Pages

30 October 2015

போவியா... போவியா...



பெங்களூருக்கு கடைசியாக எப்போது போனேன் என்று நினைவில்லை. ஆனால் சிலபல ஆண்டுகளாவது இருக்கும். இன்பசுற்றுலாவோ என்னவோ பையன்களோடு பஸ்ஸில் போனது நினைவில் இருக்கிறது. மொபைல் போன்கள் பிரபலமடைந்திருந்த நேரம்… மொபைல் வாங்க ஆக்சசரிஸ் வாங்கவென்று சிலமுறை. குறுகிய காதலொன்றின் நிமித்தமாக சிலமுறை. மிகசமீபத்தில் அலுவலக மீட்டிங்கிற்காக அதிகாலை ஃப்ளைட் பிடித்து அதிகாலையிலேயே இறங்கி ஒருமணிநேரத்தில் வேலையை முடித்து அடுத்த விமானத்தில் காலையிலேயே சென்னை வந்து சேர்ந்தேன். அதுவே கடைசி. ஆறேழு ஆண்டுகள் கடந்திருக்கும். ஃபேஸ்புக் வழியே அவ்வப்போது அந்த ஊர் ட்ராபிக்கில் தியேட்டரில் மாலில் ஆபீஸ்களில் மனிதர்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வதுண்டு.

அந்த ஊர் குறித்த பிம்பம் என்பது என்றுமே குறும்பானதாகத்தான் இருந்திருக்கிறது. புதுப்புருஷன் போல் எப்போதும் பட்டும்படாமல் உரசிக்கொண்டேயிருக்கிற ஓசிஏசி குளிரும் வளவளப்பான கால்களோடும் கட்டைவிரலில் நடக்கும் ஏராளமான கவர்ச்சியை சுமந்துகொண்டு அலைகிற குட்டைப்பாவடை பெண்களுமாக பப்கள் என்னே… குளிர்ந்த நல்பீர்கள் என்னே… மால்கள் என்னே… மலிவு விலை எலக்ட்ரானிக் ஐட்டங்களும் எம்ஜிரோடும் ஆஹா… கப்பன் பாகும் லால்பாகும் அங்கே கட்டிக்கொண்டு கசமுசா பண்ணுகிற காதலர்களும் மரங்களும் பசுமையுமென பெங்களூரு குதூகலிப்பாக மட்டும்தான் நினைவிலிருக்கிறது. பெங்களூரு போய்வருவதே ஒரு ஸூகானுபவமாக மட்டுமே இருந்திருக்கிறது. செட்டில் ஆகணும்னா இந்த ஊர்லதான் ஆகணும் என அடிக்கடி நினைப்பதுண்டு.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அங்கே முகாமிட்டிருந்தேன். மாரத்தானுக்காக. ஊருக்குள் ஓடி ஓடியே அளந்ததுபோக, சும்மாவும் நண்பர் ஒருவரோடு ஸ்கூட்டரில் சுற்றினேன் ஒரே ஒருநாள்தான். பள்ளிக்காலத்தில் முக்குக்கு முக்கு நின்று சைட் அடித்த பைங்கிளியொன்று திருமண வாழ்வில் சிக்கி சீரழிந்து போய் பிள்ளைகுட்டிகளோடு பார்க்க நேரிடும்போது உண்டாகுமே ஒரு இது… அதுதான். அப்படி இருந்தது!

மழைகாலத்திலும் அப்படியொரு பிசுபிசுக்க வைக்கிற கேவலமான வெயில். கொஞ்சம்கூட குளிர்ச்சியே இல்லை. வேர்வையும் புழுக்கமும் இம்சிக்க வந்திருப்பது பெங்களூர்தானா என்று விசாரித்து உறுதிசெய்துகொண்டேன். பசுமையை பார்க்குகளில் மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஹாரன் சத்தம். கொசகொசவென மக்களின் கூச்சல் காதை நிரப்புகிறது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்கள் வரிசையில் நிற்கின்றன. நடந்தே போகக்கூடிய இடங்களுக்கெல்லாம் கூட காரில்தான் போகிறார்கள். அதில் பாதி பேருக்கு வண்டி ஓட்டவராது என்றார் நண்பர். (பெங்களூரில் மொத்தமிருக்கிற வாகனங்களின் எண்ணிக்கை 55லட்சம், அதில் 11லட்சம் கார்களாம்! ) சாலையில் இறங்கி நடந்தால் நிம்மதியாக நடக்கவும் கூட முடியாதபடி கும்பல் கும்பலாக மக்கள் அலை மோதுகிறார்கள். புகை தூசு… மூச்சுமுட்டுகிறது. (காற்றுமாசுபாட்டில் பெங்களூருக்கு இரண்டாமிடம்!) இந்த கொடூரங்களுக்கு மத்தியில் மெட்ரோ ரயில் வேலைகள் வேறு டொக்கொ டொக்கென்று டொக்குகிறார்கள். காசுள்ள ஐடிகாரர்களுக்கு மட்டும் வால்வோ பஸ் விட்டிருக்கிறார்கள் போல!

ஊரில் மூலைக்கு மூலை பார்களை திறந்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் குடிப்பதைப்பற்றி சகஜமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் எங்குபார்த்தாலும் நவநாகரீக அந்நிய வடநாட்டு முகங்கள். உள்ளூர் மனிதர்களையெல்லாம் மொத்தமாக ஒழித்துவிட்டது போலிருந்தது. எங்குபார்த்தாலும் நிறுவனங்கள், சோர்ந்த முகத்துடன் பணியாளர்கள், டாப்டூ பாட்டம் ப்ராண்டட் மனிதர்கள். இது முழுக்கவும் வணிகமயமாக்கப்பட்ட வேறொரு ஊராகத்தெரிந்தது.

இந்த மாற்றம் ஐடி வெடிக்கு பின்னால் உருவாயிருக்கலாம். அந்நியர்களின் வரத்து எல்லைமீறி அதிகரித்ததால் உண்டான விளைவாகவும் இருக்கலாம். வெளியூரிலிருந்து இங்கே வந்து குடியேறிய பலரும் இங்கேயே சொந்தவீடு கார் என செட்டில் ஆகிவிட்டிருக்கிறார்கள் என்றார் நண்பர். குறைந்தபட்சம் ஒரு ஃப்ளாட்டாவது ஊருக்கு வெளியே வாங்கிபோட்டிருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் இந்த ஊரின் மேல் அக்கறையில்லை. அதை மேலும் மேலும் சுரண்டிக்கொண்டேயிருக்கிறார்கள். அது வந்தேறிகளின் இயல்புதான். (இங்கே வந்தேறி என்கிற சொல் Immigrant என்கிற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது) சென்னையில் அதை நிறையவே உணர்ந்திருக்கிறேன். சென்னை வந்தேறிகள் கூட தங்களுக்கு சோறுபோடுகிற இந்நகரத்தின் மீது கொஞ்சமாவது அக்கறையை எப்போதாவது வெளிப்படுத்துவார்கள். ஆனால் பெங்களூரு அவ்விஷயத்தில் சுத்தமாக ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளை விடவும் இப்போது லஞ்சமும் ஊழலும் ஊருக்குள் தலைவிரித்தாடுவதாக ஒருவர் புலம்பினார். கூடவே குற்றச்சம்பவங்களும் கணிசமாக...

வந்தேறிகளுக்கு எப்போதுமே தங்கள் சொந்த ஊர் அதன் பெருமை அதன் புகழ் இதில்தான் நாட்டமிருக்குமே தவிர பிழைக்கவந்து ஊர் குறித்த கவலையோ வருத்தமோ இருக்காது. காரணம், என்றைக்காவது ஒருநாள் சொந்த ஊருக்கே திரும்பிவிடுவோம் என்கிற நம்பிக்கையின் தொடர்ச்சியாக இருக்கலாம். பிழைக்க வந்த ஊரின் சூழலை இன்னும் கூட கொஞ்சம் சுரண்டிக்கொள்வதிலோ அழிப்பதிலோ தயக்கமே இருப்பதில்லை. பெங்களூருவின் சுற்றுச்சூழல் அதன் எழிலெல்லாம் பாழாகிறதே என்று வருத்தப்பட்டு யாருமே தமிழில் எழுதி வாசித்த நினைவில்லை. ஆனால் ஊருக்குள் நிறைய தமிழ்தான் கேட்கிறது. வா.மணிகண்டன் ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம் MAY BE. இனி பெங்களூரு என்கிற பெயர் கூட பழைய துள்ளலைத்தருமோ தெரியவில்லை ஆனால் இந்த ஊருக்கு சென்னையே தேவலாம் என்கிற எண்ணம் மட்டும் எஞ்சி இருக்கிறது. சென்னைக்கு திரும்பி அடுத்த நாளில் ‘தீபாவளி சீசன் ரங்கநாதன் தெரு’’விலிருந்து தப்பியோடி வந்த உணர்வை பெற்றேன். பெங்களூரு தன் வளர்ச்சிக்கு கொஞ்சம் அதிகமாகவே விலை கொடுத்திருக்கிறது.

***


06 October 2015

லடாக் மாரத்தான் 2015




உலகிலேயே உயரமான இடத்தில் நடக்கிற மாரத்தான் போட்டி, லடாக்கின் லேயில்! கடல் மட்டத்திலிருந்து பதினோறாயிரம் அடி உயரத்தில்…. உலகின் கூரை மேல் ஓடவேண்டும். மரங்கள் இல்லாத குளிர் பாலைவனம். உலக அளவில் நடக்கிற மிககடினமான மாரத்தான்களில் ஒன்றாக கருதப்படுவது. நம்முடைய அத்தனை நம்பிக்கைகளையும் சோதித்துப்பார்க்கிற போட்டி. எனவே இதுவரை ஓடியதிலேயே இதுதான் மிகவும் மோசமாக இருக்கப்போகிறது என்பது வீட்டிலிருந்து கிளம்பும்போதே தெரியும். என்றாலும், ஓடும்போதுதான் உயிர் கழண்டு ஓடுகிற அளவுக்கு இருக்குமென்பதை உணரமுடிந்தது!

லே யில் ஆக்ஸிஜன் அளவு சென்னையோடு ஒப்பிடும்போது இருபதிலிருந்து முப்பது சதவீதம் மட்டுமே! அதீத உயரமும், மரங்களற்ற நிலப்பரப்பும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. எங்கு பார்த்தாலும் முக்கோணப் பள்ளத்தாக்குகளும், நடுவில் பாயும் குளிர் ஆறுகளும், பச்சை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என கலர்கலராக மலைகள். எந்த மலையிலும் மரங்களில்லை. இந்த ஊருக்குள் எப்படி ஓடினாலும் இரண்டு மலைகள் ஏறி இறங்கியே தீரவேண்டும் என்பது மட்டும் புரிந்தது! மலை தவறாமல் புத்தமடலாயங்கள் வைத்திருக்கிறார்கள். சென்னை சாலைகளில் ஓடிப்பழகிய எனக்கு மலையேற்ற ஓட்டமெல்லாம் (UPHILL RUNNING) ஸூத்தமாக பரிச்சயமில்லை. சென்னையில் அப்ஹில் ரன்னிங் என்றால் மேம்பால ரன்னிங்தான்! அதுகூட எப்போதாவதுதான்.

நான் ஓடியது 21 கி.மீ தூரமுள்ள அரைமரத்தான். பந்தய நாளுக்கு சில தினங்கள் முன்பே ஐந்து கி.மீ ஓடிப்பார்த்து மலையேறும் போது மூச்சிரைக்கிறது… இறங்கும்போது ஜாலியாக இருக்கிறது… மூக்கு கையெல்லாம் குளிரில் விரைத்து போகிறது என்பதையெல்லாம் கண்டுபிடித்து அதற்கேற்ப ஒரு ஸ்ட்ராடஜியை உருவாக்கி வைத்திருந்தேன்.

‘’புதுச்சூழலுக்கிணங்கல்!’’ ACCLIMATISATION. நமக்கு பழக்கமில்லாத வெப்பநிலை குளிர்நிலை வாயுநிலை உள்ள பகுதிகளுக்கு சென்று அங்கேயே சிலநாட்கள் தங்கி நம்முடைய உடலை அதற்கேற்ப தயார்படுத்திக்கொள்வது! அப்படி பண்ணினால்தான் ஜம்மு காஷ்மீர் மாதிரியான உயரமான இடங்களில் ஓடமுடியும். திடீரென்று ஒருநாள் வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் குதித்து அடுத்தநாளே ஓடி ஓடி தீவிரவாதிகளை கொல்வதெல்லாம் விஜயகாந்த் அர்ஜூனால்தான் முடியும்!

எனவே நான் போட்டிக்கு பத்து நாள் முன்பாகவே சென்று சேர்ந்தேன். தரைவழி செல்வதுதான் உடலுக்கு நன்மை பயக்குமென்பதால், சென்னையிலிருந்து ஜம்மு, அங்கிருந்து ஸ்ரீநகர், கார்கில் வழி லே வை அடைந்தேன் (இந்தப்பயணக்கதை தனி!) இதற்கே ஐந்து நாட்கள் பிடித்தது. எனக்கு முன்பே இந்தியாவின் மற்றபகுதிகளிலிருந்தும் கணிசமான ஆட்கள் குவிந்திருந்தனர். (நூறுபேருக்கு மேல்!) திட்டப்படி அங்கே சென்று தங்கி எட்டுநாளில் நான்கு நாட்கள் பயிற்சியாக ஓடுவது என்று முடிவெடுத்து… கடைசியில் பயிற்சியாக ஒருநாள்தான் ஓடமுடிந்தது. மற்ற நாளெல்லாம் நன்றாக ஊர்சுற்றினேன்! ராஃப்டிங், ட்ரெக்கிங், சளிபிடித்ததால் நிறைய மூக்கு சிந்திங் என கழிந்தது. திகில் படம் போல தினமும் சளியோடு ரத்தமெல்லாம் பார்க்க வேண்டியிருந்தது.

குளிரில் ஓடும் போது சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலாவது குளிர்! அக்குளிரால் மூக்கு மட்டும் விரைப்பாகி உணர்வற்று போய்விடுவது! ஓடும்போது மூக்குடன்தான் ஓடுகிறோமா இல்லை அது எங்காவது கழண்டு விழுந்துட்டுதா என்பதை தொட்டுதொட்டு பார்க்க வேண்டியிருந்தது. மூக்கு உறைந்துபோவதால் மூச்சுவிடுவதில் சிரமம். வாய்வழியாகத்தான்! ஓட ஓட உடலெல்லாம் வெதுவெதுப்பாக ஆனாலும் கைகள் மட்டும் குறிப்பாக உள்ளங்கைகள் குளிர் அப்படியே தங்கி வளர ஆரம்பித்துவிடுகிறது. இந்த இரண்டு சிக்கல்கள் அல்லாது மலையேறும் போது மூச்சிரைப்பது, வேகமெடுத்தால் தலைக்குள் பூச்சி பறப்பது மாதிரி சிக்கல்களும் இருந்தன!

கடந்த ஒருமாதமாக வெறுங்காலில் ஓடி பயிற்சிபெற்று வந்தேன்! ஆனால் கூரான கற்களின் அந்த தேசத்தில் வெறுங்காலில் ஓடினால் கற்கள் கால்வழி ஏறி மூளையை பதம்பார்க்கும் வாய்ப்பிருந்தது. ஊரில் இறங்கிய மூன்றாவது நாளிலேயே பாதங்களில் வெடிப்பு உண்டாகி அது பாளம்பாளமாக வெடித்து ரத்தம் கேட்க ஆரம்பித்தும்விட்டது.

அதிகாலை ஆறுமணிக்கு உறையவைக்கும் குளிரில் போட்டி தொடங்கிவிட்டது. உள்ளூர் ஸ்கூல் பையன்களுக்கு நடுவில் வெளிநாட்டு வெளியூர் ஆட்டக்காரர்களோடு இறங்கினேன். ஊருக்குள் ஆயிரக்கணக்கில் சுற்றிக்கொண்டிருந்த அழகழகான வெளிநாட்டு உள்நாட்டு மங்கையரில் ஒருவரையும் காணோம்! முழுக்க அவர்களுடைய மாமன்களும் மச்சான்களும் மட்டும்தான் வந்திருந்தனர். அதுவே பெரிய ஏமாற்றமாக இருந்தது.

மூக்கு உறைந்துவிடாமலிருக்க பெட்ரோலியம் ஜெல்லி ஒரு டப்பா போட்டு பூசிக்கொண்டேன். போட்டி தூரத்தின் முதல் பத்து கி.மீ முழுக்க முக்கி முக்கி முழுவீச்சில் ஓடாமல் பொறுமையாக காலுக்கு வலிக்காமல் நுரையீரலுக்கு நோகாமல் ஓடுவது! கடைசி பத்துகி.மீ காட்டுத்தனமாக ஓடி பந்தயதூரத்தை எப்போதும் கடக்கிற நேரத்தில் கடப்பது என்று ஸ்ட்ராடஜியை உருவாக்கியிருந்தேன்.

திட்டமிட்டபடி முதல் பத்து கி.மீ பொறுமையாக ஓட ஒரு மலைதான் ஏறி இறங்கவேண்டியிருந்தது. ஸ்பிட் டுக் என்கிற அந்த மலையின் மேல் ஒரு புத்த மடலாயம் வைத்திருக்கிறார்கள். அங்கே ஒரு உக்கிரமான காளிமாதா சிலை இருக்கிறது. காளியின் முகத்தை துணிபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். இந்துக்கள் நிறையபேர் ‘’காளி கா மந்திர்’’ என்றே கேட்டு வந்தடைகிறார்கள்! அடுத்த சில கி.மீ கிராமங்களின் கடினமாக மண்சாலைகளில்… கடைசி ஏழு கி.மீ ஓட சாலையில் இறங்கினோம். என்னுடைய ஒட்டுமொத்த ஆற்றலையும்திரட்டி ஓட முடிவெடுத்தேன்.

அது ஒரு செங்குத்தான சாலை… ஏறி ஏறி… ஏறிக்கொண்டு மட்டுமேதான் இருந்தது. வழியில் எதிர்படுகிறவர்களையெல்லாம் ‘’எல்லை கிதர் ஹே’’ என்று கேட்க எல்லோருமே ஊப்பர் ஊப்பர் என்றார்கள்! உங்க ஊர்ல ஊப்பர் மட்டுமேதானாடா என்று கேட்கத் தோன்றியது. பாதையும் மேலே ஏறிக்கொண்டே சென்றது. கடைசிவரை ஊப்பர்தான். அடேய் நீச்சேவே இல்லையாடா என்று உடல் கதறியது! கடைசி எட்டு கிலோமீட்டர்களை ஓடிக்கடப்பதற்குள் நுரையீரல் நூடூல்ஸாகியிருந்தது. நடக்கவும் கூட சிரமமாக இருந்தது. பத்தடி ஓடுவதும் பத்தடி நடப்பதுமாக…

பந்தய தொலைவை கடக்கும்போது இரண்டு மணிநேரமும் நாற்பத்திரண்டு நிமிடங்களும் ஆனது! சென்னையில் இதே தூரத்தை இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே முடிப்பேன்! ஓடி முடிக்கும்போது சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. லே வின் கொடுமைகளின் ஒன்று இது. அதிக குளிரிலும் சுட்டெரிக்கும் வெயில். ஆனால் ஒரு துளி கூட வேர்க்காது. உடலில் இருக்கிற நீரெல்லாம் வற்றி டீஹைட்ரேட் ஆனாலும் உணர முடியாது. தலைசுற்றல் வந்தபிறகுதான் தண்ணீரே குடிக்கத்தோன்றும்! சென்னையில் ஓடும்போது பைப்பை உடைத்துவிட்ட மாதிரி வேர்த்துக்கொட்டும். ஆனால் லேவில் ஓடும்போது உடலின் மர்மதேசமொன்றில் இரண்டுதுளிதான் வியர்த்தது.

ஒருவழியாக ஓடிமுடித்து ஓய்ந்து போய் வந்து உட்கார்ந்தேன். மனதிற்குள் மிகப்பெரிய விஷயத்தை சாதித்துவிட்ட திருப்தி. சும்மாவா எல்லோருக்கும் ஓட்டம் ஸ்டார்ட்டிங் பாய்ன்டில் தொடங்கினால் எனக்கு சென்னையிலேயே தொடங்கிவிட்டது. லீவ் போட்டு, பணம் புரட்டி, கடைசி நேரத்தில் மொத்த திட்டத்தையும் கைவிட வேண்டிய நிலைமைகளை சமாளித்து, தன்னந்தனியாக இவ்வளவு தொலைவு கிளம்பி, வந்து சேர்ந்து ஓடிமுடித்திருந்தேன்! உள்ளுக்குள் நெருக்குகிற உணர்வுகள் திரண்டு ஒரு சின்ன அழுகை கண்ணுக்குள் முட்டிக்கொண்டிருந்தது.

பக்கத்தில் ஒரு பெரியவர் என்னைவிட வயதில் மூத்தவர் அவரும் ஓடிமுடித்து வந்தமர்ந்தார். மிகுந்த உற்சாகமாக இருந்தார். கையில் ஜூஸ் டப்பாவை உறிஞ்சிக்கொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தேன். ஊர் பேர் விலாசமெல்லாம் விசாரித்துவிட்டு ‘’எவ்ளோ டைமிங்’’ என்றேன், எட்டுமணிநேரம் என்றார்! ‘ஓ ஃபுல்லா’’ என்றேன். பொதுவாக 42கிமீ நீளமுள்ள முழுமாராத்தான் போட்டிகளில் வயதானவர்கள் ஏழு எட்டு மணிநேரமெல்லாம் நடந்தே முடிப்பதுண்டு. ஆனால் அவரோ முகத்தில் புன்னகையோடு இல்லப்பா ‘’கார்டூங்லா’’ என்றார்.

‘’கார்டூங்லா சேலஞ்ச்’’ உலக அளவில் நடக்கிற அல்ட்ரா மாரத்தான்களில் ஆபத்தானதும் சிரமமானதுமாக கருதப்படுவது. உலகின் மிக உயரமான Motorable road களில் ஒன்றான கார்டூங்லா என்கிற மலையுச்சி கிராமத்திலிருந்து லே வரை ஓடிவரவேண்டும். 18ஆயிரம் அடி உயரத்தில்… நடக்கிற இந்த மாரத்தானில் மொத்தமே ஐம்பது அறுபதுபேர்தான் உலக அளவிலிருந்து கலந்துகொள்ளுவார்கள்! அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவர்தான் அந்த டெல்லிவாலா பெரியவர்! அவர் என்னிடம் நீங்க எவ்ளோ தூரம் என்றார். நான் ஹாஃப் என்று ஷேம் ஷேமாக மென்று முழுங்கினேன். டைமிங் கேட்டார். ஊக்கப்படுத்தினார். அவருடைய முகத்தில் அத்தனை உற்சாகம். ‘’என்னுடை பேரன்கிட்ட சவால் விட்டுட்டு வந்தேன்…’’ என்றார்.

மாரத்தான்கள் உங்களை ஓயவே விடாது. ஓடுகிற ஒவ்வொருவருக்குமான எல்லை ஒரு புதிய ஆரம்பத்தை கண்டடைவதாகவே இருக்கும். ஒருமுறை ஓட ஆரம்பித்துவிட்டால் உங்களுடைய எல்லை என்பது அடுத்த சவாலாகத்தான் இருக்கும். அது விரிவடைந்துகொண்டேதான் செல்லும். பத்து கிலோமீட்டர் ஓடியவர் அடுத்தமுறை 21போக முடிவெடுப்பார். 21 என்றால் 42… அப்படியே அல்ட்ரா.. சைக்ளிங், அயர்ன்மேன்… என்று எல்லைகள் விரியுமே தவிர அப்படா முடிச்சிட்டோம் அவ்ளோதான் என்று உட்காரவிடாது. டெல்லிதாத்தா எனக்கான சவாலை தந்துவிட்டு சென்றார். அடுத்த ஆண்டு கடுமையான கார்டூங்லா பண்ணவேண்டும், அதுவும் எட்டுமணிநேரத்திற்குள்… என நினைத்துக்கொண்டேன். அதெல்லாம் அடுத்த செப்டம்பரில். இப்போதைக்கு டிசம்பரில் நடக்கிற சென்னை மாரத்தானில் FULL MARATHON 42K ஓடவேண்டும்.