![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAp3bux7NZN9jh7W2cIr3Ci2AWgUSgb_6qs0ubKUyCp1IjAaBw6LksYKkhpy1m6OQCK6Ta1qQvDNWg2wF9Puv0SRVNAryqQUCYaujw-tZaFzxbtzbVbzXyu8yoFhxt0kXz4vcT52VoP00/s320/Sutta-Kadhai.jpg)
படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே தியேட்டரில் ஒரு அலறல் சத்தம்… கேட்கவும் சகிக்க முடியாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே ஒருவர் தியேட்டரை விட்டு ஓடுகிறார். ‘’டே மச்சான் நில்ரா.. நில்ரா’’ என பின்னாலே ஓடுகிறார் அவருடைய நண்பர்.
முதலில் ஓடியவர் நின்றார். பின்னால் துரத்தி வந்தவனை பார்த்தார். என்ன நினைத்தாரோ கன்னம் பழுக்கிற மாதிரி பொளேர் என ஒரு அறைவிட்டார். பொறிகலங்கி பூமி அதிர்ந்திருக்கும் அந்த ஆளுக்கு. ‘’ஏன்டா… &$%&% பையா, நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன்.. என்னை ஏன்டா இந்த &%&*& படத்துக்கு கூட்டினு வந்த’’ என்று கத்தினான். அதற்குள் தியேட்டர்காரர்கள் வந்து இருவரையும் வெளியே அழைத்துச்சென்றனர்.
தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் என்னோடு படம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கும் கூட அதே உணர்வுதான். டீசன்ட் கருதி அமைதியாக அமர்ந்திருந்தோம். அண்மையில் வெளியான எத்தனையோ இல்லை இல்லை கடந்த பத்தாண்டுகளில் வெளியான எத்தனையோ மொக்கை படங்களில் எந்த படத்தினை பார்க்கும்போதும் இவ்வளவு கோபமும் வெறியும் ஆத்திரமும் வந்ததில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏஆர் ரஹ்மான் இசை என்ற ஒரே காரணத்திற்காக தியேட்டரில் போய் மாட்டிக்கொண்டு மரண அடி வாங்கின சக்கரைகட்டி படத்தை இந்த நேரத்தில் நினைவு கூறலாம். இது அந்த கொலைமுயற்சியை சர்வசாதாரணமாக தாவிச்செல்கிறது! படத்தின் டிரைலர் நன்றாக இருந்தால் படம் மொக்கையாக இருக்கும் என்பதற்கு இன்னொரு சாட்சி சுட்டகதை! டிரைலரையும் படத்தின் நடித்த நாசர்,பாலாஜியையெல்லாம் நம்பிப்போய் தியேட்டரில் உட்கார்ந்த பாவத்துக்கு கதறகதற... ஒன்றரை மணிநேரம்...
கொஞ்சம்கூட பொறுப்பேயில்லாமல் காமெடி என்கிற பெயரில் என்னத்தையோ போட்டு ரொப்பி , நடிப்பு என்கிற பெயரில் உவ்வ்வேக் நினைக்கும்போதே குமட்டுகிறது. காமெடி படம் என்பதால் எல்லோருமே லூசுமாதிரியே நடிக்கவேண்டுமா? பாலாஜி வெங்கி நாசர்.. என எல்லோருமே பைத்தியம் பிடித்ததுபோல நடந்துகொள்கிறார்கள்.
கதையும் லூசுத்தனமா… காட்சிகளும் லூசுத்தனமா… படம் எடுத்தவன் லூசா, நடித்தவன் லூசா இல்லை படம் பார்க்கும் நாம்தான் லூசா.. படம் பார்த்து முடிக்கும்போது நமக்கும் கூட லேசாக பைத்தியம் பிடித்தது போலத்தான் இருக்கிறது. கஞ்சா அடித்தால் மட்டும்தான் இப்படியெல்லாம் ஆகும்!
இந்த லூசுபடத்தில் தமிழ் காமிக்ஸ்களையும் அதை வாசிப்பவர்களையும்வேறு வேறு கேவலமாக கலாய்க்கிறார்கள். சகிக்கமுடியவில்லை.
குறும்படம் எடுக்கிற எல்லோராலும் சிறந்த முழுநீளபடத்தை எடுத்துவிட முடியாது என்பதற்கு இந்தப்படம் சாட்சி. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் சுபு இதற்கு முன்பு குறும்படம் எடுத்தாரா தெரியவில்லை ஆனால் இந்தபடமே யூடியூபில் கூட பார்க்க முடியாத ஒரு மொக்கை குறும்படத்தை ஒன்றரைமணிநேரம் திரையில் பார்த்தது போலத்தான் இருந்தது.
படத்தின் ஒரே நல்ல விஷயம் அது ஒன்றரை மணிநேரமே ஓடியது என்பதுதான் இதற்குமேல் பத்து நிமிஷம் ஓடியிருந்தாலும் இந்த விமர்சனத்தை எழுத அதிஷா உயிரோடு இருந்திருக்கமாட்டான்!
சைக்கோ மனநிலை கொண்டவர்கள் இன்னும் வெறியேற்றிக்கொள்ள உபயோகமான படம். மற்றபடி இந்த கெரகத்தை சுடாமலேயே இருந்திருக்கலாம்!