Pages

18 March 2014

அறுபத்து மூவர் விழாவிலிருந்து...





சென்னைக்கு வந்து பத்து ப்ளஸ் ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஒருமுறைகூட இந்த அறுப்பது மூவர் விழாவிற்கு சென்றதில்லை. மைலாப்பூர் என்றாலே ஏனோ ஒவ்வாமை. அது அய்யமாருங்க திருவிழா தோழர்! அதுக்கு போய் எவனாவது போவானா என்கிற முற்போக்கு மென்டாலிட்டியாகக் கூட இருக்கலாம். இந்த முறைதான் நண்பர் சக்ஸ் விழா துவங்கியதிலிருந்தே வற்புறுத்தி அழைத்த்துக்கொண்டிருந்தார். அவருக்காகவே இம்முறை அறுபத்துமூவரை தரிசிக்க கிளம்பினேன். மூன்றுமணிநேரம் சுற்றியதில் இது ஐயருங்களுக்கான திருவிழா இல்லை என்பதுமட்டும் புரிந்தது!

***

கடுமையான ட்ராபிக்கால் லேட்டாகி, நான் போகும் போதே அறுபத்து மூவரும் கோயிலை சுற்றி வலம்வந்து முடித்திருந்தனர். இப்போது மற்ற உள்ளூர் தெய்வங்களின் முறைபோல… வரிசையாக ஒவ்வொரு அம்மனாக வலம் வந்துகொண்டிருந்தனர். ‘’திருவள்ளுவர் வாசுகி’’ கூட இந்த வரிசையில் பார்க்க முடிந்தது! அவரையும் கடவுளாக்கி பட்டையும் கொட்டையுமாக அலங்கரித்திருந்தனர்! முண்டக கன்னி அம்மனின் தரிசனம் கிடைத்தது.

***

எங்கு பார்த்தாலும் கிராமத்து தேர்த்திருவிழாவைப்போல தாவணி கட்டிய சின்னப் பெண்கள், தெனாவெட்டாக திரியும் விடலைப்பையன்கள், கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு பட்டுசேலையை தூக்கிப்பிடித்த படி நடக்கிற இளம் தாய்மார்கள், வயசான பெண்கள், கையில் குச்சி ஐஸை சூப்பியபடி திருதிருவென வேடிக்கை பார்த்துக்கொண்டு திரிகிற குட்டிகுட்டி குழந்தைகள், தன் மகன் அல்லது மகளின் கைகளை பற்றியபடி நடுங்கிக்கொண்டே நினைவுகளை அசைபோட்ட படி நடக்கிற வயதான தாத்தா பாட்டிகள், தலைக்கு மேல் குழந்தையை உட்காரவைத்துக்கொண்டு அதோ பார் சாமி என காட்டுகிற அப்பாமார்கள், பின்னாலிருந்து நம்மை தள்ளி தள்ளியே நகர்த்துகிற நெரிசல் கூட்டம், நாலடிக்கு ஒருமுறை இலவசமாக கிடைக்கிற நீர்மோர், தூரத்தில் மைக்கில் அலறுகிற பக்தி பாடல், பல்லக்கில் பவனிவரும் சாமிகள், பல்லக்கு வண்டியில் அமர்ந்துகொண்டு விபூதியை தூக்கிவீசும் பூசாரிகள் என எல்லாமே எல்லாமே.. நம்முடைய ஊர் நினைவுகளை தூண்டுகிற ஐட்டங்கள்தான்.

***

ஒருபக்கம் ஒலிப்பெருக்கி வைத்துக்கொண்டு பந்தலுக்கு பந்தல் இஷ்டப்பட்ட பாட்டுகளை ஒலிக்க விட்ட உயிரை வாங்கிக்கொண்டிருந்தால் இன்னொரு பக்கம் பாங் பாங் என ஏதோ வினோதமான வாத்தியத்தை வைத்துக்கொண்டு இளைஞர்கள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தனர். ஜிகினா பேப்பர் ஒட்டிய அந்த கூம்புக் கருவியிலிருந்து வருகிற ஒலி மிகமிக மோசமாக இருந்தது. ஏதோ லோக்கல் VUVUZELAவாக இருக்குமென்று நினைக்கிறேன். வூவூசிலா சத்தம் சன்னமாக ஒலித்து காதை பஞ்சராக்கும். இது தடியாக ஒலித்து காதை கிழிக்கிறது. இதை தெருவுக்கு தெரு வரிசையாக கோன் ஐஸ் போல அடுக்கிவைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். நானும் ஒன்று வாங்கி ஊதலாம் என்று நினைத்தேன். பேரம் பேசினேன்… நான் கேட்ட விலை அவனுக்கு சுற்றியிருந்த இரைச்சலில் காதில் கேட்கவேயில்லை.. அவன் சொல்கிற விலையும் கேட்க விருப்பமாக இல்லை… கடைசியில் பேரம் படியாமல் வாங்கவில்லை.

***

வழியெங்கும் சின்ன சின்ன பந்தல்கள் வைத்து ஏதேதோ கொடுத்துக்கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் க்யூ.. க்யூவில்லையென்றால் கடும் தள்ளுமுள்ளு.. அடிதடி ரகளைதான். எல்லாமே ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ! ஊரில் தேர்த்திருவிழாவில் நீர்மோர், ஜூஸ் மட்டும் இலவசமாக கொடுப்பதை பார்த்திருக்கிறேன். இந்த மைலாப்பூர் விழாவில் எதுவேண்டுமானாலும் தானமாக கொடுக்கலாம் என்று இருக்கிறது போல. கிடைத்ததையெல்லாம் அவரவர் வசதிக்கு தக்கன எது முடியுமோ அதையெல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தனர். இதையெல்லாம் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு வாங்கும்போது நாமும் ஒரு குட்டிப்பையனாக உணர தொடங்கிவிடுகிறோம்.

***

ஒரு இடத்தில் நோட்புக்கு பேனா பென்சில்கள் கூட கொடுக்கப்பட்டன. குழந்தைகளுக்கு மத்தியில் நானும் போய் கையை நீட்டினேன் பேனா கொடுத்துக்கொண்டிருந்த குட்டிபையன் என் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஏதோ யோசித்துவிட்டு பேனாவை கொடுக்காமல் கையை வேறொரு பக்கமாக நீட்டினான். தம்பீ இங்கே ஓன்னு குடுப்பா என்றேன்.. அண்ணா ஒரு ஆளு ஒருபேனாதான்.. சும்மா சும்மா வராதீங்க என்றான். நான் இன்னும் வாங்கவே இல்லப்பா. என்றேன். பொய் வேற சொல்லாதீங்கண்ணா போங்கண்ணா இவ்ளோ பெரிசா இருந்துகிட்டு என்றான். இதற்குமேலும் பேசினால் அப்படியே லெஃப்டில் போய் மைலாப்பூர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என கருதி அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டேன்.

ஒரு பந்தலில் ரோஸ்மில்க் கிடைத்தது. பிறகு இன்னொரு பந்தலில் புளிசாதம், அப்புறம் சாம்பார் சாதம், அப்புறம் அருமையான சுவையான வெண்பொங்கல். வெண்பொங்கலுக்குதான் ஏக அடிதடி! என்னால் இலையை கூட வாங்க முடியவில்லை. நண்பர் பாரதிதம்பிதான் அந்த கூட்டத்திலும் முண்டியடித்து தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் வெண்பொங்கலை வாங்கிக்காட்டினார். அதே பந்தலில் ஒரமாக ஒரு பையன் கேட்பவருக்கெல்லாம் ஒரு வாட்டர் பாக்கெட்டை தூக்கி தூக்கி வீசி கொண்டிருந்தான். நான் ஒன்று கேட்டேன்.. நேராக வீசிய வாட்டர்பாக்கெட் நெற்றியில் பட்டு… உடைந்தது. அதைதுடைத்துப்போட்டுவிட்டு சுடச்சுட தரப்பட்ட அந்த சூப்பர் பொங்கலை சுவைத்தோம்! ஆஹா என்ன ருசி. வயிறு நிறைந்திருந்தது. பிரியாணி கூட கொடுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் செல்வதற்குள் முடிந்துவிட்டிருந்தது. வயிற்றிலும் இடமில்லை.

வாழைப்பழம், அப்புறம் தர்பூசணிப்பழம், திராட்சை ஜூஸ். இன்னொரு இடத்தில் ஐஸ்க்ரீம். வேறொரு இடத்தில் க்ரீம் பிஸ்கட். சாலையிலேயே தோசைக்கல் வைத்து கல்தோசைகளை வார்த்து வார்த்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அங்கும் கட்டுக்கடங்காத கூட்டம். வயிற்றிலும் இடமில்லை என்பதால் கடந்துவிட்டோம்.
நின்ற இடத்தில் ஒரு மேரி பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஆளுக்கு இரண்டு என்று கூட தானதர்மங்கள் செய்துகொண்டிருந்தார்கள். ஏழை மக்கள் வீட்டிலிருந்து வரும்போதே பெரிய பை ஒன்றை எடுத்து வந்து கிடைப்பதையெல்லாம் வாங்கி வாங்கி சேகரித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் மூட்டை அளவுக்கு தேத்தியிருந்தார்கள். நான்கூட ஒரு பை கொண்டுவந்திருக்கலாம் என்று வருந்தினேன்.

***

ஜூன்ஸ் அணிந்த இளைஞர் ஒருவர் டைரி மில்க் சாக்லேட்டுகள் கொடுத்துக்கொண்டிருந்தார். அனேகமாக காதலில் வெற்றியடைந்த இளைஞரின் நேர்த்திகடனாக இருந்திருக்கும்.. நானும் ஒன்னு வாங்கிக்கொண்டு காதலுக்கு மரியாதை செலுத்தினேன்.

