Pages

05 June 2008

டேய் ராமா........உஷாரு.............

ஆண்டவா என முனுமுனுத்தவாறு கண் விழித்து இரண்டு கைகளையும் தேய்த்தபடி அதை இரண்டு விநாடிகள் கண்களால் அளந்து விட்டு நேரத்தை பார்க்க 9.10 '' அடடா இன்னைக்கும் லேட்டா '' என நினைத்து கொண்டே படபடவென வேகமாக ஹாலுக்கு வந்தான் .

''ஏன்டா ராமா இன்னைக்கு இன்டெர்வியூ இருக்குனு சொன்னியே ? '' என அம்மா தயங்கியபடி கூறுவதை கேட்டுக்கொண்டே சமையலறை நோக்கி விரைந்தான் .

''மதியம்தாம்மா , ஏம்மா காலைல காபிய கொஞ்சம் ரெடியா வைக்கலாம்ல , வாம்மா கொஞ்சம் காபி போட்டு குடு !!! '' கூக்குரலிட்டான் ராமன் .

''ராமா தூள் தீர்ந்துடிச்சுடா அப்டியே கைலிய கட்டிட்டு அண்ணாச்சி கடைக்கு போயி வாங்கிட்டு வந்திடேன் ''

''ஏம்மா காலைலயே டார்ச்சர் பண்ற ....... வேலை இல்லன்றதுக்காக இப்படிலாம் அசிங்க படுத்தாதமா....கண்ணண் இல்ல அவன போக சொல்லு '' என கோபம் காட்டினான் .

''இந்த வெட்டி ஜம்பத்துக்கெல்லாம் ஐயாவுக்கு குறைச்சலில்ல , ஒரு வேலைக்கு போக துப்பில்ல , பேச்சு மட்டும் துரை மாதிரி '' ஹாலிலிருந்து அப்பா வெறுப்பை உமிழ்ந்தார் .

திரும்ப பேச இயலாது விரக்தியும் கோபமுமாய் கையிலிருந்த பிரஷ்சை கோபத்துடன் வீசிவிட்டு தன் அறை நோக்கி விரைய அம்மா ஒடிச்சென்று சாந்தப்படுத்தினாள் .

ராமன் தன் கோபம் தணிந்து '' சரிமா காசு குடு வாங்கிட்டு வரேன் '' என கையை நீட்ட அவள் நான்கு நூறு ரூபாய் தாள்களைக் கொடுக்க
'' எதுக்குமா இவ்ளோ பணம் , காபி தூள் மட்டும் தான வேணும் ''
'' ஆமாடா ராமா 150 கிராம் வாங்கிக்க '' என்றாள் , அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை , யோசித்தவாறே கடைக்கு கிளம்பினான் .

போஸ்டர்களில் மந்திரிகள் சிரித்தனர் , ரோட்டில் ஒரு சில குழந்தைகள் அழுதபடி பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர் , தெருநாய் ஒன்று விளக்கு கம்பத்தில் காலைக்கடனை முடித்து கொண்டிருக்க அருகிலேயே , ஒரு மனிதனும் அதையே செய்து கொண்டிருந்தான் . சில கல்லூரி பெண்கள் பேருந்துக்கு காத்திருந்தனர் . அண்ணாச்சி கடையில் கூட்டம் அதிகமில்லை .

'' அண்ணாச்சி ஒரு கிங்ஸ் என்றான் '' அவர் எடுத்து கொடுக்க , வெளியே கட்டியிருந்த கயிற்றில் பற்ற வைத்த படி ஸ் என இழுக்க அப்பாடா என மனசெல்லாம் செயற்கையான புத்துணர்வு.

அதற்குள் ஒரு பெரியம்மா கடைக்குள் நுழைந்து காய்கறி பேரம் தொடங்கியிருந்தாள் , இவனும் உள்ளே நுழைந்து அவனது சுற்றுக்காக காத்திருந்தான் ,

'' ஏம்பா கிலோக்கு 200 ரூபாதான் முடியும் , தக்காளி சுமாராத்தான இருக்கு '' என அந்த பெரியம்மா கூற ராமனுக்கு தூக்கி வாறியது.

'' மேடம் வெங்காயம் கிலோ 150 ரூபாதான்ங்க வில கொறஞ்சுருக்குங்க அரைக்கிலோ போடட்டுங்களா '' அவனுக்கு ஒன்றுமே பிடிபட வில்லை ,

இதற்கும் மேல் இங்கே நிற்க கூடாதென்ற முடிவுடன் '' அண்ணாச்சி எனக்கு 150 கிராம் சன்ரைஸ் குடுத்தா கிளம்பிடுவேன் '' , அண்ணாச்சி அதை எடுத்து கொடுக்க , '' எவ்ளோங்க அண்ணாச்சி '' ,
'' 370 , 90 , 460 ரூபா குடுங்க ''
'' என்னது 460 ஆ , என்ன கணக்கு ''
'' சார் !! காபி 360 ரூபா , கிங்ஸ் 90 ரூபா ''

ஒன்றும் விளங்காமல் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு பித்து பிடித்தவனைப்போல வீட்டை நோக்கி நடக்கலானான் .

வீட்டிற்குள் நுழைய தம்பி அப்பாவிடம் பேசி கொண்டிருந்தான் '' அப்பா 150 பத்தாதுப்பா 200 எக்ஸ்ட்ரா வேணும்பா ப்ளீஸ்பா ''
'' ஏன்டா இங்கருந்து ஸகூலுக்கு 75 ரூபா பஸ்க்கு வர 75 ரூபா , மொத்தமா 150 , மேல 50 எதுக்கு''
'' அப்பா மாங்கா பத்த வாங்கணும்பா அதுக்குதான் கேக்குறேன் ப்ளீஸ்பா '' என பேசுவதை பார்க்கும் போதே ராமனுக்கு பாதி பைத்தியம் பிடித்தது போல இருந்தது.
அப்பா பணத்தை கொடுத்துவிட்டு தன் பழைய சைக்கிளுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தார் , காபி பொடி ஞாயபகம் வர உள்ளே ஒடினான் , அம்மா விறகுகளை உடைத்து கொண்டிருந்தாள் , ஒன்றும் விளங்காதவானாய் , அமைதியாக தூளை அம்மாவிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் .

'' இங்க என்ன நடக்குது , எல்லாருக்கும் என்னாச்சு , '' என தனக்குள்ளேயே பேசியபடி, தன் அறைக்குள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தான் , வெகு நேரம் இதை பற்றிய சிந்தனையில் நேரம் போனதே தெரியவில்லை , மணி 2 ஐ கடந்திருந்தது , ''ஐய்யோ இன்டேர்வியூ முடிஞ்சிருக்குமே '' என்று எண்ணிய படி திரும்பினான் ,பின்னால் அவன் அப்பா நின்றபடியே மதுரையை எரிக்க போகும் கண்ணகி போல அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க , அரண்டவனாய் '' அப்பா ஸாரிப்பா அப்பா ஸாரிப்பா அப்பா ஸாரிப்பா ''
என இடைவிடாமல் ஜபம் போல கூற ஆரம்பித்தான் ,

'' என்னங்க பாருங்க உங்க புள்ளைக்கு உங்க மேல எவ்ளோ பாசம் னு !!! அவன போயி எப்ப பாரு கரிச்சு கொட்டிகிட்டு , இங்க வந்து பாருங்க கனவுல கூட உங்ககிட்ட ஸாரி கேக்கறான் '' என அம்மா கூறுவதை கேட்டதும் , திடுக்கிட்டெழுந்தான் ராமன் .

'' இவளவும் கனவா யப்பபா'' என எண்ணியபடி அம்மா கொணர்ந்த காபியை வாயில் வைத்து உறிஞ்சிய படி அன்றைய நாளிதழை பார்க்க தலை சுற்றியது முதல் பக்கத்தில்,


'' மீண்டும் 17 வது முறையாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை 25% உயர்வு , ''


வாசலில் அப்பா தனது பழைய சைக்கிளை துடைத்து கொண்டிருந்தார் .