Pages

18 April 2014

குனிந்து நில்




நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? நல்ல காமெடி படங்கள் ஏன் ஓடுவதில்லை என்று இரண்டு நாளாக ஒரே விசனம். விக்கித்து கக்கித்து தொண்டையை அடைத்துவிட்டது துக்கம். அக்மார்க் அன்ட்ரட் பர்சென்ட் காமெடிபடமான நிமிர்ந்து நில்லே ஒடவில்லை என்றால் வேறு என்னபடம்தான் சார் இந்த ஊரில் ஓடும். உங்களுக்கெல்லாம் எப்படிப்பட்ட படத்தைத்தான் சார் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

ஒரு விநாடி கூட படம் பார்ப்பவர் சோர்ந்து விடக்கூடாதென்று நொடிக்குநொடி நொடிக்கு நொடி கஷ்டப்பட்டு வியர்வையை சிந்தி உழைத்து சிரிப்பு வெடியை கிள்ளிப்போட்டுக்கொண்டேயிருந்த அற்புதமான கலைஞர்களை இப்படித்தானே தோற்டித்து அவமதிக்கிறோம்.

( விறுவிறுப்பான விமர்சனத்துக்கு நடுவில் ஒரு சின்ன விளம்பர இடைவேளை – உலகெங்கும் நல்ல காமெடி படங்கள் நாடகங்கள் மற்றும் போட்டோக்கள் வந்து மக்கள் எப்போதும் சிரித்தமூஞ்சியுடன் இன்பமாக சந்தோஷமாக வாழ ஆதரிப்பீர் போடிசார்கார் ‘’ஆப் கீ பார் போடி சர்க்கார்’’)

இது எந்தளவுக்கு சிறப்பான காமெடி படம் என்பதை விளக்க படத்தின் சில விஷயங்களை மட்டும் சாம்பிளுக்கு பார்ப்போம். முதலில் படத்தின் தலைப்பிலிருந்து தொடங்குவோம். தலைப்பே மிகச்சிறந்த பொலிடிகல் சட்டையர்! இன்று தமிழக அமைச்சர்களை பீடித்திருக்கிற கொடிய நோயான குனிஞ்சமேனியாவை சாடுகிற வகையில் நிமிர்ந்து நில் என்று தலைப்பு வைத்ததிலேயே சமுத்திரக்கனியின் நகைச்சுவை உணர்ச்சி பளிச்சிடவில்லையா!.

அம்மாவுக்கோ அதிமுக அம்மாஞ்சிகளுக்கோ இந்த விஷயம் புரியவில்லை போலிருக்கிறது. புரிந்திருந்தால் தடை விதித்திருப்பார்கள். அதிமுக தொண்டர்களுக்கு இதெல்லாம் புரிகிற அளவுக்கு மூளை இருந்தால் இந்நேரம் கட்சியை விட்டு போய் ஏதாவது மானம் மரியாதை கிடைக்கிற கட்சிக்கு மாறியிருப்பார்களே.

பல அதிரடி ஆக்சன் காமெடி காட்சிகள் நிறைந்த படம்தான் நிமிர்ந்து நில் என்றாலும் எமோஷனல் காட்சிகளுக்கு குறைவேயில்லை. இந்தப்படத்தில் அம்மாவின் தொண்டர்களில் முக்கியமானவர்களில் முக்கியமானவரான சரத்குமார் கூட இருக்கிறார். அவர்தான் சிபிஐ ஆபீசர். படத்தில் வருகிற முதலமைச்சர் போர் அடிக்கும்போதெல்லாம் சரத்குமாரை கூட்டிவந்து நிற்கவைத்து நாக்கை புடுங்கிக்கொள்வதுபோல திட்டுகிறார். சரத்குமாரும் நெளிந்து நெளிந்து வாங்கிக்கொள்கிறார். உண்மைக்கு நெருக்கமாக படமெடுக்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா..? ஒருமுறை முதலமைச்சரிடம் திட்டுவாங்கிவிட்டு சோகமாக தன்னந்தனியாக அழாத குறையாக புலம்பிக்கொண்டே வருகிற காட்சியில்தான் எவ்வளவு இயல்பாக உண்மையாக அய்யுய்யயோ பார்க்கிற யாருக்குமே கண்கள் கலங்கி குளமாகிவிடும். அப்படி ஒரு காட்சி.

படத்தின் முதல் காட்சியிலேயே அப்பா இல்லாத பையனான ஜெயம் ரவியை நாமக்கல் கோழிப்பண்ணை ஸ்கூல் ஒன்றில் கொண்டுபோய் சேர்த்து வன்கொடுமை செய்கிறார் அவருடைய அம்மா! எப்பயும் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் அந்த பள்ளி மாணவர்கள்தான் வாங்குவாங்களாம், பெருமையாக சொல்லுவார் ஸ்கூல் ஓனர் நாசர். அந்த நாமக்கல் கோழிப்பண்ணையில் 12 ஆண்டுகள் படிக்கும் ஜெயம்ரவிக்கு ஒரு கல்லூரியில் சீட்டு கிடைக்கிறது அங்கே ஐந்தாண்டுகள் படிக்கிறார்.

இதெல்லாம் முதல் ஐந்து நிமிடத்தில் காட்டப்படுகிறது. வாழ்க்கையின் 12ஆண்டுகளை கோழிப்பண்ணையிலும் பிறகு 5 ஆண்டுகள் ஆட்டுமந்தையிலும் கழித்துவிட்டவரை, திடீரென படிப்பு முடிந்துவிட்டது உனக்கு வயசாகிடுச்சு என சொல்லி வெளியே விரட்டிவிடுகிறார்கள். 17ஆண்டுகள் என்னதான் படித்தாரோ ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத மரமண்டையாக ஊருக்குள் வருகிறார்.

சின்னத்தம்பி பிரபுவுக்காச்சும் தாலியைத்தவிர குஷ்புவோடு டூயட் பாடுகிற கிஸ்ஸடிக்கிற சாந்திமுகூர்த்தம் பண்ணுகிற அளவுக்கு உலகம் தெரியும். ஆனால் ஸ்டேட் பஸ்ட் எடுத்த பெரியதம்பி ஜெயம்ரவிக்கோ அதுகூட தெரியாத அப்பாவியாக இருக்கிறார். அமலாபால்தான் படம் முழுக்க ஜெயம்ரவியைப்போட்டு கஷ்டப்படுத்துகிறார். டூயட் காட்சிகளில்கூட ஜெயம்ரவிக்கு என்ன செய்வதென்று தெரியாமல்தீடிர் தீடிர் என அமலாபாலின் இடுப்பை பிடித்துக்கொண்டு ஃபீல்பண்ணுகிறார் பாவம்!

அப்பாவி அம்பியான ஜெ.ரவி 17வருடமாக ரோட்டுக்கு கூட வந்ததில்லை போல! சாலையில் நடக்கும்போது ஒரமாக நடக்க வேண்டும் என்பதுகூட தெரியாமல்.. முதல் காட்சியிலேயே ஒன்வேயில் நடுரோட்டில் நடக்கிறார்.. அந்த வழியாக போகிற ஆட்டோக்காரர் கேவலமாக திட்டிவிட்டு போகிறார். அவரை சுற்றி எல்லோரும் செல்போனில் பேசுகிறார்கள் கம்ப்யூட்டரில் காதலிக்கிறார்கள் மிரண்டு போய் பார்க்கிறார்! ஒரே பெண் நாலைந்து பேரை காதலிக்கிறார் என்று கோபப்படுகிறார். சூரிதான் வந்து உலகத்தை அவருக்கு புரியவைக்கிறார்!

ஜெயம்ரவிக்கு அம்மாவின் பொற்கால ஆட்சியில் தீயசக்திகளின் சதியான் கட்டான மின்வெட்டு பிரச்சனை கூட தெரியவில்லை பாருங்கள். இயங்காத ட்ராபிக் சிக்னலில் நின்றுகொண்டு டிராபிக் ஜாம் பண்ணுகிறார். அவரால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. அதுபோதாதென்று போலீஸ்காரர் மூஞ்சியில் பீச்சாங்கையை வைத்து கடுப்பேத்துகிறார்! கேட்டால் அப்பாவியாம்… பஸ்ஸிலேயே வாழ்க்கையில் பயணிக்காத அந்த அப்பாவியின் பேண்டிலிருந்து ஒருவர் பர்ஸை திருடிவிடுகிறார்.. அய்யோ என் பர்ஸு என்று கதறுகிறார் ஹீரோ! அவரை விரட்டிக்கொண்டு ஓடினால் திருடனை விட்டுவிட்டு இவரை பிடித்துக்கொள்கிறார்கள்… உஃப்.. இப்படி பார்ப்பவரை பதறவைக்கும் காட்சிகள் நிறைந்த படம்தான் இது.

இப்படி பல பாதிப்புகளுக்கு உள்ளாகும் ஹீரோவை ஜெயிலில் போட்டுவிட அங்கே சப்பளாங்கட்டை போட்டு அமர்ந்திருக்கிற அவருக்கு ஞானம் வருகிறது! உடனே அம்மா அப்பா முயல் பூனை உலகம் கவர்மென்ட் ஆபீஸ் லஞ்சம் ஊழல் அக்கிரமம் ரமணா ஜென்டில்மேன் முதல்வன் அன்னா ஹசாரே அர்விந்த் கேஜரிவால் நீயா நான என எல்லாமே தெரிந்துவிடுகிறது. உடனே இயக்குனரும் மேற்சொன்ன படங்களிலிருந்து கொஞ்ச கொஞ்ச சீன்களை பொறுக்கிப்போட்டு புயலென புறப்பட்ட ஜெயம்ரவியின் உதவியோடு இந்தியாவை வல்லரசாக மாற்றுகிறார்.

படம் முழுக்க ஏகப்பட்ட மெசேஜ்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார் இயக்குனர். உலகில் இருக்கிற எல்லா துன்பங்களுக்கும் காரணம் ஆசை என்றார் புத்தர். ஆனால் இயக்குனர் எல்லா பிரச்சனைக்கும் காரணம் அரசு அலுவலகங்களில் வாங்குற லஞ்சம்தான் அதை ஒழிச்சிட்டா இந்தியாவை வல்லரசாக்கிடலாம் என்கிறார். அடடா!

விடாப்பிடியாக ஜெயம்ரவியையும் கோபிநாத்தையும் போட்டு பிதுக்கி லஞ்சம் ஊழலை ஒழித்துக்கொண்டிருக்கும்போதுதான் தான் எடுத்துக்கொண்டிருப்பது சினிமா என்று நினைவு வருகிறது இயக்குனருக்கு உடனே ஆந்திராவிலிருந்து நாலைந்து ஆன்ட்டிகளை அழைத்துவந்து ஜாலியாக கவர்ச்சி டான்ஸ் ஆடவிடுகிறார்! அவர்களும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் ஆட்டி ஆட்டி ஆடுகிறார்கள். நாலைந்து டாடா சுமோகளை பறக்கவிடுகிறார். ஜெயம்ரவி டபுள் ஆக்சனில் சண்டைபோடுகிறார் சமூகசீந்தனை பீய்ச்சி அடித்து படம் பார்ப்பவர் முகத்தில் தெறிக்கிறது!

எப்போதும் போல இறுதியில் தர்மம் வெல்கிறது. அவ்வளவு பிராடு வேலைகள் பண்ணின ஜெயம்ரவியை ‘’இந்த கோர்ட்’’ எப்போதும் போல விடுதலை செய்துவிடுகிறது! படம் முடிய லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து ஆடியன்ஸெல்லாம் பிட்ஸ்வந்ததுபோல விரைப்பாக நிமிர்ந்துநிற்கிறார்கள்.

17 April 2014

அலுவலகத்து அசைவம்




ஒரு தனியார் பத்திரிகை அலுவலகத்தில் அசைவ உணவுகள் சாப்பிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அறிவிக்கிற சுற்றறிக்கை ஒன்று ‘எப்படியோ’ சமூகவலைதளங்களுக்கு நடந்து வந்து எப்போதும் போல கன்னாபின்னாவென்று உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த அலுவலக கேன்டீனில் சைவ உணவுகள் சாப்பிடுகிற பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் இனி யாரும் அசைவ உணவுகள் கொண்டுவந்து சாப்பிட வேண்டாம் என்பது மாதிரி அந்த சுற்றறிக்கை எழுதப்பட்டிருக்கிறது.

அசைவம் சாப்பிடுவதென்பது அவ்வளவு பெரிய குற்றமா? அதெப்படி அசைவத்திற்கு தடைவிதிக்கலாம்? அநியாயம் அக்கிரமம் சைவர்கள் ஒழிக சைவம் ஒழிக என்று ஆளாளுக்கு அலறிதுடித்தனர். அடிப்படையில் அடியேன் அசைவன் என்பதால் அந்த சுற்றறிக்கையை கண்ட அடுத்த நொடி அப்படியே நரசிம்மா விஜயகாந்த் போல இரண்டு புஜங்களும் வெடிக்க இரண்டு கன்னங்களும் துடிக்க கண்கள் சிவக்க...

ஆனால் பாருங்கள் அந்த சுற்றறிக்கை அந்த தனியார் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்குமான தனிப்பட்ட விவகாரம், இதைப்பற்றி ஆதரிப்பதும் கண்டிப்பதும் அல்லது விவாதிப்பதும் கூட அங்கே பணியாற்றுகிற ஊழியர்களின் நிர்வாகத்தினரின் விருப்பம் தொடர்பானது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே அந்த அலுவலக நிர்வாகத்தையும் அதன் முடிவையும் இதிலிருந்து தள்ளி வைத்துவிட்டு இதில் இருக்கிற சிக்கலை மட்டும் பார்க்கலாம்.

எல்லா அலுவலகங்களிலும் இருக்கிற சகஜமான பிரச்சனைதான் இது. நான் இதுவரை பணியாற்றிய எட்டு அலுவலகங்களிலும் இதை பார்த்திருக்கிறேன். நேற்று வைத்த கிழங்கா மீன் குழம்பை டிபனில் எடுத்துக்கொண்டு போய் கேன்டீனில் தின்று அதற்காக மெமோவெல்லாம் வாங்கியிருக்கிறேன். சைவர்களுக்கும் அசைவர்களுக்குமான சண்டை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே இருக்கக்கூடியதுதான்.

காய்கறியில் தொடங்கி மீன்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, பாம்புக்கறி, தவளைக்கறி என எதை வெட்டி குடல்நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக ஆக்கி வறுத்து பொறித்து ஃப்ரை பண்ணி கொடுத்தாலும் ருசித்து ரசித்து சாப்பிடக்கூடியவன் நான். எனக்கு எப்போதுமே மாமிசம் உண்பதென்பது ஒரு கொண்டாட்டமான அனுபவமாகத்தான் இருந்திருக்கிறது. அதனாலேயே வாரத்தின் ஏழு நாட்களிலும் எப்பாடுபட்டாவது ஒரு வேளையாவது அசைவத்தை உணவுக்குள் நுழைத்துவிடுவேன்.

ஒரு முட்டை கூட இல்லாமல் ஒருகவளம் சாப்பாடு கூட வாய்க்குள் இறங்காது. ஒரு துண்டு கருவாட்டை வைத்துக்கொண்டு ஒரு சட்டி பழைய சோற்றைக்கூட தின்றுவிடுவேன். அப்படிப்பட்ட பறக்கமுடியாத அசைவ பட்சி நான். அப்படிப்பட்ட என்னாலேயே சில நேரங்களில் சில குறிப்பிட்ட அசைவ உணவுகளை கண்டால் குமட்டிக்கொண்டு வரும்! காரணம் ஒவ்வாமை. இந்த ஒவ்வாமைக்கு காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கம்.

தமிழ்நாட்டில் சைவம்,அசைவம்,முட்டைவம் என மூன்றுவகைதான் உண்டு என்று நம்மில் பலரும் நம்பினாலும் நம்முடைய உணவு பழக்கவழக்கங்களின் அடிப்படையில் வெரைட்டியான அசைவ சைவ உட்பிரிவுகள் உண்டு. அவை பின்வருமாறு…

*காய்கறியைத்தவிர வேறெதையும் சாப்பிடாதவர்கள்.
*முட்டை மட்டும்
*ஆடுகோழி சாப்பிடாமல் மீன் மற்றும் முட்டை மட்டும்
*ஆடு கோழி மீன் முட்டை மட்டும் சாப்பிடுபவர்கள் (இந்தபட்டியலில் பெரும்பான்மை பலம் இவர்களுக்கே)
*ஆடுகோழி மீன் முட்டையோடு மாட்டுக்கறியும்
*மாட்டுக்கறியோடு பன்றிக்கறியும்
*மாட்டுக்கறி பன்றிக்கறி மட்டுமல்லாது காக்காக்கறி, நாய்க்கறி, எலிக்கறி

இந்த பட்டியலில் இன்னும் நிறைய சேர்க்கலாம். அது படிப்பவரோடு எழுதுபவரையும் கூட குமட்டச்செய்யும்.. என்பதால் இங்கே தவிர்க்கப்பட்டிருக்கிறது.

வாத்து, முயல், காடை, முதலானவை ஆடு கோழி சாப்பிடுபவர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. (சைவத்திலும் கூட வெங்காயம் சாப்பிடாதவர்கள், பூமிக்கு கீழே விளைந்ததை உண்ணாதவர்கள் என உட்பிரிவுகள் உண்டு! ஃபேஷனுக்காக அல்லது பெருமைக்காக சைவமாக மாறியவர்கள், வீட்டில் அசைவமாக இருந்தாலும் கொள்கைக்காக சைவம், அல்லது சுவை பிடிக்காமல் சைவம் எனவும் பிரிவுகள் உண்டு!

மேலே குறிப்பிட்ட இந்த பட்டியல் பெரும்பாலும் வீட்டில்தான் கம்பல்சரியாக கடைபிடிக்கப்படும். இதிலிருந்து மாறுபட்டு வேறு வகை மாமிசத்தை முயற்சிப்பவர்கள் வீட்டுக்கு வெளியேதான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

எனக்குத்தெரிந்த சுத்த சைவ குடும்பத்தில் பிறந்த பையன்கள் பலரும் பாரில் குடிக்கும்போது மட்டும் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். இவர்களில் பலரும் ஆடு சாப்பிடமாட்டார்கள். மாடு என்றால் கையெடுத்து கும்பிடுவார்கள். எங்கள் வீட்டில் ஆடுகோழி முட்டை மீன் மட்டும்தான் அனுமதி என்பதால் எனக்கு இஷ்டமான மாட்டுக்கறியை கடைகளில் மட்டும்தான் ருசிக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். மாட்டுக்கே இந்த நிலைமைதான் என்றால் வீடுகளில் பன்றிக்கறி பற்றி சொல்லவும் தேவையில்லை.

ஆட்டுக்கறி மட்டுமே சாப்பிடுகிறவரின் வீட்டில் தப்பித்தவறி மாட்டுக்கறி நுழைந்துவிட்டாலே அபச்சாராம் ஆகிவிடும். தீட்டுபட்டுவிடும். அவ்வளவுதான் ஆச்சா போச்சா என்று தையதக்கா ஆட்டம் ஆடத்தொடங்கிவிடுவார்கள். முதலில் அந்த கருமத்தை கொண்டுபோய் வெளிய கொட்டுங்க.. என்று பதறித்தான் போய்விடுவார்கள். ஆடுகோழி வாத்து முயல் எல்லாம் சாப்பிட ஏற்றது ஆனால் இவர்களுக்கு மாடு மட்டும் தெய்வம்! அதைக் கொல்வது பாவம்!

மாட்டுக்கறி சாப்பிட்டாலும் வீட்டில் பன்றிக்கறியை திறந்துவிட்டால் போச்சு… உங்களை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார்கள். மாடு எப்படி புனிதமோ அதுபோல பன்றியென்றாலே அது அசிங்கம். இப்படி ஒவ்வொரு லெவலிலும் இன்னொன்று அசிங்கம் அபச்சாரம்… அந்த அளவுக்கு நமக்கெல்லாம் ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் எஸ்ட்ரா எஸ்ட்ராக்களும் முக்கியம். இதில் சாதி மத வேறுபாடுகளே கிடையாது. எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் இது உண்டு. இதில் அடுக்குமுறை கூட உண்டு. இப்படி அசைவம் சாப்பிடுபவர்களுக்குள்ளேயே பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் தயக்கங்கள் இருக்கும்போது சைவம் சாப்பிடுவர்கள் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம்.

ஆடு,கோழி சாப்பிடுகிற ஒரு அசைவருக்கு மத்தியில் மாட்டுக்கறியையோ பன்றிக்கறியையோ பிரித்து சாப்பிட்டுப்பாருங்களேன். கட்டாயம் பெரும்பாலானர்களால் அந்த மணத்தை தாங்கிக்கொள்ளவே முடியாது. சிலர் வாந்தி எடுப்பதையும் கூட பார்த்திருக்கிறேன். அவர்களால் தொடர்ந்து கண்முன்னே அமிழ்தத்தை வைத்தாலும் ஒரு வாய்கூட சாப்பிட முடியாது.

அதை நானே கூட அனுபவித்திருக்கிறேன். ஒரு முறை நண்பர்கள் சேர்ந்து எலிக்கறி முயற்சித்தபோது ஒரு மிடறு பிய்த்து வாயில் போட்டதுதான் தாமதம்… அதன் மணத்தினை கூட தாங்குமுடியாமல் விடிய விடிய வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். காக்காக்கறி முயற்சிக்க அழைத்தபோது முடியவேமுடியாதென மறுத்துவிட்டிருக்கிறேன். காரணத்தை சொல்லவும் தேவையில்லை.

இந்த ஒவ்வாமை அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவத்திற்கு பழகியவர்களுக்கு இயல்பிலேயே ரொம்பவும் அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். நண்பர்கள் அசைவம் சாப்பிடும்போது நட்புக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்வதை பார்த்திருக்கிறேன்.

நட்புக்காக எப்போதாவது அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்ளலாம். ஆனால் தினமும் அலுவலக கேன்டீனில் என்னும்போது எரிச்சல் வரத்தானே செய்யும். சைவத்திற்கு பழகிய உங்களுக்கு பக்கத்தில் ஒருவர் மணக்க மணக்க மத்திமீன் குழம்பும் நங்குகறுவாடும் சாப்பிட்டால் நிச்சயமாக உங்களால் உங்கள் உணவை சாப்பிடவே முடியாது. அதுவும் இன்று எல்லா அலுவலகங்களிலும் ஏசி வசதி செய்யப்பட்டுவிட்ட காலத்தில் சிறிய மணம் கூட எங்கும் நிறைந்து உங்களுடைய சகிப்புத்தன்மைக்கு வேட்டுவைத்துவிடும்.

இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தால், ஒட்டுமொத்தமாக அவர்கள் அசைவம் சாப்பிடுவதையும் அலுவலகத்திற்கு அசைவ உணவை எடுத்துவருவதையும் தடை செய்வது தனிநபரின் உரிமையில் தலையிடுகிற செயலாகும். அதனால் அலுவலகத்தில் சைவர்கள் அதிகமிருக்கும் பட்சத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கென்று தனியாக இடம் ஒதுக்கி கொடுத்துவிடலாம். அல்லது சைவ அசைவ ஹோட்டல்கள் இருப்பதுபோல இருபிரிவினருக்குமான தனித்தனி கேன்டீன்கள் வைக்கலாம். இது சிறந்த மாற்றுவழியாக இருக்கும். அவர்களுடைய உரிமைகளையும் காப்பாற்றலாம். அல்லது ஒருவரைவேலைக்கு சேர்க்கும்போதே நீங்கள் அசைவம் சாப்பிடுபவர் என்றால் அலுவலக வளாகத்தில் ‘’ஸ்ட்ரிக்ட்லி நோ நான்வெஜ்’’ என முன்னமே சொல்லிவிடலாம். அதை ஒப்புக்கொண்டு வேலைக்கு வருபவரை யார் தடுக்கப்போகிறார்கள்.

நான் உணவருந்தும்போது எனக்குப்பக்கத்தில் ஒருவர் அமர்ந்துகொண்டு எலிக்கறியையோ பெருச்சாளியையோ ருசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் சத்தியமாக என்னால் என்னுடைய உணவை சாப்பிட முடியாது. நிச்சயமாக நான் வேறு இடம் தேடித்தான் ஆகவேண்டும். இங்கே சகிப்புத்தன்மை என்பது ஓரு நாள் இரண்டுநாள் வேலைக்கு ஆகுமே தவிர்த்து தினமும் என்றால் நிச்சயமாக முடியாது. அதுதான் நிதர்சனம்.

16 April 2014

நான் சிகப்பு மனிதன்




சசிக்குமார் நடித்திருக்க வேண்டிய காவியம். மயிரிழையில் மிஸ்ஸாகி விஷால் நடித்துவிட்டார் போலிருக்கிறது. சசிகுமார் மாதிரி கலைஞருக்கு ‘நண்பர்களின் துரோகம்’ நிறைந்த சப்ஜெக்ட் என்றால் அப்படியே கொலாப்புட்டு தின்பதுமாதிரி.. க்ளைமாக்ஸில் ‘’டே நண்பய்ங்கடா.. நல்லவன்ய்ங்கடா.. வீட்ல் ஆயா ஷொல்ச்சுடா’’ மாதிரி ஜாலிபஞ்ச் வசனம் பேசுவதற்கு தோதான கதை அமைப்பு கொண்ட படம் இது.

இதுவரை தமிழ்சினிமா உலகம் கண்டிராத புத்தம் புதிய நோயான நார்கோலெப்ஸி என்கிற பயங்கரமான வியாதியை கஷ்டப்பட்டு தேடிகண்டுபுடிக்க எடுத்துக்கொண்ட முயற்சியில் ஒரு அரை சதவீதம் அதை சுற்றி சுவாரஸ்யமான கதை பண்ணவும் முயற்சிசெய்திருக்கலாம். முதல் பாதியில் ஜாலிகோலியாக போகிற வண்டி, இன்டர்வெல்லுக்கு பிறகு எங்கெங்கோ திருச்சி, திண்டுக்கல், வியாசர்பாடி, காஷ்மீரெல்லாம் சுற்றி மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்குள் படம் பார்க்கிறவருக்கு நார்கோலெப்ஸி வந்து கொரட்டை விட்டு தூங்கிவிடுகிறார்!

இன்டர்வெல்லுக்கு பிறகு ரொம்ப நேரமாக தூங்கிக்கொண்டிருந்த பார்வையாளர் திடீரென க்ளைமாக்ஸில் முழித்துக்கொள்ளுகிறார். கண்ணைக்கசக்கிக்கொண்டு க்ளைமாக்ஸை பார்த்தவர் ‘’இந்த எழவுக்கு இன்னும் பத்து நிமிஷம் ஏசி காத்துல சேத்து தூங்கிருக்கலாம் பாஸு.. முடியலடா டேய்’’ என்று கதறுகிறார்! இந்த சண்டை காட்சியை படமாக்க பாரின்லருந்துலாம் ஆள கூட்னு வந்தாங்களாம்.

படத்தின் பட்ஜெட்டில் லட்சுமிமேனனின் லிப்ஸ்டிக் செலவு மட்டுமே 50 சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கும்போல! இயல்பிலேயே கொஞ்சம் பெரிய உதடுகள் கொண்ட லட்சுமிமேனனுக்கு ஏதோ பாண்டிபஜார் பத்து ரூபா லிப்ஸ்டிக்கையோ அல்லது ஒரு பக்கெட் ஏசியன் பெயின்ட்ஸையோ அப்பியுட்டு உள்ளங்கை அகலத்துக்கு பெரிதாக்கியிருக்கிறார்கள்.

சில பாடல்காட்சிகளில் கவர்ச்சி காட்டவும் முயல்கிறார் லச்சு. சிம்ரன் காலத்து சோம்பல் முறிக்கிற டான்ஸெல்லாம் ஆட ட்ரைபண்ணியிருக்கிறார்! ஏம்மா பொண்ணு அதுக்கு இடுப்புனு ஒன்னு ரொம்ப முக்கியம், கேகேநகர் டபுள்டாங்க் மாதிரி ஒரு இடுப்பை வச்சுகினு.. நீயெல்லாம்…

என்னுடைய தானே தலைவி சிம்ரன் இந்த கொடூரத்தையெல்லாம் பார்க்கமலிருக்க எல்லாம் வல்ல...

படத்தில் ஒரு பாலியல் வன்முறை காட்சி வருகிறது... பழைய மைடியர் லிசா காலத்து பாணியில் எடுக்கப்பட்ட இக்காட்சியும் அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வன்முறையும் மகா கொடூரம். குழந்தை குட்டிகளை அழைத்துச்சென்றால் நெளிவது உறுதி. இந்தபடத்திற்கு எப்படி யூஏ சர்டிபிகேட் கொடுத்தார்களோ! போக கற்பழிப்பு தொடர்ந்து பழிவாங்குதல் எல்லாம 70களிலேயே கலாவதியான பழைய சரக்கில்லையா?

பாண்டியநாடு ஹிட்டாச்சின்னா அது போன பொங்கலுக்கே முடிஞ்சிபோச்சு.. இது அடுத்த படம் என்பதை விஷாலுக்கு யாராவது நினைவூட்டியிருக்கலாம். திமிரு படத்தில் போட்ட சோடாபுட்டி கண்ணாடியும், பாண்டியநாடு முகத்தையும் வைத்துக்கொண்டு படம்நெடுக தூங்கி தூங்கி விழுகிறார்.

ஜிவி ப்ரகாஷ் தன் வீட்டு குப்பைத்தொட்டியிலிருந்து பத்து பதினைந்து ட்யூன்களை பொறுக்கி நாலை பாட்டுக்கும் மீதி நாலை ஆர்ஆர்க்கும் பயன்படுத்தியிருப்பார் போல! சீரியஸ் காட்சிகளில் காதுல குருவி கொய்யிங்குது. பேட்மேன் பட இசையெல்லாம் காதில் கேட்கிறது. சம்பந்தமே இல்லாமல் அவ்வப்போது ஒலிக்கிற பாடல்கள் ஏற்கனே தூங்கி வழிகிற படத்திற்கு தாலாட்டிசைக்கின்றன!

இயக்குனர் தினமும் ‘’சொல்வதெல்லாம் உண்மை’’ பார்ப்பார் போலிருக்கிறது. படத்தில் வரக்கூடிய முக்கியமான கேவலமான ஒரு ஃப்ளாஷ்பேக் பார்க்கும்போது தோணித்து! சுமாரான படம்தான். ரிஸ்க் எடுத்து பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.

விஷால் ரசிகைகளை காதலிக்கிறவர்கள், அல்லது மணந்தவர்கள் வேறு வழியின்றி இப்படம் பார்க்க நேர்ந்தால் இன்டர்வெல்லில் காதலிக்கு ஒரு பெரிய டின்னுல பாப்கார்னும் ஒரு லிட்டர் பெப்ஸியும் வாங்கிக்கொடுத்துவிட்டு அப்படியே அவருடையே தோளில் சாய்ந்து உறங்கிவிடுவது உயிருக்கு நல்லது.