Pages

22 April 2011

பறவைகள் வசித்த மொட்டைமாடி




பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் கொஞ்சமாக தானியம் கொடுப்பதும் ஒரு குற்றமா? அதைப்போய் யாராச்சும் தடுத்து நிறுத்துவதும்தான் இந்த உலகத்தில் நடுக்குமா?

இந்த கோடையில் வெயிலில் வாடும் சிறிய பறவைகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் தண்ணீர் வைங்க.. சுற்றுசூழலை காத்திடுங்க என்று முறையே [சில மின்னஞ்சலும் பல குறுஞ்செய்தியும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த செய்திகளில் இருந்த ஒரு நேர்மையும் எளிமையும் என்னை வெகுவாக கவர்ந்தன. இயற்கையிடமிருந்து எல்லாவற்றையுமே சுரண்டிவிட்ட இந்த மனிதகுலமாகப்பட்டது அவ்வியற்கைக்கு எதையுமே திருப்பி கொடுப்பதில்லையே! என்று அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறேனே!

இந்த இயற்கையை சுரண்டி தின்னும் நானும் கூட எதையுமே செய்ததில்லை. அப்படி ‘’ஏதாவது செய்யணும் பாஸ்’’ என தோன்றினாலும் நம்முடைய மாத சம்பள வீட்டு வாடகை கடன்கார எட்டுமணிநேர டியூட்டி பார்க்கிற பொருளாதார சமூக கட்டமைப்பு அதை அனுமதிப்பதில்லை. ஆனால் பறவைக்கு தண்ணீர் வைப்பதென்பது மிகவும் எளிதானதும் , அதிக செலவு வைக்காத ஒன்றாகவும் இருந்தது பிடித்திருந்தது. பத்துகாசு செலவழிக்காமல் வாசலைவிட்டு இறங்காமல் செய்யக்கூடிய பயனுள்ள சமூகசேவை திட்டம்.

அதிலும் தனிமையில் பேசுவதற்கு கூட ஆளின்றி மொட்டைமாடியில்  அதிக நேரம் நின்றபடி வெறுமையில் பொழுது போக்கும் எனக்கு வானில் பறக்கும் பறவைகள் தரையிறங்கி என் மொட்டைமாடியில் நீர் குடித்து இளைபாறி என்னை பார்த்து சிரித்துவிட்டு சென்றால் இனிக்காதா என்ன!

இதனை நிறைவேற்றும் வகையில் எங்கள் வீட்டு மொட்டைமாடியில் ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரும் இன்னொரு கிண்ணியில் கொஞ்சம் தானியங்களும் வைக்க தொடங்கினேன். முதலிரண்டு நாட்கள் பறவைகளிடமிருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. ஒரு பறவையும் வருவதில்லை. ஆனால் தண்ணியும் தானியமும் மட்டும் மிஸ்ஸிங்! அம்மாவிடம் கேட்டபோது நான்தான்டா தண்ணிய கீழ ஊத்திட்டு தானியத்த வீட்டுக்குள்ள வச்சேன் என்று அதிர்ச்சியூட்டினார். என்னம்மா நீ! பாவம்மா அந்த பறவைங்க என்று பொறுமையாக ஆரம்பித்து கச்சா முச்சா வென சண்டைபோட்டு அம்மாவிடம் அனுமதி வாங்கி பறவைக்கு தண்ணீர் வைக்க தொடங்கினேன். இம்முறை வைத்தது வைத்தபடியே இருந்தது.

எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தாலும்.. ஒரு காக்காவுக்கு கூடவா இந்த தண்ணிய குடிக்கணும்னு தோணலை , ஒருவேளை நான் பாவம் பண்ணிட்டேனோ, நிறைய நான்வெஜ் சாப்பிட்டதால் இருக்கலாம் என்றெல்லாம் நினைத்தேன்.

