சமரசம் உலாவும் இடமே...!

>> 16 May 2013




கடைசி பரீட்சையின் கடைசி கேள்வி... பாதி விடையை எழுதும்போதே மனசுக்குள் பந்துகள் குதிக்கத் தொடங்கிவிடும். பரீட்சை முடிந்து பள்ளியிலிருந்து வீட்டுக்கு போகமால் நேராக மைதானத்துக்கு போய் நாலு சிக்ஸர் விளாசினால்தான் மனசு அடங்கும்.
கடந்த இரண்டு மாதங்களாக ஆடுகளத்தில் பேட்டும் பந்துமாகத்தான் நம்வீட்டு சிண்டு குண்டுகளை பார்க்க முடிகிறது. விடுமறை வந்துவிட்டால் கர்ணனின் கவசகுண்டலம் போல பிஞ்சுபிளுவான்களுக்கு கைகளில் பேட்டும் பந்தும், மனசு நிறைய கிரிக்கெட்டும் அப்படியே பச்சக் என ஒட்டிக்கொண்டுவிடுகிறது.

நூறு டிகிரி உச்சி வெயிலோ பசியோ தாகமோ எதுவுமே இவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. போடுகிற பந்துகளிலெல்லாம் விக்கெட் விழ வேண்டும். அடிக்கிற பந்தெல்லாம் சிக்ஸராக மாறவேண்டும்! ஏப்ரல் தொடங்கி மே கடைசிவரை அதுதான் கனவு... அதுமட்டும்தான்.

தமிழ்நாட்டில் வேறெந்த விளையாட்டும் இத்தனை பேரால் இவ்வளவு சிரத்தையாக விளையாடப்படுமா என்பது ஆராய்ச்சி செய்யப்படவேண்டியது. விடுமுறை என்றாலே பையன்களுக்கு கிரிக்கெட் மட்டும்தான். இப்போதெல்லாம் பெண் குழந்தைகளும் சாலைகளில் அபார்ட்மென்ட் பார்க்கிங்கில் கிரிக்கெட் ஆடத்தொடங்கிவிட்டார்கள். இன்னும் சில வருடங்களில் மைதானங்களில் ‘பிட்ச்’ பிடிக்க சின்ன பாப்பாக்களும் போட்டி போடலாம்! பெண்பிள்ளைகள் கேட்டால் பையன்கள் மகிழ்ச்சியாக விட்டுக்கொடுப்பார்கள் என்பது வேறு கதை.. வேறு சப்ஜெக்ட்!

‘கல்லி கிரிக்கெட்’ அல்லது ‘ஸ்ட்ரீட் கிரிக்கெட்’! கிரிக்கெட்டுக்கேயுரிய சகல விதிகளையும் உடைத்தெறிந்து ‘’விளையாடுகிற இடத்துக்கும்,ஆடுகிற வீரர்கள் எண்ணிக்கைக்கும் பண வசதிக்கேற்ற உபகரணங்களுக்கும்’’ ஏற்ப விதிமுறைகளை தங்கள் இஷ்டப்படி வகுத்துக்கொண்டு ஆடுகிற இந்த கல்லிகிரிக்கெட்தான் இன்று நம்பையன்களுக்கு இருக்கிற ஒரே வெளிப்புற விளையாட்டு வாய்ப்பு!
நம் இஷ்டப்படி ரூல்ஸை மாற்றிக்கொள்ள முடியும் என்கிற சுதந்திரம்தான் இத்தனை பேர் இன்று எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் ஆட காரணமோ என்னவோ?

இதில் ஆடுகிற அத்தனை பேரும் ஆல்ரவுண்டர்கள்தான். ஸ்பெஷலிஸ்ட்பேட்ஸ்மேன்,ஸ்பின்னர்,வேகப்பந்துவீச்சாளர்,மிடில்ஆர்டர் பேட்ஸ்மேன் என எந்த பாகுபாடும் கிடையாது. அதே போல நன்றாக படிக்கிற பையன், பணக்கார பையன், தடியானவன் என்கிற பேதமும் இல்லை. சாதிமத பேதமின்றி சகலரும் குவிந்து திறமைக்கு மதிப்புக்கொடுத்து ஆடும் ஆட்டம்தான் இந்த கல்லிகிரிக்கெட்!

