Pages

26 September 2012

திருவிளையாடல் - ஓர் அனுபவம்





எச்சகச்ச முறை திருவிளையாடல் படத்தை டிவியில் பார்த்திருக்கிறேன். எண்ணிக்கை தெரியவில்லை. ஒரே ஒருமுறை குட்டிப்பையனாக அறியாத வயசு புரியாத மனசோடு செல்வபுரம் சிவாலயா தியேட்டரில் பார்த்த நினைவு. புகையில் அமர்ந்திருக்கும் சிவாஜியை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. சோமெனி டைம்ஸ் டிவியில் பார்த்தும் சலிக்கவே சலிக்காத திரைப்படம் திருவிளையாடல்.

என்னதான் டிவியில் பார்த்தாலும் ஒரு திரைப்படத்தை திரையில் பார்க்கும்போது கிடைக்கிற பரவச நிலை நிச்சயமாக வேறெதிலும் கிடைக்காது. கர்ணன் படம் ஹிட்டடித்த ஜோரில் யாரோ புண்ணியவான் திருவிளையாடல் படத்தையும் கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து ரிலீஸ் செய்திருக்கிறார். உட்ரா வண்டிய என உட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு அரக்க பரக்க ஓடினோம்.

தியேட்டருக்கு போய்ச்சேரும்போதே மணி ஆறேமுக்கால் கால்மணிநேர படம் முடிந்துவிட்டிருந்தது. அந்த கால்மணிநேரத்தில் கைலாய மலையின் புகை மண்டிய ஓப்பனிங் சீனும், சிவபெருமான் சிவாஜிசாரின் ஓப்பனிங்கும் , நாரதர் ஞானப்பழம்கொண்டு வந்து சிவபெருமான் ஃபேமிலியில் கும்மி அடிப்பதும்.. அதனால் கடுப்பான குன்றேறி குமரன் பட்டையும் கொட்டையுமாக பழனிமலைமேல் ஏறிக்கொள்வதும்.. அவரை இறக்க அவ்வையார் போவதும் மிஸ்ஸாகிவிட்டது.

உள்ளே நுழைந்து சீட் நம்பர் பார்த்து அமரும் போதுதான்.. நாமறிந்த அவ்வையாரான கே.பி.சுந்தராம்பாள் குன்றின் மேல் கோவணத்தோடு நிற்கும் குமரனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். தியேட்டர் ஹவுஸ்ஃபுல் என்பது அந்த இருட்டிலும் தெரிந்தது.
பாட்ஷா படத்தில் ரஜினிசார் ‘’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’’ என்று சொன்னதும் ரசிகர்கள் விசிலடித்து சிலிர்த்து கைதட்டி மகிழ்வார்களே அதே போல கேபிசுந்தராம்பாள் ‘’பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா..’’ என பாட ரசிகர்கள் சிலிர்த்துக்கொண்டதை பார்க்க தமாஷாக இருந்தது. பல்லுப்போன தாத்தா பாட்டிகள் நிறைய பேர் பேரன் பேத்திகளோடு உற்சாகமாக கைத்தட்டி பாடலை தாளம்போட்டு ரசித்துக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க ஏகப்பட்ட சிவாஜி ரசிகர்கள். பக்தர்கள்.

அவ்வையார் முருகனை கூல் பண்ணமுடியாமல் கடுப்பாகி ‘’உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கோ உரிமையுண்டூ...’’ என்றெல்லாம் சொல்லி டிரைப்பண்ணி வேலைக்கு ஆகாமல் பாடிபாடி டயர்டாகி வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார். பார்வதி தேவியான சாவித்திரி பச்சை பெயின்டில் வந்து முருகனை சாந்தப்படுத்த உன் அப்பாவின் திருவிளையாடல்களை சொல்கிறேன் கேள் என்று ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணுகிறார்.

கட் பண்ணினால் மதுரை. தேவிகாவுக்கு ஒரு ஓப்பனிங் சாங்.. ‘’பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’’ . செம பாட்டு.. குட் லிரிக்ஸ்.. சூப்பரான கலர்ஸ். தேவிகா அவ்வளவு அழகு. என்னதான் சாமிப்படமாக இருந்தாலும் கமர்ஷியல் காரணங்களுக்காக ஒரு குளியல் குமால்டிங்கான சீனையும் சொருகியிருக்கிறார் இயக்குனர். ம்ம்.. டிவைன். (பல வருடங்களாக தொங்கிப்போயிருந்த பல பெரிசுகளின் துவண்ட நெஞ்சுகள் தேவிகாவை பார்த்ததும் குபுக்கென குமுறியிருக்கும் என்பது மட்டும் உறுதி!..)

பாட்டு முடிந்ததும் பாண்டியமன்னனான முத்துராமன் வருகிறார். கீழோர் மறப்பர் மேலோர் நினைப்பர் என்கிற பாட்டுக்கு என்ன அர்த்தம் சொல்லு என தேவிகாவிடம் சொல்லி.. அதற்கு ஒரு சூப்பர் விளக்கமும் கொடுக்கிறார். அப்படியே பேச்சுவாக்கில் போகிற போக்கில் உன் கூந்தலுக்கு இயற்கையில் மணமா செயற்கையில் மணமா என சந்தேகத்தை எழுப்பி.. அதுக்கு பரிசுகொடுக்கிறேன் என தண்டோரா போட.. படத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான நாகேஷ் என்ட்ரி!

ஸ்பான்டேனியஸ் என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. நிறைய இங்கிலீஸ் விமர்சனங்களில் படித்திருக்கிறேன், அதை எங்காவது உபயோக்கிக்க வேண்டும் என நினைத்ததுண்டு. நாகேஷ்தான் அந்த வார்த்தைக்கேற்ற நடிகர். அடேங்கப்பா என்ன ஒரு ஆக்டிங். மண்டபத்தில் பாட்டெழுதி கொடுக்கும் சிவபெருமானிடம் அவர் பண்ணுகிற சேட்டைகள்.. ஒரிஜினல் சிவபெருமானே ரசித்து சிரித்திருப்பார். அவ்வளவு ஸ்பான்டேனியஸ்!

ஸ்கிரீன் பிரசென்ஸில் சிவாஜியை அடித்துக்கொள்ள முடியாது.. அவரையே தூக்கி சாப்பிட்டு முழுங்கி ஏப்பம் விடுகிறார் நாகேஷ். என்ன மாதிரியான ஒரு கலைஞன்..

ஆற்றாமையையும் வறுமையையும் இயலாமையையும் ஏழ்மையையும் இன்னும் நிறைய மைகளையும் ஒருங்கே தன்னுடைய முகத்திலும் பாடிலேங்வேஜிலும் காட்டி அசத்துகிறார். சிம்ப்ளி சூப்பர்ப்! அவருடைய அந்த தருமி போர்ஷனுக்காகவே படத்தை பத்துமுறை பார்க்கலாம். நாகேஷுக்கு பிறகு அவருடைய திரைவிழுங்குகிற தன்மை வடிவேலுவுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

தருமி கதை முடிந்ததும், தாட்சாயினி கதை தொடங்குகிறது. தட்சனின் யாகத்தில் ஏதோ அவில்பாகம் (அப்படீனா என்ன யாராவது விளக்கலாம்) குடுக்கவில்லையென சிவபெருமான் காண்டாகி தாட்சாயிணியோடு சண்டையிட்டு போரிட்டு வாயிலிருந்து கற்பூரத்தை வரவைத்து தாட்சாயிணியை எரித்து சாம்பலாக்கி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இப்பாகம் முழுக்க சிவாஜிசாரின் செம பர்பாமென்ஸ்.. அதிலும் தாட்சாயணியை போ போ என விரட்டும்போது அரங்கம் அதிர்கிறது. விசில் பறக்கிறது. சிவாஜி ரசிகர்கள் தெயவ்மே என சிலிர்க்கிறார்கள்.

சிவமில்லையேல் சக்தியில்லை சக்தியில்லையேல்சிவமில்லை என்பதை உலகுக்கு உணர்த்த சூப்பரான டான்ஸ் ஒன்றை ஆடுகிறார் சிவன்ஜி! அவருக்கு நடனம் சரியாக வராது என்பது உலகறிந்த செய்தி என்பதால் எடிட்டரும் நடன இயக்குனரும் ஓவர் டைம் பார்த்து அந்த காட்சியை செதுக்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சின்ன சின்ன ஷாட்டுகள்.. ஒவ்வொரு நடன அசைவுக்கு ஒரு ஷாட்.. நடனம் தொங்கலாக இருக்குமிடங்களிலெல்லாம் கேமரா ஆடுகிறது.. சிகப்பு விளக்கு எரிகிறது.. எப்படியோ ஒப்பேற்றி அந்த நடனத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இடைவேளை.

(உச்சா போய்விட்டு வந்து பப்ஸ் வாயோடு தோழரிடம் சிவாஜிசாரை நக்கலடித்து சிரித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர் ஒருமாதிரியாக முறைத்துப் பார்த்துக்கொண்டேயிருந்தார். அடித்துவிடுவாரோ என்றுகூட தோன்றியது. கண்டுக்காமல் சிவாஜிக்கு தொப்பைய பாத்தீங்களா பாஸ்.. சாவித்திரிக்கு அதவிட பெரிய தொப்பை என நக்கல் பண்ணிக்கொண்டிருந்தோம்.. திடீரென அந்த மர்ம நபரின் செல்ஃபோன் ஒலித்தது.. ‘’இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..’’ தோழர் அரண்டுபோய்விட்டார். இந்த பாட்டை ரிங்டோனாக வைத்திருப்பவர் நிச்சயம் சிவாஜி வெறியராகத்தான் இருக்கவேண்டும்.. ஓடிடுவோம்.. என்றார். அவர் சொல்லிமுடிப்பதற்குள் நான் என் சீட்டில் இருந்தேன்)

அடுத்தது மீனவர் கதை. இதில் மீனப்பெண்ணாக பிறந்த பார்வதியை மணமுடிக்க எல்லா சேட்டைகளும் செய்கிறார் சிவபெருமான். வயசுப்பொண்ணை கையபுடிச்சு இழுக்கிறார். எல்லாமே ரஜினி ஸ்டைல். நடை,சிரிப்பு,சண்டைபோடும் ஸ்டைல்,ரொமான்ஸ் என எல்லாமே ரஜினிகாந்த் செய்துகிறாரே அச்சு அசல் அதே அதே!. (சந்திரமுகி கிளைமாக்ஸில் வருகிற வேட்டையபுரம் மகாராஜா செய்வதைப்போலவே செம வில்லத்தனம் காட்டுகிறார் சிவாஜி!) ரஜினியின் ஸ்டைலை சிவாஜிசார் நிறையவே பாதித்திருக்கிறார் என்பதை படத்தின் இந்த பாகத்தில் உணரலாம்.

பஸ்ட் ஆஃப் ஆக்சன் காமெடி சென்டிமென்ட் என்றால் செகன்ட் ஆஃப் மியூசிக்கல். கிட்டத்தட்ட ஆறு பாட்டு! எல்லாமே அற்புதம். பாட்டும் நானே பாவமும் நானே.. தொடங்கி கிளைமாக்ஸ் அவ்வையாரின் ஒன்றானவன் இரண்டானவன் பாடல் வரைக்கும்.. பாடல்களுக்கு நடுவில்தான் காட்சிகள்! முதல் பாதியில் நாகேஷ் என்றால் இரண்டாம் பாதியில் பாலைய்யாவும் டிஆர் மகாலிங்கமும்.. ‘’இஷைத்தமிழ் நீ ஷெய்த அருஞ்ஷாதனை’’ என அவர் பாடத்தொடங்க.. ஏஆர் ரஹ்மான் லைவ் இன் கான்செர்ட்டில் தில்சேரே.. என பாடும் போது கரகோஷங்கள் எழுமே அதைவிட அதிகமான கரவொலி. ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என ரசிகர்கள் துள்ளுகிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் பழைய ஸ்டைல் ஆக்டிங்கால் டிஆர் மகாலிங்கம் சமகால டிஆர் போல சிரிக்க வைத்துவிடுகிறார் (தட்ஸ் ஓக்கே).

ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை.. நான் அசைந்தால் அசையும் அகிலமெலாமே என பாடி புரியவைக்கிறார் சிவாஜி. பிறகு பாணபத்திரருக்கு காட்சி தந்து ஒருவழியாக ஃபிளாஷ்பேக் முடிந்துவிடுகிறது. மூன்று கதைகளை கேட்டபிறகு நான்காவது கதையை சொல்ல தொடங்கிவிடுவாரோ என்கிற பயத்திலோ என்னவோ முருகன் கூல் டவுன் ஆகிறார். சிவபெருமான் தோன்றி நீ அமர்ந்த இந்த மலை பழம்நீ என்று விளங்கட்டும் என அருள்பாலிக்கிறார். பழனிமலை எப்படி உருவானது என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் என்று புரிகிறது.

விநாயகர்,சிவபெருமான்,பார்வதி,முருகன் என குடும்பத்தோடு குன்றில் மேல் நிற்க.. அந்த வழியாக வரும் அவ்வையாரை கூப்பிட்டு சிவபெருமான் ஒன்று இரண்டு மூன்று என என்னை வாழ்த்தி பாடு என ஜாலியாக பாடவைத்து மகிழ்கிறார். படம் முடிகிறது!
தமிழ்சினிமாவில் சிவபெருமானாக ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மனோகர் தொடங்கி ஏஎம் ராஜன்,விகே ராமசாமி, கேப்டன் விஜயகாந்த்,ரஜினிகாந்த்,கமலஹாசன் வரைக்கும் பலரும் நடித்த கேரக்டர்தான் என்றாலும்.. மேச்சோவான நடிகராக போற்றப்படும் சிவாஜி அப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது சிவபெருமானுக்கே ஒரு கம்பீரமும் உக்கிரமும் வந்துவிடுகிறது. வெர்சடைலான நடிப்பில் அசத்தும் சிவாஜிசாருக்கு நவரச நடிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது இந்தப்படத்தில்.

தருமியில் காமெடி, தாட்சாயிணியிடம் ரஜினிஸ்டைல் ‘’பொம்பளை பொம்பளையா இருக்கணும்’’ ஆண்மைத்திமிர், நக்கீரரிடம் கோபம், மீனவ பெண்ணிடம் ரொமான்ஸ்,ருத்ர தாண்டவ டான்ஸ், பார்த்தா பசுமரம் என குத்துப்பாட்டுக்கு லோக்கல் டான்ஸ், திமிங்கலத்தோடு வீரம் என கலவையான நடிப்பு.. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். பாட்டும் நானே பாடலிலும் அதற்கு முந்தையா பிந்தைய காட்சிகளிலும் சிவாஜிசாரின் நடிப்பை பாராட்ட எனக்கு வயது பத்தாது!

படத்தின் வசனகர்த்தா மாபெரும் தமிழ் இலக்கிய பேராசிரியாக இருக்கவேண்டும். எல்லாமே கிளாசிக். இன்றைக்கும் தமிழகத்தின் எங்காவது மூலையில் யார்வாயிலாவது இப்படத்தின் வசனங்கள் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சிவபெருமானுக்கான டயலாக்குகள் எல்லாமே டாப்டக்கர்.

அன்றைக்கு இருந்த தொழில்நுட்பங்களையும் கிராபிக்ஸ் உத்திகளையும் பயன்படுத்தி எடுத்திருந்தாலும் இறுதியில் சிவாஜி,நாகேஷ்,சாவித்திரி,பாலையா.டிஆர் மகாலிங்கம் மாதிரியான மாபெரும் நடிகர்களின் நடிப்புக்கு முன்னால் சுமாரான கிராபிக்ஸோ, வரைந்து வைத்திருக்கும் அரங்க அமைப்புகளோ ஒரு குறையாகவே தெரியவில்லை. கேவி மகாதேவனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஏற்கனவே சொன்னதுபோல அவருடைய இசைதான் இரண்டாம் பாதி முழுக்க படத்தை காப்பாற்றுகிறது.

என்னதான் பக்திப்படமாகவே இருந்தாலும், காமெடி,சென்டிமென்ட்,ஆக்சன்,ரொமான்ஸ்,கவர்ச்சி என எல்லாமே கலந்த கலவையாக ஒரு நல்ல மசாலா படம் பார்த்த திருப்தியை தருகிறது திருவிளையாடல். டிவியில் பார்க்கும்போது கிடைக்காத ஒரு உற்சாகமும் மனநிறைவும் தியேட்டரில் பார்க்கும் போது தொற்றிக்கொள்கிறது. நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ சிவபெருமான் மேல் நம்பிக்கையிருக்கோ இல்லையோ, சிவாஜி ரசிகரோ இல்லையோ.. நிச்சயம் இப்படம் உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டும் நிச்சயம். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் தியேட்டரில் பாருங்க!



20 September 2012

பர்ஃபீ!




காதுகேட்காத வாய்பேசமுடியாத ஹீரோவுக்கும் மனவளர்ச்சி குன்றிய நாயகிக்கும் காதல்வந்துவிடுகிறது. இப்படி ஒரு ஒன்லைன் கிடைத்தால் பேனா மையில் கிளிசரினை கலந்து கதற கதற கதை எழுதுவதுதான் இந்திய சினிமா மரபு. அதிலும் குறிப்பாக நாயகனுக்கும் நாயகிக்கும் ஏதாவது உடல்குறைபாடு இருந்துவிட்டால் அதை வைத்தே திரைக்கதை பண்ணி இரண்டரை மணிநேரம் பார்ப்பவர்களின் கல்நெஞ்சத்தை கரைத்துவிடுவார்கள். ஆனால் ‘பர்ஃபீ’ அப்படியில்லை. அன்பும் காதலும் நிறைந்த ஜாலியான ரொமான்டிக் பொழுதுபோக்கு பீ பாஸிட்டிவ் ஃபீல் குட் திரைப்படம்.

அந்தகாலத்து மர்ஃபி ரேடியோவில் வருகிற குழந்தையை பார்த்து மர்ஃபி என்றே நாயகனுக்கு பெயர் சூட்டுகிறார் அப்பா. என்னதான் ரேடியோவின் பெயரை வைத்திருந்தாலும் ஹீரோவால் பேசவும் கேட்கவும் முடியாது! பேசமுடியாத வாயினால் மர்ஃபி என்பதை ‘’பர்ஃபி’’ என்கிறான். அதுவே படத்தின் தலைப்பாகவும் அவனுடைய நிரந்தர பெயருமாக மாறிவிடுகிறது. இந்த பர்ஃபியின் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் நீளுகிற கதைதான் திரைப்படம்.

பர்ஃபியின் கேரக்டருக்காக அதிகம் மெனக்கெடாமல் அப்படியே லபக் என சார்லி சாப்ளினின் டிராம்பை எடுத்துகொண்டிருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க சார்லிசாப்ளின் செய்கிற எல்லா சேஷ்டைகளையும் செய்கிறார் பர்ஃபி.

சார்லிசாப்ளின் கேரக்டரை எடுத்துக்கொண்டதற்கிணங்க படத்தின் பெரும்பாலான காட்சிகளையும் சார்லிசாப்ளினின் அட்வெஞ்சர்,சிட்டிலைட்ஸ் மாதிரியான படங்களிலிருந்தே சுட்டு எடுத்திருக்கத்தேவையில்லை. படத்தின் இன்னொரு காட்சியில் கோஷிஷ் என்கிற பழைய இந்தி படத்திலிருந்து ஒரு காட்சியை உருவியிருக்கிறார்.

பிரெஞ்சு திரைப்படமான அமேலி படத்தின் இசை குறிப்புகள் படம் நெடுக.. படத்தின் கதை சொல்லும் பாணி ரஷமோனிலிருந்து எடுத்திருக்கிறார். (நான்கு பேர் ஒரு இடத்தில் சந்தித்துக்கொண்டு ஒவ்வொருவரும் பொதுவான ஒரு விஷயம் குறித்து தங்களுடைய பார்வையிலிருந்து கதை சொல்லுகிறார்கள்.). நவீன சார்லி சாப்ளினான மிஸ்டர் பீனிலிருந்தும் சில காட்சிகள் சுடப்பட்டிருக்கின்றன. ப்ரியங்கா சோப்ரா, ரன்பீர் காட்சிகள் பலவும் நம்முடைய மூன்றாம்பிறையை நினைவூட்டுகின்றன. படம் பார்க்கும்போது டாம் ஹேங்க்ஸ் நடித்த ஃபாரஸ்ட் கம்பின் சாயலோ என்னவோ உணரமுடிந்தது.

அனுராக் பாசு நம்மூர் மிஸ்கின் போல ஒரே படத்தில் பலபட டிரிபூட் கொடுக்கிற இயக்குனர் போல! மிஷ்கின் சுட்ட கிகிஜிரோவிலிருந்து கூட ஒரு முழு காட்சி அச்சு அசலாக சுடப்பட்டிருக்கிறது.

நிறைய படங்களிலிருந்து சுடப்பட்ட இந்த சுத்தமான படத்தை இந்தியா முழுக்க விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். மக்களிடம் வரவேற்பு சுமார்தான். எனக்கும் கூட இந்தப்படம் மிகவும் பிடித்தேயிருந்தது.

காரணம் ரன்பீர் மற்றும் ப்ரியங்கா சோப்ராவின் அசலான நடிப்பு! ராக்ஸ்டாரிலேயே மிகச்சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்த ரன்பீர் கபூர் இப்படத்திலும் தன்னுடைய முழு உழைப்பையும் கொட்டி நடித்திருக்கிறார். வசனமேயில்லாமல் முகபாவனைகளை கொண்டே ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்க்க வைக்கிறார். இன்னொருபக்கம் ப்ரியங்கா சோப்ரா அமேலி பட ஹீரோயின் போலவே உடை சிகை அலங்காரம் செய்யப்பட்டிருந்தாலும் மனவளர்ச்சி குன்றிய பெண்ணாகவே மாறி நம்மை ஆச்சர்ப்படுத்துகிறார்.

இலியானாவின் இடையை மட்டுமே நடிக்க வைத்துக்கொண்டிருந்த திராவிட சினிமா இயக்குனர்களிலிருந்து அவரை காப்பாற்றி ஒரளவு சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் அனுராக் பாசு. படத்தின் கேமராமேனுடைய உழைப்பு சொல்லி முடியாது. கன்னாபின்னா.. பல காட்சிகள் எப்படி படமாக்க பட்டிருக்கும் என்பதையே யூகிக்க முடியவில்லை.

மற்றபடி இப்படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்ட ஒரு ஃபீல் குட் திரைப்படம்தான். நிறைய இடங்களிலிருந்து வெட்டி ஓட்டின சட்டையாக இருந்தாலும் அழகான ரசிக்க கூடிய சட்டையே. நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்தான். காப்பிபேஸ்ட் சமாச்சாரங்களை குறைத்திருந்தால் ஆஸ்கருக்கே அனுப்பியிருக்கலாம். இனி அனுப்பினால் காரிதுப்பி திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

கடந்த சில வருடங்களாக தமிழ்சினிமாவில் ஒரு ட்ரென்ட் உருவாகிவருகிறது. டிரிபூட் பண்ணியே பேர்வாங்கும் காப்பிபேஸ்ட் இயக்குனர்கள்தான் தமிழ்சினிமாவின் எதிர்காலமாக மாறிவருகின்றனர். அவர்களைத்தான் தயாரிப்பாளர்களும் கொண்டாடுகின்றனர். கோடிகளில் சம்பளமும் வாங்குகிறார்கள். இந்தி சினிமாவில் காப்பிபேஸ்டுகளுக்கு பெரிய வரவேற்பு கிடையாது. ஆனால் பர்ஃபி படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இந்தியிலும் கூட அப்படி ஒரு ட்ரென்டினை உருவாக்கிவிடுமோ என்கிற அச்சத்தினை உண்டுபண்ணுகிறது!

****

காப்பிபேஸ்ட் குறித்த குறிப்புகளுக்கான உதவி - http://tanqeed.com/

08 September 2012

புலி வாலை பிடித்தது யார்?





புலிகளுக்கான ரிசர்வ் காடுகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இது பல்வேறு தரப்புகளில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது

புலிகள் வாழும் காடுகளில் இனி சுற்றுலா கிடையாது’ என அதிரடியாக அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். கூடவே புலிகள் சரணாலயங்களிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் (TIGHER RESERVES) சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டிடங்கள் போன்றவற்றை நீக்கவும் உத்தரவிட்டது.


இந்த உத்தரவு, புலிகள் சரணாலயங்களுக்கு அருகில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிக்கும் என்றும், நம் நாட்டின் இயற்கை வளங்களை சாதாரணப் பொதுமக்கள் பார்க்க முடியாத நிலையை உருவாக்கி விடும் என்றும் எதிர்ப்புக்குரல்கள் கிளம்பின. புலிகள் சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்களுடன் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாநில அரசுகள் தொடர்ந்து இந்த உத்தரவை நீக்கக் கோரியதையடுத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியோ,‘முன்பு 13 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை இப்போது 1,200 ஆக குறைந்துள்ளது. வனப்பகுதியில் நடக்கும் வர்த்தக நடவடிக்கைகள் பற்றிதான் கவலைப்படுகிறீர்கள்? புலிகளைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பி, தடையை நீட்டித்துள்ளார்.


தமிழ்நாட்டில் தற்போதும் மூன்று புலிகள் சரணாலயங்கள் உள்ளன. முதுமலை, களக்காடு முண்டந்துறை மற்றும் ஆனைமலை என இந்தப் புலிகள் சரணாலயங்களையும் சுற்றி எண்ணற்ற சுற்றுலா தலங்களும், சிறு நகரங்களும் கடந்த 50 ஆண்டுகளில் உருவாகியுள்ளன. சுற்றுலா மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காடுகளை அழித்து பல்வேறு ரிசார்ட்களும், காடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து சுற்றுகிற தனியார் சுற்றுலா திட்டங்களும் கூட அதிகமாகியிருக்கின்றன.


இதனால் காடுகளின் இயற்கைச் சூழல் வெகுவாகப் பாதித்திருப்பதுடன், இது புலிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருப்பதாகவும் அரசு கருதுகிறது. அதற்கான காரணங்களும் உண்டு.


புலிகளைக் காப்பாற்றினால் காடுகளைக் காப்பாற்றலாம் என்கிற கருத்து பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்படுகிற ஒன்று. புலிகளைக் காப்பாற்றினால் எப்படிக் காடுகளைக் காப்பாற்ற முடியும்? நம்முடைய காடுகளிலுள்ள விலங்குகளில் பலம் வாய்ந்ததுடன் சூழலியல் முக்கோணத்தில் உச்சியில் இருக்கிற விலங்கு என்றால் அது புலியும் சிங்கமும்தான்! தமிழகக் காடுகளில் சிங்கம் கிடையாது என்பதால் புலிகள்தான் டாப்.

புலிகள் தனித்து வாழும் தன்மை கொண்டவை. அது தனக்கென ஓர் ஏரியாவை (HOME RANGE) காட்டில் ஒதுக்கிக்கொண்டு, வேட்டையாடி வாழும். இந்த ஹோம் ரேஞ்சில் அதிகபட்சம் மூன்று புலிகளே வசிக்கும். அதுகூட நட்பு அடிப்படையில்தானாம்! ஒருவேளை பெண் புலி ஒன்று இரண்டு குட்டிகள் போடுகிறதென்று வைத்துக்கொள்வோம். இரண்டு ஆண்டுகளில் பெண் புலி தன் குட்டிகளை விரட்டி விடும். தனித்து விடப்படும் இரண்டு புலிகளும் தங்களுக்கான ஹோம் ரேஞ்சை தேர்ந்தெடுக்க காடுகளில் சுற்றித் திரியும்.


புதிய இடத்தைக் கண்டறிந்து அங்கே ஏற்கெனவே வாழும் புலிகளை தாஜா செய்தோ, சண்டையிட்டோ இடத்தைப் பிடித்து வாழத் தொடங்கும் (கஷ்டமான ஜீவிதம்தான்). இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் ஒரு புலி தன்னுடைய ஹோம் ரேஞ்சில் உடல்நலத்தோடு, நல்ல உணவு பலத்தோடு ஓர் ஆண்டு வாழ கிட்டத்தட்ட 500 மான்கள் அல்லது அதற்கு இணையான இரை மிருகங்கள் இருக்க வேண்டியது அவசியம். 500 மான்கள் வாழவேண்டுமென்றால் அந்தக் காட்டில் அத்தனை மான்களுக்கும் தேவையான உணவு இருக்க வேண்டும். நல்ல செழிப்பான தாவரங்கள் இருக்கிற காடுகளில்தான் இந்த நிலைமை சாத்தியம். எந்தெந்தக் காடுகளில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அந்தக் காடுகள் எல்லாம் நல்ல அடர்த்தியாக, செழுமையாக இருக்கிறதென்று பொருள்.


ஆனால், கடந்த நூறாண்டுகளில் நாற்பதாயிரமாக இருந்த நம் புலிகளின் எண்ணிக்கை, அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி வெறும் 1,706 ஆக குறைந்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை குறைய பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. காடுகளின் பரப்பளவு குறைந்தது, காடுகளில் மனிதர்கள் நடமாட்டம், மருத்துவத்திற்குப் பயன்படும் என்கிற மூடநம்பிக்கையால் தொடர்ந்து வேட்டையாடப்படுவது, புலிகளின் வாழிடங்களில் போதிய உணவு, நீர் இல்லாமை என ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால்தான் தற்போது உச்சநீதிமன்றம் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது, புலிகள் வாழும் காட்டினுள் மனித நடமாட்டத்தை வெகுவாகக் குறைப்பதன் மூலம் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது. இதுதான் தற்போதையத் திட்டம்.


ஆனால் வடமாநிலங்களிலும், தமிழகத்திலும் இதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் புலிகள் சரணாலயக் காடுகளைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும், வால்பாறை, கூடலூர் மாதிரியான சிறுநகரங்களிலும் வாழ்கிற வணிகர்கள், தொழில்முனைவோர், தொழிலாளர்கள் எனப் பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


அண்மையில் கட்சிப் பாகுபாடின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதோடு ஒரு நாள் முழு அடைப்பு நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். அதேபோல வால்பாறையில் ஓட்டுநர்கள் சங்கமும் ஒரு போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது.


இந்தப் போராட்டம் குறித்து இதில் பங்கேற்ற கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. திராவிடமணியிடம் பேசினோம். "2006 வன உரிமைச் சட்டத்தின்படி இந்த உத்தரவு தவறானது. சுற்றுலா நடவடிக்கைகளை நிறுத்துவதாக இருந்தாலும், காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் எந்தவித நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அங்கு வாழும் மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்த பின்பே எந்த முடிவையும் எடுத்திருக்க வேண்டும். இந்த முடிவினால் ஏழை மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுகிற சூழல் உருவாகியுள்ளது. கூடலூர் மசினகுடி பகுதி மக்களுக்குச் சுற்றுலா ஒன்றுதான் அடிப்படையான வாழ்வாதாரமாக உள்ளது. இங்கே பலரும் வாகன ஓட்டுநர்களாகவும், கைடுகளாகவும், சிறியதும் பெரியதுமாக ஹோட்டல்கள் நடத்துபவர்களாகவும், அங்கே வேலை பார்க்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். சுற்றுலா நிறுத்தப்பட்டால் இவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார்.


கூடலூர் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் என்ற பெயரில் கூடலூர் மக்களை ஒன்றுதிரட்டி, இந்த உத்தரவுக்கு எதிராகப் போராடிவரும் வாசு என்பவர் மேலும் சில பிரச்சினைகளை முன்வைத்தார். "இந்த மக்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது, ஆடு மாடுகள் மேய்ப்பதுதான் பிரதானம். அதைவிட்டால் சுற்றுலா. இத்தனை ஆண்டுகளும் இதே புலிகளோடும், யானைகளோடும்தான் அவர்கள் வசிக்கிறார்கள். ஆனால், யாரும் புலிகளை வேட்டையாடுகிறவர்களாகவோ, யானைகளை வெடிவைத்துக் கொல்கிறவர்களாகவோ இருந்ததில்லை. காடுகளின் பாதுகாப்பில் அரசை விடவும் இந்த மக்களுக்கு அதிக அக்கறை உண்டு. வால்பாறையில் ஒருலட்சம் பேர், கூடலூரில் மூன்று லட்சம் பேர் என ஏகப்பட்ட ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை அரசின் ஒரே ஓர் உத்தரவினால் கேள்விக்குறியாகியுள்ளது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும், அதற்காகவே போராடுகிறோம்" என்று குமுறினார்.


வனவிலங்குகள் ஆராச்சியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகமது அலி, அரசின் மீது குற்றஞ்சாட்டுகிறார். "அரசின் இந்த நடவடிக்கை நம்முடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இன்று ஓரளவுக்காவது சுற்றுச்சூழல் குறித்து நம் மக்களுக்கு அக்கறை வருகிறதென்றால் அதற்குக் காரணம், இந்தக் காட்டுப்பகுதி சுற்றுலாக்கள்தான். அதையும் தடுத்து நிறுத்திவிட்டால், நம் நாட்டின் ஏழை நடுத்தர வர்க்கக்குழந்தைகள் காடுகளை டி.வி.யில் மட்டும்தான் பார்க்க வேண்டியிருக்கும்.


முதலில் நம் ஊரில் வனங்களை நிர்வகிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. போதிய வனத்துறை அதிகாரிகள் கிடையாது. பாதுகாப்புக் குளறுபடிகள். வனத்துறை அதிகாரிகளுக்கும், காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும் நல்ல நட்பு கிடையாது. சொல்லப் போனால் அந்த மக்களை மிக மிகக் கேவலமாக நடத்துவதுதான் இங்கே நடக்கிறது. நமக்குப் புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்கணும். புலிகளின் எண்ணிக்கையை எப்படிப் பெருக்க இயலும்? நம்மிடம் இருப்பதே ஒரு சதுர அடி நிலம்தான் என்றால் அதில் ஓர் ஆள்தானே நிற்க இயலும். இரண்டு பேரை நிற்க வைத்தால் ஆபத்துதான். அதுதான் புலிகள் விஷயத்திலும். நம்மிடம் இருக்கிற காடுகளின் அளவுக்கு ஏற்ற எண்ணிக்கையில்தான் புலிகள் இருக்க வேண்டும். முதலில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் வழியைப் பார்க்க வேண்டும். பெரிய முதலாளிகள் கையில் மாட்டிக்கொண்டு ரிசார்ட்களாகவும், கெஸ்ட் ஹவுஸ்களாகவும், ஆசிரமங்களாகவும் மாறியிருக்கிற வனத்துறை நிலங்களை அரசு கையகப்படுத்தி காடுகளின் பரபரப்பளவை அதிகரிக்கலாம்" என்று காரசாரமாகக் கூறினார்.


"இப்பிரச்சினையில் மூன்று விஷயங்கள் பிரதானமாக உள்ளன. ஒன்று, புலிகள் பாதுகாப்பு. இரண்டாவது, பழங்குடியின மக்களின் வாழ்க்கை. மூன்றாவது, சாதாரண மக்களின் சுற்றுலா உரிமை.இவை மூன்றையும் காக்கும் வகையில்தான் அரசின் உத்தரவு அமைந்திருக்கவேண்டும். ஆனால், அரசோ புலிகளின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த உத்தரவை அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டுகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. அதையும் இப்பிரச்சினையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு சுற்றுலாநடவடிக்கைகள் தடைசெய்யப் பட்டால் தீவிரவாதிகள், வேட்டைக் காரர்களுக்கு நம் காடுகள் நல்ல பாதுகாப்பான புகலிடமாக அமைந்துவிடுகிற ஆபத்துக்களும் உண்டு" என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் வனத்துறை அலுவலர் ஒருவர்.


கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் ஓசை காளிதாசனோ, "உச்சநீதிமன்ற உத்தரவால் பெரிய கேடில்லை. இந்த உத்தரவு நிச்சயம் நம் சுற்றுச்சூழலுக்கு நல்லதுதான் என்றாலும் சில குறைகளோடு இருக்கிறது. இந்த உத்தரவை எதிர்க்கும் பலரும் காடுகளோடு பெரிய தொடர்புகள் இல்லாத வெளியாட்கள்தான்" என்கிறார். மேலும் அவர் பேசுகையில்,


"கூடலூர், வால்பாறை பகுதிகளில்சுற்றுலாத்துறை மூலமாகக் கிடைக்கும் வருவாயை விட தேயிலைத் தோட்டங்கள்தான் ஏழைகளுக்கான வருமானம் தருமிடமாக இருக்கிறது. இந்தப் பகுதிகளில் காலங்காலமாக வசிக்கிற பழங்குடியின மக்கள், யாரோ சிலருடைய ரிசார்ட்களில் கூலிக்கு வேலை பார்க்கிறவர்களாகத்தானே இப்போதும் இருக்கிறார்கள். எந்தப் பழங்குடியினத்தவர் ரிசார்ட், ஹோட்டல் வைத்திருக்கிறார்?. ஒருவரையாவது உங்களால் காட்ட இயலுமா? அரசு அந்த ஏழை பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதோடு காடுகளைப் பாதுகாப்பது குறித்த பிரச்சார இயக்கத்தைத் தொடங்க வேண்டும்.


இன்று குடித்துவிட்டு கூத்தடிக்கும் இடங்களாக நம் காடுகள் மாறிவிட்டன. இன்று நம் காடுகளின், அருவிகளின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் உடைந்த பீர் பாட்டில்களையும், வீணான பிளாஸ்டிக் குப்பைகளையும் காணலாம். இதுமாதிரியான விஷயங்கள் முதலில் தடுத்து நிறுத்தப்படவேண்டும். நகரத்திலிருந்து புறப்பட்டுப் போய் காடுகளுக்குள் கேம்ப் ஃபயர் பண்ணுகிறேன், பட்டாசு வெடித்து பர்த்டே கொண்டாடுகிறேன் என அலம்பல் பண்ணுகிறவர்களைத்தானே இந்த அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்த கேம்ப் ஃபயர் மற்றும் குடிகாரக் கும்பல்களுக்கு இடம் கொடுப்பது யார்? காஸ்ட்லி ரிசார்ட்டுகள்தானே.


கேரளாவில் பரம்பிக்குளம் மாதிரியான புலிகள் சரணாலயப்பகுதிகளில் இருப்பதுபோல ஈகோ டூரிசம் (ECO TOURISM) மாதிரியான விஷயங்களை இங்கேயும் கொண்டுவரலாம். இந்த ஈகோ டூரிசத்தினால் அரசுக்கு கிடைக்கும் வருவாயானது உள்ளூர் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கே பயன்படுத்தப்படும். அதோடு தனியார்களால் கட்டுக்கடங்காமல் போயிருக்கிற காடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம். மேலும் வாகனப் போக்குவரத்தினை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாகச் சுற்றுலாவுக்குத் தடைவிதிக்காமல், ஈகோ டூரிசம் மாதிரியான விஷயங்களை அரசு ஊக்குவிப்பதே, இப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கமுடியும்" என்கிறார்.


புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என முனைப்புக் காட்டுகிற அரசு, அங்கே வாழ்கிற மக்களின் நலன் குறித்தும் அக்கறை காட்டவேண்டும் அதோடு அவர்களுடைய வாழ்வாதாரங்களை பாதிக்காத வண்ணம் சுற்றுசூழலையும் பாதுக்காக்க வேண்டும் அதுவே சரியான தீர்வாக இருக்கமுடியுமே தவிர நீதிமன்ற தீர்ப்பு நடவடிக்கைகள் கோமாளித்தனமாகவே முடியும் என்பது நிச்சயம்.

நன்றி - புதியதலைமுறை

01 September 2012

முகமூடி - சோடாமூடி







மிஸ்கின் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த மகத்தான இயக்குன ஆளுமை. அவருடைய படங்கள் இருபது வருடங்கள் கழித்து பள்ளிகளின் பாடத்திட்டங்களில் சேர்க்கும் அளவுக்கு சிறப்பானவை. இருபது வருடங்கள் கழித்து உலகமே கொண்டாடுகிற அளவுக்கு மிக சிறந்த படங்களை இயக்கி மிரட்டக்கூடியவர். அன்னார் படங்களை தென் மற்றும் வடை கொரியாவில் திருட்டு டிவிடியில் பார்த்து சுட்டு சுட்டு படமெடுக்கிறார்களாம்.

நாமெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பே அதாவது சமகாலத்தில் வாழ்ந்து தொலைப்பதால் அவருடைய படங்களை இப்போதே பார்க்க வேண்டிய துர்பாக்கியநிலைக்கு ஆளாகியிருக்கிறோம். அவருடைய சமீபத்திய படமான முகமூடியைக்கூட அந்த வரிசையில் சேர்க்கலாம்.

இந்தப்படம் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்று விளம்பரங்களில் சொல்லிவிட்டதால் ஒரு சூப்பர் ஹீரோ சூப்பரான சூப்பர் ஹீரோ ஆகிறான். முதல் பாதியில் பேன்ட்டுக்கு மேலே ஜட்டியும் இரண்டாவது பாதியில் அதுவும் இல்லாமலும் வருகிறான். அதாவது முகமூடியில்லாமல் குங்பூ சண்டைபோட்டு டாஸ்மாக்கில் சரக்கடித்து பாட்டுப்பாடி தண்டச்சோறு தின்னும் சூப்பர் ஹீரோ! ஊருக்குள் வேலைவெட்டியில்லாமல் சூப்பராக சுற்றுகிறார். அப்படிப்பட்ட சூப்பரான சூப்பர் ஹீரோவான சூப்பர் ஹீரோ முகமூடி போட்டுக்கொண்டு சூப்பர் ஹீரோவாகி சூப்பராக ஊருக்கு நல்லது செய்கிறார். இதுதான் படத்தின் கதை. புரியவில்லையென்றால் மிஷ்கினுக்கே போன் போட்டு கேட்டுக்கொள்ளவும்.

இதற்கு நடுவில் அவன் காதலிக்கிறான். குங்பூ மாஸ்டரிடம் கேட்டு ஃப்ளாஸ்பேக்கில் நடந்ததை தெரிந்துகொள்கிறான். நல்ல நல்ல ஆணிகளை பிடுங்குவதற்காக சுத்தியல் வைத்திருக்கும் மலையாளத்துக்கார வில்லனை பழிவாங்குகிறான். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வாமல் காத்து அதர்மத்தின் கொறவளியை கடித்து துப்புகிறான்.

இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் வருகிற அந்த அற்புதமான தருணம் படத்தினை சர்வோதயா தேச லெவலுக்கு நம்மை இட்டு செல்லுகிறது. ஹாலிவுட்டே காணாத காட்சி அது. சூப்பர் ஹீரோ என்னதான் சூப்பரான ஹீரோவாக இருந்தாலும் அவருக்கும் சுச்சா,கக்கா மாதிரியான இயற்கை உபாதைகள் வருவது இயல்புதானே. இருட்டுநேரத்தில் ஹீரோயின் எதற்காகவோ ஒரு காருக்கு பின்னால் மறைந்து அமர்ந்திருக்க எங்கிருந்தோ ஓடிவரும் சூப்பர் ஹீரோவுக்கு சுச்சா வர காருக்கு அருகில் போய் பேண்டை அவுக்கிறார். என்னாச்சி என ஒளிந்திருந்த ஹீரோயின் எட்டிப்பார்க்க.. எதையோ பார்க்க கூடாததை பார்த்துவிடுகிறார். ஹீரோ காட்டிய எதையோ கண்டு ஹீரோயினுக்கு உணர்ச்சி பொங்க காதல் பொங்கிவிடுகிறது. ஹீரோயினுக்கு காட்டிய அதை இயக்குனர் நமக்கு காட்டவில்லை. காட்டியிருந்தால் படம் இன்னும் பல உச்சங்களை தொட்டிருக்குமோ என்னவோ...

நந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற பாரின் மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி என்று ஊரே தூற்றியபோது, மிஷ்கின் சொன்னார்.. என்னுடைய குரு அகிரா குரோசாவாவும், டாக்காஷி கிட்டானோவும்தான். கிட்டானோவுக்கான ட்ரிபூட்தான் அந்தப்படம் என்றார். ட்ரீபூட்டுக்கும் காப்பிக்கும் வித்தியாசம் தெரியாத இந்த நாட்டில் எப்படிதான் வாழ்வதோ என சலித்துக்கொண்டு தன் கையிலிருந்த மைக்கால் தன் தலையில் அடித்துக்கொண்டார்.

மிஷ்கினால்தான் ட்ரிபூட் என்கிற சொல்லே தமிழனுக்கு தெரியவந்தது. அவருடைய மற்ற படங்களை போல இல்லாமல் இந்த சிங்கிள் படத்தில் பல படங்களுக்கு ட்ரிபூட் செய்திருக்கிறார். பேட்மேன், ஸ்பைடர்மேன், ட்ரங்கன் மாஸ்டர், ஐபிமேன்2, சின்சிட்டி, கிக் ஆஸ், பைசென்ட்டனியல்மேன், ஷெர்லாக் ஹோம்ஸ், ஏதோ மோகம் ஏதோ தாகம் (ஷகிலா நடித்தது), அஞ்சரைக்குள்ள வண்டி (ஷகிலா நடிக்காதது) என எண்ணற்ற படங்களுக்கு ஒரே படத்தில் ட்ரிபூட் செய்திருப்பதற்காக தமிழ்நாடே அவருடைய திசைபார்த்து வணங்கவேண்டும். அவரை நிற்கவைத்து வரிசையில் போய் மாலை போடவேண்டும்.

சில இடங்களில் அது என்ன படத்துக்கான ட்ரிபூட் என்கிற கன்ப்யூசன் நமக்கு வந்துவிடக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக அவரே ஹின்ட்டுகளும் கொடுத்து விடுகிறார். டார்க் நைட் படத்தில் ஆஸ்கார் விருது வென்ற கேரக்டர் ஜோக்கர். கிளைமாக்ஸில் படத்தின் மலையாள கொள்ளைகார வில்லனான நரேன் ஜோக்கரை இமிடேட் செய்கிறார். அது நடக்கும்போதே இன்னொரு காட்சியில் சூப்பர் ஹீரோவின் நண்பர்கள் ஜோக்கர் வேடம் போட்டுக்கொண்டு ஏதோ செய்கிறார்கள். அடடா!

ஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்! வாரே வாஹ்!

எனக்கு பின்னால் அமர்ந்திருந்த அறிவே இல்லாத ரசிகன்தான் லூசு போல.. டேய் அந்த மிஸ்கின் வீட்லக்குற டிவிடி ப்ளேயர அடிச்சி உடைங்கடா என கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். ப்ளடி ஃபூல்ஸ்! அதாவது ரத்தங்கசியும் முட்டாள்கள்

படத்தில் ஒரு விஞ்ஞானி வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான கிரிஷ்கர்னாட் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன்னர் ஒருமுறை அவரை கவர்னராக்கி நக்மாவுக்கு அப்பாவாக்கி காமெடி பண்ணிருப்பார் ஷங்கர். இதில் இவருக்கு விஞ்ஞானி வேடம். சூப்பர் ஹீரோ வீட்டு மொட்டைமாடியில் குடிசை போட்டு ரோபோட்டிக் ஆராய்ச்சிக்காக பழைய உடைந்துபோன ரேடியோவின் சர்க்யூட் போர்டுக்கு சால்ட்ரிங் வைக்கிறார்! வீட்டுக்குள்ளயே ரோபோ பண்ணை வைத்து ஈமுகோழிபோல நிறைய ரோபோக்களை செழிப்பாக வளர்க்கிறார். இது சூப்பர் ஹீரோ படம் மட்டுமல்ல சைன்ஸ்ஃபிக்சன் படமும் கூட என்பது அப்போதுதான் புரிகிறது. ஆனால் அதுபுரியாத தமிழ்சமூகம் படம் முடிந்த பின் காரி காரி துப்புகிறது! ச்சே!

இந்தப்படத்தை வெறும் சூப்பர் ஹீரோ படம் என்கிற ஒற்றை பரிமாணத்தில் அணுகுதல் தவறு. இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்!

மொத்தத்தில் இந்த முகமூடி ஒரு சோடாமூடி என்று சொன்னால் அது மிகையாகாது.

தலைப்பு உதவி - இயக்குனர் மிஸ்கின்.