Pages

30 December 2010

அபஸ்வரங்களின் ஆலாபனை




மார்கழி மாதம் வந்துவிட்டாலே சென்னை சபாக்களில் நெய்மணம் கமழத் தொடங்கிவிடும். ஒவ்வொரு சபாவிலும் கச்சேரிகளைவிட ஞானானந்தா மாதிரியான மெஸ்ஸின் உணவுகள் உலகப் புகழ்பெற்றது. பல மாவட்டங்களிலிருந்தும் சபாவிற்கு பாட்டு கேட்க வருகிறார்களோ இல்லையோ , அக்மார்க் நெய்யால் செய்யப்பட்ட சுத்த சைவ பட்சண பதார்த்தங்களை சுவைக்க வந்துவிடுகின்றனர். அதற்கெல்லாம் காரணம் இந்நெய்மணமே. நான் அந்நெய்மண காரியங்கள் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்போவதில்லை. இது இசை பற்றியது.

முதலில் ஒன்றை சொல்லிவிட வேண்டும். எனக்கு இசை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. சினிமா பாடல்கள் மட்டும்தான் கேட்டிருக்கிறேன். அதிகாலையில் எழுந்து சாமி கும்பிட்டு சன்மியூசிக்கில் மாலா ரேணு மாதிரியான சுமாரான ஃபிகர்களிடம் கேட்டால் பாட்டை மரணப்படுக்கையில் இருக்கும் தாத்தாவுக்கு அந்த இசையை டெடிகேட் செய்து பாட்டும் போட்டுவிடுகின்றனர்.

ஆனால் அவையெல்லாம் இசையில்லை வெறும் குப்பைகள் என்பார் தோழர். என்னய்யா கொடுமை புளியந்தோப்பு பழனியின் கானாப்பாடல்களும் பரவைமுனியம்மாவின் நாட்டுப்புற பாடல்களும் கூடவா குப்பை என்று கோபமாகி திருப்பி கேட்டால்.. காரி துப்புவார். அதற்கு மேல் நான் விவாதித்தால் .. வாயிலே நுழையாத கொழகொழ பெயர்கள் சொல்லி அவருடைய இசை கேட்டுப்பாருங்கள்.. இவருடைய சங்கீதத்தை சுவைத்து பாருங்களென்பார். சங்கீதத்தை எப்படி சுவைக்க வேண்டுமென்பதையும் சில பேராகிராப்கள் தள்ளி அவரே விவரிப்பார் பாருங்கள்.

தோழர் சொல்கிற இசையமைப்பாளர்களின் பெயர்கள் மோசார்ட், பத்தே அலிகான், மன்சூர் அலிகான் மாதிரி ஏதோ அது வேண்டாம் நினைவில் இல்லை.. பிச்சை எடுப்பவனுக்கு எதற்கய்யா பீதோவன் என்று பீனாவுக்கு பீனாப்போட்டு எதுகைமொகைனையோடு கூறுவார் எங்கள் கம்யூனிசகுரு. ஓசியில் கிடைப்பதே மிகச்சிறந்தது என்றெண்ணுகிற நான் உன்னிகிருஷ்ணனின் பஜனை கச்சேரிக்கு போயிருக்க கூடாது. அதுவும் தத்தரீனா கச்சேரிக்கு... அதுவும் காசு செலவு செய்து சென்றது எவ்வளவு பெரிய குற்றம்.

பனிபெய்துகொண்டிருந்த மாலை நான் அலுவலகத்தில் வெட்டியாகத்தானிருந்தேன். தோழர் வந்தார்.

‘’இன்னைக்கு ராஜா அண்ணாமலை மன்றத்துல தமிழ் இசை விழா, அதுல உன்னிகிருஷ்ணன் கச்சேரி ஏழுமணிக்கு தோழர்.. போலாம் வாங்க’’ என்று ஆட்டினை பலிபீடத்திற்கு அழைக்கிற கசாப்புகடைக்காரனை போல என்னை அன்போடு அழைத்தார். தண்ணீர் தெளித்த ஆடுபோல் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி அய்ய்யோ நான் வரலை ஆள விடுங்க என்று சிலுப்பினேன். விடுமா வில்லங்கம்.

