உலக குடிகாரர்களே...

>> 27 July 2010


அண்மையில் லத்தீன் அமெரிக்க தமிழ் எழுத்தாளர் (குடிகாரர்தான்!) டெல்லியில் குடித்த வோட்காவைப்பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். அப்படியே தேன் மாதிரி.. இளநீர் மாதிரி.. தண்ணிகலக்காம குடிச்சேன்.. அப்படியே சொர்ர்ர்ர்னு இறங்குச்சுப்பா, சும்மா கிருகிருனு ஏறிச்சுப்பா என்று சொன்னதுமே, அதைக்கேட்டுக்கொண்டிருந்த மற்ற நண்பர்களுக்கும் நட்டுகிச்சு! சென்னையின் எல்லா டாஸ்மாக்குகளிலும் வோட்காவைத் தேடினர்.. ம்ஹூம் நல்ல வோட்கா கிடைக்கவேயில்லை! ஆம் , எங்குமே நல்ல சரக்கு கிடைக்கவில்லை.. என்ன நடக்கிறது டாஸ்மாக்குகளில் ?

குடி குடியை கெடுக்கும்.. எந்த குடி யார் குடியை கெடுக்கும் என்பது குடிமகன்களுக்கே(மகள்களுக்கும்) தெரியும். குடும்பமான குடியிருந்தால் குடிப்பதற்கோ வழியில்லை! குடிப்பதற்கு மனமிருந்தால் பத்துமணிக்குமேல் கடையில்லை! அய்யகோ ஆயிரமாண்டு குடிகண்ட தமிழினமே பார் உன் பரிதாப நிலையை!
மைனாரிட்டி திமுகவின் ஆட்சியிலே வீதிகள் தோறும் டாஸ்மாக்குகள் பல்கி பெருகினாலும் , அங்கே கிடைக்கிற சரக்குகளில் தரமில்லை. ரெகுலர் கஸ்டமர்களுக்கு அக்கவுண்ட் வைத்துக்கொள்ளும் வசதியில்லை. குவாட்டர் அடித்தாலும் போதையில்லை. குவாட்டருக்கு மேலடிக்க உழைக்கும் தோழர்களிடமோ காசில்லை. அந்தோ பரிதாபம்! கண்களில் பீர் கசிகிறது

ஆஃபாயிலில் பெப்பர் இல்லை. ஏசிபாரில் தம்மடிக்க வசதியில்லை! வாட்டர் பாக்கட்டில் நல்ல வாட்டரில்லை.. சோடாவில் கேஸில்லை! அய்யோ..அம்மா... வயிறு பற்றி எரிகிறது.. மது குடிப்பதே கவலையை மறக்கத்தான்! இன்றோ ஆங்கே மதுகுடித்தால் கவலை! பத்து மணிக்குள் கடை மூடிவிடுவானே என்று போட்டது போட்டபடி கிடக்க ஓட வேண்டிய நிலைமை! செம்மொழி மாநாட்டுக்காக பல கோடி செலவழித்ததில் சில கோடிகளை போட்டு அரசே ஒரு மது தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்தால், வேலைவாய்ப்பும்,தரமான சரக்கும் கிடைக்குமே!

சிந்தித்துப்பாருங்கள் தோழர்களே! டாஸ்மாக்குகள் வருவதற்கு முன் எப்படியெல்லாம் குடித்து மகிழ்ந்தோம்! போதை தலைக்கேறி உருண்டு புரண்டோம்! சால்னா கடையில் மிளகாய் பஜ்ஜியோடு சரக்கடித்தோம்! குடல் வேகாமல் இருக்க குடல்கறி (போட்டி) தின்றோமே! சாக்கடைதோறும் வாந்தி எடுத்தோம்! சாலைதோறும் ‘பார்’ , காலையில் எழுந்தால் ஹேங்ஓவரில் தலையை பிடித்தபடி அலைந்தோமே! ஆறு மணிக்கே கதவு தட்டி கட்டிங் அடித்தோமே! இன்றோ அய்யகோ , எல்லாமே தலைகீழ்.
எவ்வளவு குடித்தாலும் போதை ஏறுவதில்லை என்கிற குற்றச்சாட்டை இன்றும் நேற்றும் முச்சூடும் கேட்டபடி இருக்கிறோம்! காரணம் என்ன , ஆல்கஹாலின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி திமுக அரசின் சதியால் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. நம்மை கூடுதலாக குடிக்க வைத்து , விற்பனையை அதிகரிக்கும் சதித்திட்டம் தோழர்களே!

