Pages

24 April 2012

சச்சின் 100 சல்யூட் 100







1.சச்சினுடைய அப்பாவுக்கு எழுபதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் (எஸ்.டி.பர்மன்!) என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தன் பிள்ளைக்கு சச்சின் என பெயரிட்டார்.

2.அதிவேக கார்கள் மீது அளவிளாத ஆர்வம் கொண்டவர். அதிகாலை நான்கு மணிக்கு மும்பையின் சாலைகளில் தன்னதனியாக கார் ஓட்டிக்கொண்டிருப்பாராம்.

3.சச்சின் பள்ளியில் படிக்கும்போது சுனில் கவாஸ்கர் கால்களுக்கான பேட்கள் ஒன்றை பரிசாக கொடுத்தார். சச்சின் 1989ல் தன் முதல் டெஸ்ட் போட்டியில் அந்த பேட்களை அணிந்துகொண்டுதான் களம் இறங்கினார்.

4.சிறுவயதில் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கென்ரோவின் தீவிர விசிறியாக இருந்தார் சச்சின். மெக்கென்ரோவைப்போலவே தானும் குடுமி வைத்துக்கொண்டு சுற்றுவாராம். அதனாலேயே அவருடைய நண்பர்கள் அவரை மேக் என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.

5.டெஸ்ட் போட்டிகளில் தன்னை அவுட் செய்கிற ஒவ்வொரு பந்துவீச்சாளரின் பெயரையும் அவர் எப்படி தன்னை அவுட் செய்தார் என்பதையும் மறக்கவே மாட்டார். தூங்கும்போது எழுப்பிக்கேட்டாலும் டான் என்று சொல்லிவிடுவாராம்.

6.பள்ளி அணிக்காக ஆடும்போது ஒரு ரப்பர் பந்தை தண்ணீரில் நனைத்து அதை பந்துவீச்சாளரிடம் கொடுத்து பந்துவீச சொல்லி பயிற்சி எடுப்பாராம். பந்து பேட்டின் எந்த இடத்தில் படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை சரிசெய்து கொள்ள இந்த உத்தியாம்.

7.1987ஆம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளிடையேயான அரையிறுதிப்போட்டியில் பவுண்டரியில் நின்று பந்து பொறுக்கிப்போடும் பால் பாயாக பணியாற்றினார் சச்சின்..

8.ரன்அவுட் ஆகும் போது தேர்ட் அம்பயர் (டிவிஅம்பயர்) மூலமாக முதன் முதலாக அவுட் ஆனவர் நம்ம சச்சின்தான்!

9.1998ல் ஆஸ்திரேலியாவோடு இந்தியா விளையாடியது. அப்போது வார்னே ஒருபேட்டியில் ‘’அந்தாளு கனவுல கூட டார்ச்சர் குடுக்கறார்ப்பா.. நான்போடற எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்கறமாதிரி கனவு வந்து தூக்கத்தை கெடுக்குது’’ என கூறியிருந்தார்.

10.நிறைய உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவர் சச்சின்!

11.சச்சினுடைய முதல் பேட்டினை பரிசளித்தவர் அவருடைய அக்கா! காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர் அங்கிருந்த வாங்கிவந்த பேட்டு உடையும் வரை உபயோகித்தாராம் சச்சின்.

12.1983 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி. அதன் நான்காவது டெஸ்ட்போட்டிதான் முதன்முதலாக சிறுவன் சச்சின் மைதானத்தில் பார்த்த நிஜ கிரிக்கெட்! அவர் மைதானத்திற்கு சென்ற நாளில் விவியன் ரிசர்ட்ஸ் செஞ்சுரி அடித்தார்.

13.சச்சின் குட்டிப்பையனாக இருந்தபோது குறும்புத்தனம் தாங்கமுடியாதாம். மாங்காய் பறிக்கப்போய் தவறிவிழுந்தவருக்கு தண்டனையாக கிரிக்கெட் கோச்சிங் பயிற்சியில் சேர்த்துவிட்டார் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர். அதுதான் சச்சினின் வாழ்க்கையையே மாற்றியது.

14.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் சர்.டான் பிராட்மேனுக்கு, அடுத்த இடம் நம்ம சச்சினுக்குத்தான்!

15.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் விவியன் ரிசர்ட்ஸ், இரண்டாமிடம் நம்மாளு!

16.பள்ளிக்காலத்திலேயே சச்சின் மும்பையில் இருந்த பதிமூன்று அணிகளுக்காக விளையாடினார்..

17.17 வயதிற்குட்பட்டோருக்கான ஹாரிஷ் ஷீல்ட் என்னும் உள்ளூர் போட்டியில்தான் சச்சின் தன் முதல் கிரிக்கெட் சதத்தினை அடித்தார்!

18.மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழ் சச்சினின் முதல் பேட்டியை பிரசுரித்தது. அப்போது அவருக்கு வயது 12! பேட்டியின் பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவர் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர்.

19.சச்சினும் காம்ப்ளியும் பள்ளி அணிக்காக ஆடி இருவருமாக சேர்ந்து எடுத்த 664 ரன்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

20.1988ல் குஜராத் அணிக்கு எதிராக தன் முதல் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார் சச்சின். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து இளம்வயதில் முதல் போட்டியில் சமடித்த வீரர் என்கிற சாதனையை செய்தார்.

21.சர்.டான் பிராட்மேன் தன்னுடைய ‘’உலக டெஸ்ட் அணிக்கான பட்டியலில் சேர்த்துக்கொண்ட ஒரே இந்தியர் சச்சின் மட்டும்தான்.

