Pages

08 December 2009

ஓட்டுக்குப்பணம் !







'' அடேய் நீங்கள்ல்லாம் நல்லா இருப்பீங்களா! இப்படி வீட்டுக்கு வீடு கவர்ல காசு வச்சு குடுத்து ஓட்டு வாங்கறீங்களே , உங்களையெல்லாம் தட்டிக்கேட்க யாருமே இல்லைனு நினைச்சீங்களா.. இருங்கடா உங்களையெல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவான்டா! ''

எப்போதும் திண்ணையில் அமர்ந்து கொண்டு தினதந்தி படிக்கும் பெரியவர் அவர். தமிழ் சினிமாவில் ரவுடிகளை தட்டிக்கேட்கும் அப்பாவிகளை ஒத்தவர். பெயர் கோதண்ட ராமன். இன்று அளவுக்கதிகமான கோபத்தோடு கத்திக்கொண்டிருந்தார் . இரண்டு நாட்களாகத்தான் இந்த கோபம்.ஓட்டுக்கு பணம் என்று அசுரவேகத்தில் செயலாற்றிக்கொண்டிருந்தன அந்த ஊரில் போட்டியிடும் இரண்டு பிரதான கட்சிகளும் . அதுவும் அவரது தெருவில் கண்ணெதிரே நடப்பதை பார்த்து மிகவும் மனவருத்தத்தில் இருந்தார் அவர்.

பாமதேக கட்சியின் உறுப்பினர்கள் கையில் கத்தைகத்தையாய் கவருடன் தெனாவெட்டாய் நின்றபடிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

''என்ன பெரிசு உடம்பு எப்படி இருக்கு ''

''எனக்கு என்னடா என்பத்தஞ்சு வயசிலயும் கல்லுமாதிரிதான் இருக்கு.. உன்னைத்தான் தான் கொல்லைல கொண்டு போகப்போகுது.. பார்த்திட்டே இருங்க.. எல்லாத்தையும் கடவுள் பார்த்துட்டுத்தாண்டா இருக்கான்''

''யோவ் போயா வென்று , ஓவரா பேசின கைய கால வாங்கிருவோம் ஓடிப்போயிரு ''

சுற்றி பொது மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க , தொண்டர் ஒருவன் ''இன்னாமாமா இவன்கிட்ட போய் வாய்லபேசிட்டு '' அவரது சட்டையை பிடித்து அடிக்க பாய்கிறான்.

''மாமா விட்றா..பெரிசுக்கு வேற வேலை இல்ல.. ரெண்டு அடி வச்சா செத்துரும்.. இன்னா பெரிசு பாத்தல்ல பசங்கள ம்னாலே ஆளயே தூக்கிருவானுங்க எப்படியும் ரெண்டு வருஷத்தில செத்துருவ இன்னாத்துக்கு இப்படி அலம்பல் பண்ற மூடிக்கிட்டு பேப்பர் படிச்சிட்டு வீட்டில பில்டர் காபி தருவாங்க அத குடிச்சிட்டு கம்முனு கிடக்கறதுதானே''

''டேய் நீங்கல்லாம் நல்லா இருப்பீங்களா.. விடமாட்டேன்டா நீங்க பணம் குடுத்து ஓட்டு சேக்கறத விடமாட்டேன்டா! இது நான் சுதந்திரம் வாங்கி குடுத்த நாடுடா! ''

''நாங்க இந்த வாட்டியும் ஜெயிச்சு நல்லாத்தான் இருப்போம்.. நீ பொத்திகிட்டு கிட.. ஓவரா பேசினா வாய கிழிச்சிருவோம்!''

தன்னால் ஏதும் செய்ய இயலாத நிலையை நினைத்து கவலையாய் திண்ணையில் வந்து தேமேவென அமர்ந்து கொண்டார்.