டாஸ்மாக் பீரை குடிப்பதற்கு பதிலாக இரண்டு வாட்டர் பாக்கெட்டை வாங்கி குடிக்கலாம். அதிலே கூட ஓரளவு போதை கிடைக்கிறது! பாண்டிச்சேரியில் போய்ப்பாருங்கள் பீரென்றால் என்னவென்று அப்போதுதான் தெரியும்.. பீராம் பீரு!

பாரிலே வாந்தி எடுத்தால் அதிலேயே உருண்டு புரளுகிற பரிதாப நிலையை அல்லவா இந்த அரசு நமக்கு கொடுத்திருக்கிறது. எந்த டாஸ்மாக்கிலாவது எம்.ஆர்.பிவிலையில் சரக்கு கிடைக்கிறதா! அட நியாயவிலையில் சைடிஷ்தான் கிடைக்கிறதா? குடிப்பவர்கள் புகைத்து மகிழ சரியான விலையில் சிகரட்டும்தான் கிடைக்கிறதா? குடிப்பவர்கள் வசதியாக அமர நல்ல இருக்கைகள்தான் இருக்கிறதா? சொன்னால் சொன்ன நேரத்துக்கு குவாட்டர்தான் கிடைக்கிறதா?

சக குடிகாரர்களுக்கிடையே நிலவி வந்த நட்பு இன்று இருக்கிறதா? நாமுண்டு நம் குடியுண்டு என்றல்லவா வாழப் பழகியிருக்கிறோம். குடித்ததும் எல்லாவற்றையும் குளோஷிக்கொண்டு வீட்டை நோக்கி நடைபோட தொடங்கியிருக்கிறோம்.. ஒரு சண்டை உண்டா? வம்புண்டா? எத்தனை ஆண்டுகள் எத்தனை ஒயின்ஷாப் சண்டைகள், வம்புகள், நட்புகள்! அந்த காலமெல்லாம் போச்சே.. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் இந்த கொடுகோன்மை நிலை நீடிக்கும்.

நான் கேட்கிறேன் ஏனய்யா ஆட்சியாளர்களே.. நீங்களெல்லாம் குடிக்கவே மாட்டீர்களா? உங்களுக்கெல்லாம் குடலே இல்லையா? உங்களுக்கெல்லாம் போதையே ஏறாதா? குடிகாரர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொட்டாதீர்கள்.. குடல் வெந்துதான் சாவீர்கள்..
இந்த நிலை மாற , மைனாரிட்டி திமுகவின் சர்வாதிகார ஆட்சி ஒழிய , குடிகாரர்களின் உரிமைக்காக போராடுவோம் , மீண்டும் போதை தலைக்கேற குடித்து மகிழ புயலென திரண்டு வாருங்கள் தோழர்களே..

(இப்படிலாம் பதிவு போடுவதால் நீங்கள் என்னையும் உலக மகா குடிகாரன் என்று எண்ணக்கூடும் , குடிகாரர்களுக்காக குரல் கொடுக்க குடிகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை தோழர்களே!)

மற்றபடி இந்த பதிவை எழுத உத்வேகமாக இருந்த போஸ்டர்! மெயிலில் அனுப்பிய சக குடிகார நண்பருக்கு நன்றி! படத்தை சொடுக்கி பெரிதாய் பார்க்கலாம்! அதிலிருக்கும் கோரிக்கைகளை தயைகூர்ந்து படிக்கவும்.. அத்தனையும் பொக்கிஷங்கள்!கூட்டத்தில் கலந்து கொள்வது அவரவர் பாடு!

போஸ்டர்!

Read more...

கனவு வேட்டை

>> 23 July 2010





பறவைகளால் தொடர்ந்து துரத்தப்படுவதாய் விடாமல் கொத்தப்படுவதாய் சிறுவயதில் ஒரு கனவு. என்னால் இப்போதும் ஒரு சின்ன பறவையைக்கூட கைகளால் தூக்க முடியாது, கைகள் உதறும். பறவைகள் மீதான பயத்தை ஒரு கனவால் ஏற்படுத்த முடியுமா?