‘’பாஸ் நமக்கெதுக்கு பாஸ் இந்த மாதிரி விபரீத விளையாட்டெல்லாம். அங்க பக்கத்துலயே பர்மா பஜார் பக்கம் போனா தமிழ்ல நாலு, இங்கிலிஷ்ல நாலுனு செமத்தியான சீன் பட டிவிடி வாங்கிட்டு வந்து குஜாலா பார்க்கலாம்.. இல்லாட்டி போனா செம்மொழி பூங்கா போய் நாலு ஃபிகர சைட் அடிக்கலாம்.. அதவுட்டுட்டு.. பஜனை கச்சேரிக்குலாம்...’’ என்று சடைந்து கொண்டேன்.

‘’சரியான ஞான சூனியமா இருக்கீங்களே தோழர். நீங்க எப்பதான் வளர்ரது.. இசை பத்தி நிறைய தெரிஞ்சிக்க வோணாமா.நீங்க! உங்களுக்கு இலக்கிய வாதியாகணும்னு ஆசையே இல்லையா’’ என்று தொடர் அணுகுண்டுகளால் என் மீது தாக்குதல் நடத்த...

‘’நான் எதுக்கு பாஸ் இசை பத்தி தெரிஞ்சிக்கணும். நான் எப்பய்யா இலக்கியவாதி ஆகணும்னு சொன்னேன் , பாஸ் ப்ளீஸ் பாஸ்... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. ‘’ என்று இரு கைகளையும் முகத்துக்கு முன்னால் கூப்பி கற்பழிக்க வந்த கயவனிடம் மன்றாடும் அபலையை போல் கெஞ்சினேன். என் கண்களில் அவர் நிச்சயம் என்னுடைய இசை பயத்தினை பார்த்திருக்க முடியும்.

‘’தோழர் , தீராத விளையாட்டு பிள்ளை பாட்ட ஒரே ஒருவாட்டி உன்னி கிருஷ்ணன் பாடி நீங்க கேட்கணுமே.. அப்படியே அசோக்கா அல்வாவ பசும்நெய்ல முக்கி வாய்ல போட்டாப்ல அப்படியே நாக்குல கரைஞ்சு தொண்டைல இறங்கும் பாருங்க.. அது மாதிரி அனுபவிச்சாதான் பாஸ் தெரியும்’’ என்று தூண்டிலை மீண்டும் போட..

‘’ஹலோ நான் என்னைக்கு அசோகா அல்வாவ நெய்ல முக்கி தின்னிருக்கேன்.. என்னை விட்ருங்க நான் அவ்ளோ வொர்த் கிடையாது.. எனக்கு இதெல்லாம் புரியாது’’ என்று மேலும் கெஞ்சினேன். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்

‘’தோழர்.. இங்க பாருங்க, நீங்க கழுதை கிடையாது...’’

‘’பாஸ்..என்னா பாஸ் கழுதைனுலாம்..என்னை பார்த்து’’ என்று நான் அழ ஆரம்பிக்க..

‘’பாஸ் ஏன் இப்ப அழறீங்க.. நீங்க கழுதை கிடையாது உங்களுக்கும் கற்பூர வாசனை தெரியும்னு சொல்லவந்தேன்.. நாமெல்லாம் எப்பதான் சங்கீதம் கேக்கறது.அதுவுமில்லாம இது தமிழ்இசைவிழா அதனால நோ தெலுங்கு கீர்த்தனை ஒன்லி தமிழ்பாட்டுதான், அதுவுமில்லாம முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டேன், இது முழுக்க முழுக்க இலவசம் பாஸ்!’’ என்று சொன்னனார்.