கல்லி கிரிக்கெட் ஆட உங்களுக்கு பத்துக்கு பத்து அறைகூட போதுமானதுதான். சாலைகளில் சந்துகளில் ஆடலாம். தோட்டத்தில் பூங்காவில் பார்க்கிங்கில் க்ளாஸ்ரூமில் என எங்கும் விளையாட முடியும். தேவையானது பேட்டுபோல ஒரு பொருளும் பந்துபோல உருளையான ஒன்றும்தான். பேட் இல்லையா காலண்டர் அட்டைகூட பேட்டாகும். பால் இல்லையா கிழித்துப்போட்ட காகிதங்கள் சுருட்டப்பட்டு பந்தாகும். உபகரணம் எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

சாலையில் செல்லும்போது பையன்கள் கிரிக்கெட் ஆடும் மைதானத்தை பாருங்கள். ஒரு சிறிய மைதானத்தில் ஆயிரக்கணக்கான பேர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பதை கவனித்திருக்கலாம். இந்த ஆயிரம் பேரும் எப்படி தங்களுடைய பந்தினை தங்களுடைய அணியை எதிரணியை சரியாக கவனித்து ஆடுகிறார்கள் என்பதை சிபிஐயால் கூட கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் காலை தொடங்கி அந்தி சாயும்வரை ஆட்டம் தொடரும்.

மைதானத்தில் ‘பிட்ச்’ பிடிப்பதுதான் பெரிய வேலை. இதற்காகவே அணியில் குட்டிப் பையன்களை நேர்ந்து விட்டிருப்பார்கள். பாவம் அந்த பொடிசு காலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து போய் மைதானத்தில் தங்களுக்கான பிட்ச்சில் ஒரு குச்சியை நட்டுவைத்துக்கொண்டு மற்ற நண்பர்கள் வரும்வரை கன்னத்தில் கைவைத்து காத்திருக்கும். காத்திருந்து பிட்ச்சை கொடுத்தால் அவனுக்கு பேட்டிங் செய்யவோ பந்துவீசவோ ஒன்றிரண்டு ஓவர்கள் வாய்ப்புத்தரப்படும்.

கேப்பில் வேறு யாராவது குச்சியை பிடுங்கிப்போட்டுவிட்டு பிட்ச்சில் விளையாட தொடங்கினால் அடிதடி ரகளைதான். குட்டிப்பையனுக்கும் செம மாத்துதான். சில நேரங்களில் ஒரே குழு வாராவாரம் விளையாடி ஒரு பிட்ச்சை தங்களுக்கே பட்டா போட்டு வைத்துக்கொள்வதுண்டு. மீறி நீங்கள் ஆடும் பட்சத்தில் ‘’ஹலோ இது நாங்க ரெகுலரா ஆடற இடம்.. எங்க ஏரியா உள்ளவராத.. கிளம்புங்க காத்துவரட்டும்’’ என வம்புபண்ணி விரட்டியடிப்பார்கள். சிலசமயம் மைதானத்துக்கு லேட்டாக போக நேர்ந்தால் உங்களுக்கு பிட்ச் கிடைக்காது. அப்படிப்பட்ட நேரங்களில் ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அணிகளிடம் போய் ‘’பாஸ் மேட்ச் போட்டுக்கலாமா’’ என்று கேட்பதை தவிர வேறுவழியில்லை.

நீங்கள் போய் கேட்டவுடன் உடனே யாரும் விளையாட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஏற்கனவே பல கமிட்மென்ட்ஸ் இருக்கலாம். அல்லது உங்களுடைய அணியை டொக்கு அணியாக நினைக்கலாம். அல்லது ஆடி களைத்துப்போய் ரெஸ்ட் எடுக்கலாம். மனம் தளராமல் பத்து பதினைந்து அணிகளிடம் பேசினால் அல்லது கெஞ்சினால் ஒன்றாவது க்ளிக் ஆகும். பிட்ச் பிடிக்காமலேயே மேட்ச் ஆட வழிபிறக்கும். மேட்ச் ஆட அணி கிடைத்துவிட்டால் அத்தோடு முடிந்துவிடாது..

மைதானத்துக்குள்ளேயே எங்கிருந்து எதுவரை பவுண்ட்ரி. விக்கெட்டுக்கு பின்னால் ரன் இருக்கிறதா? வைட் மற்றும் நோபாலுக்கு ரன் உண்டா இல்லையா? போன்ற விதிமுறைகளை இரு அணி கேப்டன்களும் கூடிப்பேசி முடிவெடுப்பார்கள். எந்த ரூல்ஸ் இருந்தாலும் எல்பிடபிள்யூ மட்டும் இருக்கவே இருக்காது என்பது கல்லிகிரிக்கெட்டின் எழுதப்படாத நிரந்தரவிதி. இது காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பின்பற்றப்படுகிறது.