யாருமே வராத கடையிலும் டீ ஆத்தியே தீருவேன் என அடம்பிடித்து வைத்த தண்ணீருக்கும் தானியத்திற்கும் முதல் வாரம் முடிந்தபின்தான் நல்ல ரெஸ்பான்ஸ். அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் சில காக்கைகள் வரத்தொடங்கின. நாட்கள் செல்ல குருவிகள் எங்கிருந்தோ வந்தன. அதற்குமடுத்த சில நாட்களில் கிளிகள்.. பின் மைனா.. புறா.. அடடா.. சின்ன வேடந்தாங்கலாக மாறிப்போயிருந்தது எங்கள் வீட்டு மொட்டைமாடி! ‘ஏய் நம்ம மொட்டைமண்டையன் வீட்டு மொட்டைமாடில பாருங்கடி எவ்ளோ பேர்ட்ஸ்’ என்று அருகாமை வீட்டு இளம் பெண்களும் ஆன்ட்டிகளும் ஆயாக்களும் குழந்தைகளும் ஆர்வத்தோடு பார்க்கத்தொடங்கினர். என்னோடு பேசத்தொடங்கினர். எல்லோர் வீடுகளிலும் தண்ணீர் வைக்கவும் தொடங்கினர்.

சில பறவைகள் எங்காவது சுற்றித்திரிந்து இரவுகளில் மொட்டைமாடிக்கு திரும்பி அங்கேயே வசிக்கவும் தொடங்கின. இரவெல்லாம் மொட்டைமாடியிலேயே அந்தபறவைகளோடு பேசிக்கொண்டிருப்பேன். அவையும் என்னோடு பேசத்தொடங்கின. ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு குணமும் கதையும் இருந்தன. வீட்டில் இருப்பதைவிட மொட்டைமாடியில் இருப்பதையே விரும்பினேன். அவை என் மடியில் அமர்ந்து விளையாடத்தொடங்கின... அம்மாவைக்காட்டிலும் அவை என் மீது அதிக அன்பு வைத்திருப்பதை உணர்ந்தேன்.

இப்படி போய்க்கொண்டிருந்த என்னுடைய சுற்றுசூழல் மேம்பாட்டு புரட்சிக்கு ஒரு தடைக்கல்லாக வில்லனாக என் அம்மாவே மீண்டும் மீண்டும் வருவார் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை. மென்மையான இதயங்கொண்டவர் அம்மா.. அப்பாவே இல்லாமல் போராடி என்னை வளர்த்தவர். 18 ஆண்டுகளாக தனிமையில் வாழ்பவர். குழந்தைகளிடம் அவ்வளவு அன்பாக பழகுபவர். கரப்பான் பூச்சியை கூட கொல்லாமல் வெளியே கொண்டு போய் போட்டுவிடுகிற சாது! அப்படிப்பட்டவரா இதை தடுக்கவேண்டும்.

அறிவுகெட்டவனே மொட்டைமாடில போய் யாராச்சும் தானியங்களை போடுவாங்களா.. அறிவில்ல உனக்கு என்று எங்கள் இருவரிடையேயான அதிபயங்கர சுற்றுசூழல் போர் மூண்டது. அதனால உனக்கென்ன மொட்டைமாடி சும்மாதானே இருக்கு , நான் என்னமோ பண்ணிட்டு போறனே! உன் வேலைய பாரும்மா என்றேன். அதோடு விடாமல் அம்மாவுக்கு பறவைகளுக்கு ஏன் தண்ணீர் வைக்கவேண்டும் என்பதன் காரணங்களை அடுக்கத்தொடங்கினேன்.

நாம சிட்டில இருக்கோம்.. இங்கே நிறைய பில்டிங்ஸ் ஆகிருச்சு. மரங்களை வெட்டிட்டோம். குருவிங்க கூட அழிஞ்சிருச்சுனு பேப்பர்ல போட்டிருக்கான் நகரத்தில் இருந்த நல்ல தண்ணீர் ஆதாரங்களை அழிச்சிட்டோம். கோடைவெயிலில் நமக்கே நாவறண்டு கண்ணை கட்டி டீஹைட்ரேட் ஆகிடுது.. அதுங்க பாவம் வெயிலில் பறந்துட்டே இருக்கே அதுக்கு எப்படி இருக்கும். அதனால இதுமாதிரி சின்னதா உதவி பண்ணினா அதுங்க மனசார நம்ம வாழ்த்தும்ல , பாவம்மா குட்டி பறவைங்க.. பாருங்க எவ்ளோ அழகா இருக்கு அதுங்க என அம்மாவுக்கு பறவைகளை காட்டினேன். அம்மா பறவைகளை பார்ப்பதோடு சுற்றிலும் என்னையும் பறவைகளையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் பார்த்தார். முகம் சிடுசிடுவென ஆகி..

