால் தின்றுவிட்டு வந்தது போல உட்கார்ந்திருந்தார்கள்! நூற்றியோரு சதவீத நிசப்தம்.

‘’இங்கே எத்தனை பேருக்கு சுஜாதாவை தெரியும்?’’ மீண்டும் அதே அமைதி. ‘’சும்மா சொல்லுங்க யாருக்குமே தெரியாதா, படத்துக்கெல்லாம் வசனம் எழுதிருக்கார்’’ என்றேன். ஒரு முனகல் கூட இல்லை. அடுத்த கேள்விக்கும் இதே நிசப்தமே பதிலாக வந்தால் அங்கேயே மூர்ச்சையாகி மூச்சை விட்டிருப்பேன். ‘’கல்கியின் பொன்னியின் செல்வன் தெரியுமா’’ என்று கேட்க இரண்டுபேர் தயங்கி தயங்கி கைதூக்கினார்கள்! படிச்சிருக்கீங்களா என்றேன் ‘’இல்ல பாத்துருக்கோம், வீட்லருக்கு’’

இவர்களெல்லாம் ஆங்கிலத்தில் படிப்பார்களாயிருக்கும், என்ன இருந்தாலும் மெட்ரிகுலேஷன் தலைமுறை மாணாக்கர்களில்லையா? சேதன்பகத் படிக்கிறவர்கள் எத்தனை பேர் என்று கேட்டேன். ஒரே ஒரு பெண் மட்டும் கைதூக்கினாள். மற்றவர்கள் அவளை திரும்பி பார்த்து ஏதோ முணுமுணுத்துக்கொண்டனர். அமிஷ் திரிபாதியை மட்டும் ஏன் விடுவானேன் என்று அவரை எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டேன். நூறு புன்னகைகள் மட்டுமே பதிலாக வந்தது. ‘’இந்த நாய் நம்மள கேள்வி கீள்வி கேட்டுதொலைச்சிருமோ?’’ என்கிற மரணபீதியை மறைத்துக்கொண்டு இளம் ஆசிரியர்கள் கூட போலிப்புன்னகையோடு என்னை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தனர்.

இவ்வளவு நடந்தபின்னும் கூட கேள்விகேட்பதை விடவில்லை. ‘’சரி இங்கே எத்தனை பேர் டெய்லி பேப்பராச்சும் படிக்கறீங்க’’ என்று கேட்டேன். நான்குபேர் கையை தூக்கினார்கள். என்ன பேப்பர் படிப்பீங்க என்றேன். நால்வருமே ‘’எகனாமிக் டைம்ஸ்’’ என்றனர். அவர்கள் சொல்ல சொல்ல ஆசிரியர் பகுதியிலிருந்த ஒரு டைகட்டின ஆசாமி நிமிர்ந்து உட்கார்ந்தார். அந்த நால்வரும் ‘’எங்க சார்தான் படிக்க சொன்னாரு’’ என்று அவரை கைகாட்டினர். அதற்கு முந்தைய நாள்தான் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியை பிடித்திருந்தார். எத்தனை பேருக்கு அது தெரியும் , அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற என்ன காரணம் என்று கேட்டேன். நடுராத்திரி பனிரெண்டு மணி சுடுகாட்டில் கூட ஏதாவது சத்தம் கேட்கும். ஆனால் அந்த அரங்கில் அதுகூட இல்லை.

இதுக்கு மேல தாங்காது என்று நினைத்து ‘’சரி ஏன் யாருமே பாடபுத்தகங்களுக்கு வெளியே அதிகமாக படிப்பதில்லை, உங்கள் மனதில் தோன்றுகிற பதிலை நேர்மையாக சொல்லுங்கள்’’ என்று கேட்டேன். ஒரு பெண் எழுந்து நின்று ‘’எங்க வீட்ல புக்கு வாங்குனா திட்டுவாங்க சார், அவங்களும் வாங்கித்தரமாட்டாங்க’’ என்று அப்பாவியாக சொன்னார். ‘’டைம் இல்லை சார், காலேஜ் அசைன்மென்ட்ஸ் ப்ராஜெக்ட்ஸ்னு ஒரே பிஸி’’ என்றார் இன்னொரு மாணவர். ‘’சார் எதை படிக்கணும்னு தெரியல, சொல்லித்தரவும் ஆள் இல்ல, வீட்ல நியூஸ்பேப்பர் வாங்கினாக்கூட வேலைவாய்ப்பு செய்தி வர நாள்ல மட்டும்தான் வாங்க அனுமதிப்பாங்க’’ என்றார். இன்னும் என்னென்னவோ காரணங்கள் சொன்னார்கள். யாருக்கும் படிப்பதில் விருப்பமும் இல்லை நேரமும் இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.

நமக்கெல்லாம் எப்போதாவது தோன்றுமில்லையா, இந்த அகண்டு விரிந்த எல்லையற்ற மகத்தான பிரபஞ்சத்தில் நம்முடைய இருத்தல் என்பது என்ன? என்பதைப்போற ஒரு ஞானோதயம். அப்படித்தான் அந்த நொடி எனக்குத்தோன்றியது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ் எழுத்தாளர்களெல்லாம் என்னுதுதான் பெரிசு உன்னுது சிறிசு என சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களை ரட்சகர்களாகவும் தேவதூதர்களாகவும் நினைத்துக்கொண்டு அலப்பரைகளை கொடுக்கிறார்கள்.

இந்த கல்லூரியில் மட்டுமல்ல இதற்கு முன்பு மைலாப்பூருக்கு மத்தியில் இருக்கிற ஒரு பிரபல கலைக்கல்லூரியில் பேசச்சென்றிருந்த போதும் இதே மாதிரி அனுபவத்தை எதிர்கொண்டேன். இன்னும் சில மாணவர்களை சந்திக்கும்போதும், புத்தகம் வாசிப்பதை பற்றி பேசினாலே மாணவர்களுக்கு சப்தநாடியும் அடங்கி ஒடுங்கிவிடுகிறது.

இன்றைக்கு புத்தகம் வாசிக்க வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு பத்து சதவிகிதம் கூட இல்லை. வாட்ஸ் அப் தொடங்கி ஆங்கிரிபேர்ட், கேன்டிக்ரஷ், ஷாப்பிங் மால், காபிடே, டவுன்லோட் மூவிஸ், கொரியன் சீரியல் சமூகவலைதளங்கள் என அவர்களுக்கான பொழுதுபோக்கின் முகம் மாறிவிட்டது. தொலைகாட்சியின் வருகைக்கு பிறகான தலைமுறைக்கு புத்தகம் என்பது ஒரு சுமைதான். தகவல்களுக்காக படித்த காலம் கூட உண்டு. ஆனால் இன்று ஒற்றை விரல்சொடுக்கில் தகவல்களை கொட்டத்தயாராயிருக்கிறது கூகிள். இதைத்தாண்டி எப்படி இளைஞர்கள் வாசிக்க வருவார்கள். சர்ச் எஞ்சின் தலைமுறைக்கு ஏற்ற படைப்புகளும் தமிழில் இல்லை. தமிழில் கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்ட ரொமான்டிக் நாவல்கள், அறிவியல் புனைவுகள், த்ரில்லர்கள், ஹாரர், மிஸ்டரி நாவல்கள், நகைச்சுவைக்கதைகள் எத்தனை இருக்கும்? விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் நூல்கள் வெளியிடப்படுகிறது!

வாசிப்பென்பது இருட்டறையில் அமர்ந்துகொண்டு இரண்டரை மணிநேரம் பாப்கார்ன் கொறித்த படி எதுவும் செய்யாமல் படம் பார்க்கிற ஈஸி வேலை கிடையாது. வாசிப்பதற்கு நேரம் வேண்டும், கவனம் உழைப்பு பொறுமை எல்லாம் தேவை. ஆனால் அவ்வளவு சக்தி நமக்கு கிடையாது, போதாகுறைக்கு சுவாரஸ்யமான பிரதிகளும் நம்மிடம் இல்லை. இப்படியொரு சந்தர்ப்பத்தில் நம்முடைய இளைஞர்களுக்கு சில கேள்விகள் உண்டு. வாசிப்பதால் ஏதாவது பயனுன்டா? ஆங்கிலத்தில் படித்தால் கூட பெருமைக்காகவாவது அவ்வப்போது பெயர்களை உதிர்க்கலாம். தமிழ் எழுத்தாளர்கள் பெயர்களை சொல்வதால் நமக்கு பாதகமா? சாதகமா? பிரபஞ்சனையும் பிரமிளையும் படித்தால் ஒரு ஃபிகராச்சும் மடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். காரணம் வாசிப்பின் மீது குழந்தைகளாக இருக்கும்போதிருந்தே உருவாக்கத்தவறிய ஆர்வம்.

தமிழில் சொல்லிக்கொள்ளும் படி குழந்தைகள் நூலோ பத்திரிகைகளோ பல ஆண்டுகளாக கிடையாது (காமிக்ஸ் தவிர்த்து). இப்போதைக்கு சுட்டிவிகடன் மட்டும்தான். அதுவும் விலை அதிகம். குழந்தைகளுக்காக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் எண்ணிக்கையும் நான்கோ ஐந்தோதான். ஆனால் ஆங்கிலத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பத்து வயதுக்கு, பதினைந்து வயதுகுட்பட்ட பதின்பருவத்தினருக்கு என விதவிதமான நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் தமிழில் அப்படி வகைமைகள் கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி நூல்கள்தான். இன்று பதிமூன்று வயது பையனுக்கு வாங்கித்தர எந்த தமிழ்நூலை பரிந்துரைக்க முடியும்? மீண்டும் மீண்டும் அதே தெனாலிராமன், பீர்பால், பஞ்சதந்திர கதைகளையே நாடுகிறோம். வீட்டிலும் கூட செய்தித்தாள் வாசிக்கிற பழக்கம் குறைந்து வருகிறது. இதழ்கள் கூட மருத்துவம், வேலைவாய்ப்பு கல்வி என தேவைக்கேற்ப வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். புத்தகக்கண்காட்சியில் காமிக்ஸ் கன்னாபின்னாவென்று விற்பதாக சொல்லப்பட்டாலும் அதை இப்போதும் வாசித்துக்கொண்டிருப்பதென்னவோ முப்பது வயதிற்குமேற்பட்ட ஆட்களே!