சிலசமயம் பவுண்டரி பிரிப்பதில் சிக்கலாகிவிடுவதும் உண்டு. சிக்ஸ்ர் அடித்துவிடுவார் உங்கள் அணியில் ஒருவர். உடனே எதிர் அணி கேப்டன் நாங்க சொன்னது அந்த புதரை தாண்டி அடிச்சாதான் சிக்ஸர் அதனால ஃபோர்தான் என வாக்குவாதம் பண்ணுவார்.. அடம்பிடிப்பார். அதுவும் பிறகு அடிதடியில்தான் முடியும். அதனால் எது பேசினாலும் முன்பே சரியாக கறாராக பேசிவிடவேண்டும். ஒன்றிரண்டு ரன்கள் ஆட்டத்தையே மாற்றிவிடும். ஸ்கோர் குறித்துவைப்பது பேட்டிங் அணிதான் என்பதால் எதிரணி அசந்த நேரம் ஒன்றிரண்டு ரன்களை கூட்டிவிடுவதும்.. அதை எதிரணியில் யாராவது கண்டுபிடித்து சண்டைபோடுவதும் வாடிக்கை.

மைதானங்களில் அதிகாலை ஆறு மணியிலிருந்து 8 மணிவரை கூட்டம் குறைவாக இருக்கும். புத்திசாலிகள் அந்த நேரத்தில் விளையாடி முடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்க வீட்டுக்கு ஓடிவிடுவார்கள். எட்டுமணிக்கு மேல் மைதானத்துக்கு வந்தால் விளையாடி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

கும்பலுக்கு நடுவே ஃபீல்டிங் செய்கிறவர் பாடுதான் பெரும்பாடு! சமயங்களில் யாரோ அடித்த பந்தை கேட்ச் பிடித்துக்கொண்டு.. ‘’ஹே... ஹவ்வ்ஜாட்’’ என்று கத்திக்கொண்டே ஓடுவார். ஆனால் கேட்சைப்பிடிக்க வேண்டிய ஆளோ அவருடைய அணியிடம் செம மாத்து வாங்குவார். நீங்கள் பேட்டிங் செய்யும்போது பிட்ச் மாறி வேறு பிட்ச்சில் வேறு அணிக்காக பேட்டிங் செய்ய நேரிடும்! அதனால் ஜாக்கிரதையாக ஆடவேண்டியிருக்கும்.

சரி அம்பயருக்கு என்ன செய்றதாம்.. எந்த அணி பேட்டிங் செய்கிறதோ அந்த அணியில் ஒருவர்தான் அம்பரயாக இருப்பார். அவர் ‘நேர்மை’யாக நடக்க ரொம்பவே மெனக்கெடுவார். அதாவது லெக்சைடில் பந்து போனாலே வைட்தான். அது ஸ்டம்புக்கு மேலே சென்றாலும் வைட்தான். ஆஃப் சைடில் பேட்ஸ்மேனுக்கு கொஞ்சம் விலகினாலும் வைட்தான். என்னதான் பவுலர் சண்டைபோட்டாலும் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு கையை கட்டிக்கொண்டு ஸ்ட்ரிக்டான ஆபீசர் போலவே நிற்பார்.

ரன் அவுட்டில்தான் எல்லா குல்மால்களும் நடக்கும். என்ன இருந்தாலும் பேட்ஸ்மேன் நம்ம கட்சியாச்சே.. அதனால் பாதி பிட்ச்சில் ரன் அவுட் ஆனாலும் அவுட் கொடுக்காமல் கடுக்காய் கொடுப்பார். இதுபோன்ற நேரங்களில் பவுலிங் அணி கடுப்பாகி அம்பயரை போட்டு புரட்டி எடுப்பது சகஜம்!

இந்த ஆட்டங்கள் பத்து அல்லது பதினைந்து ஓவர் போட்டிகளாகவே நடக்கும். இங்கிலீஸ்காரன் டி20 போட்டிகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே அதைவிட சிறிய டி10 போட்டிகளை கண்டுபிடிச்சது நாமதான்! பத்து அல்லது பதினைந்து ஓவர்தான் மொத்த ஆட்டமுமே என்பதால் எந்த பேட்ஸ்மேனும் முழுசாக விளையாட முடியாது ஒரு ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று ஓவர்தான் பேட்டிங் தரப்படும். அதற்குமேல் நன்றாகவே ஆடினாலும் அவராகவே ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிவிடுவார். அதனால் கிடைக்கிற பத்து பந்துகளையும் சிக்ஸரடிக்கவே மனசு சிறகடிக்கும்.