சில நாட்களுக்கு முன் எனக்கு ஓரளவு தெரிந்த உறவினர் ஒருவர் இறந்து போவதாக கனவு. அவர்மேல் எனக்கு எந்த மரியாதையோ அன்போ அதற்கு முன் கிடையாது. ஆனால் அந்த கனவுக்குப்பின் எல்லாமே தலைகீழ். அவர்மீது இனம்புரியாத அன்பு உள்ளே பரவுவதாய் உணர்ந்திருக்கிறேன். கனவால் அன்புகாட்ட வைக்க இயலுமா?

ஆல்பா தியானம் என்று ஒருவகை தியானமுறை உண்டு. வேலைதேடி அலைந்து கொண்டிருந்த போது கற்றுக்கொண்டது. இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட உறங்குவது. பின் வீட்டிலிருந்து இன்டர்வியூவுக்கு செல்வதாகவும், போகும் வழியில் என்ன இருக்கும், என்ன நிறத்தில் உடை? எந்த பேருந்து? டிக்கட் எடுப்பது தொடங்கி , டையை சரி செய்து கொள்வது, இன்டர்வியூவில் வரிசையில் காத்திருப்பது, உள்ளே மேலாளரிடம் பேசுவது,பின் வெற்றிபெறுவது , அந்த மகிழ்ச்சி, வீட்டில் அதை பகிர்ந்து கொள்வது, வெற்றிதரும் களிப்பில் துள்ளி குதிப்பது, என கற்பனையை விரிவாக்கி அரைமயக்கத்தில் வெற்றிக் கனவொன்றை காணவேண்டும். இவ்வளவையும் உங்களால் ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்கு காணமுடியும்! இந்த வகை தியானம் ஒருவகையில் எனக்கு பல வெற்றிகளை தேடித்தந்திருக்கிறது.

சிங்கப்பூர் சென்று திரும்பியிருந்த நண்பர் , அது குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். நாள்முழுக்க அதைப்பற்றியே சிந்தனை. அன்றைக்கு இரவே நானும் என் நெருங்கிய நண்பரும் சிறிய படகில் சிங்கப்பூர் செல்வதாக! கையில் காசில்லாத மாதக்கடைசி அது , சிங்கப்பூரில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எங்களுக்கு பணம் கொடுத்தனர். விதவிதமான அனுபவங்கள். சிறிய படகிலேயே நானும் நண்பரும் கனவு முழுக்க சிங்கப்பூரை சுற்றிக்கொண்டிருந்தோம். கனவு இன்னும் கூட கொஞ்சம் நீளாதா என ஏங்கவைத்தது. இப்போதெல்லாம் என்றைக்காவது காசு சேர்த்து சிங்கப்பூர் போய் விட வேண்டும் என்கிற வேட்கை எப்போதும் மனதிற்குள் இருந்துகொண்டே இருக்கிறது. கனவு என்பது வெறும் தொகுக்கப்பட்ட மாயதோற்றங்கள் மட்டுமல்ல , அது ஒரு ஐடியா!

சுவாரஸ்யமான ஐடியாக்களை ஆள்மனம் நினைவிலிருந்து மீட்டெடுத்து நனவாக்கிப் பார்க்க துடித்துக்கொண்டே இருக்கும். அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்தால் கனவை நனவாக்கிவிடுகிறது. கிட்டத்தட்ட சுவாரஸ்யமான நினைவுகளை எப்போதும் அசைப்போடுவோமே அதைப்போல! பயங்கரமான கனவுகள் ஆள்மனதில் பாதிப்பை உண்டாக்கலாம். கனவால் ஒரு லட்சியத்தை உருவாக்க முடியும். கனவால் பயத்தை உருவாக்க முடியும். கனவால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே சிதைக்க இயலும். அப்படிப்பட்ட என் கனவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்!

இன்செப்சன் (INCEPTION) திரைப்படமும் அதையே முன்வைக்கிறது. உங்களுக்குள் இருக்கும் ஐடியாவை . அல்லது உங்கள் மனதில் புதைந்திருக்கிற ரகசியத்தை , நான் கணினியில் உருவாக்கியிருக்கும் கனவுலகின் மூலம் , உங்கள் கனவுக்குள் புகுந்து திருட முடிந்தால், அல்லது அந்த ஐடியாவை உருமாற்றி , உங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தால்? சொல்வதற்கே மூச்சு வாங்குகிறதே! இப்படி ஒரு மிக மிக சிக்கலான ஒரு கதையை எடுத்துக்கொண்டு யாருமே நினைத்துப்பார்க்க முடியாத , கசாமுசாவென சிக்கிக்கொண்ட இடியாப்பத்தைப் போன்றதொரு திரைக்கதை அமைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன். முன்னதாக வெளியான இவருடைய படமான மெமன்டோவும் கூட இவ்வகை உளவியல் சார்ந்த சிக்கல்களை பேசிய சிக்கலான திரைக்கதையை கொண்ட திரைப்படமே! ஆனால் இன்செப்சன் அதைக்காட்டிலும் இன்னும் ஒரு படிமேலே!

ஜிக்-சா புதிர்களைப் போல ஒன்றுக்கொன்று பிணைந்து , அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கிற திரைக்கதையை பார்வையாளனே ஒருங்கிணைத்து ஒட்டவைத்து புரிந்து கொள்ளுகிற வகையில் எடுக்கப்படும் படங்களுக்கு பேர் போனவர் நோலன். கிட்டத்தட்ட ஸ்டான்லி குப்ரிக்கின் புகழ்பெற்ற படங்களில் இதே யுக்தியைக் காணலாம்.. படத்தின் காலக்குழப்பங்களை மிகச்சரியாக பயன்படுத்தியிருப்பது அதைக்காட்டுகிறது. கனவின் நீளம் தற்போதைய கால அளவினை விடவும் நீண்டதாய் இருப்பதை உணர்ந்திருப்போம். அதுவே கனவுக்குள் கனவாக இருந்தால் இன்னும் நீளும். நான்கு கட்ட கனவாக இருந்தால்... எவ்வளவு நீளும்.. கால அளவு நீண்டபடியிருந்தால் புவியீர்ப்பு விசை அதற்கேற்ப குறையுமென்கிறார் (அறிவியலாளர்கள்தான் விளக்கவேண்டும்)

கனவுகளை வேட்டையாடும் நாயகன் , நிர்பந்தத்தால் ஒரு தொழிலதிபரின் கனவுகளை மாற்றியமைக்கத் திட்டமிடுகிறான். அதற்காக ஒரு அணியை உருவாக்கி அதை சாதிக்க எண்ணுகிறான். கிட்டத்தட்ட நான்கு கனவுகளைத் தாண்டி அதை செய்ய முடியும். (கனவிற்குள் கனவிற்குள் கனவிற்குள் கனவு). அப்படி ஒரு முயற்சியில் ஏற்கனவே தன்னுடைய மனைவியை கனவுகளுக்கு தாரை வார்த்தவன். (நிஜ உலகை விட கனவுலகம் அழகாக இருக்கிறதென்று , அங்கேயே தற்கொலை செய்துகொண்டு கனவுலகம் எது நிஜ உலகம் எதுவென்று புரியாமல் கனவுலகிலிருந்து விடுபட நிஜ உலகத்தில் தற்கொலை செய்துகொண்டு சாகிறாள் , கனவுலகம் குறித்த ஐடியாவை அவளுக்குள் விதைத்தவன் நாயகன்) , இறுதியில் அவளுக்காக அவனும் கனவுலகிலேயே மாண்டுபோகிறான்.

இப்படிப்பட்ட கான்செப்ட்டை யோசிப்பதே மிகவும் கடினம். அதில் ஒவ்வொரு கனவிற்கு நடுவிலும் புவி ஈர்ப்பு, கால அளவு குறித்த சிக்கலான பிரச்சனையை சேர்த்திருப்பது திரைக்கதைக்கு மேலும் வலுசேர்க்கிறது. ஹோட்டல் அறையில் புவி ஈர்ப்பின்றி மொத்தமாக அனைவரும் மிதக்க கேமரா அப்படியே சுற்றுகிறது. ஸ்டேன்லி குப்ரிக் 2010 ஸ்பேஸ் ஒடிஸி திரைப்படத்தில் இதே மாதிரியான காட்சியை அமைத்திருப்பார். ( நீளமான வராண்டாக்களை காட்டுவது ஸ்டானிலியின் டிரேட்மார்க் )