22.தனது பத்தொன்பதாவது வயதில் 1992ஆம் ஆண்டு தன் முதல் உலக கோப்பை போட்டிகளில் விளையாடினார் சச்சின்.

23.சச்சினுடைய மனைவி பெயர் அஞ்சலி, சச்சின் தம்பதிகளுக்கு ஒரு மகள் ‘’சாரா’’,ஒருமகன் ‘அர்ஜூன்’. அப்பாவோடு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறார் ஜூனியர் சச்சின்.

24.சச்சின் தனது முதல் எழுபது ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாகவே விளையாடினார்!

25.130ஆண்டுகால பாரம்பரியமிக்க இங்கிலாந்தின் கவுண்டி அணியான யார்க்சயர் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் சச்சின்தான். வெளிநாட்டு அணிக்காக ஆடுவதா வேண்டாமா என கவாஸ்கரிடம் சென்று அனுமதிவாங்கிவிட்டுத்தான் விளையாடினார் சச்சின்.

26.1995ல் மும்பையில் நடந்ததது சச்சினின் திருமணம். அவருடைய மனைவி அஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அஞ்சலி ஆங்கிலோ இந்தியப்பெண். அவருக்கு சச்சினை விட ஐந்து வயது அதிகம்.

27.தன் மனைவி அஞ்சலியை திருமணத்திற்கு முன் தீவிரமாக காதலித்தார் சச்சின். அப்போது ஓரளவு பிரபலமாகிவிட்டதால் ஒட்டுதாடி தொப்பி கண்ணாடி சகிதம் காதலியோடு பார்க்,பீச்,தியேட்டர்களில் சுற்றுவாராம்!

28.சச்சினின் குழந்தை முகம்தான் குழந்தைகள் டாக்டரான அஞ்சலியை கவர்ந்திருக்க வேண்டும் என கவாஸ்கர் ஒருபேட்டியில் கிண்டலாக கூறியுள்ளார்.

29.இந்தியாவின் முக்கிய உள்ளூர் போட்டிகளான ரஞ்சிக்கோப்பை, துலீப் டிராபி, இரானி டிராபி என மூன்று போட்டிகளிலும் தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் மட்டும்தான்.

30.சச்சின் உலக கிரிக்கெட்டின் வரலாற்றில் தன் முதல் சதத்தினை பதிவு செய்த போது அவருக்கு வயது பதினேழுதான்! இங்கிலாந்து மான்செஸ்டர் ஓல்ட் டிரப்ஃபோர்ட் மைதானத்தில் 1990ல் தொடங்கியது செஞ்சுரிவேட்டை.

31.சுதீர் குமார் கௌதம் சச்சின் தெண்டுல்கரின் நம்பர் ஒன் ரசிகர் என அழைக்கப்படுபவர். சச்சின் விளையாடுகிற எல்லா ஆட்டங்களில் கலந்துகொள்ளும் இவருக்கு சச்சினே தன் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் கொடுத்துவிடுகிறார்.

32.சென்னையை சேர்ந்த 87வயது சரஸ்வதி என்கிற பாட்டிதான் சச்சினுடைய வயதில் மூத்த ரசிகர் என சொல்லப்படுகிறது. சச்சினை பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறார் இந்த சச்சின் பாட்டி!

33.டுவிட்டர் இணையதளத்திலும் சச்சின் அவ்வப்போது ரசிகர்களோடு உரையாடுகிறார். அவருக்கு டுவிட்டரில் 23 லட்சம் ரசிகர்கள்! https://twitter.com/sachin_rt

34.விளம்பரங்களில் நடிப்பதிலும் செஞ்சுரி அடித்து சாதனை படைத்தவர் சச்சின். நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்களுக்கான விளம்பரங்களில் நடித்திருக்கிறார் ச்ச்சின்.

35.சச்சினின் செல்லப்பெயர் டென்ட்லியா! அதுபோக லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் சாம்பியன், கிரிக்கெட்டின் கடவுள் என்றெல்லாம் கூட அவருடைய ரசிகர்கள் அழைக்கின்றனர்.

36.சச்சின் ஒரே ஒரு பாலிவுட் படத்தின் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் ஸ்டம்ப்ட்!

37.திகார் ஜெயிலில் இருக்கிற இரண்டு வார்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. ஒன்று வினோத் காம்ப்ளியின் பெயரில் இன்னொன்று சச்சினின் பெயரில்!

38.இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பதவி வழங்கிய ஒரே விமான பயிற்சி பெறாத ஆள் சச்சின் மட்டும்தான்.

39.ஹாக்கி வீரர் தியான் சந்துக்கு பிறகு இந்தியாவில் விளையாட்டுக்காக தரப்படுகிற எல்லா விருதுகளையும் வென்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்.

40.சச்சின்தான் உலகிலேயே அதிக எடைகொண்ட கிரிக்கெட் பேட்டினை பயன்படுத்துகிறார். அவருடைய பேட்டின் எடை 1.42 கிலோ! சாதாரண பேட்டின் எடை ஒருகிலோதான்!

41.சச்சின் பந்துவீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் வலது கையையே பயன்படுத்தினாலும் அவர் எழுதுவதும்,சாப்பிடுவதும் இடதுகையில்தான்!

