Pages

23 March 2017

யார் இந்திய விரோதி?



இன்று நாளிதழ்களில் ஒருவிளம்பரம் வந்திருக்கிறது. பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அந்த விளம்பரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை இந்திய வரலாற்றில் எந்த கார்பரேட் நிறுவனமும் தன்னுடைய நிறுவனத்தை விமர்சிப்பவர்களை ''இந்திய விரோதிகள்'' என வசைபாடியதில்லை. ஆனால் பதஞ்சலியின் விளம்பரம் ''ANTI INDIAN'' என்று தங்களுடைய விமர்சகர்களை குறிப்பிடுகிறது.

பாபா ராம்தேவின் இந்த பதஞ்சலி நிறுவனம் அன்னிய நாட்டு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேசத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதை இந்திய விரோத சக்திகள் தடுக்க நினைப்பதாகவும் அந்த விளம்பரம் குறிப்பிடுகிறது. அதாவது சுதேசி பொருட்கள் விற்பதையும், தரமான பொருட்களை குறைந்த விலைக்கு தருவதையும் தடுக்கவே பாபா ராம்தேவ் மீது குற்றங்களை சுமத்துகிறார்களாம்.

ஒரு உள்ளூர் நிறுவனம் தரமான பொருட்களை விற்பதிலோ, அதை உள்நாட்டிலேயே தயாரிப்பதிலேயோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. யாருமே அதை வாங்கிப்பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சாமியார் மீதும் அவருடைய செயல்பாடுகள் மீதும், அரசியல் நடவடிக்கைகள் மீதும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போதும்... அந்த விமர்சகர்களை இந்தியாவுக்கே எதிரிகளாக சித்தரிக்க முயல்வதுதான் இந்த யோகா வியாபாரிகளின் நோக்கங்களை சந்தேகிக்க வைக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் வன ஆக்கிரமிப்பு சாமியார் ஒருவரைப்பற்றி தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்தபோதும் கூட இப்படித்தான் விமர்சிக்கிறவர்கள் தன்னை விமர்சிக்கிறவர்கள் எல்லோருமே ''இந்து மத எதிரிகள்'' என்கிற முத்திரை குத்த முற்பட்டனர்.

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை FMCG சந்தையில் பெரிதாக வளர்ச்சிகளை எட்டிடாத பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்... பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் மளமளவென வளர்ச்சி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் வளர்ச்சி 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. பாபா ராம்தேவ் துறவி என்பதால், பினாமியாக ஆச்சார்யா பால்கிருஷ்ணா என்பவரை வைத்து இந்த கார்பரேட் சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார். 2.5பில்லியன் டாலர் அளவுக்கு பதஞ்சலிக்கு சொத்து இருக்கிறது. இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் ராம்தேவ் இருக்கிறார்! எல்லாம் யோகா சொல்லிக்கொடுத்து கற்றுக்கொடுத்த பணம்தானாம்!

சமீபத்தில் இந்த ஏழ்மையான நிறுவனத்திற்கு வருமானவரித்துறை வரிவிலக்கு அளித்து அறிவித்துள்ளது. அதாவது பதஞ்சலி ஒரு தொண்டு நிறுவனமாம்! மோடி அரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இப்படி பதஞ்சலிக்கு சலுகைகளை வாரித்தருவது மோடி அரசுக்கு புதிதல்ல... இதற்கு முன்பும் இப்படி பல முறை இதே மாதிரியான வேலைகள் நடந்திருக்கிறது. ராணுவத்தையே பாபா ராம்தேவுக்காக மடக்கிய சம்பவமெல்லாம் உண்டு. பதஞ்சலி தன்னுடைய நிறுவனத்தின் மூலதனமாக தேசபக்தியை மாற்ற முனைகிறது. பதஞ்சலி ஊறுகாய் வாங்கினால் நீங்களும் தேசபக்தராகலாம் என்கிறது. அதற்குத்தேவையான ஊக்கத்தை வழங்க இந்திய அரசே பின்னுக்கு நிற்கிறது.

ஒரு அரசே பின்னால் இருக்கிற ஆணவத்தில்தான் இந்த சாமியார்களால் மிக தைரியமாக தன் விமர்சகர்களை இந்திய விரோதிகளாக்க முடிகிறது. வனத்தை சூறையாடிக்கொண்டே பிரதமரை அழைத்து விழா நடத்தமுடிகிறது. ஏன் பாபா ராம்தேவ், ஜக்கி மாதிரியான சாமியார்களை பாஜக போற்றி வளர்க்கிறது? அவர்களுடைய குற்றங்களை புறந்தள்ளி பொருளாதார அளவில் வளப்படுத்துகிறது? என் கேள்விகளுக்கான விடைகள் மிக அவசியமானவை.

பாஜக விரும்புகிற இந்து ராஜ்ஜியத்திற்கு சில கொள்கைகள் உண்டு. அதை நேரடியாக திணிப்பதை விடவும் இந்த சாமியார்களின் வழி யோகா, ஆயுர்வேதம், மண்ணின் மருத்துவம், ஆர்கானிக், சுதேசி, கோமிய மருத்துவம் என்கிற எண்ணங்களின் விளைவாக மக்களுடைய மனதில் எளிதில் பரவச்செய்ய முடியும். காரணம் மேலே சொன்ன விஷயங்களின் தொடர்ச்சிதான்... தேசபக்தி, பெண்ணடிமைத்தனம், பாலியல் கட்டுப்பாடுகள், கலாச்சரம் காப்பது, வேற்றுமத வெறுப்பு, ஒரினசேர்க்கையாளர்களை அழித்தல், புராணப்பெருமைகள், மாட்டிறைச்சி எதிர்ப்பு, மீட்பர் மோடி, சாதியப்பெருமை, மதவாதமே அல்டிமேட்... போன்ற விஷக்கருத்துகள் எல்லாம்.

பாஜக விரும்புகிற இந்த பரப்புரைகளை மக்களிடையே எளிதில் கொண்டு சேர்க்க இந்த சாமியார்களை விடவும் நல்ல சாட்டிலைட்டுகள் கிடைக்காது. அதனால்தான் இந்த சாமியார்களை தங்களுடைய துணை அமைச்சர்களைப் போல போற்றி வளர்க்கின்றன மோடியின் அரசு.

பதஞ்சலி சாமியாருக்கு இப்படி பொருளாதார உதவிகள் என்றால்... யோகி ஆதித்யநாத் மாதிரியான கூலிப்படை தலைவன்களை இன்னொரு பக்கம் பதவியில் அமரவைத்து அழகு பார்க்கிறது மோடி அரசு. ஒரு ஜாடையில் என்னைப்போலவே இருக்கிறார் என்பதைத்தாண்டி யோகி ஆதித்ய நாத்தை எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே நன்றாகத்தெரியும். அவருக்குதான் என்னைத்தெரியாது. உபியின் இந்த புது முதல்வரை பற்றிய விஷயங்கள் சிலவற்றை அறிந்து சில ஆண்டுகளுக்கு முன்பே வியந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு பல்வேறு விதமான சாதனைகளை இளம் வயதிலேயே செய்த அபாரமான ஆள் இந்த கொலைகார யோகியார்.

விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கிறவர்கள், பெண்களை மயக்கி வேட்டையாடும் காமுகர்கள், அரசியல் ப்ரோக்கர்கள், கூலிப்படை வைத்து கொலை செய்கிறவர்கள் என மதங்களின் பெயரால் மக்களை முட்டாளாக்கும் சாமியார்களில் பல வெரைட்டிகள் உண்டு. அதில் இந்த யோகி ஆதித்யநாத் எனப்படுகிறவர் மதக்கலவர ஸ்பெஷலிஸ்ட். மிகக்குறைந்த வயதிலேயே 50க்கும் அதிகமான மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இஸ்லாமிய மக்களை கொன்றுகுவித்து இன்று முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய சாதனை! அதிலும் இவர் சாதாரண குற்றங்களை கூட இஸ்லாமியர்களுக்ககு எதிரான மதக்கலவமாக மாற்றி இஸ்லாமியர் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து சூறையாடி எரிக்கிற அசகாயசூரர்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது கிரிமினல் பின்னணி உள்ள நட்சத்திர வேட்பாளார்கள் குறித்து புதியதலைமுறை வார இதழுக்காக ஒரு கட்டுரை செய்தோம். கிரிமினல் பின்னணி உள்ள எம்பிக்கள் குறித்து விபரங்கள் சேகரித்துக்கொண்டிருந்த போதுதான் யோகி ஆதித்யநாத்தை அறிந்துகொண்டேன்.

அவரைப்பற்றிய விபரங்களை தேடி வாசிக்க வாசிக்க புல்லரிப்பாக இருந்தது. ரத்தக்கறை படிந்த அவருடைய வாழ்வின் பக்கங்கள் படிப்பவர்களுக்கு மதவெறியையும் அடக்குமுறையையும் அள்ளிவழங்கக்கூடிய அட்சயபாத்திரமாக இருந்தது. மிக இளம் வயதிலேயே தன் சகாக்களோடு இந்து மதத்தை காப்பதற்காக இஸ்லாமிய சுடுகாட்டில் புகுந்து கலவரம் பண்ணிய வீராதிவீரர் இவர். அந்த வழக்குதான் இந்த கலவர சாமியாயாருக்கு பேர்வாங்கித்தந்த மிகமுக்கியமான வழக்கு. அப்போதே அவர் எம்பிதான்! இதுவரை இவர் மீது 12க்கும் அதிகமான எஃப் ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு, அவை சிபிசிஐடி போலீஸாரால் இப்போதும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த யோகியார்தான் இப்போது உபியின் முதல் அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவியேற்க இருக்கிறார். அவருக்குதான் மோடியார் முடிசூட்டவிருக்கிறார். கோரக்பூரின் தெருக்களில் இஸ்லாமியர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஒரு மதவெறியர்தான் இப்போது அதே மாநிலத்தின் முதலமைச்சர். ஒருபக்கம் சாமியார்கள் நம் எண்ணங்களை நோக்கங்களை வடிவமைத்து திட்டமிட.... இன்னொருபக்கம் கூலிப்படையினர் நம்மை ஆளத்தொடங்கி இருக்கிறார்கள்.

திகிலாக இருக்கிறது இல்லையா... மோடி கனவு காணும் புதிய இந்தியா இப்படித்தான் இருக்கப்போகிறது. நம்முடைய அடிப்படையான சுதந்திரம் பறிக்கப்பட்டு, அடிப்படைவாதத்தின் கொடுங்கரங்கள் நம்மை கட்டுப்படுத்தும். அதற்கான திட்டமிடல்தான் இவை எல்லாம்...

இந்த மக்கள் விரோதிகளை அவர்களுடைய செயல்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பதஞ்சலியின் பாஜகவின் பக்தர்களின் பார்வையில் 'நீங்களும் இந்திய விரோதியே!'