என்னது ஃப்ரீயா பாஸ் இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. என்ன பாஸ் உங்களுக்கு பொறுப்பே இல்ல.. கிளம்புங்க என்று கிளம்பினேன்.
ஓவர் டூ ராஜா அண்ணமலை மன்றம் , பாரிமுனை (பர்மாபஜார் மலேசியா மணி திருட்டு டிவிடி கடைக்கு மிக மிக அருகில்).

செல்லும் வழியெல்லாம் தோழரிடம் கெஞ்சினேன்.. தோழர் இப்பவும் ஒன்னுங்கெட்டுப்போகலே ஃப்ரீன்னாலும் பயமாவே இருக்கு.. இப்படியே இறங்கி ஆளுக்கொரு தம்மப்போட்டுட்டு அப்படியே போய்ருவோம்.. உங்களுக்கு ஒரு குவாட்டர் கூட ஸ்பான்சர் பண்றேன் வுட்ருங்கோவ்.. என்றேன்.. அப்போதும் கேட்கவில்லை.

வண்டி உள்ளே நுழைய.. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நெய்வாசனை அறவே இல்லை. அட! ஆரம்பமே அசத்தலா இருக்கேடா... அப்படீனா இசையும் நெய்வாசனை இல்லாமதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ‘’எச்சூஸ்மீ சார் இன்னைக்கு ஃப்ரீ கிடையாது, டிக்கட் வாங்கினுதான் வரணும்’’ என்றார் அரங்க வாசலில் நின்றுகொண்டிருந்த டீசன்டாக பேசிய லோக்கலான ஆள்.

என்னது டிக்கட்டா.. பாஸ் காசுலாம் குடுத்து இந்த கண்றாவிய பாக்க முடியாது, தயவு பண்ணி வீட்டுக்கே போய்ரலாம் பாஸ்.. ஆனாலும் தோழர் விடவில்லை. அவரே ஸ்பான்சர் செய்தார். ஒரு டிக்கட் 50ரூபாய். ம்ம்.. மூனு பிட்டு சிடி வாங்கிருக்கலாம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

உள்ளே மேடையின் இருபுறமும் எலக்ட்ரானிக் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. நடுவில் உன்னிகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் விதவிதமான வாத்தியங்கள், ஒன்று கையில் நெட்டுகுத்தலாக வைத்து வாசிக்கும் வீணை மாதிரி.. இன்னொன்று சின்னதாக டமக்குடப்பா போலிருந்தது. இன்னொன்று தவில் போல இருந்தது, தோழர் அதை மிருதங்கம் என்றார். பானை போலிருப்பது கடம் என்று கூடவா எனக்கு தெரியாது. உன்னி கிருஷ்ணன் பக்கத்தில் ஏதோ ஒரு சிடிபிளேயர் போலிருந்தது.. அது எலக்ட்ரானிக் ஸ்ருதி பெட்டியாம். கொய்ங்ங்ங்ங் என்று ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்குமாம். போலவே வயலின் இருந்தது. ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து சுபமாக தொடங்கியது கச்சேரி.

த...த.....ரீ...னா... என்று தொடங்கினார் உன்னிகிருஷ்ணன்.. அருகிலிருந்து தோழருக்கோ உற்சாகம் தாங்கவில்லை. ஒரே கைத்தட்டல். இதுக்கு ஏன் இவரு கைதட்றாரு என்று நான் யோசிக்க மொத்த அரங்கமும் கைதட்டி வைக்க நானும் கைதட்டித்தொலைத்தேன். தொடர்ந்து ததரீனா..வையே வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி பாடினார்.. தவுக்கும் ரீக்கும் நடுவே சீரிய இடைவெளி விட்டு பாடினால் ஒரு ராகம்.. த்தரீ....னா என்று பாடினால் இன்னொரு ராகம்.. அரங்கத்தை அடைத்திருந்த பெருசுகள் அஹ்கா.. ஆஹா.. என்று பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மட்டும் மடக்கி வைத்துக்கொண்டு ரசிக்க.. நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ததரீனாவே தொடர்ந்தது. இம்முறை மூன்று நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் ததரீனார் உன்னி கிருஷ்ணன்.. அரங்கம் அதிர்ந்தது. எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. எல்லோரும் கைதட்ட நானும் கைத்தட்டி வைத்தேன்.