***

எங்கு சுற்றினாலும் தொடர்ந்து ஒலிப்பெருக்கியில் ஒலித்துக்கொண்டிருந்த காணாமல் போனவர் பற்றிய அறிவிப்புகள் கேட்டுக்கொண்டேயிருந்தன. நான் சுற்றிய இரண்டு மணிநேரத்தில் 500 பேர் பெயராவது அறிவிக்கப்பட்டிருக்கும். அதில் ஐம்பது குழந்தைகளாவது தேறும். சில இடங்களில் சில தாய்மார்கள் குழந்தையை தொலைத்துவிட்டு கதறி கதறி அழுதுகொண்டிருந்ததை பார்க்க பதைக்க வைத்தது. சிலர் கைக்குழந்தையுடன் வந்திருந்து நெரிசலில் அந்தகுழந்தையை வைத்துக்கொள்ளமுடியாமல் அவர்களும் நசுங்கி குழந்தையையும் போட்டு நசுக்கி அது கதறி… அய்யயோ இவனுங்க பக்தில கொள்ளிய வைக்க…

ஆனால் அறிவிக்கப்பட்ட பெயர்களும் அவர்களுடைய ஊர்களையும் கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது, சென்னையை சுற்றியுள்ள எண்ணற்ற குட்டி குட்டி கிராமங்களிலிருந்தும் ஆட்கள் திரண்டு வந்திருந்தனர். உள்ளூர் மடிசார் மாமிகள் ஒப்பீட்டளவில் குறைவுதான். வந்திருந்த பலரும் திருவள்ளூர், திருவொற்றியூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கு அந்தப்பக்கம் வசிப்பவர்கள் என்பதை உணர முடிந்தது.

***

திடீர் திடீர் என போலீஸ்காரர்கள் யாராவது பையன்களை சட்டையோடு கொத்தாக பிடித்து இழுத்துச்சென்று அடி வெளுத்துக்கொண்டிருந்தனர். நண்பர் கேமராவோடு வந்திருந்தார், அவர் இப்படி அடித்துக்கொண்டிருந்த போலீஸ்காரரை படமெடுக்க.. போலீஸ்கார் நண்பரை ப்ரஸ் என நினைத்திருப்பாரோ என்னவோ ‘’ஒரு சின்னப்புள்ள மார புடிச்சி அமுக்கிருக்கானுங்க’’ என்று சொல்லிவிட்டு இன்னும் வலுவாக அவனுடைய பொடனியிலேயே ஒன்னு போட்டார். இப்படி பிடித்துக்கொண்டு போன பையன்களில் பலரும் குடித்திருந்தனர் என்பது குறிப்பிடப்படவேண்டியது.

***

சாந்தோம் சர்ச் இப்போது இருக்கிற இடத்தில்தான் மயிலாப்பூர் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துதான் போர்ச்சுகீசியர்கள் சாந்தோம் சர்ச்சை கட்டியதாகவும் , அதனால் நாம் இழந்த பெருமையை மீட்க வேண்டாமா என்ன செய்யப்போகிறோம் என்பது மாதிரி கேள்வி கேட்டு ஒரு துண்டு பிரசுரம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. யார் அடித்தது எந்த அமைப்பு ஒரு விபரமும் இல்லை. ஆனால் அந்த துண்டு பிரசுரத்தின் நோக்கம் சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு மயிலாப்பூர் கோயிலை விரிவுபடுத்த வேண்டும் என்பது.. இது மாதிரி கோயில் இடிப்புகளுக்குப் பேர் போனவர்கள் யார் என்பது நமக்கே தெரியும் என்பதால் பொங்கல் சாப்பிட்ட கையை துடைக்க அதை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டேன்.

***

மைலாப்பூர் கோயிலை ஒட்டி பாரம்பரியமிக்க ஒரு சிட்பண்ட் இருக்கிறது. கூட்டத்தில் அந்த பக்கமாக ஒதுங்கினோம். மாதம் இரண்டாயிரம், ஐந்தாயிரம் என சீட்டு பிடிக்கிறார்கள் போல… போஸ்டர் ஒன்று கண்ணில் பட்டது. அதை பார்த்துவிட்டு அந்த அலுவலக வாசலில் கடைபோட்டிருந்த ஒரு தாத்தாவிடம் என்ன தாத்தா இங்க சீட்டு போட்டா பணம் வருமா என்று விசாரித்தார் நண்பர். அந்த தாத்தா ஏற இறங்க ஒரு பார்வையை வீசிவிட்டு… வரும் ஆனா வராது என்றார்! என்ன தாத்தா 60 வருஷ பாரம்பரியம் அது இதுனு போட்டிருக்கே என்றோம். மீண்டும் பார்த்துவிட்டு நான் சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம் என்றார். அதற்குள் எங்களுடைய பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் வந்து… ‘’சார் உங்க பணத்தை கொண்டு போய் மைலாப்பூர் குளத்துல போடுங்க , ஆனா இங்க மட்டும் வேண்டாம்’’ என்றார்.. என்னங்கடா சும்மா விசாரிச்சதுக்கே திகில் படத்துல வர வாட்ச்மேன் மாதிரி இப்படி பயமுறுத்தறீங்க.. என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்க.. அந்த பக்கமாக ஏதோ பெருமாள் போல.. ஆளாளுக்கு கோயிந்தா கோயிந்தா என்று குரல் கொடுக்க…