Pages

28 November 2011

எஸ்ராவின் கதாகாலட்ஷேபம்!




முதலில் அந்த அறிவிப்பே காமெடியாகத்தான் இருந்தது. என்னது எஸ்ரா ஏழுநாள் பேருரை ஆற்றப்போகிறாரா? ஹிஹி செம்ம காமெடியா இருக்குமே! என்று நண்பர்களோடு பேசிக்கொண்டேன். அதிலும் உலக இலக்கியங்கள் குறித்து பேசுகிறார் என்றதும் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. உலக இலக்கியங்களின் மீதான அச்சமும் எஸ்ரா குறித்து நான் அறிந்திருந்த தகவல்களும் அப்படியொரு எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கலாம். எஸ்ராவின் புத்தகங்கள் எதையுமே பல காரணங்களால் என்னால் படிக்க முடியாமல் போயிருக்கிறது.

அந்த அறிவிப்பு எனக்கு சிறுவயதில் கேட்ட கதாகாலட்சேபங்களை நினைவூட்டியது. எங்கள் வீட்டருகே இருந்த கோவிலில் எப்போதுமே யாராவது பேசிக்கொண்டேயிருப்பதை பார்த்திருக்கிறேன். பெரியபுராண கதைகளை பல நாட்கள் பெரியவர் ஒருவர் மைக் வைத்து சொல்லிக்கொடுப்பார். முடிவில் சுண்டலும் பொங்கலும் கிடைக்கும் என்கிற காரணத்திற்காக பள்ளி முடிந்து அங்கே செல்வதை வழக்கமாக்கியிருந்தேன்.

ஆனால் சிலநாட்களில் அந்தப்பெரியவர் கதை சொல்லுகிற பாணியும் லாகவமும் சுவாரஸ்யமான கதைகளும் சுண்டல் பொங்கலை விடவும் சுவையாயிருந்தன. கதைகளுக்காகவே தினமும் பள்ளிமுடிந்ததும் விளையாடாமல் முகத்தை கழுவி திருநீர் போட்டுக்கொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். இன்னமும் அந்தப்பெயர் தெரியாத பெரியவர் சொன்ன கதைகள் அனைத்தும் நினைவிலேயே இருக்கிறது. எஸ்ராவின் பேச்சும் அப்படித்தான் இருந்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு திருநீரு பூசாமல் கையைக்கட்டிக்கொண்டு முதல்வரிசையில் அமர்ந்து ஆவென ஆச்சர்யத்தோடு கதை கேட்டு மகிழ்ந்தேன்.

எஸ்ராவின் பேச்சினை உலக இலக்கியங்கள் ஃபார் டம்மீஸ் என்று வைத்துக்கொள்ளலாம். ஏழுநாட்கள் பேச்சு என்றபோதும் என்னால் முதல்நாள் போகமுடியவில்லை. போகிற ஆர்வமும் இல்லை. ஃபேஸ்புக்கில் சிலர் எஸ்ராவின் பேச்சு பிரமாதம் என புகழ்ந்து தள்ளுவதைக்கேட்டு அப்படி என்னதான்யா இந்தாளு பேசறாரு பார்த்துபுடுவோம் என இரண்டாம் நாள் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டருக்கு சென்றேன். சாரு மாதிரியான புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட பேச்சைக்கேட்க வந்திருந்தனர்.

அரங்குநிறைந்து முப்பதுக்கும் மேல் வாசகர்கள் நின்றுகொண்டே பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தனர். நாற்காலிகள் கிடைக்காத காரணத்தால் அரங்கின் ஓரத்தில் தரையில் அமர்ந்து கேட்கத்தொடங்கினேன். அன்றைக்கு பேச்சு தாஸ்தோவ்ஸ்கி பற்றியது. அந்தப்பெயரை இதற்குமுன் பகடி எழுத மட்டுமே பயன்படுத்தியதாக நினைவு. அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களை மட்டுமே தெரிந்துவைத்திருந்தேன். தாஸ்தோவ்ஸ்கியின் குற்றமும் தண்டணையும் புத்தகம் குறித்து பேசத்தொடங்கினார் எஸ்ரா.

ரொம்ப மொக்கை போட்டா எழுந்து ஓடிடுவோம் என்கிற எண்ணத்துடன் ஓட்டப்பந்தய வீரனைப்போல தயாராயிருந்தேன். ஆனால் எஸ்ராவின் பேச்சு.. தகவல்கள்.. பகிர்ந்துகொண்ட விதம். அப்படியே இரண்டு கால்களையும் கட்டிப்போட்டு அமரவைத்தது. கிட்டத்தட்ட ஒன்னாம்ப்பு படிக்கும் பையனைப்போல சம்மணமிட்டு கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்து நான்மட்டுமல்ல ஒட்டுமொத்த அரங்குமே கேட்டுக்கொண்டிருந்தது.

தான் படித்த ஒரு புத்தகத்தினை தெரிந்துகொண்ட சில தகவல்களை நண்பனைப்போல பகிர்ந்துகொண்டார். ஒரு மந்திரவாதியினைப்போல தாஸ்தோவ்ஸ்கியின் வாழ்க்கையையும் அந்நாவல் ஏன் எழுதப்பட்டது,எப்போது எழுதப்பட்டது,எப்படி எழுதப்பட்டது , எது அவரை அந்நாவல் எழுத தூண்டியது. அந்நாவல் அதன் ஆசிரியருக்கு எப்படிப்பட்டது என தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்தில் தாஸ்தோவ்கியின் மீது ஒரு ஈர்ப்பையும் அவருடைய எழுத்துகளின் மீது ஒரு மரியாதையையும் உண்டாக்கினார் என்றுதான் சொல்லவேண்டும்.

எதைப்பற்றி பேசினாலும் அதோடு தொடர்புடைய திரைப்படங்கள்,நாடகங்கள்,கவிதைகள்,புத்தகங்கள்,வரலாற்று சம்பவங்கள் என எதையுமே விட்டுவைக்காமல் பகிர்ந்துகொண்டார். உதாரணமாக மேக்பெத் குறித்து பேசும்போது அக்கதையில் வருகிற மூன்று சூனியக்காரிகளுக்கு வரலாற்றை தெரிவித்தார். ஷேக்ஸ்பியரின் காலத்தில் சூனியக்காரிகள் வேட்டையாடிக்கொல்லப்பட்டதையும் கூறினார். இப்படி ஒவ்வொரு கதையில் வருகிற கதாபாத்திரங்களின் வேர்களையும் தேடியது அந்த உரை.

தனக்கு தெரிந்த அனைத்தையுமே பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்தை உணரமுடிந்தது. உலக இலக்கியங்களை மனிதர்களின் சமகாலவாழ்வியலோடு தொடர்பு படுத்தி பேசியது சிறப்பாக இருந்தது. அவர் பேசியதில் சில தகவல் பிழைகளிருப்பதாக நண்பர்கள் சுட்டிக்காட்டினர். இருந்துவிட்டுபோகட்டுமே. உலக இலக்கியங்கள் என்பதே பாகற்காயாக இருந்த எனக்கு அதையெல்லாம் படித்துவிடவேண்டும் , தேடிதேடி தாஸ்தோவ்ஸ்கியையும் டால்ஸ்டாயையும் பாஷோவையும் ஹோமரையும் ஷேக்ஸ்பியரையும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தினையும் இரண்டு மணிநேரத்தில் உண்டாக்கியிருக்கிறாரே!

ஹோமரின் இலியட் பற்றி பேசியபோது அதை இந்தியாவின் புராணங்களோடு ஒப்பிட்டு கிட்டத்தட்ட இந்திய இலக்கியமாகவே மாற்றிக்காட்டினார். இலக்கியம் எதுவாக இருந்தாலும் எந்த நாட்டினுடையதாக இருந்தாலும் அவை அனைத்துமே மனிதர்களுக்கானவை என்பதே எஸ்ராவின் ஏழுநாள் உரையின் ஒரே கருத்தாக இருந்தது. நம் வாழ்வில் கதைகளின் முக்கியத்துவம் குறித்துப்பேசினார்.

ஏழு நாள் உரை அவர்மீது ஒருவித அன்பினை நட்பினை பிணைப்பை உண்டாக்கியது. எவ்வளவு இனிமையான மனிதர் இவர். புன்னகையோடு அனைத்தையும் நேசிக்கிறார். எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டுகிறார். ஒரு குழந்தையைப்போல ஆர்வத்துடன் விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நிறையவே தெரிந்துகொள்கிறார். இன்னமும் அவருக்குள் ஒரு குழந்தைத்தன்மை மிச்சமிருப்பதையும் உணர முடிந்தது. மூன்றாம் நாள் ஹைக்கூ குறித்து பேசும் போது அது நிகழ்ந்தது. திருடன் விட்டுச்சென்ற ஜன்னல் நிலவு என்கிற ஹைக்கூ குறித்து பேசினார். அற்புதமான பேச்சு அது. ‘’மாஸ்டர் என்னை உங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என கத்திவிட வேண்டும் போல இருந்தது.

வாழ்க்கையை இயற்கையை மனிதர்களை குணங்களை கிட்டத்தட்ட அனைத்தையுமே அவர் நேசிக்கிறவராக இருப்பதை ஏழுநாள் உரைகளும் எனக்கு உணர்த்தியது. எதையுமே விலகிநின்று ரசிக்கிற தன்மையை உணர முடிந்தது. ஆனால் ஒருநாள் கூட ‘என்னுடைய அந்த புத்தகத்தில் அப்படி எழுதியிருக்கிறேன்.. இந்தக்கதையில் இப்படி எழுதியிருக்கிறேன்.. அதை வாங்கிப்படியுங்கள் அதுதான் இலக்கியம்.. ‘’ என்றெல்லாம் பெருமை பீத்தல்களில் அவர் இறங்கவேயில்லை. ஏழுநாட்களும் அரங்கு நிறைய அதுவே காரணமாக இருக்கலாம்.

உலக இலக்கியங்களை கரைத்துக்குடித்த பெரிசுகளுக்கு இந்த உரை சலிப்பூட்டக்கூடியதாகவும் மொக்கையாகவும் இருந்திருக்கலாம். என்னைப்போன்ற ஒன்னாம்ப்பு மாணவர்களுக்கு இதைவிடவும் சிறந்த இலக்கிய அறிமுகத்தினை இதற்குமுன் யாருமே கொடுத்ததில்லை. ஏற்பாடு செய்த உயிர்மைக்கு நன்றிகள்.

இந்த ஏழு நாள் உரையும் டிவிடி வடிவில் வெளியாகவுள்ளதாக தன்னுடைய இணையதளத்தில் எழுதியிருக்கிறார். அப்படி வெளியாகும்போது அனைவரும் நிச்சயமாக வாங்கி பார்க்கவேண்டும். மற்றபடி ஏழு நாட்களுக்கு பிறகு இன்றைக்கு மாலை எஸ்ராவின் உரையில்லை. என்பது ஒருவித ஏமாற்றத்தினை கொடுக்கிறது. டிசம்பர் 6 சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா வரைக்கும் காத்திருக்கவேண்டும். எஸ்ரா அன்றைக்கு பேசுகிறார்.

24 November 2011

கொலைவெறி இலக்கியம்





ஓர் ஊரில் உயிரோடு இருந்தவர்களில் முக்கால்வாசிபேர் இலக்கியவாதிகளாக இருந்தனர். அதே ஊரில் இரண்டு சாதாரண மனித இளைஞர்களும் வசித்துவந்தனர். அந்த இரண்டு பேரும்தான் அத்தனை இலக்கியவாதிகளுக்கும் மிச்சமிருந்த மிச்ச சொச்ச இரண்டே இரண்டு வாசகர்கள்.

அந்த இருவரும் பரம ஏழைகள். மூன்று வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள். எவ்வளவு உழைத்தாலும் பசி பஞ்சம் பட்டினி. இந்த அயராத உழைப்புக்கு மத்தியிலே, பிரியாணி தின்றுவிட்டு பல்லிடுக்கில் சிக்கிய கறித்துண்டை நோண்டியபடி டோல்ஸ்டாய் பற்றியும் லத்தீன் அமெரிக்க இசைபற்றியும் கொரியமொழியில் வெளிவரும் உலகசினிமா குறித்தும் பின்னவீனத்துவமாக முதுகு சொறிந்தபடி விதந்தோதுகிற இலக்கியவாசிப்புக்கு எங்கே நேரம். செக்குமாட்டுக்கு எதுக்கு சிங்காரம். அடிமாட்டுக்கு எதுக்கு அலங்காரம். சரியான ஞானசூனியங்கள். ஆனாலும் இந்த இருவருடைய இலக்கிய வெறியும் ஆர்வமும் அலாதியானது.

ஓசி டீயும் சமோசாவும் கிடைக்கிறதென்கின்ற ஒரே காரணத்திற்காக ஊரில் எந்த இலக்கிய,கவிதைவாசிப்பு,புத்தகவிமர்சன,வெளியீட்டு,முற்போக்கு பிற்போக்கு கூட்டங்களிலும் மேலும் இன்னபிற சமோசாடீ கூட்டங்களிலும் கலந்துகொள்வதை பார்க்கலாம்.

புரிகிறதோ புரியவில்லையோ கூட்டமிருக்கிறதோ இல்லையோ பேருரைகள் முடியும்வரை முழுமையாக காத்திருந்து கடைசியில் கொடுக்கப்படுகிற சூடான டீயை உறிஞ்சி குடித்துவிட்டு சமோசாவை தின்றுவிட்டு வயிறார நடையை கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதனாலேயே அந்த இருவரும் அதிதீவிர இலக்கியபிரதிகளாக இலக்கிய வானின் சுடரொளிகளாக , இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் எஞ்சி இருக்கிற கடைசி இரண்டு வாசகர்களாக இலக்கியவாதிகள் மத்தியில் புகழ்பெற்றிருந்தனர்.

‘அடேங்கப்பா அந்த இரண்டுபேருக்கும் என்ன ஒரு இலக்கிய ஆர்வம்ன்றீங்க ஒரு கூட்டம் மிஸ்பண்ணமாட்டாங்க.. அதுவும் நான் கலந்துக்கற கூட்டம்னா முத ஆளா வந்து விசில்தான் கைத்தட்டல்தான். ஏன்னா பாருங்க என் மேல அவங்களுக்கு அவ்ளோ அபிமானம். நான் கிணத்துல குதிங்கனு எழுதி முடிக்கறதுக்குள்ள கிணத்துல விழுந்து செத்து மிதப்பாய்ங்கன்னா பாத்துக்கோங்களேன்’’ என்று எல்லா பிரபல எழுத்தாளர்களும் அந்த இருவரையும் தங்களுடைய வாசக அடிமைகளாக ஊருக்குள் சொல்லித்திரிந்தனர்.

சிலர் அந்த இருவரையும் போனில் அழைத்தும் நேரில் சந்தித்தும் டீ வாங்கிக்கொடுத்து உரையாற்றுவதை எங்கும் காணலாம். அரிதாக சிலர் சாப்பாடு வாங்கிக்கொடுத்து அவர்களிடம் உரையாற்றுவார்கள். இலக்கியவாதிகளுக்கு எப்போதெல்லாம் ஆர்வவெறிதீர உரையாற்ற வேண்டும் என ஆசையாக இருக்கிறதோ கையில் பத்து இருபது ரூபாயோடுவந்தால் இருவரும் ஐட்டம் போல தயாராகிவிடுவார்கள். இந்த இலக்கியவாதிகளும் அரைமணிநேரமோ ஒருமணிநேரமோ கதறகதற இலக்கியம் பேசிவிட்டுப்போகலாம். டீ ரொம்பவே முக்கியம்.

இப்படியாக பல நாட்கள் ஊருக்குள்ள நாங்களும் இலக்கியவாதிகள்தான் என ஏமாற்றிக்கொண்டு ஓசி டீயும் சமோசாவும் அவ்வப்போது பிரமாண்ட பொருட்செலவில் சரவணபவன் சாப்பாடும் சாப்பிட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் நல்ல பாடம் கற்பிக்க நினைத்தது விதி.

அன்றைக்கும் அந்த இலக்கிய கூட்டத்தில் எப்போதும் போலவே மேடையில் பத்து பேரும் பார்வையாளர்கள் நான்குபேரும் அமர்ந்து பின்னவீனத்துவத்தை பிச்சு பிச்சு போட்டுக்கொண்டிருந்தனர். சொந்தகாசில் புத்தகம் போட்ட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த கோமான்களும் சீமாட்டிகளும் வீட்டிலேயே நன்றாக சாப்பிட்டுவிட்டு பேசி தீர்த்தனர்.
பெரிய பார்ட்டி என்பதால் வழக்கத்திற்கு மாறாக சமோசாவுடன் சுவீட்டும் மிக்சரும் கூட சேர்த்துகொடுப்பார்கள் என்கிற ஆர்வத்தோடு எப்போதும் போல வயிற்றை வெற்றிடமாக்கிப் போயிருந்த இருவருக்கும் பச்சை தண்ணீர் கூட கொடுக்காமல் ஏமாற்றினர். பசிமயக்கத்தில் கண்களில் தூக்கம் சொக்கியது இருவருக்கும்.

கைத்தட்டிக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த இருவருக்கும் அருகில் வந்து அமர்ந்தது விதி. அவர்கள் இருவரையும் பார்த்து முதலில் புன்னகைத்தது. அவர்களும் மறுபுன்னகையை மெலிதாக அளித்தனர். விதி தன் பத்து சொச்சம் கவிதைகளை ஒன்று திரட்டி ஒரே ஒரு புத்தகத்தை தன் சொந்தகாசில் அச்சேற்றி அதை அதுவே கூடையில் வைத்து கூவி கூவி ஊரெங்கும் ஓசியில் கொடுத்து புகழடையும் வெறியிலிருந்தது! ஏற்கனவே இருவருக்கும் தலா ஒரு கவிதை தொகுப்பை இலவசமாக அளித்திருந்தது. கட்டாயம் படிச்சிட்டு சொல்லுங்க கருத்து சொல்லியே ஆகணும்.. உங்க கருத்து ரொம்ப முக்கியம் பாஸு என்று கண்டிப்பாக சொல்லியிருந்தது.

கவிதையென்றாலே கரப்பான்பூச்சி போல இருவருக்கும். வாசித்தால் வாந்தி வரும். அதனால் எப்போதும் செய்வதைப்போலவே அந்த அருமையான கவிதைத் தொகுப்பையும் எடைக்குப்போட்டு டீ வாங்கி குடித்திருந்தனர். ஆனால் இப்போது விதி அருகில் வந்து அமர்ந்து அந்த கவிதைத்தொகுப்பை பற்றிகேட்குதே என அஞ்சிநடுங்கினர். நிலைகுலைந்து போயினர்.

விதியும் ‘இந்த பசங்க நம்ம கவிதைய படிச்சி பயங்கரமா புகழப்போறாங்க போல’ என்கிற எதிர்பார்ப்போடு கூட்டம் முடியும்வரை ஆர்வத்துடன் காத்திருந்தது. கூட்டம் முடிந்தது.

‘’என்ன மாரி கவிதைங்க பாஸு. சூப்பர் பாஸ்.. அடேங்கப்பா.. அந்த கடைசி கவிதை சான்ஸே இல்லை.. நீங்கதான் அடுத்த மனுஷ்யபுத்திரன்’’ என கோரஸாக புகழ்ந்தனர். புகழ்ந்து தீர்த்துவிட்டால் விதி வீட்டுக்கு போய்விடும் என நினைத்தனர்.

‘’பாஸ் நாம ஏன் ஒரு டீ ஷாப்ட்டுகினே பேசக்கூடாது’’ என்றது விதி. ஏற்கனவே காஞ்சிபோயிருந்த காலிவயிற்றுக்கு உறவினர்களாக இருந்த இருவரும் ஓசிடீக்கு ஆசைப்பட்டு பலியாட்டைப்போல தலையாட்டினர். ‘’பொதுவா நான் டீ ஷாப்பிடறதுனா தாஜ் ஓட்டலுக்குதான் போவேன்.. இங்கே பக்கத்துல தாஜ் ஓட்டலுக்குதா’’ என்றது விதி.
விதியோடு இருவரும் அருகிலிருந்து இரண்டரை நட்சத்திர ஓட்டலுக்குள் புகுந்தனர். ‘’பாஸ் அதுல அந்த மூணாவது கவிதை எப்படி..? வார்த்தைகளுக்காக கிரியா அகராதியை பிச்சி பிராண்டி எழுதினது’’ என புஜபலபராக்கிரமங்களை சொல்லத்தொடங்கியது விதி.

‘’பாஸ் டீ ஆர்டர் பண்ணீங்கன்னா சாப்ட்டுகினே பேசலாம்.. இன்னான்றீங்க’’ என்றனர் இருவரும்.

‘’இன்னாபாஸ் நம்ம கவிதைய படிச்சி நல்லாருக்குனு வேற சொல்ட்டீங்க இன்னைக்கு உங்களுக்கு வெறும் டீயா.. டிரீட்டு..’’ என அதிர்ச்சியளித்தது விதி.

‘’சூடா இரண்டு மசால் தோசை, கேரட் அல்வா, உளுந்த வடை, சக்கரை பொங்கல்.. மூணுபிளேட்..’’ என்றதும் மகிழ்ச்சியில் பூரித்து போயினர்.. இருந்தாலும் ஆசுவாசமாகி பண்டங்கள் வந்ததும் பகிர்ந்துகொண்டனர்.

ஆரஞ்சுநிற கேரட் அல்வாவினைப் பார்க்கும்போதே எச்சில் ஊறியது. இருவரில் ஒருவன் ஆர்வத்துடன் அல்வாவில் கைவைக்க.. டக்கென்று ஆரம்பித்தது விதி

‘’பாஸ் அந்த மூனாவது கவிதைய எப்படி அதைப் பத்தி சொல்லுங்க.. கஷ்டப்பட்டு எழுதினது. ஓன் ஹோல் நைட் கண்ணுமுழிச்சி நிலாவ பாத்துகினே இருந்தேன். அதைபத்தி பேசாம.. அல்வா எங்க போயிடப்போகுது’’ என கையைபிடித்து தடுத்தது. அப்போதே உஷாராகி ஓடியிருக்கவேண்டும். விதி வலியது. இருவரும் அல்வாவைப் பார்த்துக்கொண்டு காத்திருந்தனர்.

‘’அதுவந்து அதுவந்து.. அதுவா சூப்பர் கவிதை பாஸ்.. அப்படியே வான்கா ஓவியத்தை பாக்கறாப்லயே படிக்க சொல்ல இருந்துது.. அய்யயோ அதை படிச்சி நாலுநாள் தூக்கம் வரலியே! நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே..’’ எனபேசிக்கொண்டே அல்வாவினை எடுக்க முனைந்தான். மறுபடியும் கையை பிடித்து தடுத்து.. ‘’என்ன பாஸ் சாப்டுகிட்டே பேசினா பேசறது எப்படி புரியும்.. முதல்ல சொல்லிடுங்க.. அப்புறம் சாப்பிடுங்க, எனக்கு ஆர்வம் தாங்கல’’ என்றது விதி.

‘’அதுபாஸ்.. இதுமாதிரி கவிதைய வாழ்க்கைல படிச்சதே இல்ல.. இன்னைக்கு இந்தியாலயே ஏன் ஒலகத்திலயே நீங்கதான் பெஸ்ட் கவிஞர், உங்களுக்குதான்... ஏன் தோழர் அது இன்னா விருது.. நோபால் பரிசு.. அத்த குடுக்கணும். அந்த மூனாவது கவிதைதான் பெஸ்ட்டு கவிதை.. நான் அல்வாவ கொஞ்சம் சாப்பிட்டுக்கட்டுமா’’ என பரிதாபமாக கேட்டான்.

‘’அட அல்வாவ விடுங்க.. அப்ப நாலாவது கவிதை மோசம்ன்றீங்களா!’’ என விதி தன் திருவிளையாடலை தொடங்கியது.

‘’அப்படி இல்ல பாஸ்.. மூணாவது கவிதை மாஸ்டர் பீஸ்னா நாலாவது கவிதை... ம்ம்ம்.. லிட்டில் மாஸ்டர் பீஸ்’’ என மீண்டும் அல்வாவில் கைவைக்க முயன்றான். விதியோடு ஒருவன் போராடுவதை பார்த்து மற்றொருவன் அல்வாவை தொடவேயில்லை. அதற்கு பதிலாக தோசையை பிய்த்து தின்ன கரம் நீட்டினான்.

‘’பாஸ் அவர் லிட்டில் மாஸ்டர் பீஸு காமெடி பீஸ்னு ஏதோ சொல்றாரு இப்ப போயி தோசை பிச்சிகிட்டிருக்கீங்க.. நீங்க சொல்லுங்க எது பெஸ்ட்டு’’ என விதி இருவர் கழுத்திலும் சுறுக்கை மாட்டியது. இனிமேல் கயிறு வயிறு இரண்டுமே விதியின் கைகளில்தான்.

இருவரும் முகத்தை ஙே என வைத்துக்கொண்டு ஒருவர் முகத்தை மற்றவர் மாறிமாறி பார்த்துக்கொண்டனர். மாட்னோம்டா என்பதே அதன் சாரம். பசியில் வயிறுவேறு எரிந்தது. கண்முன்னால அற்புதமான விருந்து இருக்கு.. மயிராண்டி திங்கவுடமாட்டேன்றானே என எரிச்சலோடு பல்லைக்காட்டிக்கொண்டு....

‘’அது வந்து பாஸ்.. நீங்க எழுதின எல்லா கவிதையுமே மாஸ்டர் பீஸ்தான்.. நீங்க ஒரு மகாகவி.. இனிமே எழுதப்போற கவிதையும் கிளாசிக்காதான் இருக்கும். அப்படியே அந்த அல்வாவ சாப்ட்டுகிட்டே பேசினா நல்லாருக்கும்.. இல்லாட்டி ஆறிடும்.. டேஸ்ட்டுருக்காது’’ என கோரஸாக சொல்லிவிட்டு பார்வையை அல்வாவின் பக்கம் திருப்பினர்.

‘’பாஸ் அப்படிலாம் சும்மா சொல்லாதீங்க எனக்கு தெரியாதா என்கவிதைய பத்தி.. அந்த தொகுப்புல மூணுதான் உருப்படியான கவிதை.. சும்மா அல்வாவுக்கு ஆசைப்பட்டு பாராட்டுனுமேனு பாராட்டாதீங்க.. குறைகள சொல்லுங்க அதுதான் என்னை உயர்த்தும்’’ என விதி கொத்துகுண்டு தாக்குதலை தொடங்கியது. விடமாட்டான் போலருக்கே...என நினைத்த இருவரும் அழும் குரலில் பேசத்தொடங்கினர்.

‘’அது வந்து.. அந்த ஆறாவது கவிதை இருக்கே.. அது சுமார்தான்.. வெறும் வார்த்தை விளையாட்டு. மத்தபடி உயிரே இல்ல’’ என ஒருவனும். , ‘’ஆமா பாஸ் பதினோறாவது கவிதை ரொம்ப சுமார்.. ரொம்ப சின்னது’’ என சொல்லிவைத்துவிட்டு.. அல்வாவுக்கு காத்திருந்தனர்.

‘’பாஸ் என் தொகுப்புல பத்து கவிதைதானே! பதினொன்னா..’’ என முதல்முறையாக விதி விழித்தது.

‘’அடடா பின் அட்டைல நீங்க எழுதிருந்ததையும் கவிதைனு நினைச்சி படிச்சிட்டேன் போல.. சாரி பாஸ்’’ என்றான். இதயம் வேறு படபடவென அடித்துக்கொண்டது இருவருக்கும்.

‘’ஹாஹாஹா’’ என ஓட்டல் அதிர சிரித்தது விதி. ‘’ ஐலைக் யூவர் சென்ஸ் ஆப் க்யூமர்’’ என்றது. நல்லவேளை அடிவிழவில்லை என ஆசுவாசமாகினர். விதிக்கு இரண்டு கைகளும் நல்ல கர்லா கட்டைபோல உருண்டுதிரண்டு இருக்கும் என்பது இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. மீண்டும் அல்வா வேட்டையை தொடர்ந்தனர்.

‘’கவிதை நல்லா இல்லாட்டி நல்லா இல்லைனு சொன்னீங்க பாருங்க உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.. அல்வாவை சாப்பிடுங்க’’ என்றது விதி. இந்த இலக்கிய விதிக்குகூட மனசாட்சியுண்டு இந்த கல்லுக்குள்ளும் ஒரு ஈரம் உண்டு என நினைத்துக்கொண்டு இருவரும் அல்வாவை சாப்பிடத்தொடங்கினர். ஆனாலும் விதி விடவில்லை.

‘’நீங்க வண்ணநிலவனோட கடல்புரத்தில் படிச்சிருக்கீங்களா....அதுல ஒரு வரி வரும்பாருங்க..அதுக்கு இணையான ஒரு உள்ளுணர்வெழுச்சிய நம்ம கவிதைல ஒன்னு’’ என மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி உரையை தொடங்கியது விதி.
‘’தோழர் அல்வா ரொம்ப சூடா இருக்குல்ல.. உஃப்ப்ப்’ என ஊதிக்கொண்டே இன்னொருவனிடம் ஸ்பூனை தூக்கி காட்டினான். ‘’ஆமா தோழர் ரொம்ப சூடு.. உஃப்ப்’’ என்றான் மற்றொருவன்.

‘’ஹலோ வண்ணதாசன்..’’ என இருவரையும் இடைமறித்து சத்தமாக பேசியும்.. அந்த இருவரும்

‘’பாஸ்.. அல்வா செம டேஸ்ட்டு.. இன்னொரு பிளேட் வாங்கிக்குடுங்களேன்’’ என விதியைப்பார்த்து கூறினர்.

‘’அதுக்கென்னபாஸ் வாங்கிதரேன்.. வண்ணதாசனை விடுங்க.. ஆல்ப்ரட் காம்யூவோட அந்நியன்னு ஒரு நாவல்.. படிச்சிருப்பீங்களே.. அதே மாதிரி நானும்..’’ என விடாப்பிடியாக விதி விளையாடியது.

எதற்கும் மசியாமல் இருவரும் அல்வாவினை ருசித்து ருசித்து தின்று தீர்த்து அடுத்து பொங்கலில் விரலை விட்டு நோட்டிக்கொண்டிருக்க.. எரிச்சலானது விதி. கொஞ்சம் நேரம் அவர்களாக ஏதாவது பேசட்டும் என காத்திருந்தது. ஆனால் இருவரும் விதியை கொஞ்சமும் சட்டை செய்யாமல் வந்த வேலையில் மும்முரமாகியிருந்தனர். சாப்பிடத்தொடங்கிவிட்டால் இடியே விழுந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தொழில் ரகசியம். பொறுத்து பொறுத்து பார்த்து தாங்க முடியாமல்..

‘’டேய் நிறுத்துங்கடா.. ஞான சூனியங்களா.. உயர் இலக்கிய ரசனை பத்தி பேசிட்டிருக்கேன்.. பத்துகாசு பொறாத அல்வாவ தின்னுகிட்டிருக்கீங்களே.. உங்களுக்கெல்லாம் இலக்கியம்னா என்ன தெரியுமா.. ’’ என சத்தம் போட்டது. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் தோழர் சாம்பார் சூப்பரா இருக்கு.. பொங்கல்ல குழிபண்ணி ஊத்தி பிசைஞ்சி தின்னு பாருங்க அட்டகாசம் என பேசிக்கொண்டிருந்தனர். விதி தன்னையே நொந்தபடி..

‘’சாரி பாஸ்! நான் கோவத்துல பேசிட்டேன்.. நான் புதுசா ஒரு கவிதை எழுதிருக்கேன்.. கேக்கறீங்களா?’’ என்றது.

‘’இன்னொரு பிளேட் அல்வா வாங்கிக்குடுங்க கேக்கறோம்’’ என சொல்லிவிட்டு மீண்டும் வாய்க்கு வேலை கொடுக்கத்தொடங்கினர். இதற்கு மேலும் விதியால் எப்படி பொறுத்திருக்க முடியும். இரண்டு பேரின் சட்டை காலரை பிடித்து அப்படியே நிற்கவைத்து ‘’டேய் என்னை பார்த்தா எப்படிடா இருக்கு உங்களுக்கு.. மரியாதையா ஓடிப்போயிருங்க..’’ என்று உலுக்கியது.

ஒருவன் தன் உளுந்தவடையை கீழே வைத்துவிட இருவரும்.. சோகமாக அந்த ஹோட்டலை விட்டு கிளம்ப தயாராயினர். முதன்முதலாக விதிக்கே விளையாட்டு காட்டிவிட்டு சென்ற இருவரையும் நினைத்து விதி தன்னைத்தானே நொந்துகொண்டது.
‘தோழர் நல்ல வேளை பில்லு கட்ட வச்சிருவானோனு நினைச்சேன்.. தப்பிச்சோம்.. நம்மகிட்டயேவா!’’ என்றான் ஒருவன்.

‘’தோழர் ஒருநிமிஷம் இருங்க! இதோ வந்திடறேன் என மீண்டும் அந்த டேபிளுக்கே திரும்பிப்போனான் மற்றொருவன்.

விதியின் அருகில் போய் நின்றான். தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த விதி அவனை நிமிர்ந்து பார்த்து ‘’என்ன’’ என கத்தியது.

‘’இல்ல.. பாஸ் நாங்க ஏதாச்சும் தப்பா பேசிருந்தா மன்னிச்சிடுங்க’’ என்றான்

‘’இருக்கட்டும்.. இனிமே என் கண்லயே படாதீங்க’’ என்றது

‘’அதுக்கில்ல.. என்னோட கேரட் அல்வால பாதிய மிச்சம் வச்சிட்டு போயிட்டேன்.. அதை மட்டும் எடுத்துக்கட்டுமா’’ என்றான்.

அதற்கு பிறகு விதி கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எங்கோ கண்காணாத தேசத்துக்கு போய்விட்டது. அந்த இருவரும் தங்களுடைய இலக்கிய சேவையை தொடர்ந்தனர்.


(இந்த கதையில் வருகிற பாத்திரங்கள் யாவும் பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியவை)

18 November 2011

டின்டின்



நண்பர்களில் சிலர் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் குறித்து பேச ஆரம்பித்தால் மெய்மறந்து பரவசநிலையில் மணிக்கணக்கில் பேசுவதை கேட்டிருக்கிறேன். பல ஆயிரங்கள் செலவழித்து பழைய கிழிந்த குப்பையான காமிக்ஸ்களை வாங்குவதையும், கடைகடையாக சொல்லிவைத்து பழைய புத்தகங்கள் சேகரித்து வைப்பதையும் பார்க்க செமகாமெடியாக இருக்கும். இந்த காமிக்ஸ்களுக்காக அடிதடி வெட்டு குத்து கைகலப்புகள் கூட நடக்கும் என்றே நினைக்கிறேன். (காமிக்ஸ் ரசிகர்கள் கன்பார்ம் செய்து உதவலாம்) அப்படி என்னதான்யா இருக்கு இந்த தமிழ்காமிக்ஸ்ல என முஷ்டியை மடக்கிக்கொண்டு ஒருகை பார்த்துவிட முடிவெடுத்து சமகாலத்தில் பழைய காமிக் புத்தகங்களை நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

அதைப்படிக்கும்போதுதான் ச்சே! இரும்புக்கை மாயாவி படிக்காம விட்டுட்டோமே! லக்கிலூக் பற்றி தெரியாமல் போயிடுச்சே... அடேங்கப்பா மதியில்லா மந்திரி என்ன காமெடியா இருக்கு.. கௌபாய் கதைகள் பின்னுதே! ஸ்பைடரின் சாகஸங்கள் தூள்கிளப்புதே... இதையெல்லாம் சின்ன வயசுல படிக்க குடுத்துவைக்கலயே என்கிற ஏக்கம் எழும்.

தமிழில் அநேக காமிக்ஸ் புத்தகங்கள் வந்திருந்தாலும் எனக்கு ஆங்கில காமிக்ஸ்கள்தான் பள்ளிக்காலங்களில் பரிச்சயமாயிருந்தது. காரணம் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது வேலை பார்த்த புத்தக கடையில் ஆங்கில காமிக் புத்தகங்கள் மட்டும்தானிருந்தன. காசு கொடுத்து காமிக்ஸ் மட்டுமல்ல எதையுமே வாங்கிப்படிக்கிற பரம்பரையல்ல எங்களுடையது. வேலை செய்த கடையில் காணக்கிடைத்த டின்டின்னும் மார்வலும் டார்க் ஹார்ஸும் டிசி காமிக்ஸும்தான் ஒரே கதி!

தமிழ்மீடியம் என்பதால் என்னுடைய அபாரமான ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு அதையெல்லாம் என்னதான் முக்கிமுக்கிப்படித்தாலும் கொஞ்சமே கொஞ்சம்தான் புரிந்துகொள்ள இயலும். ஸ்பைடர் மேன்,பேட்மேன்,சூப்பர்மேன்,பேன்டம்,மாண்ட்ரேக் மாதிரியான காமிக்ஸ்கள் படித்தாலும் டின்டின் மீது எப்போதுமே அளவில்லாத அன்பிருந்தது. காரணம் ஆங்கிலமே தெரியவில்லையென்றாலும் படங்களைக்கொண்டே நம்மால் ஒரு கதையை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தக்கதை எப்போதுமே ஆக்சன் காட்சிகள் நிறைந்த சோகம் நிறைந்த காமெடி படங்களாகவே இருக்கும்.

வெறும் படங்களைப்பார்த்தே சிரித்து மகிழலாம். அதிலும் அந்தப்படங்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்! மிகமிக நேர்த்தியாக ஆக்சன் காட்சிகளை சித்தரித்து வரையப்பட்ட படங்கள் அவை.

டின்டின் என் கனவு நாயகன். ஒரு குட்டிநாயை வைத்துக்கொண்டு எப்பேர்ப்பட்ட உட்டாலக்கடி பலசாலி வில்லன்களையும் மதிநுட்பத்தால் பந்தாடுவார்! அவரோடு கப்பல்கேப்டன் குடிகார ஹடாக்கும் சேர்ந்துகொண்டால் காமெடி,அதிரடி,சரவெடிதான்! நடுவில் போலீஸ் டிடெக்டிவ்களாக வருகிற தாம்சன் அன்ட் தாம்சனின் ஜாலியான குறும்புகளும் நினைவிலிருந்து என்றுமே அகலாதவை. சுஜாதாவின் ஜீனோகூட ஸ்நோயி என்னும் டின்டின்ன்னின் குட்டிநாயின் பாதிப்பில் உருவானதாக இருக்கலாம்! படுசுட்டி! அதிலும் போகிறபோக்கில் வரலாற்றினையும் அரசியலையும் வெகுவாக கிண்டலடித்திருப்பார் டின்டின் கதாபாத்திரத்தினை உருவாக்கிய ஹெர்ஜ்.

டின்டின் காமிக்ஸ் கார்ட்டூன் நெட்வொர்க்கில் பத்தாண்டுகளுக்கு முன்பு டிவிசீரியலாக வெளியானபோதும் அண்மையில் அதன் திருட்டுடிவிடி மொத்த தொகுப்பு பர்மா பஜாரில் வெறும் பதினைந்து ரூபாய்க்குக் கிடைத்தபோதும் விடாமல் பார்த்திருப்பேன். டிவிசீரியல் தரம் ரொம்ப சுமார்தான்.. காமிக்ஸில் கிடைத்த விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் ரொம்ப குறைவு! இருந்தும் சிடி தேய பல நூறுமுறை பார்த்திருப்பேன். டின்டின் கதைகளை அடிபட்டையாக கொண்டு சில படங்கள் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் வெளியாகியிருந்தாலும் திருட்டுடிவிடி இன்னும் ரிலீசாகவில்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும அது திரைப்படமாக வருகிறதென்பதும் அதை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்குகிறார்.. அதுவும் பர்ஃபார்மென்ஸ் காப்ச்சர் 3டி தொழில்நுட்பம் என்பதும் எப்படிப்பட்ட ஆவலை என்னுள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. பைலட் தியேட்டரில் பல மாதங்களாக இப்படத்தின் தமிழ் டப்பிங் டிரைலர் வரும்போதெல்லாம் நவம்பருக்காக காத்திருந்தேன்.

அன்பார்சுனேட்லி ஏனோ படம் தமிழில் வெளியாகவில்லை. சென்னையிலும் மிகச்சில உயர்ரக பீட்டர்குடிகளுக்கான மெகாமால் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியிருந்தது. அங்கெல்லாம் டிக்கட் விலை நூறுரூபாய்க்கும் மேல் (பைலட் தியேட்டரில் முப்பதேரூபாய்தான்). நமக்கு கட்டுப்படியாகாதே! படம் வெளியாகி ஒருவாரமாக ஏக்கத்தோடு ச்சே இந்த வறுமைதான் எத்தனை கொடியது என சோகத்தில் இருந்த எனக்கு தோழர்தான் ஆபத்பாண்டவனாக ஏமாந்த ரட்சகனாக பெரிய அமவ்ன்ட்டை ஸ்பான்சர் செய்தார். சத்யம் தியேட்டரில் டிக்கட் விலை நூற்றி இருபது,பார்க்கிங் பத்து, 3டி கண்ணாடிக்கு 20 என இரண்டுபேருக்கும் சேர்த்து மொத்தமாக 300 ரூபாய் மொய் வைக்க வேண்டியிருந்தது! இதில் சத்யம் தியேட்டரில் குடிக்க தண்ணீர் கூட இருபது ரூபாய் கொடுத்துதான் வாங்கித்தொலைய வேண்டிய துர்பாக்ய நிலை. இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒரு வேலாயுதம் வரமாட்டானா?

எதிர்பாப்பை மட்டுமே பார்சல் பண்ணிக்கொண்டு போன என்னை எள்ளளவும் ஏமாற்றவில்லை ஸ்பீல்பெர்க். நான் காமிக்ஸில் படம் பார்த்து உருவகித்து கொண்ட அச்சு அசல் அதே பாத்திரங்கள் உயிருடன்.. 3டியில்! பார்க்கவே சிலிர்ப்பாக உணர்ந்தேன். ஏற்கனவே படித்த டிவியில் பார்த்த அதே சீக்ரட் ஆஃப்தி யுனிகார்ன் கதைதான் என்றாலும் கொஞ்சமும் பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாத அருமையான திரைக்கதை, பிரமிப்பூட்டும் கிராபிக்ஸ்! காமிக்ஸுக்கு கொஞ்சமும் குறையாத அதே நகைச்சுவை. அதிலும் கேப்டன் ஹடாக் வருகிற காட்சிகள் அத்தனையும் பட்டையை கிளப்புகிறது. வெறும் குழந்தைகளுக்கான படமாக மட்டுமேயில்லாமல் அனைவருக்குமான படத்தை கொடுத்திருக்கிறார் ஸ்பீல்பெர்க். இதற்கு மேல் படத்தைப்பற்றி என்ன சொல்ல தியேட்டரில் பார்க்கும் வசதியிருக்கிற சீமான்களும் சீமாட்டிகளும் உடனடியாக தியேட்டரிலும் என்னைப்போன்ற பரம ஏழைகள் பத்து நாட்கள் பொறுத்திருந்து திருட்டுடிவிடியிலும் கட்டாயம் பார்க்கலாம்!

10 November 2011

கழிவறை காதை!





படுக்கையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது வாசலில் பெண் குரல்..’’மேடம்! மேடம்’’

ச்சே இந்த சேல்ஸ் பொம்பளைங்களுக்கு நேரங்காலமே கிடையாதா விடிஞ்சும் விடியாம வந்துட்டாங்களே.. என்று மனதிற்குள் நினைத்தபடி..

‘’அம்மா, வாசல்ல யாருன்னு பாரு!’’ என்று சத்தம் போட்டுவிட்டு மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டேன். சில நிமிடங்களில் அம்மா திரும்பிவந்து மீண்டும் சமையலறைக்குள் படையெடுக்க...

‘’யாரும்மா.. என்னவாம்’’

‘’ஒன்னுமில்லே! யாருனே தெரியல.. பக்கத்துல சர்ச்சுக்கு வந்தாளாம்.. கொஞ்சம் உங்க டாய்லெட்ட யூஸ்பண்ணிக்கட்டுமானு கேக்கறா!’’

‘’நீ என்ன சொன்னே’’

‘’யாரோ எவளோ? அதெல்லாம் முடியாது அதோ அந்தப்பக்கம் மூணாவது வீடு இருக்கு பாரு அதுதான் கிரிஷ்டீன் வீடு அங்கே போய் கேளுனு விரட்டி விட்டுட்டேன்’’ என்று பெருமிதமான தொனியில் சொன்னதும் எனக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துவிட்டது.

‘’என்னம்மா மனசாட்சியே இல்லாம இருக்க , மனுஷங்கதானே நாம.. பாவம் சுகர் பேஷன்டோ என்னவோ.. அடுத்தவங்க வீடு தேடி வந்து கேக்கறாங்களே.. உனக்கு கூட சுகர் இருக்குல்ல.. டாய்லெட்தானே ஒருவாட்டி யூஸ்பண்ணிகிட்டா என்னவாம், சொத்தா அழிஞ்சிடும்’’ என கடிந்துகொண்டேன்.

‘’அட நீவேற வீட்டை நோட்டம் விட்டுட்டு போயி நாளைக்கே நாம இல்லாதப்ப வந்து கொள்ளையடிச்சிட்டி போனாலோ , தனியா இருக்கும்போது கண்ணுல மொளகாப்பொடி தூவிட்டு செயின களவாண்டு போயிட்டா என்னடா பண்ணுவா.. போடா வேலை மயிற பாத்துட்டு வந்துட்டான் மனிதாபிமானத்துக்கு அத்தாரிட்டி’’ என்று எதிர் சவுண்டு விட.. அடங்கிப்போனேன். அம்மாவின் குரலுக்கு அடங்காதவனும் செந்தமிழனா?

இந்த பொதுக்கழிப்பிட பிரச்சனைகளை நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கநேருகிற ஒன்றுதான். நான் மார்க்கெட்டிங் பணியில் இருந்தபோது ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு போனால் ஒன்பதரைக்கு வெளியேறிவிட வேண்டும் என்பது மேனேஜரின் உத்தரவு. வெளியேதான் வேலை. கஸ்டமரை பார்க்க போனால் அங்கேயே கழிப்பிடமிருக்கும். ஆனால் பயணத்தின் போது.. சாலையோரம்தான் ஒரே கதி! வேறு வழியேயில்லை.

மலங்கழிக்க வேண்டுமென்றால் கட்டணமுறை கழிப்பிடங்களை எங்காவது முக்கிய பேருந்து நிலையத்தை தேடிக்கண்டுபிடித்து கழிப்பறையை கண்டறிந்து காசு கொடுத்து க்யூ தாண்டி போய் சேர்வதற்குள் நரகவேதனைதான். சிலநேரங்களில் வேறுமாதிரி ஆயிவிடும்.

ஆண்கள் பரவாயில்லை. பெண்களின் நிலைதான் பரிதாபம். சோப்பு,ஃபீனாயில்,டிக்சனரி விற்கும் சேல்ஸ் பெண்களை அறிவேன். அவர்களுக்கு சாதாரண நாட்களிலேயே இது ஒரு பெரிய தொல்லையாக இருந்தாலும் , மாதவிடாய் காலங்களில் சொல்லவும் வேண்டாம். அதற்காக எந்த ஏரியாவிற்கு சென்றாலும் அங்கே இருக்கிற ஹோட்டலிலோ,கடைகளிலோ இருக்கிற ஆண்களிடம் சிரித்துப்பேசி அங்கேயிருக்கிற கழிவறையை உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன். சிலர் வீடுகள் தோறும் மேடம் கொஞ்சம் யூஸ்பண்ணிக்கட்டுமா என கெஞ்சிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

நமக்கெல்லாம் வீடு இருக்கிறது, இருக்கிற வீட்டுக்குள்ளேயே பளபளப்பான கழிவறை இருக்கிறது. ஆனால் நம்நிலையே இப்படியென்றால் சென்னையில் வசிக்கிற பதினோறாயிரத்தி சொச்சம் சாலையோரம் வசிக்கிற குடும்பங்களின் நிலையை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை. பொதுக்கழிப்பிடங்களில்தான் அக்குழந்தைகளுக்கு எல்லாவித பாலியல் அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன.

சாலையில் எங்கும் செல்லும் போதும் சாலையோரம் யாராவது சிறுநீர் கழித்தாலோ, மலங்கழித்திருந்தாலோ , மலத்தைக்கண்டாலோ உடனே மூக்கை பொத்திக்கொண்டு ச்சே இவங்களாலதான் சுகாதாரம் கெடுது என வக்கனையாக பேச மட்டும் தெரிந்துவைத்திருக்கிறோம். அதற்கான காரணங்களை பற்றி ஒருநாளும் சிந்திப்பதில்லை. இடிபடும் கோயில்களுக்கு வரிந்துகட்டிக்கொண்டு குரல் கொடுக்கும் நாம் கழிவறைகளுக்காகவும் கொஞ்சமாவது குரல் கொடுக்கலாம்.

வீதிக்கு வீதி எது இருக்கிறதோ இல்லையோ பிள்ளையார் கோயில் ஒன்றை கட்டிவைத்திருக்கிறோம். போட்றா தோப்புகரணத்தை என பார்க்குமிடமெல்லாம் நிறுத்தி குனிந்து குனிந்து போடுகிறோம்! ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பூசாரி வேறு. அதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இருக்கிற இந்த குட்டிக்குட்டி கோயில்களையும் சிறிய பிறமத வழிபாட்டுத்தலங்களையும் கழிவறைகளாக மாற்றி பூசாரிகளை காவலுக்கு நிறுத்திவைத்தாலே கூட வீதிக்கு ஒரு டாய்லெட்டோடு சுத்தபத்தமாக ஆச்சாரமாக வாழ இயலும் என்பது மட்டும் நிச்சயம்.

மதவெறியர்களுக்கு இதைபடிக்கும்போது குபீர் என கோபம் வரலாம்.. வந்துவிட்டுப்போகட்டும். என்றாவது ஒருநாள் அர்ஜன்டாக டூ பாத்ரூம் வரும்போது கழிவறையில்லாமல் அடக்கிக்கொண்டு அலைந்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் புரியும். வழிபாட்டுத்தலங்களைவிடவும் ஏன் கழிப்பறைகள் அவசியம் என்பதை அப்போதுதான் உணரமுடியும். சிறுநீர் முட்டிக்கொண்டு இருக்கையிலும் மலத்தினை அடக்கிக்கொண்டு அலைகையிலும் சொர்க்கமென்றால் அமைதி என்றால் என்னவென்பதை உணரவைக்கும் ஆற்றல் கழிவறைகளுக்கு மட்டுமேயுண்டு, எந்த தெய்வத்தாலும், எந்த வழிபாட்டுத்தலத்தினாலும் அந்த மகிழ்ச்சியை கொடுத்துவிடயலாது. திருப்பதி வெங்கடாஜலபதியின் சொத்தில் பாதி இருந்தால் கூட அரசே நமக்கு லட்சக்கணக்கில் இலவச கழிப்பறைகளை கட்டித்தரமுடியும! என்ன செய்ய காட் இஸ் க்ரேட்!

அரசுதான் கழிப்பறைகளை கட்டித்தர முன்வரவேண்டும்.. அரசே செய்யாட்டி நாங்க என்னபண்றதாம் என கேள்விகளை அடுக்க வேண்டாம். கோயில்களை நாமே கட்டிக்கொள்ளவில்லையா? ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் கிடைக்கிற புண்ணியத்தைவிடவும் அவசரமாக உச்சா வருது சார் பாத்ரூம் யூஸ்பண்ணிக்கவா என கேட்கிறவனுக்கு டாய்லெட்டை அளித்தும் புண்ணியம் பெறலாம். அல்லது உங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடமில்லையா மக்களை ஒன்றுதிரட்டி ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டுங்களேன்! கோயில் கட்றதுக்கு மட்டும்தான் டொனேஷன் கலேக்ட் பண்ணுவீங்களா? கக்கூஸ் கட்டவும் அதையே செய்வதில் தவறென்ன வந்துவிடப்போகிறது.

சமூகத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்ய நினைத்தால் உங்கள் பகுதியில் மரம் நடறேன் செடி நடறேன் குப்பை எடுக்கிறேன் என எல்லோரும் செய்யும் அதையே செய்யாமல் கழிவறைக்கு ஏற்பாடு செய்யலாம்!

சரி அதைவிடுங்க! நமக்கேன் பொல்லாப்பு.

வீட்டில் கதவு தட்டிய அந்த பெண்மணியை குறித்த ஏதோ ஒரு குற்றவுணர்வு உருத்திக்கொண்டேயிருந்தது. அந்தப்பெண் வயதானவராக இருக்கலாம். உடல் ஊனமுற்றவராக இருக்கலாம். சிறுநீரக கோளாறு உள்ளவராகவோ, மாதவிடாய் காலத்து பிரச்சனையிலோ இருந்திருக்கலாம். அவசரமாக ஓடிப்போய் வாசலுக்கு வெளியே எட்டிப்பார்த்தேன்.. அந்தவயதான பெண்மணி மூன்றாவது வீட்டிலிருந்து பொறுமையாக மலர்ந்த முகத்தோடு வெளியே சென்றார். அது அவராகத்தான் இருக்க வேண்டும். அந்த வீட்டினர் உதவியிருக்க கூடும். மனது ஆறுதலடைந்தது. அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. அம்மாவின் பயம் நியாயமானதுதான். உடனடியாக கவுன்சிலரோடு பேசி பொதுக்கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

02 November 2011

பத்து-பத்து




மூக்கு ஈரமாய் இருக்கிறது. காதிற்குள் ‘ங்..ங்ங்ங்ங்ங்’ என விடாமல் ஓர் ஒலி. காதோரம் யாரோ நடந்து வருகிற சப்தம். குப்புற விழுந்து கிடந்தவன் தூரத்தில் வருகிற கறுத்த பெருத்த காலடிகளை மெதுவாக கண்களை திறந்து பார்த்தான். மங்கலாக அது தன்னை கடந்து செல்வது போல் தெரிந்தது. மூச்சு விடமுடியவில்லை. முதுகில் உதைத்ததால் விண்விண் விண்விண் என இதயம் துடிப்பதைப் போல விட்டுவிட்டு வலித்துக்கொண்டுருந்தது. விலகிச்செல்லும் கால்களை நிமிர்ந்து பார்க்கலாமா? அல்லது கண்களை இறுக்க மூடிக்கொள்ளலாமா?. வேண்டாம்! கண்திறந்தால் மீண்டும் அடிபட வேண்டியிருக்கும் , முட்டியில் வலித்தது. அதே அலைவரிசைதான். விண்விண் விண்விண்.. கண்களை இறுக்க மூடிக்கொண்டான். இடது கண்ணில் கண்ணீர் கசிந்துகொண்டே இருந்தது. முன்னர் கசிந்தவை காய்ந்து ஈரமாகி வடவடவெனவிருந்தது. தூரத்தில் இவனை அழைக்கும் சத்தம். டேய் லூசு...!


லேசாக கண்ணைத்திறந்து கையை தரையில் ஊன்றி எழுந்து நின்றான். மூக்கை புறங்கையால் துடைத்தான். சளி போல இல்லை. கெட்டியாக காய்ந்திருந்தது. கன்னத்திலும் வழிந்திருந்தது. ரத்தம்!. கீழே விழுந்துகிடந்த போது முகத்தில் எட்டி உதைத்ததில் சிறுமூக்கு உடைந்திருந்தது. வலி இல்லை. ரத்தம் வெளியேறிக்கொண்டேயிருந்தது. விடாமல். சொட்டு சொட்டாக...


‘’டேய்...லூசு.. என்னடா பண்ற எவ்ளோ நேரமா கூப்படறேன்’’ படுக்கையறையிலிருந்து ராஜன் சாரின் தடித்த குரல்.

ஒன்பதரை வயது பாஸ்கர் கடைசியாக இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து திரும்பிய ஒரு நல்ல நாளில் அவனது அப்பா இங்கே அழைத்துவந்து விட்டுச்சென்றார். ஆந்திராவிற்கு பக்கத்தில் ஒரு ஏதோ தமிழ் கிராமம் அவனுடையது. சென்னை.. பீச்சு, ரஜினி,விஜய்,மூன்று வேளை சோறு, இங்கிலீஸ்படிப்பு,கூலிங்கிளாஸு என ஏதோ ஏதோ எதிர்பார்த்துதான் வந்துசேர்ந்தான். எடுபிடி வேலைக்கு என்றுதான் சேர்த்துவிட்டிருந்தார். ஆனால் கழிவறையை சுத்தம் செய்வதில் துவங்கி சகலமும் இவன் மட்டுமே செய்ய வேண்டியதாயிருந்தது.

ராஜன் சாருக்கு லேசான கிறுக்கு இருக்கலாம் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வான். அடிதாங்க முடியாமல் தூங்கும் போது தலையில் கல்லைப்போட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று யோசிப்பான். பெரிய கல்லை தூக்க முடியாது. சின்னக்கல்லைப் போட்டால் ராஜன் சார் சாக மாட்டான். ஓருவேளை கல்லை போட்டும் சாகாமல் உயிர் பிழைத்து அவன் கையில் சிக்கினால் சாவுதான் என்பதை அறிந்தேயிருந்தான்.

முந்தைய நாள் ராஜன் சாரின் அலுவலகத்தில் சிறிய பார்ட்டி. போதையில் டேபிள் டிராயரில் வைத்துவிட்டுச் சென்ற சிகரட்டுகளில் மூன்றை காணவில்லை. இவன்தான் அதை புகைத்திருக்க அல்லது எடுத்திருக்க வேண்டும் என பாஸ்கரை அழைத்து திட்டினான். இவன் நான் எடுக்கலைங் சார், நான் பார்க்கவே இல்லைங்சார், தெரிலைங்சார், தேடிபாக்கறேன்ங்சார் என நிறைய சொல்லியும் இனிமே எடுப்பியா எடுப்பியா இந்த வயசுலயே தம்மு கேக்குதோ உதவாக்கரை ஒன்னும் லாய்க்கில்ல என உதைத்தான். பாஸ்கர் மயங்கி விழுந்து மூச்சு பேச்சில்லாமல் ஆகும் வரை அது தொடர்ந்தது.
இப்போது மீண்டும் அழைக்கிறான். போனால் அடிபட நேரிடலாம். போகவில்லையென்றாலும் உதைவிழும். ஹாலில் கிடந்தவன் அவசர அவசரமாக ரத்தம் வழியும் மூக்கை புறங்கையால் தேய்த்தபடி படுக்கையறைக்குள் நுழைந்தான். அடிவயிற்றில் கர்ர்ர் என்றது. இதயம் அளவுக்கதிகமாக அடித்துக்கொண்டது. ஓங்கி ஓங்கி வயிற்றில் நெஞ்சில் எங்கெங்கோ உதைத்தது வேறு விண் விண் என வலித்தது.


படுக்கைக்கு அருகில் ராஜன் சார் சேரில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தான். கொஞ்சம் தள்ளி நின்று தலையை தரையை நோக்கி குனிந்தபடி ஒருகையை அக்குளுக்குள் கட்டி நின்றான்.

‘’மூஞ்சில என்ன ரத்தம்!’’.

‘’சாங்! நீங்க மூங்சீல மிதிச்சீங்கங்கல , சின்னமூக்கு உங்ஞ்சிபோச்சிபோலசார் அதாங்’’ மூக்கிலேயே புரியாதபடிக்குப் பேசினான். இன்னும் துளிதுளியாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

அருகில் இருந்த ஏதோ ஒரு துணியை எடுத்து அவனை நோக்கி வீசினான். அழுக்குத்துணி. ஈரமாய் இருந்தது. கொஞ்சமாய் நாற்றமடித்தது. ‘’இத்தால மூஞ்ச துடச்சுட்டு , பாத்ரூம் போய் கழுவிட்டு வா...என்ன? வேல இருக்கு..’’ அதட்டினான். பாஸ்கருக்கு எரிச்சலாக இருந்தது , வயிறும் மூக்கும் மனமும் எல்லாமே.

கழிவறைக்கு சென்று சோப்புப்போட்டு முகத்தை கழுவினான். ஆனாலும் காய்ந்திருந்த ரத்தம் போகவில்லை. நன்றாக கரகரவென அழுத்தி தேய்த்து, சுரண்டி அதை அழித்துவிட முயற்சித்தான் ஒரளவு போயிருந்தது. அதற்குள் உள்ளேயிருந்து இன்னுமாடா என்னும் குரல் கேட்டது. நீண்ட அமைதியிலிருந்த நிசப்தமான சூழலை கிழித்துக்கொண்டு வந்த திடீர் குரலால் உதறல் எடுத்தது. உடல் சிலிர்த்து கை முழுக்க பொறிப்பொறியாய் இருந்தது. அதை தடவிப்பார்த்தான். குறுகுறுப்பாய் இருந்தது. சிரித்துக்கொண்டான்.

படுக்கையறைக்குள் நுழைந்தான். புகை மண்டலமாக இருந்தது. கையில் சிகரட்டோடு ராஜன் பெட்டுக்கு அருகில் அமர்ந்திருந்தான். ராஜனுடைய காதலியை காணவில்லை. பாத்ரூமில் இருந்திருக்க வேண்டும். படுக்கைக்கு அருகில் இருந்த டேபிளில் பாதி அருந்திய ஜூஸ் இருந்தது. இட்லியும் இருந்தது. இரவு சாப்பிடததால் வலியில் பசி தெரியாமல் இருந்திருந்தான். இப்போது அதை பார்த்ததும் வயிறு பசிப்பது போல் இருந்தது. ர்ர்ர்ர் என வயிற்றுக்குள் இழுத்துப்பிடித்தது குசுபோல ஒருசப்தம் வந்து அடங்கியது.

‘’டேய் என்னடா அங்க நின்னுட்டு பராக்கு பாத்துக்கிட்டு! அந்த சட்டைய எடு’’.

ஹேங்கரில் இருந்த சட்டையை எடுத்து வந்து அவனுக்கு முன்னே நீட்டினான். அதிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி , ‘’நம்ம குமார் கடைக்கு போய் ஒரு பாக்கட் கோஹினூர்னு கேளு தருவான் வாங்கிட்டு வா , மிச்சக்காசு இருபது ரூவா தருவான் சரியா பாத்து வாங்கிட்டு வா!’’.. ம் என்பதுபோல தலையை ஆட்டினான். பணத்தை வாங்கி தன் டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

‘’டேய் நில்லு என்ன வாங்கிட்டு வருவ’’

‘’கோங்கினார் ஒரு பாங்க்கட்’’ , மூக்கிலேயே இவன் சொல்ல ஹோஹோஹோ என ராஜன்சார் சிரித்தான். இவனுக்கு முகத்திலேயே குத்த வேண்டும் போல் இருந்தது. ‘’கரெக்டா வாங்கிட்டுவா!’’

போகும் வழியெல்லாம் கோகினார்.. கோகினார்.. கோகினார்.. கோசிமார்.. கோஜியார்.. என சொல்லிக்கொண்டே சென்றான். இன்னொரு பாக்கெட்டிலிருந்த அழுக்குத்துணியால் மூக்கைத்துடைத்துக்கொண்டான். குமாரின் மெடிக்கல் ஷாப் வந்தது.

‘’அண்ணேங் ங்கொரு பாங்க்கட் ஙோஜியார்.. குடுங்க.. சாங் வாங்கிகினு வரசொன்னாரு’’ , முக்கு அடைப்பு விலக லேசாக வாயிலும் பேச ஆரம்பித்திருந்தான்.

‘’அதென்னடா ஙோஜியாரு.. ஏன்டா காலைல வந்து ரப்ச்சர குடுக்கற.. போடா நல்லா கேட்டுட்டு வா..’’

‘’அண்ணே திரும்பி போனா , சார் அடிப்பாருண்ணே!..’’.

‘’என்னடா மூக்காண்ட கர.. இங்க வா’’ அருகில் வந்தவன் மூக்கை அழுத்தி தேய்த்து தூக்கிப் பார்த்தான். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
பையனை உள்ளே அழைத்து சென்று அவசர அவசரமாக மருந்து போட்டு விட்டான். முட்டியில் சிராய்த்திருந்தது. டெட்டாலால் அதை சுத்தம் செய்து பஞ்சு வைத்து தேய்த்துவிட்டான்.

‘’சம்பளமே சரியவரமாட்டேனுது.. என்னால என்ன பண்ணமுடியும்.. எங்கிட்டாவது ஓடிப்போய்யிர்ரா! இவங்கிட்ட கிடந்து ஏன்டா அடிவாங்கி சாவற’’ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.

‘’அண்ணே எங்கனே போவன். எனக்கு யாரையுமே தெரியாதுண்ணே, ஓடிப்போனா எங்கப்பா கண்டுபுடிச்சி அடிச்சு கொன்னுருவாரு, மாசமாசம் வந்து காசு வாங்கிட்டு போகுதுல்ல.. கண்டுபுடிச்சிரும்ண்ணே’’ பேசபேச சிறுவனுக்கு அழவேண்டும் போல இருந்தது.கண்ணீர் வராவிட்டாலும் கண்களை துடைத்துக்கொண்டான்..

‘’சொன்னா கேளுடா.. இங்க இருந்த அடிச்சே கொன்னுருவானுங்க’’ பேசியபடியே ஒரு சாக்லேட்டை அவனிடம் நீட்டினான்.

‘’அண்ணே அதெல்லாம் இருக்கட்டும், கோஜியூர் ஒரு பாக்கட் குடுங்கண்ணே.. லேட்டா போனா சார் அடிப்பாரு, அக்காவேற வந்திருக்கு’’

‘’ஓஹ் கோஹினூரா!..’’ புரிந்துகொண்டவனாக ஒரு பாக்கட்டை எடுத்து நீட்டினான்..

சிறுவன் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு மீதி காசிற்காக காத்திருந்தான். ‘’ என்னடா கிளம்பு’’
, ’’இல்லண்ணே மீதி இருபது ரூவா தருவீங்க அத வாங்கிட்டு வரச்சொன்னாரு சாரு’’ ,
’’உங்க சார்கிட்ட சொல்லு சின்ன பாக்கட் இல்ல பெரிய பாக்கட்தான் இருக்காம்னு , பெரிசு அம்பது ரூவாயாம்னு சொல்லு’’

‘’அண்ணேத்தேடிப் பாருங்கண்ணே சின்னபாக்கட்டே குடுங்க.. இல்லாட்டி நான் மறந்து போய் வாங்கிட்டு வந்துட்டேனு அதுக்கும் அடிப்பாரு’’

‘’டேய் இல்லடா, இரு’’ என ஒரு பேப்பரில் ‘சிறிய பாக்கட் இல்லை, பையனிடம் பெரிய பாக்கட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக்கொள்ளவும்’ என்றெழுதி குமார் என கையொப்பமிட்டு கொடுத்தனுப்பினான். சிறிது தூரம் சென்றவனை.

வீட்டை அடைந்ததும் நேராக படுக்கையறை வாசலுக்கு சென்று தன் அரைடிரவுசர் பாக்கட்டில் கையை விட்டு கோஹினூர் பாக்கட்டை தேடினான். காணவில்லை. படுக்கை அறையின் உள்ளேயிருந்து சிரிப்புகளோடு வினோதமான ஒலிகளும் வந்து கொண்டிருந்தது. ஐய்யயோ பாக்கெட்ட காணோம் , சார்கிட்ட என்ன சொல்றது , தொலைஞ்சு போச்சுனு சொன்னா கரண்டிய சூடு பண்ணி கால்ல போட்டுருவாரே! என மனதிற்குள் பதறியபடி வந்த வழியில் மீண்டும் ஓடத்துவங்கினான். வேர்த்து வேர்த்து கொட்டியது. காலை வெயில் மெதுவாக உச்சிக்கு வந்து கொண்டிருந்தது. இதயத்துடிப்பு படபடபடபடபடவென எக்ஸ்பிரஸ் ரயில் போல அடித்துக்கொண்டிருந்தது. எங்கும் காணவில்லை. கடை வரைக்கும் வந்துவிட்டிருந்தான். கடையில் குமார் இல்லை , கடை முதலாளி அமர்ந்திருந்தான். என்ன செய்வதென்றே தெரியாமல் மீண்டும் கடையிலிருந்து வீடு வரைக்கும் வழியெல்லாம் தேடியபடியே வந்தான். கறுப்பு பாக்கட்டு , பொம்பளைங்க படம்.. கறுப்பு பாக்கட்... பொம்பளங... என நினைத்தபடியே வந்தான். இல்லை. காணவில்லை. எங்குமில்லை. கீழேயே பார்த்துக்கொண்டு வந்தவன் கண்ணில் அந்த பாதிகிழிந்த காகிதம் தென்பட்டது. அது மின்கம்பத்திற்கு கீழே கிடந்தது.

‘’குழந்தைகளே துன்புறுத்தப்படுகிறீர்களா? உதவி தேவையா? அழையுங்கள் பத்து பத்து!’’ என்று எழுதப்பட்ட காகிதமொன்று கிடந்தது. அதை ஒருமாதிரி எழுத்துக்கூட்டி படித்துவிட்டான். எடுத்து பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொண்டான். அந்த விளம்பரங்களை டீக்கடை ரேடியோவில் நிறைய முறை கேட்டிருக்கிறான். பல முறை அந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என நினைப்பான். ஏனோ விட்டுவிடுவான்.

ஙோஜியார் இல்லாமல் போனால் இன்றைக்கு காலில் சூடு நிச்சயம். அதற்கு பதில் அந்த எண்ணுக்கு அழைத்தால் என்ன? போன்? வீட்டில் இருக்கிறதே! ராஜன் சார் பார்த்துவிட்டால்.. அடிதான் எப்போதும் வாங்குகிறோமே.. என ஏதேதோ நினைத்த படி வீட்டிற்கு அருகில் வந்துவிட்டான். படுக்கையறையில் இருந்து இன்னமும் அந்த ஒலிகள் வந்துகொண்டிருந்தன. இவனுக்கு அந்த சப்தம் பழக்கமானதுதான்.. இது போல சத்தம் ஓய்ந்து ஐந்து நிமிடத்தில் ராஜன்சார் வெளியே வருவான் அப்போது அவனுக்கு சிகரட்டும் தீப்பெட்டியும் தரவேண்டும். யோசித்தான்.

அதற்குள் அந்த நம்பருக்கு போன் போட்டு சொல்லிவிட்டால் என்ன?. போலீஸ் வரும் ராஜன் சாரை கைது செய்யும்.. என்னை காப்பாற்றும். ஜாலிதான். சென்னைக்கு போலீஸ் விஜயகாந்த் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான். கற்பனையிலும் விஜயகாந்த்தான் வந்திருந்தார்.

அலுவலக அறைக்குள் நுழைந்தான். அங்குதான் போன் இருந்தது.

சிறுவன் நேராக டெலிபோன் அருகில் வந்தான். இதுவரை அவன் போனை உபயோகித்ததே இல்லை. துடைப்பதோடு சரி. ராஜன் சார் அதில் பேசுவதைப் பார்த்திருக்கிறான். அருகில் சென்றவன் என்ன பேச வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டான் ,

‘’சார் என்னை இங்கே அடிஅடினு அடிக்கிறாங்க, உடனே வாங்க சார், இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க.. ‘’ அழ முயற்சித்து பேசிப்பார்த்தான். சரியாக வரவில்லை. மீண்டும் ஆரம்பித்தான்..

‘’சார் என் பேரு கோபி.. ஊரு அம்சாபேட்டை, இங்க அப்பா என்னை வேலைக்கு சேர்த்து விட்டாங்க , இங்க என்னை அடிக்கறாங்க.. தயவு பண்ணி வந்து காப்பாத்துங்க, ம்ம்ம்ம்..’’ அழுது பார்த்துக்கொண்டான். சரியாக வருகிறது. புலி பதுங்குவது போல பதுங்கி போனுக்கு அருகில் போய் நின்றான். அவன் பலமுறை போனை பார்த்திருக்கிறான் அதில் பத்தாம் எண் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை.

நம்பர்களை எண்ணத்துவங்கினான் ஒன்னு,ரெண்டு...எட்டு... ஒன்பது..ஜீரோ.. ஆமா பத்து இல்லை!. பதறிப்போனான். பத்துபத்து நம்பருக்குள்ள போன்போட சொல்லி எழுதிருந்துச்சு இங்க பத்தாம் நம்பரையே காணமே!

பக்கத்து அறையில் ராஜன் சாரின் சப்தம் மெதுவாக குறைவதைப்போல் இருந்தது. இவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. நேற்று வாங்கின உதையே இன்னும் வலி தீரவில்லை. இரவில் புரண்டு படுத்து உறங்க முடியாது. சப்தம் வேறு குறைகிறது. பத்துபத்து.. என்ன செய்வது.

‘’பத்து . ஒன்னு ஜீரோ ஒன்னா போட்டா பத்து! ‘’ . ச்சே இதை எப்படி யோசிக்காம விட்டோம். என தன்ன்னை தானே கொட்டிக்கொண்டான். டக்கென ரிசீவரை எடுத்தான். 1...0...1...0 பட்டனைகளை வேகவேகமாக அழுத்தினான்.

ஒரு பெண்ணின் இனிமையான குரல்.. எதற்காகவும் காத்திருக்காமல்

‘’சார்..இல்ல இல்ல அம்மா.. இல்ல இல்ல அக்கா.. அக்கா.. என் பேரு கோபி..’’

‘’வணக்கம் குழந்தைகள் நலத்திற்கான பறவைகள் அமைப்பு உங்களை வரவேற்கிறது.. ஃப்ரீடம் பேர்ட்ஸ் வெல்கம்ஸ் யூ..’’

‘’அக்கா! அதெல்லாம் தெரியாதுக்கா! எங்க ஊரு.. இல்ல.. என்ன ரொம்ப அடிக்கிறாங்க, கொஞ்சம் வந்து காப்பாத்துங்க்கா, இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க, இந்த ராஜன் சார் ரொம்ப மோசம்..யாரையாச்சும் உடனே அனுப்புங்கக்கா’’

‘’தமிழில் தொடர எண் ஒன்றை அழுத்தவும், ஃபார் இங்கிலீஷ் ப்ரஷ் டூ.. ஹிந்தி மே..’’

‘’அக்கா ப்ளீஸ்க்கா.. எனக்கு அதுலாம் தெரியாதுக்கா.. இங்க இங்க.. எனக்கு கால்ல சூடு போடப்போறாங்கக்கா காப்பாத்துங்க , நேத்துகூட ராஜன் சார் என்னை போட்டு மிதிமிதினு மிதிச்சிட்டாரு.. நைட்லருந்து ஒன்னுமே சாப்பட்லை.. எனக்கு கால்லாம் வலிக்குதுக்கா.. எங்க அப்பாட்ட சொன்னா அவரும் அடிக்கறாருக்கா..’’ என போனை கெட்டியாக காதோடு அணைத்துக்கொண்டு தேம்பிதேம்பி அழுதபடியே பேசினான்.

‘’ தமிழில் தொடர எண் ஒன்றை... ..’’ விடாமல் சொன்னதையே திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது எந்திரக்குரல்.. ‘’அக்கா அக்கா.. உடனே வாங்கக்கா.. ப்ளீஸ்க்கா’’ என போனை அணைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவன் அருகில் கால்தட சப்தம் கேட்டு தானாகவே அவன் கையிலிருந்து ஃபோன் கைநழுவி விழுந்தது.

‘’அக்கா’’

ராஜன்சாரின் காதலி அவனுக்கு பின்னால் கையைக்கட்டி நின்றபடி.. அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

அவனிடமிருந்து ரிசீவரை பிடிங்கி தன் காதில் வைத்து கேட்டாள் எதிர்முனையில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அவளையே கண்களில் நீரை தேக்கிவைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் பாஸ்கர். இருவரும் மௌனமாய் நின்று கொண்டிருக்க ராஜன் தன் லுங்கியை இறுக்கிக் கட்டியபடியே உள்ளே நுழைந்தான்.

வாசலில் காலிங் பெல் சப்தம் கேட்டது. டிங் டாங்... கோபி தன்னை காப்பற்ற யாரோ வந்துவிட்டனர் என்று ராஜன் சாரைப்பார்த்துப் புன்னகைத்தான்.

_____

*- கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனமும் எண்ணும் நிகழ்வுகளும் கற்பனையே!

(சென்ற ஆண்டு பிப்ரவரியில் எழுதியது)