‘’தோழர் தமிழிசைனீங்க.. வார்த்தையே இல்லையே.. இதென்னங்க ஒரே ததரீனாவா இருக்கே.. தமிழ் இசை விழானு ஏமாத்தறாங்க பாஸ்’’ என்று அவருடைய காதில் கிசுகிசுத்தேன்.

‘’யோவ் இது ஆலாபனைய்யா.. ராகத்தோட அழகை அப்படியே எடுத்து காட்டுறதுக்காக பாடறது.. இப்போ பாடறது என்ன ராகம்னா.. என்று தன் கையை கொஞ்சமாக மேலே உயர்த்தி கட்டை விரலால் ஒவ்வொரு விரலாக தடவி பிடித்து யோசிக்கத் தொடங்கினார்.

இப்போதும் உன்னி கிருஷ்ணன் விடாமல் ததரீனாவையே வளைத்து வளைத்து பாடிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ நாராசமாக இருந்தது... என்ன கருமம்டா இது ஒன்னுமே புரியல என்று தோழரை பார்த்தால் அவரோ விரலை மடக்கி மடக்கி உன்னியோடு அஹ்கா ஆஹஹா போட்டுக்கொண்டிருந்தார்.

ஒருவழியாக ஆலாபனை முடிய.. அடுத்து ஒரு பாடல் தொடங்கியது.. இப்பயாச்சும் புரியற பாட்டா பாடுவார் என ஆர்வத்துடன் காத்திருந்தால்...

தா...க...ரா...மா...சோ...க.. நீ.. ள.. கா.. ம.. என்று பாடத்தொடங்க.. ‘’பாஸ் தப்பா நினைக்காதீங்க தமிழ் பாட்டுனுல சொன்னீங்க.. தெலுங்கு பாட்டு மாதிரி இருக்கே’’ என்றேன்.. ‘’ஹய்யோ பாஸ் என்னை பாட்டு கேக்க விடுங்க.. இது தமிழ்பாட்டுதான்.. ராகமா பாடும்போது வார்த்தையெல்லாம் பிச்சுக்கும்’’ என்று என்னை முறைத்தபடி மீண்டும் ஆஹா ஆஹஹா என இசையில் மூழ்கினார். எனக்கு பஞ்சு வேண்டும் போல் இருந்தது.

மீண்டும் உன்னியின் தா..கா..சோ..க...மீ.... மு.. கா..மு என ஏதேதோ உடைத்து போட்ட தமிழ்ப்பாடலை கேட்க முயற்சி செய்தேன். ம்ஹும்.. ஒரு வேளை நான் கழுதைதானே என்று எனக்குள்ளாக ஒரு கேள்வி. என்னுள் எழுந்த அச்சந்தேகத்தினை கேள்வி என்ற ஒற்றயடுக்கிலே குறுக்கி விட முடியாது. அது ஒருவேள்வி.

உன்னி அடுத்ததாக மீண்டும் தன் ஆலாபனையை தொடங்க.. தோழரை இசையோடு விட்டுவிட்டு வெளியே தம்மடிக்க இறங்கினேன். ராஜா அண்ணமலை மன்றத்தில் வாசலிலேயே சில குடும்பங்கள் ரோட்டிலே போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தனர். அந்த குடும்பத்தின் இரண்டு பேர் போதையில் எம்ஜிஆர் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ‘’அன்பே வா படத்துல அந்த குண்டன் வர்வான் பார்ரு , நூறு கிலோ இர்ப்பான்.. அப்டியே தல்லீவரு அவ்னே இரண்டு கையால் தூக்கினு த்தா அப்டீயே ரெண்டு நிமிஷம் வச்சினு இருப்பார் பாரு.. அந்தகால்த்திலயே டூப்புகீப்பு எதும் கெடியாது.. பின்னிருப்பாரு..’’ என்று பீடியை வழித்தபடி பேசிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமாக இருக்கவே நானும் சிகரட்டை இழுத்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிகரட் தீர்ந்து போக மீண்டும் அரங்கம் திரும்பினேன். உன்னி இன்னமும் மூச்சு விடாமல் ஆலாபனையே தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். என்னால் உட்காரவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஆயை மிதித்துவிட்டு கழுவாமல் வந்தது போன்ற உணர்வு. இருந்தாலும் இசையின் மறுவடிவான தோழருக்காக அமர்ந்திருந்தேன். ஆலாபனை முடிந்து மீண்டும் பாடல்.. தா....ண்...ட...வாஆஆஆஆஆ என உன்னி கிருஷ்ணன் மீண்டும் உடைக்க...

‘’பாஸ் என்ன பாஸ் தமிழை இப்படி கொல்றாங்களே.. எப்படி பாஸ் சகிச்சிகிட்டு பாக்கறீங்க , நாம தமிழ்ர்கள் இல்லையா நமக்கு தமிழ் உணர்வில்லையா‘’ என்றேன். தோழருக்கு வந்தது பாருங்க கோவம் ‘’அட அறிவுகெட்ட ஞானசூனியமே.. உன்னையெல்லாம் கச்சேரிக்கு கூட்டிட்டு வந்ததே தப்பு.. த்தூ.. கொஞ்சங்கூட ரசனைகெட்ட ஜென்மமா இருக்கீரே.. ச்சே அப்பவே நினைச்சேன் நீங்க ஒரு கழுதைதானு இப்படி வந்து நிரூபிக்கிறீங்களே..உங்களை கூட்டிட்டு வந்ததே தப்பு , ஒரு பாட்டு உருப்படியா கேட்கறீங்களா.. போய் உங்களுக்குலாம் அந்த சாவு மோளம்தான் கரெக்ட்டு , வெளிய எவனாச்சும் தார தப்பட்ட அடிச்சிட்டு இருப்பான் போய் கேளுய்யா’’

உன்னி கிருஷ்ணனே பாட்டை நிருத்திவிட்டார் இவரிட்ட கூச்சலில்.. எனக்கு அவமானமாக போய்விட்டது.. சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான இசை ரசிகர்களும் என்னை எழுந்து நின்று திரும்பி பார்த்து காரித்துப்புவது போல் இருந்தது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் இங்கே வந்திருக்க கூடாது. என்று அங்கிருந்து எழுந்து வெளியே நடக்க மீண்டும் உன்னி விட்ட இடத்திலிருந்து தத்தரீனார். என் தோளை வேகவேகமாக யாரோ உலுக்குவது போலிருந்தது. நான் அதிர்ந்து போக..

ஸ்ஸ்ப்பா உன்னிகிருஷ்ணன் பாட்டை கேட்டு தூங்கிட்டேன் போல.. பக்கத்தில் இன்னும் தோழர் விரலாட்டிக்கொண்டு பாட்டை ரசித்துக்கொண்டிருந்தார். தோளை உலுக்கியது இடது பக்கத்து சீட்டு பெரிசு.. தூங்கிவழிந்து சாய்ந்திருக்கிறேன்.. எதவும் நடக்கலே.. கச்சேரி முடிந்து வரும் வழியில் அருகிலிருந்து குப்பத்தில் தாரைதப்பட்டைகள் முழங்க ஏதோ சாவு போல,. செம அடி... இன்னா குத்து..