‘’அதுலாம் சரியா வராதுடா, யோசிச்சி பாரு நாம இருக்கறதே குருவிக்கூடு மாதிரி ஒரு சின்ன வீட்டுல.. இங்கே துணி துவைச்சு காயப்போடறது தொடங்கி, வத்தல் வடாம், கோதுமை, அரிசினு எது காயப்போடறதா இருந்தாலும் நமக்கு இருக்கறதே ஒரே ஒரு மொட்டைமாடிதான். அங்கே நீ இப்ப தண்ணி வச்சி தானியம் போட்டு அதுங்களை பழக்கிடுவ.. அதுங்களும் நல்லா தின்னு தின்னு பழகிடும். ஆனா வெயில்காலம் முடிஞ்சதும் நிறுத்திடுவ.. அந்த நேரத்துல நான் கோதுமைய காயப்போட்டா என்னாவும்.. இப்பயே பகல்ல துணிய காயப்போட்ட துணியெல்லாம் ஆய்ப்போய்டுதுங்க.. இரண்டு வாட்டி துவைக்க வேண்டியிருக்கு , நீ பெரிய புரட்சிக்காரன் உன் பாட்டுக்கு காலைல புரட்சி பண்ணிட்டு மயிரா போச்சினு ஆபீஸ் போய்டுவே இங்கே வீட்டுல இருக்கறவ எனக்குதானே தெரியும்.. அதோட பிரச்சனை’’ என்றாள்.

‘’இல்லமா நான் எப்பயுமே அதுக்கு தண்ணி வைக்கிறேன்’’ என்றேன். அம்மா விடாப்பிடியாக இருந்தாள். அம்மா சொன்னதில் நியாயமான காரணங்கள் இருந்தன. என்னுடைய புரட்சிவெறி இவ்வளவு எளிதில் நீர்த்துப்போய் புஸ்வானமாகும் என நினைத்தே பார்க்கவில்லை.

அதிலிருந்து தண்ணீர் வைப்பதும் தானியம் வைப்பதும் நிறுத்தப்பட்டது. பறவைகள் சில நாட்கள் தண்ணீர் தேடி மொட்டைமாடிக்கு வருவதும். பின் வாடிப்போய் திரும்பிச்செல்வதும் தொடர்ந்தது. மனசு கஷ்டப்பட்டாலும் என்ன செய்ய அம்மா சொல்லிட்டாங்களே! அதையும் மீறி தண்ணி வச்சா ம்ஹும் நான் வெளியே கிளம்பினதும் அதை கீழே ஊத்திடுவாங்க.

கொஞ்ச நாட்களில் பறவைகள் வருவது முழுவதுமாக நின்றுபோனது. அவை வந்தாலும் அம்மா நிச்சயம் விரட்டியடித்திருக்கலாம். மொட்டைமாடி காலியாய் கிடக்கிறது. எனக்காக அம்மா மொட்டைமாடியை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்து வைத்திருக்கிறாள். எப்போதும்போல இப்போது அம்மா மொட்டைமாடியில் துணிகளை கோதுமைகளை தானியங்களை மகிழ்ச்சியோடு காயப்போட ஆரம்பித்திருக்கிறாள். காக்கைகளைகூட தடி வைத்து விரட்டிக் கொண்டிருக்கிறாள்! நானும் விரட்டுகிறேன். என்ன இருந்தாலும் பறவைகளை விட அம்மாதானே முக்கியம்.