Pages

31 December 2013

ஒரு பரபரப்பான ஆண்டின் முடிவில்...




ஒரு பரபரப்பான ஆண்டு முடிந்துவிட்டது. நிறைய சிரமங்கள் இடர்கள், அப் அன் டவுன்ஸ், இன்ப துன்பங்கள் லிட்டர் கணக்கில் கண்ணீரும் ஏக்கர் கணக்கில் புன்னகையும் என ‘’2013’’ ஆண்டு முடிந்துவிட்டது. இதுவரை எந்த ஆண்டும் இந்த அளவுக்கு ஜாலியாக, உருப்படியாக , பரபரப்பாக இருந்ததேயில்லை. அதனாலேயே ஐ லவ் திஸ் 2013! அதுக்குள்ள முடிஞ்சிட்டியே புள்ள…

நினைத்தை எல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் ஒன்றிரண்டையாவது உருப்படியாக செய்திருக்கிறோம் என்கிற உற்சாகத்தோடும் ஏகப்பட்ட புத்தம் புதிய நண்பர்களோடும் அதைவிட புதிதான நம்பிக்கையோடும் 2014ற்குள் நுழைகிறேன்.

சென்ற ஆண்டின் இறுதியில் நிறையவே லட்சியங்கள் வைத்திருந்தேன். நிறைய நூல்கள் வாசிப்பது, கொரிய மொழி கற்றுக்கொள்வது, நீச்சல் பயிற்சிக்கு செல்வது, சிகரட்டை கைவிடுவது என அது சரவணபவன் மெனுகார்டு போல நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகும். காசாபணமா ரெசல்யூசன்தானே! ஆனால் ஆச்சர்யமாக அந்த பட்டியலில் சிலவற்றை செய்து முடித்த திருப்தி இப்போது மனது முழுக்க நிறைந்துள்ளது.

இந்த ஆண்டில் ஸ்கூபா டைவிங் செய்ததுதான் டாப் அச்சீவ்மென்ட் (எனக்கு நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது!). கடலுக்கடியில் சில அடிகள் சென்றுதிரும்பிய அந்த திக் திக் நிமிடங்கள் மறக்கவே முடியாது. அதை நிச்சயம் மிகமுக்கியமான ஒரு சாதனையாக நினைக்கிறேன். அந்த ஸ்கூபா டைவிங் அனுபவம் குறித்த கட்டுரை என்னுடைய படத்தோடு புதியதலைமுறை இதழில் பிரசுரமானது இன்ப அதிர்ச்சி!

தமிழ் பத்திரிகைகளில் இதுபோலொரு அனுபவக் கட்டுரை வெளியாவது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்..அவ்வகையில் அடியேனுக்கு லிட்டில் பிட் ஆஃப் பெருமைதான். அதோடு புதியதலைமுறை இதழுக்காக குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளையும் பலரையும் கவர்ந்த கவர்ஸ்டோரிகளையும் எழுதினேன்.

ஸ்கூபா டைவிங் கொடுத்த உற்சாகத்தில் நீச்சல் கற்றுக்கொண்டேன். தனியாகவும் நண்பர்களோடும் நிறையவே ஊர் சுற்றினேன். குறிப்பாக பூவுலகின் நண்பர்களோடு பாபாநாசம் சுற்றியதும் தோழி ஒரு ஞாயிற்றுக்கிழமை தோழி ப்ரியாதம்பியோடு இலக்கே இல்லாமல் 300கிலோமீட்டர் ஊர்சுற்றியதும் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. கெயில் (GAIL) பிரச்சனை தொடர்பாக ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கிராமம் கிராமமாக செய்தி சேகரிக்க நண்பர் கணேஷோடு பைக்கில் பல நூறு கிலோமீட்டர்கள் சுற்றியது ஒரு ஆச்சர்ய அனுபவம்.

நம்முடைய அதிஷாஆன்லைன் வலைப்பூவில் நிறைய எழுத நினைத்திருந்தேன். அதிகமாக எழுத எழுத பயிற்சிதானே! அதுமட்டுமின்றி ‘’மக்கள் நம்மள பத்தி என்ன நினைப்பாங்களோ’’ என்றெல்லாம் எந்த மனத்தடையையும் வைத்துக்கொள்ளாமல் விரும்பியதையெல்லாம் எழுதவும் முடிவெடுத்தேன். சென்ற ஆண்டுகளில் வதையாக மாறிப்போன எழுத்து மீண்டும் மகிழ்ச்சி தருவதாக மாறியது. மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட், கோலிவுட் என எல்லா திரைப்படங்களையும் வெறித்தனமாக பார்ப்பது இந்த ஆண்டும் தொடர்ந்தது.
இந்த ஆண்டு மட்டுமே நூறு கட்டுரைகள் இணையதளத்தில் எழுதுவது என டார்கெட் வைத்திருந்தாலும் 99தான் எழுதமுடிந்தது என்பதில் கொஞ்சம் வருத்தம்தான். (இதுதான் 99வது பதிவு!).

ஃபேஸ்புக்கில் வாசிப்பவர்களுக்காக நிறையவே குட்டி குட்டியாக எழுதியிருக்கிறேன். ட்விட்டரிலும் அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தேன். நிறைய புதிய நண்பர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமாக கிடைத்திருக்கிறார்கள். பேஸ்புக்கில் விளையாட்டாக பகிர்ந்து கொண்ட ‘’ஷேரிங் பெருமாள்’’ யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு லட்சம் சொச்சம் பேரால் ஷேர் செய்யப்பட்டு… ஆனந்த விகடனில் செய்தியானார்! அதிலும் லிட்டில் பிட் ஆஃப் பெருமை சேர்ந்துகொள்கிறது.

ஆண்டின் இரண்டாம்பாதியில் மிகவும் பொறுமையாக 30 பக்கம் நீளும் ‘’குறுநாவல்’’ ஒன்றை எழுதி முடித்தேன். அதை என்ன செய்வதென்று இதுவரை தெரியவில்லை. MAY BE அடுத்த ஆண்டு என்னுடைய இணையதளத்திலேயே போட்டுவிடுவேனாயிருக்கும். புத்தகம் போடும் ஆசையோ ஆர்வமோ இத்யாதிகளோ இந்த ஆண்டும் வரவில்லை. எப்போதுமே வராதுதான் போல..

குழந்தைகளை சந்தித்த போதெல்லாம் அவர்களுக்கு கதைகள் சொல்லும் புதுப்பழக்கமும் இந்த ஆண்டு தொற்றிக்கொண்டது. அப்படி சொன்ன ஒரு குழந்தைகள் கதைதான் ‘’புக்கு பூச்சி’’. அடுத்த ஆண்டு பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு கதை சொல்ல நினைத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால்!

நண்பர்களும் உறவினர்களும் காதலிகளும் தோழிகளும் குட்டீஸ்களும் நலம்விரும்பிகளும் வாசகநண்பர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தாலும், புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது மட்டும் அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

கடந்த ஆண்டுகளில் அதாவது கடந்த 15ஆண்டுகளாக, நம்முடைய வரலாற்றில் இதற்கு முன்பு முப்பது முறைகள் சிகரட்டை கைவிட்டு பின் இரண்டுநாட்கள் கூட தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் ஆரம்பித்து.. படுதோல்வியடைந்திருக்கிறோம் இல்லையா... அதனால் இந்த ஆண்டு எப்படியாவது மிகச்சரியாக திட்டமிட்டு சிகரட்டோடு போராடி அதை வென்றுவிட முடிவெடித்தேன். ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

புகை பிடிக்கும் வெறி அவ்வப்போது ஒரு சாத்தானைப்போலத்தோன்றும்… அந்த பத்து நிமிடத்தை கடப்பதுதான் சவாலே.., முதல் மூன்று மாதங்களும் ஒவ்வொரு நொடியும் நத்தை வேகத்தில் நகர்கின்றன. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. யாரிடமும் மகிழ்ச்சியாக உரையாட முடியவில்லை. சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் வெடுக் வெடுக் என கோபம் வந்து சண்டையிடவும் தொடங்கிவிட்டேன். வீட்டில் எல்லோரிடமும் சண்டை. அலுவலகத்தில் சண்டை. நண்பர்களிடமும் சண்டை.

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மகா மட்டமாக எதிர்வினையாற்றினேன்! நிறையவே இழந்தேன். அதில் முக்கியமானது என்னுடைய நட்புவட்டாரம்!

அந்த நேரத்தில் மிகமிக நெருக்கமான நண்பர்களோடு நானாகவே தேவையில்லாமல் சண்டையிட்டு விலகினேன். இப்போது நினைத்தால் ஷேம் ஷேம் பப்பிஷேமாக இருக்கிறது. எதற்காக சண்டையிட்டு இப்போது அவர்களிடமிருந்து பேசாமல் விலகியிருக்கிறேன் என்பதும் கூட மறந்துவிட்டதுதான் அடிபொலி காமெடி. (சாரி ஃபிரண்ட்ஸ் நான் தப்பா நடந்திருந்தா!)

‘’ஹாய் ஹலோவும் கூட சாத்தியமற்றதாக அந்த உறவுகள் விலகும் என்று கனவிலும் நினைத்ததில்லை! நட்பும் நம்பிக்கையும் கசக்காத காகிதம் போன்றதுதான் போல.. ஒருமுறை கசக்கிவிட்டால் பழையபடி ஆக சாத்தியமற்றதோ என்னவோ? எல்லாம் நன்மைக்கே!’’

முழுக்க தனிமையும் வேதனையும் ஆக்கிரமித்திருந்த அந்த நாட்களில் என்னை ஆசுவாசப்படுத்தியதில் சில நண்பர்களுக்கு மிகமுக்கிய பங்கிருக்கிறது. கிங்விஸ்வா, குமரகுருபரன், தோழி ப்ரியாதம்பி, கவிஞர் சே.ப்ருந்தா, எழுத்தாளர் பாஸ்கர்சக்தி, அந்திமழை ஆசிரியர் அசோகன் மற்றும் தோழி கவின்மலர். இவர்கள் தங்களுடைய மாலை நேரங்களை எனக்காக ஒதுக்கினர். அடியேன் அவர்களோடு உரையாடவும் அழவும் சிரிக்கவும் நிறையவே பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இவர்கள் மட்டும் இல்லையென்றால் அனேகமாக ஏதாவது ரயில் நிலையத்தில் எசகு பிசகாக ஏதாவது நடந்திருக்கலாம். அதிஷா… அ…. தி… ஷா என துண்டு துண்டாக கிடைத்திருக்கலாம்!

தற்கொலை எண்ணத்தோடு திரிபவனுக்கு தேவையானதெல்லாம் புலம்ப ஒரு ஆள்! அது மட்டும் கிடைத்தாலே நாட்டில் யாருமே தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். எனக்கு கிடைத்த நண்பர்கள் நல்ல திறமைசாலிகள்! காதில் ரத்தம் வழியும்போதும்.. புன்னகையோடு ம்ம் கொட்டிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

அலுவலகத்தில் எந்த வேலையும் செய்யமுடியாமல் புகையோடு போராடிக்கொண்டிருந்த நாட்களில் ஆசிரியர் மாலன் நிறைய உதவிகளை செய்தார். ஒருமுறை அவரிடமே கூட கோபமாக பேசிவிட்டு பின் வருந்தினேன். ஆனால் அவர் என்னுடைய நிலையை புரிந்துகொண்டு நான் இதிலிருந்து மீள நிறைய உதவினார். நான் பழைய நிலைக்கு திரும்ப போதிய அவகாசத்தை அளித்தார். வேலைகளில் தவறுகள் செய்யும்போதும் தட்டிக்கொடுத்து கடந்தார். இந்த நேரத்தில் அவரை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். அலுவலகத்தின் மற்ற நண்பர்களின் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் கூட மிகுந்த நன்றிக்குரியது.

மாம்பலம் ரயில்நிலையத்தில் தற்கொலைசெய்துகொள்ள காத்திருந்த சில நிமிடங்களுக்கு முன்னால் போனில் அழைத்து என்னை மீட்ட நண்பன் ‘கென்’ நிச்சயம் என்னளவில் மகத்தானவன்! கடவுளுக்கு ஒப்பானவன். அவனை சாகும்வரை மறக்கமாட்டேன்.

புகைப்பழக்கத்திலிருந்து மீண்ட ஒவ்வொரு நாளையும் ஒரு சாதனையைப்போல கொண்டாடினேன். என்னைப்பார்த்து ஊக்கம்பெற்று ஐந்து நண்பர்கள் புகைப்பழக்கத்தை வெற்றிகரமாக கைவிட்டிருக்கிறார்கள். இவனே விட்டுட்டான் நம்மால முடியாதா என்கிற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்திருப்பேனோ என்னவோ!

இதைவிட என்ன மகிழ்ச்சி இருக்க முடியும். நிறைய நண்பர்கள் இப்பழக்கத்திலிருந்து மீள உதவியிருக்கிறேன். புகைப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காக என்னென்னவோ செய்திருக்கிறேன். அதையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதலாம். நேரம்கிடைக்கும்போது எழுதி ஈ-நூலாக இணையத்தில் இலவசமாக விநியோகிக்க நினைத்திருக்கிறேன்.

புகைப்பிடிப்பதை கைவிட்டு 9மாதங்களை நிறைவு செய்துவிட்டேன். இப்போது அப்பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன்! திரும்பிப்பார்த்தால் நிறையவே இழந்திருந்தாலும் புகைப்பழக்கத்திலிருந்து முழுதாக வெளிவந்துவிட்டேன் என்பதை உணரமுடிகிறது. தோள் கொடுத்த அத்தனை தோழர்களுக்கும் நன்றி.

***

அர்ஜூன் (வேதாளம்) மற்றும் லதாமகன் என்கிற இரண்டு இளைஞர்கள் அல்லது முதிர்ச்சியான பெரிய பையன்கள் சென்ற ஆண்டின் துவக்கத்தில் என்னை வெகுவாக பாதித்தனர். இவர்கள் இருவருமே எக்கச்சக்கமாக வாசிக்கிறவர்கள். எழுத்தில் நிறையவே சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தோடு இருக்கிறவர்கள். பரபரவென நிறையவே கற்றுக்கொள்கிறவர்கள்.

ட்விட்டரில் வேதாளம் என்கிற பெயரில் புகழ்பெற்றவர் அர்ஜூன். குட்டிப்பையன்தான் என்றாலும் அவர் சென்ற ஆண்டு இறுதியில் தான் வாசித்த புத்தகங்கள் என ஒரு பட்டியலை போட்டிருந்தார். அடேங்கப்பா இன்னமும் அது ஆச்சர்யப்படுத்துகிறது. லதாமகன் தொடர்ந்து தான் வாசித்த புத்தகங்கள் குறித்து நிறைய எழுதுவார்… கவிஞராகவே இருந்தாலும் உரைநடையில் கூட அவருடைய எழுத்து நாளுக்கு நாள் மெருகேருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். வெறித்தனமாக கற்பதை இவர்களிடம் கற்றுக்கொண்டேன்.

உண்மையில் இந்த பையன்கள் படிப்பதில் பாதிகூட நாம் வாசிப்பதில்லையே என்கிற தாழ்வுமனப்பான்மைதான் முதலில் உருவானது. இவர்களை விட அதிகமாக வாசிக்க வேண்டும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற வேகம். போட்டிதான்.. நிறைய பொறாமைதான்.. ஆனாலும் நிறைய வாசிப்பது ஆரோக்கியமானதுதானே!

ஆண்டின் துவக்கத்தில் இந்த ஆண்டு 52 புத்தகங்களாவது வாசிக்கவேண்டும். வாரம் ஒரு புத்தகம் பற்றிய சிறிய அறிமுகத்தையாவது நம்முடைய இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்கிற திட்டமும் இருந்தது. இதற்காக தினமும் நேரம் ஒதுக்கி நிறையவே வாசிக்கத்துவங்கினேன். ஆரம்பத்தில் நேரமின்மை சோம்பேறித்தனம் மாதிரி பிரச்சனைகள் இருந்தாலும் இந்த பையன்களை முந்தவேண்டும் என்கிற எண்ணம் எல்லா இடர்களையும் தூக்கிப்போட்டு மிதித்துக்கொண்டு ஓடியது.

இந்த ஆண்டில் மட்டுமே இதுவரை சின்னதும் பெரியதுமாக நிறைய புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். என்னுடைய லைஃப் டைமில் இத்தனை புத்தகங்களை ஒரே ஆண்டில் வாசிப்பது இதுதான் முதல்முறை! வெறித்தனமாக இதற்காக நேரம் ஒதுக்கி நிறைய வாசிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு வாசித்திருக்கிறேன்.

பல மாலைகளை டிஸ்கவரி புக்பேலசிலும் அகநாழிகை புத்தக கடையிலும் கடத்தியிருக்கிறேன். சில மாதங்கள் நாள்தவறாமல் கூட டிஸ்கவரி புக்பேலஸுக்கு சென்றதுண்டு! வேடியப்பனும் அண்ணன் அகநாழிகை வாசுவும் நிறைய நூல்களை பரிந்துரைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

ஆனால் படித்த எல்லா நூலுக்கும் அறிமுகம் எழுதுவது சாத்தியமாக இல்லை. நேரம் ஒரு காரணம். இன்னொன்று எல்லா நூலும் நல்ல நூல் அல்ல.. நிறைய மொக்கைகளும் உண்டு. அதனால் முடிந்தவரை நல்ல நூல்களுக்கு அறிமுகம் செய்திருக்கேன். 52 எழுத நினைத்து கடைசியில் எழுதியதுல 25 புத்தக அறிமுகங்கள்! அதில் தமிழில் ஒரு டான் ப்ரவுன் என்கிற ‘6174’ என்கிற நூல் அறிமுகம் பெரிய வரவேற்பை பெற்றது.

பெருமைக்காகவேணும் நிறைய வாசிப்பதிலும், வாசித்ததை பற்றி பீத்திக்கொள்வதிலும் சமகாலத்தில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ‘’இப்போதெல்லாம் யார் சார் புக்கு படிக்கிறா’’ அடுத்த ஆண்டும் அதே மிஷன் 52 புக்ஸ் தொடர்கிறது… பார்ப்போம் எத்தனை முடிகிறதென்று! வாரம் ஒரு புத்தகத்துக்காவது அறிமுகம் எழுதிவிட பிரார்த்திக்கவும்.


********

நண்பர்கள் லதாமகன், அர்ஜூன், கருப்பையா, முத்தலிப், தங்கை சோனியா அருண்குமார், அதிஷா ரசிகர்மன்ற தளபதிகள் புதியபரிதி, லூசிபர், இணைய பிரபலங்கள் அராத்து, டிமிட்ரி, ராஜன்,தோட்டா. ப்ரியமான தோழிகள் கார்கி மனோகரன், நிலவுமொழி, ஊருக்கெல்லாம் காதல் சொல்லித்தரும் லவ்குரு ராஜா, ரேடியா கண்மணி, மைடியர் அக்கா பரமேஸ்வரி திருநாவுக்கரசு, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், லட்சுமி சரவணகுமார், நான் எதை எழுதினாலும் படிக்காமல் கூட லைக் கமென்ட் போட்ட நண்பர் நாகராஜசோழன், குழந்தைகளுக்காகவே எழுதும் உமாநாத்விழியன், விஷ்ணுபுரம் சரவணம் மற்றும் பசங்களையே பிடிக்காத மதன் செந்தில், என இன்னும் நிறைய நிறைய நண்பர்களை (பெயர் விட்டிருந்தால் மன்னிச்சிக்கோங்கப்பா புண்ணியவான்ஸ்களா!) இந்த ஆண்டு கொடுத்திருக்கிறது! அதற்காகவே 2013க்கு ஸ்பெஷல் நன்றி.

*****

கொரிய மொழி கற்றுக்கொள்ளும் திட்டம் நிதி நெருக்கடிகளால் தள்ளிப்போயிருக்கிறது. புதிதாக ஒரு லேப்டாப் வாங்குவதும் அதே நெருக்கடியால் தள்ளிப்போய்விட்டது. தமிழ் இலக்கணம் பயில்வது, மாராத்தான் ஓடுவது, QUIT SMOKING பற்றிய ஒரு மின்னூலை எழுதி வெளியிடுவது, நூறு புத்தகங்களாவது படித்து முடிப்பது, முடிந்தவரை நிறையவே ஊர் சுற்றுவது, நண்பர்களோடு சண்டை போடாமலிருப்பது, கோவா திரைப்பட விழாவில் கலந்துகொள்வது, புனேவில் திரைப்பட ரசனை தொடர்பான பயிற்சிக்கு செல்வது, ஸ்கை டைவிங், சர்ஃபிங் கற்பது, அராத்துவுடன் இமயமலையில் பைக் ஓட்டுவது என சில சூப்பர் டூப்பர் திட்டங்களும் 2014க்காக க்யூகட்டி நிற்கிறது. அனைத்தையுமே உருப்படியாக செய்துமுடிக்க வேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறேன். ஆல் ஈஸ் வெல்!

வீடுவாங்கணும் கார்வாங்கணும் பங்களா வாங்கணும் நிலம் வாங்கணும் நாலு காசு சேக்கணும், வாழ்க்கைல உருப்படணும் என்பதுமாதிரியான லட்சியங்கள் எப்போதும் போல இந்த ஆண்டும் இல்லை என்பது வருத்தமானது.

***

எல்லாவற்றிற்கும் மேல் நான் எதை எழுதினாலும் நேரம் ஒதுக்கி படித்துவிட்டு பொய்காச்சும் சூப்பர் ஆஹா ஓஹோ நல்லாருக்கு ப்ரோ என்று கமென்ட்டும் லைக்கும் ரிட்வீட்டும் போட்ட எனதருமை நண்பர்களுக்கு நன்றி. யூ பீப்பிள்ஸ் மேட் மை லைஃப் ப்யூட்டிஃபுல். உங்களால்தான் நான் உற்சாகமாக வாழ்கிறேன். எழுதுகிறேன். வாசிக்கிறேன். பறக்கிறேன். என்னுடைய சிறகுகள் நண்பர்களாகிய நீங்கள்தான்.

உங்க எல்லோருக்கும் தாங்க்ஸ் அன் ஹேப்பி நியூ இயர் அன் ச்சியர்ஸ்!