இப்படி மைதான அழிச்சாட்டியம் ஒருப்பக்கம் என்றால் இன்னொரு பக்கம் உபகரண குத்தாட்டம். ஒரே ஒரு பேட் ஒரு டென்னிஸ் பந்தோடு பத்துபேர் கொண்ட அணி மைதானத்துக்கு கிளம்பிவிடும். மேட்ச் ஆடலாமா பாஸ் என ஸ்டம்ப்ஸ் வைத்திருக்கும் அணிக்கு கொக்கிப்போடும். எந்த அணியும் கிடைக்காவிட்டால்.. மூன்று குச்சிகளை நட்டு கிரிக்கெட் ஆடத்தொடங்கிவிடுவார்கள். குச்சிகள் கிடைக்கவில்லையா? மூன்று செறுப்புகளை வரிசையாக வைத்து அதன் வழியாக பந்துசென்றால் அவுட்! அதுவும் வேலைக்கு ஆகலையா? சைக்கிள் இருந்தால் அதன் டயரை பக்கவாட்டில் நிறுத்திவைத்துவிட்டால் அதுகூட ஸ்டம்ப்தான்! எதுவுமே கிடைக்கலையா? துடைப்பை கட்டை, குப்பைத்தொட்டி, சுவரில் போடு மூன்று கோடு என எதுவும் ஸ்டம்பாகும்.

ஒரு பேட்தானே இருக்கு.. ரன்னருக்கு? அவருக்கு குச்சியோ கம்போ அல்லது வெறுங்கையோ பரிசளிக்கப்படும்! ரன் எடுத்தபின் பேட் கைமாறும்! டென்னிஸ் பந்துகள்தான் விளையாட பயன்படும். டென்னிஸ் பந்தை அப்படியே பயன்படுத்தினால் அதன்மேலிருக்கும் பஞ்சு பந்து பவுன்ஸ் ஆவதை தடுக்குமாம். அதனால் பந்தை பற்றவைத்து பஞ்சை பொசுக்கி விளையாடுகிறார்கள். தீயா வேலை செய்றதுனா இதுதான்போல! வெவ்வேறு நிறுவனங்கள் பந்துகள் தயாரித்தாலும் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென்று பிராண்ட் வைத்து அந்த கம்பெனி பந்துகளையே உபயோகிக்கின்றனர்.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியிலும் பதினோறு வீரர்கள் கட்டாயம். ஆனால் கல்லியில் நான்கு பேர்கூட ஒருஅணியில் ஆடலாம். அதற்கேற்ப ரூல்ஸ் மாறும்.

அதுமாதிரி நேரங்களில் ஆஃப் சைட் அல்லது லெக்சைட் மட்டும்தான் ரன்கள் கணக்கெடுக்கப்படும். ஸ்டம்புக்கு பின்னால் ரன்கள் கிடையாது. மூன்றுபேர்தான் அணிகளில் இருக்கிறார்கள் என்றால் ஒன்பிட்ச் கேட்ச் கூட உண்டு. அதே போல குறிப்பிட்ட இடத்தில் அடித்தால் 1ஜி 2ஜி 3ஜி என ரன்கள் கொடுக்கப்படும். இது ஊழல் கணக்கில்ல.. ரன்கணக்கு. ஜி என்றால் கிராண்டட் என்று அர்த்தம். சாலையில் கிரிக்கெட் ஆடும்போது சாக்கடைக்குள்ளோ அல்லது குறிப்பிட்ட சில வீடுகளுக்குள்ளோ பந்து போய்விட்டால் இப்படி தூரத்துக்கேற்ப ரன் வழங்கப்படும். ஓவர் உற்சாகத்தில் எதிர்வீட்டு கண்ணாடிகளை உடைத்துவிட்டால் அவுட்! பந்து சாக்கடைக்குள் விழுந்துவிட்டால்.. அடித்தவரேதான் போய் எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வைத்து கழுவித்தரவேண்டும்.

மேலே சொன்னதையெல்லாம் வெறும் குட்டிப்பையன்கள்தான் பண்ணுவாங்க என தப்புக்கணக்கு போடவேண்டாம். உடனே அருகிலிருக்கிற மைதானத்துக்கு விசிட் அடிங்க.. 6 வயது சுள்ளான் முதல் 60 வயது தாத்தாவரைக்கும் கிரிக்கெட் ரூல்ஸை உடைத்துப்போட்டு கல்லி கிரிக்கெட்டில் சொல்லி அடிப்பதை காணலாம்.

40 வயதாகும் கம்பெனி மானேஜர் நான்கு ரன்னுக்காக ‘’டே போங்கடா நான் ஆட்டத்துக்கு வரல.. என் பேட்டை குடுடா, நான் வீட்டுக்கு போறேன்” என அடம் பிடித்து சண்டை போடுவதை பார்த்து ரசிக்கலாம். முதல் பந்திலேயே அவுட்டாகி ‘’இல்ல இது ட்ரயல்ஸுடா.. நீ முதல்லயே ஆல்ட்ரைல்ஸ் பஸ்ட்டு பால்னு சொல்லிட்டு போட்ருக்கணும்’’ என லந்து பண்ணுவதை பார்த்து சிரிக்கலாம்! கல்லி கிரிக்கெட் ஆடுகிற இடங்கள் வெறும் மைதானங்கள் அல்ல.. ஆனந்தம் ஆடும் களம்! உங்களுக்கு கிரிக்கெட்டே தெரியாட்டாலும் ஒருக்கா உங்க வாண்டுகளோட விளையாடிப்பாருங்க..விடமாட்டீங்க!

