Pages

31 January 2011

Your support can make a difference in Indian Fishermen's Life - Pls Fwd through mail

Hi Friends,

I am sure you must have heard about the recent killings of Indian Fishermen from Tamil Nadu. by Sri Lankan Navy., if you have not request you to read through these links from popular dailies. - Pandiyan Killed on 12th of Jan 2011Jayakumar Strangulated on 24th Jan 2011 ,


So far, in the last few decades 530 fisherman has been killed, thousands of fisherman has been harassed, and multiple crores of rupees worth fishing equipments and boats have been demolished by Sri Lankan Navy. Our Indian Government has been a silent spectator for all this.

As a fellow Indian brothers & sisters , I appeal to you to voice your support for the fellow Indian fishermen brothers . As a fellow Indian you can do the following to voice your support for the poor fishermen, who have become target for the Sri Lankan Navy.

1.Sign the petition to stop the killing by Sri Lankan Navy - http://www.petitiononline.com/TNfisher/petition.html
2.Join the online protest to save the fishermen by tweeting about this using #tnfisherman tag - http://twitter.com/#!/search?q=%23tnfisherman
3.You can add the twibbon to your twitter profile / Face book profile picture to show your protest - http://twibbon.com/join/TNFisherman
Read and contribute for the Face Book page on Save Tamil Nadu Fisherman - http://www.facebook.com/savetnfisherman
4.Read and contribute articles for www.savetnfisherman.org

We are also seeking volunteers to contribute to this cause. If you are interested you can write to us savetnfisherman@gmail.com, tnfishermancampaign@gmail.com

One last request, Please send this mail to as many us of your friends and colleagues.

with best regards,

A Fellow Indian

24 January 2011

பாவம் விஜய்!




வீரதீர சாகசங்களில் அதீத ஈடுபாடு கொண்டவன் நான். ஆனாலும் அண்மைக்கால விஜய் படங்களை தியேட்டரில் சென்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்குமளவுக்கு வீரமோ நெஞ்சுரமோ எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளுமளவுக்கு என் விதி வலியது. அது என் நண்பனின் வடிவில் என்னை காவு கேட்கும் போது யாரால் அதை தடுக்கவியலும். ஆமாம் நண்பர்களே.. நான் காவலன் படத்தை எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் என் சொந்தகாசில் பார்க்க நேர்ந்தது.

இது நிச்சயம் விஜயின் முந்தைய படங்களான வேட்டைக்காரன்,சுறா மாதிரியான அதிரடி ஆக்சன் திரைப்படம் கிடையாது என நண்பர் என்னையே தூக்கிப்போட்டு தாண்டி சத்தியம் செய்தமையால் வேறு வழியின்றி படத்திற்கு செல்ல நேர்ந்தது. அதுவுமில்லாமல் பிரண்ட்ஸ் திரைப்படம் எடுத்த சித்திக் இயக்கம் என்பது என் எதிர்பார்ப்புகளையே எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருந்தது.

படத்தின் கதையென்னவோ வசீகராவில் நாலு ஸ்பூன், காதலுக்கு மரியாதையில் ரெண்டு ஸ்பூன், துள்ளாத மனமும் துள்ளுமிலிருந்து ஒரு சிட்டிகையென இது வரை விஜய் நடித்த நல்ல படங்களின் கதைகளையே கலந்து கட்டி ரீமேக்கியிருப்பது தெரிந்தது. பாவம் விஜய் இதுவரை தெலுங்கு மலையாள படங்களை மட்டுமே ரீமேக்கி வந்தவர், இப்போது அவர் படங்களை அவரே நடித்து ரீமேக்குகிற துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருப்பது சன்பிக்சர்ஸின் சதியாக இருக்கலாம்.

உதவாக்கரை இளைஞனாக விஜய் நடிக்கும் எத்தனாவது படம் என்று நினைவில் இல்லை. எனக்கு தெரிந்தவரை விஜய் தான் நடிக்கும் எல்லா படங்களிலுமே வேலை வெட்டிக்கு போகாமல் ஊர்சுற்றி வெற்று வம்புக்கு அலைபவராகவே இருக்கிறார். இதிலும் அப்படியே! வேலாயுதத்திலாவது ஏதாவது வேலைக்கு போகிறவராக காட்டினால் என்னை போல விஜயின் அதிதீவிர ரசிகர்களுக்கு நன்மை பயக்கும்.

படத்தின் கதை இரண்டாபாதியின் இரண்டாம் பாதியில்தான் தொடங்குகிறது. அதுவும் அடுத்த சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அதற்குபின்னும் தேவையில்லாத காட்சிகளால் படம் நீண்டுகொண்டே போவது நல்ல தூக்கமாத்திரை. முதல் பாதி காமெடி பிரண்ட்ஸ் அளவுக்கு இல்லையென்றாலும் புன்னகைக்க வைக்கிறது. பெண்களுக்கு பிடிக்கலாம். இரண்டாம் பாதி காமெடியும் இல்லாமல் சீரியஸும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே விஜயை வைத்து காமெடி கீமெடி பண்ணியிருக்கிறார்கள். சிரிப்பு வரலை அழுகையும் வரலை.. அதிலும் அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட்.. முடியல! டைரக்டரே என்ன பண்றதுனு தெரியாம கன்பீஸ் ஆகிட்டார் போல.. என்னென்னவோ செய்கிறார்.

அஸினைவிட அவருக்கு சைட்கிக்காக வரும் கேரளத்து ஓமனக்குட்டியும், வடிவேலுக்கு ஜோடியாக வரும் நீபாவும் நல்ல அழகு. அதிலும் நீபாவை வச்சகண்ணு மாறாம பார்த்துகிட்டே இருக்கலாம். வடிவேலு காமெடி சுறாவை விட பரவாயில்லை. ராஜ்கிரணும் ரோஜாவும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் எல்லாமே எரிச்சலூட்ட.. பூங்காவில் விஜயும் அஸினும் பேசிக்கொள்கிற ஒரே ஒரு காட்சி ஆறுதல். விஜய் நிஜமாகவே அந்த காட்சியில் மட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார். ப்ளீஸ் நோட் திஸ் பாய்ன்ட்.. நன்றாக நடித்திருக்கிறார்.

படத்தின் பாடல்களில் யாரது யாரது.. தவிர்த்து மற்ற எல்லாவுமே தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட டப்பிங் பாடல்களின் தரத்தில் அருமையாக இருந்தன.
பெண்களுக்கு இந்தப்படம் ஏனோ மிகவும் பிடித்திருக்கிறதென்பது ஆச்சர்யம். நிறையபேர் படம் நன்றாயிருப்பதாக சொன்னதை தியேட்டரில் கேட்க முடிந்தது.

ஒரு பாடல் காட்சியில் துணிவே துணை ஜெய்சங்கர் கெட்டப்பில் தலையில் குருமாவை கொட்டியபடி விஜய் வருகிறார். (மேலே பார்க்கும் படம் அந்த பாடலின் போது எடுக்கப்பட்டதே!) தியேட்டரே சிரித்து மகிழ்கிறது.

முதல் பாதி பாடிகார்ட் மொக்கையை தவிர்த்துவிட்டு.. இரண்டாம்பாகத்தையே முன்னும் பின்னுமாக நீட்டியிருந்தால் இன்னொரு காதலுக்கு மரியாதையாய் இருந்திருக்க வேண்டிய படம்.. முதல் பாதி மொக்கையால் ஏடிஎம் வாசலில் அமர்ந்திருக்கும் வயசான செக்யூரிட்டியை போல பலமில்லாத முதியவராக காட்சியளிக்கிறார் இந்த காவலன். படம் முடிந்த பின் நண்பரிடம் கேட்டேன் படம் எப்படி பாஸ்.. ஆஹா சூப்பர்.. அழுதுட்டேன் என்றார். தியேட்டரில் சில இளசுகளோ என்ன இழவு படம்டா என நொந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது. எனக்கு படத்தை விட எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டரில் கிடைத்த வெஜ் பப்ஸ் பிடித்திருந்தது. பாவம் விஜய்.. அவரை வேலாயுதமாவது காப்பாற்றும் என நம்புகிறேன். அண்மையில் ஒரு உதவி இயக்குனரோடு பேசிக்கொண்டிருந்த போது விஜய்கிட்ட கதை சொல்லப்போனா பாதி கதைல தூங்கிருவாருங்கன்னாரு.. அது உண்மையா பொய்யா என்பது தெரியாது.. இனிமேலாவது விஜய் உஷாராக இருப்பது அவருக்கும் நல்லது என்னைபோல் ரசிகர்களுக்கும் நல்லது.

புரட்சி வேட்கை கொண்டவர்களும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்களும் காவலனை ஒரு முறை பார்க்கலாம்.

கடைசியாக ஒரு எச்சரிக்கை!

10 January 2011

பிரபல எழுத்தாளர்கள் மற்றும் புத்தக திருவிழா

இந்த ஆண்டு படங்கள் இல்லாததால் இது சென்ற ஆண்டு எடுத்த படம்.


மாண்புமிகு எழுத்தாளரான சாருநிவேதிதாவை உயிர்மை அரங்கில் சந்திக்கலாம். தன்னுடைய வாசகர்களின் எல்லா கேள்விகளுக்கும் இன்முகத்தோடு டான் டான் என்று பதிலளிப்பதோடு அவருடைய புத்தகங்கள் மட்டுமல்லாது எந்த புத்தகத்தை நீட்டினாலும் ஆட்டோகிராப்பும் போட்டுத்தருகிறார். இப்படி ஒரு உயர்ந்த உள்ளம் எந்த தமிழ் எழுத்தாளருக்கும் கிடையாது. சரசம் சல்லாபம் சாமியார் புத்தகம் பத்தாயிரம் காப்பியாவது விற்குமா என்கிற ஏக்கத்துடன் அமர்ந்திருப்பதையும் காணமுடியும். அவருக்கு மிக அருகிலேயே எப்போதும் உயிர்மை அதிபர் மனுஷ்யபுத்திரனும் அமர்ந்திருப்பார். அவரிடம் எந்த கேள்விகேட்டாலும் எடக்கு மடக்காக பதில் சொல்லி சிரிக்க வைத்துவிடுகிறார். பழக இனிமையான மனிதர் அனைவரும் நிச்சயம் சந்திக்க வேண்டியவரும் கூட. எனக்கு ஏனோ உயிர்மை அரங்கில் சுஜாதா உலவுவதைப்போன்ற பிரமை.. (அவருடைய ஆவியாகவும் இருக்கலாம்)

ஆவி என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. ஆவியுலகோடு அதிக தொடர்பில் இருக்கும் விக்கிரவாண்டி ரவிசந்திரன் நினைவுக்கு வந்துவிடுகிறார். அவருடைய கடை கிழக்குப்பதிப்பகத்திற்கு அடுத்த கடை. அவரை அந்தக்கடையில் சந்திக்க முடியும். சில நிமிடங்கள் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அளவளாவினேன்.. பேய்கள் குறித்து நிறைய பேசினார். பயமாக இருந்தது விலகிவிட்டேன். உங்களுக்கு பேய்களைப்பற்றி தெரிந்து கொள்ளுகிற ஆவலிருந்தால் கட்டாயம் இவரை சந்திக்கலாம்.

இலக்கிய அஞ்சாநெஞ்சன் ஜெமோ தன்னுடைய படைபரிவாரங்களோடு கம்பீரமாக ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அவர் முன்னால் நடக்க கை கட்டிகொண்டு அவர் பின்னே நடந்து செல்லுகிற அவருடைய வாசகர்களை பார்க்கும்போது ஏதோ படத்தில் வடிவேலு முன்னால் நடந்து வர பின்னால் லாலா லாலலி லாலா என்று பாடியபடி அவருடைய நண்பர்கள் வருவார்கள். காலில் தீப்பொறியெல்லாம் பறக்கும். ஜெமோ கால்களை உன்னிப்பாக கவனித்தேன் தீப்பொறி இல்லை.

புத்தக திருவிழாவில் ஞானியின் ஞானபானு பதிப்பகத்தில் விற்கப்படும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களை காட்டிலும் அங்கே அனுதினமும் நடைபெறுகிற வாக்கெடுப்பு சென்னை பிரசித்தம். பல்லாண்டுகளாக உபயோக்கிற அதே உடையாத மூன்று பானைகளோடு இந்த ஆண்டும் ஞானி களமிறங்கியுள்ளார். நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் வித்தியாசமான முறையில் தேர்தல் நடந்தது. அடுத்த தேர்தலில் அதிமுக என்னாகும் என்கிற கேள்விக்கு மூன்று பதில்கள் போடவேண்டும்.

1.பிரதான எதிர்கட்சியாக இருக்கும்
2.ஆட்சியை பிடிக்கும்
3.அழிந்துவிடும் (மெல்லத்தேயும்.. பிளா பிளா ஏதோ ஒன்று)

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்தனர். இதில் இரண்டாம் எண்ணுக்கான பானை நான் பார்த்தபோதே நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எப்போதும் பெயரும் முழு முகவரியுடன்தான் வாக்களிக்க வேண்டும் என்று ஞானி குறிப்பிடுவார். இம்முறையோ பேரும் ஊரும் போதுமென்றார். இன்னொரு ஏ4ல் நான்கு பக்க அளவுடைய மகா பெரிய கருத்துக்கணிப்பினைக் கொடுத்து அதை முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்கும் அனைவருக்கும் , தன்னுடைய அடுத்த அதிரடி புத்தகம் இலவசமாக அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஓசி புத்தகங்களில் ஆர்வமுள்ள என்னைப்போன்ற உள்ளம் படைத்த வாசகர்கள் உடனடியாக ஞானியின் கடைக்கு விரைந்தோடவும். இச்சலுகை விண்ணப்பங்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.

உலகம்தான் அம்மையப்பன், அம்மையப்பன்தான் உலகம் என்பதுபோல புத்தக சந்தைதான் பாராகவன் , பாராகவன்தான் புத்தக சந்தை என்றும் சொல்லலாம். எழுத்தாளர் பா.ராகவனை எப்போதும் கிழக்குப்பதிப்பகத்தின் பின்புறமிருக்கிற குட்டிச்சந்தில் தினமும் சந்திக்கமுடியும். எந்த நேரத்திலும் தன் வாசகர்களை சந்திக்கும் ஆவல் மேலோங்க அங்கேயே வெறுந்தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருப்பார். (இங்கே மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.. பாரா என்றால் எளிமை , எளிமை என்றால் பாரா.. )

அவரை சந்திக்க செல்கிறவர்கள் பவ்யமாகவோ பவ்யமில்லாமலோ அவருக்கு மிக அருகில் வலதோ இடதோ ஏதோ ஒரு பக்கத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டால் போதும், இந்த ஆண்டு புத்தக சந்தையில் என்ன புத்தகங்கள் நன்றாக விற்கிறது, யாருடைய புத்தகங்கள் வாங்கலாம்.. குறைந்த விலையில் கிடைக்கும் தரமான புத்தகங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அவரோடு ஒரு மணிநேரம் உரையாடினால் புத்தக சந்தையை சுற்றாமலேயே மொத்த தகவலும் விரல் நுனியில் கிடைத்துவிடும். இப்படி மற்றவருடைய புத்தகங்கள் குறித்தும் எழுதுவது குறித்தும் விஷயஞானங்களை பகிர்ந்து கொள்ளுகிற எழுத்தாளர்களை சமகால தமிழ்ச்சூழலில் பார்க்கவே முடியாது. அதற்கு மிகச்சரியான உதாரணம்.. எப்படி எழுதுவது என்று இரண்டு மணிநேரம் நம் வலைபதிவர் ஜாக்கி சேகருக்கே பாடம் நடத்தியது. (பழனிக்கே பஞ்சாமிர்தமா!)

இன்னும் பல எழுத்தாளர்கள் பற்றியும் பற்றாமலும் நாளை எழுதினாலும் எழுதுவேன்..

(படங்கள் உதவி - இட்லிவடை)

07 January 2011

புத்தக கண்காட்சி 2011 - 2


கவிஞர் ஜோமல்லூரி என்பவரை உங்களுக்கு தெரியுமா? தெரியாமல் இருந்தால் புத்தக கண்காட்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நீங்கள் சென்றதே இல்லை என்று பொருள். பிரபல கவிஞரான இவர் தன்னுடைய புத்தகங்களை விற்பதற்காக இரண்டு முழு கடைகளை எடுத்து அதில் தன் புத்தகங்களை , அவருடைய மிகப்பெரிய போட்டோக்களுக்கு நடுவே வைத்திருப்பார். அக்கடையில் அவருடைய புத்தகங்கள் மட்டும்தான் கிடைக்கும். தலையில் தொப்பியோடு தாடி வைத்த இந்த நபரின் புத்தகங்களை பிரபல கவிஞர்களான நர்சிம்,நிலாரசிகன்,மணிஜி முதலானோர் படித்து பார்த்து விமர்சித்தால் வாங்க உத்தேசித்திருக்கிறேன். உங்களுக்கு விருதகிரி,வீராசாமி மாதிரியான சீரியஸ் படங்கள் பிடிக்குமானால் இந்த ஸ்டாலுக்கு கட்டாயம் ஒருமுறை விஜயம் செய்துவிடுவது நன்று. புத்தக கண்காட்சியில் சிரித்து மகிழ சிறந்த இடம்.

அங்கே சென்று சிறிது நேரம் சிரித்து இளைப்பாறிவிட்டு நகர்ந்தேன். புக்வோர்ல்ட் புத்தக கடையின் ஸ்டாலில் ஒரே ஆங்கில புத்தகங்களாக குவித்து வைத்திருந்தனர். பல உபயோகமான குண்டு குண்டு புத்தகங்களும் வெறும் 150ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆங்கில புத்தகங்களோடு எனக்கு வம்புசண்டை கத்திக்குத்து என்பதால் நான் எதையும் வாங்கவில்லை. ஆங்கில புத்தக பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கடை புக் வேர்ல்ட். நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்.

புரட்சி புத்தகங்களுக்கு பேர் போன நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் நிறைய மாற்றங்கள். மொக்கை புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதற்கு நடுவில் அந்தகாலத்து கம்யூனிச ரஷ்ய பதிப்புகளாக வெளியான கம்யூனிச புத்தகங்களும் கிடைக்கின்றன. மிக மிக நேர்த்தியாக அச்சிடப்பட்ட அப்புத்தகங்கள் வெளியே பார்க்க பரவசமூட்டினாலும், பிரித்து படித்தால் புரட்டி போடும் ஜிலேபி மொழிபெயர்ப்பு. விலை அச்சிடப்படவில்லை. அக்கால ரஷ்யன் தமிழ் அகராதிகூட மலிவு விலையில் கிடைக்கிறது. நான் எதையும் வாங்கவில்லை. வேடிக்கை மட்டும் பார்த்து விட்ட வெளியே வந்து பேச்சரங்கில் அமர்ந்தேன்.

எங்கள் தலைவி சார்த்தரின் வாரிசு தமிழச்சி பேசிக்கொண்டிருந்தார். சார்த்தரும் புத்தக கண்காட்சியும் என்று பேசுகிறாரோ என்கிற பயத்தோடு அமர்ந்தேன். நான் அமர அவர் பேசி முடித்தார். ராஜ்டிவி அகடவிகடம் புகழ் அப்துல்காதர் நகைச்சுவையாக பேசினார். ஆனால் நிறைய டபுள் மீனிங் வசனங்கள்.. பெண்களையும் குழந்தைகளோடு வந்திருந்தவர்களையும் நெளிய வைத்தது. எனக்கும் உச்சா முட்டிக்கொண்டிருந்ததால் கழிவறை பக்கம் ஒதுங்கினேன்.

உள்ளே போனால் போலீஸ் காரர் ஒருவர் கையில் வாக்கி டாக்கியை பிடித்தபடி கிளியர் கிளியர் என்றார். பவுடர் அடித்த குரங்கு போல் இருந்தது பிளீச்சிங் பவுடர் நிரம்பி வழியும் அந்த கழிவறை. தண்ணீர் வசதி கிடையாது, சிறுநீரெல்லாம் எந்த கனெக்சனும் இல்லாமல் மண்ணுக்கே பாய்கிறது. எத்தனை அவசரமாக இருந்தாலும் தவிர்ப்பது நன்று. வியாதிகள் கியாரண்டீட்.

வெறுத்துப்போய் ஞானியின் கடைப்பக்கம் ஒதுங்க, அங்கு எப்போதும் போல பாரதியாரின் படம் விற்பனையாகிக்கொண்டிருந்தது. இம்முறை காந்தி படமும் சேர்த்து விற்றுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஜங்கிள் புக்கின் தமிழாக்கம் (ஒரிஜினலின் மொழிபெயர்ப்பு) கிடைத்தது. உமாப்பதிப்பகத்தில் குறைந்த விலையில் (ரூ.40) போட்டிருக்கின்றனர். புத்தகம் பழையதாக இருந்தாலும் வொர்த்தான நூல். அதே போல நர்மதாவில் காமசூத்ரா புத்தகம், கொக்கேக சாஸ்திரத்துடன் இணைக்கப்பட்டு கிடைக்கிறது. 200ரூபாய்தான். கட்டிளங்காளைகள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். நான் சென்ற ஆண்டே வாங்கிவிட்டேன். இருந்தாலும் இந்த ஆண்டும் புத்தகம் கிடைப்பதால் பொதுநலன் கருதி இத்தகவல் இங்கே. அங்கேயே இயக்குனர் சிம்புதேவன் உதவி இயக்குனராக இருந்த போது வரைந்து எழுதிய கிமுவில் சோமு என்கிற காமிக் புத்தகம் 40 ரூபாய்க்கு கிடைத்தது. உடனே ஒன்றை பார்சல் செய்துவிட்டேன்.

என்னோடு வந்த தோழர் நர்மதாவிலேயே அசோகமித்திரனின் யுத்தங்களுக்கிடையே நாவல் வாங்கினார்.

ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் புத்தகம் பூம்புகார் பதிப்பகத்தில் வாங்கினேன். மூன்று பாகங்கள் கொண்ட இப்புத்தகம், மொத்தமாக 150ரூபாய்க்கு கிடைக்கிறது. லைலா மஜ்னூவின் கதையும் தனிப்புத்தகமாக அதே பதிப்பகத்தில் கிடைத்தாலும் நான் வாங்கவில்லை.

பதிவர்கள் சிலரும், பாராவும் அமர்ந்து ஏதோ முக்கியமான காரியம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். கிழக்கிலும் உயிர்மையிலும் நல்ல கூட்டம். ஆனந்த விகடனிலும் நல்ல கூட்டம். ஏதாவது வாங்கலாமென்கிற ஆசையோடு உள்ளே நுழைந்தேன்.. புத்தக விலையெல்லாம் வெங்காய விலைக்கு இணையாக இருந்தன. 300 ஜோக்குகள் என்கிற குட்டி புத்தகம் 80 ரூபாயாம்! நான் இன்னும் சாருநிவேதிதாவைப் போல பிரபல எழுத்தாளர் ஆகவில்லையே , இவ்வளவு விலை கொடுத்து புத்தகங்கள் வாங்க! நேற்றைய தினம் சுபமாய் முடிந்தது.

இன்றும் போக நினைத்திருக்கிறேன். வாசகர்கள் என்னுடைய எழுதப்படாத புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்க நினைத்தால் மாலை ஆறுமணிக்குமேல் 8.30க்குள் என்னை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பெற்றுக்கொள்ளலாம்!

06 January 2011

புத்தக திருவிழா



கையில் நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு கைநிறைய புத்தகங்கள் வாங்க புத்தக கண்காட்சிக்கு கிளம்பினேன். கண்காட்சி வாசலிலே எப்போதும் காணுகிற பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்கள் இம்முறை இல்லை. அந்த பேனர்களும் ஒளிவிளக்குகளும்தான் மக்களுக்கு இங்கே இப்படி ஒரு திருவிழா நடக்கிறது.. குழந்தை குட்டிகளோடு வந்து சேருங்க என அறிவிக்க உதவுபவை.


ஆனால் இம்முறை அது மிஸ்ஸிங். சென்ற ஆண்டில் நகர் முழுக்க ஆங்காங்கே விளம்பர தட்டிகள் வைத்து அறிவித்தது போல இந்தாண்டில் ஏன் செய்யவில்லை?. டிவியிலும் ரேடியோவிலும் விளம்பரங்கள் வருகிறதென்றே நினைக்கிறேன்.


உள்ளே நுழைய எப்போதும் போல பார்க்கிங் வசதிகள் மரத்தடிகளின் இருளான பகுதிகளில் அமைத்திருந்தனர். அங்கே இரண்டு ஹாலஜன் விளக்குகள் வைத்தால் ஆர்காட்டார் என்ன கோபித்து கொள்ளவா போகிறார். பத்திரிகையாளன் என்பதால் தெனாவெட்டாக டோக்கன் போடாமல் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தேன்.


டிக்கட் கவுண்டர்களில் கூட்டமில்லை. எனக்கு இலவச பாஸ் இருப்பதால் டிக்கட் எடுக்காமல் உள்ளே நுழைந்தேன். முதுகில் சோத்துமூட்டையை மாட்டிக்கொண்டு அதற்கு மேல் குளிர்கோட் அணிந்திருந்தேன். உள்ளே நுழையும் போதே காவலர்கள் என்னை நிறுத்தி பொறுப்புடன் முதுகில் என்ன.. என்று சோதித்தனர். சார் நான் பிரஸ் என்று சொல்லியும் தொடர்ந்து சோதித்தனர். உங்க நன்மைக்குத்தானே சார்.. என்று புன்னகைத்தார் ஒரு காவலர். உண்மைதான் என நினைத்தபடி உள்ளே நுழைய.. ஒன்றாம் எண் கடையில் முக்தா சீனிவாசன் அமர்ந்திருந்தார். ரொம்ப வயசாகிருச்சு பெரியவருக்கு! அவருடைய சில புத்தகங்களை புரட்டிப்பார்த்து விட்டு நகர்ந்தேன். வெறுங்கையோடு அவரது கடையை விட்டு வெளியேற என்னைப்பார்த்து புன்னகைத்தார். நானும் மறுபுன்னகைத்தேன்.


இரண்டாம் எண் கடைதான் இந்த ஆண்டின் சூப்பர் ஸ்டார். தினத்தந்தியின் வரலாற்று சுவடுகள் புத்தகம் விற்கிற தினத்தந்தியின் கடை. நான் கடையில் நுழையும் போதே மணி ஆறு.. அப்போதே அன்றைய தினம் விற்பனைக்காக எடுத்து வந்த 300 காப்பிகளும் விற்று தீர்ந்துவிட்டது என கூறினர். இந்த புத்தக கண்காட்சியில் நிச்சயமாக பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாகும் என்றார் கடைக்காரர். அனைவரும் கட்டாயம் வாங்கிப்படிக்க வேண்டிய பொக்கிஷம். அட்டைப்போட்ட குண்டு புத்தகம். விலை 300. நான் வாங்கவில்லை.


மூன்றாம் எண் , நான்காம் எண் கடைகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்பதால் அதையெல்லாம் ஸ்கிப் செய்து.. நேரடியாக நடுவில் இருந்த உயிர்மை ஸ்டாலுக்கு ஆவலோடு சென்றேன். சாருவும் மனுஷ்யபுத்திரனும் இருந்தனர். அருகில் கையை கட்டிக்கொண்டு நர்சிம் கவிஞரைப்போலவே போஸ் கொடுத்தபடி நின்று கொண்டிருந்தார். எழுத்தாளர் நிலாரசிகனும் நின்றுகொண்டிருந்தார். சாரு , பெங்களூரில் எழுத்தாளர்களை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது குறித்து விளக்கினார். பத்திரிகைகள் எழுத்தாளர்கள் கண்டுகொள்வதில்லை என்றார். உயிர்மையில் சுஜாதாபுத்தகங்கள் சக்கை போடு போடுவதாக கவுண்டரில் இருந்தவர் கூறினார்.


இதற்குள்ளாகவே நேரம் ஏழரையாகிவிட்டபடியால் நேரடியாக அங்கிருந்து கிழக்கிற்கு நகர்ந்தேன். ஜெயமோகனின் உலோகமும், பாராவின் காஷ்மீரும் சக்கை போடு போடுவதாக தெரிய வந்தது. எங்கு காணினும் நண்பரடா.. எத்தனை சிறிய உலகமடா..என்னும் என்னுடைய பாட்டுக்கிணங்க.. நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. உண்மையில் புத்தக காட்சியில் இத்தனை நண்பர்களை சந்திப்பது மிகப்பெரிய வன்கொடுமை. ஒரு கடையையும் உருப்படியாக பார்க்க முடிவதில்லை. அவர்களோடு பேசவும் அரட்டை அடிக்கவுமே முழுமையாக நேரம் செலவாகிறது. இனியாவது நண்பர்கள் கண்ணிலே படாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.


இதற்கு நடுவில் அய்ய்யோ நான் ஏதும் புக்கு வாங்கலையே என்று பதறி எதையாவது வாங்கியே ஆகவேண்டும் அதுவும் கைநிறைய வாங்கவேண்டும் என்கிற வேட்கையோடு அங்கிருந்து ஒரு சுற்று கிளம்பினேன்.


எல்லா புத்தகங்களும் 50ரூபாய்க்கு மேலேயே விலைவைத்து விற்கப்படுகின்றன. ஆனாலும் விடாமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் தேடியதில் பூம்புகார் பதிப்பகம் சிக்கியது. நான் தேடிக்கொண்டிருந்த சில நல்ல நூல்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்தன. பழையனூர் நீலி கதை ஐந்து ரூபாய்க்கு கிடைத்தது. புஷ்பா தங்கதுரையின் சிறைக்கதைகள் பதினைந்து ரூபாய்க்கு கிடைத்தது. மதன காமராஜன் கதைகள் 35ரூபாய்க்கு கிடைத்தது. மொத்தமாக அள்ளிப்போட்டுக்கொண்டு பில் போட்டால் இன்னும் பணம் மிச்சமிருந்தது. எதையாவது வாங்கவேண்டுமே என்று தேடி தேடி களைத்து இறுதியில் கண்காட்சியின் வலது கடைக்கோடியில் அமைந்திருந்த ஜூஸ் கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்தேன். நல்ல ஜூஸ் அனைவரும் கட்டாயம் குடிக்க வேண்டியவைகளின் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒன்று.


தரையில் கட்டைகளை போட்டு அரங்கம் அமைத்திருந்தனர். அதன் மீது நடப்பது ஏதோ விண்வெளியில் நடப்பதை போன்ற உணர்வை கொடுத்தது. எம்பி எம்பி குதித்து குதித்து நடக்க வேண்டியிருப்பதால் குதிங்கால் வலி அதிகமாக இருந்தது. பல இடங்களில் கட்டைகளின் மேல் அமைக்கப்பட்டிருந்த விரிப்புகள் மடங்கியும் குவிந்தும் கிடந்தன. கடைகளை பார்த்துக்கொண்டே நடக்கிறவர்கள் அதில் சிக்கி கீழே விழும் வாய்ப்புண்டு. தண்ணீரைத்தேடி நாய் பேயாக அலைந்தாலும் கிடைக்கவில்லை. புத்தகம் விற்பவர்கள் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்தால் நல்லது.. தாகசாந்திக்காகவாவது உங்கள் கடைப்பக்கம் வாசகர்கள் வர நேரிடலாம்.


மற்றபடி வெளியே கருத்தரங்கில் யார் யாரோ பேசிக்கொண்டிருந்தனர். அதையும் பலர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். கண்காட்சி அமைப்பாளர்கள் புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில் அதுகுறித்த சிறப்பு செய்தித்தாள் ஒன்றை வெளியிடலாம். அதில் கண்காட்சியில் முக்கியமான புத்தகங்கள் குறித்த அறிமுகம், முந்தைய தினம் பேசிய பேச்சாளர்களின் பேச்சுகள், எழுத்தாளர்களின் சிறப்பு கட்டுரைகள் என நிறைய வெளியிட்டு அதை டிக்கட்டுடன் இலவசமாக கொடுக்க முன்வரலாம். இதன் மூலம் நிறைய விளம்பர வருவாயும் கிடைக்கும். பொங்கல் வரை தினமும் செல்ல திட்டமிட்டுள்ளேன். ஆண்டவன் அருள் புரியட்டும். புரிந்தால் அதைப்பற்றி தினமும் எழுதுவேன்.