Pages

18 December 2009

கோவை மாறிவிட்டது!


கோவை மாறிவிட்டது!-1

கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொருமுறை கோவைக்குச் செல்லும் போதும் வியப்படைகிறேன். சின்னக் குழந்தையின் வளர்ச்சியைப் போல கண்கூடாக அதைக் காணவும் முடிகிறது. அந்த மாற்றம் எத்தகையது? அந்த வளர்ச்சி எதுமாதிரியானது? என்பதில்தான் சிக்கலே. சில மாற்றங்கள், நகரத்தின் முன்னேற்றத்தைக் காட்டினாலும் பலதும் அந்த குளிர்-நகரம் தன் இயல்பை இழந்து வருகிறதோ என பதற வைக்கின்றன. நல்லது கெட்டது என இரண்டுமாய் கலந்து கட்டிய அந்த வளர்ச்சியை, சில நாட்கள் நகரத்தின் சந்துபொந்துகளிலும் பிரதான சாலைகளிலும் தனியே சுற்றித்திரிகையில் காண முடிந்தது.

கொஞ்சம் விளையாட்டகவே தொடங்குவோம். வ.உ.சி பூங்கா! சிறுவயது முதலே எனக்கும் என் நண்பர்களுக்குமான சரணாலயம். பள்ளி நேரத்தில் கட் அடித்தது தொடங்கி கிரிக்கெட் கற்றுக்கொண்டது, அரை பீரை ஆறு பேர் அடித்து பார்த்தது , சைட் அடித்தது, ஈவ் டீசிங்கில் சிக்கி உதைவாங்கியது, பின் அந்த ஆறு பேரும் பல ஊர்களுக்கும் பிழைக்க செல்லும் முன் லிட்டர் கணக்கில் கண்ணீரோடு விடை பெற்றது வரை அனைத்திற்கும் ஒரே சாட்சி அந்த பூங்காவும் அதன் முன்னாலிருக்கும் பெரிய மண் அடர்ந்த மைதானமும். இன்றைக்கும் ஊரிலிருந்து திரும்பி வரும் வெளிநாட்டு நண்பனை காண தோதான இடம் அந்த மைதானத்தின் கட்டக்கடைசியிலிருக்கும் ஒற்றை மரத்தடிதான்.

அந்த மைதானத்தில் இப்போதும் பலர் கிரிக்கெட் ஆடுவதை காணமுடிந்தது. கார்க் பந்தில் விளையாடுவதே எட்டு ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது. டென்னிஸ் பந்தில் விளையாடுபவர்களை அந்த மைதானத்தில் பார்ப்பது மிக மிக அரிது. ஆக்ரோஷ பவுலர்களின் பந்துவீச்சில் ஸ்டம்புகள் தெரித்து உடையும் , பேயடி அடிக்கும் பேட்ஸ்மேனின் பந்தடித்து ரத்தம் சொட்ட விளையாடும் சிறுவர்களை பார்த்திருக்கிறேன். இந்த முறை கார்க் பந்துகளே இல்லாத ஒரு மைதானம். டென்னிஸ் பந்துகளின் ராஜ்யமாய் காட்சியளித்தது. அதிலும் பலர் கலர்கலராய் யுனிபார்மெல்லாம் போட்டுக்கொண்டு காலில் ஸ்போர்ட்ஸ் ஷூவுடன் விளையாடுவதை பார்த்தேன். வெற்று காலுடன் பேட் கட்டிக்கொண்டு ஜீன்ஸ் பேண்ட் முழுக்கை சட்டை என விளையாடியதெல்லாம் மாறிவிட்டது. விசாரித்தேன். யாரோ சிறுவன் கார்க் பால் தலையில் அடித்து இறந்து போனதால் கோவை முழுக்கவே கார்க்கில் விளையாடத் தடையாம். அந்த சிறுவன் எப்போது இறந்தான் யார் அடித்தார்கள், என்ன ஆயிற்று விபரங்கள் இல்லை! எப்போதாவது விளையாடும் பரியல் கிரவுண்டிலும் அதே நிலை. அங்கேதான் பந்து தலையில் பட அதிக வாய்ப்புகள் உண்டு. குனியமுத்தூர் கார்பரேஷன் கிரவுண்டிலும் சேம் கேம்! கார்க் பந்தில் விளையாட வேண்டும் போலிருந்தது , நண்பனின் வீட்டின் தோட்டத்தில் எப்போதோ மறைத்து வைத்த இரண்டு பந்துகள் இன்னும் கிடக்கிறது தூசி படிந்து!

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சுற்றியிருக்கும் குளங்கள் நன்றாக பராமரிக்கப்பட்டு நீர்நிலைகள் நிறைந்து காணப்பட்டது. இம்முறை தலைகீழ். வாலாங்குளம் மற்றும் பெரிய குளத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. சிறுதுளி அமைப்பினரின் முயற்சிகளைக் கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன். கோவையின் நீர்நிலைகளை காப்பது என்னும் முடிவோடு களமிறங்கிய போது என் பத்து ரூபாயையும் கொஞ்சம் உழைப்புதவிகளையும் செய்திருக்கிறேன். சிறுதுளி அமைப்பு இன்னும் செயல்படுகிறதா? பிரிக்கால் பிரச்சனையில் அந்த அமைப்பும் சேர்ந்து மூழ்கியதா? தெரியவில்லை. விசாரிக்கவும் விருப்பமில்லை.
அவினாசி ரோடு மேம்பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வெறும் கார்களும் பஸ்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாலத்தின் கீழே வழியமைக்கப்பட்டு சென்னை டிராபிக் போல எடக்கு மடக்காக திருப்பி விடுகிறார்கள். ஊருக்குள் டூவிலர்கள் எண்ணிக்கை தாறுமாறாக பெருகியிருக்க வேண்டும். நகர எல்லைக்குள் சைக்கிள் உபயோக்கிப்பவர்களை காண்பது அரிதாக தெரிந்தது. நிறைய மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்களை காண முடிந்தது. அவர்களுடைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதைப்பற்றி பின்னால் பேசுவோம்.

நான் பார்த்து அதிசயித்த ஒரே விசயம். ரேஸ்கோர்ஸ் ரோடு! இன்னும் அதே பழமையுடனும் வளமையுடனும் , அதை சுற்றி ஓடும் கணவான்களுக்கு இன்னும் கொஞ்சம் அடிப்படை வசதிகளோடு அப்படியே இருக்கிறது. ஒரு மரம் கூட வெட்டப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு மரத்திலும் எங்கள் ஆறு பேர் இன்ஷியலும் இன்னும் இருக்கிறது! எதற்காக ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ரேஸ் கோர்ஸை சுற்றி ஓடி ஓடி களைத்து அமர்ந்து கொண்டு அந்த மரங்கள் ஒவ்வொன்றிலும் செதுக்கிய நினைவுகளோடு!


-நேரமிருந்தால் தொடரலாம்...