(நன்றி - புதிய தலைமுறை)

Read more...

முடியலங் மணி!

>> 14 May 2013




எம்ஆர் ராதாவின் ரத்தகண்ணீருக்குப் பிறகு வில்லனுக்காகவே ஹிட்டான படமென்றால் அது அமைதிப்படையாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டு திராவிட அரசியல் வரலாறை இதைவிடவும் பகடி பண்ணின ஒரு தமிழ்த்திரைப்படம் வேறெதுவும் இருக்கவே முடியாது. அப்படியொரு கிளாசிக் படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பதென்பது சப்பாத்திக்கல்லில் இட்லி சுடுவதுபோன்று கடுமையான சவால்கள் நிறைந்த வேலையாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும், திரைக்கதையையும் பாத்திரத்தேர்வையும் பார்த்து பார்த்து முந்தைய படத்துக்கு மரியாதை பண்ணுகிற வகையில் உருவாக்க வேண்டாமா? ஆனால் நாகராஜசோழன் எம்.ஏ எம்எல்ஏ படமோ கொஞ்சமும் பொறுப்பில்லாமல், மூன்றாந்தர பிட்டுப்படங்களின் தரத்தில்தான் வெளியாகியிருக்கிறது.

சிலபடங்களை சிலர் எடுக்காமல் இருப்பதுதான் அவர்களுக்கும், அவர்களுடைய மரியாதைகளுக்கும் நல்லது என்றும் நினைக்க வைக்கிறது. ‘அவதார்’ படத்தை அமைதிப்படை சத்யராஜையும், செந்தமிழன் சீமானையும் வைத்து மணிவண்ணன் இயக்கினால் எப்படி இருக்கும்? அதுதான் நாகராஜாசோழன் எம்ஏ எம்எல்ஏ.

அரசியலில் இருந்து ஒய்வுபெற்று வீட்டில் சும்மா இருக்கிறார் நாகராஜசோழன்.. மணிவண்ணன் அமைதிப்படை பார்ட் 2 எடுக்கிறார் என்பதை அறிந்து.. மீண்டும் அரசியலுக்குள் பிரவேசம் செய்கிறார். முதலமைச்சரின் ஊழல் ரகசியங்களை வைத்து மிரட்டி டைரக்டாக நான்கு நிமிடத்தில் ஈஸியாக துணை முதல்வராகவும் ஆகிவிடுகிறார். அதற்குபிறகு இங்கிலீஸ்கார பாரினர்ஸோடு சேர்ந்து ஒரு காட்டை அழித்து ரோடு போட.. நிஜமாகவே ரோடுதான் போடுவதாக திட்டம்போடுகிறார்.. ஆனால் காட்டை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள் மக்கள்.
அவர்களை ஏமாற்றி எப்படி நாகராஜசோழன் ஜெயிக்கிறார் என்பதுதான் கதை. படிக்கும்போது சுமாராகவாவது இருக்கிற இந்தக் கதையை.. ஆப்பத்தை பங்குபோட்ட குரங்குபோல சீமானுக்கு கொஞ்சம், சத்யராஜூக்கு கொஞ்சம், தனக்கே கொஞ்சம், தன் மகன் ரகுவண்ணனுக்கு கொஞ்சம் என பிச்சு பிச்சு கொத்துக்கறி போட்டு கொதறியிருக்கிறார் மணிவண்ணன்!

அமைதிப்படையில் இயல்பான நடிப்பில், வில்லத்தனத்தில் அசத்திய அதே சத்யராஜ்தான்.. ஆனால் இந்தபடத்தில் ஏனோ வில்லத்தனம் காட்டவும் நாகராஜசோழனாக மாறவுமே, ரொம்ம்ம்ம்ப மெனெக்கெடுகிறார். வயதாகிவிட்டதால் முன்பிருந்த கம்பீரமும், அசால்ட்டுதனமும் சுத்தமாக மிஸ்ஸிங். ஆணிவேரே ஆடிப்போய் ஆடிகாரில் போய்விட்டதால், மீதி படத்தை சீமான்தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள்.

