Pages

26 November 2013

ஓர் இந்திய கிராமத்தின் கதை




படிக்கும்போது ‘’அட இதெல்லாம் இன்னமும் மாறாம அப்படியே இருக்கே பாஸ்’’ என ஆச்சர்யப்பட வைக்கிறது ‘’ஓர் இந்திய கிராமத்தின் கதை’’ என்கிற நூல். 200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக கிராமத்தின் வாழ்க்கையை அதன் மக்களை பதிவுசெய்திருக்கிறது இந்த மொழிபெயர்ப்பு நூல்.

தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை என்பவரால் 1888ஆம் ஆண்டு தொடங்கி சென்னை கிறித்தவ கல்லூரி ஆங்கில மாத இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு ‘’LIFE OF AN INDIAN VILLAGE’’ என்ற தலைப்பில் 1911ஆம் ஆண்டு புத்தகமாக வெளியானது. அந்த ஆங்கில நூலை இப்போது தமிழில் ச.சரவணன் மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்நூல் இந்தியாவுக்கு ஆட்சிசெய்ய இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய மக்களையும் அதன் கிராமங்களையும் அதன் வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டுள்ளது. இதில் நம்முடைய தமிழக கிராமங்களின் வாழ்க்கையை ‘கேளம்பாக்கம்’ என்கிற சிறிய கிராமத்தினை உருவாக்கிக்கொண்டு அதன் மூலமாக விளக்குகிறார் ராமகிருஷ்ணபிள்ளை.
175 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக கிராமமான ‘’கேளம்பாக்கம்’’ மகாபலிபுரத்திற்கும் காஞ்சிபுரத்திற்க்கும் மத்தியில் பாலாற்றங்கரையில் இருக்கிறது. நிஜமாகவே அப்படி ஒரு ஊர் தற்போதைய சென்னையில் இருக்கிறது. அங்கேதான் ரஜினி,அஜித்,சரத்குமாரெல்லாம் வசிக்கிறார்கள்! ஆனால் அந்த கேளம்பாக்கம்தானா இது என்று உறுதிப்படுத்தும் தகவலொன்றும் நூலில் இல்லை.

கோதண்டராமசாமி கோயில் ஒன்று கேளம்பாக்கத்தில் இருந்ததாக நூலில் குறிப்பிடப்படுகிறது. இப்போதைய கேளம்பாக்கத்தில் அக்கோயில் இன்னமும் இருக்கிறதா?

நூலில் குறிப்பிடப்படுகிற இந்த கேளம்பாக்கம் என்னும் இடத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே போர் நடந்ததாகவும் ,போரில் வீழ்ந்தவர்களை வெற்றிபெற்றவர்கள் கொண்டவந்து இங்கே வைத்துதான் யானைகளை வைத்து மிதிக்க வைத்து கொல்லுமிடமாகவும் இருந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 11ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் என்பவனின் மகன் ஆதொன்டைதான் இரண்டு அரச வம்சங்களிடையே இருந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காஞ்சிபுரத்தை தலைமையாக்கிக்கொண்ட பின்தான் கேளம்பாக்கத்துக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது!

ஆதொன்டையின் உத்தரவின் பேரில் துளுவ நாட்டை சேர்ந்த பத்து குடும்பங்கள் இங்கே குடியேற.. பின்னாளில் அவர்களே துளுவ வேளாளர்கள் என அழைக்கப்பட்டு ஊரின் மிகமுக்கிய குடும்பங்களாக மாறியதாக குறிப்பிடுகிறார். ஆரம்பத்தில் இவர்கள் சைவ சமயத்தை பின்ப்பற்றியவர்களாக இருந்து பின் ராமானுஜர் காலத்தில் வைணவத்தை தழுவினார்கள் என்கிறார்.
கிராமத்தை கட்டிமேய்க்கிற கிராம முன்சீப் கோதண்ட ராம முதலியை பற்றி அறிமுகத்தோடு நாமும் கிராமத்துக்குள் நுழைய, கணக்குபோடுவதில் கறாரான கர்ணம்(கணக்கர்) கிராமத்து போலீஸ் ஆபீசர் ராமசாமிபிள்ளை என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி அவரைப்பற்றிய சம்பத்தோடு அவருடைய குணங்களையும் விளக்குகிறார்.

தலையாரி முத்து நாயக்கர், புரோகிதர் ராமானுஜ ஆச்சாரியார், வரதய்யங்கார், அப்பளாச்சாரி, பள்ளி ஆசிரியர் நல்லாபிள்ளை, வைத்தியர் அப்பாசாமி, கலப்பைகள் செய்யும் சுப்பராய ஆசாரி, கொல்லர் சண்முகம், இடையர் கோபால பிள்ளை, வண்ணான் முனியன், குயவர் குப்புசாமி, நாவிதர் கைலாசம், அம்மன்கோயில் பூசாரி அங்கமுத்து, பணிசிவா கந்தன், ஷைலார்க் முத்துசாமி செட்டியார், பறைச்சேரி தலைவர் மாயாண்டி.. என இந்த கேரக்டர்கள் பட்டியில் மிகநீளம். ஆனால் ஒவ்வொருவருக்கும் இருக்கிற குணாதிசயங்கள் அவர்களுடைய நம்பிக்கைகள் அந்த சாதி மக்களின் வாழ்க்கை தொழில் என ஒரு கதையைப்போல நூல் விரிகிறது.

பணிசிவா என்கிற நபர் ஊரில் நடக்கிற பிறப்பு,இறப்பு,திருமணம் என எல்லா வகையான நிகழ்ச்சிகளையும் அறிவிக்கிறவராகவும், ஈமச்சடங்குகளில் சங்கூதுவது, திருமணங்களின் போது வெற்றிலை பாக்கு வைத்து தொலைவில் இருக்கிற உறவினர்களை அழைப்பது மாதிரியான வேலைகளை ஊருக்காக செய்து வாழ்பவராக அவரைப்பற்றி விளக்கப்படுகிறது. ஊரில் இருக்கிற நாவிதரேதான் அறுவைசிகிச்சையும் செய்கிறார் ஆனால் எந்த அடிப்படையில் செய்கிறார் என்பதுதான் எனக்கே தெரியவில்லை என்று ராமகிருஷ்ணபிள்ளையே குழம்பிப்போய் எழுதுகிறார். அதுபோல அம்மன் கோயில் பூசாரி அங்கமுத்து பேய்பிடித்திருக்கிறது, பிசாசு வேலை குட்டிசாத்தான் ஏவுதல் மாதிரி மக்களை எப்படி ஏமாற்றுகிறார் என்பதும் சம்பவங்களால் விளக்கப்படுகிறது.

நூல் முழுக்க நிறைந்துகிடக்கிற சம்பவங்கள் எல்லாமே வெகுசுவாரஸ்யமானவை. அது இந்த நூலுக்கு ஒரு நாவலின் தன்மையை இயல்பிலேயே வழங்கிவிடுகிறது. ஒரு வராலற்று நாவலை படிக்கிற உணர்வு.

அப்பளாச்சாரி என்கிற பார்ப்பனருக்கு திடீரென பணத்தேவை ஏற்படுகிறது, உடனே நேராக போய் குயவன் குப்புசாமியிடம் அவனுடைய பக்கத்துவீட்டுக்காரனான பணிசிவா கந்தன் எப்படி குயவனின் நிலத்தை வேலிப்போட்டு ஆக்கிரமித்து ஏமாற்றுகிறான் என வத்தி வைக்கிறார். அவன் கோவமாக இருக்கும் நேரம் பார்த்து காசு கேட்கிறார். அவனும் கோபத்தோடு கொடுத்துவிட.. நேராக பணிசிவா கந்தனிடமும் போய் குயவனை பற்றி போட்டுக்கொடுத்து அவனிடமும் காசு கறக்கிறார். இந்த சண்டை முற்றிப்போய் அது கோர்ட்டு வரைக்கும் போகிறது. கோர்ட்டு காரியங்களை கவனிக்கிற அப்பளாச்சாரி அதிலும் லாபம் பார்த்துவிடுவது சிறப்பு!

இன்னொரு சமயம் ஊருக்கு வருகிற கழைக்கூத்தாடிகள் சில வித்தைகளை செய்துகாட்டுகிறார்கள். அதில் ஒரு மாவிதையை எடுத்து மண்ணில் புதைத்து கூடையை மூடி செடியாக வளர்த்து காட்டுகிறார்கள். மீண்டும் மீண்டும் கூடையை மூடி மூடி திறக்க அது வளர்ந்து வளர்ந்து குட்டி மரமாகிவிடுவதாக ராமகிருஷ்ணபிள்ளை ஆச்சர்யத்தோடு மிகவும் நுணுக்கமாக அந்நிகழ்ச்சியை விவரித்து எழுதுகிறார். படிக்கும்போது நமக்கும் அவருக்கு பக்கத்தில் நின்று வேடிக்கை பார்ப்பதைப்போன்ற உணர்வு இயல்பாக வந்துவிடுகிறது. அதோடு இப்போ சீசன் இல்லை இருந்திருந்தால் அவன் அந்த மாமரத்தில் மாங்கய் வரவைத்து கொடுத்திருப்பான் என குசும்பு காட்டுகிறார்!

கிராமத்து பெண்கள் பற்றிய கதையும் அவர்களிடையே நடந்த ஒரு கிணற்றடி உரையாடலும் நூலில் உண்டு. அதைப்படிக்கும் போது நம் பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளின் மெகாசீரியல் குறித்த உரையாடல்களின் ஆதிமூலத்தை அறியமுடிகிறது! தேவதாசி முறை குறித்த குறிப்புகளும் நூலில் உண்டு. ஊரில் இருந்த கோயிலில் இரண்டு தேவதாசிகள் இருக்கிறார்கள். இருவரில் ஒருவரை அப்பளாச்சாரியும், இன்னொருவரை பக்கத்து கிராமத்து ஜமீன்தாரும் தங்களுடைய ஆசைநாயகிகளாக பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி தங்களுக்கு ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் இவர்களை வேறு சிலருக்கு விட்டுக்கொடுக்கவும் செய்கிறார்கள்.

கிராமத்தில் வட்டிக்கு பணம்கொடுக்கிற செட்டியார் எப்படி ஏமாற்றி மக்களை சுரண்டினார், எனவே நமக்கு கிராமிய வங்கிகள் ஏன் அவசியம் குறித்து கவலைகொள்கிறார் நூலாசிரியர்.

இவற்றை தவிர்த்து அந்த கிராமத்தில் நடைபெற்ற விவசாய முறைகள், ஊருக்கு வரும் நாடக கலைஞர்கள் நடத்திய நாடகம். ஆன்மீக சொற்பொழிவாளர் சொன்ன கதை என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. சில விஷயங்கள் இன்றும் மாறாமல் இருப்பதை படிக்கும்போது இதிலென்ன ஆச்சர்யம் என்கிற நம்முடைய எண்ணமே உணர்த்துகிறது. ஏனென்றால் நாம் படிப்பது 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கிராமத்தை பற்றி இல்லையா?

நம் கிராமங்களில் சாதி என்கிற பெயரில் மக்கள் எவ்வாறு அடிமையாக வைக்கப்பட்டிருந்தனர் என்பதை மாயாண்டி என்கிற பறைச்சேரியின் தலைவருடைய வாழ்க்கையின் மூலமாக விளக்கப்படுகிறது. கிராமத்து நீதியும் கூட எப்படி பாரபட்சமாக நடந்துகொண்டது என்பதற்கு சாட்சியாக ஆதிக்க சாதியினர் தவறிழைக்கும் போது அவர்களுக்கு சிறை அல்லது அபாரதமும், அதுவே தலித்துகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களது கால்கள் மற்றும் கைகள் மரத்தினாலான ஒரு பெரிய அமைப்பின் இரண்டு துளைகளில் நுழைத்து அதே நிலையில் பல மணிநேரங்கள் இருக்க செய்வார்களாம்!

இந்நூல் எழுதப்பட்டது நம்மை ஆட்சிசெய்த ஆங்கிலேயர்களுக்குதான் என்றாலும் இப்போது படிக்கும்போது அக்கால வாழ்க்கையை மக்களை அவர்களுடைய ரசனையை மகிழ்ச்சியை ஓரளவு புரிந்துகொள்ள உதவுகிறது. தங்களுடைய கிராமம் அதன் மக்கள் விவசாயம் அவ்வப்போது கொஞ்சம் கொண்டாட்டம் என பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எவ்வளவு எளிமையான அழகான வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது இயல்பாகவே பொறாமையும் வந்துவிடுகிறது.

(இந்நூலை எழுதிய தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளைதான் ஆங்கிலத்தில் தமிழர் வாழ்வை நாவலாக (பத்மினி) எழுதிய இரண்டாவது ஆள் என்கிற தகவலை முன்னுரையில் குறிப்பிடுகிறார் பதிப்பாசிரியர் ரெங்கையா முருகன்)

ஓர் இந்திய கிராமத்தின் கதை
தோட்டக்காடு ராமகிருஷ்ணபிள்ளை
தமிழில் ச.சரவணன்
சந்தியா பதிப்பகம்
விலை – 110