குழந்தைகளுக்காக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இரா.நடராசன் ஒரு கூட்டத்தில் பெற்றோர்கள் எந்த அடிப்படையில் நூல்களை வாங்கித்தருகிறார்கள் என்பதைப்பற்றி சொன்னார். தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பொருளாதார முன்னேற்றித்திற்கு பயன்படுகிற நூல்களையே அவர்கள் வாங்கித்தர எண்ணுகிறார்கள். ‘’உங்கள் குழந்தை விஞ்ஞானியாக வேண்டுமா?’’ ‘’உங்க குழந்தை கோடீஸ்வரனாக வேண்டுமா?’’ என்பது மாதிரி நூல்களையே வாங்கித்தர எண்ணுகிறார்கள். கதையும் கவிதையும் படிப்பது குழந்தைகளை பாழாக்கக்கூடும் என்று அஞ்சுகிறார்கள் என்றார். பெற்றோர்களின் அழுத்தம் ஒருபக்கமென்றால் இன்னொரு பக்கம் பள்ளிகள் பல பள்ளிகளில் பெயருக்குத்தான் நூலகங்கள் இயங்குகின்றன. நூலகத்திற்கு செல்லவும் அங்குள்ள நூல்களை தேடி வாசிக்கவும் குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுவதில்லை. பாடபுத்தகச்சுமை குழந்தைகளை அச்சிட்ட காகிதங்களின் மீதான வெறுப்பையே உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் மார்ச் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாக கொண்டாடுகிறார்கள். இம்மாதத்தில் மக்கள் மத்தியில் நூல்வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நிறைய நிகழ்ச்சிகளை நாடு முழுக்க நடத்துகிறார்கள். நிஜமாகவே நடத்துகிறார்களா என்பதை அமெரிக்க வாசிகள்தான் உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதுகுறித்த செய்திகளை வாசிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

பெற்றோர்களிடம் ஒவ்வொரு நாளும் தங்களுடைய குழந்தைகளுக்கு ‘’பதினைந்து நிமிடம்’’ ஏதாவது ஒரு புத்தகத்தினை உரக்க வாசித்து காட்ட வலியுறுத்துகிறார்கள். பொது இடங்களில் நூல்களை பற்றிய கூட்டங்கள் நடக்கின்றன. பள்ளிகளில் தினமும் யாராவது ஒருவர் வகுப்பறையிலேயே ஏதாவது ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை நிகழ்த்துகலையாகவும். அதே கதையை வாசித்தும் காட்டுகிற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. புத்தக கண்காட்சிகள், இலவச நூல்கள், திரைப்பட காட்சிகள், நூல்களை பரிசாக வழங்குவது என நிறைய விஷயங்கள் பண்ணுகிறார்கள். இதன் மூலம் எத்தனை பேர் செய்வார்களோ வாசிக்க ஆரம்பிப்பார்களோ ஆர்வம் வருமோ தெரியாது.

இது ஏதாவது பெரிய என்ஜிஓக்களின் இன்னுமொரு லீலையாக கூட இருக்கலாம். ஆனால் இதுமாதிரியான முயற்சிகள்தான் அடுத்த தலைமுறையினரை வாசிப்பின் பக்கம் தூண்டக்கூடியவையாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் செய்ய இங்கே குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, பொதுஜனங்களுக்கு என யாருக்குமே நேரமில்லை!





16 March 2015

மீண்டும் சங்கராபரணம்




தாத்தாக்களும் பாட்டிகளும் நிறைந்திருந்த ஒரு திரையரங்கு. அத்தனை முதியவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது பஜனை மண்டபத்தில் பாயாசத்திற்காக உபன்யாசம் கேட்க வந்தமர்ந்திருப்பதை போல் இருந்தது. சத்யம் திரையரங்கில் இதுவரை பலநூறு படங்கள் பார்த்திருந்த போதும் எப்போதும் இந்த அளவுக்கு வறட்சியாக உணர்ந்ததில்லை. முன்பக்கத்திலிருந்த இருக்கைகள் அத்தனையும் நரைத்திருந்தன! நெற்றிகளில் பட்டையும் நாமமுமாக... ரிடையர்டானவர்களுக்கான சிறப்புக்காட்சிக்கு வந்துவிட்டோமோ என்றென்னும் அளவுக்கு வெண்மை பூத்திருந்தது. முத்தாய்ப்பாக கோயிலில் பூஜை முடித்துவிட்டு அப்படியே சட்டைகூட போடாமல் நேராக தியேட்டருக்கு வந்திருந்தார் ஒரு பூஜாரி! விபூதி மணக்க, நெய்மணம் கமகமக்க… தொடங்கியது சங்கராபரணம்!

எனக்கு நேர் முன்பாக அமர்ந்திருந்த பெரியவர் தன் இளம் மகனோடு வந்திருந்தார். அல்லது மகன் அழைத்து வந்திருக்க வேண்டும். படம் தொடங்கியதிலிருந்து தன் மகனிடம் ஒவ்வொன்றையும் காட்டி காட்டி பேசிக்கொண்டேயிருந்தார். முதல் பாடலில் தொடங்கி ஒவ்வொரு பாடல் தொடங்கும்போதும் கண்களை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேயிருந்தார். படத்தில் மொத்தம் பனிரெண்டு பாடல்கள்! ஒரு பாடலுக்கு முப்பது மில்லி என்றாலும் பனிரெண்டு பாடலுக்கு எவ்வளவு கண்ணீர்? கண்களை துடைத்துக்கொண்டேயிருந்தார்.

படம் பார்க்கும்போதே தன் மகனுடைய தோள்களில் சாய்ந்துகொண்டார். படத்தில் வருகிற மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் விழுந்து விழுந்து சப்தமாக சிரிக்கிறார். பாடல்களுக்கு நடுநடுவே எஸ்பிபியோடு சேர்ந்து ப்ரோ… ச்சே… வா… ரெவரூரா…ஆஆஆஆஆ.. என்று முணுமுணுத்தபடி தன்னுடைய கைகளால் தாளமிடுவதுபோலவும் தட்டிக்கொண்டிருந்தார். மகனிடம் ‘’இப்போ பாரு செமயாருக்கும், இப்போ பார் இப்போ பார்’’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்.

இடைவேளையில் கூட மகன் அழைத்தும் வெளியே போகாமல் அப்படியே அமர்ந்திருந்தார். பெரியவருக்கு வயது ஐம்பதுக்குள்தான் இருக்கும். அனேகமாக தன்னுடைய கல்லூரி காலத்தில் இப்படத்தை பார்த்திருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை பார்க்கிற அவருக்கு நிச்சயமாக இது வெறும் திரைப்படமாக மட்டுமே இருந்திருக்கும் என்று நிச்சயமாக சொல்லமுடியாது. கல்லூரிக் காலத்தில் திரும்ப திரும்ப பலமுறை பார்த்திருக்கலாம், தன் காதலியோடு பார்த்திருக்கலாம். அவருக்கு படத்தின் ஒவ்வொரு காட்சியும் பாடலும் ஒலியும் மறக்கவியலாத நினைவுகளாக தேங்கியிருந்திருக்க வேண்டும். அவர் மட்டுமல்ல சத்யம் திரையரங்கில் அந்த காலைகாட்சிக்கு கூடியிருந்த எழுபது எண்பது பேருமே இப்படித்தான் படம் பார்த்து கண்ணீர் விட்டு நெகிழ்ந்து உணர்ச்சிக்கொந்தளிப்பில் பாடல்களில் கரைந்து உருகியதை காண முடிந்தது. படத்தை விடவும் இக்காட்சிகள் நம்மை நெகிழச்செய்வதாக இருந்தது.

படம் முழுக்க வசனங்கள் மிகவும் குறைவு, படம் தொடங்கி முதல் பத்து பதினைந்து நிமிடங்கள் வரைக்குமே வசனங்களில்லை. சென்னையிலும் கூட படம் அக்காலத்தில் நூறுநாட்கள் ஓடியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு பார்த்தாலும் இப்படம் நன்றாகப் புரியும்.

படத்தின் முதல் நாயகர் பாடும்-பாலு இரண்டாவது நாயகர் பார்க்கும்-பாலு(மகேந்திரா)! கேவி.மகாதேவனின் இசைக்கு தன்னுடைய கம்பீரக்குரலால் ஒலிபாலு உயிர்கொடுக்கிறார். விஸ்வநாத்தின் நேர்த்தியான படமாக்கலுக்கு ஒளிபாலு உயிர் தருகிறார். இப்போதெல்லாம் மானிட்டர் வந்துவிட்டது, எடுத்த காட்சிகளை அப்போதைக்கு அப்போதே சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துவிட முடியும், ஆனால் அதுமாதிரி வசதிகள் இல்லாத காலத்திலும் கூட சில காட்சிகள் எடுக்கப்பட்டிருந்த விதம் ஆச்சர்யப்படவைத்தது.

இப்படத்திற்கு நாயகியாக மஞ்சுபார்கவியை பாலுமகேந்திராதான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பாலுமகேந்திராவின் அத்தனை கறுப்பு ஹீரோயின்களுக்குமான ரெபரன்ஸ் இவரிடம் இருக்கிறது! முகத்தில் உதட்டில் கன்னங்களில் இன்னும் பல இடங்களில் என கேமரா அவரை கட்டித்தழுவுகிறது. தனுஷ் போல மஞ்சுபார்கவி கூட பார்க்க பார்க்க பிடிக்கிற ஆள் போல படம் தொடங்கும்போது இந்தம்மாவா என்று வெறுப்பாக இருந்தாலும் போக போக அவர் மீது நமக்கும் காதல் வந்துவிடுகிறது. முடியும் போது படம் முழுக்க மௌனம் பேசும் மஞ்சுபார்கவி ரசிகராகிவிடுவோம்!

மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டே கதை பண்ணியிருந்தாலும் ஒவ்வொருவரும் அவ்வளவு ஆழமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்தப்படம் தமிழிலும் தெலுங்கிலுமாக எப்படியும் ஒரு நூறு படங்களுக்கு ரெபரென்ஸாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு இந்தப்படத்தில் வருகிற காட்சிகளும் பாத்திரங்களும் இதற்கு பிறகுவந்த எண்ணற்ற இசைப்படங்களில் நடனப்படங்களில் பலமுறை பார்த்தவை. அதனாலேயே மிகச்சில காட்சிகளில் சலிப்பு வந்தாலும் படம் விறுவிறுப்பாகவே நகர்கிறது. காமெடிகள் அச்சுபிச்சுத்தனமாக இருந்தாலும் அந்தகாலகட்டத்தில் ரசித்திருக்கக் கூடியவை. அல்லு ராமலிங்கையஇதை ஒரு கலைப்படமாகவே இத்தனை நாளும் நினைத்துக்கொண்டிருக்க, சிறந்த பொழுதுபோக்குப்படத்திற்கான தேசியவிருதுதான் கொடுத்திருக்கிறார்கள்!

படத்தை தெலுங்கிலேயே வெளியிட்டிருக்கலாம். ஆனால் ஏனோ பாடல்களையும் கூட தமிழில் மாற்றியிருக்கிறார்கள். பாலுவே மீண்டும் பாடியிருக்கிறார். குரலில் அதே கம்பீரம். பழைய பிரிண்ட்டை டிஜிட்டல் பண்ணியிருப்பதால் ஆரம்ப காட்சிகள் புள்ளி புள்ளியாக வினோதமான மங்கலாக தெரிந்தாலும் போகப்போக அது தொந்தரவு செய்யாமல் கண்ணுக்கு பழகிவிடுகிறது. வாய்ப்புக்கிடைத்தால் திரையரங்கில் பார்க்கலாம். மிகச்சில காட்சிகள்தான் ஓடுகிறது. யூடியூபில் முழுப்படமும் தெலுங்கில் காணக்கிடைக்கிறது. பாடல்களையாவது கேட்கலாம்.

படம் முடிந்து கிளம்பும்போது எல்லோர் முகத்திலும் திருப்தி. ‘’தம்பி இன்னொருக்கா பாக்கலாமாடா’’ என்று ஏக்கமாக மகனிடம் கேட்டுக்கொண்டே கூட்டத்தில் மறைந்தார் முன் இருக்கைப்பெரியவர். எனக்கும் கூட இன்னொரு முறை பார்க்க வேண்டும், ஆனால் தெலுங்கில்.


13 March 2015

ஆரோவில் மாரத்தான் 2015





சென்னை மாரத்தானில் ஓடிய பிறகு நிச்சயமாக ஓடுவதை நிறுத்திவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் உடனே அடுத்த மாரத்தானுக்கு உடனே தயாராகிவிட்டேன். ஆச்சர்யம்தான். இம்முறை முந்தைய போட்டியைவிடவும் மிகக் குறைவான நேரத்தில் பந்தய தூரத்தை ஓடிக்கடக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. வேகமாக ஓட உடல் வலுவையும் கூட்ட வேண்டும் என்பதால் ஸ்ட்ரென்த் டிரெயினிங் மாதிரியான விஷயங்களை தெரிந்துகொண்டு அதையும் செய்ய வேண்டியிருந்தது. ஓடுவதற்காக மட்டுமே பஸ் பிடித்து பாண்டிச்சேரிக்கு போவேன் என்று ஒருநாளும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. தமிழ்நாட்டின் மிகச்சில மாரத்தான்களில் ஆரோவில் மாரத்தான் மிகவும் புகழ்பெற்றது.

ஆரோவில்லின் காட்டுப்பகுதிக்குள் அதன் எழிலை ரசித்தபடி மரநிழலில் ஜாலியாக ஓடலாம். பசுமையும் அமைதியும் நிறைந்த பாதை. அதிக கூட்டமில்லாத ஓட்டம் , ஓடிமுடித்து திரும்பிவந்தால் கடற்கரை. அங்கேயே குளித்துவிட்டு குடிக்கும் பழக்கமிருந்தால் மலிவு விலையில் மதுவும் அருந்தலாம். குளிக்கலாம். நிறைய வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தினரும் கலந்துகொள்ளும் ஓட்டம் இது. ஓடுவதின் இன்பத்திற்க்காகவே ஓடுவது என்பதுதான் இந்த மாரத்தானின் நோக்கம். அதனால் மெடல் கிடையாது. கடந்த பிப்ரவரி எட்டில் பல ஆயிரம் பேரோடு அடியேனும் ஓடினேன். (இந்த முறையும் அரை மாரத்தான்தான் 21.1 கி.மீ)

ஓடிமுடித்து ஊருக்கு வந்து ஒருமாதமாகிவிட்டது, எவ்வளவு நேரத்தில் ஓடினேன் எத்தனையாவது இடம்பிடித்தேன் என்பதுமாதிரி எந்த விபரமும் தெரியவில்லை. ஏதோ தொழில்நுட்ப கோளாறுகளால் தாமதாகியிருக்கிறது. இப்போதுதான் ரிசல்ட் போட்டிருக்கிறார்கள். என்னைப்போன்ற மாரத்தான் பித்தேறிய முத்துக்களுக்கு இந்த ரிசல்ட் மிகவும் முக்கியமானது. முந்தைய ரெகார்டுகளை இம்முறை முறியடிக்க வேண்டும் என்று முக்கி முக்கி இரண்டு மாதங்கள் பயிற்சி செய்திருக்கிறேன் சும்மாவா?.

கடந்த ஒருமாதமாக தினமும் ஆரோவில்லின் இணையதளத்தை திறந்து பார்ப்பதும், அவர்களுடைய மன்னிப்புக்கோரலை படித்துவிட்டு சோகமாவதும் வாடிக்கையாகியிருந்தது. இதோ இப்போது வந்துவிட்டது முடிவுகள். ஓடிய கால அளவு 1மணிநேரமும் 50 நிமிடங்களும்தான்! இது சென்ற முறை ஓடியதைவிட இருபத்தியோரு நிமிடங்கள் குறைவு. 1மணிநேரம் 45 நிமிடங்களுக்குள் ஓட்டத்தை முடிக்க நினைத்திருந்தேன், ஆனால் இது காட்டுப்பகுதியில் ஓடக்கூடிய TRAIL வகை மாரத்தான் போட்டி என்பதால் ஓடுவதில் சிரமமிருந்தது. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று ஓடவேண்டியிருந்தது! சென்ற முறை 2:11 , இம்முறை 1:50. என்னளவில் ட்ரிட் வைத்துக்கொள்ள ஏற்ற சாதனைதான். (அரைமாரத்தானில் ஓடியவர்கள் எண்ணிக்கை 1829 பேர்! அதில் 44வது இடத்தை பிடித்திருக்கிறேன்.)

ஏகப்பட்ட வெளிநாட்டினர் என்னோடு ஓடினார்கள், ஒரு பாரினரையாவது முந்த வேண்டும் என நினைத்திருந்தேன். காரணமெல்லாம் இல்லை. இன்னும் அதிக வேகம் ஓடுவதற்கான ஒரு உத்வேகம். நல்ல வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நாலைந்து வெளிநாட்டினரை தாண்டினேன்! அதில் ஒரு அல்ப திருப்தி. பாரத்மாதாகீ ஜெ! இங்கே சென்னை மாரத்தானில் ஓடிமுடித்து வருகிறவர்களுக்கு உண்ண பர்கர் கொடுத்தார்கள். பாண்டிச்சேரி பிரஞ்சு தேசம், அங்கே பாஸ்டா பீட்சா மாதிரி ஏதாவது கொடுப்பார்கள் என்று நினைத்திருந்தேன். வெண்பொங்கலும் வடையும் டிகிரி காபியும் கொடுத்தார்கள்.

அடுத்து செப்டம்பரில் சென்னை ட்ரையல் மாரத்தானில் கலந்துகொள்ள நினைத்திருக்கிறேன். நடுவில் எதுவும் பெரிய போட்டிகள் இல்லை. அதனால் இம்முறை 21கிலோமீட்டர் தூரத்தை 90நிமிடங்களில் ஓட நினைத்திருக்கிறேன். இதை SUB90 என்கிறார்கள். அதற்கான பயிற்சிகள் தொடங்கவிட்டது. இனி ஓடவேண்டியதுதான்.


12 March 2015

அசோகமித்திரனின் தண்ணீர்




தண்ணீர் நாவலைவாசித்த யாருமே ஜமுனா,சாயா,பாஸ்கர்ராவ் என்கிற பெயர்களை மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு வலிமையாக படைக்கப்பட்டவை. அவர்களையெல்லாம் எனக்கு போனவாரம்தான் தெரியும். ‘’தண்ணீர்’’ வசந்த் இயக்கத்தில் படமாகிறது என கேள்விப்பட்டு அவசவசவசரமாக வாங்கி ஒரே கல்ப்பில் படித்து முடித்தேன். பிரமாதமான நாவல். அருமையான பின்னணி, நினைவைவிட்டு நீங்காத பாத்திரங்கள் என அசோகமித்திரனின் ஏஸ்யூஸ்வல் க்ளாசிக்களில் ஒன்று. இதை நாவல் என்று எப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை. படிக்கும்போது ஒரு நீண்ட சிறுகதையை படிப்பது போல்தான் இருந்தது.

கதையை வாசிக்கும்போது கதை நடக்கும் காலம் எழுபதுகளாக இருக்கும் என்று யூகித்தேன். அப்போது எந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் மக்களை பாடாய் படுத்தியது என்பதை நேரடிசாட்சியாக வர்ணிக்கிறார் அ.மி. ஆனால் அதற்கு பிறகு சமகாலத்தில் அதைவிடவும் கேவலமாக ஒரு குடம் தண்ணீருக்காக லோல் பட்டுவிட்டதாலோ என்னவோ, காசுகொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கிறதாலோ என்னவோ நாவலில் வருகிற தண்ணீர்ப்பஞ்சம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கதையிலும் சென்னையின் ஒட்டுமொத்த தண்ணீர்ப்பஞ்சத்தை ஒரு வீதிக்குள் சுறுக்கிவிட்டாரோ என்றும் கருதினேன்.

நாவலில் முழுக்கவும் நகரத்தின் மையத்தில் வாழ்கிற மிடில்கிளாஸ் மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்திருக்கிறார். திராவிட இயக்கங்கள் உச்சம் பெற்றுவிட்ட துவக்க காலத்தில் அவருக்கு பிரமாணர்கள் ஒடுக்கப்படுவதாக ஒரு கவலை இருந்திருக்கலாம். அதனால் உண்டான கோபமும் சீற்றமும் பல இடங்களில் காட்சிகளின் வழியாகவும் பாத்திரங்களின் வழியாகவும் சொல்லப்படுகிறது. சினிமாக்காரனை நம்பி வாழ்க்கையை தொலைத்த ஒரு அப்பாவி பெண் பாத்திரங்களையும் அனேகமாக சினிமாவில் சீரியல்களிலும் போட்டு துவைத்து எடுத்துவிட்டதால் ஜமுனாவின் பாத்திரமும் என்னமோ ஒட்டவே இல்லை. சாயாவும் கூட பாலச்சந்தர் படங்களில் பார்த்த ரகமாக இருக்க கதையில் ஒரு சில அத்தியாயங்களில் வந்துபோகும் ‘’டீச்சர்’’ அவ்வளவு ஈர்த்தார். ஜமுனாவிடம் டீச்சர் பேசுகிற நான்கு பக்கங்களையும் மீண்டும் மீண்டும் படித்தேன். அவ்வளவு சுவாரஸ்யம். ஜமுனாவின் அம்மா வருகிற அத்தியாயமும் தனிச்சிறுகதைக்கான அம்சங்களைக் கொண்டது.

அசோகமித்திரன் இந்நாவலில் கையாண்டிருக்கிற மொழி எவ்வித பாசாங்குகளும் அற்ற எளிமையான ஒன்று. அதுதான் இந்நாவலின் பலமே. அடுத்து அவர் தேர்ந்தெடுக்கிற பயன்படுத்துகிற சொற்கள். எங்குமே அந்நியமான சொற்களோ தன்னுடைய மேதாவித்தனத்தை வெளிப்படுத்துகிற மொழியோ இல்லை. எதையுமே மைக்போட்டு சொல்லாமல் எல்லாவற்றையும் காட்சிகளின் வழி வாசகனுக்கு கடத்துகிறார். தான் சொல்ல விரும்பியதை மட்டும் நறுக்கென சொல்கிறார். அதற்குமேல் ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.

இந்நாவலை திரைப்படமாக எடுக்கப்போகிறார்கள் என்பது நிச்சயம் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒரு சினிமாவிற்கான அடிப்படையான ஒரு கதை இந்நாவலுக்குள் இல்லை. மொத்தம் மூன்றே பாத்திரங்கள் அவர்களுடைய மனவோட்டங்கள், அதிலும் முக்கால் வாசி நாவலை ஜமுனாவே நிறைத்துவிடுகிறாள். கலைப்படமாகவே இருந்தாலும் அதற்குரிய அம்சங்களும்கூட குறைவுதான். வசந்த் என்ன பண்ணப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வக்குறுகுறுப்பு இப்போதே அதிகமாக இருக்கிறது. அந்த பீரியட் (70களின் துவக்கம்) இதுவரை எந்தப்படத்திலும் கையாளப்படதில்லை. இப்படத்திற்கு என்னமாதிரி திரைக்கதை அமைப்பார்கள், ஜமுனாவின் முன்கதையும், பாஸ்கர்ராவின் வாழ்க்கையும்கூட புதிதாக சேர்க்கப்படுமா என்றெல்லாம் படம்வந்தபின் தெரியும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே இக்கதைக்கு ஒரு முழு திரைக்கதையையும் தயாரித்து படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார் ஞாநி. ஆனால் சரியான சூழ்நிலை அமையாமல் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இப்போதும் தன்னிடம் அந்த திரைக்கதை இருப்பதாக சொன்னார் ஞாநி. அது எங்கே இருக்கிறது என்று கேட்டு வாங்கி படித்துபார்க்க வேண்டும்.

நாவல்களை படமாக்குவது ஈஸியான வேலை கிடையாது. பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவதற்காக மணிரத்னம் முயற்சி செய்தபோது தமிழின் பல முன்னணிகளையும் கூட்டாக்கி ஒரு டீமை உருவாக்கி அதற்கென ஒரு திரைக்கதையை உருவாக்கினாராம். ஆனால் அதுவே திருப்தியாக வரவில்லை என்பதால்தான் அந்த முயற்சி கைவிடப்பட்டது என்று ஒரு பேச்சு உண்டு.



எஸ்ராமகிருஷ்ணன் தன்னுடைய வலைப்பக்கத்தில் ‘’ராஜவிளையாட்டு’’ என்கிற ஜெர்மானிய நாவல் குறித்து எழுதியிருந்தார். அது புதுப்புனல் வெளியீடாக தமிழில் வந்திருக்கிறது. 1941ல் செஸ் விளையாட்டின் பின்னணியில் எழுதப்பட்டது. ஒரு கப்பல் பயணத்தில் உலக செஸ் சாம்பியனை ஒரு அனானிமஸ் தோற்கடிக்கிறான். அந்த அனானிமஸ் நாஸிக்களின் சிறையில் கொடுமைகளை அனுபவித்துவிட்டு வெளியே வந்தவன். தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு பல மாதங்கள் கிடக்கிற அவன் செஸ்போர்ட் இல்லாமல், காய்ன்கள் இல்லாமலேயே செஸ்விளையாட்டை கற்றுக்கொள்கிறான். அவனுடைய சிறைச்சாலை சிந்தனைகளும் மனதிற்குள் நடக்கிற போராட்டங்களும்தான் மொத்த நாவலும். 3

அனைவரும் வாசிக்கவேண்டிய சிறந்த குறுநாவல் இது. நூறு ப்ளஸ் பக்கங்களே கொண்டது. ஆனால் மொழிபெயர்ப்பு பல இடங்களில் படுத்தி எடுக்கிறது. கடுமையான ஜிலேபி சுற்றியிருக்கிறார்கள். ஆஸ்திரியா ஒரு இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியிருக்கிறது. இணையத்தில் தேடினால் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. தரவிறக்கி கூட வாசிக்கலாம். நாவலின் பெயர் ROYAL GAME – எழுதியவர் Stefan Zweig

இந்நாவல் 1960ல் BRAINWASHED என்கிற பெயரில் திரைப்படமாக வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு அப்படத்தை இணையத்தில் தேடி கண்டுபிடித்து பார்த்தேன். அவ்வளவு அவசரமாக பார்த்ததற்கு முக்கியமான காரணம் சிறைச்சாலையில் செஸ் கற்றுக்கொள்கிற காட்சிகளை எப்படி படமாக்கப்பட்டிருக்கும் என்று தெரிந்துகொள்கிற முனைப்புதான். அப்பகுதி முழுக்கவும் மனவோட்டங்களாக எவ்வித வசனங்களும் காட்சிகளுமில்லாமல் நீண்டிருக்கும். நாவல் தந்த அனுபவத்தில் ஒரு சதவீத திகைப்பை பரிதவிப்பை படத்தினால் ஒரு சில விநாடிகள் கூட உருவாக்க முடியவில்லை.

சிறைச்சாலை காட்சிகள் சில நிமிடங்களில் கடத்தப்பட்டிருந்தது. மனவோட்டங்களை காட்சிப்படுத்துவதில் தோற்றுப்போயிருந்தார்கள். படத்தின் கதையை வேறு இஷ்டப்படி கொத்தி வைத்திருந்தார்கள். தண்ணீரிலும் வசந்த் அது மாதிரி எதுவும் செய்துவிடக்கூடாது. (வசந்த் தன் பெயரை வசந்த்சாய் என மாற்றிவிட்டார் போல போஸ்டர்களில் அப்படித்தான் போட்டிருக்கிறது!)


04 March 2015

கோமாதா எங்கள் குலமாதா (அல்லது) #BEEFBAN





சென்னையில் கிடைக்கிற மாட்டுக்கறி எதுவுமே நல்ல மாட்டுக்கறி கிடையாது. முக்கால் வீசம் எருமைக்கறி கலவைதானாம்! மிச்சமீதி கறியும் மாத்திரைபோட்டு பதப்படுத்தப்பட்ட எடைகூட்டப்பட்ட சுமார்கள்தான். இருந்தாலும் வேறு வழியில்லாமல் அதைதான் தின்று தொலைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ‘’1955ல் போடப்பட்ட சட்டம்’’தான் காரணம். தமிழ்நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு கட்டுப்படுத்தப்பட்ட தடையிருக்கிறது. ஆடு, கோழியைக் கொல்வதைப்போல ஒரே திருகில் தலையைக் கிள்ளி மாடுகளை கொல்ல முடியாது.

முதலில் வெட்டப்படுகிற மாடு வெட்டுவதற்கு ஏற்றதா என்பதற்கு சான்றிதழ் வாங்கவேண்டும். அதுவும் அந்த மாட்டிற்கு பத்து வயதிற்கு மேலாகிவிட்டதை உறுதிப்படுத்தவேண்டும். இனி அந்த மாடு விவசாயத்திற்கு பயன்படாது, இனப்பெருக்கம் பண்ணாது, பால்தராது, எதற்குமே பயன்படாது என்பதற்கும் சான்றுகள் அளித்தால் மட்டும்தான் அவற்றை வெட்டமுடியும்.

இது 1955ல் போடப்பட்ட சட்டம், 1976ல் எக்காரணத்திற்காகவும் பசுக்களை கொல்லக்கூடாது என்று அரசு அறிவித்தது. அதன்பிறகு தமிழ்நாட்டில் எதற்குமே பிரயோஜமில்லாத காளை மாடுகளும், எருதுகளும், எருமைகளும் மட்டும்தான் உண்பதற்கென்று மிகச்சிறிய அளவில் வெட்டப்படுகின்றன (சட்டப்பூர்வமாக). இதனால்தான் கேரளாவிற்கே எல்லா மாடுகளையும் தாரைவார்க்கிறோம். இங்குமட்டுமல்ல இந்தியா முழுக்கவே பெரும்பாலான மாநிலங்களில் இதே மாதிரி தடை இருக்கிறது. கேரளா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும்தான் மாட்டுக்கறிக்கு எந்த தடையும் கிடையாது. இஷ்டபடி துண்டாக்கி வாயிறுமுட்ட தின்னலாம்.

இந்தியாவின் 90சதவீத மாநிலங்களில் வெட்டப்படாமல் அல்லது சாப்பிடக்கிடைக்காமல் போகிற மாட்டிறைச்சியெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதனால்தான் உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நமக்கு இரண்டாமிடம்! இந்த ஏற்றுமதியில் பிரபலமான ஆறு இந்திய நிறுவனங்களில் நான்கை நடத்துபவர்கள் இந்துக்கள் என்பது இதில் நம்ப முடியாத மெடிக்கல் மிராக்கிள்! ஆனால் இந்நிறுவனங்களின் பெயர்கள் எல்லாமே அல்கபீர், அராபியன் மாதிரி இஸ்லாமிய பெயர்கள் என்பது அடுத்த மிராக்கிள்.

இவ்வகை தடைகளால்தான் இன்றுவரை நல்ல மாட்டுக்கறியை தேடி அலையவேண்டிய துர்பாக்கிய நிலையில் நாமெல்லாம் இருக்கிறோம். இருந்தும் இந்த தடைகளையும் மீறியே இங்கு ஒரளவுக்காவது மாட்டிறைச்சி கிடைக்கிறது. கேரள எல்லையோர பகுதிகளில் இருக்கிற உணவங்களில் நல்ல பீஃப் பிரியாணியும் மசாலாவும் ஃப்ரையும் இப்போதும் கிடைக்கிறது.

சென்னையில் ரங்கீஸ் கிச்சன், குமரகம், என்டே கேரளம், வாங்ஸ் கிச்சன் முதலான கடைகளிலும், வடசென்னையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருக்கிற சிறிய கடைகளிலும் ருசியான தரமான மாட்டிறைச்சி கிடைக்கிறது.

இந்துக்கள் அதிகம் வாழும் கேரளாவில் சராசரியாக ஒரு மாதத்தில் ஒரு ஆள் 147கிராம் மாட்டிறைச்சியை உண்கிறார்கள். மேற்குவங்கத்தில் சராசரியாக 133கிராம். இங்கெல்லாம் மாட்டிறைச்சிக்கு தடையில்லை. மாடுகளை வெட்ட தடையுள்ள தமிழ்நாட்டில் இந்த அளவு வெறும் ஒன்பது கிராம்தான்! ஒருவேளை இங்கும் தடைநீக்கப்பட்டால் கேரளாவோடு நாமும் சரிக்கு சமமாக போட்டி போட முடியும் என்றே தோன்றுகிறது. காரணம் அவ்வளவு பேர் நல்ல மாட்டிறைச்சி கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே கேரளாவை விடவும் மிக அதிக தேவை இருக்கிறது.

நல்ல வேளையாக தமிழ்நாட்டில் மாட்டுக்கறி தின்பதற்கோ அல்லது அதை வீட்டில் பத்திரப்படுத்தி பாதுகாப்பதற்கோ தடையில்லை! அந்த வகையில் நாம் புண்ணியம் பண்ணியவர்கள்தான். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு இந்நிலை இப்படியே இருக்கும் என்பதை சொல்வதற்கில்லை. நம்மை ஆளும் சனாதன இந்துத்வர்கள் சீக்கிரமே தமிழ்நாட்டையும் புனிதமாக்கிவிடகூடும்! இதோ மகாராஷ்டிரா வரைக்கும் வந்துவிட்டார்கள் புனிதர்கள்.

மகாராஷ்டிராவில் மாட்டுக்கறி ‘’தின்றாலும்’’ கூட ஐந்தாண்டுகள் சிறை என்று அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. அதை என்னவோ மாபெரும் சாதனை போல லட்சக்கணக்கில் செலவழித்து அரைப்பக்கத்துக்கு தினசரிகளில் விளம்பரங்களும் கொடுத்து கொண்டாடி மகிழ்கிறது. மாட்டிறைச்சி சாப்பிட்டால் ஐந்தாண்டு சிறைதண்டனை என்பது என்ன மாதிரி நாஸித்தனம்.

மராட்டியத்தில் ‘’மாட்டிறைச்சிக்கு தடை’’ என்றால் வெறும் பசுவின் இறைச்சிக்கு மட்டுமல்ல தடை, காளை, எருது, இளங்காளை, கன்றுக்குட்டி என எதையுமே வெட்டவும் தின்னவும் சமைத்துக்கொடுக்கவும் முடியாதபடி சட்டம் போட்டிருக்கிறார்கள். எருமைகளை மட்டும் வெட்டிக்கொல்லலாமாம் , ஏன் என்றால் எமனின் வாகனங்களான கறுத்த எருமைகள் புனிதமானவை கிடையாதாம்! (இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் எருமைகளை உட்கொள்ளுவோர் அளவு வெறும் 25 சதவீதம்தான்.)

மராட்டியத்தில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களின் முக்கால்வாசிபேர் தலித்துகளும் ஆதிவாசிகளும் இஸ்லாமியர்களும்தான். இப்போது அப்பிரிவினருக்குத்தான் ஆப்பு வைத்திருக்கிறது அம்மாநில பிஜேபீ அரசு. இத்தடைக்காக கடந்த இருபதாண்டுகளாக விடாப்பிடியாக போராடியிருக்கிறார்கள். தொடர்ந்து இம்மாநிலத்தில் மாடுகளை வெட்டுவதற்காக எடுத்துச்செல்லும்போது வண்டிகளை மடக்கியும் ஓட்டுனர்களை தாக்கியும் அடாவடிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவன ஊழியர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

சென்ற மாதம் கூட இதுமாதிரி பத்து நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இதையடுத்து அம்மாநில முதல்வர் நல்ல பிள்ளைபோல ‘’மாட்டிறைச்சி வியாபாரிகளின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு இப்போது அவர்களுடைய பிழைப்பிற்கே மங்களம் பாடியிருக்கிறார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி விற்பதில் மட்டுமல்ல அதுசார்ந்த தோல் பதனிடுதல் மாதிரி தொழில்களிலும் ஈடுபட்டுள்ள அத்தனை இஸ்லாமியர்களும் இதன்வழி நேரடியாக பாதிக்கப்படுவர். மற்ற இறைச்சிகளின் விலை தாறுமாறாக உயரும் இது அம்மாநில நடுத்தர வர்க்கத்தினரை வெகுவாக பாதிக்கும். (தமிழ்நாட்டில் ஏன் மட்டன் விலை அதிகமாக இருக்கிறதென்பது இப்போது புரிகிறதா?).

இதையெல்லாம் தாண்டி இந்திய அளவில் மாட்டிறைச்சி உற்பத்தியில் இருபத்தைந்து சதவீத பங்கு மகாராஷ்டிராவிலிருந்துதான் கிடைக்கிறது. இனி இந்தத்தடையால் கறுப்புச்சந்தையின் வீச்சு அதிகரிக்கும். ஏற்கனவே இந்திய அளவில் இருக்கிற தடைகளால் முப்பதாயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத மாட்டிறைச்சி கூடங்கள் இந்தியா முழுக்க இயங்குகின்றன, இங்கெல்லாம் மாடுகள் மிகமோசமான முறையில் நடத்தப்படுகின்றன. இவற்றை அரசால் கண்காணிக்கவும் முடியாது. இவற்றின் பின்னணியில்தான் மேற்சொன்ன அல்கபீர் அராபியன் மாதிரி நிறுவனங்கள் இயங்குகின்றன.

எல்லாவித சட்ட நெறிமுறைகளின் படி கண்காணிப்பில் இருக்கிற மாட்டிறைச்சி கூடங்களின் எண்ணிக்கை இந்திய அளவில் வெறும் மூவாயிரம்தான்! இனி ச.வி.மாட்டிறைச்சி கூடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். நல்ல மாட்டிறைச்சிக்கு தட்டுபாடுகள் உண்டாகும். கொல்லப்படாத மாடுகளை வைத்து பராமரிக்க முடியாத விவசாயிகள் அவற்றை சாலைகளில் அநாதைகளாக அனுப்பலாம், அதனால் விபத்துகள் பெருகும். இன்னொருபக்கம் அவையே உணவின்றி பிளாஸ்டிக் குப்பைகளை தின்று செத்துப்போகும். அல்லது ஆர்எஸ்எஸ் புனிதர்கள் இவற்றையெல்லாம் கைப்பற்றி தீவனம் போட்டு காப்பாற்றினாலும் அம்மாநிலத்தில் தீவனப்பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உண்டு.

இந்த தடைக்கு பின்னால் இருப்பது வெறும் ஜீவகாருண்யம்தான், அந்த மாடுகள் எவ்வளவு புனிதமானவை தெரியுமா? அவை இந்துக்களுக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அவற்றை எவ்வளவு மோசமாக வெட்டுகிறார்கள் தெரியுமா? என்பது மாதிரி கேவலமான வாதங்களை ஆங்காங்கே வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்துத்வர்கள். இவர்களுடைய ஜீவகாருண்யதில் எருமைகள் வராதா, எமன் வாகனம் என்றால் இளக்காரமா? ஆடுகளும் கோழிகளும் பன்றிகளும் வராதா? முட்டை என்ன கணக்கில் சேரும் அரசே முட்டை தின்பதை வலியுறுத்தி சச்சின் தெண்டுல்கரை வைத்து விளம்பரமெல்லாம் போடுகிறதே? மற்ற எந்த விலங்குகளையும் விட கோழிகளைதான் நம் நாட்டில் மிக மோசமான முறையில் கையாளுகிறார்கள், அதையெல்லாம் காக்க வேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா? பண்ணுவது அப்பட்டமான பேரினவாத அரசியில், அதை மூடி மறைக்க எதற்கு ஜீவகாருண்ய முகமூடி? இத்தடையால் யாருக்கு பாதிப்பு என்பது கூட அல்லது குறிப்பிட்ட எந்த சமூகத்தினருக்கு என்பதும்கூட தெரியாமல்தான் தடைவிதிக்கிறதா ஓர் அரசு? ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாகவே இவ்வளவு ஆட்டம் இன்னும் அடுத்த நான்காண்டுகளின் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?

சென்ற மாதம்கூட ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட போது, ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் அவரவர் மாடுகளை கேரளாவுக்கு அடிமாடுகளாக அனுப்பிவிட தீர்மானித்தனர். ஆனால் ராமகோபாலன்தான் அந்த மாடுகளின் மீது பரிதாபப்பட்டு அதையெல்லாம் கொண்டு போய் தன்னுடைய கோசாலையில் வைத்து பராமரிக்கிறார். என்னே ஜீவகாருண்யம்! இதேபோல தமிழ்நாடு முழுக்க வெட்டப்படும் ஆடுகளையும் கோழிகளையும் கூட தன்னுடைய கோசாலையில் கொஞ்சம் இடம் ஒதுக்கிக் காப்பாற்றலாம். ராமகோபாலனை பின்பற்றி ஊரெங்கும் இருக்கிற ஆர்எஸ்எஸ் அரைடிராயர்களும் தங்களுடைய இடங்களில் வெட்டப்படும் கோழி ஆடுகளை காப்பாற்றி புண்ணியம் பெறலாம். மாடுகளை காப்பாற்றுவதால் கிடைக்கிற புண்ணியத்தில் பாதியோ கால்வாசியோதான் ஆடுகளையும் கோழிகளையும் காப்பாற்றினால் கிடைக்கும். ஆனால் அப்படி காப்பாற்ற ஆரம்பித்தால் சன்டே மதியம் என்னத்தை தின்பதாம் என்கிறார்கள் ஆர்எஸ்எஸ் ஆர்வலர்கள். கரகெட்தானே.




03 March 2015

சாந்தி தியேட்டர்



அண்ணா சாலை சாந்தி தியேட்டர் இடிக்கப்படவிருக்கிறது. அந்த தியேட்டரில் எண்ணற்ற மொக்கைப்படங்களை பார்த்திருக்கிறேன். சிறுவயதில் மன்னன் திரைப்படம் பார்த்ததிலிருந்தே வாழ்க்கையில் இந்த தியேட்டருக்கு ஒருமுறையாவது போய்விட வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். அதுவுமில்லாமல் சிவாஜி கணேசனுடைய திரையரங்கம் என்பதும் ஆர்வத்தை தூண்டியிருந்தது. சென்னை வந்த பிறகு அங்கே ரெகுலர் கஸ்டமராக இருந்திருக்கிறேன்.

இத்திரையரங்கில் சில நல்ல படங்களையும் எப்போதாவது பார்த்ததுண்டு (சுப்ரமணியபுரம், சந்திரமுகி, சிவாஜி). கடைசியாக ‘’என் நெஞ்சை தொட்டாயே’’ என்கிற கொடூரமான படத்தை நாலைந்து பேரோடு (அந்த நால்வரில் படத்தின் இயக்குனரும் இருந்தார்) சாய்சாந்தியில் பார்க்க நேர்ந்தது. 2008 தொடங்கி கடந்த ஏழு ஆண்டுகளில் எப்படியும் யாருக்குமே தெரிந்திராத இதுமாதிரியான படங்கள் ஐம்பதையாவது பார்த்திருப்பேன். மொக்கைப்படம் பார்ப்பதற்கென்றே இருக்கிற திரையரங்குகளில் வுட்லேன்ட்ஸ், கிருஷ்ணவேணி,அண்ணா வரிசையில் சாந்திக்கு கடைசி இடம்தான்.

சாந்தி தியேட்டர் வாசலிலே இருக்கிற சுரங்கப்பாதையில்தான் சரோஜாதேவி கதைகள் கொண்ட மட்டிப்பேப்பர் குட்டி புக்குகள் கிடைக்கும். அதே இடத்தில் பாலியல் தொழிலும் நடந்துகொண்டிருக்கும். இந்த மேற்படி காரியங்களுக்கு யாராவது வழிகேட்டால் சாந்தி தியேட்டரைத்தான் முன்பெல்லாம் குறிப்பிடுவேன். கஞ்சா கூட முன்பு இந்த சுரங்கத்தில் கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போதும் கிடைக்கிறதா தெரியவில்லை.

சாந்தி தியேட்டரின் நுழைவாயிலுக்கு வலது பக்கம் ஒரு ஈரானி டீக்கடையும் டாஸ்மாக்கும் உண்டு. அதே கட்டிடத்தின் மேல்தளத்தில் முன்பு டான்ஸ் பார் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. சின்னதாக உடையணிந்துகொண்டு ஆடும் பெண்கள் மீது கத்தை கத்தையாக ஐந்துரூபாய் பத்து ரூபாய் கட்டுகளை அப்படியே விசிறி அடிக்க அரையிறுட்டில் அந்தப்பெண்கள் பாவமாக ஆடிக்கொண்டிருப்பார்கள்.

இத்தியேட்டருக்கு வருகிற இளம்வாலிபர்களில் பாதிபேர் வாசலில் இருக்கிற டாஸ்மாக்கில் தாகந்தணிந்த பின்புதான் உள்ளேயே வருவார்கள். இன்றைய மால் காவலர்கள் போல இல்லாமல் குடித்தவர்களை உள்ளே அனுமதித்துவிடுவார்கள். இதனாலேயே எந்த திரைப்படத்தையும் இந்தத்திரையரங்கில் உங்களால் நிம்மதியாக பார்க்க முடியாது. படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓய் ஓய் என்று பின்னால் தூரத்திலிருந்து சப்தம் கேட்கும், திரும்பி பார்த்தால் இரண்டு குரூப்களுக்குள் அடிதடி ரகளையாகி சீட்டு மேல் ஏறிநின்று த்தா குத்துடா அவன புடுச்சு உட்ரா என்பது மாதிரி சப்தங்களும் சப்பு தொப்பு என அடிவிழும் ஓசைகளும் கேட்கும். ஆனால் இந்த திரையரங்கின் சிறப்பே என்ன நடந்தாலும் படத்தை நிறுத்த மாட்டார்கள், இதனால் பார்வையாளர்களும் என்ன நடந்தாலும் அதைப்பற்றி பிரக்ஞையே இல்லாமல் படம் பார்ப்பார்கள். அதற்கு பிறகு சில நிமிடங்கள் கழித்து போலீஸ் வந்துதான் பிரச்சனையை சரி பண்ணும்.

மற்ற திரையரங்குகள் போல இல்லாமல் ஒரு நீல நிற தொடர்விளக்கு சாந்தி தியேட்டரின் உட்பகுதியில் நிறைந்திருக்கும். அது நமக்கு ஒரு எரோடிக் உணர்வைத்தரும். சந்திரமுகி திரைப்படம் அங்கே பல ஆண்டுகள் ஓடியபோது, இந்தத்திரையரங்கம் காதலர்களுக்கு புகலிடமாக விளங்கியிருக்கிறது. வெறும் காதலர்கள் மட்டுமல்லாது கள்ளக்காதலர்களும் வந்து குவிவார்கள். மூலைக்கு மூலை காமக்களியாட்டங்கள் களைகட்டும். இதைபார்க்கவே அப்போதெல்லாம் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சந்திரமுகியை பார்க்க கிளம்புவார்கள். சந்திரமுகி அல்லாத சுமாரான மொக்கைப்படங்களுக்கென்றால் சாய்சாந்திதான் சிறந்த இடம். சாந்தி தியேட்டரின் உள்ளேயே இருக்கும் குட்டிதியேட்டர். விளக்கு எரிந்தாலும் கூட இதன் மூலைகள் எந்நேரமும் கும்மிருட்டாக இருக்கும். உள்ளே நீங்கள் யாரோடு என்ன சேட்டைகள் செய்தாலும் பக்கத்து சீட்டு ஆட்களாலும் கூட பார்க்க முடியாது. இதனாலேயே காதலர்களின் மிகச்சிறந்த தேர்வாக சாய்சாந்தி விளங்கியுள்ளது.

கடைசியாக பார்த்த ‘’என் நெஞ்சைத்தொட்டாயே’’ படத்திற்கும்கூட என்னோடு வந்திருந்த மீதி இருவரும் காதலர்களே. காதலர்களை பார்த்தால் டிக்கட் காரரே கார்னர் சீட் கொடுத்துவிடுவார். அல்லது சாய்சாந்திக்கு டிக்கட் போட்டுவிடுவார். காதலர்கள் பலருக்கும் சாய்சாந்தி தியேட்டர் ஆல்மோஸ்ட் பள்ளியறையாகவே இருந்திருக்கிறது. அதிக செலவு வைக்காத சீப் அன் பெஸ்ட் பள்ளியறை. இனி அக்காதலர்கள் எங்கே போவார்கள் என்ன செய்வார்கள். எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் முதலான மால்களுக்குள் நுழைந்தால் சொளையாக நானூறு ஐநூறு ரூபாயை பிடுங்கிவிடுவார்கள் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் துடிக்கிறது.

திரையரங்க நுழைவாயில் எப்போதும் பெரிய கட்அவுட் அலங்கரிக்கும். அதில் கடைசியாக விக்ரம்பிரபுதான் நின்றுகொண்டிருந்தார். அதற்குமுன் யார் என்று நினைவில்லை. ரஜினியின் கட் அவுட்தான் அதிக காலம் (நான்பார்த்ததில்) இருந்தது. அதுபோலவே அங்கே டிக்கட் கவுண்டருக்கு பக்கத்தில் தியேட்டர் மேனேஜர் வொயிட் அன் வொயிட்டில் நிற்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் உடன் வருகிறவரிடம் இவருதான் மன்னன் படத்துல வருவாரே என்று காட்டிச்சொல்வதுண்டு.

சாந்தி தியேட்டர் வாசலில் எப்போதும் சிவாஜியை நினைத்து வருந்துகிற அவருக்காக ஏங்குகிற ரசிகர்களின் பேனர்களும் போஸ்டர்களும் அலங்கரிக்கும். சிவாஜி ரசிகர்கள் கடைசியாக விக்ரம்பிரபுவுக்கு கூட போஸ்டர் ஓட்டியிருந்தார்கள். இனி அவர்களெல்லாம் எங்கே போய் போஸ்டர் ஓட்டி தங்களுடைய தாகத்தை தணித்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. இவர்களைப்போலவே அருகிலிருக்கிற அண்ணா திரையரங்க வாசலில் கமலஹாசன் ரசிகர்கள் சிலர் தொடர்ச்சியாக எதற்கெடுத்தாலும் உலக நாயகனே ஆஸ்கர் நாயகனே கண்டங்கள் கண்டுவியக்கும் என்றெல்லாம் போஸ்டர் ஓட்டுவார்கள். கடைசியாக சன்டிவியில் கமல் வாரம் கொண்டாடியபோதுகூட அதற்கும் போஸ்டர் ஓட்டி சன்டிவிக்கு நன்றி தெரிவித்திருந்தார்கள். அதிக வயதான வயோதிக சிவாஜி ரசிகர்கள் பழக்கதோசத்தில் அண்ணா திரையரங்க வாசலில் போஸ்டர் ஓட்டி குறைந்த வயதான வயோதிகத்தை நெருங்கும் கமல் ரசிகர்களுடன் மோதலாம்.

இத்திரையரங்கத்தின் பார்க்கிங் பகுதியில் சிவாஜி கணேசன் இதுவரை நடித்த அத்தனை படங்களின் பட்டியலை மொழி, வருடம், ஓடிய நாட்கள் உள்ளிட்ட விபரங்களோடு கல்வெட்டாக வெட்டி வைத்திருந்தார்கள். இனி அதை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. உடைக்காமல் எடுத்து அன்னை இல்லத்தில் பதித்துவிடுவார்களாயிருக்கும். இங்கே அந்தக்காலத்தில் சிவாஜியின் தெய்வமகன், கர்ணன், வசந்த மாளிகை முதலான திரைப்படங்கள் வெளியான நேரத்தில் எந்த அளவுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதை சிலர் சொல்லியும் வாசித்தும் தெரிந்திருக்கிறேன். ச்சே அந்தகாலத்தில் நாம் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்.

கர்ணன் திரைப்படம் (அதுதானா தெரியவில்லை ராஜராஜசோழனாகவும் இருக்கலாம்) வெளியான சமயத்தில் தியேட்டர் வாசலில் மிகப்பெரிய அரண்மனை போன்ற செட் வைத்திருந்தார்களாம். வெளியூரிலிருந்தெல்லாம் அந்த செட்டை பார்க்கவே ஆட்கள் வந்து குவிந்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச்செல்வார்களாம். கோவையில் கூட சிலர் அந்தகாலத்துல நாங்க நடிகர் திலகம் படம் ரிலீஸ் அன்னைக்கு சென்னைல அசெம்பிள் ஆகி சாந்தி தியேட்டர்ல முதல் ஷோ பாப்போம் என்று அந்தக்கால நினைவுகளை பகிர்ந்துகொள்வதுண்டு. இத்திரையரங்கம் இடிக்கப்படுவதை கேள்விப்பட்டபோது ஒரு விஷயத்திற்காகவே வருந்தினேன். இங்கே ஒருமுறையாவது இந்தத்திரையரங்கில் ஒரு சிவாஜி படத்தையாவது அவருடைய இக்காலத்து ரசிகர்களோடு பார்த்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவேயில்லை.




02 March 2015

எங்கெங்கு காணினும் அம்மாடா


தமிழ்நாட்டில் மக்கள் முதல்வரை வாழ்த்த யாருக்குமே வயதில்லை. எல்லோருமே விழுந்து புரண்டு குப்புறக்கா குனிந்து வணங்க மட்டும்தான் செய்கிறார்கள். அதிமுகவில் தொண்டர்களே கிடையாது போல! எல்லோருமே அம்மாவின் ‘’உண்மை விசுவாசிகள்’’தான். அக்கட்சியில் இருக்கிற 67வயதிற்கும் மேற்பட்ட ‘’தொண்டர்’’களுக்கெல்லாம் விஆர்எஸ் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியிருப்பார்களோ என்கிற கேள்வியோடு பேருந்தில் அமர்ந்திருந்தேன். சென்றவாரம் தேனி சென்றிருந்தேன். திண்டுக்கல் வழியாக தேனிக்கு பேருந்துப்பயணம். (அஃபீசியல் முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான பெரியகுளம் வழியாக.)

வழியெங்கும் எங்கு பார்த்தாலும் தாடைக்கு முட்டுக்கொடுத்தப்படி சன்னமாக புன்னகைக்கிறார் மக்கள் முதல்வர். பச்சை வண்ண பின்னணியில் குங்குமக்கலர் சேலையில் தகதகவென ஜொலிக்கிறார். மற்ற கட்சியினர் போல (குறிப்பாக அழகிரி மற்றும் பாண்டிச்சேரி என்ஆர் காங் போல ) அதிமுகவினர் கிராபிக்ஸ் கலக்கல் பண்ணுவதில்லை. தலைமையின் கறாரான உத்தரவாக இருக்கலாம்.

இந்த பேனர்களில் சென்னையிலிருந்து மதுரை வரை எங்கும் ஒரே மாதிரி புகைப்படங்கள் ஒரே மாதிரி வாசகங்கள்! பத்தடிக்கு பதினைந்து பேனர்கள் வீதம் திண்டுக்கல்லில் தொடங்கி தேனி வரைக்குமே குறைந்தது இரண்டாயிரம் பேனர்களையாவது கடந்திருப்பேன். அப்படியென்றால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் வைக்கப்பட்ட பேனர்களை எண்ணினால் ஏதாவது கின்னஸ் ரெகார்டுகள் கிடைக்கலாம். ஆட்சியிலிருக்கும்போதுதான் இதுமாதிரி நிறைய சாதனைகள் செய்யமுடியும் என்பதால் இதை யாராவது பரிசீலித்து கணக்கெடுப்பு நடத்தி...

பெரியகுளம் பகுதியில் இரண்டாயிரம் ப்ளஸ் பேனர்களில் ஒன்றில் கூட ஒ.பன்னீர் செல்வம் என்கிற பெயருக்கு கீழே தமிழக முதல்வர் என்கிற சொல் இடம்பெறவில்லை. ‘’கழக பொருளாளர், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்’’ என்கிற வாக்கியங்கள் மட்டுமே இடம்பிடித்திருந்தன. ஆனால் மக்கள் முதல்வருக்கு மட்டும் மறக்காமல் ''மாண்புமிகு'' போட்டு வைத்திருக்கிறார்கள்! இது சட்டப்படி குற்றம். காரணம் மாண்புமிகு என்பது திரு, திருமதி, செல்வி, சூப்பர்ஸ்டார், சின்ன தளபதி, குட்டிதளபதி போல யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்கிற பட்டம் கிடையாது. அதை இன்னார்தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற நெறிமுறை இருக்கிறது. ஆனால் பாருங்கள் தமிழ்நாட்டில் ஒருவருக்கும் அது தெரியாது.

போகட்டும், ஆனால் முதல்வராக இருந்தும்கூட தான் டீக்கடைவைத்து பிரபலமான சொந்த ஊரில் கூட தன் பெயருக்கு பின்னால் முதலமைச்சர் என்று போட்டுக்கொள்ள முடியாத துர்பாக்கியம் மிகவும் துயரகரமானது. ஆனாலும் மாண்புமிகு முதல்வர் (ஓபிஎஸ்) மிகவும் நல்லவர். நான் தேனி சென்றபோது அங்குதான் இருந்தார். அம்மாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிக்கொண்டிருந்தார். தேனியில் 122 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க சென்னையிலிருந்து வந்திருந்தார். இந்த திருமணத்தில் ஜோடிகளுக்கு ஒருலட்ச ரூபாய் பணம், சீர்வரிசை, கட்டில் பீரோ ப்ரிட்ஜ், நான்கு பவுனில் தாலி, தலா ஒரு பசுமாடு என்று ஜமாய்த்திருக்கிறார்கள். என்னுடைய கணக்கில் ஏதாவது விட்டுப்போயிருக்கலாம். ஆனால் குறைவில்லை. அள்ளிக்கொடுப்பதில் அதிமுகவினருக்கு நிகராக ஆள் கிடையாது.

நல்ல காரியம் நன்றாக நடத்தினார்கள். ஆனால் அதென்ன 122? அந்த எண்ணிக்கைதான் பயங்கரமாக குழப்பியடித்தது. ம.முதல்வருக்கு (ஜெ) வயது 67, ஆறு ப்ளஸ் ஏழு பதிமூன்று. ஒருவேளை 67 ப்ளஸ் 67 ஆக இருக்குமோ என்றால் அதுவும் இல்லை. அவருடைய பிறந்த தேசி கூட 24தான். எப்படி கண்டைந்தார்கள் இந்த 122ஐ என்று ஒரே குழப்பமாகிவிட்டது. மதுரைப்பக்கம் 113 பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணும் மிகுந்த குழப்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. அம்மாவின் பிறந்தநாளுக்கும் இந்த எண்களுக்கும் என்ன தொடர்பு என்பது புரியாமலேயே சுற்றிக்கொண்டிருந்தேன்.

ஒரு அரசியல் பிரமுகரோடு ஊர் சுற்றும் வாய்ப்புக்கிடைக்க அவரிடம் நிறைய பேசிக்கொண்டே பைக்கில் திரிந்தேன். அவர் அமைதியாக அதிமுகவினரின் சைலன்ட் ஊழல்களை மறைமுகமாக நடக்கும் உள்ளடி வேலைகளை சொல்லிக்கொண்டு வந்தார். சென்ற ஆட்சியில் திமுகவினர் செய்ததைப் போல பப்பரக்காவென்று நில அபகரிப்பு, கட்டை பஞ்சாயத்து, வீதிகள் தோறும் மாமூல் வசூல் மாதிரி விஷயங்களில் ஈடுபடுவதில்லை மிகவும் கண்ணியமாக வெளியில் தெரியாதபடிக்கு கடமையை செய்கிறார்கள் என்றார்.

‘’அப்பாவி டீக்கடை அரசியல்வாதி’’ குறித்தும் (மோடி அல்ல) நிறைய அதிர்ச்சிகரமான விஷயங்களை சொன்னார். ‘’அவர் பாக்கதாங்க அப்பாவி, ஆனா ஆள் ரொம்ப பேஜாரானவரு… தேனி பெரியகுளத்துல அவருக்கு எவ்ளோ சொத்து இருக்குது தெரியுங்களா’’ என்றவர், ஒரு ட்ராவல்ஸ் பேரை சொல்லி அந்த ட்ராவல்ஸ்ல இவர் பேர்ல பத்து பஸ் தனியா ஓடுது என்றவர் போகிற வழியில் தேனியிலிருந்து கம்பம் போகும் சாலையில் பிசி.பட்டி தாண்டியதும் போஜராஜன் மில்ஸை காட்டினார்.

சிதிலமடைந்து களையிழந்து காணப்பட்ட அந்த மில்லை கிட்டத்தட்ட மூடிவிட்டார்களாம். அதை தன்னுடைய பினாமி பெயரில் திருவாளர் அப்பாவிதான் வளைத்துப்போட்டிருக்கிறார் என்றார். யாரோ எனக்குள் ஏறி மிதித்து ப்ரேக் அடித்தது போல இருந்தது. காரணம் அந்த இடம் எப்படியும் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ளது. அந்த ஏரியாவில் ஒரு சென்ட் விலை ஏழு முதல் எட்டு லட்சம் வரைக்கும் போகிறது என்று அதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்புதான் அறிந்திருந்தேன்.

ஆயிரம் ஏக்கருக்கு என்ன வரும் என்று கணக்குப்போட்டு பார்த்துக்கொள்ளலாம். அந்த இடம் போடிக்கு திரும்பும் முக்கிய சாலையில் இருப்பதால் அந்த ஏரியாவை இன்னும் டெவலப் ஆக்கிவிட்டால் கொள்ளை லாபம் பார்க்கலாம்! ‘’என்னங்க அவரைப்போய் இப்படி சொல்றீங்க ஆள் பாக்க எவ்ளோ பவ்யமா நல்லவரா இருக்காரு, இப்படிலாம் பேசாதீங்க யாராவது புடிச்சி வெட்டிட போறாங்க’’ என்று அறிவுரை சொன்னேன். இது எல்லாருக்குமே தெரியும் இந்த ஏரியால நீங்கதான் அதிர்ச்சியாவுறீங்க என்றார்.

ஊர்முழுக்க எங்கு பார்த்தாலும் ஒரே பாட்டுதான். ‘’தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக’’ பாடல் அதிமுகவினரின் தேசியகீதமாக மாறியிருக்கிறது. எல்லா ஊர்களிலும் அந்தப்பாடலை ரிப்பீட்டில் ஓட விடுகிறார்கள்.

ம.முதல்வரின் பிறந்தநாளுக்காகவும் அவர் மீண்டும் அபீசியல் முதல்வராகவும் வேண்டிக்கொண்டு தொண்டர்கள் பண்ணின எழுச்சிமிகு சாகசங்களை பத்திரிகைகளில் பார்த்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஹூசைனி வேறு கைகளில் ரத்தம் வராமல் ஆணி அடித்து ஒரு பென்ச்மார்க்கை உருவாக்கிவிட்டு போய்விட்டார். அதனால் ஆளாளுக்கு விசித்திரமான வேலைகளில் இறங்கி வெறித்தனமாக தங்களுடைய எக்ஸிஸ்டென்ஸை வெளிப்படுத்தியதைக் காணமுடிந்தது. அதிலும் அமைச்சர் பா.வளர்மதி கையில் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை செய்ததையெல்லாம் பார்க்கும்போது கண்களில் ஜலம்கண்டுவிட்டது. தீச்சட்டிக்கு இணையாக அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் அந்தர்பல்டி அடித்தல், மண்சோறு சாப்பிடுதல், அங்கபிரதட்ணம் முதலான விஷயங்களையும் கூட சிலர் செய்திருக்கிறார்கள். அவரவர் திராணிக்கேற்ற படி எல்லோருமே எதையாவது செய்கிறார்கள். எதுவுமே செய்யமுடியாதவர்கள் பெரிய எண்ணிக்கைகளில் யாகம் வளர்ப்பதும், கல்யாணம் பண்ணி வைப்பதுமாக அம்மாவிடம் புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள்.

தேனியில் இருந்த இரண்டு நாளும் உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை (122) கடைசியில் ஒரு அதிமுக ஆளிடமே கேட்டேன். ப்ப்ஊ…. இதானா அம்மாவோட ராசி நம்பர் அஞ்சு அதுவராப்ல ஒன் ட்வென்டி டூனு பிக்ஸ் பண்ணிருக்கோம். நான்கூட எங்க ஊர்லருந்து ஒரு ஜோடிய சேர்த்துவுட்டேன் , இன்னைக்கு காலைல திடீர்னு ஒரு ஜோடி வரலனுடுச்சு.. அப்புறம் மதியத்துக்குள்ள புது ஜோடிய தேடிகண்டுபுடிச்சி ரெடி பண்ணிட்டோம்ல, நமக்கு நம்பர் முக்கியமில்ல ஜி’’ என்று பெருமிதமாக சொன்னார். ‘’ஓ இப்போ அதான் லக்கி நம்பரா.. எப்போ மாத்தினாங்க, முன்னால ஒன்பதாம் நம்பர்தானே இருந்துது’’ என்றேன். அவருக்கு தெரியவில்லை. யோசித்துக்கொண்டேயிருந்தார்.

***********

தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ஊர் கேபிள் டிவியிலும் ட்யூன் பண்ணினால் முதல் சானலாக தூர்தர்ஷன் அல்லது பொதிகை வருவதில்லை. அதற்கு பதிலாக அம்மாவின் சாதனைகளை மட்டுமே சொல்கிற ஒரு பெயிரற்ற சானல் இருபத்திநான்கு மணிநேரமும் அம்மா அம்மா அம்மா என்று மூச்சுவாங்க ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் கூட செட் டாப் பாக்ஸ் இல்லாத கேபிள் இணைப்புகளில் இதுதான் முதல் சானல்! (கோவை, தேனி , மதுரை, திருச்சியிலும் விசாரித்ததில் இதுதான் பஸ்ட்!)