Pages

31 August 2010

கதவைத்திற கடவுள் வரட்டும்!





பக்திமான்

நம்ம சாமியார் நதிக்கரையோரம் , ஒரு பெரிய மரத்தடியில் ஆழ்ந்த தியானத்துல இருந்தாரு. அப்போ அந்தப்பக்கமா பையன் ஒருத்தன் வந்தான். கொஞ்ச நேரம் சாமியாரையே உத்து உத்து பார்த்துகிட்டு இருந்தவனுக்கு என்ன தோணுச்சோ , அவரை புடிச்சு உலுக்கு உலுக்குனு உலக்க ஆரம்பிச்சான். பாவம் சாமி அதிர்ச்சில அப்படியே ஷாக் ஆகிட்டாரு.

‘’யார்டா ராஜா நீ.. என்னாத்துக்குடா என்னைப்போட்டு இந்த ஆட்டு ஆட்டுற’’ என்று அப்பாவியா கேட்டாரு.

‘’சாமி நீங்க தியானத்துல இருந்தீங்களா உங்கள பார்த்ததும், எனக்கு அப்படியே ஆன்மீகத்து மேல ஈடுபாடு வந்திருச்சு.. எப்படியாச்சும் உங்கள மாதிரி பெரிய சாமியார் ஆகி ஆன்மீக கடல்ல குதிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன், அதான் உங்க கிட்ட சிஷ்யனா சேரலாம்னு’’ என்று மண்டைய சொரிஞ்சான்.

சாமிக்கு ஒன்னும் புரியல.. யார்ரா நீ.. நானே இப்பதான் லேசா கண்ணசந்தேன்.. அதுக்குள்ள என்று மனதில் நினைச்சுகிட்டே ‘’ ஏன்டா ராஜா ஒனக்கு எதுக்கு இந்தமேரி ஆசைலாம்.. எதாச்சும் ஃபிகர பார்த்தமா ரூப்போட்டமானு , ஜாலியா இருந்தமானு இருக்கலாம்ல’’ என்றார்.

‘’அட நீங்க வேற சாமி, எனக்கு கடவுள் மட்டுமே போதும்.. சோறு கூட வேண்டாம்.. அவ்ளோ பக்திமான் சாமீ நானு’’ என்று அடுத்த குண்டைத்தூக்கிப்போட்டான்.

ஆஹா நாம போலி சாமியார்னு நினைச்சிட்டானோ என்று நினைத்தவர் , டபால்னு குதிச்சு அவன் கழுத்தை புடிச்சு தரதரனு இழுத்துகிட்டே போய் அவன ஆத்துல பொட்டு முக்கு முக்குனு முக்க ஆரம்பிச்சிட்டாரு! பாவம் அந்த பையன் ஆவ் ஊவ் ஆவ் ஊவ் னு கத்திகிட்டு, கையையும் காலையும் உதைக்க ஆரம்பிச்சிட்டான்.. நம்ம சாமியார் இப்பதான் சாமியார்.. இதுக்குமுன்னால பெரிய ரவுடியா இருந்தவரு.. பலசாலி.. வச்சு நல்லா தண்ணிக்குள்ளேயே அமுக்கிட்டாரு.. கொஞ்ச நேரம் கழிச்சு அவனை தூக்கி நிறுத்தினாரு.. ஆஆ.. ஊஊ..ம்ம் னு விதவிதமா மூச்சு விட்டான்.

அவன் ஆசுவாசமாக கொஞ்ச நேரமாச்சு. அவன் ரொம்ப டென்சனாகி ‘’ என்ன சாமி இப்படி பண்ணீட்டீங்க.. செத்தே போயிப்பேன்’’ என்ற திட்ட ஆரம்பித்தான்.

சாமியார் கேட்டாரு ‘’ராஜா தண்ணிக்குள்ள முக்கினேனே.. அப்போ உனக்கு எது ரொம்ப ரொம்ப அவசியமா இருந்துச்சு’’

கொஞ்ச நேரம் சாமியாரை அடித்துவிடுவதைப்போல முறைச்சுகிட்டே ‘’ ம்ம்.. காத்துதான்’’ என்றான் சிடுசிடுப்போட..

சாமியார் சிரிச்சாரு ‘’ உனக்கு என்னைக்கு காற்றை விட கடவுள் முக்கியமா இருக்காரோ அப்போ வா.. உன்னை சிஷ்யனா சேத்துக்கறேன்.. அதுவரைக்கு இந்த ஏரியா பக்கம் வந்த மவனே தண்ணிக்குள்ள அமுக்கியே கொன்னுருவேன் ஓடிப்போயிரு’’ என்றார்.


**********

ஞானம் டீ ஸ்டால்!

நம்ம சாமியார் எப்பவும் சிஷ்யர்கள் கிட்ட ஞானம் பத்தி பேசுறப்பவும், ஒரு டீ மாஸ்டர் பத்தி பேசிட்டே இருப்பாரு. அந்த டீ மாஸ்டருக்கு தன்னை விடவும் ஞானம் அதிகம்னும் சொல்லுவாரு.

அந்த டீ மாஸ்டர் சென்ட்ரல் ஸ்டேஷன் கிட்ட டீக்கடை வச்சிருந்தாரு. சிஷ்யங்களுக்கு செம காண்டாகிருச்சு. என்னங்கடா இது ஒரு சாதாரண டீ மாஸ்டருக்கு நம்ம சூப்பர் சாமியார விட ஞானம் ஜாஸ்தியா அப்படி என்னதான் அந்தாளுகிட்ட இருக்குனு பார்த்துட வேண்டியதுதானு முடிவு பண்ணி டிரெயின் ஏறி போய் சென்ட்ரல் ஸ்டேஷன் போனாங்க!

டீக்கடைக்கு போனவங்க , கடைக்காரர் வாங்க வாங்கனு வரவேற்று , டீ போட்டு குடுத்தாரு. இவனுங்க டீயக்குடிக்காம , ஆமா நீங்க பெரிய ஞானியாமே , உங்களுக்கு எப்படி ஞானம் கிடைச்சுது, உங்க குரு யாரு.. இப்படி நையி நையினு எதையாச்சும் கேட்டு பிணாத்திகிட்டே இருந்தானுங்க.. மாஸ்டர் கடுப்பாகி.. அவனுங்க கையிலருந்த டீ கிளாஸ புடிங்கிட்டு.. டேய் லூசுங்களா மரியாதையா ஓடிருங்க , இந்த ஏரியாப்பக்கம் உங்கள பார்த்தேன்.. மவனே கொன்னுருவேன் என்று அடித்து விரட்டி விட்டார்.

சிஷ்யப்புள்ளைங்கதான் பேஜாரான பசங்களாச்சே! விடுவானுங்களா மாறுவேஷத்துல போனானுங்க , அப்பவும் அந்தாளு கண்டுபுடிச்சு அடிபின்னு பின்னுனு பின்னி , ரத்தகளறியாக்கி திருப்பி அனுப்பினாரு.. சிஷ்யனுங்க நொந்து போயி.. அடப்போங்கடா நீங்களும் உங்க ஞானுமும்னு நம்ம சாமியார்கிட்டயே திரும்பி வந்தானுங்க!
சாமியார் கேட்டாரு ’’என்னப்பா , ஞானம் கிடைச்சுதா’’

‘’இன்னா சாமி கிண்டலா! நாங்களே அடிவாங்கி மூக்கு மொகரையெல்லாம் பேந்து போய் வந்திருக்கோம்’’ என்றனர் கோரஸாக!

‘’ஏன்ம்பா என்னாச்சு?’’ என்றார் சாமியார். நடந்ததையெல்லாம் சொன்னாங்க சிஷ்யனுங்க!

‘’என் பேர சொன்னீங்களா?’’

‘’சாமி! அதுவரைக்கும் பேசிட்டுதான் இருந்தான் அந்தாளு.. உங்க பேர சொன்னதுக்கப்பறம்தான் அடிபின்னிட்டான்.. நாங்க இப்போ கொஞ்சம் வீக்கா இருக்கோம் , உடம்பு சரியாகட்டும் முதல்ல உங்களுக்கு அப்புறம் அந்த டீமாஸ்டருக்கு’’ என்று கொதித்தனர்.

‘’அப்படீனா அந்த கடைல நீங்க டீயே குடிக்கலையா’’ என்றார் சாமியார்.