பிச்சைக்காரர்கள் போல கட்சித்தொண்டர்கள் ஒரு ஒரு வீடாய் போய் தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு கவர் கொடுத்து அவரவர் குலதெய்வங்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டிருந்தனர். சிலரிடம் வெற்றிலைப்பாக்கிலும் சிலரிடம் பாலிலும் சிலரிடம் கற்பூரம் அடித்தும் சத்தியம் வாங்கிக்கொண்டிருந்தனர். சத்தியமான ஓட்டுக்கள்.

கோதண்டராமனுக்கு வயிறு பற்றிக்கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு வாங்கித்தந்த சுதந்திரம் இப்படி கவருக்குள் போகிறதே என்று.

முடிவெடுத்துவிட வேண்டியதுதான். இதற்கு மேலும் காத்திருந்தால் நாட்டையே குட்டிசுவராக்கி விடுவார்கள் என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார்.

விடிந்ததும் முதல் வேலையாக போலீஸை பார்க்க வேண்டும் , அவர்களிடம் ஒரு புகார் கைப்பட எழுதித்தர வேண்டும்... இல்லை இல்லை அவர்களும் லஞ்சம் வாங்கிக்கொண்டு விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. பேசாமல் தேர்தல் கமிஷனுக்கு தந்தி கொடுத்துவிட வேண்டியதுதான்.. இல்லாவிட்டால் கலெக்டரிடம் பேசலாமா! .. ஐ.ஜி.. தாசில்தார்.. பஞ்சாயத்து போர்டு தலைவர் .. யாரிடம் இவர்களை குறித்து புகார் செய்வது.. யாரிடம் சொன்னால் வேலை நடக்கும்.. ஆயிரம் ஆயிரம் குழப்பங்களுடன் தூங்கிப் போனார்.

விடிந்தது..

''டேய் மாமா என்னடா இந்தாளு வீடு இப்படி கிடக்கு.. ''

'' தெரிலயே மாமா ''

''இன்னாடா கிழவன் என்னானான் ''

கோதண்டராமனின் பேரன்கள் இருபுறமும் கைத்தாங்கலாக அவரை தூக்கி கொண்டு வெளியே வந்தனர். உயிர் இருந்தது. ஆனால் உடலெங்கும் அடி . முகமெல்லாம் வீங்கி இருந்தது. சட்டையெல்லாம் கிழக்கப்பட்டிருந்ததது.

''இன்னா மாமா கிழவன்னு கூட பாக்காம அடிச்சிருக்கானுங்க.. '' தொண்டன் ஆச்சர்யமாய் கேட்டான்.

''நம்மாளுங்க அடிக்கலயே.. அட்சிருந்தாலும் சொல்ருப்பானுங்க .. யாரா இருக்கும் மச்சி பாக்கவே பாவமா இருக்குடா.. எவன்டா இந்தாள இந்த அடி அடிச்சது.. நம்ம முத்துவுக்கு போன் போடு அவன்தான் நேத்திக்கு ரொம்ப டென்சனான்''






''மாமா நான் ஏற்கனவே கேட்டேன் அவன் இல்லியாம் ''

********

அடுத்த நாள் தினப்பத்திரிக்கையில் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி.

சுதந்திர போராட்ட வீரர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட பொது மக்கள். முன் விரோதம் காரணமா?

டீக்கடையில் இந்த செய்தியை படிக்கும் ஒருவர்.

'' கிழவனுக்கு வேணும்யா.. அவன் கட்சி அவன் கொள்ளையடிச்ச காச மக்களுக்கு குடுக்கறான்.. இவனுக்கு இன்னா வந்துச்சு.. இவன் இன்னாத்துக்கு குடுக்காதனு நடுவுல நிக்கறான்.. எனக்கு வேற மூணு நாளாச்சு இன்னும் கவரு வரல.. போய் ஒரு எட்டு கட்சி ஆபீஸாண்ட பாத்துட்டு வந்துடறேன்.. ''


பாமதேகவும் மாமாபீகவும் மாறி மாறி கவர்கள் கொடுத்தக்கொண்டிருந்தனர்.


**********


**************

இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை எட்டி உள்ளதால் மீள்கதை!