Pages

26 November 2012

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி





ஏழாம் அறிவில் நம்மையெல்லாம் தமிழன் என்று பெருமைப்பட வைத்த ஏஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தில் இந்தியன் என்று மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். விஜயகாந்தோ அர்ஜூனோ நடித்திருந்தால் துவண்டு போயிருக்கும் அவர்களுடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்த உதவியிருக்கும். விஜய் நடித்ததால் ஒன்றும் குடிமுழுகி போய்விடவில்லை. அவருடைய மார்க்கெட்டும் சரிந்துகொண்டுதானே இருந்தது.

நம்முடைய நாட்டுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் சம்பவாமி யுகே யுகே என்று நம்முடைய மல்டிபிள் ஸ்டார்ஸ்களே முன்னால் வருவார்கள். அதுபோலவே துப்பாக்கி படத்திலும் விஜய் குபீரென ராணுவ வீரனாக தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிறார்.

மலைப்பகுதியில் தனிவீட்டில் குடும்பத்தோடு வசிக்கும் வில்லன். அவனுக்கு போரடிக்கும்போதெல்லாம் காரணமேயில்லாமல் மும்பையில் குண்டு வைத்து விளையாடுகிறான். அவனுடைய விளையாட்டுக்கு மும்பையில் வசிக்கும் இஸ்லாமிய மிடில்கிளாஸ் மக்கள் உதவுகிறார்கள். காஷ்மீர் தீவிரவாதிகளை பந்தாடி போர் அடித்து லீவு போட்டுவிட்டு மும்பைக்கு வருகிறார் விஜய்.

வில்லன் வைத்த குண்டை இவர் எடுக்க.. இவர் வைத்த குண்டை அவர் எடுக்க.. இவர் அண்ணனை அவர் சுட்டுக்கொல்ல.. இவர் தங்கச்சியை அவர் கடத்த.. கடைசியில் என்னாகும்ன்னா.. இதையெல்லாம் நான் எழுதிதான் தமிழகம் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

யெஸ்.. தர்மம் வென்றது. இந்தியா தலைநிமிர்ந்தது. பாரத்மாதாக்கீ ஜே. ஜெய்ஹிந்த். (டைப்படிக்கும் போது விரலே விரைப்பாக நிற்கிறது!)

ரொம்ப பழைய கதையை எடுத்து பட்டி டிங்கரிங் பார்த்து.. புதிதாக திரைக்கதை அமைத்து ஆங்காங்கே கேட் அன் மௌஸ் மசாலா தூவி ஜாலியாக இயக்கியிருக்கிறார் ஏஆர் முருகதாஸ். சரவெடி போல கடபுடாவென பேய்வேகத்தில் பயணிக்கும் திரைக்கதையில் தலா நூற்றிநாற்பதுக்கும் மேல் ஓட்டைகள். இருப்பினும் படத்தில் ஏதோ ஒரு சுவாரஸ்யமிருப்பதாக நாம் நினைப்பதால் அந்த ஓட்டைகள் தெரியவில்லை.

முதல்பாதி அரைமணிநேரமும் இரண்டாம் பாதியில் அரைமணிநேரமும் தொய்வடைந்து கடுப்பேற்றுகிறது. ஆனால் விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸும் அலட்டலில்லாத அற்புதமான நடிப்பும் அதையெல்லாம் மறக்கசெய்கிறது.

இளையதளபதியும் வருங்கால முதல்வருமான விஜய், தன்னுடைய அடுத்த அமெரிக்க ஜனாதிபதி கனவையெல்லாம் தூக்கி பரணில் போட்டுவிட்டு நடித்திருப்பது ஆறுதல். படத்தில் ஐயாம் வெயிட்டிங் என்பது மட்டும்தான் விஜய் பேசுகிற ஒரே பஞ்ச் டயலாக். ஒருவேளை இந்தபடம் ஹிட்டானால் மறுபடியும் பஞ்ச் பேசுவேன் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறாரோ என்னவோ!

முக்கால் பேண்ட்டோடு சுவருக்கு சுவர் தாவுவதும், ஸ்டைலாக துப்பாக்கியால் டுமீலுவதாகட்டும், தென்னிந்திய ஜேம்ஸ்பாண்டாக மிளிர்கிறார் விஜய். ஒரே ஒரு துப்பாக்கியோடு உலகத்தை காப்பாற்றும் வேலையாக இருந்தாலும் அதையே ஸ்டைலாக செய்தால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை தியேட்டரில் உணர முடிந்தது.

காஜல் அகர்வாலுக்கு மேலே கீழே வலது இடது என பல பகுதிகளிலும் நடிக்க வருகிறது. குலுங்க குலுங்க நடித்திருக்கிறார். ஆனால் அவர் படத்தில் எதற்காக என்பது முருகதாஸுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருக்கலாம்.கஜினிக்கு பிறகு இந்தப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் ரொமான்டிக்காக இருக்கிறது. காமெடிதான் சுத்தமாக செல்ஃப் எடுக்கவில்லை. ஜெயராம் என்கிற நல்ல நடிகரை ஏன்தான் இப்படி நாசம் பண்றாங்களோ என்பதை தவிர அவரைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

படத்தின் ஒரே குறை மிகப்பெரிய குறை.. மகா மட்டமாக இசையமைத்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான். கூகிள் கூகிள் பாடலை தவிர மற்ற எல்லாமே கடனுக்கு போட்டு கொடுத்த மெட்டுகளை போலவே இருந்தன. மாற்றானில் போட்ட ஒரு பாட்டை அப்படியே இங்கேயும் கொடுத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ்.. ரீமிக்ஸ் ஜெயராஜாக மாறிவிட்டார்!

2007ல் வெளியான போக்கிரிக்கு பிறகு அசலான ஒரு விஜய் படம் பார்த்த திருப்தி இந்தபடத்தில் கிடைக்கிறது. விஜய் படங்கள் குடும்பத்தோடு பார்க்க ஏற்றவை. ஆனால் இப்படத்தில் வன்முறை கொஞ்சமல்ல நிறையவே தூக்கலா இருந்தது.

கிளைமாக்ஸில் டெடிகேட்டிங் டூ த மிலிட்டிரி ஆஃப் தி இந்தியா என்றெல்லாம் எதற்கு ஜல்லி அடிக்கவேண்டும் என்று புரியவில்லை. அதை பத்து நிமிடம் ஸ்லோ மோஷனில் காட்டி முடிப்பதற்குள் ஒட்டுமொத்த தியேட்டரும் காலியாகிவிட்டது.

சில படங்கள் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்த்து போய் பார்ப்போம். அது சுமாராக இருந்தாலும் கூட நம் எதிர்பார்ப்பாலேயே அது மொக்கையாக தோன்றும். விஜயின் தொடர் மொக்கை படங்களால் துப்பாக்கி சூரமொக்கையாகதான் இருக்கும் என்கிற உறுதியான எதிர்பார்ப்போடு சென்ற தமிழ் ரசிகர்களுக்கு இந்த சுமாரான படம்கூட சூப்பராக தெரிந்ததில் ஆச்சர்யமில்லைதான்.

துப்பாக்கியை பற்றி இரண்டு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் ‘’இன்ப அதிர்ச்சி!’’.

(http://cinemobita.com/ க்காக எழுதியது. அவர்களுக்கு நன்றி)