பாட்டி வடை சுட்ட கதை ஒரு நகைச்சுவை கதை அது நம் எல்லாருக்கும் நன்கு தெரியும் , சிறு வயது முதலே நமக்குநம் வீட்டில் சொல்லி தந்த கதைதான் .
அதே கதையை தமிழ்சினிமாவுக்கு எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம் என்று சிந்தித்தால் இன்று வெளியாகும் பல படங்களின் கதைகளும் அதிலிருந்து உருவப்பட்டிருக்குமோ என்கிற ஐயம் ஏற்படுகிறது , சில உதாரணங்கள் உங்கள் பார்வைக்கு ஒரு குட்டி தொடராக தரலாம் என்றொரு எண்ணம் அதன் விளைவாக்க எனது முதல் கதை முயற்சி ரஜினிக்காக ( சூப்பர்ஸ்டார்தான பஸ்டு அதான் )
____________________________________________________________________________________
குடும்பத்தோடு பார்த்து ரசிக்க காதல்,சென்டிமெண்ட்,சோகம்,துரோகம்,வீரம்,சண்டை நிறைந்த சூப்பர்ஸ்டாருக்காக சூப்பர் கதை ... !!!
(காக்கையாக - ரஜினி , பாட்டியாக - வடிவுக்கரசி , நரியாக - ராதாரவி , வடையாக - பூர்வீக சொத்து )
அந்த கிராமத்தின் மிக பெரிய பணக்காரர் , அவர் இறந்து விட்டார் அவரது ஒரே மகன் சரத்பாபு , அவரது ஒரே பாட்டி லட்சுமி , அந்த ஒரே பாட்டியின் ஒரே தம்பி ராதாரவி , வேறு ஒரு ஊரில் வாய்க்கால் தகராறு நடக்கிறது , இரண்டு ஊர்காரர்கள் அடித்து கொண்டிருக்க அங்கே வரும் ரஜினி இரண்டு ஊர்க்காரர்களையும் சுமூகமாக பேசி தீர்க்கிறார் ( காவிரி பிரச்சனையை சம்பந்தபடுத்தி சிலபல பஞ்ச் டயலாக்குகள் பேசுகிறார் ) அதில் ஒருவர் ரஜினியை பார்த்து நீங்கதான்யா இந்த ஊருக்கு தலைவனா இருக்கணும் உம்னு சொல்லுங்க உங்கள பஞ்சாயத்து போர்டு பிரெசிடென்ட் ஆக்கறோம்ங்கறாங்க ரஜினி புன்னைகைத்தபடி விரலை மேல உயர்த்தி '' கண்ணா காட்டுல ஒடுது முயல் நான் அரசியிலுக்கு வரது ஆண்டவன் செயல் '' அப்படினு சொல்லிட்டு நடக்க மக்கள்லாம் ___ தின்ன பன்னி மாதிரி தேமேனு முழிச்சுகிட்டு நிக்க ஓப்பனிங் சாங் ஸ்டார்ட் ...
போடா வாடா போடா வாடா பொட்ட கண்ணா..
நீ பொங்கி வந்து நின்னாக்க கன்னா பின்னா....
வாங்க வாங்க வாங்க வாங்க எங்கள் ஐயா....
நீ அரசியலில் பாஞ்சடிச்சா எரியும் தீயா....
வல்லரசா ஆகபோகுதிந்தியா..
நல்லரசா ஆக்க நீங்க வாங்கையா...
சிறகிருந்தா வானவில்லும் குடை பிடிக்கும்
நீங்க முதல்வரானா - தமிழ்நாட்டில்
நிலாவும் எடம்புடிக்கும்
மக்கள் கொந்தளித்து பாடுகின்றனர் ரஜினி எல்லாரையும் பார்த்து கையசைத்தவாறே பாடல் முழுக்க ஆடுகிறார் , பாடல் முடிந்ததும்
அடுத்த காட்சி அவர் வாழும் குடிசை வீட்டில் , அவர் சோற்றுக்கே வழியில்லாத ஏழையாய் ஒரு குடிசை வீட்டில் ஓன்டியாய் விஜயகுமாரின் வளர்ப்பு மகனாய் வாழ்கிறார் , விஜயகுமார் சாகும் நிலையில் அந்த வீட்டின் கயிற்று கட்டிலில் படுத்த படி ரஜினியை அழைத்து ஒரு கடிதம் கொடுத்து அதிலிருக்கும் விலாசத்தில் போய் பார்த்தால் உனக்கு வேலை கிடைக்கும் என்கிறார் .
ரஜினி ஜாலியாக முதுகில் ஒரு பையுடன் பாட்டு பாடிக்கொண்டு அந்த ஊரை அடைகிறார் , நுழைந்ததும் அந்த ஊரில் உள்ள குளத்தில் குளிக்கும் சுரேயாவிடம் (ஸ்ரேயா ) மணி கேட்கிறார் (எத்தனை படத்தில்தான் வழியே கேட்பது ) , அவர் ரஜினியை பார்த்ததும் குளிக்க குளிக்க அப்படியே எழுந்து மணி சொல்ல விழைய அவரது கச்சை கழண்டு விடுகிறது , ரஜினி அப்படியே ஷாக்காகி நிற்க சுரேயாவும் ஷாக்காகி நிற்கிறார் . கண்கள் கலக்கிறது , காதல் மலர்கிறது காட்சி கலைந்து அமெரிக்கா பிரேசில் வழியாக மலேசியா சிங்கப்பூர் வழியாக மீண்டும் அந்த குக்கிராமத்தை அடைகிறது , பாடல் முடிகிறது . சுரேயாவை அப்படி பார்த்த அதிர்ச்சியில் ரஜினி ரோபோ போல நடக்கிறார் . ( ரோபோவிற்கான விளம்பரமாகவும் அமைந்து விடுகிறது )
வடிவுக்கரசியை சந்தித்து தந்தை கொடுத்த கடிதத்தை தருகிறார் , ரஜினி தந்த கடிதம் கண்டு அதிர்ச்சியாகி அவருக்கு அந்த அரண்மனையிலேயே வேலை போட்டு தருகிறார் , (அங்கே வேலை செய்யும் கவுண்டமணியுடன் நிறைய காமெடி செய்கிறார் , அதை இங்கே எழுதினால் சீரியஸாக இருக்கும் அதனால் ஸ்டோரி டைரக்ட்லி கோயிங் டு தி மேட்டர் )
நடுவில் ஊரில் அடங்காபிடாரியாக இருக்கும் ஒருவரின் மனைவியை திட்டி அரைபக்க வசனம் பேசுகிறார் , பெண்களின் அடக்கம் குறித்து அற்புதமான கருத்துக்களை அள்ளி தெளிக்கிறார் , அந்த அப்பாவி கணவனின் மனைவியை திருத்துகிறார் . படம் பார்க்கும் பலரது அடங்காத மனைவிகளும் திருந்துகிறார்கள் , அப்பாவி கணவன்கள் கண்ணீரில் திரையரங்கத்தில் வெள்ளம்!!!
வடிவுக்கரசி தனது பூர்வீக சொத்தை சரத்பாபுவிற்கு எழுதி வைக்க முடிவெடுக்கிறார் , அது பிடிக்காத ராதாரவி , அதை தடுக்க சூழ்ச்சி செய்கிறார் , ஒவ்வொரு சூழ்ச்சியையும் அசாதாரணமாக ரஜினி முறியடிக்கிறார் , சரத்பாபுவை கொல்ல ஆள் அனுப்புகிறார் , அவர்களையும் அடித்து வீழ்த்துகிறார் , ( நாம அங்கதான் வைக்கறோம் டுவிஸ்ட )
அடிவாங்கியவர்களில் ஒருவன் ரஜினிதான் உங்கள கொல்ல அனுப்பினார் என்று சொல்ல சரத்பாபு கடுப்பாகி ரஜினியை வீட்டில் வளர்க்கும் நாயை விட்டு அட்டாக் செய்கிறார் ரஜினி நாயின் எல்லா கடிகளையும் சிரித்தபடியே தாங்கி கொள்கிறார் ,நாய்கடித்து பேண்ட் முதல் ஜட்டி வரை கிழிந்து பின்னாலிருந்து ரத்தம் வடிய அங்கிருந்து ( மூஞ்ச சிரிச்ச மாதிரியே வச்சுகிட்டு ) நடந்து செல்ல சோகப்பாடல் துவங்குகிறது .
இவ்விசயம் தெரிந்த வடிவுக்கரசி உண்மையை சொல்கிறார் , அந்த சொத்துக்கு அவர்தான் வாரிசென்றும் அவர் வாரிசு என்று தெரிந்தால் எதிரிகளால் ஆபத்து என்றும் தெரிவிக்க திகைக்த்து பின் வருந்துகிறார் சரத்பாபு .
சரத்பாபு ரஜினியை தேடுகிறார் , ஆனால் ரஜினி மாயாமாகிறார் , ராதாரவி வடிவுக்கரசி,சரத்பாபு,சுரேயா வை கடத்தி கொண்டு போய் மர்ம பங்களாவில் கட்டி வைத்து அவர்கள் முன்னால் மும்பை கவர்ச்சி நடிகையை நடனமாட விட்டு டார்ச்சர் செய்கிறார் , ( சரத்பாபுவுக்கு இந்த டார்ச்சர் மிகவும் பிடித்து அவர் ஓன்ஸ்மோர் கேட்டது சென்சாரால் கட் செய்யப்பட்டது ) . சொத்துப்பத்திரத்தில் கையெழுத்திட வடிவுக்கரசியை மிரட்டுகிறார், அவர் எவ்வளவு டார்ச்சர் செய்தும் மறுக்கிறார் ( லூசுப்பசங்க கையெத்து போடத்தெரியாத பாட்டிய டார்ச்சர் பண்றதா நினச்சிட்டு வாய கட்டி வச்சிட்டு கையெழுத்து போடுன்னு டார்ச்சர் பண்ணா அந்த கிழவி எப்படி போடும் , ) . ரஜினி திடீரென எங்கிருந்தோ ஒரு பைக்கில் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டோ அல்லது கயிறில் தொங்கிய படியோ வருகிறார் , ( அது படத்தின் தயாரிப்பாளரின் வசதியை பொருத்தது , நிறைய செலவு செய்ய முடிந்தால் கண்ணாடிகளை உடைத்து கொண்டு ஹெலிகாப்டரில் வருவது போல் கூட செய்யலாம் )
அனைவரையும் அடித்து துவைக்கிறார் , எரிமலையாய் வெடிக்காமல் சிரித்தபடி அடிக்கிறார் , நடுநடுவே சரத்பாபு,வடிவுக்கரசி,சுரேயா போன்றோர் அடியாட்களில் மட்டமான காமெடி பைட்டர்ஸை அடித்து துவைக்க , இறுதியில் கவுண்டமணி போலிசுடன் உள்ளே நுழைகிறார் , அனைவரையும் அடித்து துவைத்து ரஜினி போலிஸில் ஒப்படைக்க படம் முடியவில்லை ,
அடுத்த காட்சியில் ரஜினியிடம் சொத்துக்கள் ஒப்படைக்கபடும் போது ரஜினி மக்களைப்பார்த்தபடி
என்னோட நிரந்தர சொத்து இங்க இருக்கும் போது எனக்கு எதுக்கு சொத்து என்று தனது அழுக்கு வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு கிளம்புகிறார் .
மக்களைநோக்கி நடக்க படத்தில் நடித்த அனைவரும் ரஜினியின் பின்னால் நடக்க ஓப்பனிங் சாங்கே மீண்டும்
போடா வாடா போடா வாடா பொட்ட கண்ணா..
நீ பொங்கி வந்து நின்னாக்க கன்னா பின்னா....
வாங்க வாங்க வாங்க வாங்க எங்கள் ஐயா....
நீங்க அரசியலில் பாஞ்சடிச்சா எரியும் தீயா....
வல்லரசா ஆகபோகுதிந்தியா..
நல்லரசா ஆக்க நீங்க வாங்கையா..
சிறகிருந்த வானவில்லும் குடை பிடிக்கும்
நீங்க முதல்வரானா - தமிழ்நாட்டில்
நிலாவும் எடம்புடிக்கும்
படம் முடிய மக்களும் ரஜினியின் ரசிகர்களும் ரஜினியை கடித்த அந்த நாயை போல குஷியாகி குஜாலாகின்றனர் . திரையரங்கம் அதிர்கிறது , அந்த அதிர்ச்சி குறைவதற்குள் ரஜினி இமயமலைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இக்கதைக்கு நல்ல தலைப்புகளை அள்ளித்தந்து குசேலன் பட டிவிடிகளை அள்ளிச்செல்லுங்கள் .
____________________________________________________________________________________
இப்பதிவின் தொடர்ச்சியாக நாளை காலை புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்தின் அதிரடி ஆக்சன் , சேஸிங் , தொப்புள் ரொமான்ஸ் , தங்கச்சி செண்டிமெண்ட் , வீர வசனங்கள் நிறைந்த பாகிஸ்தானில் படமாக்கப்படவுள்ள திரைக்கதை - உங்களுக்காக அதிஷாவின் வலைப்பூவில் மட்டுமே .......
_____________________________________________________________________________________
இப்போதெல்லாம் கருணாநிதி மேல் காண்டான ஞானியைப்போல அடிக்கடி நம் வலைப்பூவில் ரஜினி காண்டு காமெடிகள் இடம் பெருவதால் ஒரு கற்பனை கார்ட்டூன் .( படம் உதவி - மின்னஞ்சல் நண்பர் - கருத்து அடியேன் )
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrxdHEP9sycu_ZfknlZNceB25QijsUjNYa21_emvZZWliQIMXyC0RaZYH92whFIjvBCUKsUOjVg5mHthi2B_sAmEB1Y6yKhyphenhyphenN7WdoWlzcskROHlxjFi25RdzCf63T1ZGkuvFm_BGZfOyE/s400/cartoon1.jpg)
____________________________________________________________________
அவ்ளோதான்பா..... ;-)
_____________________________________________________________________________________
படம் உதவி - மின்னஞ்சல் நண்பர் மற்றும் google.com