பிரபாகரனின் தம்பியாக நமக்குநாமே திட்டத்தின் கீழ் உலகிற்கு அறிவித்துக்கொண்ட தம்பி சீமான்.. இந்த படத்தில் சாதாரண இட்லிக்கடை அக்காவுக்கு தம்பியாக நடித்திருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டவேண்டும். அதுவும் கிழவிகளுக்கு பயந்து சுவர் ஏறி குதித்து ஓடுவதுபோல காமெடி காட்சிகளிலெல்லாம் நடித்திருப்பது வியக்க வைக்கிறது. காமெடிக் காட்சியில் கூட திடீரென பொங்கி எழுந்து.. ‘’அடேய் ராஜபக்சே.. கொடுங்கோலனே கொலைகாரப்பாவி.. தில்லிருந்தால் திநகர்பக்கம் வாடா’’ என்று அறைகூவல் விடுத்துவிடுவாரோ என்கிற அச்சமும் பயமுமாகத்தான் படம் பார்க்க வேண்டியிருந்தது.

அழகழகான லட்டுமாதிரி லேடீஸ் வாழும் காட்டை அழிக்க நினைக்கிற அரசியல்வாதியின் திட்டங்களை உடைக்க நினைக்கிறார் சீமான். நடுவில் அந்த லேடீஸோடு ஜாலி நடனம் வேறு ஆடுகிறார்.. ஜிம்பாலே ஜிம்பாலே ஜிம்பல ஜிம்பா..

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால், அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா சீமான். ஊரிலிருந்து காட்டுக்கு கிளம்பி போய்.. காட்டில் வாழும் ஆதிவாசிகளை உசுப்பிவிடுகிறார். வில் அம்பெல்லாம் வைத்து சண்டையிட தூண்டுகிறார். (அவதார் படத்தில் வருவது போலவே!)

சீமானை நம்பி ஆதிவாசிகள் வில் அம்பு வைத்து சண்டைபோட்டு செம அடி வாங்கி ஊரை காலிபண்ணிக்கொண்டு போக நேர்கிறது. அருவிக்கு பக்கத்தில் வெட்டியாக அமர்ந்து வாழைப்பழம் சாப்பிடும் சீமானிடம் விஷயத்தை சொல்கிறார் ஒரு அல்லக்கை! சீமான் அப்படியே ஷாக் ஆகி.. ‘’நாம் இப்போ தோத்துட்டாலும் நிச்சயமா இன்னொருக்கா ஜெயிப்போம்.. இப்போதைக்கு தலைமறைவாகிவிடுவோம்’’னு சொல்லிட்டு பக்கத்தில் இருக்கிற அருவியில் குதித்து தலைமறைவாகிவிடுகிறார். அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியாமல் மக்கள் ஃபீல் பண்ண அவருடைய கதை அதோடு முடிகிறது. ப்ப்ப்ப்பா.. டேய் ரீல் அந்துபோய் நாலு வருஷம் ஆச்சுடா என்று பின் சீட்டிலிருந்து ஒரு தாத்தா கதறுவதைக் கேட்க முடிந்தது. ஈழத்தமிழர்களை வைத்து இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியெல்லாம் காமெடி பண்ணி கதறவிடுவார்களோ தெரியவில்லை.

மணிவண்ணன் என்ன நினைத்தாரோ, தன் மகனையும் சத்யராஜ், சீமானோடு பெரிய ஆளாக்கிவிட வேண்டியதுதான் என நினைத்து மகனுக்கும் ஒரு கதை பண்ணியிருக்கிறார். அவருக்கோ நடிப்பு என்பது கிலோவா, லிட்டரா எந்தக் கடையில் கிடைக்கும் என்கிற அளவில் வருவது வரவேற்கத்தக்கது. அவர்தான் நாகராஜசோழனின் மகனாம். அவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். நல்ல வேளையாக டூயட்டெல்லாம் வைக்கவில்லை. அந்த கொடுமையை வேறு பத்துரூபாய் கொடுத்த பாவத்துக்கு சகித்துக்கொள்ள வேண்டியதாயிருந்திருக்கும். மயிரிழையில் உயிர்தப்பியது மணிவண்ணன் புண்ணியம்.

இப்படியாக ஆளாளுக்கு நம்மைப்போட்டு படாய் படுத்த.. படத்தில் ஹீரோயின்களாக வருகிற இரண்டு பாட்டிம்மாக்களில் யார் மெயின் ஹீரோயின் என்பதை கண்டுபிடிப்பதற்குள் படமே முடிந்துவிடுகிறது. பாட்டிம்மாவில் ஒன்று தொப்புள் தெரிய நடனமாடுவதெல்லாம், கொடுமைகளின் உச்சக்கட்டம்.

படம் பேசுகிற அரசியல் பற்றியெல்லாம் பேசுகிற அளவுக்கு ஒன்றுமேயில்லை. சீமானும், வைகோவும், தமிழருவி மணியனும் பேசுகிற அதே அம்மாவுக்கு வலிக்காத முனைமழுங்கிய அரசியல்தான். கொஞ்சம் ஜாலியான காமெடி வசனங்கள் மூலமாக மொக்கைமுலாம் பூசிகொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் மணிவண்ணனுக்கு ரொம்பவே வயசாகிவிட்டது. உடல் நிலை ரொம்பவே மோசமாகிவிட்டிருப்பதை உணரமுடிகிறது. அவரால் சரியாக நடக்க முடியவில்லை. வசனங்களை முந்தைய மாடுலேஷனில் இயல்பாக பேசமுடியவில்லை. உடல்நல குன்றி, இப்படியொரு படத்தை எடுக்காமலே இருந்திருக்கலாமோ என்று நினைக்கவைத்துவிடுகிறார். பல காட்சிகளையும் உதவி இயக்குனர்களை வைத்தே சமாளித்திருப்பார் போல.. படத்தின் ஒரே ஆறுதல் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற சில வசனங்களும், மணிவண்ணன்-சத்யராஜ் ஜோடி தோன்றி அலப்பறை பண்ணுகிற சில காட்சிகளும்தான்!

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அமைதிப்படை’ படத்தின் தரத்திற்கு மிக அருகில் கூட இந்தப்படம் வரவில்லை. முழுக்க முழுக்க ஒவ்வொரு காட்சியையும் ஏனோதானோ என்று படமாக்கியிருப்பதும்.. பழைய பெருமையை வைத்தே துட்டுபார்த்துவிடலாம் என்று நினைத்து படமெடுத்திருப்பதும், அப்பட்டமாகத் தெரிகிறது.

செந்தமிழன், புரட்சி தமிழன், இனமான இயக்குனர் என்றெல்லாம் போட்டு படத்தை தொடங்கும்போதே உஷாராகி ஜன்னல் வழியாக குதித்து தப்பித்திருக்க வேண்டும். ம்ம் இனி என்ன சொல்லி என்ன பிரயோஜனம். இந்த கெரகத்த எடுத்தத்துக்கு பழைய அமைதிப்படையவே டிடிஎஸ் பண்ணி இன்னொருக்கா விட்ருக்கலாங் மணி!

Read more...

வானம் ஏறி வைகுண்டம் போனவன்!

>> 10 May 2013




முடியாது. உங்களால் இதை நிச்சயமாக செய்யமுடியாது. ஏன் இந்தியாவிலேயே யாராலும் முயற்சி செய்ய கூட இயலாது. பிரபல அமெரிக்க நடிகர் அலெக்ஸ் டோரஸ் செய்திருப்பது அப்படியொரு சாதனை.

வானத்திலிருந்து குதித்து பண்ணுகிற சாகசம்தான் ஸ்கைடைவிங். ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கூட அடிக்கடி ஸ்கைடைவிங்கில் சண்டையெல்லாம் போடுவார். கடைசியாக ஜாக்கிசான் தன்னுடைய சிஇசட்12 படத்தில் இந்த யுக்தியில் ஒரு சண்டைக்காட்சியை உருவாக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் இதுபோல ஸ்கைடைவிங் சண்டைகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏதோ ஒரு கமல் படத்தில் பாராசூட்டில் பறந்தபடி கிஸ்ஸடிப்பதாக காட்சியிருந்ததாக நினைவு. போகட்டும். இந்த ஸ்கைடைவிங் பற்றி இப்போது என்ன வந்தது? பொறுங்கள். அதற்குமுன்பு அலெக்ஸ் டாரஸ் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

வானத்தில் பறந்தபடி செய்கிற இந்த சாகசத்தில் ஆர்வம் கொண்டவர் அலெக்ஸ் டாரஸ். அதை இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுத்தும் வருகிறார். அதோடு பகுதிநேரமாக பிட்டுப்படங்களில் அதாவது போர்னோ படங்களிலும் நாயகனாக நடித்து புகழ்பெற்றவர். இவருடைய ப்ளூ பிலிம்ங்கள் மிகவும் சிறந்ததாக போற்றப்படுபவை. இவருடைய அபார நடிப்புக்கு பல விருதுகளும் வாங்கியிருக்கிறார் (என்னென்ன விருதுகள் என்கிற தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை). அலெக்ஸின் திறமையை காணவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வீடியோ கடைகளில் க்யூவில் நிற்குமாம்.

மற்ற கில்மா பட நடிகர்களிடம் இல்லாதது அப்படி என்ன அலெக்ஸிடம் பெரிசாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். எதையும் வித்யாசமாக செய்து பார்க்கிற யுக்தி. அதுதான் அவருக்கு கில்மா பட ரசிகர்கள் மத்தியில் பேரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

இவர் 2011 ஆம் ஆண்டு ஒரு காரியம் செய்தார். எங்கெங்கோ கில்மா பண்ணுவதுபோல படமெடுத்து விட்டோம்.. வானத்தில் பறந்தபடி ஒரு படமெடுத்தால் என்ன ? யோசனையை கேட்டதும் எந்த கில்மாபட நாயகிகள் காலில் எதையோ ஊற்றியதுபோல அஞ்சி ஓடினர். அவர் மனந்தளரவில்லை. கடைசியில் ஸ்கைடைவிங் கம்பெனியின் ரிசப்ஷனிஸ்ட் பெண்ணை மயக்கி மசியவைத்தார்.

பிட்டுப்படம் எடுக்க ஒரு கேமராவும் ஒரு ஆணும் பெண்ணும்போதுமே...இந்த கான்செப்ட்டுக்கு கூடுதலாக ஒரு விமானமும் பைலட்டும்தான் தேவை. அவரே கேமராமேன் அவரே இயக்குனர் என்று முடிவானது.

ஒரு பைலட்டையும் அழைத்துக்கொண்டு ஒரு நல்ல நாளில் வானம் ஏறி ஏறிவிட்டார். பறக்கும்போதே தொடங்கும் ஃபோர் ப்ளே விமானம் பல ஆயிரம் அடி வானத்திற்கு செல்ல செல்ல உணர்ச்சி பெருக்கை அடைகிறது. இருவரும் இணைய.. ஒன்றாக குதிக்கிறார்கள். சில நிமிடங்கள் வானத்தில் மிதந்தபடி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

உச்சக்கட்டம் நெருங்க நெருங்க.. அந்தப்பெண் துடிக்க துடிக்க.. பாராசூட்டை திறந்துவிடுகிறார் அலெக்ஸ். படம் பார்க்கும் யாரையும் சீட்டு நுனிக்கே அழைத்து வரும் காட்சி இது. பாராசூட் கீழே இழுத்துவர இருவரும்.. மேட்டர் முடிந்து சோர்வடைந்து தரையிறங்க படம் முடிகிறது.

என்ன ஒரு ஏடாகூடமான சிந்தனை. படம் பார்க்கும் நமக்கு உடலெல்லாம் பதறுகிறது. ஆனால் இதை மிக எளிதாக செய்துகாட்டி அசத்தியிருக்கிறார் அலெக்ஸ். உடன் நடித்த பெண்ணுக்குதான் நடிப்பே வரவில்லை. மற்றபடி கேமரா எடிட்டிங் பின்னணி இசை என அனைத்தும் மிக அருமை.

இந்த படத்தை எடுத்து தன்னுடைய வலைப்பூவில் பகிர்ந்திருந்தார் அலெக்ஸ். இதை அறிந்த ஸ்கைடைவிங் நிறுவனம் அலெக்ஸை மட்டும் வேலையிலிருந்து விரட்டியது. ஆனால்படத்தில் நடித்த பெண்ணை ஒன்றும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு பிறகுதான் அலெக்ஸின் வாழ்க்கையே மாறியது. இன்று முழுநேர போர்னோ ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.அயராத உழைப்பு உயர்வைத்தரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உயர்ந்து நிற்கிறது அவருடைய நெஞ்சு.

வானத்தில் பண்ணிய கஜகஜாவுக்காக அவர் மீது வழக்கு தொடர எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ள பட்டன. ஆனால் அமெரிக்க சட்டங்கள் அதை அனுமதிக்கவில்லை. வயதுவந்த இருவர் எங்குவேண்டுமானாலும் உடலுறவு கொள்வதை அரசு அனுமதிக்கிறது. அவர்கள் நிர்வாணமாக பொது இடத்தில் இருந்ததை யாராவது பார்த்திருந்தால்தான் ஏதாவது தண்டனை கொடுக்கமுடியும் என சாட்சிகளை தேடினர். ஆனால் அம்மணமாக தரையிறங்கிய அலெக்ஸை யாருமே பார்க்கவில்லை என்பதுதான் வேடிக்கை.

அமெரிக்க ஊடகங்களின் மகாராஜா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஹோவர்ட் ஸ்டெர்ன் என்பவரின் கவனத்தை கவரவே, தான் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டதாக பிறகு அலெக்ஸ் தெரிவித்திருந்தார்.

ஆண்டுதோறும் ஏதாவது சேட்டை யை அரங்கேற்றி ரசிக கண்மணிகளுக்கு தொடர்ந்து விருந்து படைத்து வருகிறார் அலெக்ஸ். சென்ற ஆண்டுகூட லின்ட்சே லோகனோடு உடலுறவு கொண்டதாக பரபரப்பை கிளப்பினார். இந்த ஆண்டு இதுவரை எதையும் செய்யவில்லை. இனி எதாவது செய்தால் அது ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பது மட்டும் உறுதி! அலெக்ஸின் அடுத்த ஸ்டன்டுக்காக அமெரிக்காவே காத்திருக்கிறது. நாமும் காத்திருப்போம்.

Read more...

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP