Pages

06 August 2010

ஏழாம் உலகம்




பழனிக்கு பாதயாத்திரை போவதென்றால் கேட்கவே வேண்டாம். எங்கள் நண்பர்களுக்கு பஞ்சாமிர்தம் சாப்பிடுவது மாதிரி! கையில் கம்போடு , தோளில் முருகன் படம் போட்ட மஞ்சள் அல்லது காவி தோள்பையோடு கிளம்பிவிடுவோம்.

அரைடிராயரோடு பொள்ளாச்சி-உடுமலைப்பேட்டை வயா பழநி இதுதான் எங்க ரூட்டு!. நடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். பேருக்கு மாலை! நெற்றியில் பட்டை! ஒவ்வொரு முறை பழனிக்குப் போகும் போதும் எங்களுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பழனிமலைப் படிக்கட்டு பிச்சைக்காரர்கள். சிலரை வருடந்தோறும் சந்திக்க நேரிடும். மிகமிக சுவாரஸ்யமான மனிதர்கள். அவர்களிடம்தான் கஞ்சா கிடைக்கும். நண்பர்களில் பலரும் அதற்காகவே பாதயாத்திரை வருவதும் உண்டு.

நீளமான தாடி! கண்களில் லேசான போதை , காவி உடை, தரையில் சின்னதட்டு , முகத்தில் எகத்தாளமான பார்வை! இதுதான் பழனிமலை சாமியார்களின் உருவம்! விஷ்ணுவின் ஆனந்த சயனம் போல் படுத்திருக்கும் போஸைப் பார்த்தால் அடடா யாருக்குமே காட்சியளிக்காத சித்தர் பெருமானோ என்று நினைக்க தோன்றும். உண்மையில் அவர்களோடு கஞ்சா அடித்தபடி பேச்சுக்கொடுத்தால் சோகமான காமெடியான அசைபோடக்கூடிய ஆயிரமாயிரம் கதைகள் கிடைக்கும். பழனிமலை அடிவாரத்தில் இவர்களைபோன்ற பிச்சைகாரர்களுக்காவே நோட்டுகொடுத்தால் சில்லரை கொடுக்கும் சில்லரை விற்பனையாளர்களை பார்த்திருக்கிறேன். பத்துகாசுகளை பத்துரூபாய்க்கு நீளமாக அடுக்கி வைத்திருப்பார்கள். எனக்கும்கூட அப்படி ஒருமுறை நிறைய சில்லரை வாங்கி படிக்கொரு பிச்சைகாரருக்கும் காசு போட்டபடி மலையேற ஆசை இருந்தது. நல்ல வேளை காசில்லை.

பல கிலோமீட்டர்கள் நடந்து நடந்து கால்வலியோடு மலையேறாமல் இவர்களோடு அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்போம்! முருகன் எங்கே போய்விடப்போகிறார்! காலை ஐந்து மணிக்கு முன்னால் போனால் ஆள் அரவம் இருக்காது சன்னிதானத்தில்! நான்,முருகன்,ஐயரு அவர்கைல இருக்கும் மணிமட்டும்தான் இருக்கும்.

இந்த சாமியார் பிச்சைகாரர்களின் பேச்சிலும் இறைவனைக்காணலாம். (கஞ்சா உதவியோடு!) ச்சும்மா பேசிக்கொண்டிருக்கும்போதே பல மாதம் குளித்திராத உடலிலிருந்து குமட்டும் துர்நாற்றமெடுக்கும். உடலில் ஏதாவது தீராத காயங்கள் இருந்தால் , துர்நாற்றமும் இருமடங்காகும். அதையும் மீறி அந்த மனிதர்களிடம் ஏதோ ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருந்தது. அவர்களுக்கும் இளைப்பாறவும் எதையோ பகிர்ந்து கொள்ளவும் எங்களைப்போல இரண்டு பேர் தேவையாய் இருந்திருக்கலாம். ‘ அடேய் வினோத்து சின்ன உதவி பண்ணு! அப்படியே கீழால போனியின்னா கடலைமிட்டாய் விப்பான் நாலு வாங்கிக் குடேன் , அப்படியே நாலு பிளேன் சிசரு!’ பதினைந்து வயதில் கிடுகிடுவென வேகம்பிடித்து மலையடிவாரக்கடைக்கு ஓடுவேன். நாற்றமடிக்கும் சில்லரைகாசுகளை எண்ணிஎண்ணி கொடுப்பார் அந்த கிழவர். தப்பித்தவறியும் அதை முகர்ந்து பார்க்க மாட்டேன்!. அவருக்கு துணையாக காலில்லாத கிழவி , ஒருவயதான குழந்தை , உடல்ஊனமுற்ற மேலும் சிலர் என நிறைய நிறைய பேர் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன்.

அவர்களை கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த வருடந்தோறும் சந்திக்கிற சாமியார் தாத்தாவிடம் கேட்பேன் ‘’ஏஞ்சாமி இவஙனுங்க்கூட உக்காந்திருக்கீங்.. அந்தல்ல போய் உக்காந்துக்கலாம்லோ’’ என்பேன் , அவிங்கதான்டா என் உறவுக்காரய்ங்க.. இதோ அங்கன இருக்கானே கால்சூம்பிப்போனவன் என் மொத மவன்.. இதா இங்கிட்டு கிடக்குல சின்னக்குட்டி இது என் பேத்தி என்று ஒவ்வொருவருக்கும் ஒரு உறவு முறை சொல்வார். நானும் கூட அதை உண்மையென்றே நம்பியிருக்கிறேன். அவர்கள் ஏன் பிச்சை எடுக்க வந்தார்கள் என்கிற கேள்வி மட்டுமே என்னிடம் இருந்தது. இரவில் எங்கே செல்வார்கள், எங்கு தூங்குவார்கள்.. காலில்லாத முடமான கண்தெரியாத இன்னும் இன்னும் எப்படி மேலே வந்தார்கள் தெரியாது! அவர்களுடைய வாழ்க்கை மர்மமானதாகத்தான் இருந்தது. நான் கேட்டதில்லை.

இந்த ஆண்டு ஜனவரி ஒன்று , புத்தாண்டு தினத்தில் பத்திரிகை வேலையாக பழனி செல்ல வேண்டியதாயிருந்தது. புது வருஷமும் அதுவுமா இவ்ளோதூரம் வந்துட்டோம் அப்படியே முருகன தரிசனம் பண்ணுவோம் என்றார் என்னோடு வந்திருந்த இன்னொருவர். கிளம்பினோம். கண்கள் படிகளையே மேய்ந்து கொண்டிருந்தது. ஒரு சாமியாரையும் காணவில்லை. கால்முடமான,கண்தெரியாத ம்ஹூம் யாருமேயில்லை. துடைத்து சுத்தமாக இருந்தது. கடைகள் இருந்தது. மற்றபடி யாருமே இல்லை. இது இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த மாற்றம். அந்த பிச்சைகாரர்களும் சாமியார்களும் எங்கே? சிலரிடம் கேட்டபோது பிச்சை எடுக்க முழுத்தடையாம்! அவர்கள் எங்கே?

ஏழாம் உலகம் நாவல் இந்த பிச்சைக்காரர்களின் வாழ்வியலோடு பயணிக்கிறது. குறிப்பாக பழனி திருவிழாக்களுக்காக திரட்டி கொண்டுவந்து பிச்சையெடுக்க வைக்கப்படும் பிச்சைகாரர்கள் என்கிற உருப்படிகளின் வாழ்க்கை. உருப்படிகளான அங்கஹீனமான மனிதர்கள். அவர்களுக்கு ஆன்மா இல்லை... என்று கூறியபடியே அவர்களை வாங்கி விற்று வாடகைக்கு எடுத்து... உபயோகிக்கும் முதலாளி மனிதர்கள். உருப்படிகளை விற்கின்றனர். சிலர் வாங்குகின்றனர். உருப்படிகள் சம்பாத்தியம் தரும் அஃறிணைகளாக உலா வருகின்றன. உருப்படிகள் பிள்ளைப்பெற்றுத் தருகின்றன. உருப்படிகள் போடும் குட்டிகளும் விற்கப்படுகின்றன. மிகப்பெரிய சந்தை இதற்காக நாடுமுழுக்க இயங்குகிறது. உருப்படிகளால் வெளி உலகிற்கு தப்பிக்கவே முடியாத சந்தை! சிக்கிக்கொண்டால் மீளமுடியாத பாதாள உலகம்.

இங்கே நாம் அனைவரும் எதையாவது எப்போதும் விற்றுக்கொண்டிருக்கிறோம். நமக்கா சந்தை என்பதெல்லாம் போய் சந்தைக்கு நடுவில்தான் நாம் இருப்பதாக எண்ணுகிறேன். ஜெயமோகனின் இந்தக்கதையிலும் ஒவ்வொரு பாத்திரமும் எதையாவது விற்கிறது. உடல்சார்ந்த விற்பனை தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருக்கிறது. எல்லோருக்குமே ஏதாவது தீராத ஆசை இருக்கிறது. அது கடைசி வரை நிறைவேறுவதேயில்லை. அல்லது நிறைவேறுகிறது. மற்றவர்களுக்கு தவறாக தெரிவது செய்பவருக்கு சரியாகத்தெரிகிறது. அதற்கான தர்க்கமும் இருக்கிறது.

பிச்சைக்காரர்களை வாங்கி விற்பதென்பது நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.. ஆனால் சந்தையில் ஆடுமாடுகள் வாங்கி விற்பதைப்போன்றதொரு வியாபாரமாக , அனிச்சையான செயலாக அது ஒரு சமூகத்தில் குடும்பத்தில் சகஜமாக பேசிக்கொள்கிற சாதாரண விஷயமாக போய்விட்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவருமே ஏழாம் உலகத்தின் பாத்திரங்களைப்போல ஏதாவது ஒரு தவறுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அது தவறென்றே தெரியாமல் வாழப்பழகியிருக்கிறோம். போத்தி வேலு பண்டாரம் என்னதான் உருப்படிகளை விற்றாலும் , அவனுக்கும் குழந்தைகளை கடத்தி வந்து கண்ணைப்பிடுங்கி பிச்சை எடுக்கிற கும்பல் தவறானவர்களாக இருக்கின்றனர்.

இக்கதையின் ஒவ்வொரு பாத்திரமும் சமூகத்தின் குறியீடுகளாகவே உணர்கிறேன். முத்தம்மை பாத்திரம் ஒரு பக்கம் வீங்கியும், ஒருபக்கம் சூம்பியும் போன பெண்! தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கும், வன்முறைக்கும் ஆளாகிறாள். இருந்தும் தொடர்ச்சியாக பிள்ளை பெற்றுக்கொண்டேயிருக்கிறாள். அவளுக்கு ஒரே லட்சியம் முழு உடலும் உடல்நலமும் கொண்டவனோடு ஒருமுறையாவது புணரவேண்டும், முழு ஆரோக்கியத்தோடு பிள்ளை பெற வேண்டும் என்பது! குய்யன் என்றொரு பாத்திரம் அனைத்தையும் கேலிபேசிக்கொண்டேயிருக்கிறது. அவனுக்கு வாழ்க்கையின் ஒரே லட்சியம் நல்ல சோறு தின்பது! விரைவீங்கிப்போன ஒரு அறிவுஜீவி மலையாளி தொடர்ச்சியாக அனைவரையும் மிரட்டி உருட்டி காரியஞ்சாதிக்கிறான். சட்டம் பேசுகிறான்.. போத்திவேலுபண்டாரம் தன்னளவிற்கு நல்லவனாக வாழ முயற்சி செய்கிறான். கதை முழுக்க அவனோடு அவனுடைய சொல்லமுடியாத குற்ற உணர்ச்சியும் பாத்திரங்களாகவும் குறியீடுகளாகவும் வசனங்களாகவும் பயணிக்கிறது. நாம் எல்லோருமே பழக்கப்படுத்திய குற்றங்களை எந்த குற்ற உணர்வும் இல்லாமல் செய்தாலும் தொடர்ச்சியாக நாம் வாழ்க்கை முழுவதுமே குற்ற உணர்வோடு வாழ்வதாகவே உணர்கிறேன்!

ஜெயமோகனின் பாத்திங்கள் ஒவ்வொன்றும் நம் உள்மன உணர்வின் பிரதிபலிப்பாக, நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற விதவிதமான உணர்வுகளின் உருவங்களாக தெரிகின்றன. கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே!. கதை முழுக்க வன்முறையும், உறைந்து போன ரத்தமும், பிய்ந்து தொங்கும் சதையும் , காயத்தின் மீது செலுத்தப்படும் காய்ச்சிய ஈட்டியினால் உண்டாகும் வலியும் இன்னும் என்னவெல்லாமோ நிரம்ப நிரம்ப.. படிக்கும் நமக்கும் வலிக்கிறது. வலியும் வேதனையும் நிறைந்த புதிய உலகம்! நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத வாழ்வியல் , இவ்வளவு கோரமா என்று பதறவைக்கும் சூழல்.

நூலில் ஆங்காங்கே ஜெயமோகனின் சில்மிஷங்களும் சில்வண்டித்தனமான அரசியல் விமர்சனங்களும் கூட இருக்கிறது. மலையாளி ஒருவனிடம் உருப்படியை விற்க வருகிறான் தமிழ் முதலாளி. உருப்படி உருப்படி என்று பேசுகிறான்.. மலையாளியோ அப்படிலாம் சொல்லாத சகாவு என்று சொல்லு என்கிறான்.. சகாவு என்றால் தோழர்!(கம்யூனிசத்தோழர்). பிச்சைகார வியாபாரி ஒரு கம்யூனிஸ்டாகவும்... வாங்கிச்சென்ற கைகால் இல்லாத சாமியாரை வைத்தும் பிழைப்பு நடத்துபவனாகவும் சித்தரிக்கிறார். ஜெயமோகன் வசனங்களால் இந்துத்துவாவும் கம்யூனிசமும் ஒன்றென்கிறார்! இரண்டுமே மனித வியாபாரம் என்கிறார். கதையூனேடே இதுவும் கடந்து செல்கிறது. அதே போல ஊனமுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும் என்கிற மாபெரும் கண்டுபிடிப்பை உலகிற்கு கொடுக்கும் அறிவியலாளர் ஜெமோ! மிக மொன்னையான அவதானிப்பாகவே இதை எண்ணுகிறேன். மருத்துவர்கள் இதுகுறித்து விளக்க வேண்டும்.

நாவலின் மிகப்பெரிய பிரச்சனை அரை மலையாளமும் அரைத்தமிழும் கலந்த கன்னியாகுமரி(?) தமிழ் மட்டும்தான். எனக்கு மலையாள பரிச்சயம் உண்டென்பதால் வேகமாக படித்துவிட முடிகிறது.இரண்டு முறை படித்துவிட்டேன்.

ஜனவரி 1 2010 மீண்டும் பழனியில் என் தேடல் அந்த பிச்சைகாரர்களை நோக்கியே இருந்தது. புலனாய்வு பத்திரிகை நண்பர்களை தொடர்பு கொண்ட போது நான்கடவுள் படம் வெளியான பின் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்ததாக சொன்னார்கள். என்னால் நம்ப முடியவேயில்லை. ஒரு சமூக மாற்றத்திற்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ பேருதவி செய்யுகிற படைப்புகள்.. ஜெயமோகனால் சிலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

மேலும் துருவியதில்.. பிச்சைகாரர்கள் வேறு வேடம் பூண்டிருந்தனர். இப்போதெல்லாம் பழனியைச்சுற்றி பிளாஸ்டிக் பொம்மைகளும் , பேனாவும், பென்சிலும், இன்னும் சில மலிவான பொருட்களையும் கையில் சுமந்தபடியும் ஆங்காங்கே சுற்றியும்,அமர்ந்த படிக்கும் விற்றுக்கொண்டிருந்தனர். அனைவருமே முன்னால் பிச்சைகாரர்கள். தற்போது வேடம் மாறியிருக்கிறது. நிறைய சின்ன சின்ன குழந்தைகள் பொம்மை விற்றுக்கொண்டிருந்தனர்.

சாமியார் தாத்தாவைத்தேடினேன் அவருடைய நண்பர்தாத்தா மட்டும்தான் சிக்கினார். தாமரைக்குளம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார்! அவரிடம் விசாரித்தப்போது தற்போது சாமி திருப்பதியில் இருக்கிறாராம்.. அவருடைய குடும்பம் என்றேன்.. அவிங்க குருவாயூர்லயும் மதுரையலயும் இருப்பதாக சொன்னார். சாமியார் மட்டும் அவ்வப்போது செல்போனில் அழைத்து பேசுகிறாராம்!

**********
விலை: ரூ.150/- கிழக்கு பதிப்பகம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவர்கள் வாங்க