Pages

25 June 2013

ஆபத்தை அறிவித்த பூனைகுட்டிகள்!




வீட்டில் நான்கு குட்டிபூனைகளும் ஒரு தாய்ப்பூனையும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சரியான சுட்டிகள். எப்போதும் துறுதுறுவென விளையாடிக்கொண்டே இருக்கும். ஆனால் சில நாட்களாக திடீர் திடீர் என உடலை சிலிர்த்துக்கொண்டு முதுகை தூக்கிக்கொண்டு சீறத்தொடங்கிவிடுகின்றன. அப்படி செய்த சிலநிமிடங்களிலேயே எங்காவது ஓடிப்போய் ஒளிந்துகொள்ளவும் செய்கின்றன.

முதலில் காரணமே புரியவில்லை. ''அதுங்களுக்கு என்னாச்சுனே தெரியல வினோ எதையோ பாத்து பயப்படுதுக ஆனா என்னானுதான் புரியல'' என்று வருத்தமாக சொன்னார் அம்மா!.

ஞாயிறு விடுமுறையென்பதால் கவனித்துப்பார்த்தேன். டிவி ஓடும்போதுதான் இதுபோல ஆகிறது. அதிலும் சன்டிவியில் வருகிற சிங்கம் 2 டிரைலர் பார்த்துதான் இவை இப்படி மிரளுகின்றன என்பதை உணர முடிந்தது.

அதிலும் குறிப்பாக 'ஓடுமீன் ஓட ஊறுமீன் வரும்வரையில் வாடிஇருக்கும்டே கொக்கு' என சூர்யா மைக்கில்லாமல் கத்த.. அல்லது கர்ஜிக்கையில்தான், பூனைகள் இய்ய்ய்யீங் என முதுகைத்தூக்கிக்கொண்டு சிலிர்க்கின்றன..

சூர்யா மீண்டும் 'ஒருத்தரும் தப்பிக்க முடியாது' என்று கர்ஜிக்க பூனைகள் அலறிஅடித்துகொண்டு போய் பீரோவுக்கு அடியில் ஓளிந்துகொள்கின்றன. உண்மையை சொல்லவேண்டுமென்றால் அந்த டிரைலரை பார்த்தால் என்க்கே பீரோவுக்கு அடியில் போய் ஒளிந்து கொள்ளவேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

வரப்போகிற இயற்கைபேரழிவுகளை முன்கூட்டிய வீட்டுப்பிராணிகள் சொல்லிவிடும் என புத்தகங்களின் படித்திருக்கிறேன். ஆனால் அதில் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் அதை இப்போது கண்கூடாகவே பார்த்துவிட்டேன்.

ஓங்கி கடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா.. ம்யாவ்...

(இது டிரைலருக்கான விமர்சனம் அல்ல.. ஓர் அனுபவ பகிர்வு... அஷ்டே!)