Pages

05 December 2012

என்னாச்சி?





நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கிற தலைப்பே ஒருமாதிரி பின்னவீனத்துவ இலக்கியத்தரமாக இருந்தாலும், படம் என்னவோ சென்னை வாழ் இளைஞர்களின் இரண்டு நாள் கும்மாங்குத்து! அஞ்சு நிமிஷம் கூட கேப் கொடுக்காமல் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். சில காட்சிகளில் சிரித்து சிரித்து போதும்டா விடுங்கடா முடியல நெஞ்சு வலிக்குது என்று கதறுகிற அளவுக்கு காமெடி அல்லோலகல்லோல படுது.

‘’என்னாச்சி!’’

படம் முழுக்க இந்த வசனம் நூற்றுக்கும் மேற்பட்ட முறை வருகிறது. ஒவ்வொருமுறையும் அது சொல்லப்படுகிற போதெல்லாம் சிரிப்பலைகளில் தியேட்டரே குலுங்குது! அது ஒன்றும் அவ்வளவு பிரமாதமான காமெடியான டயலாக்கோ ஹீரோயிசம் நிறைந்த பஞ்ச் டயலாக் கிடையாது. அட ஒரு நண்பேன்டா கூட கிடையாது. வெறும் சாதாரண ‘என்னாச்சி’ மட்டும் தான்.. அதுவும் ஒரே மாடுலேசனில் ஒரே எக்ஸ்பிரசனில் படம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் படத்தின் நாயகன் விஜய் சேதுபதியால் சொல்லப்படுகிறது..

இந்த என்னாச்சிக்கு ஒவ்வொரு முறையும் ஆடியன் சைடிலிருந்து வெவ்வேறுவிதமான ரிசல்ட், முதலில் ஆச்சர்யப்படுகிறார்கள். பிறகு சலித்துக்கொள்கிறார். பிறகு காமெடியாக சிரிக்கிறார்கள். இடைவேளையின் போது அச்சச்சோ என உச்சுக்கொட்டுகிறார்கள். இறுதியில் சஸ்பென்ஸில் நகங்கடிக்கிறார்கள். ஒரே ஒரு ஒத்தை வார்த்தைய வச்சுகிட்டு எவ்வளவு ரியாக்சன்ஸ் வாங்கிருக்காருப்பா இந்த டைரக்டரு என நினைத்துக்கொண்டேன்!

சப்பையான ஒரு கதை.. நான்கு நண்பர்கள் அதில் ஒருவனுக்கு கல்யாணத்துக்கு முதல்நாள் கிரிக்கெட் ஆடும்போது கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு மெடுலா ஆம்லேட்டாவோ என்னவோ அங்கே அடிபட்டு ஷார்ட் டைம் மெமரி லாஸ் வந்துவிடுகிறது. கஜினி சூர்யாவைப்போல ஆகிவிடுகிறான்.

அவனுடைய காதலும் அடுத்தநாள் கல்யாணமுமே மறந்துவிடுகிறது. சிக்கலில் மாட்டிக்கொண்ட மீதி நண்பர்கள் நாயகனை எப்படி சமாளித்து மணமேடை வரைக்கும் அழைத்துச்சென்று திருமணம் செய்துவைத்தார்கள் என்கிற சுமால் ஸ்டோரியை எடுத்துக்கொண்டு பிரமாதமாக திரைக்கதை பின்னியிருக்கிறார் படத்தின் இயக்குனர் பாலாஜி. இந்த ஆண்டில் தமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நம்பிக்கை தரும் இயக்குனராக தெரிகிறார்.

படத்தில் ஆங்காங்கே கொஞ்சமாய் ஹேங்ஓவர் படத்தின் வாடை அடித்தாலும் இது முற்றிலும் வேறு கதை.. வேறு களம். அதுபோக படத்தின் கேமராமேனுடைய உண்மை கதையாம்.. அதனால் நோ காப்பிபேஸ்ட் என்று நம்பலாம். வேறுவழியில்லை.

இயல்பான வசனங்கள், சிக்கலில்லாத யதார்த்தமான காட்சியமைப்புகள், மொத்தமாய் பத்து கதாபாத்திரங்கள், மிக குறைந்த பட்ஜெட், போரடிக்காத ஜாலியாக சொல்லப்பட்ட திரைக்கதை, மூன்றே லொக்கேஷன் என எல்லாமே கச்சிதம். சிரிக்க வைக்க வேண்டுமென்றே சொல்லப்படுகிற சபா நாடகங்களைப்போல இல்லாமல் திரையில் காட்சிகள் மூலமாகவே சிரிக்க வைத்திருப்பதை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். காமெடி வசனங்களே இல்லாமல் ஒரு காமெடிபடம் சாத்தியமாகியிருக்கிறது!

ஒருகட்டத்தில் அந்த நான்கு நண்பர்களுக்குள் நம்மையும் நம்முடைய நண்பர்களையும் கூட கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறோம்.. அவ்வளவு யதார்த்தமான பசங்க! இதே கதையை கண்ணீர் வர சோகமும் வன்முறையுமாக கூட மாற்றி பாலா,அமீர் ஸ்டைலில் சொல்லியிருக்கலாம். நல்லவேளை அப்படியெல்லாம் படமெடுத்து நம்மை பழிவாங்கவில்லை இயக்குனர். அவருக்கு கோடானுகோடி நன்றிகள்.

படத்தின் நாயகன் விஜய் சேதுபதிக்கு தொடர்ச்சியாக இது இரண்டாவது ஹிட்! மனுஷனுக்கு சுக்கிரதசை நடக்குதோ என்னவோ தொட்டதெல்லாம் ஹிட்டாகிறது. பீட்சாவில் கண்ணை உருட்டி உருட்டி பயந்து பயந்து நடித்தவர், இதில் பழசை மறந்து மூளை குழம்பி பித்து பிடித்தவராக ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறார். அதிலும் தன் காதலியையே பார்த்து ‘’ப்ப்பா பேய் மாதிரி இருக்காடா’’ என்று திரும்ப திரும்பப் பேசும்போது இந்த ஒரே ஒரு ரியாக்சனுக்காகவே விஜய் சேதுபதிக்கு ஏதாவது விருது கொடுக்கலாம்.

தொடர்ந்து இதுமாதிரி படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தால் தற்போது ஹிந்தியில் இவரைப்போலவே கலக்கிக்கொண்டிருக்கும் நவாசுதீன் சித்திக்கியைப்போல தமிழிலும் சொல்லிக்கொள்ளும்படியான நல்ல தேர்ந்த நடிகராக வலம்வருவார் என நம்பலாம்.
படத்தின் நாயகன் விஜய் சேதுபதிதான் என்றாலும் படம் முழுக்க அவரோடு அல்லாடும் பக்ஸ்,பஜ்ஜி,சரஸ் என்கிற மூன்று நண்பர்களுக்குத்தான் பர்பார்மென்ஸுக்கு நல்ல வாய்ப்பு. மூவருமே கனகச்சிதமாக பொருந்துகிறார்கள். புதுமுகங்கள் என்கிற உணர்வே வரவில்லை. இதில் பக்ஸாக நடித்தவர் உண்மைகதையில் நிஜமாகவே இடம்பெற்றவராம்!

படத்தில் ஹீரோயின் திரையில் தோன்றுவதே கிளைமாக்ஸுக்கு முன்னால்தான்.. (முன்னெல்லாம் இதுமாதிரி பாத்திரங்களுக்கு கௌரவ வேடம் அல்லது நட்புக்காக என்று பெயர்போடும்போது போடுவார்கள்.) பார்க்க ப்ளேபாய் படத்தில் நடித்த இளம் ஷகிலா ஜாடையில் இருக்கிறார். அவ்ளோதான்.

படத்தில் எல்லோருமே புதுமுகங்கள்தான் சிலரை நாளைய இயக்குனர் குறும்படங்களில் பார்த்திருக்கலாம். எல்லோருமே நிறைவாக செய்திருக்கிறார்கள். படத்தில் பாடல்களே கிடையாது என்பது இன்னொரு ஆறுதல். இசையமைப்பாளருக்கு கோ.கோ. நன்றி.

படத்தின் ஒரே குறை , படம் மூன்று மணிநேரம் ஓடுகிறது என்பதுதான். அதுபோக குறைவான லொக்கேசன்களில் படமாக்கப்பட்டிருப்பது ஒருவிதமான சீரியல் ஃபீலிங்கை கொடுக்கிறது. அதுபோக படம் முழுக்க ஒவ்வொரு காட்சியும் நிறுத்தி நிதானமாக ஆற அமர சொல்லப்படுவதால் இருபது அல்லது இருப்பத்தைந்து நிமிடங்கள் அடிஷனலாக ஓடுவதைப்போல ஒரு ப்பீலிங். ஆனால் போரடிக்காத மற்றும் சிரிக்கவைக்கிற திரைக்கதையால் அந்தக்குறைகூட பெரிதாக தெரியவில்லை.

படத்தில் வருகிற ஹீரோவைப்போல மண்டைக்குள் இருக்கிற பிரச்சனைகளை மறந்து ஒரு மூன்று மணிநேரம் ஜாலியாக சிரித்து மகிழ ஏற்றபடம். எதுமாதிரியும் இல்லாத ஒரு புதுமாதிரி சினிமா.. ஒரே வார்த்தையில் சொன்னால் ‘அட்டகாசம்!’ டோன்ட் மிஸ் இட்.