Pages

27 August 2009

உயிரை வாங்கும் செல்போன்!



செல்போனில் பேசுவது சிலபேருக்கு எப்போதுமே எரிச்சலூட்டும் பிரச்சனைதான். காதலியோடு பேசுறதுன்னா ஓகே! . பிரச்சனைனாலும் சுகம்னாலும் அதில் முதல் பிரைஸ் எனக்கே எனக்குதான். ஏனோ அந்த கருமத்தை வாங்கின காலத்திலிருந்தே பல சிக்கல்கள். இருந்தாலும் அதை விட்டொழிக்கவும் முடியலை.

செல்போனில் நான் பேசுவது எனக்கு எப்போதும் உபத்திரவமாய் இருந்ததில்லை. அனைவருக்கும் அப்படித்தான். மற்றவர்கள் செல்போனில் பேசுவதுதான் பிரச்சனை, சிக்கல், மண்டை குடைச்சல் மண்ணாங்கட்டி எல்லாமே!.

அலுவலகத்தில் பக்கத்துச்சீட்டு சக ஊழியர். போனை காதில் வைத்தால் இவர் பேசுவது ஊருக்கே கேட்கும். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் பிரக்ஞை இன்றி காது கிழிய பேசிக்கொண்டே இருப்பது. இடையில் நமக்கு ஏதாவது கால் வந்துவிட்டால் போச்சு! நமக்கு போன் பண்ணியவருக்கு நாம் பேசுவது கேட்கிறதோ இல்லையோ பக்கத்து சீட்டுக்காரர் குரல் மட்டும் நன்றாக கேட்டுக்கொண்டே இருக்கும். சமயத்தில் அதற்கு அவர் பதில் சொல்லும் கொடுமையும் நடப்பதுண்டு!

நெருக்கமான நண்பர் அவர் உலக விசயங்களையும் உள்ளூர் மேட்டர்களையும் அலச ஆரம்பித்தால் ஒன்றைரை ஆண்டுக்கு ரூம்போட்டு பேசும் சகல வல்லமை படைத்தவர். அவரோடு கழிக்கும் நேரமெல்லாம் பொன் போன்றதாய் கருதுவேன். அவரிடம் ஒரே பிரச்சனை. நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு போன் வரும் ( செல்போன்!) அவ்வளவுதான் , பக்கத்தில் ஒரு பரதேசி நிற்கிறானே என்கிற எந்த பிரக்ஞையும் இன்றி செல்போனில் மூழ்கிவிடுவார். நாம் தேமே என அவர் வாயையும் மூஞ்சையும் குகுகுகு குட்டி செல்போனையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எரிச்சலாக இருக்கும்.

இன்னொருவர் மிக நல்ல அறிவாளி. நிறைய படித்தவர். பண்புள்ளவர். பெரிய பதவியில் இருப்பவர். போனில் அழைத்தால் அமைதியாய் பேசுவார். அவரோடு உரையாடுவது எனக்கு எப்போதுமே சக்கரைக்கட்டிதான். நேரில் அதிகம் சந்திக்க வாய்ப்பில்லாததால் போனில் அழைத்து நிறைய விசயங்கள் குறித்து கதைப்போம். மிக ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அதி இன்னொரு கால் வருது கட் பண்ணிட்டு கூப்பிடறேன் என டொக் என போனை வைத்து விடுவார். நமக்குதான் ஆர்வம் அதிகமாச்சே கால் வரும் கால் வரும் என அந்த நபர் போன் பண்ணுவாரா மாட்டாரா என்ன ஆச்சோ ஏதாச்சோ என நினைத்துக்கொண்டு காத்திருப்போம். ஒரு முறை இரு முறை என்றால் பரவாயில்லை நான் எப்போது பேசினாலும் நடுவில் யாராவது போன் பண்ணித் தொலைத்து விடுகிறார்கள் போல!

மற்றொருவர் அவரும் நண்பர்தான். வெளியூரில் வசிப்பவர். இவருக்கு வாய் காது வரை. பேச ஆரம்பித்தால் சாமான்யமாக போனை வைக்க மாட்டார். ஒரு கன்டிசன் அது பெண்களோடு மட்டும். ஆண்கள் என்றால் ம்ம் அப்புறம், ஓகோ , ஓகே, சரிப்பா தேங்க்ஸ் பை இதுதான் அவரது உரையாடலாக இருக்கும். அவரையும் ஒரு மனிதராக மதித்து ஒரு டோமரு போன் பண்றானே என்கிற _______ கொஞ்சம் கூட இருக்காத என்ன!

இன்னொருவர், இவரும் வெளியூர் ஆள்தான். இவரிடம் யார் வேண்டுமானாலும் மணிக்கணக்கில் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் தன் வேலையில் மட்டுமே கண்ணாக இருப்பார். நடுநடுவே ம்ம் ஆமாஆமா என்று நமது உரையாடலை கவனிப்பது போன்றதொரு பாசாங்கு வேறு. காதில் போனை வைத்துக்கொண்டு கவனத்தை பக்கத்து சீட்டு பருவமங்கையிடம் வைத்திருந்தால்! ம்ம் லூசு போல நாம் எதையாவது பேசிக்கொண்டிருப்போம் , நடுவில் ஏதாவது கேட்டால் , என்ன என்ன என்று பதறுவது , பின் மீண்டும் ஒரு முறை முதலில் இருந்து துவங்க வேண்டும். வேலையில் மும்முரமாய் இருக்கிறேன் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்ல ஏன் தயக்கம். அதை சொல்லிவிட்டால் நாம் ஏன் அந்த நபரை தொந்தரவு செய்யப்போகிறோம். பேசறவன் கேனப்பையனா இவிங்க இருந்தா ஏரோபிளேன் ஓட்டிகிட்டே போன் பேசுவாங்களாம்!

மிகமுக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். சரக்கடித்துவிட்டு போதை ஏறவில்லையென்றால் செல்போன்தான் ஊறுகாய் இவர்களுக்கு. எவனுக்காவது போன் போட்டு யாரிடம் பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் மானவாரியாக அளந்து கொட்டுவது. அரசியல் முதல் ஆபாசம் வரை பேசுவார்கள். அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? பிரச்சனை ரொம்ப சிம்பிள் இப்படி பேசும் நேரம் இரவு 1 மணிக்கு மேல்! சாமானியத்தில் போனை வைத்தாலாவது பரவாயில்லை. சமயத்தில் விடியும் வரைகூட பேசிக்கொண்டே இருப்பார்கள். நட்பு காரணமாக நாமும் வேறு வழியின்றி.. என்னத்தை சொல்ல!

இந்த கான்பரன்ஸ் கால் ஆசாமிகள் அலும்பு அதற்கும் மேல் , யாரையாவது கான்பரன்ஸ்காலில் வைத்துக்கொண்டு நம்மை அந்த மூன்றாம் ஆளிடம் மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது. இப்படி கோர்த்து விட்டு ரத்தகளறி ஆக்குவதில் அலாதி பிரியம் இவர்களுக்கு.

இப்படி ஆளாளுக்கு போட்டு வதைச்சா எப்படித்தான் ம்ம் என்னத்த சொல்ல! இதுக்கு நடுவில் இந்த மிஸ்டு கால் பேர்வழிகள் , மொக்கை எஸ்எம்எஸ் கயவர்கள் , கிரெடிட்கார்ட் , பர்சனல் லோன் , ரிங்டோன் , கால்ர் டோன் , அந்த ஆபர் இந்த ஆபர் , ஆயாவுக்கு டிக்கட்டு , கக்கூஸ் போக பக்கட்டு அது இது இப்படி அப்படி...... முடியல..