42.பத்துவயதில் வேகப்பந்துவீச்சாளர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் சென்னை எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷனில் செலக்சனுக்காக வந்து டென்னிஸ் லிலியின் அறிவுரையால் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

43.சச்சினுக்கு காயமெல்லாம் கமர்கட் மாதிரி! சின்ன வயதில் அவருடைய உடம்பில் பேன்ட் எய்ட் எப்போதுமே இடம்பிடித்திருக்குமாம். அவர் முதன்முதலாக நடித்த விளம்பரமும் பேன்ட் எய்ட்தான்!

44.ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுபெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின்தான்.

45.டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் முத்தையா முரளீதரன்தான் சச்சினை அதிக முறை அவுட்டாக்கிய பெருமையை பெற்றவர். (எட்டு முறை)

46.ஒருநாள் போட்டிகளில் சச்சினை அதிகமுறை அவுட்டாக்கியவர் ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்துவீச்சாளர் பிரட்லீ (9முறை)

47.ஏகப்பட்ட மேட்ச்கள் ஆடியிருந்தாலும் சச்சின் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2006ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக!

48.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே இரட்டைசதமடித்தவர் சச்சின்! ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் ஆளும் அவர்தான்.

49.ஒருநாள் போட்டிகளில் ஆறு முறை 200க்கு அதிகமான பார்ட்னர்ஷிப்களில் பங்குபெற்றுள்ளார். அவரோடு ஆடியவர்கள் இரண்டே பேர் ஒருவர் கங்கூலி இன்னொருவர் டிராவிட்.

50.மற்ற எந்த அணிகளையும் விட ஆஸ்திரேலியாவோடு விளையாடும்போது சச்சினுக்கு ஆக்ரோஷாம் அதிகமாகிவிடுகிறது. அவர் அடித்த நூறு நூறுகளில் இருபது ஆஸியுடன்தான்.

51.கிரிக்கெட் புத்தகத்தின் எல்லாவகை ஷாட்டுகளும் விளையாடினாலும் சச்சினுக்கு பிடித்தது ஸ்ட்ரைட் டிரைவ்தானாம்! (எங்களுக்கும்தான்!)

52.சச்சினுக்கு பிடித்த கிரிக்கெட் மைதானம் மும்பை வான்கடேவும் ஆஸ்திரேலியாவின் சிட்னி எஸ்சிஜி யும்தான்.

53.கடல் உணவுகளை விரும்பி உண்பாராம் சச்சின்! அதிலும் நண்டு மற்றும் மீன் என்றால் ஒரு பிடிபிடிப்பது சச்சினின் வழக்கம்.

54.சச்சினிடம் ராசியான பேட் ஒன்று இருந்தது. அதை வைத்து 14நான்கு செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். அது உடைந்துபோக வல்லுனர்களை வைத்து சரிசெய்து கடந்த உலக கோப்பை போட்டிகள் வரைக்குமே அதை உபயோகித்தாராம்!

55.சச்சின் கிரிக்கெட்டுக்கு வெளியே இரண்டு உணவகங்களை மும்பையிலும் பெங்களூருவிலும் நடத்தி வருகிறார்.

56.சச்சின் தன் பள்ளிப்படிப்பை தொடங்கியது நியூ இங்கிலான்ட் ஸ்கூலில்தான் என்றாலும் கிரிக்கெட்டுக்காக அவருடைய பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் உத்தரவின்படி சரதாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தார்.

57.உலகம் முழுக்க இருக்கிற 90 கிரிக்கெட் மைதானங்களில் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார் சச்சின்!

58.சச்சின் கிரவுண்டில் விளையாடும் போது எதையும் சாப்பிடவோ குடிக்கவோ மாட்டார் அவருடைய மனைவி அஞ்சலி! திருமணமானதிலிருந்து இதை விரதமாகவே கடைபிடிக்கிறார்.

59.நிறைய சென்டிமென்ட் பார்ப்பாராம் சச்சின், எப்போதும் தன்னுடைய இடதுகால் பேடையே முதலில் அணிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

60.மேடம் டுசாட்ஸ் என்கிற பிரபலமான மெழுகு சிலை மியூசியத்தில் அவரைப்போலவே ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் இடம்பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர் சச்சின்தான்!

61.கங்கூலியோடு இணைந்து ஆறாயிரம் ரன்களை ஒப்பனிங் இறங்கி குவித்தது கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்திடாத சாதனையாக கருதப்படுகிறது!

62.சச்சினை சூப்பர் ஹீரோவாக்கி மாஸ்டர் பிளாஸ்டர் என்கிற பாத்திரத்தை உருவாக்கி காமிக்ஸ் ஒன்றை வெளியிட்டது விர்ஜின் காமிக்ஸ் என்னும் நிறுவனம்.

63.சச்சின் சிறந்தபேட்ஸ்மேனாக இருந்தாலும் இக்கட்டான சூழல்களில் இந்தியாவுக்காக பந்துவீசி அசத்தியுள்ளார். டெஸ்டிலும் ஒருநாள்போட்டிகளிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்!

64.பத்தாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தபோது மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சச்சினுக்கு பத்துகிலோ எடையுள்ள வெள்ளி பேட் ஒன்றை பரிசாக கொடுத்தது!

65.டைம் இதழ் சச்சினை ஆசியாவின் ஹீரோ என புகழ்ந்து எழுதியது!

66.உலக கோப்பைப்போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்கிற சாதனை செய்துள்ளவர் சச்சின்.

67.சச்சினுக்கும் சென்னைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் செஞ்சுரி சென்னை சேப்பாக்கத்தில்தான்! (இங்கிலாந்துக்கு எதிராக 165 ரன்கள்!)

68.1995ல் சச்சின் ஐந்தாண்டுக்கான விளம்பரம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை என்ன தெரியுமா? 30கோடி!

69.டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிற எல்லா அணிகளோடும் இரண்டுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்திருக்கிறார்.

70.2006ல் விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை 180கோடி! இதன்மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கிற விளையாட்டு வீரராக உயர்ந்தார்,

71.சச்சின் மூன்று முறை 99 ரன்களுக்கு அவுட்டாகியிருக்கிறார். 90-99 ரன்களுக்குள் அவுட்டானது 28 முறை!

72.2008ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் சச்சினுக்கு சர் பட்டம் கொடுக்க பரிந்துரைத்தார். ஆனால் வழங்கப்படவில்லை.

73.இதுவரை ஒருநாள் போட்டிகளில் 56முறை ஆட்டநாயகன் விருதுபெற்றுள்ள சச்சின் இந்திய அணி தோற்றபோதும் 5 முறை
இவ்விருதினை பெற்றுள்ளார்!

74.மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர் சச்சின். புட்டபர்த்தி சத்யசாயிபாபா கோவிலுக்கு அடிக்கடி போய்வருகிறவர். மேட்ச் இல்லாத காலங்களில் சச்சினை இந்தியாவின் பிரபல கோவில்களில் அடிக்கடி பார்க்கலாம்.

75.அண்மையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி கேட்டு டுவிட்டர் இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்தார் சச்சின். குவிந்தது ஒருகோடி!

76.சின்ன பையன் வேணாம்ப்பா என பலர் தடுத்தும் சச்சினை 1989ல் இந்திய அணிக்காக தேர்ந்தெடுத்தவர் ராஜ் சிங் துங்கர்பூர்!

77.கிரிக்கெட் மதமாக இருந்தால் சச்சின்தான் கடவுள் என்கிற வாக்கியம் கிரிக்கெட் உலகில் மிகப்பிரபலம். ஒருமுறை ஆஸி அணி முன்னாள் வீரர் மேத் ஹெய்டன் ஒருபேட்டியில் நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் விளையாடுகிறார் என்றார்

78.திரைப்படங்கள் பார்ப்பது சச்சினுக்கு பிடித்த பொழுதுபோக்கு. அவருக்கு பிடித்த நடிகர் அமிதாப் பச்சன்! படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும்போது விக்குவைத்துக்கொண்டு மாறுவேடத்தில் செல்வாராம்.

79.சச்சின் தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது பாகிஸ்தானுடன் என்பது தெரியும்.. அந்த மேட்ச்சில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தவர் யார் தெரியுமா? நம்மூர் ஸ்ரீகாந்த்!

80.எந்த நாட்டிற்கு விளையாட சென்றாலும் அதற்கு முன் தன்னுடைய குரு ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசிபெற்றுவிட்டுத்தான் செல்வார்.

81.மல்யுத்தம் என்றால் சச்சினுக்கு உயிர். இந்திய அணியில் புதிதாக நுழைந்த போது திலிப் வெங்சர்க்கார்,அங்கோலா,மனோஜ் பிராபகரோடெல்லாம் ஜாலியாக மல்யுத்தம் போட்டு ஜெயிப்பாராம். அவருடைய கைகள் மிகவும் வலுவானவை என்று ஒருபேட்டியில் கூறுகிறார் திலீப் வெங்சர்க்கார்.

82.சச்சின் பேட்டிங்கில் மட்டுமல்ல சமையலிலும் கில்லாடி, வீட்டில் இருக்கும்போது கத்திரிக்காய் ரோட்டி , சப்ஜியெல்லாம் செய்து அசத்துவாராம்.

83.மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள எப்போதும் சச்சின் காதுகளில் இசை ஒலித்துக்கொண்டேயிருக்கும். பாப் இசையும் கிசோர் குமார் பாடல்கள் என்றாலும் உயிர்.

84.சச்சின் தன்னால் விளையாடவே முடியாத ஒரு பந்துவீச்சாளர் என குறிப்பிடுவது மறைந்த தென்னாப்பிரிக்க அணியின் ஹன்சி குரோன்யேவையே!

85.சச்சினுக்கு இரண்டு முறை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் இரண்டுமுறையும் இந்தியா அதிக போட்டிகளில் தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் தானாகவே தன் கேப்டன் பதவியை துறந்தார் சச்சின்.

86.டான் பிராட்மேனின் 29டெஸ்ட் சத சாதனையை சச்சின் முறியடித்தபோது ஃபார்முலா ஒன் ஃபெராரி நிறுவனம் ரேஸ் சாம்பியன் மைக்கேல் சூமேக்கர் கையால் அதிநவீன கார் ஒன்றை பரிசளித்தது.

87.1999ல் சச்சினின் உருவம் பொறித்த 24 காரட் தங்கநாணயங்களை இந்தியாவின் கார்ப்பரேஷன் பேங்க் வெளியிட்டது

88.சச்சினுடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் பள்ளி அணிக்காக கிரிக்கெட் ஆடிவருகிறார். அப்பாவை போல இல்லாமல் இவர் ஒரு
ஆல்ரவுண்டர். இடது கை ஆட்டக்காரர்!

89.சச்சினின் ரத்தத்துளியில் அச்சிடப்பட்ட (ஒருதுளிதான்) அவருடைய வாழ்க்கை வரலாற்றுப்புத்தகம் ஒன்றை இங்கிலாந்து பதிப்பகம் வெளியிட்டது. அதில் சச்சினின் டிஎன்ஏ வடிவமும் வெளியிடப்பட்டது. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி ஒரு புத்தகத்தின் விலை முப்பது லட்சம் ரூபாய்! இந்தப்பணம் இந்தியாவில் ஏழைகளுக்கான பள்ளி ஒன்றை கட்ட செலவிடப்பட்டது.

90.சச்சின் வசித்த காலனியின் வாட்ச்மேன் பையன் ரமேஷ். சச்சினின் இளம்வயது தோழன். இருவரும்தான் எப்போதும் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். இப்போது அவர்தான் சச்சினின் பர்சனல் செக்ரட்டரியாக இருக்கிறார். இப்போதும் நண்பர்களாக!

91.சொந்தவீட்டுக்கனவு அனைவருக்கும் உண்டு. மும்பையிலிருக்கும் பாந்த்ராவில் அண்மையில் சச்சின் தன் 5 அடுக்குகள் கொண்ட 40கோடியில் கட்டப்பட்ட புதியவீட்டில் குடியேறினார்.

92.சச்சின் விளையாடுவதை கிரவுண்டிற்கு சென்றோ டிவியிலோ லைவ்வாக பார்க்க மாட்டாராம் அவருடைய அண்ணன் அஜித். ரெகார்ட் செய்துதான் பார்ப்பது வழக்கமாம்! அவர் பார்த்த ஆட்டங்களில் சச்சின் சரியாக ஆடுவதில்லை என இப்படி ஒரு நம்பிக்கை!

93.மும்பையில் மேட்ச் நடந்தால் போட்டிக்கு முன்னால் தன் வீட்டுக்கு சென்று பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்ற பின்பே ஆட்டத்திற்கு கிளம்புவார் சச்சின்.

94.டெல்லியின் முக்கிய பகுதியான சாந்த்னி சவ்க்கில் ஒரு சாலைக்கு சச்சின் பெயர் சூட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

95.கொலவெறி பாடல் ஹிட்டான கையோடு நடிகர் தனுஷை அழைத்து அதே பாணியில் சச்சினுக்கும் ஒரு பாட்டு போட்டு ஹிட்டடித்தது பூஸ்ட் நிறுவனம்! அது சச்சின் ஆன்த்தம் (கீதம்) என அழைக்கப்பட்டது.

96.2008ஆம் ஆண்டு பத்மவிபூசன் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் விருது தரப்படவில்லை.

97.ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் உலக அளவில் டாப்50 கிரிக்கெட் வீரர் பட்டியல் ஒன்றை உருவாக்கினார். அதில் சச்சினுக்கே முதலிடம்.

98.சச்சினுக்கு புகைப்பழக்கமோ குடிப்பழக்கமோ கிடையாது. அதோடு சிகரட்,குடி மாதிரியான விளம்பரங்களிலும் நடிப்பதில்லை.

99.20 கோடிரூபாய் தருவதாக கூறிய ஒரு பீர் கம்பெனியின் ஆஃபரை வேண்டாம் என நிராகரித்தார் சச்சின். காரணம்.. என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.. அவர்களை தீயப்பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என்றார்.

100.ஆண்டுதோறும் 200 குழந்தைகளின் கல்விக்கு அப்னாலயா என்னும் அமைப்பின் மூலமாக உதவி வருகிறார் சச்சின்.



(நன்றி - புதியதலைமுறை வார இதழ்)

(நன்றி - கார்ட்டூன் - சதீஷ் ஆச்சார்யா. )

16 April 2012

ஓக்கே ஓக்கே!




இடை சுளுக்கிக்கொள்ளும் அளவுக்கு விலா நோக சிரித்துக் கொண்டே ஒரு படம் பார்த்து பல நாளாகிவிட்டது! படம் முடிந்து செல்லும் அழகழகான இளம்பெண்கள் கர்ப்பிணி பெண்கள் போல இடுப்பில் கை வைத்தபடி சிரித்துக்கொண்டே வெளியே செல்வதை பார்க்க முடிந்தது.

அண்மையில் பார்த்த ஓக்கே ஓக்கே (ஒருகல் ஒருகண்ணாடி) திரைப்படம் அப்படி ஒரு மஜாவான அனுபவத்தை நமக்கெல்லாம் தருகிறது. குதித்து குதித்து சீட்டு உடையும் அளவுக்கு கதற கதற சிரிக்க வைக்கிறார்கள் ராஜேஷ்+சந்தானம்+உதயநிதி அன் டீம்! டிக்கட்டோடு வயிற்றுவலிக்கு ஏதாவது மலையாள மாந்த்ரீக இடைவலி தைலமும் இளம்பெண்களுக்கு இலவசமாக கொடுக்கலாம் இயக்குனர் ராஜேஷ்!

ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களின் மூலம் தனக்கென்று ஒரு காமெடி முத்திரையை பச்சக் என்று பதித்தவர் ராஜேஷ். முந்தைய படங்களில் எப்படி கதைக்கென மெனக்கெடாமல் சிரிக்க வைத்தாரோ.. சேம் ஃபார்முலா.. இந்தப்படத்திலும் அதையே செய்திருக்கிறார்.

ஓக்கே ஓக்கே படத்தின் கதையும் ராஜேஷின் முந்தைய படங்களில் பார்த்த அதே லவ் டிராஜிடி காமெடிதான். ஒரு வெட்டிப்பையன் ஒரு ப்யூட்டிபுல் பொண்ணை காதலிக்கிறார். அந்த ப்யூட்டி புல் பொண்ணு அந்த பையனை காதலிக்க மறுக்கிறாள். அந்தக் காதல் கைகூட அப்பாவி நல்ல காமெடி நண்பன் உதவுகிறான். காதல் கைகூடியதா? என்பதை வெள்ளித்திரையில் காண்க. ஏற்கனவே இரண்டு முறை எடுத்துவிட்ட அதே கதையை மூன்றாவது முறையாக எடுத்து இந்த முறையும் ஜெயித்து ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.

படத்தின் நாயகன் என்று விளம்பரப்படுத்தப்படும் உதயநிதி ஸ்டாலினைப் பார்க்க பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளை உஷார் பண்ணிவிட துடிக்கும் வாலிபன் போல துருதுருவென இருக்கிறார். எந்தவித பில்டப்பும் இல்லாமல் நடிக்க முயற்சித்திருக்கிறார். முதல் படமென்பதால் சில இடங்களில் சொதப்பினாலும் போக போக சரியாகும் என எதிர்பார்க்கலாம். படத்தின் நாயகன் உண்மையில் சந்தானம்தான்!

சந்தானத்திற்கு இன்னும் ஆறு ஜென்மங்களுக்கு கடமை பட்டிருக்கிறார் ராஜேஷ். சந்தானம் மட்டும் இல்லையென்றால் இந்தப்படம் இந்த அளவுக்கு வந்திருக்குமா தெரியவில்லை. படம் முழுக்க சந்தான ராஜ்யம்தான். உள்ளத்தை அள்ளித்தா படத்தை எப்படி கவுண்டமணி இல்லாமல் கற்பனை செய்யமுடியாதோ அதுபோல சந்தானம் இல்லையென்றால் இந்தப்படம் வெடிக்காத பட்டாசு போல நமுத்து போயிருக்கும் !.

ஹன்சிகா மோதுவானியை பற்றி ஒரு வரியாவது சொல்லவில்லையென்றால் இந்த விமர்சனக்கட்டுரை முழுமையடையாது. ராஜேஷ் தன் படங்களில் முடிந்தவரைக்கும் கவர்ச்சியில்லாமல்தான் கதாநாயகிகளை காண்பிப்பது வழக்கம். இந்தப்படத்திலும் அதையே முயன்றது நன்றாகத் தெரிந்தாலும் அன்பார்சுனேட்லி பிதுங்கிக்கொண்டிருக்கிற ஹன்சிகா மோத்வானியின் கவர்ச்சி ஆங்காங்கே அப்பட்டமாக தெரிந்துவிடுகிறது. வாட் டூ டூ! படத்தில் ஹன்சிகாவைப்பார்த்து ‘’சின்னத்தம்பி குஷ்பூ போல இருக்கிறார்’’ என ஒரு வசனம் வருகிறது. எனக்கென்னவோ ஸ்லிம்மான ஷகிலாபோல என்று சொல்வதே சாலப்பொருந்தும் என்று தோன்றுகிறது. ஹன்சிகா வரும் காட்சியெல்லாம் வாலிப வயோதி அன்பர்களுக்கு வேட்டைதான்!

படத்தில் கதையில்லை என்று பரவலாக சொல்லப்பட்டாலும் நாயகனின் தாய் தந்தையர் குறித்த கிளைக்கதையும் காட்சிகளும் கவிதை! அதிலும் சரண்யாவின் நடிப்பு ரொம்ப பிடித்திருந்தது. எப்பேர்பட்ட சீரியஸ் காட்சியையும் காமெடியாக மாற்றிவிடுகிறார் இயக்குனர். அதுவே படத்தின் பலமாகவும் அமைந்துவிடுகிறது.

ஹாரிசு ஜெயராஜ் எப்போதும்போலவே அவர் பாட்டையே அவரே ரீமிக்ஸ் பண்ணி போட்டிருக்கிறார். காமெடி கலாட்டாவில் இசை குறித்தெல்லாம் யாரும் சட்டை செய்ததாக தெரியவில்லை. சொல்லப்போனால் காமெடி எக்ஸ்பிரஸில் பாடல்கள் தம்மடிக்க கிடைத்த கேப்பாகவே உணர்கிறேன். நன்றி ஹாரிஸ்!

எந்த ஒரு படத்திற்கும் திரைக்கதைதான் மிகப்பெரிய பலம் என்பதை இயக்குனர் உணர்ந்தேயிருப்பார் போல! திரைக்கதை வசனம் இரண்டிற்கும்தான் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். நிறையவே சின்னதும் பெரிதுமாக குறைகள் தெரிந்தாலும் படத்தின் எல்லா குறைகளையும் திரைக்கதையும் அதிரடி காமெடி வசனங்களும் நிறைவு செய்கின்றன.

திஸ் பிலிம் ஆஃப் தி சம்மர் ஆஃப் தி ப்ளாக் பஸ்டர் ஆஃப் தி பேமிலி ஆஃப் தி என்டர்டெயினர் ஆஃப் திஸ் ஓகே ஓகே.. அதாவது இந்த சம்மரில் குடும்பத்தோடு பார்த்து குதூகலிக்க ஏற்ற படமாக அமைந்திருக்கிறது இந்த ஓக்கே ஓக்கே!



((படத்தில் சந்தானத்திற்கு வில்லனாக ஒரே ஒருகாட்சியில் தோன்றி நடித்திருக்கும் எங்கள் அன்பு அண்ணன்.. சீறும் சிங்கம்.. பாயும் சிறுத்தை.. மகாஸ்டார் மாடசாமி அவர்களின் நடிப்பை பற்றி எழுதுவது குத்துவிளக்கின் மேல் குத்தவைச்சு உட்கார்ந்தது போலிருக்கும்.. அதாவது குன்றின் மேலிட்ட விளக்காக அமைந்துவிடும் என்பதால் அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்)

06 April 2012

ஆமை நடை!




புரிந்து கொண்டால் மட்டுமே அதன்மேல் அக்கறை காட்ட முடியும்
அக்கறையோடு இருந்தால் மட்டுமே அதற்காக உதவ முடியும்
உதவினால் மட்டுமே அதை காப்பாற்ற முடியும்
-டாக்டர்.ஜேன் குட்ஆல் (இயற்கை ஆர்வலர்)

வங்காள விரிகுடா கடல்பகுதியில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த்த கருணா என்கிற அந்த கடலாமைக்கு வயது 11. கடலாமைகளுக்கே உள்ள பொதுவான குணம் கருணாவிடமும் இருந்தது. மகப்பேறு காலத்தில் தாய்வீட்டுக்கு வரும் மகளைப்போல , கடலாமைகளும் அவை எந்த இடத்தில் பிறந்ததோ அதே இடத்திற்கு திரும்பிவந்து முட்டையிடும்.

பல நூறு ஆண்டுகளாக கடலாமைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடற்கரைகளில்தான் முட்டையிடுகின்றன. சென்னைக்கு அருகில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களே இந்த ஆமைகளுக்கு மிகப்பிடித்த இடமாக இருக்கிறது. அப்படித்தான் கருணாவும் சென்னையை நோக்கி பயணமானது.

மகிழ்ச்சியாக கடலில் நீந்தி சென்னைக்கடற்கரையை நெருங்கிக் கொண்டிருந்த கருணாவின் துடுப்புகள் எதிலோ சிக்கிக்கொண்டது. துடுப்புகளை அசைக்க இயலவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அது மீனவர்களின் படகில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. கையில் கத்தியுடன் ஒரு மீனவர் கருணாவை நோக்கி வருவதுதான் கருணாவிற்கு கடைசியாக தெரிந்தது. கருணாவின் நான்கு துடுப்புகளில் மூன்று வெட்டப்பட்டன. ஒற்றை துடுப்புடன் ரத்தம் சொட்ட கடலில் வீசப்பட்டது. துடுப்புகளில்லாமல் நீந்த முயன்று தோல்வியடைந்து மயங்கி கடலில் மிதந்தது கருணா.


அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து கரையொதுங்கிய கருணாவை ‘’ட்ரீ பவுண்டேசன்’’ அமைப்பினர் காப்பாற்றினர். கால்நடை மருத்துவர்களைக் கொண்டு அவசர சிகிச்சை அளித்தனர். வெட்டப்பட்ட துடுப்புகளில் வழிந்த ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு அந்த இடம் தைக்கப்பட்டது. இனி கருணாவிற்கு மீண்டும் துடுப்புகள் வளராது. இனி கடலில் சுதந்திரமாய் சுற்றமுடியாது.

சராசரியாக 60 ஆண்டுகள் வாழும் கடலாமைகள் இனத்தைச் சேர்ந்த கருணாவின் அடுத்த 50 ஆண்டுகள் ஒரு சின்ன தண்ணீர் தொட்டியில்தான். நடக்க முடியாது. நீந்த முடியாது. தண்ணீரில் போட்டால் மிதக்கலாம். யாராவது உணவுகள் தந்தால் சாப்பிடலாம்.
மீனவர்களையும் குற்றஞ்சொல்ல முடியாது. காஸ்ட்லியான தங்களுடைய வலைகளை அறுத்தெரிய முடியாமல் ஆமைகளின் துடுப்புகளை வெட்டியெறிந்துவிடுகின்றனர். உண்மையில் கடலாமைகளை மீனவர்களின் நண்பர்கள் என்று அழைக்கலாம். ஆனால் அது மீனவர்களுக்கு தெரியாது என்பதுதான் சோகம்.

பவழப்பாறைகள் நிறைந்தது நம்முடைய கடற்ப்பகுதிகள். அதில் வளரும் பாசி,புல் முதலான கடற்தாவரங்களை தின்று அவற்றை சுத்தம் செய்வதில் பெரும்பங்கு கடலாமைகளுடையது, அப்படி சுத்தம் செய்யப்படும் இடங்கள் மீன்கள் முட்டையிட ஏற்ற சூழலை உருவாக்குகிறது கடலாமைகளின் அழிவு கடலின் மற்ற வளங்களை பாதிக்கும். இந்த கடலாமைகளின் பாதுகாப்பு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்புடையது.

தினமும் இரவு நேரங்களில் ட்ரீ பவுன்டேஷன் அமைப்பினர் தங்களுடைய கடல் ஆமை பாதுகாவலர்களோடு கிளம்புகின்றனர். இதை ட்ர்ட்டிள் வாக் என்கின்றனர். இது நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரை தொடர்கிறது. இந்த காலங்களில்தான் ஆமைகள் நம் கடல்பகுதிகளுக்கு மகப்பேறுக்காக படையெடுக்கின்றன.

ஆமைகள் கடலோரங்களில் முட்டையிட ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்து குழிதோண்டி முட்டையிடுகின்றன. அடைகாப்பது கிடையாது. அதனால் தனித்துவிடப்படும் முட்டைகளை பறவைகள்,நாய்கள் சேதப்படுத்திவிடுவதுண்டு. சமயங்களில் குழந்தைகள் விளையாடக்கூட உபயோகிக்கின்றனர். இன்னும் சில கிராமங்களில் உணவுக்கும் கூட இந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி பகுதிகளில் ஆமையின் முட்டைகளும் அதன் ரத்தமும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறதாம்.

இரவில் நிலா மற்றும் நட்சத்திரத்தின் ஒளி கடலில் பிரதிபலிக்கும் , முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் ஒளி வரும் திசைநோக்கியே நகரும் தன்மை கொண்டவை. நிலவொளியை வைத்துதான் கடலுக்குள் செல்லும் குணம் கொண்டவை. கடற்கரைகளில் வைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்குகளின் ஒளியை நிலவொளி என எண்ணி சாலையை நோக்கி வரத்தொடங்கிவிடுகின்றன. இதில் வாகனங்களில் மோதியும் , அதிக வெப்பத்தாலும் இந்த ஆமைக்குஞ்சுகள் மடிகின்றன.

இத்தனையையும் தாண்டி உயிர் பிழைக்கும் ஆமை குஞ்சுகளில் கடலுக்கு செல்லும் 1000 ஆமைகளில் ஒன்றுதான் பிழைக்கும். மீதமுள்ள 999ம் கடலில் வாழும் பிற உயிரினங்களுக்கு உணவாகும் என்பது இயற்கையின் உணவு சங்கிலியில் ஒரு பகுதி.



இப்படி கடலுக்கு திரும்பிச்செல்லும் கடலாமைகளின் எண்ணிக்கையை அதிகமாக்க ‘’ட்ரீ பவுண்டேஷன் அமைப்பு’’ டர்ட்டிள் வாக்கின் போது கடலோரங்களில் ஆமைகள் முட்டை வைக்கும் இடத்திற்கு சென்று , முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து வேறு இடத்தில் தகுந்த வெப்பநிலையில் அடைகாக்கப்படுகின்றன. சரியான வெப்பநிலைகள் கூட மருத்துவர்களை கொண்டு கண்காணிக்கப்படுகிறது. 48முதல் 50 நாட்களுக்கு பின் இந்த முட்டைகளிலிருந்து வெளியேறும் ஆமைக்குஞ்சுகள் சில மணிநேரங்களில் மீண்டும் கடலுக்கே பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுகின்றன. இப்படி இதுவரை 50,000க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதவிர படகுகளில் அடிபட்டு , வலைகளில் சிக்கி வெட்டப்பட்டு கரையொதுங்கும் பெரிய ஆமைகளை பாதுகாப்பாக மீட்கப்படுகிறது. அவை தகுந்த சிகிச்சைக்குப் பின் மீண்டும் கடலிலேயே விடப்படுகிறது. அவற்றால் கடலில் மீண்டும் பழையபடி இயங்க முடிகிறதா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.

லயோலா கல்லுரி, வனத்துறை மற்றும் கடலோர காவல்படையினரின் உதவியோடு இந்த பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். இது தவிர கார்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பின் சுற்றுசுழல் பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இறந்த ஆமைகள் கடற்கரைகளில் தென்பட்டால் அவற்றை வனத்துறையின் அனுமதியோடு பெற்று அவற்றை ஆராய்ந்து எதனால் ஆமைகள் மடிகின்றன என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.

‘’சென்ற மாதம் கூட இரண்டு ஆமைகள் செயற்கைகோளுடன் தொடர்பு கொள்ள உதவும் கருவிகள் பொருத்தப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது, செயற்கை கோள் மூலம் அதனுடைய இடப்பெயர்ச்சி மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை குறித்து ஆராய இது உதவும். இது கடலாமைகள் பாதுகாப்பில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். அந்த தகவல்களின் அடிப்படையில் மீன்வளம் குறித்தும் ஆராய உள்ளோம். இப்படி செயவது இந்தியாவிலேயே இரண்டாவது முறை , இது இந்திய கடற்பகுதிகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு மேலும் உதவும்.


கடல் ஆமை பாதுகாப்பு மீனவ சமூகத்திலும் கடலின் சுற்றுசூழலிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. தற்போது தமிழக கடற்கரைகளில் மட்டுமே செய்யப்படும் இந்த பணிகள் இந்தியா முழுக்க செயல்படுத்த முனைவோம் , ஆமைகள் காயமடைந்து கரைகளில் ஒதுங்கும் போது அவற்றை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் கிடைப்பதில்லை. அது ஒன்றுதான் பிரச்சனை‘’ என்று கூறுகிறார் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சுப்ரஜா.

ட்ரீ ஃபவுண்டேஷன் நடத்தும் ‘’டர்ட்டிள் வாக்’’கில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியும். இரவு நேரத்தில் கடலோர பகுதிகளுக்கு சென்று எங்கெல்லாம் ஆமைகள் முட்டையிட்டு வைத்திருக்கின்றன என்பதை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். இரவு முழுக்க நீளும் இந்த வேலையில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். கல்ந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் கடலாமை பாதுகாப்பு குறித்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நீங்களும் கலந்துகொள்ள விரும்பினால் 9962428863 என்ற எண்ணையோ மேலும் விபரங்களுக்கு www.treefoundationindia.org இணையதளத்தையோ காணலாம்.