யாருடைய கனவில் நாம் இருக்கிறோமோ அவருடைய கனவு உலகத்தில் அனைத்துமே கனவு காண்பவரின் உள்ளுணர்வு. மனிதர்கள்,சாலைகள்,மரங்கள்,வாகனங்கள் என.. நாயகனை எப்போதெல்லாம் வில்லன் சந்தேகிக்கிறானோ அப்பொதெல்லாம் அனைத்துமே அவனை நோக்கி திரும்புகின்றன. அவனுடைய சந்தேகம் தற்காப்பாக மாறும்போது மனிதர்கள் கனவுக்குள் நுழைந்தவன் தாக்க தொடங்குகின்றனர். இதை காட்சியாக நோலானால் மட்டுமே திரைக்குக் கொண்டுவர இயலும் என்று நினைக்கிறேன்.
படத்தின் இறுதிகாட்சி மிக முக்கியமானது. கனவின் கனவிற்குள் புதையுண்டு மாண்டு போகும் நாயகன் , மீளமுடியாத நினைவலைகளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமல் கனவுகளுக்குள்ளேயே வாழ்வதாக படம் முடிந்து போகிறது. கிட்டத்தட்ட கனவில் தற்கொலை செய்துகொண்டால் உண்மையில் கோமாதான். அண்மையில் வெளியான அவதார் திரைப்படம் தொழில்நுட்ப ரீதியில் எப்படி திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லோ கருங்கல்லோ, இத்திரைப்படம் திரைக்கதை அமைப்பில் அதற்கு ஒப்பானது.

படத்தில் கிராபிக்ஸ் கலைநுணுக்கம் மிக அருமையாக கையாளப்பட்டுள்ளது. நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங் கேமரா என எல்லாமே அருமையாக இருந்தாலும், திரைக்கதையின் ஓட்டத்தில் அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாமல் போகலாம். நீங்கள் மசாலாப்பட ரசிகராக இருந்தால் கிராபிக்ஸ் கனவில் மூழ்கடிக்கப்படுவீர்கள். சிறந்த ஆக்சன் அட்வென்ச்சராக அது இருக்கும். சினிமா ஆர்வலராக இருந்தால் இப்படி ஒரு திரைக்கதை , உங்களுடைய ஆழமான நுட்பம் சார்ந்த தேடலுக்கு உங்களை அழைத்துச்செல்லும்.

கனவுலகில் சஞ்சாரம் செய்யுகிற தொழில்நுட்பம் வருங்காலத்தில் வரலாம். நம் கனவினை நாமே வடிவமைக்கும் பலமும் நமக்கு கைவரலாம். ஆனால் அதற்காக வருங்காலத்திற்கெல்லாம செல்லவேண்டியதில்லை. இன்செப்சன் , கிரிஸ்டோபர் நோலனே வடிவமைத்த கனவுப் புதிர். அந்தப்புதிரில் தியேட்டரில் படம் பார்க்கும் நூற்றுசொச்சம் பேரையும் இணைத்துவிடுகிறார். நீங்களும் கனவில்தான் இணைக்கப்படுகிறீர்கள். ஆனால் நோலனின் கனவில். அவருடைய ஐடியாவை உங்கள் கனவில் அவர் விதைத்துவிடுகிறார்! ஆழமாக...

Read more...

தமிழ்வாய்ப்பாடு

>> 21 July 2010




நெல்,மா,பிளவு,குன்றி,மஞ்சாடி,பணவெடை,கழஞ்சு,பலம்... இப்படியே நீள்கிறது அந்த பட்டியல். இவையெல்லாம் மளிகைக்கடை சாமான்கள் அல்ல , இது தமிழில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவீட்டு முறைகளின் பெயர்கள். இவையெல்லாம் இப்போது வழக்கில் இல்லை. எல்லாமே கிலோதான்! யாருக்கும் இவற்றின் பொருளோ அளவோ கூட தெரியாது.

ஈரோட்டில் ஒரு தொழிற்சாலையில் நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றுகிறார் ராஜேந்திரன். நாற்பதாயிரம் செலவழித்து சின்னதாய் ஒரு புத்தகத்தை இரண்டரை ரூபாய் விலையில் 15000 பிரதிகள் வெளியிட்டுள்ளார். அது தமிழ் எண் சுவடி! அல்லது தமிழ் வாய்ப்பாடு!.

தமிழின் மீது தீராத பற்றும் ஆர்வமும் கொண்டவர். அதுதான் அவரை அப்படி ஒரு புத்தகத்தை தன் சொந்த வருவாயிலிருந்து வெளியிட உந்துதலாய் இருந்திருக்கிறது. ‘’தமிழ் எண் கணித முறை , பிரத்யேகமானது, சிறப்பானது , உலகிற்கே முன்னுதாரணமாய் திகழ்வது , அதைப்பற்றி நம் மக்களிடையே சரியான விழிப்புணர்வில்லை , பள்ளியிலிருந்தே இதுபற்றி நம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்’’ என்கிறார்.

36பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் , தமிழ் எண்கள் , அதற்கான குறியீடுகள் , தமிழ் எண்களால் உருவாக்கப்பட்ட வாய்ப்பாடு, தான அடிப்படைகள், அளவீட்டு முறைகள், காசு அளவு, எடையளவு , நாள் அளவு என சின்னச்சின்னதாக நிறைய தகவல்கள் தொகுத்திருக்கிறார் ராஜேந்திரன். இதற்காக பல நூலகங்களுக்கும் சென்று பல நூல்களை ஆராய்ந்து மிகமிக எளிமையாக குழந்தைகளும் அறிந்துகொள்ளும்படி இந்த நூலை உருவாக்கியுள்ளார். குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டாலும் இதிலுள்ள பல தகவல்கள் நமக்கே புதியதாக இருக்கின்றன.

இந்த எண்களையும் குறியீடுகளையும் அளவுகளையும் நாம் தற்போது பயன்படுத்த இயலாதென்றாலும் , தொன்மையான தமிழ்க்கணித முறைகள் பற்றி அறிந்து கொள்ளவும் இது குறித்து வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ளவும் இந்த புத்தகம் பெரிதும் உதவும். பல ஆண்டுகளாக பூஜ்யத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள் என்று பேசிக்கொண்டிருந்தாலும் , உண்மையில் தமிழ் எண் வரிசையில் பூஜ்யமே கிடையாதாம். 10, 100,1000 முதலான பூஜ்யம் வரும் எண்களுக்கு தனிக்குறியீடாம்.

‘’என்னுடைய வருமானத்திற்கு மீறி இதற்காக செலவழித்திருந்தாலும் , இந்த புத்தகத்திற்கும் சரி தமிழ்எண்கள் குறித்த ஆர்வத்திற்கும் சரி, போதிய மரியாதையோ , வரவேற்போ கிடைக்காததுதான் என்னை பெரிதும் பாதித்துள்ளது.. பல நேரங்களில் கேலிப்பேச்சும் கிண்டலையுமே இந்த முயற்சிக்காக பரிசாக பெற்றுள்ளேன். இருந்தாலும் தொடர்ச்சியாக சிறிய பள்ளிகளுக்கு இந்த புத்தகத்தை வழங்கி வருகிறேன் , தமிழ்க்கணித முறைகள் பற்றியும் குறியீடுகள் பற்றியும் அரசு நம்முடைய பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்த்தால் செம்மொழித் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் , இதற்காக குரல்கொடுக்க தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கிறார் ராஜேந்திரன்.

உண்மையில் இந்த அளவீட்டு முறைகளையும் எண்களையும் வீண் வீம்புக்காகவோ அல்லது இன்ஸ்டன்ட் புகழுக்காகவோ வேண்டுமானால் நம்மால் பயன்படுத்த இயலுமே தவிர , இதனை பயன்பாட்டிற்கு எந்த வகையிலும் பயன்படுத்த இயலாது. இருப்பினும் நமக்கே நமக்கான அளவீட்டு முறைகள் என்று ஒன்று இருந்ததையும் , தமிழின் தொன்மையான எண் வடிவங்கள் இருந்ததும் , நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று. நம் குழந்தைகளும் அறிந்திருக்க வேண்டும். அவ்வகையில் இதுமாதிரியான முயற்சிகளை நாமும் ஊக்குவிப்பது நம் வரலாற்றையும் தமிழையும் காக்க சிறிய அளவிலாவது உதவும்.

Read more...

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP