குவியும் குப்பைகள், காத்திருக்கும் எமன்!

>> 11 January 2012




தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் குவிகிற குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன்! இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்திற்கு... ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம்!! குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்..! அதை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் நாம் கொட்டுகிற குப்பைகளை நிரப்ப 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலம் தேவை என கணக்கிட்டுள்ளது! எளிதாக விளக்கினால் கோவை மாவட்டத்தில் பாதியை கொடுக்க வேண்டியிருக்கும். தமிழகத்தின் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 8000 டன் எலக்ட்ரானிக் குப்பைகள் மட்டுமே குவியப்போகின்றன!

குப்பைகள் ஒன்றுக்கும் உதவாத யாருக்கும் பிரச்சனையில்லாத குப்பைகளாக மட்டுமேயிருந்து குப்பைகளாகவே வாழ்ந்து அப்படியே மக்கி மண்ணோடு மண்ணாகிப்போனால் யாருக்கு பிரச்சனை! ஆனால் அவை நம் உயிருக்கே உலை வைக்கவல்ல எமனாக மாறிவருவது அடுத்த தலைமுறையின் எதிர்காலம் குறித்த பயத்தினை உண்டாக்குகிறது. நம் சந்ததிகளுக்கு இந்த பூமியில் எதை மிச்சம் வைத்துவிட்டுப்போக போகிறோம் குப்பைகளையா சுத்தமான சுற்றுசூழலையா என்பதை இப்போதே முடிவு செய்யவில்லையெனில் நாளை அதற்கான வாய்ப்பேயில்லாமல் போகலாம்!

அதிலும் குறிப்பாக சென்னை,கோவை,மதுரை,திருச்சி மாதிரியான நகரங்கள் குப்பைக்கொட்டுவதில் போட்டிபோடுகின்றன. சென்னையில் 1991ஆம் ஆண்டு கணக்குப்படி குவிந்த குப்பைகளின் அளவு வெறும் 600டன்! ஆனால் இன்றோ ஒவ்வொருநாளும் 4000டன் குப்பைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்க்கப்படுகிறது. அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் கிராமங்களும் குப்பைகளுக்கு பலியாகும் நிலை உண்டாகியிருக்கிறது. நிலங்கள் பாழாகின்றன.. நீர்நிலைகள் அழிகின்றன.. மக்களின் உடல்நலம் உயிருக்கும் ஆபத்து..

குப்பைகள் திடீரென அதிகரிக்க காரணம் என்ன? அதன் விளைவுகள் என்ன? எப்படி சரிசெய்வது?

குப்பைகள் ஓர் எளிய அறிமுகம்!

குப்பைகளில் உணவுக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள்,எல்க்டாரனிக் குப்பைகள்,அணுக்கழிவுகள்,கட்டிடக்கழிவுகள்,தொழிற்சாலைக்கழிவுகள் என பல வகையுண்டு. இவற்றை மொத்தமாக மக்கும் குப்பை,மக்காத குப்பை என இரண்டாக பிரிக்கலாம்! இதுதவிர சில ஸ்பெஷல் குப்பைகளும் உண்டு.

தமிழக அளவில் குவியும் குப்பைகளில் மக்கும் குப்பைகளின் அளவு 60%. மக்காத குப்பைகளின் அளவு 35% மற்றவை 5%தான்.

இதில் மக்கும் குப்பைகள் என்பது உணவுக்கழிவுகள் தொடங்கி பேப்பர்,மக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்,மாமிசம் என நமக்கு மிகநெருக்கமான பொருட்களின் குப்பை வடிவங்கள்தான்! மக்காத குப்பைகள் என்பது பிளாஸ்டிக்,ரப்பர்,கண்ணாடி,உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்கள்.

நம்மை அழிக்கவல்ல நரகாசுரன்!

‘’அதுதான் மக்கிடுமே சார்! அதனால நமக்கு என்ன பாதிப்பு வந்துடப்போகுது’’ என நினைக்கலாம்! இந்த மக்கும் குப்பைகளை கொட்டி கொட்டி குவித்து வைப்பதால் நாள்பட அது மீத்தேன் வாயுவை உண்டாக்கும். இது எரியக்கூடியது. குப்பைமேடுகளில் எப்போதும் புகை வந்துகொண்டிருப்பதை நாம் தினமும் பார்க்க முடியும். காரணம் இந்த மீத்தேன்தான்!
குப்பை மேடுகளுக்குள் எப்போதும் இந்த மீத்தேன் வாயு எரிந்துகொண்டேயிருக்கும்.

காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு இதை முழுமையாக எரியவிடாமல் தடுக்கும். இதனால்தான் இது எப்போதும் புகைந்துகொண்டேயிருக்க காரணம். இது குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக்,ரப்பர் முதலான மக்காத குப்பைகளோடு சேர்ந்து எரிவதால் பல பாதிப்புகளை உண்டாகும்.

மக்கும் குப்பைகளில் உண்டாகும் கிருமிகளால் தொற்றுநோய்களும்,சுகாதார கேடும் உண்டாகும். அதுபோக கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கும் வழிவகுக்கும். மீத்தேன் வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக்கோளாறுகள் தொடங்கி புற்றுநோய்கூட உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த குப்பைகளால் உண்டாகும் டயாக்சின் என்னும் வாயு காற்றின் மூலக்கூறுகளில் அமர்ந்துகொண்டுபல ஆயிரம் கிலோமீட்டர்கள் கூட பயணிக்கும் திறன் கொண்டவை. இவைதான் புற்றுநோய் உண்டாகவும் முக்கிய காரணமாகவும் உள்ளது! ‘’சார் அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது , ஆனா பாவம் கேன்சர் வந்து செத்துட்டாரு’’ என நிறைய பேர் பேசுவதை கேட்டிருப்போம்.

காரணம் இந்த குப்பைகளினால் உண்டாகும் டயாக்ஸின் மாதிரியான கொடிய நச்சுப்புகைதான். இன்றைக்கு கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் கூட புற்றுநோய் உண்டாக காரணம் இந்த குப்பைகள்தான் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

சென்னையின் ஒட்டுமொத்த குப்பைகளும் கொட்டப்படுகிற பகுதிகளான பள்ளிக்கரணை,கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி முதலான பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். தாய்ப்பால் கூட விஷத்தன்மை கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிறைய பேருக்குக் கருச்சிதைவும்,ஆண்மைக்குறைவும்,சுவாசக்கோளாறுகளும்,நுரையீரல் பாதிப்புக்கும் உள்ளாகியிருப்பது கண்டறிப்பட்டுள்ளது. காரணம் அங்கே மலைபோல குவியும் குப்பைகள்தான். அணுக்கதிர்வீச்சால் உண்டாகலாம் என்று நாம் அஞ்சுகிற அனைத்துவிதமான உயிர்க்கொல்லி நோய்களையும் ஏற்படுத்தும் சக்தி குப்பைகளுக்கும் உண்டு. ஒரு ட்யூப்லைட்டில் இருக்கிற ஒருகிராம் பாதரசம் போதும் ஒரு ஏக்கர் நீர்நிலையை புல் பூண்டு முளைக்காத அளவுக்கு அழிப்பதற்கு!

மனிதர்களுக்கு இம்மாதிரி பிரச்சனைகள் என்றால் மக்காத குப்பைகளால் நிலமும் நீர்வளமும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. கோவையில் ஒருகாலத்தில் 32 குளங்கள் இருந்ததாக சொல்லப்பட்டாலும் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் குளங்கள் மிச்சமிருக்கின்றன. இவற்றில் பலவும் குப்பைகள் கொட்ட மெகாசைஸ் குப்பைத்தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் கலந்த நீர்நிலைகளில் எந்த ஜீவனும் வாழ முடியாது!

அதோடு நிலத்தடி நீரையும் பாழாக்கும் சக்தி இந்த குப்பைகளுக்கு உண்டு. விஷத்தன்மையுள்ள பொருட்களை குப்பைகளில் எரிந்துவிடுகிறோம். ஆனால் அவை நிலத்தடி நீரோடு கலந்து பல நூறு கிலோமீட்டர்களுக்கு பூமிக்கு கீழே பயணிக்கின்றன. எங்கோ சென்னையில் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரை ஈரோட்டில் ஒருவர் உபயோகித்து பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளை கண்டறிந்துள்ளனர்.

குப்பைகள் ஏன் பெருகின?

நம் வாழ்க்கை முறை மாற மாற குப்பைகளின் அளவும் கணிசமாக அதிகரித்தே வந்துள்ளது. முன்னெல்லாம் நகரங்களில் கூட வீடுகளுக்கு பின்னால் எருக்குழி என்று ஒன்று இருக்கும். உணவுக்கழிவுகளையும் வீணான காய்கறி பழங்களையும் அதில் போட்டு அதன்மீது கொஞ்சம் மண்ணை தூவிவிட்டால் போதும்.. சில மாதங்களில் தோட்டத்திற்கு உபயோகிக்க நல்ல உரம் தயார்! ஆனால் இன்று வீடுகளே குழியளவு சுருங்கிப்போயிருக்கிறது. இதில் எருக்குழிக்கு எங்கே போவது.

அதோடு வீட்டில் உபயோகித்த பால்கவர்,பவுடர் டப்பா,மைடப்பா,பாட்டில்கள்,உபயோகித்த டூத்பிரஷ் என வீணாகும் பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை காய்லாங்கடைக்காரனுக்கு எடைக்கு போடுகிற வழக்கம் இருந்தன. ஆனால் இன்றோ எல்லாமே யூஸ் அன் த்ரோதான்! அதோடு எல்லாமே பிளாஸ்டிக் கவர்தான். சென்ட்டு பாட்டில் உபயோகித்தால் உபயோகித்துவிட்டு குப்பைத்தொட்டிக்கு எறிகிற கலாச்சாரம் எப்படியோ நமக்குள் நுழைந்துவிட்டது. இயல்பிலேயே திடக்கழிவு மேலாண்மையை கையாண்ட நம்மால் இன்று அதை பின்பற்ற முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் ஒருவர் கொட்டுகிற குப்பையின் அளவு 200-600 கிராம்!

இன்று நம் வீட்டில் ஒரே ஒரு குப்பைத்தொட்டி அதிலேயே உணவுக்கழிவுகளும் பவுடர்டப்பாவும் சென்ட்டு பாட்டிலும் மொத்தமாக குவிகின்றன. அதில் பிளாஸ்டிக் கவர்களின் பங்கும் கணிசமானது. பேட்டரி வேலை செய்யலையா?,ட்யூப்லைட் ப்யூஸ் போயிடுச்சா? தூக்கிவீசு தெருவில்! பரட்டோ வாங்கப்போனாலும் குருமாவைக்கூட பிளாஸ்டிக் கவரில்தான் வாங்கவேண்டியிருக்கிறது. பிளாஸ்டிக் கப்பில் டீ குடிப்பது உயர்வாக கருதப்படுகிறது. இந்த மனநிலை பெருக பெருக குப்பைகளின் அளவும் பெருகியுள்ளது. வாங்கும் சக்தி அதிகரிக்க கண்டதையும் வாங்கி வீட்டில் குவிக்கிறோம். முன்னெல்லாம் ஒரு தொலைகாட்சியின் ஆயுள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் இன்றோ எல்சிடி,3டி,எச்டி என மாறிக்கொண்டேயிருக்கும் தொழில்நுட்ப வேகத்தில் இரண்டு ஆண்டுகளிலேயே எதுவும் பழசாகிப்போகிறது! நுகர்வு கலச்சாரமும் உலகமயமாக்கலும் எதையும் யூஸ் அன்ட் த்ரோ என நம்மை பழக்கியிருக்கிறது.

இதுபோக சரியான மேலாண்மை இல்லாமல் தொழிற்சாலைகழிவுகளும் மருத்துவகழிவுகளும் மலைபோல குவிகின்றன? இதை தடுக்க சினிமாவில் வருவதைப்போல அந்நியனோ,ரமணாவோ,சூப்பர்மேனோ வரப்போவதில்லை.. பிறகு என்னதான் செய்வது
இந்த குப்பைகளை?

அரசு என்ன செய்கிறது?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் குப்பைகளை மொத்தமாக சேகரித்து அதை அப்படியே கலந்துகட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற காலி இடங்களில் கொட்டி ரொப்புகிறது. குப்பைகள் அதிகரிக்க அதிகரிக்க புதிதாக இடம் பார்த்து அந்த இடத்தில் கொட்டுவதும் தொடர்கிறது. அதாவது சென்னையில் கொடுங்கையூரில் இடமில்லையா.. பெருங்குடியில் கொட்டு அங்குமிடமில்லையா பள்ளிக்கரணையில் கொட்டு.. அங்குமிடமில்லையா... புதிய இடம் கண்டுபிடி! இதுபோல சென்னையில் எட்டு இடங்களில் குப்பைகள் டன் கணக்கில் மலைபோல குவிக்கப்பட்டுள்ளன. அந்த குப்பைகளை எதுவும் செய்வதில்லை..

இதுதான் தற்போதைய சுழற்சிமுறை திடக்கழிவு மேலாண்மையாக இருக்கிறது என்பது வருந்ததக்க உண்மை. தமிழ்நாடு முழுக்க மக்களால் கொட்டப்படும் குப்பைகளில் 80% அரசினால் அள்ளமுடிகிறது! மீதியெல்லாம் சாலைகளிலும் தெருவோரங்களிலும் எங்கேயும் எப்போதும் கிடந்து மக்கி நோய் பரப்பி வாழும்!

அரசு இந்த குப்பைகளுக்காக ஒரு டன்னுக்கு 500ரூபாயிலிருந்து 1100 வரை செலவளிக்கிறது. அட பரவாயில்லையே அப்படீனா நல்லாதானே பண்ணுவாய்ங்க என்று நினைக்கலாம். உண்மையில் இந்த தொகையில் 60-70% குப்பைகளை உரிய இடங்களிலிருந்து அள்ளுவதற்கும், 20-30% அதை எடுத்துசெல்லும் போக்குவரத்துகளுக்கும், வெறும் 5%தான் அதை கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வெறும் 5%ஐ வைத்துதான் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து, மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும், மக்கும் குப்பையை எருவாக்குவதற்கும் செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்! அதனாலேயே என்னவோ கொட்டப்படுகிற குப்பைகள் தரம்பிரித்து கொடுக்கப்பட்டாலும் அவை மீண்டும் கலக்கப்பட்டு அப்படியே கொண்டுபோய் கொட்டப்படுகிறது.

அதாவது உங்கள் வீட்டுவாசலில் இருக்கிற குப்பையை எடுத்துக்கொண்டுபோய் பக்கத்துவீதியில் இருக்கிறவருடைய வாசலில் கொட்டுவதைப்போலவே!

‘’நமக்கு நம்ம வீடு சுத்தமா இருந்தா போதும்.. என்கிற மனநிலையில்தான் அரசும் செயல்படுகிறது. அதாவது பெரும்பாலும் இக்குப்பைகள் நகரத்திற்கு நடுவே உருவாகி ஏழை மக்கள் அதிகம் வசிக்கிற சேரிப்பகுதிகளுக்கு அருகாமையில்தான் கொட்டப்படுகின்றன. இது சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே இப்படித்தான். அதாவது பணக்கார,நடுத்தரவர்க்க மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளால் முதலில் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்’’ என்கிறார் சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம்.
குப்பைகள் கொட்டப்படுகிற LAND FILLS எனப்படும் இடங்கள் சட்டப்படி என்னென்ன வசதிகள் பாதுகாப்புடன் இருக்கவேண்டுமோ என்னென்ன அளவீடுகளுடன் இருக்கவேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அவை மிகமோசமான நிலையில் இருப்பதை யாருமே நேராகவே சென்றாலும் கூட பார்க்க முடியும். குப்பைலாரிகள்தான் நோய்பரப்பும் வேலைகளில் முதலிடத்தில் இருக்கின்றன. மருத்துவமனைகளில் தொழிற்சாலை கழிவுகளை மாநகராட்சி குப்பைவண்டிகளில் பெறக்கூடாது என சட்டம் சொன்னாலும் அதுவும் தொடர்கிறது. இது எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதைக்கூட நாம் உணர்வதில்லை.

‘’ஒவ்வொரு குப்பை லாரியும் குப்பையை கொட்டிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும்போது தினமும் நன்கு கழுவப்பட்டு சுகாதாரமாக இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறது சட்டம்.. ஆனால் இங்கே யாருக்கு அதைப்பற்றி கவலை, இங்கே குப்பை கொட்டு இடங்களில் தெருநாய்கள் கூட நுழையக்கூடாது, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குதான் குப்பை பொறுக்குகின்றனர், இவர்கள் இங்கேயிருந்து வெளியே செல்லும்போது குப்பைகளை மட்டுமே எடுத்துச்செல்வதில்லை, பயங்கரமான வியாதிகளையும்தான்! இதை தடுத்து நிறுத்த வேண்டிய அரசோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது’’ என வருந்துகிறார் பெயர் சொல்லவிரும்பாத மாநகராட்சி ஊழியர் ஒருவர்.

நாங்க மட்டும் சளைச்சவங்களா?

என்னதான் அரசு கூவி கூவி குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க சொன்னாலும் விடாப்பிடியாக குப்பைகளை ஒன்றாக்கி கொட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறோம். அதோடு குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமேயில்லாமல் காலியிடங்கள்,சாக்கடைகள் என பார்த்த இடத்திலும் கொட்டுகிறோம். கரப்பான் பூச்சி ஸ்ப்ரே பாட்டில்களை குப்பைகளில் போடுவது தொடங்கி மெர்குரி மிகுந்த ட்யூப் லைட், காட்மியம் கொண்ட பேட்டரி என சுற்றுசூழலை ஒருகை பார்க்கத்தான் செய்கிறோம். அதோடு விட்டாலும் பரவாயில்லை.. கடலை மிட்டாய் வாங்கினால் பிளாஸ்டிக் கவர்.. அண்டா குண்டா வாங்கினாலும் பிளாஸ்டிக் கவர்.. வாங்கிக்கொண்டேயிருக்கிறோம். பிளாஸ்டிக் கவரில் கிடைக்காத பொருட்கள் மட்டமானவை என்னும் சிந்தனைகளை வளர்த்திருக்கிறோம்!

இதுவேறயா!

மருத்துவமனைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் பத்துவகையாக பிரிக்கப்பட்டு, அவை ஆறுவிதமான குப்பைக்கூடைகளில் அடைக்கப்பட்டு அவை முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும். சிலவகை குப்பைகள் 900டிகிரி செல்சியஸில் எரிக்கப்படவும் வேண்டும். ஆனால் இன்று பல மருத்துவமனைகளும் மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்களை கரக்ட் செய்து எப்படியோ பொதுக்கழிவுகளோடு கலந்துவிடுவது தொடர்கிறது. இதனால் தொற்றுநோய் அபாயம் மட்டுமல்ல.. கதிர்வீச்சு அபாயங்கள் கூட உண்டு. இதுபோக எலக்ட்ரானிக் கழிவுகளும் தொழிற்சாலை கழிவுகளும் கூட பொதுக்கழிவுகளோடு கலக்கப்படுவதும் தொடர்கிறது. இதுவும் தடுத்து நிறுத்தப்படவேண்டியது.


தீர்வுதான் என்ன?

இதுகுறித்து எக்ஸனரோ இன்டர்நேஷனல் அமைப்பினை சேர்ந்த நிர்மலிடம் பேசினோம். ‘’நாம்தான் இதை வெறும் குப்பைகளாக பார்க்கிறோம். ஆனால் அவை செல்வங்கள். அதை சரியான வழியில் பயன்படுத்தினால் நம்மால் நிறைய சம்பாதிக்கவும் நம்முடைய அன்றாட தேவைகளுக்கும் உபயோகிக்க முடியும், அதற்காக கொஞ்சம் உழைப்பும்,பொறுமையும் அவசியம், குப்பைகளைக்கொண்டு பலருக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கலாம், நம் மின்தேவைகளை பூர்த்தி செய்யலாம், பயோகேஸ் தயாரிக்கலாம், எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். அவை தவிர மறுசுழற்சி என்பதே லாபகரமான தொழில்தான்’’ என்றார்.

நிர்மல் சொல்வதை நிஜமாகவே பல பகுதிகளில் செய்தும் காட்டியிருக்கிறார் அவர் மட்டுமல்ல பல தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் இதை செயலில் நிரூபித்துக்காட்டியிருக்கின்றன.

‘’வேலூர் தங்கக்கோவிலுக்கு ஒவ்வொருநாளு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களால் உண்டாகும் குப்பைகளை சரியான வழியில் உபயோகிக்க முடிவுசெய்தது எக்ஸனோரா, அங்கே கிடைக்கும் உணவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுவதோடு அவை சந்தைகளில் விற்கப்படுகின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு மறுசுழற்சிக்காக தயாராகின்றன, இவை தவிர்த்து மிகச்சிறிய அளவு குப்பைகள் மட்டும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன’’ என்றார் எக்ஸனோரா நிர்மல்.

ஹேன்ட் இன் ஹேன்ட் என்னும் அமைப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஒன்றை தமிழகத்தின் பல இடங்களில் செயல்படுத்திவருகிறது. இத்திட்டம் பிபிசி நடத்திய உலக அளவிலான போட்டியொன்றில் முதல் மூன்று இடங்கில் ஒன்றை பிடித்துள்ளது! குப்பைகளின் மூலம் பயனடைதல் அதன்மூலம் சமூக மாற்றத்தை உண்டாக்குதல் என்னும் வழியை பின்பற்றி இத்திட்டம் மகாபலிபுரத்தை குப்பையற்ற ஊராக மாற்றியதோடு மாற்றத்தை ஏற்படுத்தியும் காட்டியுள்ளது.

தமிழகம் முழுக்க இத்திட்டத்தினால் 2,13,000 வீடுகள் பலனடைந்து வருகின்றன. ஒவ்வொருநாளும் நூறு டன் குப்பைகளை இந்த அமைப்பு கையாளுகிறது. அதன் ஒருபகுதியாக மகாபலிபுரத்தில் பயோகேஸ் தயாரிப்பு மற்றும் உணவு கழிவிலிருந்து மின்சாரம் என விதவிதமான திட்டங்களால் அசத்திவருகின்றனர். மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களால் பயனுள்ள பொருட்கள் தயாரித்தல் என அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். மகாபலிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த உரம் விகம்போஸ்ட் என்ற பெயரில் சந்தைகளில் விற்கப்படவும் செய்கிறது! தயாரிக்கப்படும் பயோகேஸ் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது! மின்சாரம் உரம் தயாரித்தலுக்கான தொழிற்சாலையின் மின்தேவையை பூர்த்தி செய்கிறது.

நம்முடைய மத்திய மாநில அரசுகளும் இதுபோலவே பல கிராமப்புற பஞ்சாயத்துகளில் எரு தயாரித்தல் மற்றும் குப்பைகளை தரம்பிரித்து மாற்றுவழிகளில் உபயோகித்தல் என சில திட்டங்களின் மூலமாக வெற்றிகரமாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியோடு செயல்படுத்தப்பட்டே வந்தாலும்.. அவை வெறும் 10%தான். மீதி?

‘’இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன போதிய விழிப்புணர்வின்மை, இடமின்மை, தேவையான வசதிகள் இன்மை. இதை தீர்க்க மக்களிடையே எய்ட்ஸ் குறித்த பிரச்சாரம் போல முழு வீச்சுடன் குப்பைகள் குறித்த ஆபத்துகளை விளக்க வேண்டும். குப்பைகளை அள்ளுவதில் தொடங்கி அவற்றை கையாளுதல் அழித்தல் வரை சுற்றுசூழல் சட்டம் சொல்கிற படி செய்யவேண்டும். அரசு தேவையான நிதியை ஒதுக்கினாலும் அதை சரியான வகையில் பயன்படுத்தவேண்டும். இதை செய்தாலே கூட குப்பைகளை தவிர்க்க முடியும். எங்களைப்போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும் மக்களை இணைத்துக்கொண்டும் இதை நிச்சயமாக சாதிக்க இயலும்’’ என்கிறார் ஹேன்ட் இன் ஹேன்ட் அமைப்பின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சிவகிருஷ்ணமூர்த்தி.

அவர் மேலும் பேசும் போது ‘’சுவீடன் மாதிரியான ஐரோப்பிய நாடுகளில் குப்பைகளை கையாள ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் அவருடைய வருவாயில் சிறிய தொகையை அரசே நேரடியாக வரியைப்போல கட்டயமாக பெறுகிறது. அதைக்கொண்டு நாட்டின் குப்பைகளை கையாளுகிறது. அதோடு அங்கே தொழில் நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் உற்பத்தி செய்கிற பொருளின் தன்மைகேற்ப மறுசுழற்சி செய்வதற்கான தொகையை முன்பே செலுத்தவும் வற்புறத்தப்படுகின்றன, அதாவது ஒரு குளிர்பான பெட் பாட்டில் விற்கும்போது பெட் பாட்டிலை மறுசுழற்சி செய்யத்தேவையான தொகையை அரசுக்கு வரியாக செலுத்தியே ஆகவேண்டும், அதே போல மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்து பணம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நம் உற்பத்தியாளர்கள் டன் கணக்கில் பொருட்களை உற்பத்தி செய்தாலும் அதனால் உண்டாகும் குப்பைகளை பற்றி கவலைப்படுவதில்லை. அதை மாற்ற வேண்டும். குப்பைகளுக்கு விலை நிர்ணயம் செய்துவிட்டால் யார்தான் அதை சாலையில் அநாதையாக விட்டுவைத்திருப்பார்கள். ஐரோப்பிய நாடுகளைப்போல இங்கேயும் செய்யும் பட்சத்தில் நிச்சயமாக தமிழகத்திலும் குப்பைகளை வெகுவாக குறைக்க முடியும்’’ என்றார்.

‘’மக்களை மட்டுமே குறைச்சொல்லிக்கொண்டிருக்கிறோம். சுகாதாரம் பேணவேண்டிய மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கூட ஆபத்தை விளைவிக்கும் பயோமெடிக்கல் வேஸ்ட்டுகளை ஏனோ தானோ என்றுதான் கையாளுகின்றன. ஏன் என்றால் இவற்றை அழிக்க அதிக செலவாகும் என்பதே. உடனடியாக மருத்துவமனைகளிலும் மருத்துவர்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்’’ என்கிறார் டாக்ஸிக் லிங்க்ஸ் அமைப்பின் அருண்.

தீர்வுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அரசு பல கோடி செலவில் திட்டங்கள் தீட்டினாலும் மக்களாகிய நம்மிடம் முதலில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அண்மையில் தமிழக அரசு குப்பைகளை தரம் பிரிக்க மகளிர் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. வரவேற்கத்தக்க முயற்சி இது. ஆனால் பிளாஸ்டிக் கவரில் கெட்டுப்போன சட்டினியோடு குப்பைத்தொட்டியில் வீசும் பழக்கம் நம்மிடம் இன்னும் ஒழியவில்லையே!

அடுத்த முறை ஒரு பிளாஸ்டிக் பையை வாங்குவதற்கு முன்பாகவும், குப்பைத்தொட்டியில் எல்லா குப்பைகளையும் கலந்து கொட்டும் போதும் ஒரே ஒருநிமிடம் நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். நமது மூதாதையர்கள் நமக்காக விட்டுச்சென்ற அழகான பூமியை குப்பைகூளமாக மாற்றிவிட்டோம் என்பதை உணருவோம்.

குப்பைகளை கையாள்வதில் அரசை மட்டுமே குறைசொல்லிக்கொண்டிருக்காமல் நம்மால் இயன்றதை இந்த சுற்றுச்சூழலுக்கு செய்ய முன்வர வேண்டும். ஊழலைப்போலவே தனிமனிதனிடமிருந்துதான் இந்த மாற்றம் தொடங்கவேண்டும்! நம் குழந்தைகள் தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் குப்பை போடுவதை பாவமாக கருத வேண்டும். அதுதான் குப்பைகளுக்கு முடிவுகட்டும். இதோ இந்த நிமிடம் தமிழகம் முழுக்க ஒன்பது டன் குப்பைகள் சேர்ந்துவிட்டன..குப்பையை சப்பை மேட்டராக நினைத்தால் ஆபத்து நமக்கே!


******************************************


மக்களாகிய நாம் செய்யவேண்டியதென்ன?

*உங்கள் பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்படவில்லையென்றாலும் தரம்பிரித்தே துப்புரவு தொழிலாளியிடம் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

*காலிமனைகளில்,சாலை ஓரங்களில்,கழிவுநீர் கால்வாய்களில்,நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டாதீர்கள்

*குப்பைகளை எரிக்கவே எரிக்காதீர்கள்

*கடைகளுக்கு செல்லும் போது துணி அல்லது சணல் பை எடுத்துச்செல்லவும். முற்றிலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க முயற்சி செய்யலாம்.

*இதையே நாம் பணியாற்றும் அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் அருகாமை வீடுகளில் செய்யவும் வலியுறுத்தலாம்.

* நான் இன்னும் அதிகமா செய்ய நினைக்கிறேன்ங்க என்பவரா நீங்கள்.. உங்களுக்காக இன்னொரு யோசனையும் இருக்கிறது. வீட்டிலேயே செலவில்லாமல் அதிக இடமில்லாமல் எரு தயாரிக்கலாம். அது மிக மிக சுலபமானதுதான். ஒரு சிறிய டிரம் அல்லது பானை கூட போதுமானது. அதன் உள்ளே மரப்பலகை ஒன்றை வைத்து அதில் கொஞ்சமாக மண் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதிலேயே தினமும் உணவுக்கழிவுகளை கொட்டிவிட்டு கொஞ்சமாக காய்ந்த சாணமோ அல்லது காய்ந்த இலைகளையோ போட்டு மேலோட்டமாக ஓரளவு காற்று போகும் வழிசெய்து மூடிவைத்துவிடுங்கள். தினமும் இதுபோல செய்துவந்தாலே ஓரிரு மாதங்களில் அருமையான இயற்கை உரம் தயார்! அதை உங்கள் வீட்டு தோட்டத்திற்கோ பக்கத்துவீட்டு தோட்டத்திற்கோ கொடுக்கலாம் விற்கலாம்! இல்லை சாலையிலே போட்டாலும் ஒருபிரச்சனையும் வராது. மண்ணுக்கு நல்லது! அதோடு வீட்டில் சேர்க்கப்படுகிற பிளாஸ்டிக் குப்பைகளை திரட்டி மொத்தமாக காய்லாங்கடையில் போட்டுவிடுங்கள்! காசுக்கு காசு. சுற்றுசூழலுக்கும் நல்லது.

அரசு செய்ய வேண்டியது

*ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு திட்டம் இருப்பதுபோலவே இந்த இயற்கை எரு தயாரிக்கும் அமைப்பும் இருக்க நிர்பந்திக்கலாம். இதன்மூலமாக பெருமளவு மக்கும் குப்பைகள் சேர்வதை நிச்சயமாக குறைக்கலாம்.

*குப்பைகள் எந்த நிலையில் வந்தாலும் தரம்பிரித்து அதை சரியான முறையில் கையாள வேண்டும்.

*குப்பைகளை கையாள நல்ல கட்டமைப்பு வசதிகளை அதிகமாக்க வேண்டும்.
 
*மக்களிடையே குப்பைகள் குறித்த போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும்.

*சிறிய அளவில் பயோகேஸ் தயாரித்தல் ,குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல்,மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும்.

*உற்பத்தியாளர்களிடமிருந்தே மறுசுழற்சிக்கான நிதியை பெற்று சரியான முறையில் உபயோகித்தல்.

*நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

*மருத்துவக்கழிவுகள் முற்றிலுமாக சரியான முறையில் கையாளப்படுவதோடு மக்கள் பகுதிகளுக்குள் எக்காரணம் கொண்டு வரமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றினை அழிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என தொடர் சோதனைகள் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும்.


சட்டம் என்ன சொல்கிறது?

பெருகிவரும் குப்பைகளை சரியாக பயன்படுத்தவும் அழிக்கவும் அதை கையாளவும் அரசின் சட்டங்கள் மிகவும் சரியாக இயற்றப்பட்டுள்ளன. MUNICIPAL SOLID WASTE RULES, 2000 என்கிற சட்டம் நகரங்களின் குப்பைகளை எப்படி அகற்றவேண்டும், அவற்றை என்ன செய்யவேண்டும் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறது.
அதன்படி

1.ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நேரடியாகவோ குப்பைத்தொட்டிகள் மூலமாகவே குப்பைகளை பெறுதல்

2.கிடைத்த குப்பைகளை அதன் தன்மைகேற்ப தரம் பிரித்தல்

3.உணவுக்கழிவுகளை தனியாக எரு தயாரிக்கவும் பயோகேஸ் உற்பத்திக்கும் பயன்படுத்துதல்

4.பயோ மெடிக்கல் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை நகரக்கழிவுகளோடு கலக்காதிருத்தல். மற்றும் அவற்றை வெவ்வேறு விதமான முறைகளில் கையாளுதல் அழித்தல்.

5.குப்பைகள் எரித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது

6.தெருநாய்கள் முதலான விலங்குகள் குப்பைகளுக்கு அருகில் செல்லாமலும் அவற்றை கிளறி உணவுதேடுதலையும் தடுத்தல்

7.ஒவ்வொரு குடிமகனுக்கும் குப்பையை தரம்பிரித்து கொடுக்க வேண்டிய கடமையை உணர்த்துதல் மற்றும் தேவையான அனைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்தல்

8.மூடப்பட்ட குப்பைத்தொட்டிகளை அமைத்தல். அவை நிரம்புவதற்குமுன்பு சுத்தம் செய்தல். நேரடியாக துப்புறவு தொழிலாளர்கள் அதை கைகளால் தொட்டு உபயோகிக்காமல் ஆட்டோமேடிக் முறையை பயன்படுத்துதல்.

9.குப்பை அள்ளும் வாகனங்களை உபயோகித்தல். அந்த வாகனம் சுத்தமானதாகவும் தரம்பிரித்த குப்பைகளை கலக்காமல் எடுத்து செல்லும் வகையிலும் இருத்தல் வேண்டும்.

10.பெறப்பட்ட குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரித்தல் முதலான காரியங்களின் மூலம் அழித்தல். மக்காத குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை மட்டும் பிரித்து உபயோகித்தல்.

11.மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகளை LAND FILLS எனப்படும் இடங்களை உண்டாக்கி கொட்டவேண்டும். அப்பகுதி மக்கள் வசிக்காத பகுதிகள்,காடுகள்,நீர்வளப்பகுதிகள்,வரலாற்று பகுதிகள்,தேசியபூங்காக்கள் உள்ள பகுதிகளில் அமைக்க கூடாது. இந்த இடம் 25 ஆண்டுகளுக்கு குப்பை கொட்ட வசதியான இடமாக இருக்க வேண்டும்.

12.இந்த இடம் மிகவும் பாதுகாப்பானதாகவும் காம்பவுன்ட் சுவர்கள் கட்டப்பட்டதாகவும், போதிய காவலர்களோடும் இருக்க வேண்டியது அவசியம். இங்கே வெளியாட்களும் தெருநாய்கள் முதலான விலங்குகளும் நுழைவதை தடுக்க வேண்டும்.
இவை தவிர உரம் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும், இந்த குப்பைகளில் இருந்து வெளியேறும் காற்றும் நீரும் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும் இச்சட்டத்தில் விரிவாக உள்ளன. இதுகுறித்து மேலும் விரிவாக தெரிந்து கொள்ள http://envfor.nic.in/legis/hsm/mswmhr.html என்ற இணையதள முகவரியில் காணலாம்.


************************

ஆன்லைன் காயலாங்கடை!

சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர். அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர். இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன். இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மேலும் விபரங்களுக்கு – http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்.



(நன்றி புதியதலைமுறை)

22 கருத்துக்கள்:

sundar January 11, 2012 4:12 PM  

அவசரமாகக் கவனிக்கப் பட வேண்டிய பிரச்னை பற்றி கன்னத்தில் அறைந்த மாதிரி சொல்லும் அவசியப் பதிவு. அனைவரும் படித்துப் புரிதல் நலம்

Anonymous,  January 11, 2012 5:56 PM  

very good article..!!!

O.R.B Raja January 11, 2012 6:48 PM  

மிக முக்கியமான பிரச்சினை இது. மக்களின் விழிப்புணர்வும் அரசும் சேர்ந்து செயல்படவேண்டியது கட்டாயம்.

என்னுடைய கவலையையும் ஒரு பதிவில் பகிர்ந்துள்ளேன்.

http://thanjavuraan.blogspot.com/2011/12/what-rubbish-world.html

Rathnavel January 11, 2012 7:59 PM  

அருமையான, பயனுள்ள பதிவு.
வாழ்த்துகள் அதிஷா.

செம்மலர் செல்வன் January 11, 2012 8:12 PM  

அருமையான கட்டுரை,அதிஷா. உங்கள் உழைப்புக்கும்,எழுத்துக்கும் நன்றி.

அன்பு January 11, 2012 11:34 PM  

அருமையான தெளிவான எளிதில் புரியக்கூடியதுமான கட்டுரை...
நன்றி/வாழ்த்துக்கள்

அன்பு January 11, 2012 11:36 PM  

அருமையான , தெளிவான , எளிதில் புரியக்கூடியதுமான கட்டுரை...
நன்றி/வாழ்த்துக்கள்

moe January 12, 2012 7:11 AM  

In US, they charge some $ for electronics , specifically for disposal.

Good system by the govt.
But we know how they dispose.. ship to china..some greedy recylcers

ஹாலிவுட்ரசிகன் January 12, 2012 9:29 AM  

வெகு சீக்கிரமே ஆயத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு விடயம்.

பதிவிட்டமைக்கு நன்றி.

Rakesh Balakrishnan January 12, 2012 11:21 AM  

One of the fundamental problems is that the dustbins that we use do not facilitate segregation.

two dustbins are needed for segregation.
but the psychology of people doesnt work that ways.

if all dustbins have two partitions then segregation will increase i guess

Saran R January 12, 2012 6:33 PM  

குப்பை போஸ்ட், அப்டின்னு யாரும் சொல்ல முடியாத அளவு எழுதியுள்ளீர்...

நல்ல பதிவு...

சரண்

Saran R January 12, 2012 6:37 PM  

மிகவும் கவர்ந்தது ஒரு பதிவிற்கு நீங்கள் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். இந்த பதிவை எழுதுவதிற்க்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை செலவிட்டிருந்தால், இணையத்தில் 4 கு(ப்பை)ட்டி பதிவுகளை இட்டு பார்வையாளர்களை(ஹிட்ஸ்) இழுத்திருக்கலாம். அதை விட்டு சொல்லவேண்டியதை, சரியாக சொல்வதற்க்கு நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள சிரத்தை பாரட்டுகுரியது.

willi January 12, 2012 8:24 PM  

Nice Article Athisa......:)

நாஞ்சிலன் January 12, 2012 10:59 PM  

சமூகத்தால் அரசாங்கத்தால் மக்களால் கவனிக்கப்படவேண்டிய ஒரு அவசர பிரச்சனை...

நாஞ்சிலன் January 12, 2012 11:00 PM  

அரசாங்கத்தாலும், சமூகத்தாலும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அவசரப் பிரச்சனை

Nazir,  January 13, 2012 9:13 PM  

Why is the government not banning the use of plastics ?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ January 16, 2012 11:06 PM  

ஸலாம் சகோ.அதிஷா,
மிக மிக அருமையான அவசியமான இடுகை. பதிவில் ஏகப்பட்ட செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

அப்புறம் இப்பதிவில் ஒரு தவறு உள்ளது. 'மக்கும் குப்பையிலிருந்து டையாக்சின் வெளியாகும்' என்று..! இது தவறு..!

மக்கா குப்பை... அதாவது பிளாஸ்டிக் எரிக்கப்படும் போதுதான் டையாக்சின் உண்டாகும். அதுவும் 200 டிகிரி செல்சியஸ் தாண்டி எரியும்போதுதான் வெளியாகும். 800 டிகிரி செல்சியஸ்க்கு அப்புறம் அது முழுதும் அழிந்து விடும். அதனால்தான் பிளாஸ்டிக் மக்கா குப்பை எரிகலனில் 800 டிகிரிக்கு மேலே வெப்பம் வைத்து பிளாஸ்டிக்கை அழிப்பார்கள்.

umesh January 17, 2012 1:06 AM  

Important article . thanks

Anonymous,  January 18, 2012 12:14 PM  

kuppai illaa desam

kailash January 23, 2012 4:46 PM  

Instead of saying nice article , superb , excellent to the writer if commenters and readers of the article implement the same he would be more happy.

திண்டுக்கல் தனபாலன் January 25, 2012 8:48 AM  

விளக்கமான விழிப்புணர்வு பதிவு! பாராட்டுக்கள் ! நன்றி சார்!

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP